உங்கள் பணத்தை பல மடங்காக பெருக்குவது எப்படி ?
How to multiple your money in Easy steps ?
உலகின் எட்டாவது அதிசயம் கூட்டு வட்டி(Power of Compounding) என்றால், உங்களது முதலீட்டை இரட்டிப்பாக்குவது என்பது இன்று ஏமாற்று வேலையாக மாறியுள்ளது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பல மடங்காக மாற்றி தருகிறேன் என சில கும்பல்கள் இன்று உலகம் முழுவதும் திரிந்து கொண்டு தான் இருக்கிறது.
போன்சி(Ponzi) என சொல்லப்பட்ட ஏமாற்று திட்டங்களும் அவ்வப்போது வந்தவண்ணம் தான் உள்ளது. நம்மில் பலரும் அவற்றில் பணத்தை கட்டி விட்டு, பின்பு தான் ஏமாற்றப்பட்டதாக புலம்புவதும் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
அரசு சார்பில் எச்சரிக்கையும், விழிப்புணர்வு செய்தியும் வந்து கொண்டிருந்தாலும் நமக்கு நாமே கவனமுடன் இருப்பது அவசியமாகும். “உங்கள் பணத்தை சில மாதங்களில் இரட்டிப்பாக தருகிறோம், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள் ‘ என்ற விளம்பரத்தை பார்த்திருப்போம். எப்படி இரட்டிப்பாக்க முடியும் என கேட்டால், பங்குச்சந்தையில் போடுகிறோம், டாலர்களில் வர்த்தகம் புரிகிறோம், தங்கத்தை வாங்கி வைக்கிறோம் அல்லது வீட்டுமனையில் முதலீடு செய்கிறோம் என்பார்கள்.
உண்மையில் அப்படி ஒரு எளிய வாய்ப்பு இருந்தால், சாமானிய மக்களுக்கு சுலபமாக கிடைத்து விடுமா என்ன ? அப்புறம் எதற்கு பெரு நிறுவனங்களும், பண முதலைகளும் இருக்கிறார்கள். அம்பானியும், அதானியும் எதற்கு தொழில் செய்ய வேண்டும், டாட்டா நிறுவனத்திற்கு வேறு வேலை இல்லையா என்ன ?
ஏமாற்று பேர்வழிகளிடம் உண்மையில் சிக்கி கொள்வது நடுத்தர வருவாயை கொண்டிருப்பவர்கள் தான். குறுகிய காலத்தில் விரைவாக பணம் சம்பாதிக்கிறேன் என மாட்டிக்கொள்பவர்கள் இவர்கள் தான். எந்தவொரு முதலீட்டு சாதனமும் நிரந்தரமான, அதுவும் அளவில்லாத முதலீட்டு பெருக்கத்தை உடனடியாக ஏற்படுத்தும் என சொல்லவில்லை.
வங்கி வட்டி விகிதத்திலும் ஏற்ற-இறக்கம் நிலவும், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டிலும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது. பங்குச்சந்தைக்கு சொல்ல தேவையில்லை. நீண்டகாலத்தில் முதலீடு செய்து விட்டு காத்திருந்தால், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறலாம். உங்களை விரைவாக பணக்காரராக்கும் என்று எங்கும் உத்தரவாதம் தரவில்லை, அப்படி சொல்லவும் இல்லை.
அதே வேளையில், உங்கள் முதலீட்டை பல மடங்காக மாற்றலாம். இரட்டிப்பாக, மூன்று மடங்காக அல்லது நான்கு மடங்காக, எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். ஆம், அடிப்படை கணிதம் தான் இது. இதற்கு நீங்கள் இரு வேலைகளை செய்தாக வேண்டும்.
- எதிர்பார்க்கும் வருவாய் அல்லது வட்டி விகிதம்(Expected Returns %)
- முதலீட்டு காலம்
மேலே சொன்ன இரண்டு காரணிகள் உங்கள் பணம் பல மடங்குகள் உயர்வதற்கு காரணமாக இருக்கும். நீங்கள் செய்யும் முதலீடு ஒரு தொழிலாகவோ(Business) அல்லது முதலீட்டு சாதனமாகவோ(Investment Avenue) இருக்கலாம். உங்கள் பணம் வேலை செய்தால் மட்டுமே, உங்களுக்காக சம்பாதிக்க முடியும். அது தொடர்ச்சியாக தனது வேலையை செய்யும் போது தான் கூட்டு வட்டியின் பலனும் நமக்கு கிடைக்கப்பெறும்.
உதாரணமாக உங்கள் முதலீடு இரட்டிப்பாக,
விதி எண் – 72:
72 / எதிர்பார்க்கும் வட்டி விகிதம் %
உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் உள்ளது. அதனை நீங்கள் இரட்டிப்பாக மாற்ற மேலே சொன்ன இரண்டு காரணிகளும் அவசியம். உதாரணமாக நாம் எதிர்பார்க்கும் அல்லது கிடைக்கும் வட்டி விகிதம் 8 சதவீதம் எனில், விதி எண் – 72ன் படி, ஒன்பது வருடங்களில் நமது பணம் இரட்டிப்பாக மாறும். ஆம், இது கணிதம் தான்.
72 / 8 = 9 வருடங்கள்
வட்டி விகிதம் 12 சதவீதம் எனில் ஆறு வருடங்களில் இரட்டிப்பாகும், வட்டி விகிதம் 6 சதவீதம் எனில் உங்கள் பணம் இரட்டிப்பாக 12 வருடங்கள் எடுத்து கொள்ளும்.
விதி எண் – 114: (மூன்று மடங்காக)
114 / எதிர்பார்க்கும் வட்டி விகிதம் %
விதி எண் – 144 (நான்கு மடங்காக)
144 / எதிர்பார்க்கும் வட்டி விகிதம் %
நமக்கு தேவையான காரணிகள் கிடைக்கப்பெறும் வட்டி விகிதமும், முதலீட்டு காலமும் தான். எனவே நமது இலக்கை உறுதி செய்யும் முதலீட்டு சாதனத்தை தேடுவது தான் முதலீட்டின் சிறப்பம்சமாக இருக்கும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை