All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

மீண்டும் குறைக்கப்பட்ட வங்கி வட்டி விகிதங்கள் – பாரத ரிசர்வ் வங்கி

மீண்டும் குறைக்கப்பட்ட வங்கி வட்டி விகிதங்கள் – பாரத ரிசர்வ் வங்கி 

Repo rate cut 40 basis points to 4 Percent – RBI

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான இன்று பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் கூறிய அறிவிப்பில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) 40 புள்ளிகள் குறைக்கப்படுவதாக சொல்லப்பட்டது. முன்னர் 4.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் இப்போது 4 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

இது போல ரிவர்ஸ் ரெப்போ விகிதமும்(Reverse Repo) 3.75 சதவீதத்திலிருந்து 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கி வட்டி விகிதமும்(Bank Rate) 4.65 சதவீதத்திலிருந்து 4.25 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. வட்டி விகிதத்தை குறைப்பது சம்மந்தமாக இம்முறை நிதி கொள்கை குழுவில் உள்ள ஆறு உறுப்பினர்களும் குறைக்க வேண்டுமென தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மார்ச் 2020 முதல் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான தொழில்கள்  சுணக்கம் அடைந்துள்ளதாகவும் பாரத ரிசர்வ் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது. பணவீக்க விகிதத்தை அறிய முறையான தகவல்களை தற்போது சேகரிக்க முடியவில்லை எனவும், வரும் மாதங்களில் பணவீக்க விகிதங்களில் எதிர்பாராத மாற்றங்கள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், மத்திய வங்கியின் இலக்கான 4 சதவீத பணவீக்கம் என்ற அளவை ஒட்டி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கக்கூடும். ஜனவரி – மார்ச் காலாண்டில் வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் சீனாவின் வளர்ச்சி பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான மற்றும் தங்கம் போன்ற முதலீடுகளில் தங்கள் முதலீட்டை பரவலாக்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தைகள் ஓரளவு ஏற்றம் பெற்றிருந்தாலும், நடப்பாண்டில் முதல் இரு காலாண்டுகளில் வளர்ச்சி எதுவும் பெரும்பாலும் இருக்காது என சொல்லப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக(Negative GDP) இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், எந்த மதிப்பை கொண்டிருக்கும் என சொல்லப்படவில்லை.

வங்கிகளில் கடன் பெறுபவர்களை ஊக்குவிக்கவும், நிதி சந்தைகளை வலுப்படுத்தவும் வங்கி வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. வட்டி செலுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு இது சாதகமாக இருக்கும். அதே வேளையில், இது வங்கிகளின் வருவாய்க்கு நன்மையாக அமையாது. கடனுக்கான மாத தவணையை செலுத்துவதில் மீண்டும் மூன்று மாத கால அவகாசம்(Moratorium) வழங்கப்பட்டுள்ளது.

இது அடுத்த மாதம் ஜூன் முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலத்திற்கு பொருந்தும். இருப்பினும், இது வட்டிக்கு வட்டி என்ற விகிதத்தின் அடிப்படையிலும், மூன்று மாதங்களுக்கான தவணையை அதிக தொகையுடன் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். வங்கி வட்டி தள்ளுபடி அல்லது கடன்களை மறுசீராய்வு செய்வதால் மட்டுமே அது வங்கிகளுக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் பலன் அளிக்கும்.

இன்று வங்கி துறையில் உள்ள பங்குகள் அதிக சரிவையும், நிப்டி வங்கி குறியீடு 2.57 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சி கண்டது. நடப்பில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் மற்றும் பணப்புழக்கம் சார்ந்த நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.

வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் சூழ்நிலையில், முதலீட்டாளர்களின் பார்வையில் கடன் பத்திரங்கள்(Bonds) மீதான ஆர்வம் ஏற்படும். வட்டி விகிதம் குறையும் போது, கடன் பண்டுகளின் வருவாய் அதிகரிக்கும். எனவே இது போன்ற நிலையில், முதலீடு செய்வோர் சற்று ரிஸ்க் குறைந்த கடன் பத்திர பரஸ்பர நிதிகளில்(Debt Mutual Funds) முதலீடு செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்ன – 2020 ?

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு என்ன – 2020 ?

India’s GDP share in the Global Economy – 2020

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) என சொல்லப்படும் பொருளாதார குறியீட்டில் வரும் 2024ம் ஆண்டு ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை மத்திய அரசு கடந்த ஆண்டு நிர்ணயித்திருந்தது. இதனை அடைவதற்கான சில திட்டங்களும், அதனை சார்ந்த இலக்கு வரைபடங்களும் சொல்லப்பட்டது.

2019ம் ஆண்டில் சர்வேதச நாணய நிதியம்(IMF) வெளியிட்ட பொருளாதார பார்வையின் படி, நாட்டின் பொருளாதாரம் 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்பட்டுள்ளது. தற்போது உலக பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா. அந்நாட்டின் பொருளாதாரம் சுமார் 22 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இரண்டாவது இடத்தில் இருக்கும் சீனாவின் மதிப்பு 14 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். மூன்றாம் இடத்தில் ஜப்பானும், நான்காம் இடத்தில் ஜெர்மனியும் உள்ளது.

நம் நாடு உலக பொருளாதாரத்தில் ஐந்தாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் நம் நாட்டின் பங்கு முக்கியத்துவமானது. வாங்கும் திறன் சமநிலை(Purchasing Power Parity) அடிப்படையில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் உள்ளது.

நுகர்வு தன்மையை அதிகமாக கொண்டிருக்கும் நம் நாட்டில் விவசாயம் மற்றும் உற்பத்தி துறையை காட்டிலும், சேவை துறையின் பங்கு அதிகமாக உள்ளது. இன்றைய தேதியில் நம் நாட்டின் வளர்ச்சிக்கு சேவை துறையின் மூலம் 60 சதவீத பங்களிப்பும், 28 சதவீத வேலைவாய்ப்புகளும் உருவாகியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருவாய் எனும் போது, குறைவாக தான் காணப்படுகிறது.

நம் நாட்டில் விவசாயத்தின் பங்கு குறைந்திருந்தாலும், மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது, கணிசமாக விவசாய உற்பத்தி மற்றும் சேவை இருந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக துணைபுரிவது உள்நாட்டில் காணப்படும் நுகர்வு சந்தை, அத்தியாவசிய பொருட்களுக்கான தேவைப்பாடு, அதிகப்படியான சேமிப்பு ஆகியவை. இருப்பினும் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க அளவை எட்டவில்லை.

பெட்ரோலிய பொருட்கள், விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் கற்கள், மின் இயந்திரங்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு பொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவை நமது நாட்டின் முக்கிய ஏற்றுமதியாக உள்ளது. இறக்குமதியில் கச்சா எண்ணெய், தங்கம், முத்துக்கள், பெட்ரோலிய பொருட்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், மின்னணு பாகங்கள், எண்ணெய், மெழுகு, பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ இயந்திரங்கள் ஆகியவை உள்ளன.

