All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் ? – சிறு பார்வை 2020-21

நாட்டின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் ? – சிறு பார்வை 2020-21

India’s GDP Growth Rate – A Small Glimpse – FY20-21

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த 7 காலாண்டுகளாக சரிவை சந்தித்து வருகிறது. 2018ம் ஆண்டின் துவக்கத்தில் 7.7 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி பின்னர் இறக்கத்தில் மட்டுமே சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 2019 காலாண்டு முடிவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக இருந்தது.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டின் (மார்ச் 2020) மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இன்னும் அறிவிக்கப்படவில்லை. நடப்பு மாதத்தின் இறுதியில் இது சார்ந்த தகவல்கள் வெளியிடப்படும். மார்ச் 2020 காலாண்டில் பெரும்பாலான வளரும் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகள் பூஜ்யத்திற்கு குறைவான வளர்ச்சியை தான் பெற்றுள்ளது.

வல்லரசு நாடான அமெரிக்கா (- 4.8 ) சதவீதமும், தென் கொரியா (-1.4 சதவீதமும்), சீனா (-9.8) சதவீதமும், ஹாங்காங் (-5.3 ) சதவீதமாகவும் மார்ச் 2020 காலாண்டு பொருளாதார வளர்ச்சியை கூறியுள்ளது. வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றான வியட்நாம் (+3.8) சதவீத வளர்ச்சியை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்ததால், பெரும் பொருளாதார சரிவை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிறுவனங்கள் ஒரு நாள் இயங்காமல் இருந்தாலே, அதன் பாதிப்பு ஓரிரு காலாண்டுகள் இருக்கும். இந்நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் முதலாம் காலாண்டில் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் உள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த மூடிஸ்(Moody’s) தர மதிப்பீடு நிறுவனம், இந்தியாவிற்கான 2020-21ம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சியை பூஜ்யமாக மதிப்பீடு செய்துள்ளது. அரசு ஊக்குவிப்பு இல்லாவிட்டால், இது மேலும் சரியலாம் என எச்சரித்துள்ளது. அதே வேளையில், 2021-22ம் நிதியாண்டுக்கான வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு வழங்கியுள்ளது.

நாட்டின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit), மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் அதிகரித்து வருவது கவலையளிக்க கூடியதாக உள்ளது. அரசு சார்பில் இதுவரை சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறு மற்றும் குறுந்தொழில்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை களையவும், தொழில்களுக்கான வளர்ச்சியை மீட்டெடுக்கவும் அரசாங்கம் பெருமளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டுக்கான கடன் பெறுதலில் 7.8 லட்சம் கோடி ரூபாய் இருந்த நிலையில், இதனை மேலும் அதிகரித்து ரூ. 12 லட்சம் கோடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. சொல்லப்பட்ட தொகை நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கு மட்டும். இதன் மூலம் வரும் நாட்களில் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இருக்கலாம். இருப்பினும், பெறக்கூடிய தொகைக்கு சந்தையில் கடன் பத்திரங்களை விற்க வேண்டிய பொறுப்பு பாரத ரிசர்வ் வங்கிக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற காலங்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமில்லாமல் வேலை வாய்ப்பு அதிகரிப்பு, பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருத்தல், நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்தல் ஆகியவையும் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

வரக்கூடிய நாட்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், தினசரி வாழ்க்கையை நகர்த்தி கொண்டு பொருளாதாரத்தை பாதுகாப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. எதிர்வரும் மின்சார வாகன மாற்றம், செயற்கை நுண்ணறிவு, 5ஜி தொழில்நுட்பத்தால் ஏற்பட உள்ள புரட்சி, புதிய வர்த்தக கொள்கைகள் மற்றும் அதனை சார்ந்த நாணய மதிப்பு ஆகியவை அரசுக்கு முன் இருக்கும் சவாலாக உள்ளன.

வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளின் கடன் ஒவ்வொரு காலாண்டிலும் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. அமெரிக்க – சீன வர்த்தக போர் இன்னும் தீர்வை காணவில்லை. இது மிகப்பெரிய அளவில் வெடிக்கும் போது, அது நம் நாட்டிற்கான வாய்ப்பாக அமையுமா என்பதும் சந்தேகமே.

ஏனெனில் தொழிலை எளிமையாக துவங்குதல், புதிய தொழில் கொள்கைகளுக்கான வரைமுறைகள் மற்றும் வரி விதிப்புகளில் நாம் இன்னும் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் வர்த்தகம் நமக்கு கிடைத்து விடும் என பொத்தாம் பொதுவாக சொல்லி விட முடியாது. சீனாவின் இன்றைய  வளர்ச்சிக்கு அமெரிக்கா தான் காரணமாக இருந்துள்ளது. வேகமாக வளரும் நாடுகளில் நமக்கு போட்டியாக வியட்நாம், தென் கொரியா, ஹாங்காங் போன்ற நாடுகள் உள்ளன. எனவே வரக்கூடிய காலங்களில் அரசின் முடிவை பொறுத்து தான் அவை வாய்ப்புகளாக மாற்றப்படுமா என்பது தெரிய வரும்.

நடப்பில் காணப்படும் பொருளாதார மந்தநிலை அடுத்த ஓரிரு வருடங்கள் செல்லும் நிலையில், இது மக்கள் வாழ்வாதாரத்தில் பெருத்த சிரமத்தை ஏற்படுத்தும். பணம் கையிருப்பு கொண்டவர்கள் வரவிருக்கும் நாட்களில் அதிகமாக செலவழிக்காமல், சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசின் துரித நடவடிக்கை இப்போது தேவைப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2020ம் ஆண்டுக்கு பிறகான புதிய முதலீட்டு வாய்ப்புகளும், சவால்களும் – நிகழ்ச்சி நிரல்

2020ம் ஆண்டுக்கு பிறகான புதிய முதலீட்டு வாய்ப்புகளும், சவால்களும் – நிகழ்ச்சி நிரல் 

EV – Road for Automation – Challenges & Opportunities on Stocks

வரக்கூடிய காலகட்டங்கள் தொழில் ரீதியாகவும், வேலைகளிலும் புதிய சவால்களை எதிர்நோக்கும் வகையில் அமைய உள்ளது. நடப்பில் வெறும் கோவிட்-19(Coronavirus) தாக்கமாக மட்டுமில்லாமல், உலகளவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகும் நிலையில் உள்ளது.

மின்சார வாகனங்கள், தானியங்கி புரட்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதிய தொழில் கொள்கைகள் மற்றும் மனிதர்கள் என மாற்றம் நடைபெற உள்ளது. புதிய தொழில்நுட்பத்தின் குப்பைகளை எந்த நாடுகள் ஏற்று கொள்ளப்போகிறது, எவையெல்லாம் தொழில்நுட்ப அதிகாரத்தை ஆரோக்கியமாக பயன்படுத்த உள்ளது.

முதலீடுகள் மற்றும் அதனை சார்ந்த புதிய வாய்ப்புகளை கண்டறிதல், உண்மையான தொழிலில் முதலீடு செய்வதன் அனுகூலம் என பல விஷயங்களை விவாதிக்க உள்ளோம். மின்சார வாகனங்களுக்கான மின்கலன்களை(Batteries) அமைக்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குச்சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றை பற்றியும் நாம் காண இருக்கிறோம்.

EV - Webinar Varthaga Madurai

பரஸ்பர நிதிகளில் காணப்படும் கடன் பத்திரங்கள் மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகளை எளிய முறையில் புரிந்து கொள்ளலாம். மேலும் அவற்றில் உள்ள சாதக – பாதகங்களும் இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட உள்ளது. பணத்தை இரட்டிப்பாக்கும் எளிய பணவளக்கலைகள் உங்களுக்காக காத்திருக்கிறது.

வாருங்கள், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று – இணைய வழியாக தொடர்பு கொள்வோம். பதிவு கட்டணம் – ரூ. 100 மட்டும். உங்களுடைய பதிவை உறுதி செய்து கொள்ள..

https://imjo.in/9XSM9R

பதிவை உறுதி செய்தவுடன், உங்களுக்கான நிகழ்ச்சி நிரலின் இணைப்பு மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை விகிதம் – பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடும் உண்மை

அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை விகிதம் – பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடும் உண்மை 

Rising Unemployment rate – More Job loss in India – CMIE

கொரோனா வைரஸ் தாக்கத்தின் செய்தி கடந்த இரண்டு மாதங்களாக உலகளவில் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலான வளரும் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளில் முழு ஊரடங்கு சொல்லப்பட்டிருந்தது. கோவிட்-19 தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை தாண்டியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 2,58,900 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,50,000 ஆகவும் உள்ளது.

ஊரடங்கு உத்தரவால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த ஐந்து வாரங்களாக அதிகரித்து வருகிறது. இது நம் நாட்டிலும் மிகப்பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்(CMIE) வெளியிட்ட அறிக்கையின் படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 23.52 சதவீதமாக உள்ளது. இது மார்ச் முடிவில் 8.74 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வாராந்திர முடிவின் படி, மே 3ம் தேதியில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) 27.11 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கிராமப்புறங்களை விட, நகர்ப்புறங்களில் வேலைகளை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஊரடங்கு நிகழ்வுக்கு பின்பு, இதுவரை 12 கோடி பேர் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நான்கு நபர்களில் ஒருவர் வேலையை இழப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகிறது.

ஏப்ரல் மாத அறிக்கையின் படி, அதிகபட்ச வேலையிழப்பாக தமிழகத்தில் 49.8 சதவீதமும், பீகாரில் 46.6 சதவீதமும் மற்றும் ஜார்கண்டில் 47 சதவீதமும் உள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஏப்ரல் மாத வேலைவாய்ப்பின்மை விகிதம் 43 சதவீதமாக உள்ளது. எதிர்பார்க்காத வகையில் புதுச்சேரியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 75 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சுற்றுலா, விடுதிகள் மற்றும் உணவகங்களின் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சொல்லப்பட்ட தகவல்கள் அமைப்பு சார்ந்த தொழில்களை கொண்டு தான் எடுக்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளும் போது இதனை விட அதிகமாக இருக்கலாம்.

ஊரடங்கு அடுத்த சில நாட்களுக்கு பின்பு தளர்த்தப்பட்டாலும், பெரும்பாலான தொழில்கள் தற்போதைய நிலையில் இயங்குவதற்கான சூழல் இல்லை. மேலும் பிற மாநிலத்தவர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் வேளையில், உற்பத்தி துறை மீண்டும் வேகமெடுக்குமா என்பது சந்தேகமே.

கொரோனா வைரஸ் தாக்கம் பொருளாதார பின்னணிக்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், உண்மையில் பொருளாதார மந்தநிலை என்பது கடந்த இரண்டு வருடங்களாக இருந்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை விகிதமும் பல மாதங்களாக அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில், சுமார் 40 கோடி மக்கள் இந்தியாவில் மட்டும் வறுமை நிலைக்கு தள்ளப்படுவர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரித்துள்ளது.

நோய் தாக்கத்திற்கு மருந்து கண்டுபிடித்து விட்டோம் என சில நாடுகள் முன்னுக்கு வந்தாலும், இதன் உண்மை நிலை வரும் வாரங்களில் தெரிய வரும். ஆனால், வேலை இல்லாத சூழல் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்காது. எனவே, இப்போதைய அனைவருக்குமான தேவை அத்தியாவசியங்களை பூர்த்தி செய்வதே. இதனை தான் அரசாங்கத்திடம் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர் நடுத்தர மற்றும் ஏழை மக்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் நிதி பற்றாக்குறை சிக்கல் – அபாய சங்கிலியை உடைக்கும் பொருளாதாரம்

நாட்டின் நிதி பற்றாக்குறை சிக்கல் – அபாய சங்கிலியை உடைக்கும் பொருளாதாரம் 

India’s Fiscal Deficit Problem – The economy that breaks the Situation

பொதுவாக நமது குடும்பத்தின் நிதி நிலை சரியான அளவில் இருந்தால் தான், குடும்ப உறவுகளிடம் பிரச்சனை இல்லாமல் சுமூகமான வாழ்வு முறை அமையும். வரவுக்குள் செலவு இருக்கும் போது, சிறு குடும்பமாக இருந்தால் என்ன, பெரிய குடும்பமாக இருந்தால் என்ன… சம்பாதிக்கும் பணம் ஒரு ரூபாயாக இருந்து, செலவு 50 பைசாவாக இருந்தால் சந்தோசம் தானே. இதுவே தலைகீழாக சென்றால், எப்படி இருக்கும் ?

அப்படி தான் நாட்டின் நிதி பற்றாக்குறையும். மத்திய அரசின் நிதி அறிக்கையில் இரு கண்களாக நிதி பற்றாக்குறையும்(Fiscal Deficit), வர்த்தக பற்றாக்குறையும்(Trade Deficit) இருக்கும். இது ஓரளவு கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், பொருளாதாரத்தில் பெரும்பாலும் பாதிப்பு இருக்காது. அதே வேளையில், இரண்டில் ஏதாவது ஒன்று பாதிப்படையும் போது, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாதகமாக அமையும்.

நாட்டின் நிதி பற்றாக்குறை கடந்த பிப்ரவரி மாத முடிவின் போது மொத்த  உள்நாட்டு உற்பத்தி அளவில்(GDP)  5.07 சதவீதமாக சொல்லப்பட்டது. 2019-20ம் நிதியாண்டில் மத்திய அரசு தனது பட்ஜெட்டில் சொன்ன கணக்கு படி, நிதி பற்றாக்குறை அமையவில்லை. மாறாக, வரவுக்கு மேலாக செலவு அதிகரித்திருந்தது.

இந்நிலையில், கடந்த நிதியாண்டின் முடிவில் (மார்ச் 31, 2020) நாட்டின் நிதி பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. முன்னர், இந்த விகிதம் 3.8 சதவீதத்திற்குள் இருக்கும் என நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இப்போது சொல்லப்பட்ட இலக்கை தாண்டி, நாட்டின் நிதி பற்றாக்குறை சென்றுள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காணப்பட்டு வந்த பொருளாதார மந்தநிலை, தேவை நுகர்வு குறைவு, இதன் காரணமாக வரி வசூலும் வெகுவாக குறைந்துள்ளது. எதிர்பார்த்த வருவாய் அரசுக்கு கிடைக்காத நிலையில், எதிர்மறையாக செலவும் அதிகரித்துள்ளது. அடுத்து வரவிருக்கும் பட்ஜெட்டில் துண்டு விழும் செயலாக இது நிகழ்ந்துள்ளது.

நடப்பில் கொரோனா தாக்கத்தால் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால், வரக்கூடிய காலாண்டுகளில் பொருளாதார எண்கள் மேலும் சரியலாம். தற்போதைய நிலையில் சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறையாக ஏற்பட்டுள்ளது.

நிதி பற்றாக்குறையை சமாளிக்க  மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பாரத ரிசர்வ் வங்கி, அமெரிக்காவை போல பணத்தை அச்சடிக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த நிகழ்வு ஏற்படுமாயின் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் சூழல் ஏற்படலாம். அதாவது நாட்டின் நிதி பற்றாக்குறையை சரிசெய்ய பாரத ரிசர்வ் வங்கி, மத்திய அரசின் கடன் பத்திரங்களை வாங்க நேரிடும். இதற்காக பணம் அச்சடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த விவகாரத்தை மத்திய வங்கி மறுத்துள்ளது. பொதுவாக மத்திய அரசு, தனது நிதி பற்றாக்குறையை சமாளிக்க அரசு கடன் பத்திரங்களை நிதி சந்தையில் விற்கும். இருப்பினும், இதற்கான மதிப்பு குறைவாக இருக்கும் பட்சத்தில் பாரத ரிசர்வ் வங்கி தலையிடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வாகன விற்பனை இல்லாத ஏப்ரல் மாத நிலவரம் – ஊரடங்கு உத்தரவு

வாகன விற்பனை இல்லாத ஏப்ரல் மாத நிலவரம் – ஊரடங்கு உத்தரவு 

No Vehicle Sales in April 2020 – Automobile Industry

கோவிட்-19 வைரஸ் தாக்கம், உலக பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளது. நம் நாட்டின் பொருளாதாரமும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மந்தநிலையில் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மே மாதம் 3ம் தேதி வரை சொல்லப்பட்டிருந்த ஊரடங்கு, மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு மே 17ம் தேதி வரை இருக்கும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸ் தாக்கம் குறைவாக இருக்கும் பகுதிகளில் சில தொழில்கள் மற்றும் சேவைகளை மீண்டும் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்டுள்ள ஊரடங்கு, உலகின் மிகப்பெரிய ஊரடங்கு உத்தரவாக கருதப்படுகிறது.

மூன்றாம் ஊரடங்குக்குள் செல்ல போகும் நாம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் ஊரடங்கில் இருந்ததால் பெரும்பாலான துறைகளின் விற்பனை மற்றும் அதனை சார்ந்த வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மந்தநிலையில் இருந்து வந்த நாட்டின் வாகன விற்பனை, கடந்த ஏப்ரல் மாத ஊரடங்கிலும் சுணக்கத்தை சந்தித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி(Maruti Suzuki) ஏப்ரல் மாதம் உள்நாட்டில் எந்த வாகனத்தையும் விற்கவில்லை என கூறியுள்ளது. அதே வேளையில், 630 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. துறைமுகங்கள் வழியாக இந்த ஏற்றுமதி நடைபெற்றுள்ளதாக மாருதி நிறுவனம் கூறியுள்ளது.

மஹிந்திரா(Mahindra & Mahindra) நிறுவனம் கடந்த மாதம் 733 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது கவனிக்கத்தக்கது. இருப்பினும், உள்ளூர் விற்பனையில் எதுவும் சொல்லப்படவில்லை. விவசாயம் சார்ந்த துறையில் மட்டும் சுமார் 4,700 வாகனங்களை ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்துள்ளது மஹிந்திரா.

இது போல எஸ்கார்ட்ஸ்(Escorts) நிறுவனம் உள்ளூர் விற்பனையில் 705 வாகனங்களையும், ஏற்றுமதியில் 92 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது. ஐஷர் மோட்டார்ஸ் தனது ஏப்ரல் மாத அறிக்கையில், 91 இரு சக்கர வாகனங்களை(Royal Enfield) விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவால் வாகன விற்பனை மட்டுமில்லாமல், அதன் உற்பத்தியும் பெரிதும் பாதித்துள்ளது. நாட்டில் உள்ள வாகன உற்பத்தி ஆலைகள் மூடப்படும் ஒவ்வொரு நாளும் சுமார் 2300 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் அமைப்பு(SIAM) கூறியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2,330 கோடி ரூபாயை லாபமாக ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ – காலாண்டு முடிவுகள்

2,330 கோடி ரூபாயை லாபமாக ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ – காலாண்டு முடிவுகள் 

Net Profit of Rs. 2,330 Crore for Reliance JIO – Q4FY20 Results

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 9.30 லட்சம் கோடி ரூபாய். ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி, பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை முதன்மை தொழிலாக கொண்ட ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு பல துணை நிறுவனங்கள் உள்ளன.

