வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 3

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 3

Personal Finance – Survey / Polling

 

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இரண்டாம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ்(காப்பீடு) என்ற திட்டம் மட்டுமே உள்ளது ?

 

விடை:       இல்லை

 

விளக்கம்:  வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் என்ற திட்டத்தை தவிர பல வழிகளில் நாம் வரி சேமிப்பினை பெறலாம். வருமான வரிச்சட்டம் பிரிவுகள் 80C, 80D, 80E, 80G, 80U மற்றும் மேலும் பல வகைகளில் வருமான வரியை சேமிக்கலாம். வரி சேமிப்பை அறிய,

 

வருமான வரி சேமிப்பு வழிகள்

 

வருமான வரி சேமிப்பிற்கு காப்பீடு திட்டத்தை மட்டுமே பயன்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல.

  • நமது நாட்டில் தங்கத்தின் விலை மதிப்பு எதனை சார்ந்து மாறுகிறது ?

 

விடை: டாலர் மதிப்பு (Dollar)

 

விளக்கம்: பொதுவாக ஒரு நாட்டில் உள்ள நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்கு, உற்பத்தி மற்றும் தேவைக்கு உள்ள இடைவெளியே(Demand-Supply) அதன் விலை மதிப்பை நிர்ணயிக்கும். உற்பத்தி பெருகி தேவை குறைந்திருப்பின், பொருள் அல்லது சேவைக்கான விலை குறைவாகவே இருக்கும். மாறாக தேவைகள் அதிகமாகவும், அதற்கான உற்பத்தி குறைவாக இருக்கும்பட்சத்தில் விலைத்தன்மை அதிகமாக இருக்கும்.

 

நம் நாட்டில் தங்கத்தின் தேவை இறக்குமதி மூலமாக(Gold Imports) தான் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆகையால் உற்பத்தி என்பது நம் நாட்டை சார்ந்ததல்ல. விழாக்காலங்களில் நகைக்கடைகளில் தங்கம் விலை அதிகமாக இருக்கும் என்பது உள்ளூர் சந்தையில் ஆபரண தங்கத்தின் விலை மதிப்பு அதிகரிப்பதையே காட்டுகிறது. மாறாக தங்கம் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதும், அதன் மதிப்பு அமெரிக்க டாலர்களில் தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை பொறுத்தே தங்கத்தின் விலையும் பெறப்படும். ஆக தங்கத்தின் விலை தினமும் மாற்றம் பெறுவது பெரும்பாலும் டாலர் மதிப்பின் மாற்றமே.

 

  • பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) ஒன்றா ?

 

விடை: இல்லை

 

விளக்கம்: பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும் வெவ்வேறானவை. பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் பரஸ்பர நிதி திட்டங்களில்(Mutual Fund Schemes) உள்ளன. ஆனால் பரஸ்பர நிதிகளில் உள்ள அனைத்து முதலீட்டு வகைகளும் பங்குச்சந்தையில் நாம் காண முடிவதில்லை. இரண்டுமே செபி(SEBI) என்ற ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்டாலும், அதற்கான வழிமுறைகள் வேறுபாடுகள் கொண்டவை.

 

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை திரட்ட பொதுவெளியில் வருகின்றன. நிறுவனத்தின் வருவாயும், நிர்வாக திறனும் ஒரு முதலீட்டாளராக கவனிக்க வேண்டியது அவசியம். நாம் வாங்கிய பங்குகளின் நிறுவனம் சரியில்லை என்றால், நமது முதலீட்டிற்கு ரிஸ்க் அதிகம் தான். ஆதலால் தான் பங்குச்சந்தை ஒரு தொழில் சார்ந்த விஷயம் என்கிறோம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பரஸ்பர நிதிகள் என்பது டிரஸ்ட்(Sponsor or Trust) என்று சொல்லக்கூடிய அறக்கட்டளை அமைப்பு முறையில் இயங்கி வருவது. பரஸ்பர நிதிகளுக்கு பொதுவாக பங்குச்சந்தை நிறுவனங்கள் போன்று எந்த முதலீடும் தேவையில்லை. பரஸ்பர நிதிகள் வங்கிகள் போன்ற செயல்பாட்டு முறையை கொண்டிருக்கிறது. பரஸ்பர நிதிகளில் நீங்கள் சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, ஆர்.டி. டெபாசிட்(Recurring Deposit), கடன் பத்திரங்கள், தங்கத்தில் முதலீடு, ரியல் எஸ்டேட் முதலீடு, அரசாங்க பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த  முதலீடுகள் என பல வகை திட்டங்களை காணலாம்.

 

இங்கே சேமிப்பு கணக்கு என்பது லிக்விட் பண்ட்(Savings -Liquid Fund) எனவும், வைப்பு நிதி என்பது Lumpsum முதலீடு எனவும், ஆர்.டி. முறை SIP(Systematic Investment Plan) முதலீடு எனவும் பெயர் மாற்றம் பெறுகிறது, அவ்வளவே. வங்கி சேமிப்புகள் பாதுகாப்பானவை  என நாம் நினைத்தால், பரஸ்பர நிதி திட்டங்களும் பாதுகாப்பானவை தான், திட்டங்களை சரியாக தேர்ந்தெடுப்பது அவசியம்.

  • நிதி சார்ந்த கல்வியினை பெற நீங்கள் எவ்வளவு தொகையை செலவிட தயாராக உள்ளீர்கள் ?

விளக்கம்: நம் நாட்டில் சேமிப்பு என்ற பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்தாலும், முதலீடு என்ற சாதனத்தில் சிலர் மட்டுமே பங்குபெறுவது வருந்தத்தக்க விஷயம். உண்மையில் நாம் சொல்லும் வளர்ந்த நாடுகளில் வேலை வாய்ப்புகளோ, பணக்காரர்களோ அதிகமில்லை. மாறாக அங்கே தொழில் சார்ந்த விஷயங்களும், முதலீடு பற்றிய விழிப்புணர்வும் தான் தாக்கத்தை பெறுகிறது.

 

பொதுவாக நாம் முதலீடு செய்வதில் அக்கறை காட்டுவதில்லை என்றாலும், மிகவும் ரிஸ்க் எடுக்கும் தன்மை நம்மிடம் உள்ளது எனலாம். இன்றும் போன்சி திட்டங்கள்(Ponzi Schemes) என்னும் சதுரங்க வேட்டைகள், தங்க முதலீடு(Gold Scam), பிட் காயின்(Bitcoin) முதலீடு, இன்னும் நமக்கு தெரியாத என்னென்னவோ விஷயங்களை செய்து வருகிறோம். பின்பு சில காலங்களுக்கு அவை மறைந்து விடும். நம்மிடம் உள்ள குறுகிய கால அணுகுமுறை தான் நம்மை தவறான வழிகளில் பணத்தை முதலீடு செய்ய முனைகிறது. பெரும்பாலும் நாம் ஏமாற்றப்படுவது நம்முடைய பணத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் தான். புரிந்து கொள்ளுங்கள், வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகளில் உங்கள் பணம் இரட்டிப்பாக பத்து வருடங்களாகும். பங்குச்சந்தை மற்றும் தொழில்களில் நீங்கள் முதலீடு செய்தாலும் உங்கள் பணம் ஐந்து முதல் ஆறு வருடங்களுக்கு பின்னரே இரண்டு மடங்காகும். பங்குச்சந்தையில் நீண்டகால சராசரி வருமானம் 12-15 சதவீதம் மட்டுமே என்பதை மறந்து விடாதீர்கள்.

 

அப்படியிருக்க, போன்சி திட்டங்கள் என்றும் சொல்லப்படும் ஏமாற்று முறைகளில் ஒரு வருடம் முதல் மூன்று வருடங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாவது எவ்வாறு சாத்தியம் என்பதை சிந்தியுங்கள். உண்மையில் அப்படி ஒரு முதலீடு இருந்திருந்தால், ஏன் நம் நாட்டின் அம்பானியும், அதானியும், டாடா மற்றும் டி.வி.எஸ். நிறுவனமும் காலங்காலமாக தொழில் புரிய வேண்டும். அவர்களிடம் இல்லாத பணமா, முதலீடு செய்வதற்கு. அவர்கள் நினைத்திருந்தால் இது போன்ற ஏமாற்று திட்டங்களில் முதலீடு செய்து பல்லாயிரம் கோடிகளை பல மடங்காக மாற்றியிருக்கலாமே. மீண்டும் சிந்தியுங்கள்.

 

நாம் கற்ற கல்வி நமக்கு பல வருடங்களுக்கு பிறகே அதன் பயனை தருகிறது. நாம் நமக்கான கல்விக்கு செலவழித்த பணத்தை திரும்ப பெற, நம்மால் உடனே முடிவதில்லை. நமது மேற்படிப்பு கல்வி மூன்று முதல் ஐந்து ஆண்டு காலம் வரை உள்ளன. பின்பு நாம் அந்த துறையில் புதிய மனிதராக வேலை செய்கிறோம். ஐந்து வருட அனுபவத்திற்கு பிறகே நம்மால் அந்த துறையை பற்றிய ஒரு புரிதல் வருகிறது. அப்படியிருக்க முதலீடு என்ற விஷயத்திற்குள் நாம் நுழையும் போது, நாம் அதற்கான கல்வியை கற்கிறோமா, முதலீட்டை கற்று கொள்வதற்கு எவ்வளவு நேரத்தை செலவிடுகிறோம், அதற்கான செலவின விகிதம் ஆகியவை மிகவும் அவசியமான ஒன்று.

 

பொறியியல் படிப்பு முதல் மருத்துவ படிப்பு வரையிலான கல்விச்செலவை நாம் திரும்ப பெற, பல வருட காலங்களாகும்.

 

  • பங்குச்சந்தை(Share Market) ஒரு ___________ ?

 

விடை: தொழில்

 

விளக்கம்: பங்குச்சந்தை என்பது ஒரு சூதாட்டம் என்று சொல்லிக்கொண்டாலும், அது ஒரு தொழில் சார்ந்த விஷயமே. ஏன், பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள், ஏழைகள் ஏழைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு திரு. ராபர்ட் கியோசகி(Robert Kiyosaki) அவர்களின், ‘ பணக்கார தந்தை, ஏழை தந்தை ‘ புத்தகமே சிறந்த உதாரணம்.

 

பணத்தை பற்றிய நமது கல்வி தான் பெரும்பாலும் நமது நிதி வாழ்க்கையையும் நிர்ணயிக்கிறது. ஐந்தாம் வகுப்பை தாண்டாத ஒருவர் மாபெரும் தொழிலதிபராக வருவதும், மெத்தபடித்தவர் வாழ்நாள் முழுவதும் வேலை செய்வதும் இதன் பின்னணியில் தான். பணம் மட்டுமே நம் வாழ்க்கையில்லை என நாம் சொல்லிக்கொண்டாலும், அதன் பின்பு தான் நாம் வாழ்நாள் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறோம். மாறாக, பணத்தை நிர்வகிக்க தெரிந்தவர்கள் உண்மையில் தங்களுக்கு தேவையான விஷயங்களை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களை மகிழ்வாகவும் வைத்து கொள்கிறது.

 

ஒரு மரக்கன்றை தண்ணீர் ஊற்றி, அதனை பாதுகாத்து மரமாக்க பல வருடங்கள் ஆகும். இதனை போன்று தான் ஒரு தொழிலும், பங்குச்சந்தையும். உண்மையில் பங்குச்சந்தையிலும், எந்தவொரு தொழிலிலும் குறுகிய காலத்தில் நாம் வேகமாக வளர்ந்ததாக வரலாறு சொல்லவில்லை. அது நீண்டகால பயணம் மட்டுமே. ஒரு துறையை பற்றி நாம் எந்த அடிப்படை விஷயங்களையும் கற்காமல், அதனை பற்றிய கருத்துக்கு நாம் எப்படி செவிசாய்க்க முடியும்.

 

உங்கள் ஐந்து வயது குழந்தையின் இயல்பான குணம், போட்டிகளை எதிர்கொள்ளும் திறன் மற்றும் கல்வி அறிவை அதன் இருபது வயதில் எவ்வாறு இருக்கும் என உங்களால் இப்போதே உறுதியாக கணித்து சொல்ல முடியுமா ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

இந்த வார கேள்விகள்:

 

  1. நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். உங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம். உங்களது முதலீடு எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் ?
  2. நம் நாடு சுதந்திரம் பெற்ற வருடத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எவ்வளவு ?
  3. லிக்விட் பண்ட்(Liquid Fund)  ___________ ?
  4. உங்களுக்கான நிதி இலக்குகள்(Financial Goals) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?
  5. DICGC முறைப்படி உங்களது வங்கி சேமிப்பில் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது ?

 

குறிப்பு:

 

நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

 

Personal Finance – Survey 3

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

கடந்த 17 மாதங்களில் 76.48 லட்சம் பேர் புதிதாக வேலை பெற்றவர்கள் – இ.பி.எப்.ஓ. தகவல்

கடந்த 17 மாதங்களில் 76.48 லட்சம் பேர் புதிதாக  வேலை பெற்றவர்கள் – இ.பி.எப்.ஓ. தகவல்

76.48 Lakh New Jobs created in the last 17 Months – EPFO

நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளதாக சில மாதங்களுக்கு முன் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தரவு கூறியிருந்தது. தற்போது இதற்கு மாறாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் வேலைவாய்ப்பு சார்ந்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அவை கூறியதாவது, ‘ நாட்டில் கடந்த செப்டம்பர் 2017 முதல் நடப்பு வருட ஜனவரி மாதம் வரையிலான 17 மாதங்களில் 76.48 லட்சம் பேர் வேலை பெற்றவர்களாக உள்ளனர் ‘.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் அனைத்தும் அமைப்பு சார்ந்த துறையில்(Organized Sector) என்பதும் கவனிக்கத்தக்கது. வேலைகள் உருவாக்கப்பட்டதற்கு சான்றாக, சொல்லப்பட்ட 17 மாதங்களில் இ.பி.எப்.ஓ. நிறுவனத்திற்கு 76.48 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். நடப்பு வருடத்தின் ஜனவரி மாதத்தில் மட்டும் 8.96 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உருவாக்கப்பட்ட வேலைகளில் சுமார் 2.45 லட்சம் வேலைகள்(Created Jobs) 22-25 வயது பிரிவை சார்ந்தவர்கள், மேலும் 2.24 லட்சம் வேலைகள் 18 வயதிலிருந்து 21 வயது உள்ளவர்கள் ஆவர். இ.பி.எப்.ஓ.(Employees Provident Fund Organization) நிறுவனத்தில் இதுவரை இணைந்துள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஆறு கோடி நபர்களுக்கு மேலாக உள்ளது.

 

வேலையின்மையா அல்லது தொழில்முனைவா ? வேலையின்மை விகிதம்

சொல்லப்பட்ட 17 மாதங்களில் சுமார் 29 ஆயிரம் சந்தாதாரர்கள் இ.பி.எப்.ஓ. திட்டத்திலிருந்து வெளியேறி உள்ளனர். இவற்றில் தனியார் நிறுவனத்திலிருந்து விலகி சென்று அரசு பணியில் சேர்ந்தவர்களும் அடங்குவர். கடந்த வருடத்தின் முடிவில் 7.16 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும்(Employment) என்ற முந்தைய கணிப்பை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் பின்னர் அதனை 7.03 லட்சமாக மறுமதிப்பீடு செய்திருந்தது.

 

எந்தவொரு நிறுவனத்திலும் குறைந்தபட்சம் 20 தொழிலாளர்களை கொண்டிருக்கும் நிலையில், அந்த நிறுவனம் இ.பி.எப்.ஓ.(EPFO) திட்டத்துடன் இணைத்து கொள்ள வேண்டும். பின்னர் தனது தொழிலாளர்களின் வருவாயில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, நிறுவனத்தின் சார்பிலும் அதே அளவு தொகையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் தொழிலாளர்களின் நிதி சார்ந்த எதிர்காலம் பாதுகாப்பாக அமையும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டீர்களா ?

உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து விட்டீர்களா ?

Link your Aadhaar to your PAN – Before 31st March, 2019

 

நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இல்லாமல் இருந்தாலும், வருமான வரி தாக்கல் செய்திருக்கும் பட்சத்தில், சமீபத்தில் வருமான வரி துறையின் இணையத்தளத்தில் இருந்து உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கலாம். அதாவது உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு பற்றிய தகவல் தான் இந்த மின்னஞ்சலில் உள்ளது. மார்ச் 31, 2019 க்கு முன் உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்து விடுங்கள் என வருமான வரி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காத நிலையில், நீங்கள் வருங்காலத்தில் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. தற்போது நீங்கள் வருமான வரி செலுத்தக்கூடியவராக இல்லாமல் இருக்கலாம் அல்லது வருமான வரி தாக்கல் செய்ய தேவையில்லை என்ற நிலையில் இருந்தாலும், பான்-ஆதார் எண்களை இணைப்பது சிறந்தது.

 

பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு(Exempt from PAN-Aadhaar Linking) சில விதிவிலக்குகளும் உள்ளன. கீழ்க்கண்ட நபர்களுக்கு பான்-ஆதார் எண் இணைப்பது கட்டாயமில்லை,

 

  • அசாம், ஜம்மு காஷ்மீர் மற்றும் மேகாலயா மாநிலங்களில் குடியிருக்கும் தனி நபர்  
  • இந்திய குடிமகனாக (குடியிருப்பு) இல்லாத தனி நபர்கள்
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் (தனி நபர் – Non-resident Individual)
  • நாட்டில் குடியிருக்கும் 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்

 

மேற்சொன்ன நபர்கள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் பின்வரும் இணையதள முகவரிக்கு செல்லுங்கள். அங்கே இடது புறத்தில் ‘Link Aadhaar’ என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Income Tax India E Filing Website

 

பின்பு, உங்களுடைய பான்(PAN) மற்றும் ஆதார் எண்ணை(Aadhaar) பதிவிடுங்கள். ஆதார் கார்டில் உள்ளது போன்று உங்களது பெயரை இடுங்கள். பின்னர், உங்களது ஆதார் கார்டில் பிறந்த வருடம் மட்டும் இருக்கும்பட்சத்தில் அந்த தகவலையும் கொடுக்கப்பட்டுள்ள பட்டியில் பதிவிடுங்கள்.

How to link Aadhaar PAN

 

மற்றொரு முறையாக, ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கு நீங்கள் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ். -SMS) வாயிலாகவும் பயன்படுத்தலாம். கீழ்கண்டபடி உங்களது ஆதார் எண் மற்றும் பான் எண்ணை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

 

UIDPAN 123456789012 ABCDE1234A

 

UIDPAN என்ற எழுத்துக்கள் முன்வருமாறு இருக்க, உங்கள் ஆதார் மற்றும் பான் எண்களுக்கு இடையே இடைவெளி விட்டு கொள்ளுங்கள். குறுஞ்செய்தியை 567678 என்ற எண்ணுக்கு அனுப்பிய உடன், உங்களுக்கான ஒரு முறை கடவுச்சொல்(OTP) வரும். அதனை பதிவிட்ட உடன், உங்களுக்கான ஆதார்-பான் இணைப்பு வெற்றிகரமாக முடிவடையும்.

 

உங்களது பெயர் ஆதார் மற்றும் பான் அட்டைகளில் வெவ்வேறாக இருக்கும் போது அல்லது மாறுபடும் நிலையில்(Name Mismatch), உங்களது இணைப்பு முயற்சி ரத்து செய்யப்படும். அவ்வாறான நேரங்களில், நீங்கள் உங்கள் பெயரை ஆதார் அல்லது பான் அட்டைகளில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும்.

 

மறந்து விடாதீர்கள், பான் மற்றும் ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு(Deadline) வரும் மார்ச் 31ம் தேதிக்கு முன். 2018-19ம் மதிப்பீட்டு காலத்திற்கான(Assessment year) வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 31,மார்ச், 2019 (Filing Income Tax Return) என்பதை மறக்க வேண்டாம். இதற்கு முன்பு வருமான வரி தாக்கல் செய்து விட்டு, மின் சரிபார்ப்பு(E Verify) செய்யவில்லை என்றால், அதற்கான காலக்கெடுவும் மார்ச் 31, 2019.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வேகத்தை இழக்கும் விமான போக்குவரத்து – பிப்ரவரி மாதத்தில் 5.62 சதவீத வளர்ச்சி

வேகத்தை இழக்கும் விமான போக்குவரத்து – பிப்ரவரி மாதத்தில் 5.62 சதவீத வளர்ச்சி

Losing Momentum of Air Traffic in India – 5.62 percent growth in February 2019

 

நம் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வந்தாலும், விமான நிறுவனங்களின் வருவாய் குறிப்பிடும்படியாக இல்லை. நாட்டில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும் நிதி சிக்கலில் தவித்து கொண்டு தான் இருக்கின்றன. உள்ளூர் விமான சேவையில் கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 5.62 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

5.62 சதவீத வளர்ச்சி என்பது உள்ளூர் விமான போக்குவரத்து(Domestic) சேவையில் கடந்த ஐந்து வருட காலத்தில் காணப்படும் மிகக்குறைவான வளர்ச்சியாக கருதப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் உள்ளூர் விமான பயணிகளின் எண்ணிக்கை 1.13 கோடியாக இருந்துள்ளது.  இது இதற்கு முந்தைய காலத்தில் 1.07 கோடி பயணிகளாக இருந்தது கவனிக்கத்தக்கது.

 

இண்டிகோ(Indigo -Interglobe Aviation) விமான நிறுவனம் பயணிகள் போக்குவரத்து சேவையில் 15 சதவீத வளர்ச்சியுடன் 49.31 லட்சம் பயணிகளை(Passenger Traffic) கொண்டிருந்தது. ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் முறையே 15.58 லட்சம் மற்றும் 12.92 லட்சம் பயணிகளை கொண்டிருந்தது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 17 சதவீத வளர்ச்சியையும், அதே நேரத்தில் திவால் நிலையில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அதன் பயணிகளின் எண்ணிக்கையில் 28 சதவீத வீழ்ச்சியை கண்டது.

 

கடந்த மாதத்தில் விமான சேவையின் வளர்ச்சி குறைந்து இருப்பதற்கு விமான நிறுவனங்களின் நிதி சிக்கல், பைலட் பற்றாக்குறை மற்றும் நோட்டம்(NOTAM) ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது. விமான சேவையை ரத்து செய்த முறையில் ஏர் இந்தியா நிறுவனம்(Air India) 8.15 சதவீத பங்களிப்பையும், ஏர் ஏசியா(Air Asia) மற்றும் ஜெட் ஏர்வேஸ் முறையே 2.4 மற்றும் 2.3 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

 

சரியான நேரத்தில் விமானத்தை இயக்கிய முறையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. சராசரியாக இருக்கையை நிரப்பும் பணியிலும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 94 சதவீதத்தை பதிவிட்டு உள்ளன. பிப்ரவரி மாதத்தில் இந்திய விமான போக்குவரத்து சேவையில் ஸ்பைஸ் ஜெட்(Spice Jet) நிறுவனம் முதன்முறையாக, இண்டிகோ நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தது.

 

இண்டிகோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 43 சதவீதமும், ஸ்பைஸ் ஜெட் 13 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளன. இவை இரண்டும் டாட்டா நிறுவனத்தின் விமான சேவை நிறுவனங்கள் ஆகும். கடனில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ்(Jet Airways) விமான நிறுவனம் கடந்த மாதத்தில் மட்டும் 19 விமானங்களை தரையிறக்கம்(Grounded aircraft) செய்தது. இதன் மூலம் அதன் பயணிகள் எண்ணிக்கையிலும் 28 சதவீத வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

120 கோடி தொலைபேசி வாடிக்கையாளர்கள் – ஜியோவின் அதிரடி சாம்ராஜ்யம்

120 கோடி தொலைபேசி வாடிக்கையாளர்கள் – ஜியோவின் அதிரடி சாம்ராஜ்யம்

1200 Million Telephone Subscribers in India – Reliance Jio’s Action Empire

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வில் ஆரம்பித்த ரிலையன்ஸ் ஜியோவின் வேகம் இன்று நாடு முழுவதும் அதன் அதிரடி சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்திய தொலைத்தொடர்பு துறை ஆணையம்(Telecom Regulatory Authority of India -TRAI) வெளியிட்ட தகவலில் நாட்டில் உள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜனவரி 2019ம் காலத்தின் படி, 120.3 கோடியாகும். இது கடந்த வருடம் டிசம்பர் மாத முடிவில் 119.7 கோடி சந்தாதாரர்களை கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டில் உள்ள மொத்த தொலைபேசி வாடிக்கையாளர்களின்(Telephone Subscribers) எண்ணிக்கை 120 கோடி என்ற அளவை தற்போது மூன்றாவது முறையாக கடந்துள்ளது. இதற்கு முன் ஜூலை 2017 மற்றும் மே 2018 காலங்களில் 120 கோடி சந்தாதாரர்கள் என்ற எண்ணிக்கையை கடந்து இருந்தது. வாடிக்கையாளர்களின் அதிகரிப்பில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல்(Airtel) மற்றும் பி.எஸ்.என்.எல்.(BSNL) ஆகிய நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

 

ரிலையன்ஸ் ஜியோ(Reliance Jio) நிறுவனம் புதிதாக 93 லட்சம் சந்தாதாரர்களை ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 9.82 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக பெற்றுள்ளது. டிசம்பர் மாதத்தில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல் நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு லட்சம் புதிய சந்தாதாரர்களை சேர்த்துள்ளது.

 

சொல்லப்பட்ட மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரித்த நிலையில், வோடபோன் ஐடியா(Vodafone Idea) மற்றும் டாடா டெலிசர்வீஸ் நிறுவனங்கள் மொத்தமாக 44 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எம்.டி.என்.எல். நிறுவனமும் சுமார் 4900 சந்தாதாரர்களை ஜனவரி மாதத்தில் இழந்துள்ளது.

 

பிராட்பேண்ட் சேவையில்(Broadband Internet Services) ஜியோ நிறுவனம் 28.94 கோடி சந்தாதாரர்களையும், ஏர்டெல் 11 கோடி சந்தாதாரர்களையும் மற்றும் வோடபோன் ஐடியா 10.98 கோடியும், பி.எஸ்.என்.எல். நிறுவனம் 2 கோடி சந்தாதாரர்களையும் ஜனவரி மாதத்தில் கொண்டுள்ளது. கம்பி வழியிலான(Wireline) தொலைத்தொடர்பு இணைப்பில் டிசம்பர் மாதத்தில் 2.18 கோடி என்றிருந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரி மாத காலத்தில் 2.17 கோடியாக குறைந்தது.

 

கம்பி வழியிலான பிராட்பேண்ட் சேவையில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் முன்னணியில் உள்ளது. இதன் ஜனவரி மாத சந்தாதாரர்கள் எண்ணிக்கை 91.7 லட்சமாக உள்ளது. இந்த துறையில் ஏர்டெல் 23 லட்சம் இணைப்பையும், ஹாத்வே கேபிள் நிறுவனம்(ரிலையன்ஸ்) 7.9 லட்சமும், எம்.டி.என்.எல். 7.7 லட்சமும் மற்றும் அட்ரியா(Atria Convergence -ACT) நிறுவனம் 14 லட்ச இணைப்பையும் கொண்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் திட்டம் மட்டுமே என்ற மாயை

வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் திட்டம் மட்டுமே என்ற மாயை

Insurance Scheme alone does not help to save the tax

மார்ச் மாதம் வந்தவுடன் வருமான வரி செலுத்துவோருக்கு ஏதோ செலவுகள் இருப்பது போலவும், இன்சூரன்ஸ் ஏஜெண்ட்களுக்கு புதிய பாலிசிகள் அதிகமாக கிடைக்கும் காலமாகவும் பார்க்கப்படுகிறது. உண்மை அதுவல்ல, நாம் இங்கு யாரையும் குறைகூற விரும்பவில்லை. வருமான வரி செலுத்துபவர்கள் தங்களின் வரி சலுகையை பெற அவசரகதியில் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நோக்கி ஓடி செல்வதே இதற்கு காரணம்.

வருமான வரி செலுத்துபவருக்கு ஒரு நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரை நேரம் இருக்கும் போது, நாம் ஏன் காப்பீடு திட்டங்களை அவசரமாக வாங்கி செல்ல வேண்டும். நமது மாத ஊதியம் எப்போது நமக்கு வரவு வைக்கப்படும் என்பது நமக்கு தெரியும். நமது ஊதிய உயர்வு ஒரு ஆண்டின் எந்த மாதத்தில் தரப்படலாம் என்பதும் நமக்கு அறிந்ததாக தான் இருக்கும். அப்படியிருக்கும் போது, நாம் ஒரு வருடத்தில் பெறப்போகும் வருமானத்தின் மதிப்பு தோராயமாக நமக்கு தெரிய வரும். நாம் இது போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டாலே, வரும் காலத்தில் நமது வருமான வரி என்ன என்பதை நாமே கணக்கிட்டு கொள்ளலாம்.

வருமான வரி செலுத்தக்கூடிய நபராக நாம் மாறும் போதே, வரி சலுகையை பெறுவதற்கான வாய்ப்புகளை நாம் கண்டறிவது, நமக்கான சிறந்த சேமிப்பாக இருக்கும். வருமான வரியை நாம் வேலை பார்க்கும் நிறுவனம் பிடித்தம் செய்து விட்டது, அரசாங்கம் வரி கொள்ளையில் ஈடுபடுகிறது என்று சொல்லிக்கொண்டே நாம் நமக்கு தேவையில்லாத வரிச்சலுகை தரும் திட்டங்கள் என்று சில செலவுகளை செய்து வருகிறோம். வருமான வரி சலுகைக்கு நம்மில் பெரும்பாலோர் நம்பி கொண்டிருப்பது காப்பீடு திட்டம்(Insurance Schemes for Tax Saving) தான்.

காப்பீடு திட்டம் மட்டுமே வருமான வரி சலுகைக்கு உதவும் என்பது நம்மிடம் உள்ள தவறான அணுகுமுறை. நாம் ஏற்கனவே சொன்னது போல, காப்பீடு என்பது நமக்கு ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து நமது குடும்பத்தை நிதிச்சிக்கலில் இருந்து பாதுகாக்க உதவும் ஒரு சாதனமே. ஆம், காப்பீட்டு திட்டங்களை கொண்டு நாம் வரியை சேமிக்கலாம். காப்பீடு திட்டத்திலும் சிறிதளவு சேமிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு திட்டங்கள் நமக்கான பாதுகாப்பு அம்சமாகவே நாம் காண வேண்டும். மாறாக அவற்றை ஒரு முதலீடாகவோ, வரி சேமிப்பாகவோ நாம் காண ஆரம்பித்தால் நமக்கு செலவு தான் ஏற்படும்.

சரி காப்பீடு திட்டம் மட்டுமே வரி சலுகைக்கு இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். வேறு என்ன வரி சேமிப்பு திட்டங்கள் உள்ளன ?

  • 80C, 80CCC, 80CCD (Income Tax Act) பிரிவின் கீழ்  – ஆயுள் காப்பீடு, வரி சேமிப்பு பத்திரங்கள், 5 வருட வங்கி வைப்பு நிதிகள், இ.எல்.எஸ்.எஸ்.(ELSS) மியூச்சுவல் பண்டு திட்டங்கள், செல்வ மகள் சேமிப்பு திட்டம், பி.எப்., பொது வருங்கால வைப்பு நிதி(PPF), மூத்த குடிமக்கள் திட்டம், தேசிய பென்ஷன் திட்டம்(NPS), ராஜிவ் காந்தி சேமிப்பு திட்டம், வீட்டு கடன் அசலை திரும்ப செலுத்துதல்
  • 80 D – மருத்துவ காப்பீடு மற்றும் செலவுகள்
  • 80DD & 80U – மாற்று திறனாளிகளுக்கான சலுகை
  • 80DDB – குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை
  • 80E – கல்வி கடனுக்கான வட்டியை செலுத்தும் போது வரி சலுகை
  • 80EE – முதன்முறையாக சொந்த வீட்டை கொண்டவர்களுக்கு வீட்டுக்கடன் வட்டியில் வரி சலுகை
  • 80G – நன்கொடை மற்றும் நிவாரண நிதி அளிக்கும் போது
  • 80GG – வீட்டு வாடகையில் சலுகை
  • 80TTA – சேமிப்பு கணக்கு வட்டி வருமானத்திற்கு
  • Section 24 – வீட்டு கடன் வட்டியில் வரி சேமிப்பு

இது போக மற்ற வருமான வரி சட்ட பிரிவுகளிலும் வரி சலுகைகள் அனுமதிக்கப்படுகின்றன. வரி சேமிப்பு திட்டங்களை நாம் வரி சலுகைக்காக மட்டும் பெறாமல், நமக்கான முதலீட்டு வாய்ப்பாகவும் ஏற்படுத்தி கொள்வது, வருமானத்தை அதிகரிக்க உதவும். கடைசி நேர வரி சலுகை முதலீடு பயன் தராது. உங்களது வரி சேமிப்பு திட்டங்களை நிதியாண்டின் தொடக்கத்திலே துவங்க முனையுங்கள். வரி சேமிப்பு திட்டங்களை நீண்ட காலத்தில் பயன்படுத்தும் போது, அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் நன்றாக அமையும்.

காப்பீட்டு திட்டத்தை யார் தவிர்க்கலாம் ? (Who can avoid Insurance ?)

நமக்கான காப்பீடு தொகையை எவ்வாறு கணக்கிடுவது ?

இன்றும் பி.எப்., பி.பி.எப்.(Public Provident Fund) மற்றும் செல்வ மகள்(Sukanya Samriddhi) திட்டங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். இது போன்ற வரி சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானவை மட்டுமல்ல, தொடர்ச்சியான வட்டி விகிதத்தை கொடுக்க கூடியவை. வாழ்க்கை மாற்றங்களுக்கு தகுந்தாற் போல, நோய்களுக்கும் பஞ்சமில்லை. 80D(Medical Insurance) பிரிவை நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதில்லை. எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்காக காப்பீட்டு தொகையுடன், வரி சேமிப்பையும் ஏற்படுத்தலாம். பரஸ்பர நிதிகள் அளிக்கும் இ.எல்.எஸ்.எஸ்.(Equity linked savings scheme) திட்டங்கள் வரி சலுகையாக மட்டும் செயல்படாமல், பணவீக்கத்தை தாண்டிய நல்ல வருமானத்தை தரக்கூடியதாக உள்ளது. இனி, வரி சலுகைக்கு காப்பீடு திட்டங்களை மட்டுமே நம்பியிருக்காமல் உங்களுக்கு கிடைக்கும் அனைத்து வரி சலுகையையும் பயன்படுத்துங்கள், வருமான வரியை சாமர்த்தியமாக சேமியுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

அனில் அம்பானியின் காலக்கெடு – சரிவான வரலாறு

அனில் அம்பானியின் காலக்கெடு – சரிவான வரலாறு

Anil Ambani’s Time line – The Narrow history of Reliance ADAG – Reliance Communication

 

பணக்காரர்களின் தொழில் வாழ்க்கை நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் கதையாக இருந்தாலும், அவர்களின் தொழில் தோல்விகள் ஒவ்வொருவருக்கும் வரலாற்று பாடமாகவே அமைந்துள்ளது. தொழிற்துறையில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கும் நிறுவனங்கள் வெகு சிலவென்றே என சொல்லலாம். ஆனால் பின்னாளில் சறுக்கும் நிறுவனங்களே தற்போதைய காலகட்டத்தில் அதிகமாக உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தொழிலில் போட்டி மற்றும் புதுமையான விஷயங்களை தக்க வைத்து கொள்ளாதது தான் பெரும்பாலான தொழில் தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ரிலையன்ஸ்(Reliance) என்ற மாபெரும் நம்பிக்கையை உருவாக்கியவர் திருபாய் அம்பானி அவர்கள். அவரது காலத்திற்கு பின்பு, மைந்தர்களின் பங்களிப்பு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தேவைப்பட்டது. அனைத்து குடும்பங்களில் ஏற்படும் சிக்கல் தான் ரிலையன்ஸ் நிறுவன குடும்பத்திற்கும்.

 

திருபாய் அம்பானியின் பிள்ளைகள் முகேஷ் மற்றும் அனில் ஆகிய இருவரும் தங்களுக்கான தொழிலை பிரித்து கொண்டனர். உலக பணக்காரர்கள்  வரிசையில்முன்னணி வகித்த அம்பானி சகோதரர்கள் முதல் சமீபத்திய ஜியோ புரட்சி(JIO) மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் திவால் வரை இவர்களது தொழில் வரலாறு நீண்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் முகேஷ் அம்பானியால் துவங்கப்பட்டாலும், பின்னாளில் முகேஷ் தனது தந்தையின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை நிர்வகிக்க சென்றார்.

 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் அனில் அம்பானியிடம் சென்றது, பின்பு அனில் திருபாய் அம்பானி குழுமம்(Reliance ADAG) உருவாக்கப்பட்டது. 2002ம் வருடம் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் இன்போகாம்(Reliance Infocomm) என்ற நிறுவனம் தான் பிறகு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் என மாற்றம் செய்யப்பட்டது. தொலைத்தொடர்பு துறையில் சி.டி.எம்.ஏ.(CDMA) என்ற தொழில்நுட்ப புரட்சியை கொண்டு வந்த ஆர்.காம்(Rcom) நிறுவனம், 2010ம் ஆண்டில் 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்காக 5860 கோடி ரூபாயை செலவிட்டது. 2016ம் வருடத்தில் எம்.டி.எஸ்.(MTS Mobile) நிறுவனத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் கையகப்படுத்தியது.

 

ஏர்செல் நிறுவனத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்(Reliance Communications) நிறுவனத்துடன் இணைப்பதற்கான ஒப்பந்தமும் தோல்வியில் முடிந்தது. தொலைத்தொடர்பு துறையில் அடுத்தடுத்த போட்டியினை சமாளிக்க முடியாமல் ஆர்.காம் நிறுவனம் திணறியது. ஜியோ வருகைக்கு பின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் காணாமல் போனது என்றே சொல்லலாம். அனில் அம்பானி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் இன்ப்ரா  போன்ற நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். ஸ்பெக்ட்ரம்(Spectrum) அலைவரிசையில் எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தாமதப்படுத்தியதால், நீதிமன்றத்தில் அனில் அம்பானி மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

 

செலுத்த வேண்டிய கடனை செலுத்த முடியாமல், தனது ஆர்.காம் நிறுவனத்தை திவாலாக அறிவித்தார் அனில் அம்பானி(Anil Dhirubhai Ambani). சில நாட்களுக்கு முன் நீதிமன்றம், ‘ அனில் அம்பானி எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 550 கோடி ரூபாயை செலுத்த தவறினால் ஜெயிலுக்கு செல்ல நேரிடும் ‘ என எச்சரித்து இருந்தது நினைவிருக்கலாம். அதற்கான காலக்கெடு வரும் செவ்வாய் கிழமை அன்று (19-03-2019) முடிவடைகிறது. ஏற்கனவே அனில் அம்பானி ரிலையன்ஸ் அஸெட் மேனேஜ்மென்ட்(RNAM) நிறுவனத்திலிருந்து வெளியேற முடிவெடுத்து, அதனை தொடர்ந்து அந்த தொழிலை நிப்பான் லைப் நிறுவனத்தை வாங்க சொல்லியிருந்தார். ரிலையன்ஸ் பரஸ்பர நிதி நிறுவனத்தில் நிப்பான் லைப்(Nippon Life) ஒரு பங்குதாரராக உள்ளது கவனிக்கத்தக்கது.

 

இதனிடையே தற்போது பி.எஸ்.என்.எல்.(BSNL Telecom) நிறுவனமும் தங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தரவில்லை என வழக்கு தொடுத்துள்ளது. விமான ஒப்பந்தத்திலும்(Aircraft Deal) அனிலின் குழுமம் பிரச்னையில் உள்ளது. முகேஷ் அம்பானியை விட கல்வியிலும், நிர்வாகத்திலும் சிறந்து விளங்கிய அனில் திருபாய் அம்பானி செலுத்த வேண்டிய கடனை செலுத்தி விட்டு, தனது குழுமத்தை மீட்டெடுப்பாரா, இல்லையெனில் வரலாற்றில் எதிர்மறையான நிலையை ஏற்படுத்துவாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும். (*அனில் அம்பானியின் சகோதரர் முகேஷ் அம்பானி எரிக்சன் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய தொகையை தாம் அளிப்பதாக கூறியுள்ளார் -திங்கட்கிழமை இரவு .)

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.93 சதவீதம் – பிப்ரவரி 2019

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 2.93 சதவீதம் – பிப்ரவரி 2019

The WPI Inflation in India was 2.93 Percent in February 2019

 

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த பிப்ரவரி  மாதத்தில் 2.93 சதவீதமாக இருந்துள்ளது. இதே காலத்தில் கடந்த 2018ம் வருடத்தில் மொத்த விலை பணவீக்கம்(Wholesale price index -WPI) 2.74 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டின் ஜனவரி மாதத்தில் 2.76 சதவீதமாக இருந்த பணவீக்கம் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சக்தி ஆகியவற்றில் ஏற்பட்ட விலை உயர்வால் பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 0.17 சதவீதம் அதிகரித்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பிப்ரவரி 2019 மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம்(Retail Inflation -CPI) 2.57 சதவீதமாகவும், இதுவே ஜனவரி மாதத்தில் 1.97 சதவீதமாகவும் இருந்தது.அத்தியாவசிய பொருட்களில் வெங்காயம், உருளைக்கிழங்கு, பால் மற்றும் பழங்களின் விலை அதிகரித்து கடந்த மாதத்தில் இதன் பணவீக்கம் 4.84 சதவீதம் ஆகும். இதுவே ஜனவரி மாதத்தில் 3.54 சதவீதம் என்ற அளவை கொண்டிருந்தது.

 

எரிபொருட்கள் மற்றும் மின்சக்தி(Fuel & Energy) ஆகியவற்றின் பணவீக்கமும் அதிகரித்து கடந்த மாதத்தின் முடிவில் 2.23 சதவீதமாக இருக்கிறது. உணவு பொருட்களின் விலையும் கடந்த இரண்டு மாதத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் காலம் வரை உணவு பொருட்களில் விலை சரிவு ஏற்பட்டு பணவாட்டம் காணப்பட்டது.

 

கச்சா எண்ணெய் விலை மாற்றத்தால் எரிபொருட்களின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது குறைவாகவே உள்ளது. இதன் பணவீக்கம் கடந்த பிப்ரவரி 2018 காலத்தில் 4.6 சதவீதமாக இருந்த போதிலும், கடந்த மாதத்தில் 2.23 சதவீதமாக தான் இருந்தது.

 

நாட்டின் பணவீக்கம்(Inflation India) கடந்த சில காலங்களாக குறைந்த அளவிலே இருந்துள்ளதால், அதனை சார்ந்து பாரத ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகிதத்தை அறிவித்து வருகிறது. அடுத்து வரும் நிதி கொள்கை குழுவிலும் பாரத ரிசர்வ் வங்கி, வங்கியின் வட்டி விகிதத்தை குறைக்கலாம்(RBI Interest Rate) என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருகிறது ரெய்ட்(REIT) ரியல் எஸ்டேட் முதலீடு – சாதகங்களும், பாதகங்களும்

வருகிறது ரெய்ட்(REIT) ரியல் எஸ்டேட் முதலீடு – சாதகங்களும், பாதகங்களும்

India’s First Real Estate Investment Trust(REIT) Opportunity – Advantages & Disadvantages

 

ரியல் எஸ்டேட் முதலீடு அறக்கட்டளை என்னும் ரெய்ட்(REIT) அமைப்பு கடந்த 2014ம் ஆண்டு முதல் செபியால்(SEBI) ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த துறையில் இதுவரை எந்த முதலீடும் திரட்டப்படாத நிலையில், தற்போது பொது மக்களிடையே முதலீட்டை பெறும் நோக்கத்தில் உள்ளது ரெய்ட். ரெய்ட் என்னும் அமைப்பு ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை போன்று செயல்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பரஸ்பர நிதிகள் பொதுவாக பல்வேறு முதலீட்டாளர்களிடையே பெற்ற தொகையை பங்குகள், அரசாங்க பத்திரங்கள், தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்யும். இதனை போன்றே ரெய்ட் முதலீடும் பொது மக்களிடம் பணத்தை  பெற்று கொண்டு அதனை நிலம் மற்றும் வீட்டு மனைகளில் முதலீடு செய்யும். முதலீடுகளின் வாயிலாக வாடகை வருமானம், நிலம் மற்றும் மனை விற்பனை மூலம் ஆதாயம் ஆகியவை பெறக்கூடும். இவை முதலீட்டாளர்களுக்கு பிரித்து கொடுக்கப்படும்.

 

வீட்டு மனையில் நாம் நேரிடையாக அதிக பணத்தை முதலீடு செய்யாமல் ரெய்ட் அமைப்பின் மூலம் நம்மிடம் உள்ள குறிப்பிட்ட தொகைக்கு மட்டும் முதலீடு செய்து விட்டு, வருவாயை ஈட்டலாம். நிலம் மற்றும் வீட்டு வாடகை மூலம் ஒரு குறிப்பிட்ட கால வாரியாக வருமானம் கிடைக்கும். இது போக, சில காலங்களுக்கு பிறகு அந்த மனை விற்கப்படும் நிலையில், மூலதன ஆதாயமும் நமக்கு கிடைக்கப்பெறும்.

 

ரெய்ட் அமைப்பில் செய்யப்பட்ட முதலீட்டை நாம் இடையில் திரும்ப பெற விரும்பினால், பங்குச்சந்தையில்(Stock Exchange) நம்மிடம் உள்ள ரெய்ட் யூனிட்களை விற்று பணமாக பெற்று கொள்ளலாம். சுருங்க சொன்னால், இந்த முதலீடு மியூச்சுவல் பண்ட் முதலீட்டை போன்றே அமையப்பெறும்.

 

ரெய்ட் அமைப்பில் முதல் நிறுவனமாக பெங்களூருவை சேர்ந்த எம்பசி பார்க்ஸ்(Embassy Office Parks) நுழைய இருக்கிறது. முதலீடு திரட்டப்படும் நாள் வரும் 18ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி(March 18-20) வரை ஆகும். பொதுவெளியில்(Public Issue) திரட்டப்பட உள்ள தொகை சுமார் 4750 கோடி ரூபாய். இதற்கு ஐ.சி.ஆர்.ஏ.(ICRA) ஏஜென்சியின் ‘AAA’ ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டின் விலை 300 ரூபாயாகவும், குறைந்தபட்ச வாங்க வேண்டிய பங்குகளின் எண்ணிக்கை 800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

ரெய்ட் முதலீட்டில் நிறுவன முதலீட்டாளர்களுக்கு 75 சதவீதமும், நிறுவனமல்லாத மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு 25 சதவீத பங்களிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. முதலீட்டின் மூலம் பெறப்படும் வருமானம், வரி நிபந்தனைக்கு உட்பட்டது. அதே வேளையில், பெறப்படும் ஈவுத்தொகைக்கு(Dividend) வரி எதுவும் செலுத்த தேவையில்லை.

 

சாதகமான அம்சமாக உள்ளவை:  ஒழுங்குமுறை ஆணையமாக செபி செயல்பட்டு வருவது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும். ரெய்ட் முதலீடு அனுபவமிக்க தொழில் முறை நிர்வாகிகளை கொண்டு இயக்கப்படுவதால், நஷ்டத்திற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. வீட்டு மனை துறையின் மூலம் தொடர் வருமானம் பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பு.

 

பொதுவாக நாம் மனையை வாங்கினால், அதனை உடனடியாக விற்று பணம் பண்ண முடியாது. ஆனால் ரெய்ட் முதலீட்டின் மூலம் உடனடியாக சந்தையில் நாம் வைத்திருக்கும் மனைகளை (யூனிட்களை) விற்று பணம் பெறலாம்.

 

பாதகங்கள்:  ரெய்ட் முதலீட்டில் குறைந்தபட்ச மூலதனம் ரூ. 2 லட்சமாக செபி நிர்ணயித்துள்ளது சிறு முதலீட்டாளர்களுக்கு பாதகமான விஷயம். இருப்பினும், காலப்போக்கில் இவற்றில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். சமீப காலங்களாக ரியல் எஸ்டேட் துறையில் எதிர்பார்த்த வருமானம் அவ்வளவாக கிடைப்பதில்லை. மனைகளின் விற்பனை விலையும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை எனலாம். இதனால் நமக்கு கிடைக்கப்பெறும் வருவாய், வங்கி வைப்பு நிதிகளின் வட்டி விகிதத்தை(Bank FD Rates) ஒட்டியே காணப்படும்.

 

இந்த மாதம் வெளிவர உள்ள முதலீடு தான் ரெய்டின் முதல் வெளியீடு ஆகும். எனவே, இந்த துறை இனிவரும் காலத்தில் எவ்வாறு வளரும் என நாம் சற்று பொறுமையாக காத்திருப்போம். அதுவரை நாம் பரஸ்பர நிதி திட்டங்களை(Real Estate Sector Funds) முதலீட்டு வாய்ப்பிற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பங்குச்சந்தையில் நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து லாபம் பார்ப்பது எப்படி ?

பங்குச்சந்தையில் நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து லாபம் பார்ப்பது எப்படி ?

How to choose good stocks to earn better returns in the Indian Stock Market ?

 

செவ்வாய் கிழமை அன்று (12-03-2019) இந்திய பங்குச்சந்தை நல்ல ஒரு ஏற்றத்தை கண்டிருந்தது. வர்த்தகத்தின் முடிவில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி(Nifty50) 11,301 புள்ளிகளையும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்(BSE Sensex) குறியீடு 37,535 என்ற புள்ளிகளிலும் நிலை கொண்டது. அதிகபட்சமாக ஊடகம், வீட்டு மனை மற்றும் மூலதன பொருட்கள்(Capital Goods) ஆகிய துறைகள் இரண்டு சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போது தேர்தல் செய்திகள் தவிர்த்து, உலகளாவிய செய்திகள் இந்திய பங்குச்சந்தையில் அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பொதுவாக ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், சந்தை மந்த நிலையில் இருப்பதும், தேர்தல் முடிவுக்கு பின்பு ஏற்றமடைவதும் இயல்பான நிலையாக உள்ளது. நடப்பாண்டில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை பங்குகளை வாங்கி குவிப்பதற்கான காலமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பின் நிலையான ஒரு அரசு அமையும் பட்சத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிய கூடும். இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் தெரிய வரலாம்.

 

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்(Foreign Institutional Investors) இந்திய பங்குச்சந்தையில் செய்த முதலீடு ரூ. 13,000 கோடிக்கும் அதிகமாகும். நமது நாட்டின் பங்குச்சந்தை வருங்காலத்தில் ஏற்றமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், நல்ல நிறுவன பங்குகள் மட்டுமே நீண்ட காலத்தில் ஒரு முதலீட்டாளருக்கு லாபத்தை சம்பாதித்து தர முடியும். சந்தை ஏற்றத்தில் பெரும்பாலான பங்குகள் விலை அதிகரித்து வந்தாலும், நல்ல மற்றும் மதிப்பு மிக்க பங்குகள் அடுத்த ஐந்து முதல் பத்து வருட காலத்திற்கு தொடர் வருமானத்தை தரக்கூடியதாக அமையும்.

 

நல்ல நிறுவன பங்குகளை(Growth Stocks) தேர்வு செய்ய அடிப்படை பகுப்பாய்வு காரணிகள் எப்போதும் முன்னிலையில் நிறுத்தப்படும். உலகின் மாபெரும் முதலீட்டாளர் திரு. வாரன் பப்பெட்(Warren Buffet) சொல்வது போன்று, நல்ல நிறுவன பங்குகளை தள்ளுபடி விலையில் வாங்குவதும், அதனை தொடர்ந்து சந்தையில் பொறுமை காப்பதும் அவசியமானது. அடிப்படை பகுப்பாய்வின்(Fundamental Analysis) படி நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கு இன்று பல தளங்கள் தகவல்களை அளித்து வந்தாலும், வெகு சில தளங்களே பட்டியிலடப்பட்ட நிறுவனங்களின் தரவுகளை முதலீட்டாளருக்கு எளிமையாக அளித்து வருகிறது.

 

அவ்வாறு நிதி தகவல்களை எளிமையாக அளிக்கும் ஒரு தளம் தான் – www.screener.in

 

இந்த தளத்தில் வழங்கப்படும் அடிப்படை நிதி தகவல்களை கொண்டு, நமக்கான நல்ல நிறுவன பங்குகளை நாமே தேர்வு செய்யலாம். ஒரு சிறந்த முதலீட்டாளர் என்பவர் பங்கு தரகர்கள் மற்றும் பங்கு சார்ந்த மோசடி செய்திகளால் ஈர்க்கப்படமாட்டார் என்பது கவனிக்கத்தக்கது. நிறுவனங்களின் தகவல்களை அலசி ஆராய்ந்து நாமே சிறந்த நிறுவன பங்குகளை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதனால் பெறக்கூடிய லாபமும் நன்றாக இருக்கும். நிறுவனங்களை ஆராய நேரம் இல்லாதவர்கள், தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் அவ்ரகளுக்கான பங்கு முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.

 

முதலில், www.screener.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். இந்த தளத்தில் இலவசமாக உங்களை பதிவு செய்தும் கொள்ளும் போது, கூடுதலான சில நிதி தகவல்களும் கிடைக்கும்.

Stock Screener India

தளத்தின் வலது பக்க மேற்புறத்தில், கூட்டல் அடையாள குறி(Plus Sign) ஒன்று தென்படும், அதனை கிளிக் செய்யவும். அங்கே நமக்கான தேடல் வினவலை உருவாக்க(Create a Search Query – New Screen) ஒரு பெட்டி கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் எவ்வாறு உங்களது விதிமுறைகளை பதிவிட வேண்டும் என அருகிலேயே வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச பங்குச்சந்தை வகுப்புகள்

 

உதாரணத்திற்கு, கீழே உள்ள விதிமுறைகளை நீங்கள் பதிவிட்டு அதற்கான முடிவுகளை காணலாம்.

Stock Screening Process 1

வினவலின் முடிவுகளில்(Query Results) உங்களுக்கென சில நிறுவன பங்குகளின் பெயர்கள் காண்பிக்கப்படும். கொடுக்கப்பட்டுள்ள நிறுவன பெயர்களை க்ளிக் செய்தால் நிறுவனத்தின் அனைத்து தரவுகளையும் நீங்கள் காணலாம். உங்களுக்கு தேவைப்படும் தரவுகளை நீங்கள் சேர்க்க, ‘Add Quick Ratio’ என்ற பெட்டியில் பதிவிடலாம்.

 

Stock Screening Process 2

 

முடிவுகளில் கிடைக்கப்பெறும் ஒவ்வொரு நிறுவனத்தின் தொழில்கள் உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா என முதலில் சிந்தியுங்கள். உங்களால் புரிந்து கொள்ளக்கூடிய தொழிலின் பங்குகளை தேர்ந்தெடுத்து, அந்த பங்கின் விலை தற்போது வாங்கக்கூடிய விலையில் உள்ளதா என சரிபார்த்து பின்பு வாங்க முயலுங்கள். நல்ல நிறுவன பங்குகளை ஐந்து வருடங்களுக்கு மேலாக நாம் வைத்திருக்கும் பட்சத்தில், நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

 

பங்குகளில் முதலீடு செய்வதும் ஒரு கலை(Value Investing) தான், ஆனால் நஷ்டத்தை தவிர்ப்பதே நம்முடைய முதல் இலக்காக இருத்தல் வேண்டும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil