All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

2022ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

2022ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ? 

Global Market Indices in the year 2022 – Returns %

2022ம் ஆண்டில் பல்வகை முதலீடுகளின்(Asset Classes) வளர்ச்சி விகிதத்தை காணும் போது, உலகளவில் அதிகபட்சமாக தங்கத்தின் மீதான முதலீடு 11 சதவீதமும், பெரு நிறுவனங்களின் பங்கு முதலீடு(Large Cap Equity) 3 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.5 சதவீதமும், தனியார் கடன் பத்திரங்கள் 2.7 சதவீதமும், அரசு பத்திரங்கள் 2.3 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. மாறாக நடுத்தர மற்றும் குறு நிறுவனங்களின் பங்கு முதலீடு இறக்கத்தை சந்தித்துள்ளன.

கடந்த பத்து வருட காலத்தில் இந்திய பங்குச்சந்தை முதலீடு 2015ம் ஆண்டை தவிர்த்து(-4.1 %) பார்க்கையில், அனைத்து வருடமும் ஏற்றத்தில் தான் முடிந்துள்ளன. தங்கத்தின் மீதான முதலீடு 2019 மற்றும் 2020ம் வருடங்களில் ஆண்டுக்கு 20 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளன. உலக பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் மீதான வருவாய் அதிகரித்துள்ளது.

பொதுவாக பொருளாதார மந்தநிலை காணப்படும் போது தங்கம் ஏற்றம் பெறுவதும், மீண்டெழும் பொருளாதாரத்தில் தங்கத்தின் வருவாய் குறைவதும் இயல்பே. பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, பங்கு முதலீடு மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கான ஏற்றம் காணப்படும்.   

2022ம் வருடத்தில் வளர்ந்த நாடுகளின் பங்குச்சந்தை முதலீடு பெரும்பாலும் இறக்கத்தையே சந்தித்துள்ளது. சொல்லப்பட்ட வருடத்தின் முடிவில் அமெரிக்காவின் நாஸ்டாக்(Nasdaq) குறியீடு 33 சதவீதம் சரிந்துள்ளது. இந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப குறியீடு(FAANG) மட்டும் 40 சதவீதத்திற்கு மேல் வீழ்ந்துள்ளது. ஜெர்மனியின் டாக்ஸ்(DAX) 12 சதவீதமும், ஜப்பானின் நிக்கி(Nikkei) 9 சதவீதமும், ஐரோப்பாவின் ஸ்டாக்ஸ்(Stoxx) 11 சதவீதமும் இறக்கத்தை சந்தித்துள்ளது.

வளர்ந்த நாடுகளின் பட்டியலில் ஐக்கிய ராச்சியத்தின் புட்சி(FTSE) குறியீடு மட்டும் ஒரு சதவீதம் என்ற அளவில் 2022ம் ஆண்டு ஏற்றம் பெற்றுள்ளது. வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் சீனா, தென் கொரியா, வியட்நாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் குறியீடுகள் 14 சதவீதத்திற்கு மேல் சரிவடைந்துள்ளன. அதிகபட்சமாக ரஷ்ய நாட்டின் பங்குச்சந்தை குறியீடு 39 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்தோனேசிய மற்றும் சிங்கப்பூர் நாட்டின் பங்குச்சந்தை குறியீடுகள் 4 சதவீதம் என்ற அளவில் ஏற்றமடைந்துள்ளது. வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்திய பங்குச்சந்தை மட்டுமே 5 சதவீதம் என்ற அளவில் ஏற்றம் பெற்று முதலிடத்தில் உள்ளது. நிப்டி (Nifty) தேசிய பங்குச்சந்தையில் உலோகத்துறை, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்கள்(CPSE) மற்றும் தனியார் வங்கிகளின் குறியீடுகள் 20 சதவீதத்திற்கு மேல் வருவாயை தந்துள்ளது. அதிகபட்சமாக பொதுத்துறை வங்கிகளின் குறியீடு 70 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது.

மாறாக, தகவல் தொழில்நுட்ப துறை 26 சதவீதமும், மருந்துத்துறை(Pharma) 11 சதவீதமும், ரியல் எஸ்டேட் குறியீடு 11 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்களிடையே அதிகமாக புழங்கும் எப்.எம்.சி.ஜி.(FMCG) துறை 17 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் 2022ம் ஆண்டில் 52 சதவீதமும், கோல் இந்தியா 54 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா மற்றும் விப்ரோ ஆகிய பங்குகளின் விலை 20 சதவீதத்திற்கு மேல் வீழ்ந்துள்ளன. 

வரக்கூடிய காலம் பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடியான நிலையாக இருப்பதால், பங்கு முதலீட்டில் அதிக ஏற்ற-இறக்கத்தை எதிர்பார்க்கலாம். இது போன்ற சூழ்நிலையில் முதலீட்டை பரவலாக்கம்(Asset Allocation) செய்வது நல்லது. நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டை மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார மந்தநிலை, பங்கு முதலீட்டு வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும். நேரடியான பங்கு முதலீட்டை(Direct Equity) சரியாக கையாள தெரியாதவர்கள் அல்லது நேரமில்லை என சொல்பவர்கள், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Multi Asset, Asset Allocator, Hybrid, Flexi & Multicap) மூலம் தங்களது முதலீட்டை பரவலாக்கம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

பணவீக்க விகிதமும், வட்டி விகித அதிகரிப்பும்  – முதலீட்டு பார்வை 2023

How is the Inflation and Interest rate playing in the Real Economy ? 

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்ட உலகளவிலான ஊரடங்கிற்கு பின்பு, உலக பொருளாதாரம் இந்த சுழற்சி முறையில்(Life Cycle) தான் செல்லும் என பொருளாதார வல்லுநர்கள் கூறியிருக்க, அதனை அப்படியே பின்பற்றி வருகிறது உலக பொருளாதாரமும். கூடுதலாக உக்ரைன்-ரஷ்ய போர் மற்றும் சீன-தைவான் எல்லை பதற்றமும் அடங்கும். 

கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு(Economic Stimulus) அன்றைய நிலையை களைய பெரிதும் உதவியது. இருப்பினும் அதன் காரணமாக பணவீக்க விகிதமும் கடந்த சில காலாண்டுகளாக அதிகரித்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த பெரும்பாலான வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இதன் விளைவு தேவை-உற்பத்திக்குமான இடைவெளியில் தான் உள்ளது. இந்த இடைவெளியே பல நாடுகளை பொருளாதார மந்தநிலைக்கு எடுத்து செல்லும். 

உலக பங்குச்சந்தைகளும், அரசு கடன் பத்திர சந்தைகளும் வரவிருக்கும் காலத்தில் ஆட்டம்(High Volatility) காண்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் நவீன பொருளாதாரத்தில் இது ஒரு சுழற்சி முறையே(Life Cycle). பணவீக்கம் உயர்ந்தால் அதனை கட்டுப்படுத்துவது ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியின் வேலை தான். அதிகரித்து வரும் பொருட்களின் சந்தை விலையை மட்டுப்படுத்த, போடப்படுகிற கடிவாளம் தான் இந்த வட்டி விகித உயர்வு. 

வட்டி விகித உயர்வால் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி குறைந்து சந்தையில் பொருட்களின் விலையும் கணிசமாக குறையும். இதன் தாக்கம் தொழில் நிறுவனங்களின் வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால், பங்கு விலையும் சரியும்(அனைத்து நிறுவங்களுக்கும் பொருந்தாது). கடனில்லா நிறுவனங்களுக்கு வருவாய் குறைவு ஒரு பிரச்சனையில்லை, ஆனால் கடனை அதிகமாக கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு தான் இந்த சிக்கலே !

வங்கி வட்டி விகித உயர்வு, டெபாசிட் வாடிக்கையாளர்களுக்கு மற்றும் கடன் பத்திரங்களில் முதலீட்டை மேற்கொள்பவருக்கு வேண்டுமானால் வாய்ப்பாக அமையலாம். ஆனால் வங்கிகளில் கடன் வாங்கிய தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு தான் செலுத்த வேண்டிய வட்டி செலவு அதிகரித்து விடும். சொல்லப்போனால், டெபாசிட்தாரரருக்கும் இந்த வட்டி உயர்வு நீண்டகாலத்தில் பயன் தராது. 

பணவீக்கத்தை கட்டுப்படுத்திய பிறகு வங்கிகளின் வட்டி வருவாய் விகிதத்தையும் மத்திய வங்கி குறைத்து விடுமே. இதனை தான் நாம் தொழிலாளர்களின் பி.எப்.(Provident Fund), அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் வங்கி வைப்பு நிதிகளில் காணலாம். பணவீக்க விகிதம் அதிகமாக இருந்த காலங்களில் சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் அதிகமாகவும், மாறாக பணவீக்கம் குறையும் போது, சேமிப்புக்கான வட்டி விகிதமும் வெகுவாக குறைக்கப்படும். இதனை நாம் பெரும்பாலும் பொருளாதார மந்தநிலை மற்றும் அதற்கு பிறகான காலங்களில்(Economic Recession & Growth) காணலாம். 

இது ஒருபுறம் இருக்க, கடந்த காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய வட்டி வருவாய், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் முதலீடு என்று சொல்லப்பட்டு வரும் திட்டத்தில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனலாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட வருடத்தின் பணவீக்க விகிதம் 7 சதவீதம் என எடுத்து கொண்டால், சேமிப்புக்கான வட்டி  விகிதம் 7 சதவீதத்திற்கு குறைவாகவே இருக்கும். இதுவே வங்கி சேமிப்புக்கணக்குக்கான வட்டி விகிதத்தை சொல்லவே வேண்டாம்.  அதே வேளையில், கடனுக்கான வட்டி விகிதம் அதிகரித்து காணப்படும். 

 பொதுவாக மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்கும் போது, பெரும்பாலான வங்கிகளில் கடனுக்கான வட்டி விகிதத்தை உடனே அதிகரித்து விடுவதுண்டு. மாறாக, நமது சேமிப்புக்கான வட்டி பெரும்பாலும் பணவீக்கத்திற்கு குறைவாக இருக்கும். இது போக கிடைக்கப்பெற்ற வட்டி வருவாய்க்கு வருமான வரி செலுத்த வேண்டியது இருந்தால், முடிவில் நிகர இழப்பு தான் !

எனவே வட்டி விகித உயர்வு காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய மற்றும் நீண்ட காலத்தில் குறைந்த வரி விகிதத்தில் அதிக வருவாயை ஏற்படுத்தும் முதலீட்டை கண்டறிவது அவசியம். அது போன்ற முதலீட்டு வாய்ப்புகள் தான் பரஸ்பர நிதிகளும்(Mutual Funds), பங்குச்சந்தைகளும். பங்குச்சந்தைக்கும், பரஸ்பர நிதிக்குமான ரிஸ்க் தன்மை என்பது வெவ்வேறு. சரியான நிதி இலக்கை ஏற்படுத்தி  விட்டு, அதற்கான முதலீட்டை துவக்கினால் போதுமானது. நீண்டகாலத்தில் உங்களது முதலீடு உங்களுக்காக உழைக்க தயாராகும்…!

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அயல்நாட்டு பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய உள்ளீர்களா ? – கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

அயல்நாட்டு பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய உள்ளீர்களா ? – கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் 

Things to know before investing in Foreign Equities

இந்தியாவின் பங்குச்சந்தை மதிப்பு சுமார் 285 லட்சம் கோடி ரூபாய் (3.50 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்) மற்றும் முன்னணியில் உள்ள முதல் பத்து நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு மட்டும் 77.90 லட்சம் கோடி ரூபாய் (தரவு: BSE India). இந்திய பங்குச்சந்தையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

2008ம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் இந்திய பங்குச்சந்தையும் ஆட்டம் கண்டது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கு விற்பனையை பெருமளவில் மேற்கொண்டதும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. ஆனால் 2020ம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தை வீழ்ந்திருந்த போதும், அதற்கு பிறகான மீட்டெடுப்பில் உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. 

கடந்த சில காலாண்டுகளாக வெளிநாட்டு முதலீடுகள் இந்திய பங்குச்சந்தையிலிருந்து அதிகளவில் வெளியேறி இருந்தாலும், நமது சந்தை பெருமளவில் இறக்கம் காணவில்லை. இதற்கு முக்கிய காரணமாக உள்ளூர் முதலீடுகள் பெருகி வருவது தான். பின்டெக்(Fintech Apps) நிறுவனங்களின் பங்கு முதலீடு சார்ந்த விளம்பரங்கள், பரஸ்பர நிதிகளில் தொடர்ச்சியான முதலீடு, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, குறிப்பிடத்தக்க பங்கு சார்ந்த விழிப்புணர்வு, அரசு சார்ந்த சேமிப்புகள் பங்குச்சந்தையை நோக்கி திரும்புதல் ஆகியவை நமது சந்தைக்கு பக்க பலமாக உள்ளது. 

பின்டெக் நிறுவனங்களின் பங்கு முதலீட்டு பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்கள் புதிய உள்ளூர் முதலீட்டாளர்களை இந்திய பங்குச்சந்தைக்கு அதிகளவில் கொண்டு வந்துள்ளன என்பதனை நாம் மறுப்பதற்கில்லை. இவற்றையும் கடந்து சமீப காலங்களில் வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கான தளங்களை பெரும்பாலான பங்கு தரகர்கள்(Stock Brokers) வழங்கி வருகின்றனர். இதனையே பங்குச்சந்தையில் நேரடி செயல்பாடுகளை கொண்டிருக்காத மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும்(Third Party Apps – Fintech Companies) அயல்நாட்டு பங்குகளை வாங்குவதற்கான வசதிகளை செய்து தந்துள்ளது.

இதன் மூலம் இந்திய உள்ளூர் முதலீட்டாளர்களும் கூகுள், ஆப்பிள், சாம்சங், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற பிரபலமான வெளிநாட்டு நிறுவன பங்குகளை வாங்க முடியும். உலகமயமாக்கலுக்கு பின்பு நமது நாட்டின் பொருளாதாரம் வெகுவாக உயர்ந்து வந்துள்ளது. தற்போது தொழில்நுட்ப மற்றும் இணைய புரட்சி மூலம் நிதி முதலீடுகளை மேற்கொள்வதும் எளிமையாக்கப்பட்டுள்ளது. ஏதோவொரு கிராமத்தில் அமர்ந்து கொண்டு, அமெரிக்காவில் வர்த்தகமாகும் ‘டெஸ்லா’ பங்கினை வாங்குவது இன்று அவ்வளவு சுலபம். 

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீத பங்களிப்பை கூட கொண்டிருக்காத நம் பங்குச்சந்தைக்கு, வெளிநாட்டு பங்குகளை வாங்குவது மிகவும் எளிமையாக இருந்தாலும், நாம் பங்குச்சந்தை சார்ந்த விழிப்புணர்வை ஓரளவு பெற்று விட்டோமா என்றால் அது தான் இல்லை. இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்து வரும் அத்தனை பேரும் லாபமீட்டுகிறார்களா என கவனித்தால், அந்த எண்ணிக்கை ஆயிரங்களில் மட்டுமே உள்ளது. இன்றும் சேமிப்புக்கும், முதலீட்டுக்குமான வேறுபாடுகளை புரிந்து கொள்ள முடியாத முதலீட்டாளர்கள் கோடிகளில் உண்டு. அப்படியிருக்கும் போது, வெறும் விளம்பர நோக்கில் பரிந்துரைக்கப்படும் அயல்நாட்டு பங்குகளை பற்றி நம்மால் புரிந்த கொள்ள முடியுமா, இல்லையெனில் பங்குச்சந்தையில் லாபமீட்டுவது அவ்வளவு எளிதான காரியமா என்ன ?

இந்திய பங்குச்சந்தையில் நேரடியாக பங்கு முதலீடு செய்பவர்களுக்கு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை புரிந்து கொள்வது சற்று கடினமான விஷயமே. நிறுவனத்தின் தொழில் ஆதாரம், நிதி அறிக்கைகள், நிர்வாகம் ஆகியவற்றை புரிந்து கொள்ள நாம் பயிற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். 100 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகும் பங்குகள் இப்படியிருக்கும், 1000 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகும் பங்குகள் இவ்வாறு விலை நகரும் என யாராலும் சந்தையில் கணிக்க இயலாது. அடுத்த 50 வருடங்களுக்கு இந்த துறை தான் சிறப்பாக செயல்படும் என உறுதியாக சொல்ல முடியாது. பிரபலமான பிராண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் சோடை போன வரலாறு உலகின் அனைத்து பங்குச்சந்தைகளுக்கும் உண்டு. இதனை களைய தான் பரஸ்பர நிதிகளின் மூலம் நீண்ட காலத்தில் முதலீடு செய்யுங்கள் என நிதி ஆலோசகர்களும், பொருளாதார வல்லுனர்களும் கூறி வருகின்றனர். பரஸ்பர நிதிகளில் பங்கு நிறுவனங்களை ஆராய்ந்து முதலீடுகளை மேற்கொள்ள பண்ட் மேலாளர்கள் உள்ளனர்.  

அப்படியிருக்கையில் அயல்நாட்டு பங்குகளில் ஏதோவொரு தளத்தின் வாயிலாக நேரடியாக பங்கு முதலீடு செய்வதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை நாம் பார்ப்போம்.

  • மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை(Third Party Apps) கொண்டு வெளிநாட்டு பங்குகளை வாங்குவதில் உள்ள நம்பகத்தன்மை என்ன, ஒழுங்குமுறை ஆணையத்தின்(Regulators) கீழ் அந்த நிறுவனம் செயல்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்த(Associates) அடிப்படையில் பரிந்துரைக்கிறார்களா ?
  • இன்று பெரும்பாலான தளங்கள்(Platforms) டீமேட் கணக்கு துவங்குவதற்கும், பங்குகளை வாங்குவதற்கும் கட்டணம் எதுவுமில்லை என சொன்னாலும், வெளிநாட்டு பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள கணக்கு துவங்க தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களை பற்றி அறிந்து வைத்திருப்பது அவசியம்.
  • வாங்கிய வெளிநாட்டு பங்குகளை பின்னர் விற்பனை செய்யும் போது ஏதேனும் கட்டணம் சொல்லப்பட்டுள்ளதா, அவற்றை நீண்ட காலம் நம்மால் வைத்திருக்க முடியுமா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.
  • பங்கு போர்ட்போலியோ விவரங்களை(Portfolio Statement) மின்னஞ்சலில் பெற மாதாந்திர அல்லது ஆண்டு பராமரிப்பு கட்டணம் என்ன ?
  • பங்குகளை விற்பனை செய்த பின், பணத்தை நமது வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டுமெனில் அதற்கான கட்டணம்(Withdraw Charges) எவ்வளவு  ? 
  • நாம் முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவன பங்குகளில் ஏதேனும் சிக்கல்(நிறுவனத்திற்கு) ஏற்பட்டால், அதனை நமக்கு தெரிவிப்பார்களா, சந்தையிலிருந்து அந்த பங்கு ஏதேனும் ஒரு காரணத்தால் வெளியேற்றப்பட்டால் நாம் எவ்வாறு அதனை அறிந்து கொள்வது ?
  • வெளிநாட்டு பங்குகளை வாங்கும் நாம் அந்நாட்டின் வருமான வரிச்சட்டம்(Taxation) எப்படி உள்ளது, நமக்கு சாதகமான அம்சம் ஏதுமுள்ளதா என்பதனை தெரிந்து வைத்திருக்க வேண்டும். 
  • முதலீடு செய்த பங்குகளுக்கு ஈவுத்தொகை(Dividend) ஏதும் வழங்கப்பட்டால் எந்த வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் மற்றும் அதற்கான வரி விதிப்பு எப்படி உள்ளது ?
  • வெளிநாட்டு நிறுவன பங்குகளின் தொழில் மற்றும் நிதி அறிக்கைகளை எளிமையாக தெரிந்து கொள்ள இணையதளங்கள் உள்ளதா, அவற்றினை அறிய கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா(Research reports) ?

பொதுவாக அமெரிக்காவில் பங்கு முதலீட்டுக்கான வரி விதிப்பு, நம் நாட்டை காட்டிலும் அதிகமாக தான் காணப்படுகிறது. இங்கே நீண்டகால மூலதன ஆதாய வரிக்கான காலம் ஒரு வருடத்திற்கு மேல் என்றால், அமெரிக்காவில் அது இரண்டு வருடத்திற்கு மேலாக சொல்லப்படுகிறது. நீண்டகால மூலதன ஆதாயத்திற்காக வரி இங்கே 10% (ஒரு லட்சம் வரையிலான லாபத்திற்கு வரி விலக்கு போக) எனும் போது, அமெரிக்காவில் எந்த வரி விலக்கும் இல்லாமல் 20 சதவீத வரி செலுத்த நேரிடும். பங்கு முதலீட்டு விற்பனைக்கு பின், பணத்தை வங்கிக்கணக்கில் மாற்ற வெளியேற்று கட்டணமும் அங்கே உண்டு.

நேரடி பங்கு முதலீடு(Direct Equity) அதிக ரிஸ்க் தன்மை கொண்டது. எனினும் பங்கு நிறுவனங்களை முறையாக ஆராய்ந்து நீண்டகாலத்தில் முதலீடு செய்து வந்தால்,  நல்ல வருவாயை பெறலாம். அதே வேளையில் உலகளவில் பெயர் போன பிராண்டுகளும், அனைத்து பென்னி பங்குகளும்(Penny Stocks) நல்ல வருவாயை அளிக்கும் என எந்த உத்தரவாதமும் இல்லை. 

சமீப காலமாக, சில பின்டெக் தளங்களில் “அதிகமானோர் விரும்பும் பங்குகள், 10 ரூபாய்க்கு கீழான பங்கு நிறுவனங்கள், தங்கள் தளங்களில் அதிகம் விற்பனையான பரஸ்பர நிதி திட்டங்கள், ஒரே வாரத்தில் அதிக வருவாய் அளித்த திட்டங்கள்” என விளம்பரங்களை(Promotions) காண முடிகிறது. இந்த பரிந்துரைகளை தொடர்ந்து கொண்டு முதலீடு செய்வதில் உள்ள ரிஸ்க் தன்மையை நாம் எச்சரிக்கையாக புரிந்து கொள்ள வேண்டும். அதிகம் விற்பனையான அல்லது அதிகமானோர் விரும்பும் பங்குகள் மற்றும் திட்டங்கள் என்பது விழாக்கால சலுகை போல. கடினமாக உழைத்து சம்பாதித்த நம் பணத்தை இது போன்ற பரிந்துரைகள் மூலம் முதலீடு செய்வதால், எள்ளளவும் பயனில்லை என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மட்டும் 55 சதவீதமாக உள்ளது. இதுவே ஐக்கிய ராச்சியத்தில்(United Kingdom) 33 சதவீதமாகவும் மற்றும் சீனாவில் 13 சதவீதமாகவும் உள்ளது. இந்திய நாட்டின் வருங்கால வளர்ச்சியை கணக்கில் கொண்டு தான் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே முதலீடு செய்து வருகின்றன. நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இங்கே அதிக முதலீடுகளை மேற்கொள்கின்றன. 

அப்படியிருக்கையில், நமக்கான பெரும்பாலான பங்கு முதலீட்டு வாய்ப்பு நமக்கு அருகிலேயே தான் உள்ளது. வளர்ந்த நாடுகள் இங்கே முதலீடு செய்து சம்பாதிக்க, நமக்கான இடத்தை நிரப்ப நம்மூர் நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதினால் தான் அது சாத்தியம். 

குறிப்பு: நான் உள்ளூரில் நிறைவாக முதலீடு செய்து லாபமீட்டி வருகிறேன். நாட்டின் பொருளாதாரத்தில் எனது முதலீட்டு பங்களிப்பு அளப்பரியது. எனவே வெளிநாட்டு பங்குகளை வாய்ப்பாக கருதுகிறேன் என்று நீங்கள் சொன்னால் அயல்நாட்டு பங்கு முதலீட்டை(கட்டணம் மற்றும் வரிகளை புரிந்து கொண்டு) தாராளமாக மேற்கொள்ளுங்கள்.  

பரஸ்பர நிதி நிறுவனங்களின் வாயிலாக இன்று பெரும்பாலான வெளிநாட்டு பங்கு முதலீட்டு திட்டங்கள்(Mutual Funds) நமக்கு கிடைக்கப்பெறுகின்றன.   

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாளை முதல் நாட்டின் முதல் ‘டிஜிட்டல் ரூபாய் நாணயம்’ – நவம்பர் 1, 2022

நாளை முதல் நாட்டின் முதல் ‘டிஜிட்டல் ரூபாய் நாணயம்’ – நவம்பர் 1, 2022

India’s First Digital Rupee Currency – Pilot launch on November 1, 2022

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தில், நடப்பு நிதியாண்டிற்குள் நாட்டின் முதல் ‘டிஜிட்டல் நாணயம்’ அறிமுகப்படுத்தப்படும் என அரசு சார்பில் சொல்லப்பட்டிருந்தது. சோதனை முறையில் நாளை (நவம்பர் 1) முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த நாணயம், ‘eRupee’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

மத்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் இந்த டிஜிட்டல் நாணயம், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ரூபாய் நோட்டு அல்லது நாணயத்தின்(Fiat Currency) ஒரு மாற்று தான். அதாவது ஒரு ரூபாய் நோட்டு அல்லது நாணயம் என்பது அதே மதிப்பினை கொண்ட ஒரு ரூபாய் டிஜிட்டல் நாணயமாக கருதப்படும். 

டிஜிட்டல் நாணயம் சார்ந்த விவரங்களை, மத்திய ரிசர்வ் வங்கி கடந்த சில வாரங்களுக்கு முன்பு 50 பக்க ஆவண வடிவில் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. பிளாக் செயின் தொழில்நுட்பம், திறமையான மற்றும் எளிமையான மேலாண்மை அமைப்பு மற்றும் இன்னபிற தொழில்நுட்பங்களை கொண்டு டிஜிட்டல் நாணயம் வரவிருக்கிறது. 

இதன் மூலம் அரசின் பத்திரங்களுக்கான பரிவர்த்தனை செலவுகளை குறைக்கலாம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. துவக்க நிலையில் ஒன்பது வங்கிகளின் மூலம் இந்த டிஜிட்டல் நாணயம் செயல்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் – பாரத ஸ்டேட் வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பரோடா வங்கி, யூனியன் வங்கி, எச்.எஸ்.பி.சி.(HSBC), கோடக் மஹிந்திரா, ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகியவை.   

புதிய டிஜிட்டல் நாணய வருகையால், நடைமுறையில் இருக்கும் நாணய மற்றும் கட்டண அமைப்பில் ஏதும் மாற்றமில்லை எனவும் மத்திய வங்கி கூறியுள்ளது. டிஜிட்டல் ரூபாய் நாணயம் என்பது மெய்நிகர் நாணயத்திலிருந்து(Cryptocurrency) வேறுபடுகிறது என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

யூ.பி.ஐ.(Unified Payments Interface – UPI) பண பரிவர்த்தனையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக இந்தியா உள்ளது. கடந்த செப்டம்பர் 2022 மாதத்தில் மட்டும் UPI முறையில் 678 கோடி பரிவர்த்தனைகளின் மூலம் சுமார் 11.16 லட்சம் கோடி மதிப்பிலான பண பரிமாற்றம் நடந்துள்ளது. டிஜிட்டல் ரூபாய் நாணயம் நாட்டின் பொருளாதாரத்திலும், பிற மெய்நிகர் நாணயத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதனை வரவிருக்கும் காலங்களில் அறியலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலக பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு நாடுகளின் கடன் தன்மை(Debt to GDP) எவ்வளவு ?

உலக பொருளாதார வளர்ச்சியில் ஒவ்வொரு நாடுகளின் கடன் தன்மை(Debt to GDP) எவ்வளவு ?

Debt to GDP of Developed and Emerging Economies – 2022

உலகின் மொத்த மக்கள் தொகை சுமார் 798 கோடி(17-10-2022) மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பு தோராயமாக 96 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள்(தரவு 2021). மக்கள் தொகையில் சீனா முதலிடத்திலும், பொருளாதார மதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும் உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்திலும், பொருளாதார மதிப்பில் ஐந்தாம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

2020ம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு காலத்தில் உலக பொருளாதாரம் (-3.27) சதவீதமாக வீழ்ச்சியை கண்டிருந்தது. அதே வேளையில் ஊரடங்கு காலத்திற்கு பிறகு மீட்கப்பட்ட பொருளாதாரம், 2021ம் ஆண்டின் முடிவில் 5.80 சதவீத வளர்ச்சியுடன் முடிவடைந்தது. 2021ம் வருடத்தில் சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி, கடந்த 48 வருடங்களில் உலகம் காணாத வளர்ச்சியாக இருந்துள்ளது. அதாவது பள்ளத்தில் விழுந்த பூனை மீண்டெழுவது போல (Dead Cat Bounce).

தனிநபர் பொருளாதார வளர்ச்சி அடிப்படையில்(GDP per Capita) காணும் போது, கடந்த 1980 களில் 2500 அமெரிக்க டாலர்களாக இருந்த நிலையில், 2021ம் ஆண்டில் 12,260 டாலர்களாக உயர்ந்துள்ளது. தற்போது நாம் உலகின் நான்காம் தொழில் புரட்சி காலத்தில்(Industrial Revolution) டிஜிட்டல் மயத்துடன் இணைந்துள்ளோம். பெருந்தொற்று காலத்திற்கு பிறகு வறுமை அதிகரிப்பு, பருவநிலை மாற்றங்கள், நாடுகளிடையே போர் மற்றும் விநியோக சங்கிலியில்(Supply Chain) சிக்கல் என ஒருபுறம் இருந்தாலும், அடுத்த 20-30 வருடங்களில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளே அதிகம் என உலக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 

உலக பொருளாதார உற்பத்தி மதிப்பில்(GDP) அமெரிக்க நாட்டின் பங்களிப்பு மட்டும் 24 சதவீதமாகும். இதற்கடுத்தாற் போல் சீன நாட்டின் பங்களிப்பு 18.5 சதவீதம், ஜப்பான் 5 சதவீதம் மற்றும் ஜெர்மனியின் பங்களிப்பு 4.4 சதவீதமாக உள்ளது. உலகின் பொருளாதார உற்பத்தி பங்களிப்பு வரிசையில் முதல் 25 நாடுகளை தவிர்த்து பார்த்தால் மற்ற நாடுகளின் ஒட்டுமொத்த பங்களிப்பு, உலக பொருளாதார மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கு அளவு கூட இல்லையென்பது கவனிக்கத்தக்கது. 

இதற்கு காரணமாக சொல்லப்படுவது வளர்ந்த மற்றும் விரைவாக வளரும் நாடுகளில் காணப்படும் அதிகபட்ச முதலீட்டு வாய்ப்பு, வேலைத்திறன் மற்றும் நுகர்வு தன்மை தான். பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் கடன்தன்மை அதிகரித்து வந்தாலும், அதற்கான வளர்ச்சியும் சாத்தியப்படுகிறது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் பாதுகாப்பு, கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை மேம்படுவதற்கான முதலீடுகள் அதிகமாக செலவு செய்யப்படுகிறது. 

2021ம் ஆண்டின் தரவின் படி, அமெரிக்காவின் பொருளாதார மதிப்பு 23 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். சீனா மற்றும் ஜப்பான் முறையே 17.7 டிரில்லியன் டாலர்கள் மற்றும் 4.9 டிரில்லியன் டாலர்கள். தனிநபர் பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை வளர்ந்த நாடுகளை காட்டிலும் சீனா மற்றும் இந்தியாவில் குறைவே. அமெரிக்காவில் தனிநபர் பொருளாதார வளர்ச்சி(GDP per Capita) 69,287 அமெரிக்க டாலர்களாக இருக்கும் நிலையில், சீனாவில் 12,556 டாலர்களாகவும், இந்தியாவில் 2,277 டாலர்களாகவும் உள்ளது. 

டிசம்பர் 2021 முடிவில் அமெரிக்காவின் கடன் அதன் மொத்த பொருளாதார மதிப்பில்(Debt to GDP) 137 சதவீதமாக இருந்துள்ளது. சீனாவில் இது 67 சதவீதமாகவும், ஜப்பானில் 266 சதவீதமாகவும் உள்ளது. ஜெர்மனி மற்றும் ஐக்கிய ராச்சியம்(United Kingdom) முறையே 69% மற்றும் 96 சதவீதமாக உள்ளது. இந்தியாவின் கடன்தன்மை 74 சதவீதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ், இத்தாலி மற்றும் கனடா போன்ற நாடுகளில் கடன்தன்மை நூறு சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது. வளரும் நாடுகளில் மிகக்குறைவாக தென் கொரியாவில் 42 சதவீதமாக உள்ளது.

கடந்த ஐம்பது வருடங்களில் வளர்ந்த நாடுகளின் கடன்தன்மை அதிகரித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) கூறியுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்பு உலக நாடுகளின் மொத்த கடன் 226 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் கடன் மட்டும் சுமார் 31 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். அதாவது தனிநபர் ஒருவரின் சராசரி கடன் மட்டும் 93,400 அமெரிக்க டாலர்களாக அந்நாட்டில் உள்ளது. 

உலகளவில் ஜப்பான் நாட்டில் தான் அதன் பொருளாதார மதிப்பில் கடன்தன்மை அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவின் தேசிய கடன்தன்மை சுமார் 2.3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள். ரஷ்யா, ஹாங்காங், வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் அதன் கடன்தன்மை குறைவாகவே காணப்படுகிறது. பொதுவாக வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் கடன் மூலம் முதலீடுகள் அதிகமாக பெறப்படுகிறது. இதன் மூலமாக அதன் வளர்ச்சியும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்தல் மற்றும் விநியோக சங்கிலியில் ஏதேனும் தடை ஏற்பட்டால், அதன் கடன் மூலம் பெறப்படும் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும். அதனால் தான் கடன்தன்மையை சீரமைப்பதும் அவசியம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். நமது குடும்பத்தில் காணப்படும் வரவு-செலவு போல தான் உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியும், கடன் தன்மையும்…

(தரவுகள் பெறப்பட்ட தளங்கள்: World Bank, IMF, Macro Trends & Trading Economics)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

     

கடந்த ஒரு வருடத்தின் பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மை விகிதமும்

கடந்த ஒரு வருடத்தின் பணவீக்கமும், வேலைவாய்ப்பின்மை விகிதமும் 

India’s CPI – Retail Inflation and Unemployment Rate (CMIE Data) – August 2022

நடப்பாண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) 7 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.79 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம் மீண்டும் உயர்ந்து காணப்படுகிறது. 

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவாக 8.28 சதவீதம் என்ற நிலையை எட்டியுள்ளது. கிராமப்புறங்களை காட்டிலும் நகரத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து 9.57 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம், சந்தை எதிர்பார்த்த அளவை காட்டிலும் சிறிது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் 6.75 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம், ஆகஸ்ட் மாதத்தில் 7.62 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாமிசம் மற்றும் மீன் பொருட்களின் விலை(CPI)  206 சதவீதமும், எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 192 சதவீதமும், மசாலா பொருட்களின் பணவீக்க விகிதம் 194 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

காய்கறி மற்றும் பழங்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் மாதத்தின் பணவீக்க விகிதம் உயர்ந்ததற்கான காரணியாக உள்ளது. இருப்பினும் எரிபொருட்களின் விலை சற்று தணிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 11.8 சதவீதமாக இருந்த எரிபொருட்களின் பணவீக்க விகிதம், கடந்த ஆகஸ்ட் மாதம் 10.78 சதவீதமாக குறைந்துள்ளது. 

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கத்தில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக உள்ளது. வீட்டுமனை 10 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 8.60 சதவீதமும், சுகாதாரம் 6 சதவீதமும் மற்றும் கல்வி 4 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. 

நாட்டின் பணவீக்க விகிதம் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு காரணமாக பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்திருப்பது, பருவமழையின் நிச்சயமற்ற தன்மை, மேம்படுத்தப்படாத உட்கட்டமைப்பு, உணவுப்பொருட்களை சந்தைக்கு குறித்த நேரத்தில் கொண்டு செல்வதில் உள்ள சிக்கல் மற்றும் அதிக நிதி பற்றாக்குறை ஆகியவை உள்ளது.

2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.86 சதவீதமாக இருந்துள்ளது. இது நகர்ப்புறங்களில் 8.64 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 6.04 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது. படிப்படியாக குறைந்து வந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஜூலை 2022ல் 6.83 சதவீதமாக இருந்தது. இது நகர்ப்புறங்களில் 8.22 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 6.17 சதவீதமாகவும் இருந்துள்ளது. பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்து காணப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 

நாட்டில் அதிகபட்ச வேலைவாய்ப்பின்மை விகிதம்(CMIE Data) காணப்படும் மாநிலங்களாக அரியானா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு உள்ளன. இதற்கடுத்தாற் போல ஜார்கண்ட், திரிபுரா, பீகார் மற்றும் கோவா போன்ற மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து காணப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டின் பணவீக்க விகிதம் 7.2 சதவீதமாகவும், தெலுங்கானா 6.9 சதவீதம், கேரளா 6.1 சதவீதம், ஆந்திரா 6 சதவீதம் மற்றும் கர்நாடகா 3.5 சதவீதமாகவும் உள்ளது. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அப்பாடா, பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி !

அப்பாடா, பங்குச்சந்தையில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி !

Tamilnad Mercantile Bank(TMB) in Equity IPO

வங்கி மற்றும் நிதிச்சேவையில் நூறு வருடத்திற்கு மேலான அனுபவம் கொண்ட தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஒரு வழியாக பங்குச்சந்தைக்கு தயாராகி விட்டது. கடந்த 1921ம் ஆண்டு தமிழக நாடார் சமூகத்தினரால் தொழில் சார்ந்த நிதி சேவைகளுக்காக தொடங்கப்பட்டது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. துவக்கத்தில் ‘நாடார் வங்கி’ என அழைக்கப்பட்ட இவ்வங்கி பின்னர் வணிக மேம்பாட்டின் காரணமாக, ‘தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் வங்கிக்கு, நாடு முழுவதும் 509 கிளைகளும், 12 பெரும் அலுவலகங்களும்(Regional offices) உள்ளன. கடந்த 2010 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலத்தில் நாட்டின் தனியார் வங்கிகளில் மிக சிறப்பாகவும், வேகமாக வளரும் வங்கியாக தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சொல்லப்பட்டது. 

1937ம் ஆண்டு இலங்கையில் ஒரு வங்கிக்கிளையை துவக்கியிருந்தாலும், பின்னர் அந்த கிளையை மூடிவிட்டது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. வங்கி கிளைகளில் முதன்முறையாக கணினிமயமாக்கலை ஏற்படுத்திய தனியார் வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி(1983ம் வருடம்) தான். இன்று அனைத்து கிளைகளும் முழுமையான கணினி தொழில்நுட்பத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இதன் மென்பொருள் இன்போசிஸ்(Infosys) நிறுவனம் உருவாக்கியது என்பது கூடுதல் தகவல்.

தனியார் வங்கிகளில் அன்னிய செலாவணியை பெறுவதில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி முதலிடத்தில் உள்ளது. 2019ம் நிதியாண்டில் இவ்வங்கி சுமார் 15,726 கோடி ரூபாய் மதிப்பில் அன்னிய செலாவணி வர்த்தகத்தை புரிந்துள்ளது. மாநிலத்தில் மட்டுமே இயங்கும் வங்கி போல தோற்றமளிக்கும் இவ்வங்கி உலகம் முழுவதும் எச்.டி.எப்.சி. மற்றும் ஐ.டி.பி.ஐ. வங்கிகளுடன் இணைந்து வங்கி சேவையை பகிர்ந்துள்ளது.

2021ம் நிதியாண்டில் வங்கியின் வருவாய் 530 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 4,253 கோடி ரூபாய். நிகர லாபமாக வங்கி 995 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. 2022ம் ஆண்டின் முடிவில் வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 52,858 கோடி (7.04 பில்லியன் டாலர்கள்). வங்கிகளில் இணைய வழியிலான வைப்பு நிதி கணக்கு(Deposit) துவங்கும் சேவையை நாட்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியது இவ்வங்கியே. 

வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கே.வி. ராமமூர்த்தி உள்ளார். கடந்த காலங்களில் சில சர்ச்சைகளையும், பங்குச்சந்தையில் நுழைய முடக்கங்களையும் மெர்கன்டைல் வங்கி சந்தித்திருந்தது. கடந்த 2021ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ஒரு வழியாக பங்குச்சந்தை நுழைவுக்கான விண்ணப்பத்தை செபியிடம்(SEBI) சமர்ப்பித்தது. நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் இதற்கான ஒப்புதலும் பெற்றது.

வரக்கூடிய செப்டம்பர் மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை பங்குகளை வழங்க ஐ.பி.ஓ. வை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி. முகமதிப்பு பங்கு ஒன்றுக்கு 10 ரூபாயாகவும், ஐ.பி.ஓ.வில் பங்கு ஒன்றின் விலை ரூ.500 – ரூ.525 என்ற அளவிலும் சொல்லப்பட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 28 பங்குகளும்( 1 Lot), அதிகபட்சமாக 364 பங்குகளும்(13 Lots) வாங்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

எதிர்கால மூலதன தேவைகளுக்காக பங்கு முதலீட்டை பெற(Initial Public offer) உள்ளதாக வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.பி.ஓ.வில் பங்கேற்கும் முதலீட்டாளர்கள் பங்களிப்பு முறையே தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள்(QIB) 75 சதவீதத்திற்கு மிகாமல், உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்(HNI) 15 சதவீதத்திற்கு மிகாமல் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் – தனிநபர்கள்(Retail investors) 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பொதுவாக ஐ.பி.ஓ.வில் அறிமுகமாகும் நிறுவனங்களின் நிதி விவரங்களை அவ்வளவு எளிதில் பகுப்பாய்வு செய்ய முடியாது. சந்தைக்கு வந்து குறைந்தபட்சம் ஐந்து வருடங்களை கடந்த பின்பு தான், அவற்றின் நிதி அறிக்கைகளை நம்மால் அடிப்படை பகுப்பாய்வுக்கு(Analysis) உட்படுத்த முடியும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான(Fundamental Analysis) கற்றல் மட்டுமே. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டாட்டா மெட்டாலிக்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

டாட்டா மெட்டாலிக்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

TATA Metaliks Limited – Fundamental Analysis – Stocks

நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான டாட்டா குழுமத்தின் ஒரு அங்கம் தான் டாட்டா மெட்டாலிக்ஸ். டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாட்டா மெட்டாலிக்ஸ் கடந்த 1990ம் ஆண்டு துவங்கப்பட்டது. இரும்பு குழாய்(Pig iron and Ductile Iron Pipes) உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனமாக டாட்டா மெட்டாலிக்ஸ் உள்ளது.

ஆண்டுக்கு சுமார் 5.50 லட்சம் கொள்ளளவு உலோக உற்பத்தி திறன் கொண்ட ஆலையை இந்நிறுவனம் கொண்டுள்ளது. நாட்டின் இரும்பு(Pig Iron) உற்பத்தியில் 20 சதவீத பங்களிப்பை டாட்டா மெட்டாலிக்ஸ் கொண்டிருக்கிறது. இதன் உற்பத்தி பெரும்பாலும் வாகனம், விவசாயம், மின்சாரம், ரயில்வே போன்ற துறைகளுக்கு பயன்படுகிறது. 

நிறுவனத்தின் இரும்பு குழாய் உற்பத்தி 14 வகையான முதன்மை தரங்களை கொண்டதாக உள்ளது. ‘TATA efee’ இந்நிறுவனத்தின் முக்கிய பிராண்டாக வலம் வருகிறது. நிறுவனத்தின் விற்பனை உள்நாட்டில் மட்டுமில்லாமல் ஐக்கிய அரபு, கத்தார், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் பரவலாகியுள்ளது. 

நிறுவனத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் ஆஸ்திரேலியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது. நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 60 சதவீதமாக உள்ளது. நிறுவனராக டாட்டா ஸ்டீல் நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்களிடம்(Mutual Funds) சுமார் 9 சதவீத பங்குகள் உள்ளது. 

நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.10 மடங்கு என்ற அளவில் உள்ளது. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 483 ரூபாயாகவும், முக மதிப்பு 10 ரூபாயாகவும் உள்ளது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 8 மடங்குகளில் இருக்கிறது. 2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,746 கோடியாகவும், நிகர லாபம் 237 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

பொதுவாக உலோக துறையில் காணப்படும் உலகளாவிய தாக்கம், வருவாயில் காணப்படும் ஏற்ற-இறக்கம் டாட்டா மெட்டாலிக்ஸ் நிறுவனத்திற்கும் பொருந்தும். நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) மார்ச் 2022 முடிவில் ரூ.1,494 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) நன்றாக உள்ளது. 

கடந்த ஐந்து வருட காலத்தில் டாட்டா மெட்டாலிக்ஸ் நிறுவனத்தின் வருவாய் 14 சதவீதமாகவும், நிகர லாபம் 13 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் 23 சதவீதமும், பத்து வருட காலத்தில் 27 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 30 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது கவனிக்கத்தக்கது. 

நிறுவனத்தின் விற்பனைக்கும், பங்கு விலைக்குமான இடைவெளி(Price to Sales) 0.82 மடங்காகவும், வருவாய்க்கும், பங்கு விலைக்குமான இடைவெளி(P/E) 19 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்தின் கடன் 148 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

        

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை – சிறு பார்வை

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை – சிறு பார்வை 

India’s Balance of Trade – Trade Deficit July 2022

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த ஜூலை மாதத்தின் முடிவில் 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. நாட்டின் இறக்குமதி 43 சதவீதம் அதிகரித்தும், ஏற்றுமதி 2.5 சதவீதம் அதிகரித்தும் காணப்படுகிறது. ஏற்றுமதியின் அளவு 66.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும், இறக்குமதி அளவு 36.27 பில்லியன் அமெரிக்க டாலர்களாவும் இருந்துள்ளது.

பொதுவாக, ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளியே வர்த்தக பற்றாக்குறையாக சொல்லப்படுகிறது. கனிம எரிபொருட்கள், எண்ணெய், இரும்பு மற்றும் எஃகு, முத்துக்கள், விலையுயர்ந்த கற்கள், நகைகள் ஆகியவற்றை நாம் பெரும்பாலும் இறக்குமதியாக கொண்டிருக்கிறோம். ஏற்றுமதியில் பெட்ரோலிய பொருட்கள், ஆபரணங்கள், வாகனங்கள், தானியங்கள், இயந்திரங்கள், மருந்துகள் மற்றும் ரசாயனங்களை அதிகமாக கொண்டுள்ளோம்.

இறக்குமதியில் நாம் பெரும்பாலும் சீனாவிடமிருந்து தான் பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுகிறோம். 2021ம் ஆண்டில் நாட்டின் இறக்குமதியில் சீனாவின் பங்களிப்பு 16 சதவீதமாகவும், ஐக்கிய அரபு நாட்டிலிருந்து 7.6 சதவீதமும் மற்றும் அமெரிக்காவில் 7.3 சதவீதத்தையும் கொண்டுள்ளோம். சீனாவின் பங்களிப்பு மட்டும் சுமார் 87.50 பில்லியன் அமெரிக்க டாலர்கள். சீனாவிடமிருந்து மின் மற்றும் மின்னணு உபகரணங்கள், இயந்திரங்கள், கொதிகலன்கள், அணு உலை, ரசாயனம், பிளாஸ்டிக் மற்றும் உரங்களை பெறுகிறோம்.

ஏற்றுமதியில் நாம் அமெரிக்காவிற்கு அதிகமாக அனுப்பி கொண்டிருக்கிறோம். நாட்டின் ஏற்றுமதி பங்களிப்பில் அமெரிக்கா 18 சதவீதம், ஐக்கிய அரபு நாடு 6.5 சதவீதம் மற்றும் சீனா 5.9 சதவீதமாக இருந்துள்ளது. முத்துக்கள் விலையுயர்ந்த கற்கள், உலோகங்கள், நாணயங்கள், மருந்துகள் மற்றும் துணிமணிகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். 

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி 121 பில்லியன் அமெரிக்க டாலர்களும், இறக்குமதி 190 பில்லியன் டாலர்களாகவும் உள்ளது. இது கடந்த வருடத்தின் முதல் காலாண்டை ஒப்பிடுகையில், ஏற்றுமதி 26.82 சதவீதமும், இறக்குமதி 49.76 சதவீதமுமாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதியின் அளவு உயர்ந்து வருவது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா 2022 –  அடுத்து என்ன ?

பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த அமெரிக்கா 2022 –  அடுத்து என்ன ?

US enters into Technical Recession – Things to know

ஜூன் மாதத்தில் வல்லரசான அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்க விகிதம் 9.1 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த நாற்பது வருடங்களில் இல்லாத அளவாக கருதப்படுகிறது. எரிபொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களின் விலை அதிகரித்ததால் சொல்லப்பட்ட பணவீக்க உயர்வு ஏற்பட்டுள்ளது. 

எரிவாயு (Gasoline) விலை 60 சதவீதம் உயர்ந்தும், எரிபொருட்களின் எண்ணெய்(Fuel oil) 99 சதவீதமும், மின்சாரம் 14 சதவீதம் என்ற அளவிலும் ஜூன் மாதத்தில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் 10.4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 

நடப்பாண்டின் முதலாம் காலாண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(Q1 GDP 2022: -1.6 %) ஆக இருந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் (-0.9) சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பது உறுதியாகியுள்ளது.

2020ம் ஆண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு பின்பு மீண்டும் மந்தநிலைக்கு அமெரிக்கா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் அமெரிக்க நாட்டின் வளர்ச்சி 0.5 சதவீதமாக இருக்கும் என பெரும்பாலான பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது  பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பொருளாதார மந்தநிலைக்கு காரணமாக வீட்டுமனை முதலீடும் குறைந்திருப்பது ஒரு காரணியாக சொல்லப்படுகிறது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதம், உக்ரைன்- ரசிய போர் இவற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், நாட்டின் ஏற்றுமதி கடந்த இரண்டு வருடங்களில் இல்லாத அளவு  வளர்ச்சியை பெற்றுள்ளது.

நடப்பு ஜூலை மாதம் நடைபெற்ற அமெரிக்க மத்திய வங்கி(US Fed) அறிக்கையில் வட்டி விகிதம் 75 புள்ளிகளாக அதிகரிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு, தொடர்ச்சியாக நான்காவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூலை மாத அறிக்கையின் படி, வட்டி விகிதம் 2.25 சதவீதம் முதல் 2.5 சதவீதம் வரை உள்ளது. 

அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடப்பு நிதியாண்டில் மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். 2023ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் வட்டி விகிதம் 3.5% – 3.8% என்ற அளவில் இருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது. 

எனவே அடுத்து வரும் மாதங்களில் மீண்டுமொரு வட்டி விகித உயர்வை எதிர்பார்க்கலாம். பணவீக்க அதிகரிப்பு மற்றும் அதன் காரணமாக ஏற்படக்கூடிய வட்டி விகித உயர்வு ஆகியவை தொழில் நிறுவனங்களின் வருவாயை பாதிக்கலாம். மக்களிடையே ஏற்பட்டுள்ள நுகர்வு தன்மை தேக்கம் மேலும் சில மாதங்கள் தொடரலாம். 

விநியோக சங்கிலியில்(Supply Chain) ஏற்பட்டுள்ள சிக்கல் இன்னும் தீர்வு காணப்படாத நிலையில், உக்ரைன் – ரசிய போர் நீடிக்கும் வரை, உலக பொருளாதார மந்தநிலையை தொடர செய்யும். கொரோனா காலத்தில் சந்தையை மீட்டெடுக்க செய்யப்பட்ட அதிகப்படியான பொருளாதார ஊக்குவிப்பு, இப்போது பணவீக்க அதிகரிப்பில் காணப்படுகிறது. எனினும், இது பொருளாதாரவியலில் அடிப்படையான ஒன்று தான். 

வரக்கூடிய வாரங்களில் டாலருக்கு நிகரான மற்ற நாணயங்களின் மதிப்பு அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படலாம். வட்டி விகித அதிகரிப்பின் தாக்கம் நிறுவனங்களின் வருவாயில் வெளிப்படுவதற்கு இன்னும் சில மாதங்கள் அல்லது காலாண்டுகள் தேவைப்படலாம். நடப்பாண்டில் ஜூலை மாதம் வரையிலான காலத்தில் நல்ல வருவாயை அளித்த பங்குச்சந்தையாக இந்தோனேசிய சந்தையும், மோசமான இழப்பை ஏற்படுத்திய சந்தையாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் உள்ளன.

சொல்லப்பட்ட காலத்தில் இந்தோனேசிய ஜகார்த்தா குறியீடு 3 சதவீதமும், கடந்த ஒரு வருட காலத்தில் 13 சதவீதமும் ஏற்றமடைந்துள்ளது. இதுவே இந்திய நிப்டி 500 குறியீடு நடப்பு வருடத்தில் 5 சதவீத வீழ்ச்சியையும், கடந்த ஒரு வருடத்தில் 5 சதவீதம் ஏற்றமும் அடைந்துள்ளது.

2022ம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலத்தில் வளர்ந்த சந்தைகள் முறையே அமெரிக்க எஸ் & பி 500 (-18%), ஐரோப்பிய STXE (-14%), சீன CSI 500 (-14%) மற்றும் ஆஸ்திரேலிய ASX 200 (-9%) வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பங்குச்சந்தை தற்போது ஏற்றம் பெற்று வந்தாலும், இதற்கான பொருளாதார காரணிகள் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை. எனவே, நீண்டகாலம் முதலீடு செய்பவர்கள் இது சார்ந்த கவலையை விட்டு விடலாம். கடனில்லா(Debt Free) நல்ல நிறுவனங்களின் பங்குகளை ஆராய்ந்து சிறுகச்சிறுக முதலீடு செய்து வரலாம். குறுகிய காலத்தில் சந்தை அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படும் நிலையில், பண இழப்பை தவிர்ப்பது நன்று.

தொடர்ச்சியாக இரு காலாண்டுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியை சந்தித்தாலும், அவை பொருளாதார வீழ்ச்சியாக எடுத்து கொள்ளப்பட மாட்டாது என்ற விவாதமும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com