துணை நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ(Reliance Jio), தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகளை அளித்து வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கான தனது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருந்தது. நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1.39 லட்சம் கோடியாகவும், இதர வருமானம் ரூ. 4,133 கோடியாகவும் இருந்துள்ளது.

செலவினமாக ரூ. 57,683 கோடியும், வரிக்கு முந்தைய லாபமாக 9,233 கோடி ரூபாயும் சொல்லப்பட்டுள்ளது. நான்காம் காலாண்டின் நிகர லாபம் ரூ. 6,348 கோடி. கடந்த 2018-19ம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போது சொல்லப்பட்ட லாபம் 39 சதவீதம் சரிந்துள்ளது. முந்தைய வருடத்தின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 10,362 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது போல நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியும் இரண்டு சதவீதம்  குறைந்துள்ளது. இருப்பினும், துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ விற்பனை(Revenue) நான்காம் காலாண்டில் ரூ. 14,385 கோடியாக இருந்துள்ளது. இது கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, 6 சதவீத வளர்ச்சியாகும். ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த காலத்தை விட 73 சதவீதம் வளர்ச்சி பெற்று ரூ. 2,331 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் கடனை குறைக்கும் பொருட்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிய உத்திகளை தனது தொழிலில் பயன்படுத்தி வருகிறது. சமீபத்தில் உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. நிறுவனத்தின் தற்போதைய கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.70 ஆக உள்ளது.

கடந்த 10 வருடங்களில் இந்நிறுவனத்தின் லாபம் 10 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. விற்பனை வளர்ச்சி 10 வருட காலத்தில் 15 சதவீதமாக உள்ளது. இருப்பு நிலை அறிக்கையின் படி, நிறுவனத்தின் கையிருப்பு சுமார் 3.99 லட்சம் கோடி ரூபாய். பங்குதாரர்களிடம் இருந்து புதிய முதலீட்டை பெறுவதற்காக ரூ. 53,125 கோடி மதிப்பில் உரிமை பங்குகளை(Rights Issue) வெளியிட உள்ளது. ஆனால், அதற்கான தேதி குறிப்பிடப்படவில்லை.

15 பங்குகளுக்கு ஒரு உரிமை பங்கு என்ற விகிதத்தில் இந்த செயல்பாடு இருக்கும் என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. உரிமை பங்கு ஒன்றின் விலை ரூ. 1,257 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பங்கு ரூ. 1,465 என்ற விலையில் வர்த்தகமாகி உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அம்புஜா சிமெண்ட்ஸ் காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் ரூ. 554 கோடி

அம்புஜா சிமெண்ட்ஸ் காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் ரூ. 554 கோடி 

Net Profit of Rs. 554 Crore in Q4FY20 – Ambuja Cements

மும்பையை தலைமையிடமாக கொண்டு கடந்த 1983ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் அம்புஜா சிமெண்ட்ஸ். ஆரம்ப நிலையில், குஜராத் அம்புஜா சிமெண்ட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் தான் பின்னர் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனமானது.

சிமெண்ட் உற்பத்தியில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான ஹோல்சிம்(Holcim), அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் 62 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 34,200 கோடி. புத்தக மதிப்பு 116 ரூபாயாகவும், தற்போதைய பங்கு முகமதிப்பு 2 ரூபாயாகவும் உள்ளது.

கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.001 ஆக உள்ளது. நிறுவனத்திற்கு பெரிதான கடன் எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 25 மடங்கிலும், தற்போதைய பங்கு ஒன்றின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் 1.50 மடங்காக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக இருக்கும் நிலையில், நிறுவனர்கள் சார்பில் அடமான பங்குகள் எதுவும் இல்லை.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகளை(Quarterly Results) வெளியிட்டுள்ள இந்நிறுவனம் விற்பனையாக ரூ. 6,250 கோடியும், செலவினமாக ரூ. 5,058 கோடியையும் சொல்லியுள்ளது. இதர வருமானம் 145 கோடி ரூபாயாகவும், வரிக்கு முந்தைய லாபம் ரூ. 1,007 கோடியாகவும் உள்ளது. நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 554 கோடி.

சொல்லப்பட்ட நிகர லாபத்தை, கடந்த 2018-19ம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போது 12 சதவீத வளர்ச்சியாகும். அதே வேளையில் விற்பனை வளர்ச்சி சரிந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 22 சதவீதமும், 10 வருட காலத்தில் 15 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது.

இது போல, லாபம் ஐந்து வருடங்களில் 8 சதவீதமும், பத்து வருட கால அளவில் 6 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 24 சதவீத இறக்கத்தை சந்தித்துள்ளது. பங்கு மீதான வருமானம் கடந்த 10 வருடங்களில் 11 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

டிசம்பர் 2019ம் காலாண்டின் படி, நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 23,681 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. சிமெண்ட் துறையில், பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பூர்த்தி செய்யும் நடுத்தர நிறுவனமாக அம்புஜா சிமெண்ட்ஸ் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வரவிருக்கும் வாரங்களில் சந்தையை நகர்த்தும் முக்கிய காரணிகள்

வரவிருக்கும் வாரங்களில் சந்தையை நகர்த்தும் முக்கிய காரணிகள் 

Key Factors to drive the Indian Stock Market in the Upcoming weeks – May 2020

கடந்த வார முடிவில் பாரத ரிசர்வ் வங்கி  அறிக்கையின் படி, மத்திய அரசின் கடன் நிலுவை தொகை 1.35 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் நிலையில், அது நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும். கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், தினசரி கூலி வருவாயை நம்பியிருக்கும் பெரும்பாலானோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இது ஒரு உலக பொருளாதார காரணியாக பார்க்கப்படுகிறது. சிறு மற்றும் குறுந்தொழில்கள் மத்திய அரசின் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன. அதிக வருவாயை பெறும் தனிநபர் வரிதாரர்களுக்கு, மேலும் வரி விகிதத்தை அதிகரிப்பது சம்மந்தமாக அரசு சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான குறுகிய மற்றும் நீண்ட கால மூலதன ஆதாயத்தில் வரி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்(GDP), பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை தகவல்கள் அடுத்து வரும் வாரங்களில் வெளியிடப்படும்.

அடுத்த வாரத்தில் அமெரிக்காவின் வங்கி வட்டி விகித முடிவுகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை விகிதங்கள்(Jobless Claims) வெளிவர உள்ளது. வீட்டுமனை விற்பனை, தனிநபர் வருவாய் மற்றும் செலவு சார்ந்த அறிக்கைகளும் வர உள்ளன.

இங்கிலாந்து மத்திய வங்கியின் வட்டி விகித அறிவிப்பு, மற்ற இதர நாடுகளின் பணவீக்க விகிதம், தொழில் புரிவதற்கான சாதகங்கள், வாகன விற்பனை ஆகிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும். அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருத்துவம் மற்றும் சுகாதாரம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறையை தவிர, பெரும்பாலான துறைகள் எதிர்மறையான வருவாயை கொண்டிருக்கும்.

ஏப்ரல் – ஜூன் காலாண்டு முடிவுகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தைக்கு சவாலாக இருக்க கூடும். மேலும் பொருளாதார வளர்ச்சி விகிதமும் ஒரு சதவீதத்திற்கு குறைவாக செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொருளாதார மந்தநிலை 2020 – அதன் வடிவங்கள் எப்படி இருக்கும் ?

பொருளாதார மந்தநிலை 2020 – அதன் வடிவங்கள் எப்படி இருக்கும் ?

Pandemic and Economic Recession 2020 – Shapes of Recession

நாம் தற்போது கோவிட்-19 மற்றும் உலக பொருளாதார மந்தநிலையில் இருந்து வருகிறோம். இதன் தாக்கம் எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என யாராலும் உறுதியிட்டு சொல்ல முடியாது. இருப்பினும் சில பொருளாதார கணிப்புகள் இருக்கலாம். அடுத்த ஒரு வருடம் என சொல்லலாம், இரண்டு வருடங்கள் பிடிக்கலாம் அல்லது அடுத்த 18 மாதங்கள் என கணிக்கலாம்.

பொருளாதார மந்தநிலை(Economic Recession) என்பது வணிக ரீதியாக ஏற்படும் ஒரு சுழற்சி தான். இது ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறக்கூடியதாக அமையும். அதே வேளையில், இந்த காலத்தில் தான் நடைபெறும் என ஒரு குறிப்பிட்ட வருடத்தை முன்னரே எடுத்து கொள்ள முடியாது. இந்த சுழற்சிக்கான காரணம் பலவாக இருக்கும். இருப்பினும், பொதுவாக தேவைக்கும், உற்பத்திக்குமான(Demand & Supply) இடைவெளி தான் இதனை தீர்மானிக்கிறது.

அதிகப்படியான உற்பத்தி ஏற்பட்டு, தேவை இல்லாவிடில் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இது போல தேவையை பூர்த்தி செய்யாத உற்பத்தியும் பொருளாதார மந்தநிலை தான். “ஆசைப்படாமல் இருக்க வேண்டாம். ஆனால் அந்த ஆசைகளை ஒழுங்குமுறைப்படுத்துவது அவசியம். கட்டற்ற ஆசைகளும், அதன் நிர்வாக கோளாறுகளும் தான் நம்மை சிரமப்பட செய்கிறது. இது தான் பொருளாதாரத்திலும் “.

பொருளாதார மந்தநிலை அல்லது பொருளாதார வீழ்ச்சி என்பது சில மாதங்களிலிருந்து பல வருடங்கள் வரை ஏற்படலாம் என சொல்லிவிட்டோம். வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் மீண்டு வந்தடைய வேண்டுமல்லவா ? எந்தவொரு இறக்கத்தை சந்தித்த பொருளாதாரம் ஏற்றமடைந்து தான் ஆக வேண்டும். பொருளாதாரம் மந்தநிலை ஏற்பட்ட காலம் முதல் அது மீண்டது வரை உள்ள காலத்தை, பொருளாதார வல்லுநர்கள் ஒரு வடிவமாக(Shapes) மாற்றுகின்றனர்.

இதற்கான சரியான பொருளாதார கல்வி என்று எதனையும் அவர்கள் குறிப்பிடவில்லை. ஆனால் பொருளாதார மந்தநிலை காலங்களை நான்கு வடிவங்களாக பிரித்துள்ளனர். பொருளாதார வீழ்ச்சி வரலாற்றில் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் 1930ம் ஆண்டு, ஐக்கிய ராஜ்ஜியம்(United Kingdom) மற்றும் அமெரிக்காவில் 2000ம் வருடம், கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார வீழ்ச்சி என சில நினைவுகளை சொல்லலாம். வல்லரசு நாடுகளில் இது பொதுவாக ஏற்படுவதுண்டு. பின்பு உலக தாராளமயமாக்கலின் துணை கொண்டு, மற்ற நாடுகளிலும் இந்த பொருளாதார மந்தநிலை பரவி இருக்கும்.

பொருளாதார மந்தநிலை காலங்களில் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி அதிகமாக இருப்பது, வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு, பணவீக்கம் கட்டுக்குள் இல்லாமல் செல்வது, நிறுவனங்கள் திவால் நிலைக்கு செல்வது என சில விளைவுகள் தென்படும்.

வடிவங்கள் என்ன ?

பொருளாதார மந்தநிலை வடிவங்கள் நான்கு.

  • V – Shaped
  • U – Shaped
  • W – Shaped
  • L – Shaped

முதல் வடிவில் (V-Shaped) பொருளாதார மந்தநிலை குறுகிய காலத்தில் மட்டுமே இருக்கும். வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு அல்லது வங்கி வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் இது போன்ற மந்தநிலை ஏற்படும். இதனை அரசு பொருளாதார ஊக்குவிப்பு மூலம் உடனடியாக சரிசெய்யும் நிலையில், பொருளாதாரம் விரைவாக ஏற்றம் பெறும். இதற்கான காலம் பொதுவாக சில மாதங்களாக இருக்கலாம்.

வேகமாக இறங்கிய பொருளாதாரம், அதே வேகத்தில் மேலே எழும்பும் – (V-Shaped)

இரண்டாம் வடிவில் (U-Shaped) பொருளாதார மந்தநிலை முதல்நிலை வடிவத்தை விட சற்று கூடுதல் காலங்கள் பிடிக்கும். ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ச்சியாக சில காலாண்டுகள் மந்தநிலை செல்வதும், அதனை தொடர்ந்து ஏற்படும் வேலைவாய்ப்பின்மை, வட்டி விகிதம் மற்றும் பணவீக்க மாற்றங்கள் பல மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை நீடிக்கலாம்.

Economic Stagnation என்று சொல்லக்கூடிய நீண்டகால பொருளாதார மந்தநிலை தற்போது நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது எனலாம். கடந்த ஒன்றரை வருடத்திற்கு மேலாக நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் தான் உள்ளது. ஆம், தொடர்ச்சியாக ஏழு காலாண்டுகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP growth) சரிவு. மீண்டெழுவதற்கான காலமும் இதன் அளவாக கருதப்படலாம். எனவே தான் இரண்டாம் வடிவம் U-Shaped ஆக குறிக்கப்பட்டுள்ளது.

ஒரு குளியலறைக்குள் சென்று விட்டு நீண்ட நேரம் வராவிட்டால் எப்படி இருக்கும் ? இந்த வடிவத்திற்கு பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடும் வரிகள் இவை. சோம்பலாக நீண்ட நேரம் பொருளாதாரம் படுத்து கொள்ளும். பின்பு, விழித்தெழுந்து அதே வேகத்தில் மெதுவாக மீண்டு வரும்.

Recession shapes

W-Shaped வடிவம்:

இந்த வடிவத்தை இரட்டை மந்தநிலை என கூறுவதுண்டு. அமெரிக்காவில் 1980ம் கால கட்டங்களில் இது போன்ற நிலை இருந்துள்ளது. அதாவது முதல்நிலை வடிவத்தை போல பொருளாதாரம் விரைவாக ஏற்றம் பெற்றாலும், மறுபடியும் ஒரு பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும். பிறகு, அதனிலிருந்து மீண்டு எழும். இந்த வடிவம் அதிக ஏற்ற-இறக்கத்தை கொண்டிருக்கும் காலமாக கணக்கிடப்படுகிறது. பங்குச்சந்தையில் ஏற்படும் ஏற்ற-இறக்கத்தை போல.

ஆனால், அடிக்கடி நிகழும் ஒரு முறையாக இந்த வடிவம் வரலாற்றில் சொல்லப்படவில்லை. விரைவாக விழுந்து மீண்டு எழுதல் மற்றும் மறுமுறையும் விழுந்து எழுதல் என்பது துணிச்சலான பொருளாதாரத்தை கொண்டிருக்கும்.

L – Shaped வடிவம்:

சொல்லப்பட்ட பொருளாதார மந்தநிலை வடிவங்களில் மோசமான வடிவம் இது தான். ஒரு பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து, பின்பு மீண்டு வராமல் பல வருடங்கள் தட்டையான வளர்ச்சியை மட்டுமே கொண்டிருப்பது. ஜப்பான் நாட்டின் பொருளாதாரம் இது போன்று அமைந்துள்ளது. கடந்த 1950ம் வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, சுமார் 30 வருடங்கள் எந்தவித பெரிய வளர்ச்சியையும் பெறாமல், தட்டை வடிவத்தில் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலும் இது போன்ற ஒரு நிகழ்வு சொல்லப்படுகிறது. அதாவது Dot com குமிழி 2000ம் ஆண்டு வாக்கில் உடைந்த பிறகு, 2013ம் ஆண்டு வரை அதன் பொருளாதாரம் பெரிய அளவில் ஏற்றம் பெறவில்லை. இந்த காலத்திற்கு இடையில் 2008ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. கடுமையான மந்தநிலையை கொண்டிருக்கும் இந்த வடிவம், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பெருத்த பயத்தை ஏற்படுத்தும்.

மேலே சொன்ன நான்கு வடிவங்கள் போக சந்தையில் சில வடிவங்கள் சொல்லப்பட்டாலும், அவை இந்த நான்கு வடிவங்களை ஒத்து தான் இருக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் உலக பொருளாதார மந்தநிலை எந்த வடிவத்தை பெறுகிறது என சொல்லுங்கள் ?

கவனிக்க:

  • V-Shaped வடிவ மந்தநிலை 8-10 மாதங்கள் இருந்துள்ளது.
  • U-Shaped மந்தநிலை 18-24 மாதங்கள் எடுத்து கொண்டுள்ளது.
  • W-Shaped ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் வரை வரலாற்றில் பதிந்துள்ளது.
  • L – Shaped – மூன்று வருடங்கள் முதல் பல வருடங்கள் நீடிக்கும் கடுமையான பொருளாதார மந்தநிலை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யும் முகநூல்(Facebook) நிறுவனம்

ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யும் முகநூல்(Facebook) நிறுவனம் 

Facebook buys 10 Percent Stake in Reliance Jio

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான முகநூல் நிறுவனத்திற்கு சுமார் 250 கோடி பயன்பாட்டாளர்கள் உள்ளனர். 2004ம் ஆண்டு அமெரிக்காவில் துவங்கப்பட்ட இந்நிறுவனம், உலகின் முதல் 10 முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. தற்போதைய நிலையில் முகநூல் பயன்பாடு 140 மொழிகளில் உள்ளன.

முகநூல் நிறுவனர் திரு. மார்க் சக்கர்பர்க்கின்(Mark Zuckerberg) சமீபத்திய சொத்து மதிப்பு 54.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சந்தையில் உள்ள பிரபலமான நிறுவனங்களை கைப்பற்றியுள்ளது. வாட்சப்(Whatsapp), இன்ஸ்டா கிராம், அக்குலஸ் வி.ஆர்.(Oculus VR) ஆகிய நிறுவனங்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“ நாங்கள் வெறும் நிறுவனத்தை மட்டுமே வாங்குவதில்லை. சிறந்த நபர்களை பெறுவதற்காகவே நாங்கள் நிறுவனத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறோம். சிறந்த நிறுவனர்களை கொண்ட நல்ல நிறுவனங்களில் தான் எங்கள் கவனம் உள்ளது “ என மார்க் சக்கர்பர்க் கூறுவதுண்டு.

நிறுவனத்தை கையகப்படுத்தலில் தற்போது நம் நாட்டில் உள்ள முக்கியமான நிறுவனத்தின் மீது முகநூல் ஈர்க்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப பரிமாறுதலில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைவதாக சொல்லியிருந்த முகநூல் நிறுவனம், தற்போது ஜியோ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை வாங்க உள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(Reliance Industries) நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் ரிலையன்ஸ் ஜியோ. ஜியோ நிறுவனத்திற்கு சந்தையில் 30 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். ஆரம்ப நிலையில் ஜியோ தொழில்நுட்ப தளத்தில் முதலீடு செய்ய போகும் முகநூல், இதற்காக 43,570 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இதன் மதிப்பு ஜியோ நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதன் மூலம் டிஜிட்டல் உலகில் ஜியோ(Reliance Jio) தனது பலத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சார்ந்த சேவைகளை மட்டுமே கொண்டிருக்காமல், இணைய வழி தொலைக்காட்சி, பண பரிவர்த்தனை, நிதி துறையில் மியூச்சுவல் பண்டு விற்பனை ஆகிய சேவையிலும் நுழைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com