நாம் அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் ஐக்கிய அரபு நாடும் உள்ளது. நம் நாடு ஏற்றுமதி செய்யும் பொருட்களை வாங்கும் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஐக்கிய அரபு மற்றும் சீனா முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது. சீனாவுடனான வர்த்தகத்தில் நமக்கு வர்த்தக பற்றாக்குறை இருந்து வருகிறது. அதே வேளையில் 2018-19ம் நிதியாண்டில் அமெரிக்காவுடன் நமது வர்த்தகத்தில் உபரியாக உள்ளது.

உலக பொருளாதாரத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு 23.6 சதவீதமாக உள்ளது. சீனாவின் பங்களிப்பு 15.50 சதவீதமும், ஜப்பான் 5.7 சதவீதமும், ஜெர்மனி 4.6 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. இந்தியா உலகளவில் உள்ள மொத்த பொருளாதார உற்பத்தியில் 2.31 சதவீத பங்களிப்புடன் உள்ளது. உலகின் பொருளாதார வளர்ச்சியில் முதல் 20 இடங்களில் அங்கம் வகிக்கும் நாடுகளின் மொத்த பங்களிப்பு மட்டும் 78.8 சதவீதமாகும். மீதமுள்ள வெறும் 21.2 சதவீதத்தை 173 நாடுகள் பகிர்ந்துள்ளன.

வேகமாக வளரும் நாடுகளை தவிர்த்து, ஏனைய நாடுகளில் அத்தியாவசிய தேவை கூட பூர்த்தி செய்ய முடியாமல், உலக பொருளாதாரம் திணறி கொண்டிருக்கிறது. பெரும்பாலான வளர்ந்த நாடுகள் தங்களுக்கு அருகில் உள்ள சிறு மற்றும் குறு நாடுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நடந்த வண்ணம் தான் உள்ளது. பெரும்பாலும் வளரும் நாடுகளின் எல்லை பதற்றத்துடன் தான் காணப்படுகிறது.

வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் மூலதன சந்தையை(Capital Market) நோக்கி தான் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததும் இது போன்ற நாடுகளில் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. நாட்டின் நுகர்வு தன்மைக்கு ஏற்ப அதன் கடன் தன்மையும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நாடுகள் அன்னிய முதலீடு மற்றும் மத்திய வங்கியின் பண அச்சடிப்பு நடவடிக்கைகளில் தான் பொருளாதாரத்தை ஊக்குவிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

நடப்பில் காணப்படும் உலக பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட்-19 பெரும்பாலும் மேலை நாடுகளை தான் அதிகமாக பாதித்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு முதலீடாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் துணைபுரிகிறது. உலகளவில் வேகமாக வளரும் நாடுகளில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி எண்கள் எதிர்மறையாக தான் உள்ளது.

வியட்நாம் மட்டும் ஜனவரி-மார்ச் காலாண்டில் நேர்மறையான வளர்ச்சியை கொண்டுள்ளது. ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் வியட்நாம், இந்தோனேஷியா, தென் கொரியா, ஹாங்காங், சீனா மற்றும் இந்தியாவின் பங்கு முக்கியத்துவமானது.

இருப்பினும், நடப்பில் காணப்படும் பொருளாதார வீழ்ச்சி அடுத்த சில காலாண்டுகள் தொடரும் நிலையில், வேகமாக வளரும் நாடுகளில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதான செயல்பாடு அல்ல. பொருளாதார ஊக்குவிப்பு சார்ந்த அறிவிப்புகள் பல நாடுகளில் சொல்லப்பட்டிருந்தாலும், உண்மையில் நுகர்வு தேவையை ஏற்படுத்தினால் மட்டுமே அது வளர்ச்சிக்கு துணைபுரியும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிறந்ததொரு முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குவதற்கான படிநிலைகள்

சிறந்ததொரு முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குவதற்கான படிநிலைகள்

Quick Steps to create a better Investment Portfolio

எந்தவொரு முதலீட்டு சாதனத்திலும் பணத்தை முதலீடு செய்யும் முன்னர், சொல்லக்கூடிய நான்கு விஷயங்களை கவனிக்க வேண்டும். அவை தான் ஒரு முதலீட்டு வாய்ப்பின் சாராம்சங்களை தெளிவாக்கும்.

  • தேவைகள் மற்றும் விருப்பங்கள்
  • நிதி இலக்குகள்
  • முதலீட்டு காலம்
  • எதிர்பார்க்கும் வருமானம் அல்லது வட்டி விகிதம்

வெறுமென வங்கி டெபாசிட்டில் பணத்தை போடுவதோ அல்லது பங்குச்சந்தையில் ஆழம் தெரியாமல் காலை விடுவதோ – இரண்டும் ஒரு முதலீட்டாளரின் முதலீட்டு நலனை பாதுகாக்காது. மேலே சொன்ன நான்கு அடிப்படை விஷயங்களை சிந்தித்து விட்டு, பிறகு முதலீட்டு சாதனத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உதாரணமாக ராமு என்பவருக்கு ஐந்து வருடத்திற்கு பிறகு ஒரு வீடு வாங்க வேண்டுமென்ற நிதி இலக்கு இருந்தால், இவற்றில் அவருடைய தேவை அல்லது விருப்பமாக புதிய வீடு வாங்குவதை சொல்லலாம். ‘வீடு வாங்குதல்’ என்பது அவரின் நிதி இலக்குக்கான வாசகமாகும். ஐந்து வருடங்களுக்கு பிறகு தான் அவர் வாங்க வேண்டுமெனும் போது, 5 வருடங்கள் ஒரு முதலீட்டு காலமாக எடுத்து கொள்ளப்படும். மாதாமாதம் அவர் எவ்வளவு தொகையை, எந்த வட்டி விகிதத்தில் முதலீடு செய்தால், அவருக்கான இலக்கை அடைய முடியும். இல்லையெனில், ஒரு முறை மட்டுமே அவர் முதலீடு செய்யும் பட்சத்தில், அவரது வீட்டின் மதிப்பை பெற, எதிர்பார்க்கும் வருவாய் எவ்வளவு என்பதனை ஆராய வேண்டும்.

முதலீட்டிற்கான காலம் குறைவாக இருக்கும் நிலையில், ஒன்று அவர் தனது மாத முதலீட்டை அதிகரித்து முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், ரிஸ்க் தன்மையுடன் கூடிய அதிக வட்டி வருவாய் முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதே வேளையில், முதிர்வு காலத்தில் அவரது முதலீட்டிற்கே மோசம் வந்துவிட கூடாது.

இதனை சார்ந்து தான் நமது முதலீட்டு சாதனம்(Investment Avenue) இருக்க வேண்டும். பொதுவாக குறுகிய கால இலக்குகளுக்கு ரிஸ்க் குறைவான முதலீட்டு சாதனத்தில் முதலீடு செய்ய வேண்டும். காலங்கள் அதிகமாக இருக்கும் நிலையில் ரிஸ்க் அதிகம் எடுத்தாலும், நீண்ட காலத்தில் முதலீட்டின் மீது நல்ல வருவாயை பெறலாம்.

நல்ல முதலீட்டு போர்ட்போலியோ(Investment Portfolio) தயார் செய்ய 6 படிநிலைகள்:

  • நிதி இலக்குகள்(Financial Goals) இருப்பது அவசியம்
  • நிதி இலக்குகளுக்கு தகுந்தாற் போல், முதலீட்டு சாதனத்தை(Investment Product or avenue) தேர்வு செய்ய வேண்டும்
  • முதலீட்டு பரவலாக்கத்தை(Asset Allocation) ஏற்படுத்த வேண்டும்
  • ஒவ்வொரு கால இடைவெளியில், செய்த முதலீட்டு சாதனத்தை மறுஆய்வு(Periodic Review) செய்வது அவசியமாகும்
  • தேவைப்பட்டால், ஏற்கனவே செய்த முதலீட்டு சாதனத்தில் மாற்றத்தை(Make Changes on Existing investments) ஏற்படுத்தலாம். அதே வேளையில், உங்களது இலக்குகளை அடைவது முக்கியம்.
  • முதிர்வு காலத்தின் போது அல்லது முன்னரே இலக்குக்கான தொகையை (Exit on or before Maturity) பரிமாற்றம் செய்தல்.

முதல் படிநிலையில் நாம் ஏற்கனவே சொன்னது போல நிதி இலக்கிற்கான பெயர், அடைய வேண்டிய காலம் மற்றும் எதிர்பார்க்கும் வட்டி(Expected returns %) ஆகியவை முக்கியம். இரண்டாவது படிநிலையில், நாம் எதிர்பார்க்கும் வட்டி வருவாய்க்கு தகுந்தாற் போல, முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிய வேண்டும். ஐந்து வருட கால இலக்கு மற்றும் எதிர்பார்க்கும் வட்டி வருவாய் ஆண்டுக்கு 8 சதவீதம் எனில், பங்குச்சந்தை நமக்கு தேவையா… இல்லையெனில் வங்கி டெபாசிட் அல்லது குறைந்த ரிஸ்க் தன்மை கொண்ட கடன் பத்திர பண்டுகள்(Debt Mutual Funds) போதுமா என்பதனை அலசி முடிவெடுக்க வேண்டும்.

நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் போது, ஒரே முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுக்க கூடாது. முதலீட்டு பரவலாக்கம்(Asset Allocation) அவசியம். நீங்கள் மாதாமாதம் 10,000 ரூபாயை எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய உள்ளீர்கள் என்றால், பங்குகள் கொஞ்சம், கடன் பத்திரங்கள் கொஞ்சம், தங்கம் சிறிதளவு மற்றும் இதர முதலீடுகள் என பிரித்து முதலீடு செய்யலாம். பொதுவாக பங்குகள் சரியும் போது, தங்கம் ஏற்றம் பெறும். வங்கி வட்டி விகிதங்கள் குறைவாக காணப்படும் போது, கடன் பத்திரங்களின் வட்டி வருவாய் சற்று அதிகமாக கிடைக்கும்.

உங்கள் இலக்கு 15 வருடங்கள் எனில், ஒவ்வொரு வருடமும் நீங்கள் செய்துள்ள முதலீட்டு சாதனத்தை பற்றி மறுஆய்வு செய்ய வேண்டும். செய்யப்படும் முதலீட்டை இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் நன்றாக இருக்குமா அல்லது முதலீட்டு சாதனத்தை பொறுத்து குறைத்து கொள்ளலாமா என அலசுவது அவசியமாகும்.

தேவைப்பட்டால், ஏற்கனவே செய்துள்ள முதலீட்டில் மாற்றத்தை செய்வது இலக்கை அடைவதற்கு உதவக்கூடும். எனவே, சரியான நேரத்தில் மாற்றம் செய்வதற்கும் தயாராக வேண்டும். உங்கள் இலக்குக்கான தொகை, இலக்கு காலத்திற்கு முன்பே அடைந்து விட்டால் அதனை பாதுகாப்பாக வங்கிக்கோ அல்லது பாதுகாப்பான முதலீட்டு சாதனத்தில் முழுவதுமாக மாற்றுவது அவசியம். இலக்கின் கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

உதாரணமாக ராமு தனது மகனின் மேற்படிப்பு செலவிற்காக 15 வருடங்கள் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்து வருகிறார் என வைத்து கொள்வோம். இலக்கிற்கான தொகை 13ம் வருடமே அடையும் பட்சத்தில், அடுத்த இரண்டு வருடங்கள் அதே முதலீட்டில் தொடர வேண்டுமென்ற அவசியமில்லை. அதனை பாதுகாப்பான வங்கி டெபாசிட்டாக மாற்றி கொள்ளலாம். மாறாக அவர் பங்கு சார்ந்த திட்டத்தில் தொடரும் நிலையில், எதிர்பாராத பங்குச்சந்தை சரிவு அல்லது பொருளாதார மந்தநிலை ஏற்படுமாயின், அவருடைய முதலீட்டின் மீதான வருவாய் குறைய வாய்ப்புள்ளது. சில சமயங்களில் முதலீடு நஷ்டமடைய வாய்ப்புண்டு. எனவே சரியான திட்டமிடலை கொண்டிருப்பது அவசியமாகும்.

சொல்லப்பட்ட ஆறு படிநிலைகளையும் கொண்டு உங்களுக்கான சிறந்ததொரு முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நீங்களும் பங்குச்சந்தை ராஜா தான் – புத்தக அறிமுகம்

நீங்களும் பங்குச்சந்தை ராஜா தான் – புத்தக அறிமுகம் 

How to pick the right stock in the Share Market ?  Amazon Kindle Edition – Free ebook

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (17-05-2020) மாலையில் பங்குச்சந்தை அடிப்படை சார்ந்த புத்தகம் ஒன்று இணைய வழியாக வெளியிடப்பட்டது. வாசகர்கள் மற்றும் பங்குச்சந்தை ஆர்வலர்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கிணங்க, பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு சிறந்த கையேடாக இந்த புத்தகம் இருக்கும் என நம்பிக்கை கொள்கிறோம்.

பங்குசந்தை சார்ந்த புத்தகங்களை நீங்கள் வலைத்தளங்களில் தேடுவீர்களானால், பெரும்பாலும் அமெரிக்க பங்குச்சந்தை சார்ந்த புத்தகங்களை தான் அதிகமாக காண முடியும். இந்திய பங்குச்சந்தை பற்றி மிகக்குறைவான புத்தகங்கள் தான் இருக்கின்றன. நமது தாய்மொழி தமிழில் அதுவும் மிக குறைவு. பங்குச்சந்தை துறையில் உள்ள புத்தகங்களை அளித்த நமது முந்தைய எழுத்தாளர்களின் அறிவும், அனுபவமும் அளப்பரியது. ஆனால், அவர்கள் எழுதிய காலங்கள் மிகவும் பின்னோக்கியதாகும். நமது எழுத்தாளர் விவரிக்கும் பங்குச்சந்தையின் அடிப்படை , நிகழ்கால சந்தையுடன் ஒப்பிட முடியும். அவரின் எழுத்துக்கள் வாசகர்கள் படிப்பதையும், அவர்களின் முதலீட்டு சிந்தனையையும் தூண்டுகிறது. பங்குச்சந்தையில் அ முதல் ஃ வரை விளக்குகிறார்.

பங்குச்சந்தையில் அடிப்படை கல்வி இல்லையென்றால், முதலீடு என்பது தண்ணீரில் போட்ட உப்புக்கு சமமாகும். உதாரணமாக, மற்ற மொழிகளை  நாம் கற்க வேண்டுமென்றால், அந்த மொழியின் உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்து ஆகியவற்றிலிருந்து தான் தொடங்க வேண்டும்.

இவ்வுலகில் பங்குச்சந்தை மூலம் மிகப்பெரிய செல்வந்தர்களான அனைவரும் பொதுவாக அடிப்படைவாதிகளே(Fundamentals and Value Investors). மற்ற முறைகளில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை மிக குறைவு. முதலீடு மற்றும் அதன் மூலம் பணத்தை பெருக்குவதற்கான அடிப்படை பகுப்பாய்வை பின்பற்றியவர்களில் மாபெரும் செல்வந்தரான திரு. வாரன் பப்பெட்டும்(Warren Buffet) ஒருவராவார்.

பங்குச்சந்தை வரலாறு ஆரம்பிக்கப்பட்டது சுமார் 400 வருடங்களுக்கு முன்னால்… முதன்முதலில் டச்சு நாட்டில் தான் ஒருமிக்கப்படாத பங்குச்சந்தை தோற்றம் பெற்றது. பின்னர் அது மற்ற நாடுகளுக்கு பரவியது, கடன் பத்திரங்கள் தான் முதன்முதலில் விநியோகம் செய்யப்பட்டது. பின்னர் மாற்றமடைந்து, பொருள் சந்தை வர்த்தகம் தான் அதிகமாக நடைபெற்றது. அதாவது டிம்பர், சோயா பீன்ஸ் மற்ற பல பொருட்கள் இச்சந்தையில் வர்த்தகமானது. இவ்வாறாக சென்று கொண்டிருந்த சந்தை இன்று மிகப்பெரிய அளவில் மாற்றம் பெற்றுள்ளது.

அனைவரும் பங்குச்சந்தையில் ஈடுபட்டு முதலீட்டை மேற்கொள்ளலாம். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும், நல்ல நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் இது துணை புரியும். நல்லதொரு முதலீட்டை மேற்கொள்ள, அடிப்படை கல்வி அவசியம். அதுவே இந்த அறிமுக புத்தகத்தின் வழியாக கிடைக்கப்பெறும்.

மின்னணு புத்தகத்தை அமேசான் கிண்டில்(Amazon Kindle) பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நடப்பில் இந்த புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது. படித்து பயன் பெறுங்கள்.

நீங்களும் பங்ச்சந்தை ராஜா தான் – புத்தகம் 

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தனியார் மற்றும் அன்னிய முதலீட்டை வேகப்படுத்தும் மேக் இன் இந்தியா

தனியார் மற்றும் அன்னிய முதலீட்டை வேகப்படுத்தும் மேக் இன் இந்தியா 

Speeds up on Private and Foreign Investments – Stimulus for Make in India

நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்தை கடந்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தை நெருங்கியுள்ளது, 33,000 க்கு மேற்பட்டோர் குணமடைந்தவர்கள். நடப்பில் ஏற்பட்டுள்ள உலக பொருளாதார வீழ்ச்சியில் ஒவ்வொரு நாடும் தங்களுக்கான பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட ஊரடங்கு வேலைவாய்ப்பின்மை விகிதத்தையும் அதிகரித்துள்ளது. இது நம்முடைய நாட்டில் மட்டுமில்லாமல், வல்லரசான அமெரிக்காவிலும் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அதற்கான பொருளாதார ஊக்குவிப்புகளும் நடந்த வண்ணம் உள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் அறிவிப்பாக கடந்த நான்கு நாட்களாக நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். தொழில், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வேளாண்மை சார்ந்த அறிவிப்புகள் இரு தினங்களாக அறிவிக்கப்பட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் வழங்குவதில் சில மாற்றங்கள் சொல்லப்பட்டுள்ளது.

இன்றைய தினத்தில்(16-05-2020) நிலக்கரி, தாதுக்கள், விமான சேவை, மின் துறை, விண்வெளி மற்றும் அணுசக்தி சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் பற்றி பேசப்பட்டது. சொல்லப்பட்ட துறையில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான திட்டமும் மத்திய நிதி அமைச்சகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

நிலக்கரி துறையில் ரூ. 50,000 கோடி செலவிடப்படும் எனவும், பாதுகாப்பு துறையில் முன்னர் இருந்த 49 சதவீத அன்னிய முதலீட்டு வரம்பை 74 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. விமானத்துறையில் அரசு-தனியார் பங்களிப்பை துரிதப்படுத்தவும் அரசு முனைந்துள்ளது. புதிய விமான நிலையங்களை தொடங்குவது சார்பாகவும் பேசப்பட்டது.

விமான சேவையில் நேரத்தை குறைக்க புதிய வழித்தடங்கள், விண்வெளி ஆராய்ச்சியில் அரசுடன் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து செயல்படுதல் மற்றும் அணுசக்தியில் அரசு-தனியார் ஒப்பந்தம் ஆகியவற்றை பற்றியும் நிதி அமைச்சர் கூறினார்.

நடப்பில் பேசப்பட்டு வரும் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் ஒரு நடுத்தர பட்ஜெட் தாக்கல்(Interim Budget) போன்று நடைபெற்று வருகிறது. பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் பெரும்பாலும் 2024-25ம் ஆண்டுக்கான இலக்கிற்காகவே திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மையால் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு உடனடி தீர்வு சொல்லப்படவில்லை. மேலும் விமானத்துறை ஏற்கனவே நட்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது. இதற்கான நேரடி உதவி விஷயங்கள் அறிவிக்கப்படவில்லை என்பதும் ஒரு குறையாக உள்ளது.

தற்போது சொல்லப்பட்டுள்ள அறிவிப்புகள் பெரும்பாலும் அரசின் கடன்களாகவும், தனியார் மற்றும் அன்னிய முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாகவும் இருந்துள்ளது. தனியார் பங்களிப்பு ஒவ்வொரு தொழிலுக்கும் முக்கியம் தான் எனினும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில முக்கியமான துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பது சாதகமாக அமையாது.

மேக் இன் இந்தியா(Make in India) என நாம் சொல்லிக்கொண்டாலும் நமது நுகர்வு தேவை பெரும்பாலும் இறக்குமதியின் மூலம் தான் கிடைக்கப்பெறுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகள், மக்களின் தேவையை பூர்த்தி செய்வதாகவும், அதே வேளையில் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதும் தான் அரசின் இலக்காக இருக்க வேண்டும். மாறாக அன்னிய நிறுவனங்கள் உள்நாட்டில் முதலீடு செய்து விட்டு, தங்களது உற்பத்தியை மக்களிடம் விற்பதால் அது மேக் இன் இந்தியா வாசகத்திற்கு பொருந்தாது. மேலும் இதனால் வர்த்தக பற்றாக்குறையில் நமக்கு சாதகமாக எதுவும் நிகழப்போவதில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உங்களுக்கான சரியான பங்கு அல்லது முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குவது எப்படி ? இந்த வார நிகழ்ச்சி நிரல்

உங்களுக்கான சரியான பங்கு அல்லது முதலீட்டு போர்ட்போலியோவை உருவாக்குவது எப்படி ? இந்த வார நிகழ்ச்சி நிரல் 

How to design a Stock / Investment Portfolio ? Webinar

நீங்கள் செய்யும் எந்த முதலீடாக இருந்தாலும், முதலீட்டு பரவலாக்கம் மற்றும் அதனை பல்வகைப்படுத்துதல் அவசியம். உதாரணமாக பங்குச்சந்தையில் உள்ள ரிஸ்க் தன்மையை தவிர்க்க, ஒரே துறையில் முதலீடு செய்வதை காட்டிலும் பல துறைகளில் நமது முதலீட்டை பல்வகைப்படுத்துதல் செய்யலாம்.

இது போல முதலீட்டிலும் பரவலாக்கம் அவசியம். பங்குச்சந்தை என மட்டுமில்லாமல் சிறிதளவு வீட்டுமனை முதலீடு, அதனை சார்ந்த வாடகை வருவாய், தங்கம் மற்றும் பிற முதலீட்டு வாய்ப்புகளை தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அதற்காக புரியாத முதலீட்டு சாதனத்தை எடுத்து கொண்டு முதலுக்கே மோசம் செய்து விட கூடாது.

உங்களது முதலீடு பங்குச்சந்தையானாலும், தங்கம் மற்றும் வீட்டு மனையாக இருப்பினும், இல்லையெனில் வங்கி டெபாசிட்கள் மற்றும் அஞ்சலக சேமிப்பாக இருந்தாலும் சரி, வாருங்கள் முதலீட்டு பரவலாக்கம் செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் பணம் பண்ணுவது எப்படி என்பதனை நாங்கள் சொல்லி தருகிறோம்.

முதலீட்டை பொறுத்தவரை, லாபத்தை பெற நம்முடைய நஷ்டத்தினை குறைக்கும் திறன் தான் முக்கியம். அதனை பற்றிய ஒரு மணிநேர பயிற்சி தான் இந்த வார ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நிரல். சரியான பங்குகளை தேர்வு செய்வது எப்படி, சந்தையில் நல்ல வருவாய் ஈட்டும் குறிப்பிட்ட 5 பங்குகளின் அடிப்படை அலசல் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

டேர்ம் பாலிசி மற்றும் மருத்துவ காப்பீடு – தற்போதைய காலத்தில் அதன் அவசியம் ஆகியவற்றையும் பேச உள்ளோம். மேலும், உங்களுக்கான பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான மின்னணு புத்தகத்தை வழங்க உள்ளோம்.

Designing Investment Portfolio

நிகழ்ச்சி நிரலுக்கு பதிவு செய்ய…

https://imjo.in/8fAZWM

பதிவுக்கு பின்னர், உங்களுக்கான நிரலின் இணைப்பு, கைபேசி மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாருங்கள், முதலீட்டு சூத்திரத்தை கற்று கொண்டு பயன் பெறுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஹேவல்ஸ் இந்தியா – நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 178 கோடி

ஹேவல்ஸ் இந்தியா – நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 178 கோடி 

Net Profit of Rs. 178 Crore in the Q4FY20 for Havells India – Quarterly results

மின் உபகரணங்களை விற்பனை செய்யும் நாட்டின் மிகப்பெரிய நிறுவனம் தான் ஹேவல்ஸ் இந்தியா. உத்தரப்பிரதேசத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் கடந்த 1958ம் ஆண்டு துவங்கப்பட்டது. வீட்டு மற்றும் சமையல் சார்ந்த மின் உபகரணங்கள், மின் விளக்குகள், சுவிட்சுகள், சிறிய வகையிலான மோட்டார்கள் மற்றும் கேபிள் வயர்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

தொழிற்துறை சார்ந்த பொருட்களையும் விற்பனை செய்வதில் இந்த நிறுவனம் முன்னோடியாக உள்ளது. ஹேவல்ஸ் இந்தியா நிறுவனத்தின் கிளைகள் மற்றும் அதன் வியாபாரம் சுமார் 50 நாடுகளில் பரவி கிடைக்கின்றன. ஹேவல்ஸ், கிராப்ட்ரீ(Crabtree), லாயிட்(Lloyd), ப்ராம்ப் டெக் மற்றும் ஸ்டாண்டர்ட் எலக்ட்ரிக் ஆகியவை இதன் பிரபலமான பிராண்டுகள்.

குளியலறை ஹீட்டர்கள், குடிநீர் சுத்திகரிப்பு, காற்றை சுத்தப்படுத்துதல், மின் விசிறிகள், தண்ணீர் பம்புகள் ஆகியவற்றிலும் இதன் விற்பனை உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 32,000 கோடி. கடனில்லா நிறுவனமாக வலம் வரும் ஹேவல்ஸ் வட்டி பாதுகாப்பு விகிதத்தையும்(Interest coverage ratio) 47 மடங்காக கொண்டுள்ளது கூடுதல் பலம்.

நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் ஏதுமில்லை. 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 2,217 கோடியாகவும், செலவினம் ரூ. 1,973 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 21 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

வரிக்கு முந்தைய லாபம் ரூ. 198 கோடி மற்றும் நான்காம் காலாண்டின் நிகர லாபம் 178 கோடி ரூபாய். கடந்த 2018-19ம் ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போதைய வருவாய் மற்றும் லாபம் குறைந்துள்ளது. மார்ச் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 2,755 கோடியாகவும், நிகர லாபம் 199 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

2020ம் ஆண்டின் மார்ச் இறுதியில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 4,249 கோடியாகும். விற்பனை கடந்த பத்து வருட காலத்தில் 7 சதவீதமும், லாப வளர்ச்சி 69 சதவீதமும் (10 வருடங்களில்) ஏற்றம் பெற்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த 12 மாதங்களில் 30 சதவீத இறக்கத்தை சந்தித்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் – 5.84 சதவீதம்

நாட்டின் மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் – 5.84 சதவீதம் 

India’s Retail – CPI Inflation revised to 5.84 Percent in March 2020

நாட்டின் பணவீக்கம் இரு முறைகளில் பின்பற்றப்பட்டு கணக்கிடப்படுகிறது. சில்லரை விலை பணவீக்கம்(CPI) மற்றும் மொத்த விலை பணவீக்கம்(WPI) என இருவகைகளாக பணவீக்கம் வெளியிடப்படுகிறது. மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் 5.84 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 7.59 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் தற்போது குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

இருப்பினும், ஊரடங்கு நாட்களின் போது மற்றும் அதற்கு பின்பான பணவீக்க விகிதங்கள் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். சந்தை எதிர்பார்த்த 5.91 சதவீதம் என்ற விகிதத்தை காட்டிலும் மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் கட்டுக்குள் இருந்துள்ளது.

மத்திய புள்ளியியல் அமைச்சகம் இதுவரை கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில், பணவீக்க விகிதங்களுக்காக எடுத்து வந்த தரவுகள் கடந்த மார்ச் 19 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது நாடு முழுவதும் உள்ள ஊரடங்கு உத்தரவு தான். ஏப்ரல் மாத சில்லரை விலை பணவீக்கம் வெளியிடப்படவில்லை. மாறாக மார்ச் மாத திருத்தப்பட்ட பணவீக்கமாக இது கருதப்படுகிறது.

பிரதமரின் சமீபத்திய உரையில் நான்காவது முறையாக ஊரடங்கு(Lock down 4.0) இருக்கலாம் எனவும், அதே வேளையில் சில கட்டுப்பாடுகளுடன் தொழில்கள் இயங்கக்கூடும் எனவும் சூசகமாக தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் அறிவிப்புகள் நாளை(13-05-2020) வெளியிடப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

சொல்லப்பட்ட மதிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக இருக்கும் என கூறப்படுகிறது. மார்ச் மாத தொழிற்துறை உற்பத்தி(Industrial Production) குறியீடு 16.7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உற்பத்தி துறை மட்டும் சுமார் 21 சதவீதம் வரை சரிந்துள்ளது. கடந்த முறை இது 3.1 சதவீதமாக இருந்தது. இது போல மின் உற்பத்தி 6.8 சதவீதம் குறைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது ?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது ?

What’s going on Reliance JIO ? – RIL – The Next Generation Change

நாட்டின் மிகப்பெரிய குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய். எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலை முதன்மையாக கொண்டிருக்கும் இந்நிறுவனம் பல தொழில் முகங்களை கடந்து, இன்று ரிலையன்ஸ் ஜியோ என்ற மாபெரும் ஆயுதத்தை கொண்டு சந்தையை ஆக்கிரமித்து விட்டது. திருபாய் அம்பானியை போலவே சிந்திப்பதாக கூறப்படும் நிறுவனர் முகேஷ் அம்பானி, புதிய தொழில்முனைவுகளை சிந்திப்பதும், துணிந்து சில தொழில் முயற்சிகளை செயல்படுத்துவதும் அவருடைய இயல்பாக உள்ளது.

நிறுவனத்தின் கடன் மட்டும் சுமார் 2.90 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் விற்பனை ரூ. 1.36 லட்சம் கோடியாகவும், நிகர லாபம் ரூ. 6,348 கோடியாகவும் சொல்லப்பட்டிருந்தது. கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை 14 சதவீதமும், லாபம் 10 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves in Balance sheet) ரூ. 4.47 லட்சம் கோடியாக இருந்தாலும், சமீப காலங்களில் அதன் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் பெரியளவில் வருவாயை ஈட்டவில்லை. அதிகமாக கடன் தொகையை கொண்டிருக்கும் நிலையில், வங்கியில் கடனை அதிகரிப்பதற்கான வாய்ப்பும் இல்லை. இதன் காரணமாக நிறுவனர், தனது நிறுவனத்தின் கடனை குறைக்கும் விதமாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் உள்ள துணை நிறுவனங்களின் பங்குகளை விற்க முன்வந்தார். இது பொது சந்தையில் ஒரு முதலீட்டு வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது.

ஆரம்ப நிலையில், சவுதி ஆரம்கோ(Saudi Aramco) நிறுவனத்திற்கு தனது எண்ணெய் தொழிலின் சில பங்குகளை விற்கும் பொருட்டு ஒப்பந்தம் செய்திருந்தார். ஆரம்கோ நிறுவனமும் இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மூலம் முதலீட்டை துவங்க முடிவெடுத்தது. ஆனால் சமீப காலங்களில் அந்த நிறுவனத்திற்கு எண்ணெய் ரீதியான சில சிக்கல்கள் வந்தவுடன், முதலீட்டை துவங்குவதற்கான காலத்தை தள்ளி போட்டது.

இந்நிலையில், நாட்டின் பொருளாதார தேக்கம் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான நிறுவனங்களை பாதித்தது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய ஆயுதமாக பார்க்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை ஒரு மிகப்பெரிய முதலீட்டு வாய்ப்பாக கண்டார் முகேஷ் அம்பானி. உள்நாட்டு தொலைத்தொடர்பு துறையில் இருந்த நிறுவனங்கள் யாரும் பெரியளவில் முயற்சிக்காத, தகவல் மூலம் வாய்ஸ் கால்களை ஏற்படுத்துவதற்கான வேலையை மும்முரமாக செய்தார்.

ஏன், சந்தை தலைமையாக சொல்லப்பட்ட ஏர்டெல் நிறுவனம் கூட, பெரிதாக அதனை கண்டுகொள்ளவில்லை. இந்தியாவில் இது போன்ற தொழில்நுட்பங்கள் வர சில நாட்கள் ஆகலாம் என பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நினைத்து கொண்டன. 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனைக்கு பிறகான புரட்சியாக ரிலையன்ஸ் ஜியோ பார்க்கப்பட்டது. புதிய தொழில் கொள்கையில், பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை மாற்றியமைத்து கொள்ள சிரமப்பட்டது. முடிவில், சில நிறுவனங்கள் காணாமல் போயின, பெரு நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டன மற்றும் சில திவால் நிலைக்கு சென்றன.

இன்று ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா என்ற மூன்று நிறுவனங்கள் மட்டும் தான் தொலைத்தொடர்பு துறையில்(Telecom) உள்ளது. பொதுத்துறை மினிரத்னா நிறுவனமான பி.எஸ்.என்.எல். அரசின் தவறான கொள்கையால் தனது பலத்தை இழந்து விட்டது. முன்னர், நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும், 60 சதவீதத்திற்கு மேலான சந்தை பங்களிப்பை கொண்டிருந்த பி.எஸ்.என்.எல்.(BSNL) இன்று நஷ்டத்தை மட்டுமே சந்திக்கும் நிறுவனமாக மாறியது.

வோடபோன் ஐடியா(Vodafone Idea) சந்தையில் தனக்கான கணிசமான வாடிக்கையாளர்களை கொண்டிருந்தாலும் கடந்த நான்கு வருடங்களாக நஷ்டத்தை மட்டுமே கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் கடன் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய். இன்று நாட்டின் மிகப்பெரிய சந்தாதாரர்களை கொண்டிருக்கும் நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ வந்து விட்டது. ஜியோவின் வருகைக்கு பின்னர், உள்நாட்டில் தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்து விட்டது எனலாம்.

2015ம் ஆண்டுக்கு முன்னர், பெரியளவில் ஏற்றம் காணாத ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை பின்னர் மளமளவென ஏறியது. 2017ம் ஆண்டில் பங்குதாரர்களுக்கு 1:1 போனஸ் பங்குகளும்(Bonus Issue) வழங்கப்பட்டது. நிறுவனத்தின் அதிகமான கடன் தொகையால், தர மதிப்பீட்டு நிறுவனங்களும் இதன் பங்கு விலையை குறைத்து பரிந்துரைத்தது. கடன் தொகையை விரைவாக குறைக்கும் முடிவை எடுத்தார் முகேஷ். ஆரம்கோ ஒப்பந்தம் முடிவதற்கு முன்னர், தனது துணை நிறுவனமான ஜியோவின் ஆயுதத்தை பயன்படுத்தினார்.

நடப்பாண்டில் உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்(Facebook) நிறுவனத்தை, ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய அழைத்தார் முகேஷ் அம்பானி. தொழில்நுட்பத்தை சாதகமாக கொண்டிருக்கும் பேஸ்புக் நிறுவனம், இந்தியாவில் முதலீடு செய்ய ஒரு அருமையான வாய்ப்பு என ஜியோவின் 10 சதவீத பங்குகளை வாங்கியது. இதற்கடுத்தாற் போல், அமெரிக்காவை சேர்ந்த சில்வர் லேக்(Silver Lake) என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் சுமார் 5,600 கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்தது.

கடந்த வாரத்தில் அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு நிறுவனமான விஸ்டா ஈக்விட்டி(Vista Equity Partners), ஜியோவின் 2.3 சதவீத பங்குகளை வாங்க சம்மதம் தெரிவித்தது. தற்போது ஜெனரல் அட்லாண்டிக்(General Atlantic) என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் ஜியோவின் 2 சதவீத பங்குகளை வாங்க முன்வந்துள்ளது. இது போக மற்றொரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது என்ற தகவலும் கசிகிறது. ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் முதலீடு செய்ய உள்ள மதிப்பு ரூ. 10,000 கோடி. இதுவும் ஒரு அமெரிக்க நிறுவனமாக முன்னெடுத்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முன்னர், ஆரம்கோ மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவங்களிடம் தனது 20 சதவீத பங்குகளை விற்று, கடனை குறைக்க முயற்சி எடுத்தது. ஆனால், தற்போது ரிலையன்ஸ் ஜியோ மூலம் 15 சதவீதத்திற்கு மேலான பங்குகளை கொடுத்துள்ளது. சமீபத்தில் சவுதி நிறுவனம் ஒன்று ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியுள்ளது. தர மதிப்பீட்டு நிறுவனங்கள் தற்போது ரிலையன்ஸ் ஜியோவின் மதிப்பை உயர்த்தி கூறியுள்ளனர். சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு சரிவை தடுக்க சரியாக காய்களை நகர்த்தினார் நிறுவனர். பங்குதாரர்களுக்கு உரிமை பங்கு அறிவிப்பும் வெளிவந்தது.

தொழில் புரட்சியை ஏற்படுத்தும் திருபாய் அம்பானி போல, முகேஷ் அம்பானி செயல்படுகிறார் என சொல்லப்பட்டாலும், உண்மையில் கடனை குறைத்து கடனில்லா நிறுவனமாக இருப்பது தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நோக்கம். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நுகர்வு சந்தையில் கிடைக்கப்போகும் லாபங்களை எதிர்பார்த்து, தற்போது ஜியோ முதலீட்டை ஒரு வாய்ப்பாக கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.

இந்திய நுகர்வு சந்தையில், இன்று பெரும்பாலான பெரு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாக தான் உள்ளன. மேக் இன் இந்தியா, இந்திய நிறுவனங்களே முன்னெடுப்பு என விளம்பரங்கள் காணப்பட்டாலும் பங்குச்சந்தையிலும் அன்னிய முதலீடுகள் தான் அதிகரித்துள்ளது. இது நம்மை போன்ற வேகமாக வளரும் நாட்டிற்கு பின்னாளில், எப்படிப்பட்ட சவாலாக இருக்கும் என்பதனை அறிவதற்கில்லை.

இன்றையளவில், நாட்டில் உள்ள பிரபலமான பிராண்டுகளில்(Flipkart, Zomato, Swiggy, Paytm, Ola) சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் தான் முதலீடு செய்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய வங்கியாக சொல்லப்படும் சில தனியார் வங்கிகளிலும் அன்னிய முதலீட்டாளர்கள் தான் பெரும்பான்மையான பங்குகளை கொண்டிருக்கின்றனர். உண்மையில் இன்று அமெரிக்க – சீன வர்த்தக போர் என ஊடகங்களில் செய்தி வந்து கொண்டிருந்தாலும், சீனாவின் வளர்ச்சியில் அமெரிக்காவின் முதலீடு பெருமளவில் உள்ளது. சீனா இன்று மிகப்பெரிய பொருளாதார நாடாக வலம் வருவதற்கு அமெரிக்கா தான் காரணமாக இருந்துள்ளது. பின்னர், அதுவே இன்றைய சிக்கலாக மாறி விட்டது. இது நம் நாட்டிற்கும் பொருந்தும்.

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தொழில்நுட்பத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன என்று செய்தியாக வந்தாலும் சரி, முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தின் கடனை குறைப்பதற்கான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது என கூறினாலும் சரி, வரவிருக்கும் காலங்களில் அதற்கான மாற்றம் தெரிய வரும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்டு முதலீட்டுக்கு புதிய செயலி (Mobile App)

மியூச்சுவல் பண்டு முதலீட்டுக்கு புதிய செயலி (Mobile App)

New Mutual Fund Mobile App – Introduction on Varthaga Madurai Platform

இன்று வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பை போல, பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யப்பட்டு வருவதும் பரவலாக உள்ளது. வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் கிடைக்கப்பெறும் சாதனங்கள் சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் வருபவை, எனவே அவை ஒரு முதலீட்டு சாதனமாக கருதப்படாது. அத்தியாவசிய தேவை மற்றும் அவசர பண பரிமாற்றத்திற்கு வங்கி சேமிப்பு கணக்கை பயன்படுத்தி கொள்ளலாம்.

வங்கிகளில் கிடைக்கக்கூடிய வைப்பு தொகை (Fixed Deposit) ஒரு சிறந்த முதலீடாக இருக்க முடியாது. ஏனெனில், பொதுவாக அவை பணவீக்கம் மற்றும் வரிகளை கடந்து குறைவான வட்டி வருவாயை கொண்டிருக்கும். எனவே, நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானமாக பயன் தராது.

நாட்டில் தற்போது 45க்கும் மேற்பட்ட மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள்(Asset Management Companies) உள்ளன. பொதுவாக இவை வங்கிகளாக தான் தனது முதன்மை தொழிலை கொண்டிருக்கின்றன. மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் அனுபவம் சிறப்பானதொரு முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்திய மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 27 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல்(March 2020). வங்கி சேமிப்பு கணக்குகளை போல லிக்விட் பண்டுகள்(Liquid Funds) எனும் மிக குறைந்த ரிஸ்க் கொண்ட நிதி திட்டங்கள் உள்ளன.

வங்கி டெபாசிட் தொகைக்கு மாற்றாக, கடன் பத்திர திட்டங்கள்(Debt Funds) பரஸ்பர நிதி திட்டங்களில் கிடைக்க பெறுகிறது. ஓரளவு ரிஸ்க் குறைவான பண்டுகளாக இருந்தாலும், வரி விதிப்புகளில் வங்கி டி.டி.எஸ்.(TDS) பிடித்ததை விட குறைவான வரிகள் தான் விதிக்கப்படுகின்றன. பங்குகள், தங்கம், ரியல் எஸ்டேட், குறிப்பிட்ட துறை சார்ந்த முதலீடுகள், புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காமல் ஏற்படுத்தப்படும் முதலீடுகள் என பல வகைகள் உள்ளன.

முதலீட்டு பரவலாக்கத்தை(Asset Allocation) ஏற்படுத்த சந்தையில் ஒரு எளிய முதலீட்டு சாதனம் உள்ளது என்றால், அது மியூச்சுவல் பண்ட் எனும் பரஸ்பர நிதி முதலீடுகள் தான். அனைத்து வகையான பண்டுகள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்கள் அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய வர்த்தக மதுரை சார்பாக புதிய கைபேசி செயலி (Mutual Fund Investment Application) ஒன்று கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

செயலியின் சிறப்பம்சங்கள்:
  • புதிய கணக்கை தொடங்குவதற்கு, கே.ஒய்.சி.(KYC) நடைமுறை என்ற கட்டுப்பாடு அனைத்து வகை நிதி சாதனங்களுக்கும் உண்டு. இது வங்கி, பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளுக்கு பொருந்தும். கே.ஐ.சி. பதிவு செய்ய தனியாக படிவம் ஒன்றை நிரப்பி மியூச்சுவல் பண்டு நிறுவனத்திடம் அளிக்க வேண்டும். இந்த சிக்கலை குறைத்து, வர்த்தக மதுரை செயலியில் இணைய வழியாக இரண்டு நிமிடங்களில் கே.ஒய்.சி. பதிவை நிறைவு செய்யலாம். இந்த முறை செபியின் விதிமுறைக்கு உட்பட்டது.
  • முன்னர், மியூச்சுவல் பண்டு முதலீட்டை துவங்க ஒரு வார காலம் ஆகும். ஆனால், தற்போது இந்த செயலியின் வாயிலாக அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் ஒரு திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
  • வெவ்வேறு வகையான நிறுவனங்கள் மற்றும் பண்டுகளில் முதலீடு செய்தாலும் ஒரே செயலியில் உங்களது முதலீட்டு நிலவரங்களை எப்போது வேண்டுமானாலும்(Single Account for Multiple Funds) காணலாம்.
  • வங்கியில் சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், வர்த்தக மதுரை செயலி மூலம் லிக்விட் பண்டுகளில் உங்கள் தேவைக்கேற்றாற் போல் பணத்தை பரிமாற்றம் செய்து கணிசமான வட்டி வருவாயை பெறலாம். முதலீடு செய்வதும், உங்கள் முதலீட்டில் உள்ள பணத்தை எடுப்பதும் மிகவும் எளிமையான ஒன்று.
  • நிதி சம்மந்தமான 10க்கும் மேற்பட்ட கணிப்பான்கள் இந்த செயலியில் உள்ளன. (Dream Home Planning, Dream Car Plan, Future Expenses, Children Education, Retirement Savings, Marriage Fund, Family Protection, Tour / Vacation Plan, Crorepati, SIP and EMI Calculator)
  •  உங்கள் முதலீடு சார்ந்த மின்னணு ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க இ-லாக்கர்(E-Locker) வசதி உண்டு. நீங்கள் முதலீடு செய்திருக்கும் தற்போதைய மதிப்பை உடனடியாக அறிந்து கொண்டு, பி.டி.எப்.(Download Investment Holding Reports) முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • சந்தையில் உள்ள புதிய தகவல்கள் மற்றும் செய்திகளை(Mutual Fund related Information) வர்த்தக மதுரை செயலியின் மூலமே படித்து தெரிந்து கொள்ளலாம். மியூச்சுவல் பண்டுகளில் கவனிக்க கூடிய முக்கிய திட்டங்களும் உங்களுக்கு பரிந்துரைக்கப்படும்.
பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள்:
  • கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கப்பெறும் வர்த்தக மதுரை ( VARTHAGA MADURAI – MY DREAM PORTFOLIO ) செயலி பாதுகாப்பான நிதி செயலியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் செய்யப்படும் அனைத்து பரிமாற்றங்களும் செபியின் (SEBI – AMFI) அனுமதியுடன் இயங்கப்பட்டு வருகிறது.
  • மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் திட்டங்களுக்கும், பயனாளர்களின் தேவைக்குமான பாலமாக இந்த செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பரஸ்பர நிதிகளில் கிடைக்க கூடிய செயலிகள் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் மாறுபடும். உதாரணமாக நீங்கள் ஐந்து வெவ்வேறு மியூச்சுவல் பண்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், ஐந்து செயலிகள் தேவைப்படும். ஆனால், இங்கே வர்த்தக மதுரை செயலி மூலம் நீங்கள் முதலீடு செய்த ஒவ்வொரு திட்டங்கள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்களின் முதலீட்டு நிலவரங்களை ஒரே இடத்தில் பார்க்கும் வசதி உண்டு.
  • உள்ளீடு செய்யப்படும் ஒவ்வொரு தரவுகளிலும்(Filled Information) கவனமாக பதிவு செய்வது அவசியம். உங்கள் பான்(PAN) எண்ணை கொண்டு தான் ஒவ்வொரு தகவலும் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. நாமினியை பதிவு செய்வது, வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்வதில் கவனமாக செயல்பட வேண்டும். இருப்பினும் தவறு ஏதேனும் ஏற்பட்டால், இதனை பின்னாளில் திருத்துவதற்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது.

புதிய கணக்கை துவங்குவதற்கான வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து வருபவர்களும் இந்த செயலியை பயன்படுத்தலாம்.

Varthaga Madurai Mutual Funds App – How to use Guide

நினைவில் கொள்ளுங்கள்: 

பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் முன்னர், உங்களுக்கான நிதி இலக்குகளை திட்டமிட்டு பின்பு முதலீடு செய்வது சிறந்தது. மியூச்சுவல் பண்டுகளில் குறைந்த ரிஸ்க் முதல் அதிக ரிஸ்க் வரை உள்ள திட்டங்கள் ஏராளம். எனவே சரியான புரிதலை ஏற்படுத்தி கொண்டு முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், தகுந்த நிதி ஆலோசகரை கொண்டு உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுங்கள்.

செயலி மற்றும் மியூச்சுவல் பண்ட் சார்ந்த உங்களுக்கான சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் இருந்தால், பதிவு செய்ய…

https://varthagamadurai.com/contact/

அல்லது

+91 9500 438 549 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com