நாட்டின் மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் – 5.84 சதவீதம்
India’s Retail – CPI Inflation revised to 5.84 Percent in March 2020
நாட்டின் பணவீக்கம் இரு முறைகளில் பின்பற்றப்பட்டு கணக்கிடப்படுகிறது. சில்லரை விலை பணவீக்கம்(CPI) மற்றும் மொத்த விலை பணவீக்கம்(WPI) என இருவகைகளாக பணவீக்கம் வெளியிடப்படுகிறது. மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் 5.84 சதவீதமாக இருந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 7.59 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் தற்போது குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
இருப்பினும், ஊரடங்கு நாட்களின் போது மற்றும் அதற்கு பின்பான பணவீக்க விகிதங்கள் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். சந்தை எதிர்பார்த்த 5.91 சதவீதம் என்ற விகிதத்தை காட்டிலும் மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் கட்டுக்குள் இருந்துள்ளது.
மத்திய புள்ளியியல் அமைச்சகம் இதுவரை கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில், பணவீக்க விகிதங்களுக்காக எடுத்து வந்த தரவுகள் கடந்த மார்ச் 19 முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது நாடு முழுவதும் உள்ள ஊரடங்கு உத்தரவு தான். ஏப்ரல் மாத சில்லரை விலை பணவீக்கம் வெளியிடப்படவில்லை. மாறாக மார்ச் மாத திருத்தப்பட்ட பணவீக்கமாக இது கருதப்படுகிறது.
பிரதமரின் சமீபத்திய உரையில் நான்காவது முறையாக ஊரடங்கு(Lock down 4.0) இருக்கலாம் எனவும், அதே வேளையில் சில கட்டுப்பாடுகளுடன் தொழில்கள் இயங்கக்கூடும் எனவும் சூசகமாக தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் அறிவிப்புகள் நாளை(13-05-2020) வெளியிடப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
சொல்லப்பட்ட மதிப்பு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக இருக்கும் என கூறப்படுகிறது. மார்ச் மாத தொழிற்துறை உற்பத்தி(Industrial Production) குறியீடு 16.7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உற்பத்தி துறை மட்டும் சுமார் 21 சதவீதம் வரை சரிந்துள்ளது. கடந்த முறை இது 3.1 சதவீதமாக இருந்தது. இது போல மின் உற்பத்தி 6.8 சதவீதம் குறைந்துள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை