Category Archives: Investopedia

ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 830 கோடி

ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 830 கோடி 

Asian Paints reported a Net Profit of Rs. 830 Crore in Q2FY21

இந்திய பன்னாட்டு நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ் கடந்த 1942ம் வருடம் துவங்கப்பட்டது. பெயிண்ட் துறையில் உள்ள இந்நிறுவனம் பெயிண்ட் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகம், பூச்சு, வீட்டு அலங்காரம் போன்ற சேவைகளை அளித்து வருகிறது. நாட்டின் பெயிண்ட் சந்தையில் 50 சதவீதத்திற்கு மேல் தனது பங்காக வைத்திருக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம், பிரபல பெர்கர் இன்டர்நேஷனல் நிறுவனத்திலும் கணிசமான பங்குகளை வைத்துள்ளது.

நிறுவனர்கள் சார்பில் அதிக பங்குதாரர்களை வைத்திருக்கும் நிறுவனமாகவும் ஏசியன் பெயிண்ட்ஸ் காணப்படுகிறது. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு பில்லியன் டாலர் வருவாயை ஏற்படுத்தும் நிறுவனமாக ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2.03 லட்சம் கோடி. நிறுவனர்களின் பங்களிப்பு 53 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 12 சதவீத பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.10 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 30 மடங்குகளிலும் இருக்கிறது. 2019-20ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 20,211 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 2,705 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

நடப்பு வாரத்தில் 2020-21ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,350 கோடியாகவும், செலவினம் ரூ.4,085 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 94 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட காலாண்டு முடிவில் நிகர லாபம் 830 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

இரண்டாம் காலாண்டு முடிவுக்கு பிறகு, இடைக்கால ஈவுத்தொகையாக(Interim Dividend), பங்கு ஒன்றுக்கு ரூ. 3.35 ஐ அறிவித்துள்ளது. செப்டம்பர் காலாண்டு முடிவின் படி, இருப்புநிலை கையிருப்பு 10,934 கோடி ரூபாயாக இருந்துள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) சொல்லக்கூடிய நேர்மறை மதிப்பில் உள்ளது.

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 8 சதவீதமாகவும், 10 வருட காலத்தில் 12 சதவீதமாகவும் உள்ளது. இது போல லாபம் கடந்த ஐந்து வருடங்களில் 14 சதவீதமும், 10 வருட கால அளவில் 13 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 18 சதவீதம் ஏற்றமடைந்துள்ளது. பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் 28 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்கு முதலீட்டில் வாசிக்க வேண்டிய பத்து காரணிகள்

பங்கு முதலீட்டில் வாசிக்க வேண்டிய பத்து காரணிகள் 

10 Factors to read in a Stock Market Investing

பங்குச்சந்தை முதலீட்டில் பணம் சம்பாதிக்க நீண்ட காலத்தில் பொறுமையுடன் அணுகுவது அவசியமானது. அதே வேளையில், ‘ ஏதோ ஒரு பங்கில் முதலீடு செய்து விட்டு, 10 வருடங்கள் காத்திருந்தேன். பங்கு விலை இப்போது சரிந்து விட்டதே. எனது முதலீட்டில் 70-80 சதவீத தொகையை இழந்து விட்டேன் ‘ என நம்மில் பலர் புலம்புவதை பார்த்திருப்போம். இது பொதுவாக முதலீட்டில் உள்ள அனைவருக்குமான விஷயம் தான்.

நீங்கள் 10 வெவ்வேறு நிறுவன பங்குகளை முதலீட்டில் வைத்திருந்தாலும், அனைத்து பங்குகளும் உங்களுக்கு உடனடியாக முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தாது. 5-10 வருட சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்குகளும், வேறுபட்ட காலத்தில் தனது ஏற்ற-இறக்கத்தை காணும். நீண்டகாலத்தில் முதலீடு செய்து பண பெருக்கத்தை ஏற்படுத்த பெரிதாக மெனக்கெட தேவையில்லை எனலாம். இருப்பினும் சில அடிப்படை காரணிகளை நாம் வாங்கிய அல்லது வாங்க போகும் பங்கு நிறுவனத்தில் அலசி ஆராய்ந்து விட்டால், நமக்கான வேலை அவ்வளவு தான்.

நல்ல நிறுவன பங்குகளின் விலை குறுகிய காலத்தில் ஏறவில்லை என்றாலும், நீண்டகாலத்தில் முதலீட்டாளருக்கு பயன் தராமல் போகாது. நல்ல நிறுவன பங்குகள் எனும் போது கடனில்லா நிறுவனங்கள், நல்ல நிர்வாக திறமை, நிறுவனர்களின் தொழில் நாணயம், வருவாயில் சராசரி வளர்ச்சியாக இருப்பினும் நெடுங்காலமாக தொழில் செய்து வருவது ஆகியவற்றை சொல்லலாம்.

மேலே சொல்லப்பட்ட நல்ல நிறுவன பங்கின் தன்மையை மேலும் சில காரணிகளை கொண்டு நாம் அறியலாம். அது போன்ற பத்து காரணிகள் இங்கே,

  • இ.ஐ.சி. கட்டமைப்பு (EIC Framework) முறையில் ஒரு நிறுவன பங்கினை புரிந்து கொள்வது
  • நிர்வாகத்திறன் எப்படி என்பதனை அறிந்து கொள்வது அவசியம்
  • நிறுவனத்தின் நிதி அறிக்கையை அடிப்படையாக கற்று கொள்வது
  • விற்பனை மற்றும் லாப வளர்ச்சி எவ்வாறு உள்ளது ?
  • பங்கு முதலீட்டின் மீதான வருவாய் (Return on Equity)
  • மூலதனத்தின் மீதான வருமானம் (Return on Capital Employed)
  • ஒரு பங்கின் வருவாயை அதன் விலையுடன் ஒப்பிட்டு காண்பது (PE)
  • நிறுவனத்தின் கடன் எப்படி ? (கடன்-பங்கு விகிதம் – Debt to Equity)
  • நிறுவனர்களின் பங்கு பங்களிப்பு மற்றும் பங்கு அடமானம்(Holding & Pledging)
  • மதிப்பீடுகள் அவசியமானது, நீங்கள் வாங்க வேண்டிய பங்கு விலை என்ன ? (Price is what you pay, value is what you get)

இந்த பத்து காரணிகளை நாம் ஒரு நிறுவன பங்கில் தேட ஆரம்பித்தாலே நமக்கான நீண்டகால செல்வவளம் பெருக்கும் முதலீட்டை அறியலாம். தரகர் சொன்னார், நண்பர் பரிந்துரைத்தார், ஊடக செய்தியில் கண்டேன், வாட்சாப் அல்லது டெலிகிராமில் பகிரப்பட்டது என ஏதாவது ஒரு பங்கினை வாங்கி மாட்டிக்கொள்வதை விட, உங்களது முதலீட்டு சிந்தனையையும் சிறிது மெருகேற்றி கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

ரைட்ஸ் (ரயில் இந்தியா) லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

ரைட்ஸ் (ரயில் இந்தியா) லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Rites(Rail India Technical and Economic Service) Limited – Fundamental Analysis 

நாட்டின் முக்கிய பொதுத்துறை நிறுவனமாக இருப்பது, ‘ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை’ நிறுவனம். இதனை சுருக்கமாக ரைட்ஸ் லிமிடெட்(Rites) என கூறுவதுண்டு. பொறியியல் ஆலோசனை நிறுவனமாக வலம் வரும் ரைட்ஸ் நிறுவனம் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு துறையில் முக்கியத்துவம் பெறுகிறது.

1974ம் ஆண்டு மத்திய அரசால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் உள்ளிட்ட பிற உட்கட்டமைப்புகளுக்கான ஆலோசனை மற்றும் திட்டமிடலை செய்து வருகிறது. இந்திய ரயில்வே துறைக்கு மட்டுமில்லாமல், 60 நாடுகளுக்கும் மேலாக தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6000 கோடி, மத்திய அரசு தன்வசம் வைத்திருக்கும் பங்குகளின் அளவு 72 சதவீதமாகும். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ..சி. இந்தியாவிடம்(LIC) சுமார் 8 சதவீத பங்குகளும், எச்.டி.எப்.சி. டிரஸ்டி(HDFC Trustee) நிறுவனத்திடம் 3 சதவீத பங்குகளும் உள்ளது. இதன் தொழில் விரிவாக்கம் பெரும்பாலும் ரயில்வே சார்ந்த திட்டங்களாக இருந்து வருகிறது.

நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலான நாடுகளின் அரசு நிறுவனங்கள் தான் உள்ளது. இதன் முக்கிய அலுவலகங்கள் செனகல், போட்ஸ்வானா, மொரிசியஸ், வங்காளதேசம், மியான்மர், நேபாளம் மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் ரயில்வே சார்ந்து ஏற்றுமதிகளை அதிகம் கொண்டிருக்கும் நிறுவனமாகவும் ரைட்ஸ் லிமிடெட் உள்ளது.

2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,474 கோடியாகவும், செலவினம் ரூ.1,811 கோடியாகவும் இருந்துள்ளது. நிகர லாபமாக ரூ.616 கோடி சொல்லப்பட்டுள்ளது. விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 20 சதவீதமாகவும், லாபம் கடந்த 5 வருடங்களில் 15 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் ஏற்றம் பெறவில்லை. எனினும் பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(Return on Equity) ஒரு வருடத்தில் 25 சதவீதமும், ஐந்து வருடங்களில் 20 சதவீதமும் வளர்ந்துள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.2,383 கோடி மற்றும் பணவரத்து(Cashflow) சீராக வந்து கொண்டிருக்கிறது. ஜூன் 2020 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப விகிதம் குறைந்திருந்தாலும், நீண்டகாலத்தில் இந்நிறுவனத்தின் தேவை அதிகரித்து தான் காணப்படுகிறது. நாட்டின் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு துறையில் வாய்ப்பு அதிகமாகியிருக்கும் நிலையில், ரைட்ஸ் பங்குக்கான வாய்ப்பும் அதிகமாக உள்ளது. இதன் பாதகமாக அதன் துறை வளர்ச்சியும், அரசு சார்பில் ஏற்படும் கொள்கைகளும் தான்.

நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. அதன் கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.02 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 117 மடங்கில் உள்ளது. அரசு நிறுவனமாக இருப்பதால், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. முகமதிப்பு 10 ரூபாயாகவும், கடந்த கால ஈவுத்தொகை விகிதம்(Dividend yield) 7 சதவீதமாகவும் இருக்கிறது. அடிப்படை பணப்பாய்வு முறைப்படி(DCF Valuation) ரைட்ஸ் லிமிடெட் பங்கு ஒன்றின் விலை 300 ரூபாய் பெறும்.

முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

இந்துஸ்தான் ஜிங்க் – பங்குச்சந்தை அலசல்

இந்துஸ்தான் ஜிங்க் – பங்குச்சந்தை அலசல் 

Hindustan Zinc Limited – Fundamental Analysis

இந்திய மெட்டல் துறையில் இரும்பு அல்லாத உலோகங்களின்(Non-ferrous Metals) பங்களிப்பு மிகவும்  முக்கியத்துவமானது. காப்பர், அலுமினியம், துத்தநாகம், தங்கம், வெள்ளி, மெக்னீசியம், ஈயம், தகரம் ஆகியவை இரும்பு அல்லாத உலோகங்கள் எனப்படுகின்றன. இவை வாகனத்துறை, மின்சக்தி, தொலைத்தொடர்பு, விவசாயம், பாதுகாப்பு துறை, ரசாயனம் மற்றும் கட்டுமான துறையில் பயன்படுத்தப்படுகின்றன.

நம் நாட்டில் அலுமினியம், காப்பர், ஈயம் மற்றும் ஜிங்க்(துத்தநாகம்) ஆகிய நான்கும் வர்த்தகத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. இரும்பு அல்லாத உலோகங்களின் பிரிவில் உள்ள,  ‘ஜிங்க்’ வாகனத்துறை, ரயில்வே, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், துறைமுகம், பாதுகாப்பு மற்றும் கட்டுமான துறைகளின் பயன்பாட்டில் உள்ளது.

ஜிங்க் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும், நாட்டின் முதன்மை நிறுவனமாகவும் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்(Hindustan Zinc Limited) நிறுவனம் உள்ளது. ஒருங்கிணைந்த சுரங்க மற்றும் வளங்கள் பிரிவில் உள்ள இந்நிறுவனம் துத்தநாகம், ஈயம், வெள்ளி மற்றும் காட்மியம் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது.

துவக்கத்தில் அரசு பொதுத்துறை நிறுவனமாக இருந்த இந்துஸ்தான் ஜிங்க்(HZL), பின்னர் அரசின் பங்குவிலக்கல் அறிவிப்பின் கீழ் தனியார் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. 2001ம் ஆண்டு வாக்கில் இந்நிறுவனத்தை வேதாந்தா நிறுவனம்(Vedanta – Sterlite Industries) ஏலத்தில் வாங்கியது. நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. அக்னிவேசு அகர்வால் உள்ளார். பொது பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்தில் வேதாந்தா நிறுவனம் 65 சதவீத பங்குகளையும், மத்திய அரசு 30 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது.

சுரங்கம் மற்றும் உருக்குதல் பிரிவில் தனது செயல்பாடுகளை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் செய்து வருகிறது. உலகளவில் துத்தநாகத்தை மிகக்குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் வலம் வருகிறது. உலோகங்கள் மற்றும் சுரங்க துறை பிரிவின் கீழ் ஆசிய-பசிபிக் பகுதியில் முதலிடத்தை கொண்டுள்ளது இந்துஸ்தான் ஜிங்க். இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 86,600 கோடி. புத்தக மதிப்பு 95 ரூபாய் மற்றும் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.02 ஆக உள்ளது.

வட்டி பாதுகாப்பு விகிதம் 58 மடங்காகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 65 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 23 சதவீத பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 18,560 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 6,805 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 39,465 கோடி என சொல்லப்பட்டுள்ளது. லாபத்தில் பண வரத்து (Cash Flow from Operating Activities) நன்றாக வந்து கொண்டிருக்கிறது.

முகமதிப்பு(Facevalue) பங்கு ஒன்றுக்கு ரூ.2 ஆக இருக்கும் நிலையில், சமீபத்திய ஈவுத்தொகை விகிதம் 8 சதவீதமாக உள்ளது. கடந்த ஜூன் 2020 காலாண்டில் வருவாய் ரூ.3,989 கோடியாகவும், நிகர லாபம் 1,359 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 684 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக மெட்டல் துறையில் உள்ள நிறுவனங்களின் வளர்ச்சி, உலக மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும். தள்ளுபடி பணப்பாய்வு முறைப்படி(DCF Valuation), இந்துஸ்தான் ஜிங்க் பங்கு ஒன்றின் விலை ரூ.230 பெறுமானத்தை பெறும். முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உங்கள் பணத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி ?

உங்கள் பணத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி ?

How to multiple your money in Easy steps ?

உலகின் எட்டாவது அதிசயம் கூட்டு வட்டி(Power of Compounding) என்றால், உங்களது முதலீட்டை இரட்டிப்பாக்குவது என்பது இன்று ஏமாற்று வேலையாக மாறியுள்ளது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பல மடங்காக மாற்றி தருகிறேன் என சில கும்பல்கள் இன்று உலகம் முழுவதும் திரிந்து கொண்டு தான் இருக்கிறது.

போன்சி(Ponzi) என சொல்லப்பட்ட ஏமாற்று திட்டங்களும் அவ்வப்போது வந்தவண்ணம் தான் உள்ளது. நம்மில் பலரும் அவற்றில் பணத்தை கட்டி விட்டு, பின்பு தான் ஏமாற்றப்பட்டதாக புலம்புவதும் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

அரசு சார்பில் எச்சரிக்கையும், விழிப்புணர்வு செய்தியும் வந்து கொண்டிருந்தாலும் நமக்கு நாமே கவனமுடன் இருப்பது அவசியமாகும். “உங்கள் பணத்தை சில மாதங்களில் இரட்டிப்பாக தருகிறோம், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள் ‘ என்ற விளம்பரத்தை பார்த்திருப்போம். எப்படி இரட்டிப்பாக்க முடியும் என கேட்டால், பங்குச்சந்தையில் போடுகிறோம், டாலர்களில் வர்த்தகம் புரிகிறோம், தங்கத்தை வாங்கி வைக்கிறோம் அல்லது வீட்டுமனையில் முதலீடு செய்கிறோம் என்பார்கள்.

உண்மையில் அப்படி ஒரு எளிய வாய்ப்பு இருந்தால், சாமானிய மக்களுக்கு சுலபமாக கிடைத்து விடுமா என்ன ? அப்புறம் எதற்கு பெரு நிறுவனங்களும், பண முதலைகளும் இருக்கிறார்கள். அம்பானியும், அதானியும் எதற்கு தொழில் செய்ய வேண்டும், டாட்டா நிறுவனத்திற்கு வேறு வேலை இல்லையா என்ன ?

ஏமாற்று பேர்வழிகளிடம் உண்மையில் சிக்கி கொள்வது நடுத்தர வருவாயை கொண்டிருப்பவர்கள் தான். குறுகிய காலத்தில் விரைவாக பணம் சம்பாதிக்கிறேன் என மாட்டிக்கொள்பவர்கள் இவர்கள் தான். எந்தவொரு முதலீட்டு சாதனமும் நிரந்தரமான, அதுவும் அளவில்லாத முதலீட்டு பெருக்கத்தை உடனடியாக ஏற்படுத்தும் என சொல்லவில்லை.

வங்கி வட்டி விகிதத்திலும் ஏற்ற-இறக்கம் நிலவும், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. பங்குச்சந்தைக்கு சொல்ல தேவையில்லை. நீண்டகாலத்தில் முதலீடு செய்து விட்டு காத்திருந்தால், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறலாம். உங்களை விரைவாக பணக்காரராக்கும் என்று எங்கும் உத்தரவாதம் தரவில்லை, அப்படி சொல்லவும் இல்லை.

அதே வேளையில், உங்கள் முதலீட்டை பல மடங்காக மாற்றலாம். இரட்டிப்பாக, மூன்று மடங்காக அல்லது நான்கு மடங்காக, எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஆம், அடிப்படை கணிதம் தான் இது. இதற்கு நீங்கள் இரு வேலைகளை செய்தாக வேண்டும்.

  • எதிர்பார்க்கும் வருவாய் அல்லது வட்டி விகிதம்(Expected Returns %)
  • முதலீட்டு காலம் 

மேலே சொன்ன இரண்டு காரணிகள் உங்கள் பணம் பல மடங்குகள் உயர்வதற்கு காரணமாக இருக்கும். நீங்கள் செய்யும் முதலீடு ஒரு தொழிலாகவோ(Business) அல்லது முதலீட்டு சாதனமாகவோ(Investment Avenue) இருக்கலாம். உங்கள் பணம் வேலை செய்தால் மட்டுமே, உங்களுக்காக சம்பாதிக்க முடியும். அது தொடர்ச்சியாக தனது வேலையை செய்யும் போது தான் கூட்டு வட்டியின் பலனும் நமக்கு கிடைக்கப்பெறும்.

உதாரணமாக உங்கள் முதலீடு இரட்டிப்பாக,

விதி எண் – 72:

72 / எதிர்பார்க்கும் வட்டி விகிதம் %

உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் உள்ளது. அதனை நீங்கள் இரட்டிப்பாக மாற்ற மேலே சொன்ன இரண்டு காரணிகளும் அவசியம். உதாரணமாக நாம் எதிர்பார்க்கும் அல்லது கிடைக்கும் வட்டி விகிதம் 8 சதவீதம் எனில், விதி எண் – 72ன் படி, ஒன்பது வருடங்களில் நமது பணம் இரட்டிப்பாக மாறும். ஆம், இது கணிதம் தான்.

72 / 8 = 9 வருடங்கள்

வட்டி விகிதம் 12 சதவீதம் எனில் ஆறு வருடங்களில் இரட்டிப்பாகும், வட்டி விகிதம் 6 சதவீதம் எனில் உங்கள் பணம் இரட்டிப்பாக 12 வருடங்கள் எடுத்து கொள்ளும்.

விதி எண் – 114: (மூன்று மடங்காக)

114 / எதிர்பார்க்கும் வட்டி விகிதம் %

விதி எண் – 144 (நான்கு மடங்காக)

144 / எதிர்பார்க்கும் வட்டி விகிதம் %

நமக்கு தேவையான காரணிகள் கிடைக்கப்பெறும் வட்டி விகிதமும், முதலீட்டு காலமும் தான். எனவே நமது இலக்கை உறுதி செய்யும் முதலீட்டு சாதனத்தை தேடுவது தான் முதலீட்டின் சிறப்பம்சமாக இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மின்னணு வாகனங்கள் – வாய்ப்புகளும், சவால்களும் – பங்குச்சந்தை பகுப்பாய்வு

மின்னணு வாகனங்கள் – வாய்ப்புகளும், சவால்களும் – பங்குச்சந்தை பகுப்பாய்வு 

EV – Opportunities & Challenges – Fundamental Aspect

தொழில்நுட்ப உலகில் தனிநபர் ஒவ்வொருக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டு. சிலர் அறிவியல் முன்னேற்றத்தில் விருப்பம் காட்டுவதில்லை. மற்ற சிலரோ அறிவியலின் ஏணிப்படியில் நடைபோட்டு கொண்டு தான் இருக்கின்றனர். மனிதனின் தேவைகள் இருக்கும் வரை அதற்கான வசதிகளை புதுமையாக கொண்டு வருவதில் அறிவியல் முன்னிலை வகிக்கிறது.

மின்னணு வாகனங்கள் மற்றும் 5 ஜி தொழில்நுட்ப பயன்பாட்டில் முழுமை பெறும் போது, மனித அறிவியல் வாழ்வில் அது மேம்பட்ட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதுவரை இவ்வுலகம் பார்த்திராத தொழில்நுட்ப ஆளுமைகள் இருக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

அந்த வகையில், சமீபத்திய வருடங்கள் மின்னணு வாகனம் சார்ந்த விஷயங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது, நடப்பில் உள்ள எரிபொருட்களுக்கான மாற்றம், மேம்பட்ட ஆற்றல் சேமிப்பை உருவாக்குதல் என அதன் தடம் நீண்டு கொண்டிருக்கிறது.

வாகனங்களுக்கான அரசு கொள்கைகளும் மாற்றமடைந்து வருகிறது. எந்தவொரு நிகழ்விலும் சாதகமான தன்மைகள் மட்டுமே இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அவ்வாறு ஒரு முதலீட்டாளராக நாம் காணும் போது, மின்னணு வாகன(Electric Vehicle) பிரிவில் வாய்ப்புகளும், சவால்களும் சில உள்ளன. இதனை நாம் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு நிகழ்வாகவும் பார்க்கலாம்.

பொதுவாக மின்னணு வாகனங்கள் எனும் போது சாலை வழி, ரயில், கப்பல்கள், மின் விமானம் மற்றும் மின்சார விண்கலம் என பலவகைகளில் பயன்பாடு  இருக்கலாம். மின்னணு வாகனங்களுக்கு தேவையான மின் ஆதாரங்கள் – உள் சேமிப்பு(Onboard Storage), ஜெனரேட்டர்கள், மின் உற்பத்தி ஆலைகள் மற்றும் கலப்பின வழிமுறை(Hybrid).

வாய்ப்புகள் பல…

  • குறைந்த கார்பன் அளவு
  • மீள்நிரப்பு செலவு குறைவு (Recharging Cost)
  • ஆற்றல் திறன்
  • குறைந்த சத்தம் மற்றும் காற்று மாசுபாடு
  • எளிய வழிமுறை (Simple Mechanism)

சவால்கள் சில…

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு
  • அணுசக்தி மற்றும் புதைபடிவ ஆற்றல்(Fossil Energy)
  • கனரக வாகன தயாரிப்பில் உள்ள இடர்பாடு
  • மின்சார உற்பத்தி மற்றும் செலவினம்
  • நீண்ட பயணத்துக்கான மீள்நிரப்பு (Longer Recharge Time)
  • பேட்டரிகளை மாற்றுதல் – மறுசுழற்சி

மின்சார வாகனங்கள் என்ற வகையில் காணும் போது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஏதும் உள்ளதா, மின் ஆதாரங்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் நிறுவனங்களை கண்டறிவது, பேட்டரிக்கு தேவையான மூலப்பொருட்கள் என்னென்ன, அதனை தயார் செய்யும் நிறுவனங்கள் எங்கே உள்ளது என்ற அடிப்படை கேள்விகள் ஒரு முதலீட்டாளருக்கு தேவையான விஷயமாகும்.

நடப்பில் டாட்டா மோட்டார்ஸ், மஹிந்திரா, அசோக் லேலண்ட் நிறுவனங்கள் பெரு வாகன பிரிவில் மின்னணு வாகனங்களை தயாரித்து வருகிறது. இருசக்கர வாகன பிரிவில் டி.வி.எஸ். மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் நிறுவனங்களும் உள்ளது. பேட்டரி தயாரிப்பு என பார்க்கும் போது அமரராஜா பேட்டரிஸ்(Amararaja Batteries), எக்சைட் இண்டஸ்ட்ரீஸ்(Exide), இஸ்ரோ, பெல் நிறுவனங்கள் பங்காற்றுகிறது.

மூலப்பொருட்களில் மாங்கனீசு, அலுமினியம், காப்பர், ஜிங்க், அலாய், லித்தியம் மற்றும் கிராப்பைட் போன்ற பிரிவில் பல நிறுவனங்கள் உள்ளன. இவை இரும்பு அல்லாத உலோகங்கள்(Non-ferrous Metals) என கூறப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ்

பங்குச்சந்தை அலசல் – இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் 

Hinduja Global Solutions (HGS) – Fundamental Analysis

இந்துஜா குழுமத்தின் ஒரு அங்கம் தான் இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ்(HGS) நிறுவனம். 2000ம் ஆண்டு முதல் தகவல் தொழில்நுட்ப சேவையில் தொழில் செய்து வரும் இந்நிறுவனம், ஆரம்ப காலத்தில் அசோக் லேலண்ட் ஐ.டி. நிறுவனமாகவே அழைக்கப்பட்டு வந்தது. பின்பு இந்துஜா நிதி தொழில் இணைக்கப்பட்டு, இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனமாக மாறியது.

பெங்களூரு நகரத்தை தலைமையிடமாக கொண்டிருந்தாலும் சுமார் ஏழு நாடுகளில் இதன் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2003 மற்றும் 2007ம் ஆண்டுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கால் சென்டர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தரவுத்தள ஆராய்ச்சி நிறுவனங்களை கையகப்படுத்தியது.

பின்பு 2010-11 காலங்களிலும் இது போன்ற நிறுவனங்களை கையகப்படுத்துதல் நடவடிக்கை ஏற்பட்டுள்ளது. இந்துஜா குழுமத்தில் தற்போது பங்காளி சண்டை நடைபெற்று வருவது குழுமத்தில் உள்ள நிறுவனங்களுக்கு பாதகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. 2019-20ம் நிதியாண்டின் முடிவில் இந்நிறுவனம் 5044 கோடி ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது.

இந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ்(Hinduja Global Solutions) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1500 கோடி. புத்தக மதிப்பு 823 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.80 ஆகவும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 5 மடங்கில் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 67 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

2020ம் நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் ரூ.4,986 கோடியாகவும், நிகர லாபம் 202 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. ஒரு பங்கு மீதான வருவாய்(EPS) கடந்த பத்து வருட காலத்தில் இரு மடங்காகியுள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 12 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 19 சதவீதமாகவும் உள்ளது.

இது போல லாப வளர்ச்சி, 5 மற்றும் 10 வருட காலங்களில் 5 சதவீதமாக உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 30 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 1700 கோடி ரூபாய். இந்துஜா குளோபல் நிறுவனத்திற்கு பணவரத்து நன்றாக உள்ளது. தள்ளுபடி பணப்பாய்வு முறைப்படி(DCF) இந்த பங்கின் விலை சுமார் 2000 ரூபாய் பெறுமானம் உள்ளது.

எனினும், நிறுவனத்தின் கடன் தன்மை மற்றும் குடும்ப பிரச்சனையால் ஏற்படப்போகும் நிர்வாக மாற்றம் ஆகியவற்றை கவனிப்பது அவசியம். மார்ச் மாத சந்தை சரிவில் இந்த பங்கின் விலை 400 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகியுள்ளது. தற்போதைய நிலையில் பங்கு ஒன்றின் விலை 723 ரூபாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தையில் நீங்கள் பணத்தை இழக்க இந்த ஐந்து காரணங்கள் போதும்

பங்குச்சந்தையில் நீங்கள் பணத்தை இழக்க இந்த ஐந்து காரணங்கள் போதும் 

5 Fundamental Things to lose your money in the Stock Market

பங்குச்சந்தையில் அவ்வப்போது காரசாரமாக பேசப்படுவது லாப-நட்டத்தில் தான். பங்குகளை ஆராய்ந்து நீண்டகால இலக்குகளுக்கு பங்குகளை வாங்கிய ஒருவர், எனது பங்கு விலை ஏறவில்லை என கவலை கொள்வார். குறுகிய நேரத்தில், செய்த முதலீட்டை காட்டிலும் பல மடங்கு லாபம் சம்பாதித்தாக ஒருவர் பெருமிதம் கொள்வார். பங்குச்சந்தை கடலில் இவையெல்லாம் சிற்றின்ப நிலை தான்.

பங்குச்சந்தையை நாம் ஒரு தொழிலாக அணுகும் போது மட்டுமே அதனை கவனத்துடன் அணுகுவோம். பங்குச்சந்தைக்கு தேவை கவனமும், கனிவும் தான். எளிமையாக சொன்னால் நீண்டகாலத்தில் பொறுமையாக இருப்பதும், சரியான நேரத்தில் லாபத்தை கையகப்படுத்துவதும் முக்கியமாகும்.

சந்தையில் நீங்கள் தின வர்த்தகராக இருந்தாலும்(Day Traders) சரி, குறுகிய கால மற்றும் நீண்டகால முதலீட்டாளராக(Investors) இருந்தாலும் சரி, அடிப்படை தன்மைகளை தாண்டி உங்களுக்கான அதிர்ஷ்டமும் சில நேரங்களில் எட்டி பார்க்கும். அதனை சரியான நேரத்தில் மற்றும் அதற்கான அளவில் லாவகமாக பிடித்து வைத்து கொள்வது நன்று. ஆனால், அந்த அதிர்ஷ்டத்தை உங்களால் கண்டறிய முடிகிறதா என்பது மிகவும் அவசியமான ஒன்று.

அதிர்ஷ்டம் சில நேரங்களில் சந்தையில் தலைகாட்டும் என சொல்லியிருந்தோம். அந்த அதிர்ஷ்டத்தின் பெயர் தான், ‘ பங்குச்சந்தையில் ஈடுபடும் தொழில் நிறுவனம்’. அந்த நிறுவனம் நேர்மையான முறையில், நீண்டகாலத்திற்கு தொழில் செய்யும் பட்சத்தில் உங்களுக்கான அதிர்ஷ்டம் நிச்சயம். நிறுவன குறிக்கோள், சிறந்த நிர்வாகம் மற்றும் முதலீட்டாளரின் நலனில் அக்கறை கொள்ளுதல் ஆகியவை ஒரு பங்கின் வருவாயினை (Not the Share Price) உயர்த்தும்.

அதே வேளையில், சொல்லப்படவுள்ள இந்த ஐந்து காரணிகளில் உங்கள் அதிர்ஷ்டம் பெரும்பாலும் செயல்படாது. பல நேரங்களில் நீங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்த பணத்தை முழுவதுமாக இழக்க நேரிடும். பங்குச்சந்தையில் ஈடுபடும் பலர், ‘எனக்கு நீண்டகாலத்தில் நம்பிக்கை இல்லை, உடனடியாக பணத்தை கண்ணில் பார்க்க வேண்டும்’ என்பர். உண்மையில் ஊகத்தில் பயணம் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும். அதே வேளையில் தவறிழைக்கும் பட்சத்தில் அவர்கள் ஈட்டிய முழு லாபம் மற்றும் செய்த முதலீட்டையும் இழக்கும் வாய்ப்பு இங்கு அதிகம். நீங்கள் தான் தவறு செய்ய வேண்டுமென்று இல்லை. நீங்கள் முதலீடு செய்த நிறுவனம் தவறு செய்யும் பட்சத்தில், உங்கள் பணம் தான் இழப்பை சந்திக்கும்.

சுருக்கமாக சொன்னால், ‘தின வர்த்தகர்களுக்கு தேவை – திறமையான பண நிர்வாகமும்(Disciplined Money Management), முதலீட்டாளர்களுக்கு தேவை – தாங்கள் முதலீடு செய்த நிறுவனம் திறமையாக நிர்வாகம்(Discpilined Corporate Governance) செய்வதும் தான்’.

  • அதிக கடன் உள்ள நிறுவனம் (High Debt)
  • நிறுவனர்களின் பங்கு அடமான அதிகரிப்பு (Promoters Pledging more than 10 Percent)
  • தொடர்ச்சியாக மூன்று முதல் ஐந்து நிதியாண்டுகளில் வருவாயில் நஷ்டத்தை மட்டுமே கொண்டிருப்பது (Negative Financial Trend & Unstable on Earnings)
  • சொல்லப்பட்ட லாபத்திற்கு தகுந்தாற் போல், நிறுவனத்திற்கு பண வரத்து இல்லாமை (Weak Cash Flow)
  • வங்கி வட்டி விகிதத்தை காட்டிலும் மிகவும் குறைவான வருவாய் (ஐந்து வருடங்களுக்கு மேல்) – Low ROE & ROCE (Less than Risk Free Rate)

மேலே சொல்லப்பட்ட ஐந்து காரணிகளில் உங்கள் அதிர்ஷ்டம் செயல்படாது. எனவே நல்ல நிறுவன பங்குகளையும், நீண்டகாலத்தில் தொழில் செய்யும் நிறுவனங்களையும் தேர்ந்தெடுப்பது ஒருவருக்கு நல்ல வருவாயை அளிக்கும். பங்குச்சந்தையில் பணம் பண்ண வெறும் விலை எண்கள் மட்டுமே உதவாது, திறமையான நிறுவனமும் அமைய வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குகளை ஆராய்வதற்கான எளிய இ.ஐ.சி. முறை – இப்படியும் வாங்கலாம் ?

பங்குகளை ஆராய்வதற்கான எளிய இ.ஐ.சி. முறை – இப்படியும் வாங்கலாம் ? 

Simple strategy to explore the Stocks – Investing Secrets

பொதுவாக பங்குச்சந்தையில் பங்குகளை வாங்க நீண்டகால முதலீட்டாளர்கள் பண்டமென்டல் அனாலிசிஸ்(Fundamental Analysis) என்றழைக்கப்படும் அடிப்படை பகுப்பாய்வு முறையையும், தினசரி மற்றும் குறுகிய கால வர்த்தகர்கள் டெக்னிக்கல் அனாலிசிஸ்(Technical Analysis) முறையையும் பயன்படுத்துவது நடைமுறையான ஒன்று.

இவற்றையெல்லாம் கற்றறிந்து பங்குகளை வாங்குவது மற்றும் விற்பதென்பது பங்குச்சந்தையில் எப்போதும் ஈடுபடுவர்களுக்கு ஒரு கலை என சொல்லலாம். ஆனால் இது போன்ற நேர வாய்ப்பு அனைவருக்கும் அமைந்திடாது. எனவே பங்குச்சந்தைக்கு தேவையான அனாலிசிஸ் முறைகளுக்கு முந்தைய பொருளாதார கணக்கீடுகளை தெரிந்து கொண்டால் போதும். ஓரளவு முதலீட்டிற்கு தேவையானவற்றை கற்கலாம்.

அப்படிப்பட்ட ஒரு பொருளாதார கணக்கீடு தான் இ.ஐ.சி. கட்டமைப்பு(EIC Framework). EIC (Economy.Industry.Company) கட்டமைப்பு முறையை நாம் இரண்டு வகைகளில் ஆராயலாம். ஒன்று மேலிருந்து கீழ், மற்றொன்று கீழிருந்து மேல். அப்படியென்றால் என்ன ?

இதனை ஒரு சிறு உதாரணத்துடன் காண்போம். உதாரணமாக நீங்கள் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறீர்கள். உங்களுக்கு தேவையான முதலீட்டை நீங்கள் அயல்நாட்டு நிறுவனத்திடம் இருந்து பெற இருக்கிறீர்கள். இந்த நிலையில், உங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்போகும் வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவர் ஆராய வேண்டிய விஷயமாக சில காரணிகள் சொல்லப்படுகின்றன.

அதாவது, உங்கள் நிறுவனத்தில் அவர் முதலீடு செய்ய தற்போதைய உலக பொருளாதாரம் எவ்வாறு உள்ளது, குறிப்பாக இந்திய பொருளாதாரம் இனி வரும் காலங்களில் எவ்வாறான நிலையை பெறும் என்பதனை அவர் தெரிந்து வைத்திருப்பது அவசியம். அப்போது தான் அவரது முதலீட்டுக்கான நல்ல வருவாயை ஈட்ட முடியும். உங்களுக்கும் தொடர்ச்சியான முதலீட்டை பெறுவதற்கான வாய்ப்பாக அமையும்.

நாட்டின் பொருளாதாரம் என சொல்லும் போது, ஜி.டி.பி.(GDP) என்ற பொருளாதார வளர்ச்சி குறியீடு, பணவீக்க விகிதம், வங்கி வட்டி விகிதங்கள், வர்த்தக பற்றாக்குறை, வேலைவாய்ப்பு விகிதம், உட்கட்டமைப்பு மற்றும் தொழிலுக்கான அரசின் கொள்கைகள் ஆகியவையாக சொல்லப்படுகிறது. இதனை தான் ஒரு முதலீட்டாளர்(Top Down Approach) காண வேண்டும்.

இரண்டாவதாக முதலீட்டாளர் ஒருவர், தான் முதலீடு செய்ய போகும் நிறுவனம் எந்த துறையில் உள்ளது, அந்த துறைக்கான சாதக-பாதகங்கள் தற்போதைய நிலையில் எப்படி உள்ளது என்பதனை ஆராய வேண்டும். முதலீடு செய்யப்போகும் துறைக்கான அரசின் கொள்கை மாற்றங்கள், வரி சலுகைகள், சுற்றுச்சூழல், தொழிலில் புதுமை, துறையில் உள்ள போட்டியாளர்கள் ஆகியவற்றை பார்க்க வேண்டும். அப்போது தான் முதலீடு செய்யப்போகும் நிறுவனம், இந்த துறையில் சாதிக்குமா என்பதனை எளிதாக அறிந்து விட முடியும்.

மூன்றாவதாக நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கைகளை அறிவது: நிறுவனத்தை துவங்கியவர் மற்றும் உரிமையாளர்கள் உண்மையில் அந்த நிறுவனத்தின் தொழில் மீது நம்பிக்கை வைத்துள்ளார்களா, அவர்களது தொழில் திட்டமென்ன, நிர்வாகம் எப்படி உள்ளது, பொருட்கள் மற்றும் சேவையில் போட்டியாளர்களை சமாளித்து என்ன வித்தியாசத்தை ஏற்படுத்த போகிறார்கள் என்பதனை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

இவ்வாறாக ஒரு முதலீட்டாளர் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் மட்டுமில்லாமல், பங்குச்சந்தையின் கீழ் வரும் நிறுவனங்களுக்கும் இம்முறையை பயன்படுத்தலாம். இந்த முறையை தான் நாம் மேலிருந்து கீழ்(Top Down Approach) என்கிறோம். முதலில் நமக்கு தேவையான காரணி பொருளாதார வளர்ச்சி எண்கள் தான். கடைசியாக தான் நிறுவனத்தின் தகவல்கள்.

EIC Framework

கீழிருந்து மேல் முறையில்(Bottom up Approach), மற்றொரு உதாரணத்தை பார்ப்போம். உங்கள் நண்பர் ஒருவர், உங்களது தெருவில் தேநீர் கடை நடத்தி வருகிறார் என வைத்து கொள்வோம். இவருக்கு எந்த வெளிநாட்டு முதலீடும், பெருநிறுவன முதலீடும் தேவையில்லை. அவரை பொறுத்தவரை மற்ற நாடுகளில் ஏற்படும் சலசலப்புகள் அவ்வளவாக இவரது தொழிலை பாதிக்காது.

அவருக்கு தேவையென்னவோ தேநீருக்கு தேவையான மூலப்பொருட்கள் தான் (பால், காபி, டீ தூள்) மற்றும் கூடுதலாக வடை போடுவார். இவரது வாடிக்கையாளர்கள் பக்கத்துக்கு தெருவில் உள்ள ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் அவ்வப்போது வரும் வழிப்போக்கர்கள் தான். இது போன்ற தொழிலில் நீங்கள் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்றால், முதலில் பார்க்க வேண்டியது உலக பொருளாதாரமோ, இந்திய பொருளாதார வளர்ச்சியோ அல்ல. உள்ளூர் நிகழ்வு தான்.

எனவே கீழிருந்து மேலாக துவக்கத்தில் சொல்லப்பட்ட தேநீர் தொழிலின் வாய்ப்பையும், இரண்டாவதாக அந்த தொழிலுக்கான துறையையும் ஆராய வேண்டும். உலகம் முழுவதும் ஒரே பிரச்சனை இருந்திருந்தால், நாட்டின் பொருளாதாரமும் தேநீர் கடையை பாதிக்கலாம். பொதுவாக பங்குகள் மற்றும் உலகளவிலான முதலீடுகளுக்கு மேலிருந்து கீழ் வரும் இ.ஐ.சி. முறையை பயன்படுத்த வேண்டும். உள்ளூர் வாடிக்கையாளர்களை மட்டும் சார்ந்திருக்கும் தொழிலுக்கு கீழிருந்து மேலான முறையை பயன்படுத்தலாம்.

இவ்வாறாக நீங்கள் முதலீடு செய்யவிருக்கும் அல்லது செய்திருக்கும் பங்குகளை இ.ஐ.சி. முறையில் அளவிட்டு பாருங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்டு vs பங்குச்சந்தை – எங்கே முதலீடு செய்வது ?

மியூச்சுவல் பண்டு vs பங்குச்சந்தை – எங்கே முதலீடு செய்வது ?

Mutual Funds vs Stock (Share) Market – Where to invest ?

நம்மில் பலர் மியூச்சுவல் பண்டு என சொல்லப்படும் பரஸ்பர நிதியும், பங்குச்சந்தையும் ஒன்று என நினைத்து கொள்கின்றனர். அது போல, சொல்லப்பட்ட இரண்டுமே மிக அதிகமான ரிஸ்க் தன்மை கொண்டவை, அதனால் முதலீட்டுக்கு ஏற்றதல்ல என்ற தவறான எண்ணமும் உள்ளது.

உண்மையில் மியூச்சுவல் பண்டு(Mutual Funds) என்பது முதலீட்டாளர்களிடம் பெறப்படும் முதலீடு பல்வேறு சாதனங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும் முறையாகும். இதற்காக பல பிரிவுகளும், திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை நிர்வகிப்பது அஸெட் மேனேஜ்மென்ட்(Asset Management Company) என சொல்லப்படும் நிறுவனங்களாகும். பெரும்பாலும் இந்நிறுவனங்கள் வங்கி சேவையிலிருந்து வந்தவை ஆகும். ஆதலால் இந்த நிறுவனங்களின் நிதி சார்ந்த அனுபவமும் நீண்ட காலத்திற்கு உரியவை.

2020ம் ஆண்டு முடிவின் படி, அமெரிக்காவின் பரஸ்பர நிதிகளின் சொத்து மதிப்பு(AUM) சுமார் 24 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய பரஸ்பர நிதிகள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு ரூ. 33 லட்சம் கோடி (மே 31, 2021). உலகளவில் முதல் பத்து இடங்களில் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் நிதி(Financial Assets) சார்ந்த சொத்துக்களை மட்டுமே சேர்த்து வைத்துள்ளனர். அதாவது அவர்களிடம் நிலம், தங்கம், வைரம் போன்றவையாக இல்லாமல் வங்கி முதலீடு, மியூச்சுவல் பண்டு, பங்குச்சந்தை மற்றும் இதர நிதி சார்ந்த முதலீடுகளாக இருக்கலாம்.

பரஸ்பர நிதி சேவையில் பல திட்டங்கள் உள்ளன. இவை பல இனங்கள் சேர்ந்த ஒரு கூட்டு கலவையாக உள்ளன. சீட்டு, அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட் ஆகியவற்றுக்கு மாற்றாக, அரசு மற்றும் தனியார் பத்திரங்கள், அந்நிய நிறுவனத்தில் முதலீடு, பங்குச்சந்தை, குறிப்பிட்ட துறை சார்ந்த என முதலீடு திட்டங்கள் பல உள்ளன. இவை அனைத்தும் கிடைக்கப்பெறும் சந்தை தான் மியூச்சுவல் பண்டு சேவையாகும்.

தனிநபர் ஒருவர் தனக்கும், தனது குடும்பத்திற்கும் தேவையான நிதி இலக்குகளை நிர்ணயித்து பின்பு அதற்கேற்ற பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். இங்கே கால அளவு என்பது முக்கியம். நீங்கள் எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்ய உள்ளீர்கள் மற்றும் எப்போது இந்த முதலீடு உங்களுக்கு தேவைப்படும் என்பதையும் அறிந்திருத்தல் அவசியம். மியூச்சுவல் பண்டு முதலீடு ரிஸ்க் தன்மை கொண்டது. ஆனால் அனைத்து மியூச்சுவல் பண்டு திட்டங்களும் ஒரே அளவிலான ரிஸ்க் தன்மை கொண்டவையல்ல. ஒரு இரவில் இருந்து 20 வருடங்கள்(Overnight to Long term Funds) வரை வெவ்வேறான முதலீட்டு திட்டங்களை பிரதிபலிப்பவை.

மிகவும் குறுகிய காலத்தில் குறைந்த ரிஸ்க் அளவு கொண்ட திட்டங்கள் உள்ளன. இவற்றில் கிடைக்கப்பெறும் வருவாய் அஞ்சலகம் மற்றும் வங்கி சேமிப்பை ஒட்டி அமையும். நடுத்தர காலத்தில் அரசின் கொள்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பொறுத்து திட்டங்களின் வருவாய் இருக்கும். நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்பட்டு நல்ல வருவாயை ஈட்ட முடியும். முதலீட்டை பொறுத்தவரை பணவீக்கத்தை தாண்டிய வருவாயும், நிதி இலக்குகளை எட்டக்கூடிய தன்மையையும் கொண்டிருக்க வேண்டும்.

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதற்கு முன்னர், உங்களுக்கு தேவைப்படும் விஷயங்கள்:

  • நிதி இலக்கு (Goal Name)
  • இலக்கிற்கான தொகை (இன்றைய  மதிப்பில்) – Goal Value / Corpus
  • இலக்கிற்கான காலம் – Goal Period
  • எதிர்பார்க்கும் வருவாய் – Expected Returns %
  • முதலீட்டு வடிவம் – மாத முதலீடு அல்லது ஒரு முறை மட்டும் முதலீடு

மேலே சொன்ன விஷயங்களை  கருத்தில் கொண்டு, அதனை சார்ந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பது அவசியமானது. புரிவது சற்று கடினமாக இருந்தால், தகுந்த முதலீட்டு ஆலோசகரின் முன்னிலையில் முதலீட்டு முடிவை எடுங்கள். முதலீட்டு ஆலோசகர் எனும் போது, உங்களின் நிதி இலக்குகளில் அக்கறை கொண்டு, அதற்காக கட்டணம் பெற்று சரியான தரவுகளை அளிக்கும் நபர்களை கண்டறியுங்கள். ஏஜெண்ட்களிடம் மாட்டி கொள்ள வேண்டாம். அவர்களின் கமிஷன் தொகைக்காக உங்களுக்கு சம்மந்தமில்லாத முதலீட்டு திட்டங்களை பரிந்துரைக்கலாம். முடிவில் நஷ்டம் உங்களுக்கு மட்டுமே. இந்த தவறான அணுகுமுறையால் தான், இன்று நம் நாட்டில் பெரும்பாலோர் முறையான காப்பீட்டு திட்டத்தை பெற இயலவில்லை. அது முதலீட்டு திட்டங்களிலும் நடக்க வேண்டாம்.

பங்குச்சந்தை(Share Market) என்பது ஒரு தொழிலை போல. ரிஸ்க் என்பது இவற்றில் எப்போதும் அதிகம் தான். பங்குச்சந்தை மூலம் வெகு விரைவில் நான் கோடீஸ்வரராக போகிறேன் என இங்கு யாரும் வர வேண்டும். ஆழம் தெரியாமல் காலை விட்டால், பிறகு யாரையும் நம்ப மாட்டீர்கள். பங்குச்சந்தை முதலீடு(Equity Investing) என்பது பலதரப்பட்ட முதலீட்டாளர்களிடம் பெறப்படும் முதலீடு, ஒரு நிறுவனத்திற்கு அளிக்கப்படும். பின்பு அதனை கொண்டு அந்த நிறுவனம் தொழில் செய்யும். லாப, நட்டத்திற்கு முதலீட்டாளர்கள் தான் பொறுப்பு. பங்குச்சந்தையை நிர்வகிக்க ஜாம்பவான் செபி(SEBI) உள்ளது. சந்தையில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் ஒழுங்குமுறைப்படுத்தவது செபியின் வேலை. செபி தான் பரஸ்பர நிதி என சொல்லப்படும் மியூச்சுவல் பண்டு சேவைக்கும் தலைமை.

பங்குச்சந்தை என நினைத்து கொண்டு நம்மில் பலர் சந்தையை விட்டு, மோசடி பேர்வழிகளிடம்(Ponzi Schemes) பணத்தை இழந்து கொண்டிருக்கின்றனர். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். பங்குச்சந்தையை பொறுத்தவரை ஒழுங்குமுறை ஆணையம், தரகர்கள், பதிவாளர்கள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் இருக்கும். இவை அனைத்தும் முதலீட்டாளர்களின் நலன் கருதி நிர்வாக சேவை செய்வதற்கு. பங்குச்சந்தையில் உங்களுக்கு பணம் பண்ண யாரும் உதவ மாட்டார்கள், அப்படி எதுவும் இங்கே கிடையாது. பங்குச்சந்தையை பற்றிய கல்வியை அளிக்க இங்கே எண்ணற்ற நிறுவனங்களும், புத்தகங்களும் உள்ளன. முறையாக கற்று கொண்டு, நீங்களாகவே களம் இறங்கினால் தான் உண்டு. பண விஷயத்தில் மற்றவர்களை நம்பி கொண்டு, உங்கள் கையை சுட்டு கொள்ள வேண்டாம்.

பங்குச்சந்தையில் பணம் பண்ணலாம், உங்கள் பணத்தை கொண்டு. உங்களிடம் உபரியாக உள்ள பணத்தை மட்டுமே, சந்தையில் முதலீடு செய்து பணம் பண்ணுங்கள். நஷ்டத்தை தவிர்க்க இயலாது, நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் – பங்குச்சந்தை என்பது ஒரு தொழில், இவற்றில் சூதாட்டம் வேண்டாம். முதலீடு செய்யும் முன்னர், அதற்கான முறையான கல்வியை கற்று கொண்டு பின்னர் ஆயுதமாகுங்கள். உண்மையில் பங்குச்சந்தை பணம் பண்ணும் சூத்திரம், அனைவருக்கும் சாத்தியமே – முறையான கல்வியும், நீண்ட காலத்தில் பொறுமையும் இருந்தால்.

மியூச்சுவல் பண்டுக்கு பதில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா ?

என்னிடம் பல நண்பர்கள் கேட்கும் கேள்வி இது. மியூச்சுவல் பண்டை விட, பங்குச்சந்தையில் அதிகம் வருமானம் கிடைக்குமாமே, மியூச்சுவல் பண்டும் பங்குச்சந்தையில் தான் முதலீடு செய்கிறார்கள் – அப்புறம் எதற்கு நான் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய வேண்டும் ?

இந்த கேள்வி தான் பெரும்பாலானவர்களிடம் !

முதலில் இரண்டுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். மியூச்சுவல் பண்ட் சேவையில் பல கலவை திட்டங்கள் உள்ளன. பங்குச்சந்தை என்பது ஒரு நேரடி தொழில் போல. பரஸ்பர நிதி சேவைக்கு பெரிய கற்றல் தேவையில்லை. ஆனால், பங்குச்சந்தை அப்படியல்ல.

நீங்கள் இலக்கிற்காக முதலீடு செய்ய நினைத்தால், மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் தான் முதலீடு செய்ய வேண்டும் – ஒரு மாரத்தான்(Marathon) நடை போல…

உங்களுக்கென நிதி இலக்கு, இலக்கிற்கான காலம் உள்ளது. நீங்கள் அதனை தவிர்க்க இயலாது. உங்களது குழந்தை மேற்படிப்பு, திருமணம், ஓய்வு காலம் ஆகியவை குறிப்பிட்ட கால அளவை கொண்டவை. அதனால் முதலீட்டில் ஒரு ஒழுக்கம் தேவைப்படும். தொடர்ச்சியாக நீங்கள் முதலீடு செய்து வரும் போது, உதாரணமாக 15 வருடங்களுக்கு பிறகு உங்கள் குழந்தையின் திருமண செலவை ஏற்படுத்தலாம் அல்லது உங்கள் ஓய்வு காலமாக இருக்கலாம்.

நான், ஏன் எனது நிதி இலக்கிற்கான தொகையை பங்குச்சந்தை மூலம் சம்பாதிக்க முடியாதா ?

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்கலாம். பங்குச்சந்தை என்பதே உங்களுக்கான செலவத்தை ஏற்படுத்துவது தான். ஆனால், உங்களால் நிதி இலக்கை சார்ந்து முதலீடு செய்ய சாத்தியமா என்றால் – அது தான் இல்லை. மியூச்சுவல் பண்டு பல கட்டமைப்புகளை கொண்டது. அங்கே உங்கள் பணம்,அனுபவமிக்க பண்டு மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. பொதுவாக அவர்களுக்கு தெரியும், அடுத்து என்ன சந்தையில் நடக்க போகிறது என்று. அவர்களிடம் இருப்பதோ பல லட்சம் கோடிகள் முதலீடு. ஆனால், நமக்கு தாமதமான செய்திகள் மூலம் – அதுவும் ஊடகத்தின் வாயிலாக.

பங்குச்சந்தையில் நமக்கான ஒழுக்கத்தை நாம் தான் ஏற்படுத்த வேண்டும். தவறினால், பணம் இழக்க நேரிடும். யூனிடெக், சுஸ்லான், ஜே.பி. அஸோஸியேட்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் போன்ற பங்குகளின் விலையெல்லாம் முன்னர் எப்படி இருந்தது என்பது நமக்கு தெரியும். ஆனால், இன்று பங்குகளின் விலை மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் நிர்வாகமே தள்ளாட்டத்தில். மேலே சொல்லப்பட்ட பங்குகள் எல்லாம் ஒரு காலத்தில் பெரு நிறுவன பங்குகள். அவற்றின் விலையும் உச்சத்தில் தான் இருந்தன. முடிவில் ஒரு குமிழி(Bubble) போல உடைந்து விட்டது. பல்வேறு நிர்வாக காரணங்களால் தான் அவை நடைபெற்றுள்ளது. இது போன்ற நிறுவனங்களில் நாம் முதலீடு செய்து விட்டு, நமது இலக்கிற்கான காலத்திற்கு அருகில் வரும் போது எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டு விட்டால் !

மியூச்சுவல் பண்டை போல நீங்கள் சந்தையில் மாதாமாதம் ஒரே பங்கில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது அவ்வளவு எளிதல்ல. பங்கு உச்சத்தில் இருந்தால் நீங்கள் விற்க நேரிடும் அல்லது நிறுவனத்தை பற்றிய செய்திகள் எதிர்மறையாக இருந்தால், நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள் ? உங்களுக்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் நூறு சதவீதம் உண்மையாக இருக்குமா ? நீங்கள் வாங்கிய பங்கு ஒவ்வொரு வாரமும் இறக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் தொடர்ச்சியாக வாங்கும் மனநிலையை கொண்டிருப்பீர்களா அல்லது அதற்கான காரணத்தை அறிய முற்படுவீர்களா ? பொதுவாக பங்குச்சந்தையில், நீங்கள் முடிவெடுப்பதற்குள் அந்த நிகழ்வு முடிந்து விடும்.

மியூச்சுவல் பண்டில், சந்தை ஏற்ற இறக்கத்தை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நமது இலக்கு தொடர்ச்சியாக முதலீடு செய்வது தான். அதனால் தான் சொல்கிறேன், பரஸ்பர நிதிகள் எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களை உங்கள் நிதி இலக்கிற்கு பயன்படுத்துங்கள். பங்குச்சந்தையை உங்கள் செல்வ வளத்திற்கு(Wealth Creation) பயன்படுத்துங்கள் என்று. நீங்கள் எந்த வேலை செய்தாலும், உங்களுக்கென்று பகுதி நேர தொழில் உள்ளது – அது தான் பங்குச்சந்தை. பங்குச்சந்தையில் முதலீடு செய்து செலவத்தை பெருக்க உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள். அவர்களின் நீண்ட கால இலக்கிற்கு மியூச்சுவல் பண்டு திட்டங்களை தேர்ந்தெடுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com