பொதுத்துறை வங்கிகளில் சுமார் 20,000 கோடி ரூபாய் மோசடி
About 20K Crore rupees Fraud in Public Sector Banks – RTI query
வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களில் அவ்வப்போது மோசடிகள் நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19,964 கோடி ரூபாய் அளவில் மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சொல்லப்பட்டுள்ளது.
சொல்லப்பட்ட 19,964 கோடி ரூபாய் முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காணப்பட்ட மோசடி எனவும், இது தனிநபர் வாயிலாக வங்கிகளில் கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வங்கிகளில் ஏற்பட்ட அனைத்து மோசடி சார்ந்த தகவலை இது தெரிவிக்கவில்லை.
2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொதுத்துறை வங்கிகளில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 2,867 மற்றும் அதன் மூலம் 19,964 கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது. எஸ்.பி.ஐ.(SBI) வங்கியில் அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்ட மோசடிகளின் எண்ணிக்கை 2,050. அதன் மதிப்பு சுமார் 2,300 கோடி ரூபாய்.
மோசடி மதிப்பளவில், பேங்க் ஆப் இந்தியாவில் 5,124 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. ஆனால் இந்த மதிப்பு வெறும் 47 வழக்குகளில் வந்துள்ளது. மோசடியில் சிக்கி தவித்த பஞ்சாப் தேசிய வங்கியில்(PNB) இம்முறை 240 வழக்குகளும், 270 கோடி ரூபாய் அளவில் மோசடியும் நடந்துள்ளது. இது கடந்த காலத்தை விட குறைவான மதிப்பாக சொல்லப்படுகிறது.
முதல் காலாண்டில் நடைபெற்றிருந்த மோசடியில்(Fraud in Banks) 12 பொதுத்துறை வங்கிகளின் தகவல்கள், ஆர்.டி.ஐ.(RTI act) சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தகவல் வங்கிகளில் ஏற்பட்ட மொத்த மோசடிகள் பற்றியோ அல்லது கடன் பெற்றவர்களின் நிலை பற்றியோ சொல்லவில்லை.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை