பரஸ்பர நிதிகளுக்கு வரிகள் – வருமான வரி தாக்கல் – பாடம் 5

பரஸ்பர நிதிகளுக்கு வரிகள் – வருமான வரி தாக்கல் – பாடம் 5

Mutual Funds Taxation – Income Tax Returns – Lesson 5

 

வங்கிகளில் பெறப்படும் வட்டி வருமானம் வரிக்கு உட்பட்டவை என கூறியிருந்தோம். அது போல வங்கி வைப்பு நிதிகளுக்கு டி.டி.எஸ். பிடித்தம் உள்ளது என்பதையும் நாம் அறிந்து கொண்டோம். மியூச்சுவல் பண்ட்(Mutual Funds) என்று சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்களுக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது என நாம் காண்போம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொதுவாக பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குகளுக்கு(Shares) டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்படமாட்டாது. அதே வேளையில் பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குகளுக்கு பங்கு பரிவர்த்தனை வரி உண்டு. இருப்பினும் நாம் பரஸ்பர நிதித்திட்டங்கள் மற்றும் சந்தையில் விற்கும் பங்குகளின் மூலம் பெறப்பட்ட வருமானத்தை நாம் தான் வருமான வரி தாக்கலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

 

பரஸ்பர நிதித்திட்டங்களில் வரி விதிப்பு இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று கடன்(Debt) சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள், மற்றொன்று பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள்(Equity Oriented) மற்றும் கலப்பின திட்டங்கள் ஆகும். கலப்பின திட்டங்கள்(Hybrid or Balanced Funds) என்பது கடன் சந்தை மற்றும் பங்கு சந்தை சார்ந்த இரண்டும் கலந்த முதலீடாகும்.

 

கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து விட்டு, அதனை மூன்று வருடத்திற்குள் வெளியே எடுக்கும் பட்சத்தில், தனி நபர் ஒருவரின் வருமான வரி வரம்பிற்கு தகுந்தாற் போல் வரி விதிக்கப்படும். இதுவே முதலீடு செய்த மூன்று வருடத்திற்கு பிறகு, நாம் திரும்ப பெறும் பட்சத்தில் பணவீக்க சரிக்கட்டலுடன் கூடிய 20 சதவீத வரி விதிக்கப்படும்.

Mutual Funds Taxation

 

உதாரணத்திற்கு, சேகர் என்பவர் ரூ. 1 லட்ச ரூபாயை கடன் சார்ந்த பரஸ்பர நிதி திட்டத்தில் முதலீடு செய்கிறார். பத்து மாதங்களுக்கு பிறகு அவரது முதலீட்டை சேர்த்து ரூ. 1,06,000 ஐ திரும்ப பெறுகிறார். சேகர் வருமான வரி செலுத்துபவராக இல்லாத நிலையில், பெறப்பட்ட வருமானத்திற்கு வரி எதுவுமில்லை. 20 சதவீத வரி வரம்பிற்குள் சேகர் இருந்திருந்தால், அவர் பெற்ற 6,000 ரூபாய்க்கு (1,06,000 – 1,00,000) 1200 ரூபாயை வரியாக செலுத்த வேண்டும். [ இதர வரி மற்றும் கட்டணங்கள் தனி ]

 

மூன்று வருடத்திற்கு பின்பு சேகரின் ரூ. 1 லட்சம் முதலீடு 1,24,000 ரூபாயாக உள்ளது. இப்போது அவர் பணத்தை திரும்ப பெறும் பட்சத்தில், பணவீக்க சரிக்கட்டலுக்கு பிறகு(Indexation) 20 சதவீத வரியை செலுத்தினால் போதும். அதாவது பணத்தை வெளியே எடுக்கும் காலத்தில் உள்ள பணவீக்கத்தை, நாம் பெற்ற வருமானத்தில் கழித்து விட்டு மீதம் இருக்கும் தொகைக்கு 20 சதவீத வரி செலுத்த வேண்டும். உதாரணமாக பணவீக்க சரிக்கட்டல் மதிப்பு(Indexation Benefit Cost) 12,000 ரூபாய் எனில், நாம் பெற்ற ரூ. 24,000 /- வருமானத்தில் 12,000 ரூபாயை கழித்து விட்டு மீதமிருக்கும் தொகைக்கு இருபது சதவீத வரி விதிக்கப்படும்.

 

பணவீக்க சரிக்கட்டலுக்கு பிறகு நமக்கு கிடைக்கும் வருமானம், வங்கி வைப்பு நிதி வட்டியை(Fixed Deposit Rates) காட்டிலும் சற்று அதிகமாக தான் இருக்கும். இது நமது முதலீட்டுக்கு சாதகமான விஷயம் எனலாம்.

 

பங்கு சார்ந்த மற்றும் கலப்பின திட்டங்களில் நாம் ஒரு வருடத்திற்கு முன், பணத்தை வெளியே எடுக்கும் பட்சத்தில் 15 சதவீத வரி விதிக்கப்படும். ஒரு வருடத்திற்கு மேலாக முதலீட்டை திரும்ப பெறும் போது, மூலதன ஆதாயம்(Capital Gains) ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் இருந்தால் 10 சதவீத வரி செலுத்த வேண்டும். இது சந்தையில் உள்ள பங்குகளுக்கும் பொருந்தும். உதாரணமாக சேகர் பங்கு சார்ந்த திட்டங்களில் பத்து லட்ச ரூபாயை முதலீடு செய்து விட்டு, ஒரு வருடத்திற்கு பிறகு லாபத்துடன் 11,25,000 ரூபாயாக பெறுகிறார் என வைத்து கொள்வோம். இப்போது அவர் மொத்த பணத்தையும் வெளியே எடுக்கும் போது, பெறப்பட்ட மூலதன ஆதாயமான 1.25 லட்சத்தில், ஒரு லட்ச ரூபாய்க்கு வரி சலுகையை பெறலாம். மீதமிருக்கும் 25,000 ரூபாய்க்கு மட்டும் 10 சதவீத வரி செலுத்தினால் போதுமானது.

 

இது போல, பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குச்சந்தையில் ஏற்படும் நஷ்டத்திற்கும்(Carry Forward on Loss) வரி சலுகை பெறலாம். இதனை பின்வரும் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

இந்து கூட்டு குடும்பம் – வருமான வரி தாக்கல் – பாடம் 4

இந்து கூட்டு குடும்பம் – வருமான வரி தாக்கல் – பாடம் 4

Hindu Undivided Family (HUF) – Income Tax Returns – Lesson 4

 

வருமான வரி சட்டத்திலும் கூட்டு குடும்பமாக இருக்கும் பட்சத்தில், கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகமிருந்தாலும் இன்று நாம் அவ்வாறான கூட்டு குடும்பங்களை பார்க்க முடிவதில்லை. இந்து கூட்டு குடும்பம்(HUF) போன்று மற்ற மதங்களுக்கும் வருமான வரி சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக புத்தம், ஜெயின் மற்றும் சீக்கிய குடும்பங்களும் இந்து கூட்டு குடும்பத்தை உருவாக்கலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்து கூட்டு குடும்பத்தினை உருவாக்குவதன் மூலம் வருமான வரியையும் சேமிக்கலாம். ஒரு தனிநபர் மட்டுமே இந்து கூட்டு குடும்பத்தை ஏற்படுத்த முடியாது. இந்து கூட்டு குடும்பத்தில் குடும்ப தலைவர், மனைவி மற்றும் பிள்ளைகள் இடம் பெறுவர். இந்த குடும்பத்தில் உள்ள சொத்துக்கள் அனைவருக்கும் சமமாகவே பிரித்து கொடுக்கப்படும்.

 

இங்கு குடும்ப தலைவர் பெரும்பாலும் மூத்த வயதுள்ள ஆணாக இருப்பார். இவரை கர்த்தா(Karta) என்பார்கள். 2016ம் ஆண்டுக்கு முன் பெண் ஒருவர் கர்த்தாவாக இருக்க முடியாது. ஆனால் தற்போது இந்து கூட்டு குடும்பத்தில் உள்ள பெண் ஒருவரும் தலைவராக இருக்கலாம். குடும்பத்தில் ஒரு தலைவரை அடுத்து மற்றவர்கள் உறுப்பினர்கள் ஆவர்.

 

இந்து கூட்டு குடும்பத்தை உருவாக்க விரும்புபவர்கள் அதற்கான குடும்ப உறுப்பினர்களை கொண்டிருப்பதோடு, குடும்ப பெயரில் பான் எண்ணை(PAN) பெற வேண்டும். வங்கி கணக்கும் இந்து கூட்டு குடும்ப பெயரில் மட்டுமே பெற்றிருக்க வேண்டும். வரி சட்டம் பிரிவு(Income Tax Act) 80 C ன் கீழ் இந்து கூட்டு குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்(Members) என தனித்தனியாக வரி சலுகை பெறலாம். ஆனால் ஒரே முதலீடு அல்லது சேமிப்புக்கு இருவரும் சலுகை பெற முடியாது.

 

உதாரணத்திற்கு குமார் என்பவரின் குடும்பம் இந்து கூட்டு குடும்பத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டு குடும்பத்தின் பெயரில் செய்யப்பட்ட முதலீடு மற்றும் வருமானம், குடும்பத்தின் வருமானமாக எடுத்து கொள்ளப்பட்டு வரி விகிதங்கள் கணக்கிடப்படும். இப்போது குமார் என்பவரும் தனி நபராக வருமான வரி செலுத்துபவர் எனில், அவருக்கான வரி சலுகை தனியே கணக்கிடப்படும். இதன் மூலம் வரி சேமிப்பை(Save Income Tax) ஏற்படுத்தலாம்.

 

கூட்டு குடும்பத்தின் கீழ் சொத்துக்கள், காப்பீடு, வருமானங்களை பெறலாம். பூர்வீக சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானம் இந்து கூட்டு குடும்ப பெயரிலும், குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களுக்குரிய வருமானத்தை தனித்தனியாகவும் வருமான வரி கணக்கில் சமர்ப்பிக்கலாம்.

 

இந்து கூட்டு குடும்பத்தில் உள்ள பாதகமே, சொத்துக்களில் அனைவருக்கும் சமமான பங்கு உள்ளது. குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவர் தனது சொத்தினை பிரிக்க முயற்சிக்கையில், அனைத்து உறுப்பினர்களின் அனுமதி தேவைப்படும். கூட்டு குடும்பத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பூர்வீக சொத்தில் சம உரிமையை பெறும். அது போல குடும்ப உறுப்பினர் ஒருவர் மணம் முடிக்கும் பட்சத்தில், அவரது துணையும் இந்து கூட்டு குடும்பத்தில் அங்கம் பெறுவர். எனவே நிர்வாக திறனை கருத்தில் கொள்வது அவசியம்.

 

கூட்டு குடும்பமாக செயல்பட்டால் நன்று. இல்லையெனில் நிதி சார்ந்த விஷயங்களில் அது பாரமாகவே அமையும்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நிலைக்கழிவு – வருமான வரி தாக்கல் – பாடம் 3

நிலைக்கழிவு – வருமான வரி தாக்கல் – பாடம் 3

Standard Deduction – Income Tax Returns (Filing) – Lesson 3

 

தனி நபர் ஒருவரின் ஆண்டு வருவாயில் ஒரு நிலையான தொகை கழிக்கப்படுவதால் வரிக்கு உட்பட்ட வருமானத்தை குறைக்க உதவும். இதன் மூலம் ஒருவரின் வரி செலுத்திய தொகையும் குறைக்கப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொதுவாக ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு தனது சம்பளத்தில் சில பிடித்தங்கள்(Deductions) இருக்கும். அதே போல, தான் பெற்ற வருவாயில் சில வரி சலுகைகளும் கிடைக்கப்பெறும். உதாரணத்திற்கு வீட்டு வாடகை, விடுமுறை மூலமாக பெற்ற தொகை(Leave Encashment), குழந்தைகளுக்கான கல்வி செலவுகள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(Providend Fund) போன்றவற்றிற்கு வரி விலக்கு உண்டு.

 

இது போக வருமான வரி துறையால் அறிவிக்கப்பட்ட நிலைக்கழிவுகளையும்(Standard Deduction) நாம் வரி சலுகையாக பெறலாம். கடந்த 2018ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் படி, மாத சம்பளம் வாங்கும் ஒருவருக்கு ரூ.40,000 /- வரை நிலைக்கழிவாக தனது வருவாயில் குறைத்து கொள்ள முடியும். நடப்பு வருட பட்ஜெட்டில் இந்த தொகை ரூ. 50,000 /- ஆக உயர்த்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. உயர்த்தப்பட்ட இந்த சலுகை நிதியாண்டு 2019-20 க்கு உரியதாகும். இதனை நாம் அடுத்த மதிப்பீட்டு காலத்தில் மட்டுமே பெற முடியும்.

 

மருத்துவ செலவுகள், பயணப்படிகள்(Transport Allowance) ஆகியவை இந்த நிலைக்கழிவு தொகையில் அடங்கும். முன்னர் பயணப்படி ரூ. 19,200 /- மற்றும் மருத்துவ செலவுகள் ரூ. 15,000 /- (ஆண்டுக்கு) வரையிலான தொகைக்கு மட்டுமே நாம் நிலைக்கழிவுகளை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.  எனவே இதுவரை வருமான வரி தாக்கல் செய்தவர்கள் மருத்துவ செலவுகள் மற்றும் பயணப்படிகளை தனித்தனியாக சமர்ப்பித்த நிலை மாறி, இந்த ஆண்டின் மதிப்பீட்டு காலத்தில்(AY 2019-20) அடிப்படை நிலைக்கழிவுகளாக 40,000/- ரூபாய் வரை கழித்து கொள்ளலாம்.

 

உதாரணத்திற்கு உங்கள் ஆண்டு வருவாய் ரூ.6 லட்சம் எனில், நிலைக்கழிவுகள் 40,000 /- ரூபாயை கழித்தது போக உங்களது வருமானம் ரூ.5,60,000 /- ஆக குறையும். அடுத்த வருட மதிப்பீட்டு காலத்தில்(AY 2020-21) இது 6,00,000 – 50,000 = 5,50,000 /- ஆக இருக்கும். மேலும் மற்ற வரிச்சட்ட பிரிவுகளின் (80C, 80D, 80E, 80G, etc) கீழும் நாம் வரி சலுகையை பெறலாம்.

 

ஒரு நிறுவனத்தில் தற்சமயம் பணிபுரியும் ஒருவர் ஏற்கனவே வேலை பார்த்த அல்லது ஓய்வு பெற்ற நிறுவனத்தில் ஓய்வூதியம் (பென்ஷன்) பெற்று வந்தால், அந்த வருமானம் வரிக்கு உட்பட்டதாகும். எனவே, அவரது மொத்த வருவாய் வருமான வரிக்கு உட்பட்டதாக இருக்கும் பட்சத்தில் அவர் அதற்கான வரியை செலுத்த வேண்டும். இந்நிலையிலும் அவர் அடிப்படை நிலைக்கழிவான ரூ. 40,000 /- சலுகையை பெறலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருவாய் ஆதாரங்கள் – வருமான வரி தாக்கல் – பாடம் 2

வருவாய் ஆதாரங்கள் – வருமான வரி தாக்கல் – பாடம் 2

Sources of Income – Income Tax Returns (Filing) – Lesson 2

 

சென்ற பாடத்தில் Financial Year மற்றும் Assessment Year என்ன என்பதை பற்றி நாம் பார்த்தோம். ஒருவர் சொல்லப்பட்ட மதிப்பீட்டு காலத்தில்(AY 2019-20) தனது வரி தாக்கலை செய்வது, அதற்கு முந்தைய வருடத்தில்(Previous year i.e 2018-19) பெற்ற வருவாய்க்கு தான்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனி நபர் ஒருவர் தான் பெற்ற வருமானத்திற்கு ஏற்ப வரி சட்டங்களும் உள்ளன. வருமான அளவினை கொண்டு வருமான வரி விகிதங்களும்(Income Tax Slab & Rates 2019) மாறுபடும். இதற்கான வருவாய் ஆதாரங்கள்(Sources of Income) எவ்வாறு அமைகிறது என்பதனை பார்ப்போம். வருமான வரி செலுத்தும் ஒருவருக்கு தனது வேலையின் மூலம் கிடைத்த மாத ஊதியம் மட்டுமில்லாமல் மற்ற வருவாய் ஆதாரங்களும் உள்ளன. அவை,

 

  • சம்பள வருமானம்(Income from Salary) – ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் போது கிடைக்கும் மாத ஊதியம், படிகள் மற்றும் அதனை சார்ந்த பிற வருவாய்.

 

  • வீடு மூலம் பெறும் வருமானம்(Income from House Property) – வீடு அல்லது கட்டிடங்கள் மூலம் பெறும் வாடகை வருமானம்.

 

  • மூலதன ஆதாய வருமானம்(Capital Gains) – ஒரு மூலதன சொத்துக்களை விற்கும் போது பெறும் லாபம் அல்லது நட்டம்.

 

  • வணிகம் அல்லது தொழில்முனைவின் மூலம் வருமானம்(Income from Business / Profession) – தனது தொழில் அல்லது வணிகத்தின் மூலம் பெறும் வருமானத்திற்கு.

 

  • மற்ற வருவாய் ஆதாரங்கள்(Other Source of Income) – பரிசுகள், வங்கி கணக்குகளில் பெறும் வட்டி வருமானம், குடும்ப ஓய்வூதியம்.

டி.டி.எஸ். பிடித்தம்(Tax Deducted at Source -TDS):

 

வருமான வரி சட்டத்தின் படி, நாம் பெறப்போகும் வருமானத்திற்கு முன்னரே வரி பிடித்தம் செய்யப்படும், இதனை டி.டி.எஸ். பிடித்தம் (Tax Deducted at Source) என்கிறோம். நாம் ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பட்சத்தில் ஒரு நிதியாண்டுக்கான உத்தேச வருமானத்தை நிறுவனமே கணக்கிட்டு, அதற்கான வரி தொகையை நமது சம்பளத்தில் பிடித்து கொள்ளும். நிறுவனத்தில் நாம் சமர்ப்பித்த வரி சலுகை மதிப்புகள் போக, ஏதேனும் இருப்பின் வருமான வரி தாக்கல் செய்யும் போது, வரி சலுகைகளை பெறலாம்(சலுகை இருப்பின்). இதன் மூலம் நம்மிடம் நிறுவனம் பிடித்த தொகையை நாம் திரும்ப பெறலாம். வரி சலுகைக்கான ஆவணங்களை சரி பார்த்தும், பாதுகாப்பாகவும் வைத்து கொள்வது அவசியம்.

 

வங்கியில் உள்ள நமது சேமிப்பு கணக்கு(Savings Account) மற்றும் வைப்பு நிதி திட்டங்களுக்கு(Fixed Deposit) கிடைக்கப்பெறும் வட்டி வருமானமும் வரிக்கு உட்பட்டது. நடப்பு வரி சட்டப்படி, தனி நபர் ஒருவரின் ஆண்டு வருவாய் ரூ.2,50,000 க்கு மேலாக இருக்கும் பட்சத்தில் அவர் வரி செலுத்த(Tax Payer) அல்லது வரி தாக்கல்(Tax Return) செய்யக்கூடியவராக உள்ளார். வங்கிகளுக்கு நாம் நிறுவனத்தில் பெறும் வருமானத்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆதலால், வங்கிகளுக்கான வரி சட்டங்களின் படி, வாடிக்கையாளர்கள் பெறும் வட்டி வருமானத்திற்கு டி.டி.எஸ். பிடித்தம் செய்ய வேண்டும். இது சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதிக்கு பொருந்தும். முன்னர் ஒரு நிதியாண்டில் பெறப்படும் வட்டி வருமான தொகை ரூ.10,000 க்கு மேலாக இருந்தால் வங்கி 10 சதவீதம் டி.டி.எஸ். பிடித்தம் செய்யும். இந்த வருட புதிய பட்ஜெட் அடிப்படையில் ரூ. 40,000 /- வரையிலான வட்டி வருமானத்திற்கு வங்கிகள் பிடித்தம் செய்யாது.

 

வங்கிகளில் நாம் வட்டி வருமானத்தை கையில் பெறாவிட்டாலும், ஒவ்வொரு வருடமும் சொல்லப்பட்ட தொகைக்கு மேலாக வட்டி தொகை இருந்தாலே வங்கிகள் 10 சதவீதம் டி.டி.எஸ். பிடிக்கும். பான்(PAN) எண்ணை வங்கியில்  இணைக்காத நிலையில் இது 20 சதவீதமாக எடுத்து கொள்ளப்படும். வங்கிகள் டி.டி.எஸ். பிடித்தம் செய்யாவிட்டாலும் அது நமது மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட்டு, அதற்கேற்ப வரி வசூலிக்கப்படும்.

 

நாம் வருமான வரி செலுத்தும் நபராக இருக்கும் பட்சத்தில், வங்கிகள் பிடித்தம் செய்த தொகை போக, மேலும் ஏதேனும் தொகையை செலுத்த வேண்டுமென்றால், இதனை நாம் வரி தாக்கல் செய்யும் போது, படிவம் 26AS ல் தெரிய வரும். நாம் வருமான வரி வரம்பிற்குள் வராத பட்சத்தில், வங்கிகளில் பிடித்தம் செய்யப்பட்ட வட்டி தொகையை திரும்ப பெறலாம்.

 

பொதுவாக வங்கிகளில் டி.டி.எஸ். பிடித்தம் செய்யாமலிருக்க படிவம் 15G ஐ பயன்படுத்தலாம். மூத்த குடிமக்கள் 15H என்ற படிவத்தை நிரப்ப வேண்டும். 15G மற்றும் 15H படிவங்கள் வங்கிகளில் கிடைக்கப்பெறும்.

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி,  வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருமான வரி தாக்கல் – திட்டமிடுவோம் மற்றும் பயன்பெறுவோம் – பாடம் 1

வருமான வரி தாக்கல் – திட்டமிடுவோம் மற்றும் பயன்பெறுவோம் – பாடம் 1

Income Tax Returns (Filing) – Plan & Benefits – Lesson 1

 

2018-19ம் நிதி வருடத்தை முடித்து விட்டு, 2019-20ம் நிதியாண்டில் நாம் காலெடுத்து வைத்துள்ளோம். முன்னர் வருமான வரி செலுத்துபவர்கள் மட்டுமே வரி தாக்கலை செய்து வந்த நிலையில் இன்று மாத சம்பளம் வாங்கும் (பெரும்பாலும் அமைப்பு சார்ந்த) அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

‘ நான் தான் வருமான வரி கட்ட தேவையில்லையே, அப்புறம் எதற்கு நான் வரி தாக்கல் செய்ய வேண்டும் ? ‘ என கேட்பதற்கு பதிலாக வருமான வரி தாக்கல் சார்ந்த சில எளிமையான விஷயங்களை நாம் கற்று கொண்டாலே, பின்னாளில் அது பயன் தரும். ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்கும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டாலும், தனி நபர் ஒருவர் தனது வரி தாக்கலை செய்வதற்கு, ஆதார் எண் அவசியமாக்கப்பட்டுள்ளது.

 

இந்த பகுதியில் நாம் வருமான வரி சார்ந்த சில எளிமையான வழிமுறைகளை தெரிந்து வைத்து கொண்டு(Basics Education), நமக்கான வரி சலுகைகள் மற்றும் அதனை சார்ந்த திட்டங்களில் பயன் பெறலாம். வரி தாக்கல் செய்யும் முன், நாம் முன்னேற்பாடாக சில தகவல்களையும் சேகரித்து வைத்து கொள்வது சிரமத்தை ஏற்படுத்தாமல் இருக்கும்.

 

வாருங்கள், முதல் பாடத்திற்குள் செல்லலாம்.

 

நாம் இப்போது 2018-19ம் நிதியாண்டின், அதாவது ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019ம் வரையிலான காலத்திற்கு வரி தாக்கல் செய்யக்கூடிய காலத்தில் இருக்கிறோம். மேலே சொன்ன காலத்தில் நாம் ஈட்டிய வருவாய்க்கு ஏற்ப நமது வருமான வரி அமையலாம் அல்லது வரி தாக்கல் செய்யக்கூடியவராக இருக்கலாம்.

 

நிதியாண்டு(Financial Year or Fiscal Year) என்றால் என்ன ?

 

ஒரு நிறுவனம் அல்லது அரசாங்கத்தை பொறுத்தவரை அதன் கணக்கீட்டு காலம் 52 வாரங்கள் அல்லது 12 மாதங்கள் ஆகும். நிறுவனத்தின் வரவு-செலவு மற்றும் லாப-நட்ட நிதி அறிக்கைகள்(Financial Statements) இந்த 12 மாத அளவில் கணக்கீடு செய்யப்படும். பொதுவாக ஆங்கிலேய காலத்திலிருந்து 12 மாத காலம் என்பது ஒரு வருடத்தின் ஏப்ரல் மாதம் தொடங்கி அடுத்த வருடத்தின் மார்ச் மாதம் வரை என வரையறுக்கப்பட்டுள்ளது. இதனை தான் நாம் நிதியாண்டு(Financial Year) என்கிறோம்.

 

சொல்லப்பட்ட ஏப்ரல்-மார்ச் காலத்தில் நாம் ஏதேனும் வருவாய் பெற்றிருந்தால் (இழப்பு இருந்தாலும்) அதனை மதிப்பீடு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு 2018-19ம் நிதியாண்டில், அதாவது ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019ம் வரையிலான காலத்தில் உள்ள வருவாயை நாம் மார்ச் 2019க்கு பின்னர் தான் மதிப்பீடு செய்ய முடியும். நடந்து முடிந்த ஒரு நிதி வருடத்திற்கான கணக்கை நாம் அடுத்த நிதி வருடத்தில் தான் மதிப்பீடு(Assessing) செய்கிறோம் மற்றும் வரியை தாக்கல் (Income Tax Return Filing) செய்கிறோம். இந்த காலத்தை மதிப்பீட்டு காலம்(Assessment Year) எனலாம்.

 

கவனிக்க:

 

  • நீங்கள் வருவாய் ஈட்டிய காலம் (ஏப்ரல் – மார்ச்) ஒரு நிதியாண்டு எனப்படும். 2010 ஏப்ரல் முதல் 2011 மார்ச் வரை என்பது ஒரு நிதியாண்டு. இதனை 2010-11 நிதி வருடம் அல்லது 2011ம் நிதியாண்டு என்பர் – FY 2010-11 OR Fiscal year 2011.

 

  • நாம் வருவாய் பெற்ற காலத்தை நிதியாண்டு ஆண்டு எனவும், அதனை மதிப்பீடு செய்த காலத்தை மதிப்பீட்டு ஆண்டு(Assessment year) எனவும் அழைக்கிறோம்.

 

  • 2018-19ம் நிதியாண்டிற்கான மதிப்பீட்டு காலம் 2019-20ம் வருடமாகும். நீங்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் இந்த வருடத்தின் மார்ச் மாத காலம் வரையிலான வருமானத்திற்கு, நடப்பு ஏப்ரல் மாதம் முதல் வரி தாக்கல் செய்யலாம். பொதுவாக வரி தாக்கல் செய்வதற்கு மதிப்பீட்டு காலத்தின் ஜூலை மாதம் வரை அனுமதிக்கப்படும் – ஜூலை 31, 2019 (AY 2019-20)

 

இன்னும் திட்டமிடுவோம்…

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடப்பு மாதத்தில் இதுவரை அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு 12,000 கோடி ரூபாய்

நடப்பு மாதத்தில் இதுவரை அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு 12,000 கோடி ரூபாய்

Foreign Portfolio Investors have so far invested Rs. 12,000 Crore in the Current Month – April 2019

 

நடப்பு வருடத்தின் ஜனவரி மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் தங்களது முதலீட்டை வெளியே எடுத்து கொண்டிருந்த நிலை மாறி, கடந்த மூன்று மாதங்களாக அவர்களின் முதலீட்டு தொகை அதிகரித்த வண்ணம் உள்ளது.

 

நம் நாட்டில் உள்ள கடன் சந்தை(Debt Market) மற்றும் பங்குச்சந்தை(Stock Market) இரண்டிலும் சேர்த்து கடந்த பிப்ரவரி மாதம் 11,180 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தனர். இது போன்று மார்ச் மாதத்தில் 45,980 கோடி ரூபாயும், நடப்பு மாதத்தில் இதுவரை சுமார் 12,000 கோடி ரூபாயையும் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்து வருகின்றனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த மூன்று மாதங்களாக உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Investors -DII) பெரும்பாலும் நிகர விற்பனையையே மேற்கொண்டுள்ளனர். சந்தை உச்சத்தில் இருந்து வந்த நிலையில் உள்ளூர் முதலீட்டாளர்களான பரஸ்பர நிதிகள், சந்தையில் கண்ட லாபத்தை வெளியே எடுத்து வருவதாலும் இவர்களது விற்பனை அதிகமாகியுள்ளது.

 

பிப்ரவரி மாதத்தின் முடிவில் அந்நிய முதலீட்டாளர்களின்(Foreign Portfolio Investors) பங்கு முதலீடு ரூ. 13,564 கோடியாகவும், உள்ளூர் முதலீட்டாளரின் நிகர விற்பனை (-565) கோடி ரூபாயாகவும் இருந்து வந்துள்ளது. மார்ச் மாத காலத்தில் அந்நிய முதலீட்டாளர்கள்(FII /FPI) சுமார் 32,370 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், உள்ளூர் முதலீட்டாளர்கள் 13,930 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர்.

 

தற்போது நாட்டில் தேர்தல் நடந்து வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தை ஏற்கனவே தனது புதிய உச்சத்தை கடந்தாகி விட்டது. தேர்தல் முடிவுக்கு பின் சந்தையில் முதலீடு செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் பலரிடம் இருந்தாலும், தற்சமயம் சந்தையின் சிறிய இறக்கத்திலாவது முதலீடு(Equity) செய்வதே சிறந்தது.

 

மே மாதத்தில் தேர்தல் முடிவுக்கு பின், வலுவான ஒரு ஆட்சி அமையும் நிலையில் நமது பங்குச்சந்தை மேலும் புதிய உச்சத்தை காணலாம் என கருதப்படுகிறது. சந்தையை பாதிக்கும் காரணிகளில் உலகளாவிய நிகழ்வுகள் இருந்து வந்தாலும், இப்போது அரசியல் நகர்வுகளும், அதனை அடுத்த புதிய அரசாங்கத்தின் கொள்கைகளும் தான் சந்தையின் குறியீடுகளை தீர்மானிக்கின்றன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

அரவணைக்கும் ஆறு அடிப்படை காரணிகள் – பங்குச்சந்தை ரகசியங்கள்

அரவணைக்கும் ஆறு அடிப்படை காரணிகள் – பங்குச்சந்தை ரகசியங்கள்

Six Fundamental Factors as a Defensive Investor – Secrets of Stock Market

 

பொதுவாக பங்குச்சந்தையை பற்றிய செய்தி என்று நாம் கேட்டிருந்தால், பெரும்பாலும் இந்த இரண்டு விஷயங்களை தான் கேட்டிருப்போம். ‘ பங்குச்சந்தையில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் ‘ என்பது, மற்றொன்று ‘ பங்குச்சந்தை ஒரு சூதாட்டம் ‘. பங்குச்சந்தை சூதாட்டம் என்பவர்கள் இனி எப்போதும் பங்குச்சந்தைக்கு வருவதில்லை, ஆனால் அவர்களது சேமிப்பு அனைத்து காலங்களிலும் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பது அவருக்கு தெரியாமல் இருக்கலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்கிற வார்த்தையே பங்குச்சந்தையில் பெரும்பாலானவர்களை நஷ்டப்படுத்த செய்கிறது. உண்மையில் பங்குச்சந்தை என்பது வங்கிகள், நிதி நிறுவனங்கள், அஞ்சலகம் போன்று இதுவும் நிதி சார்ந்த தொழிலே. தொழில் செய்பவர் வங்கிகளில் தனது தொழிலுக்கு தேவையான முதலீட்டை எவ்வாறு பெறுகிறாரோ அது போல தான் பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் முதலீட்டாளர்களிடையே கடன் பெறுகிறது. வங்கிக்கும், சந்தைக்கும் உள்ள வேறுபாடு அதன் சட்டங்களும், அதனை சார்ந்த வரைமுறைகளும் மட்டுமே.

 

நமது பக்கத்துக்கு வீட்டில் உள்ள ஒரு நண்பர் நம்மிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் கேட்டால் நாம் என்ன செய்வோம் ? மனமும், பணமும் இல்லையென்றால் அவரிடம் எதுவும் இல்லை என்று சொல்வோம். கொடுப்பதற்கான வாய்ப்பு இருந்தால், உடனே அவரிடம் ஒரு லட்சம் பணத்தை கொடுத்து விடுவோமா, என்ன ? நண்பரது தொழில், அவரது குடும்ப நிதி நிலை(Financial Background), ஏதேனும் காரணத்தால் அவரிடம் இருந்து நாம் பணம் பெற முடியவில்லை என்றால், அதற்கான மாற்று வழி என பலவற்றை நாம் சிந்தித்த பிறகே பணம் கொடுக்க முயல்வோம். ஆனால் பங்குகளில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ?

 

பங்குச்சந்தையில் இப்போது உங்களது நண்பர் கடன் வாங்கவில்லை. ஒரு பெரு நிறுவனம் – டாட்டா, பிர்லா மற்றும் அம்பானி போன்றவர்கள். உங்களது முதலீடு அவர்களின் நீண்டகால நம்பிக்கையை பெறலாம். இல்லையனில் மல்லையா போன்று போனியும் ஆகலாம். பங்குச்சந்தையில் நீங்கள் வெறும் முதலீட்டாளர் மட்டுமல்ல. நீங்கள் கடன் கொடுத்தவர், ஒரு வங்கியை போன்று. உங்களுக்கென்று சில விதிமுறைகள் உண்டு, நீங்கள் கறாராக இருக்க வேண்டியது அவசியம்.

 

பங்குச்சந்தையில் நீங்கள் குறுகிய கால அல்லது நீண்ட கால முதலீட்டாளராகவோ இருந்து விட்டு போங்கள். அது உங்களுடைய விருப்பம். ஆனால் இனி சொல்லக்கூடிய ஆறு விஷயங்களை மட்டும் எப்போதும் உங்கள் மனதில் நிறுத்தி கொள்ளுங்கள். இது தான் உங்களை பெரும்பாலும் நஷ்டத்திலிருந்து தள்ளி வைக்கும்.

 

  • நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Adequate size of the Company):

 

பங்குச்சந்தையில் கடலளவு நிறுவனங்கள் உள்ளன, இனி வரும் காலத்தில் இதனை விட அதிகமான நிறுவனங்கள் வரக்கூடும். ஐந்து பைசாவுக்கும், ஐந்து ரூபாய்க்கும் பங்குகளை வாங்குவது(Penny stocks) உங்கள் நோக்கமல்ல. நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு கடன் கொடுக்க இங்கே வந்து இருக்கிறீர்கள். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Cap), ஆண்டு வருவாய்(Revenue) மற்றும் நிகர லாபம்(Net Profit) கோடிகளில் உள்ளவற்றை காணுங்கள்.

 

உதாரணத்திற்கு சந்தை மதிப்பு 1000 கோடி ரூபாய்க்கு மேலான நிறுவனங்கள், ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ. 100 கோடிக்கு மேலான வருவாய் அல்லது லாபத்தை கொண்ட நிறுவனங்கள் என பங்குகளை தேர்வு செய்யுங்கள்.

 

  • வலுவான நிதி ஆதாரம் (Strong Financial Trend):

 

           ஒரு தற்காப்பு முதலீட்டாளராக நீங்கள் செய்ய வேண்டியவை – கடனில்லா

நிறுவனங்கள்(Debt Free), தற்போதைய வேலைக்கு மூலதனம்(Working

Capital) மற்றும் அதிக சொத்துக்களை கொண்டிருக்கும் நிறுவனங்கள் என

தேர்வுகளை துவக்குங்கள். சுருக்கமாக கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.5

க்கு கீழ் உள்ளவாறு பார்த்து கொள்ளுங்கள்.

 

  • வருவாய் நிலைப்புத்தன்மை (Earnings Stability):

 

ஒரு நிறுவனம் காலாண்டு வருவாய் மற்றும் நிகர லாபத்தில்(Sales & Profit) தொடர்ச்சியான வளர்ச்சியை பெற்று வருகிறதா என ஆராயுங்கள். ஏதாவது ஒரு காலாண்டில் வருவாய் அல்லது லாபத்தின் அளவு குறைந்தால், அதற்கான காரணத்தை கண்டுபிடியுங்கள். வருவாய் அளவு குறையும் சமயத்தில் சந்தையின் பங்கு விலைகளில் மாற்றம் எவ்வாறு நிகழ்கிறது என்பதை கண்டு தீர்வு காணுங்கள்.

 

  • தொடர்ச்சியான ஈவுத்தொகை செலுத்துதல் (Dividend Track Record):

 

          பங்குச்சந்தையில் உள்ள ஒரு நிறுவனம் தான் பெற்ற லாபத்தை பல்வேறு வழிகளில் முதலீட்டாளர்களுக்கு திரும்ப அளிக்கலாம். சில நிறுவனங்கள் தங்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்காக லாபத்தை பயன்படுத்தும். இதன் விளைவு பங்குகளில் விலை மாற்றத்தை ஏற்படுத்தும். மற்ற சில நிறுவனங்கள் போனஸ் பங்குகள், நிறுவனமே பங்குகளை திரும்ப பெறுதல்(Buyback) அல்லது டிவிடெண்ட் என சொல்லப்படும் ஈவுத்தொகையை முதலீட்டாளருக்கு வழங்கும்.

 

வங்கிகளின் வட்டி வருமானத்தை போல, நிறுவனங்கள் அளிக்கும் டிவிடெண்ட்(Dividend) வருமானத்தை நாம் அவ்வப்போது பெற்று வரலாம். தொடர்ச்சியான ஈவுத்தொகையை கொடுத்து வரும் நிறுவனங்களை உங்கள் முதலீட்டுக்கு பரிசீலனை செய்யுங்கள். பங்குகளின் விலை அதிகமாக இருந்தாலும், உங்களுக்கான டிவிடெண்ட் வருமானம்(Dividend yield) முதலீட்டை பாதுகாக்கும்.

 

  • பங்கு – சொத்து மதிப்பு விகிதம் (Price to Assets Ratio):

 

         தற்போது வர்த்தகமாகி கொண்டிருக்கும் பங்கின் விலை அதன் புத்தக மதிப்பை காட்டிலும் அதிகமில்லாமல் பார்த்து கொள்வது நன்று. இருப்பினும், பிரபலமான மற்றும் தேவைப்பாடு அதிகமுள்ள நிறுவனங்களின் பங்குகள் எப்போதும் அதிகமான விலையில் தான் வர்த்தகமாகும். இதனால் அதன் புத்தக மதிப்பும்(Price to Book Value) பல மடங்கு இருப்பது இயல்பு.

 

நிறுவன பங்கின் விலை அதன் புத்தக மதிப்பை போன்று இரண்டு மடங்குக்கு அதிகமில்லாமல்(Not more than 2.0 X times) இருக்குமாறு கண்டறியுங்கள், பின் அந்த பங்கினை தேர்வு செய்யுங்கள்.

 

  • ஒரு பங்குக்கான வருவாயின் வரலாறு (Earnings Growth and Price to Earnings):

 

         பொதுவாக ஒரு நிறுவனத்தின் பங்கு விலை மற்றும் அதனை சார்ந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பில் மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதனை போல நிறுவனத்தின் வருவாய் மாற்றத்தை நாம் அந்த பங்கின் ஈ.பி.எஸ்.(Earning Per Share -EPS) மூலம் காணலாம். ஒரு முதலீட்டாளராக நாம் காண வேண்டியது, நிறுவனத்தின் வருவாயை காட்டிலும் ஒரு பங்கின் மீதான வருமானத்தை தான்.

 

பங்கின் மீதான வருமானம் என்பது மிகவும் எளிமையான கண்டுபிடிக்க கூடிய விஷயம் தான். கடந்த பத்து வருட காலத்தில் ஒரு நிறுவனத்தின் பங்கு விலையும், அதன் வருவாயும் எவ்வாறு உள்ளது என்பதை சந்தை குறியீட்டுடன்(Benchmark) ஒப்பிட்டு பாருங்கள். பின்பு துறையை சார்ந்த மற்ற நிறுவனங்களின்(Peer Companies) பங்கு விலை மற்றும் வருமானத்துடன் ஒப்பிட்டு பார்த்து பங்குகளை தேர்வு செய்யுங்கள்.

 

நீங்கள் கடன் அளிப்பவர் என்பதை எப்போதும் மறவாதீர்கள். பங்குச்சந்தையில் நிறைய சம்பாதிக்கலாமே ?  ஆம், யாரிடமும் ரகசியத்தை சொல்லாதீர்கள் 🙂

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

தெறிக்கவிட்ட ரிலையன்ஸ் ஜியோ (இண்டஸ்ட்ரீஸ்) – நான்காம் காலாண்டு முடிவுகள்

தெறிக்கவிட்ட ரிலையன்ஸ் ஜியோ (இண்டஸ்ட்ரீஸ்) – நான்காம் காலாண்டு முடிவுகள்

Q4 Results of Reliance Industries Limited(RIL) – Financial year 2018-19

 

ஜியோவின்(JIO) வருகைக்கு பின் இந்திய தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள முடியாமை, ஐடியா-வோடபோன் இணைப்பு, ஏர்செல் மற்றும் டொகோமோ என்ற நிறுவனங்கள் காணாமல் போனது ரிலையன்ஸ் ஜியோவின் டேட்டா புரட்சியில் தான். சந்தையில் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நேற்று தனது 2018-19ம் நிதியாண்டுக்கான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,38,659 கோடியாகவும், செலவினங்கள் 1,17,827 கோடி ரூபாயாகவும் இருந்தது. இயக்க லாபம் 20,832 கோடி ரூபாயாகவும் மற்றும் நிகர லாபம் ரூ. 10,362 கோடியாகவும் உள்ளது.

 

இதர வருமானம் என எடுத்து கொண்டால் நான்காம் காலாண்டில் சுமார் 3,215 கோடி ரூபாய் வந்துள்ளது. இது கடந்த மூன்று வருடங்களில் இருந்த அதிகபட்ச அளவாகும். வரிக்கு முந்தைய வருமானமாக 13,858 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது.

 

கடந்த மார்ச் 2018ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 1,16,915 கோடி ரூபாயும், இதர வருமானம் 2,203 கோடி ரூபாயாகும். வரிக்கு முந்தைய வருமானம் ரூ. 13,254 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 9,438 கோடி. தற்போதைய காலாண்டு முடிவுகளை இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிறுவனத்தின் வருவாய் 18.60 சதவீத வளர்ச்சியும், நிகர லாபம் 9.80 சதவீதமும் உயர்ந்துள்ளது.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Capitalization) சுமார் 8,78,519 கோடி ரூபாய். ரிலையன்ஸ் ஜியோவின் லாபம் 65 சதவீதம் உயர்ந்து நான்காம் காலாண்டில்(Fourth Quarterly results) 840 கோடி ரூபாயாக உள்ளது. இதற்கு முந்தைய வருடத்தின் சொல்லப்பட்ட காலாண்டில் ஜியோவின் நிகர லாபம்(Net Profit) 510 கோடி ரூபாய் என்பது கவனிக்கத்தக்கது.

 

சில்லறை வணிகத்தில் இதன் ஆண்டு வருவாய் 88 சதவீதம் அதிகரித்து ரூ. 1,30,566 கோடியாக இருந்தது. உலகளவில் மிகவும் குறுகிய காலத்தில் 30 கோடிக்கும்(300 Million Subscribers) மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் நிறுவனமாக ஜியோ இருந்து வருகிறது. இதன் வாடிக்கையாளர்களின் சராசரி மாத தரவு பயன்பாடு(Data usage) 10 ஜி.பி. க்கு மேலாக உள்ளது. இருப்பினும் ஒரு பயனருக்கான சராசரி வருவாய்(ARPU) கடந்த காலாண்டில் எதிர்பார்த்ததை விட சிறிது சரிந்துள்ளது.

 

கடந்த சில காலங்களாக முக்கிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு துறையில் சாதகமாக இல்லை. சில்லறை வணிகம்(Retail), தகவல் தொடர்பு போன்ற துறைகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருவாயை ஈட்டிய போதிலும், எண்ணெய் சுத்திகரிப்பில் இதன் வருவாய் குறைந்துள்ளது.

நிறுவனத்தின் கடன் நிலுவை(Debt) ரூ. 2.80 லட்சம் கோடிக்கும் மேலாக இருப்பது கவனிக்கத்தக்கது. கடந்த நிதி ஆண்டில் இந்த நிறுவனத்தின் நிலுவையில் உள்ள கடன் தொகை 2.17 லட்சம் கோடியாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வர்த்தகத்தின் முதல் நாளில் 22 சதவீத ஏற்றம் – பாலிகேப் இந்தியா நிறுவனம்

வர்த்தகத்தின் முதல் நாளில் 22 சதவீத ஏற்றம் – பாலிகேப் இந்தியா நிறுவனம்

22 % rise in the first day after the listing – Polycab India

 

கடந்த சில வருடங்களாக இந்திய பங்குச்சந்தையில் மூலதனத்தை திரட்டுவதற்கு பல நிறுவனங்கள் ஐ.பி.ஓ.(Initial Public Offer -IPO) க்கு விண்ணப்பிக்கின்றன. பின்பு அவை முதன்மை சந்தை மூலம் தங்களுக்கான மூலதனத்தை முதலீட்டாளர்களிடம் பெறுகின்றன. முதன்மை சந்தையில் பங்குகளை வாங்கிய சந்தாதாரர்கள் அல்லது முதலீட்டாளர்கள் வெளியேறும் வண்ணம், இரண்டாம் சந்தையில்(Secondary Market)  அவர்களுக்கான வாய்ப்பு உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மும்பையை தலைமையிடமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் பாலிகேப்(Polycab India), மின்கம்பிகள் மற்றும் கேபிள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. எப்.எம்.இ.ஜி.(FMEG -Electrical Goods) துறையில் மின் விளக்குகள் மற்றும் விசிறிகள், சுவிட்சுகள், சோலார் பொருட்களையும் தயாரிப்பு மற்றும் விற்பனையும் செய்து வருகின்றன.

 

மின் கம்பிகள்(Wires & Cables) தயாரிப்பில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வரும் பாலிகேப், சந்தையில் ரூ.1,345 கோடியை மூலதனமாக பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தது. இந்த மூலதனம் நிறுவனத்தின் கடன் மற்றும் செயல்பாட்டு மூலதன செலவினங்களுக்கு என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதன்மை சந்தையில் 533 – 538 ரூபாய் என்ற அளவில் 2.5 கோடி பங்குகளை வெளியிட்ட இந்நிறுவனத்திற்கு விண்ணப்பித்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 52 மடங்காகும்.

 

பாலிகேப் நிறுவனத்திற்கு 24 நகரங்களில் உற்பத்தி ஆலைகளும், இதன் தயாரிப்பு பொருட்கள் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், இதன் மொத்த வருவாயில் ஏற்றுமதியின் பங்களிப்பு 3.5 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது.

 

முதன்மை சந்தையில் வெற்றிகரமாக தனது மூலதனத்தை பெற்ற இந்நிறுவனம் நேற்று(16-04-2019) மும்பை(BSE) மற்றும் தேசிய பங்குச்சந்தையில்(NSE) பட்டியலிடப்பட்டது. முதன்மை சந்தையில் ரூ. 538 என்ற விலையில் முடிந்திருந்த இந்நிறுவன பங்கு, நேற்று இரண்டாம் சந்தையின் துவக்கத்திலேயே 633 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகியது. ஒரே நாளில்  அதிகபட்சமாக 677 ரூபாய் வரை சென்ற இந்த பங்கு, சந்தையின் முடிவில் பங்கு ஒன்றுக்கு ரூ. 655 என்ற விலையில் இரு சந்தைகளிலும் முடிவடைந்தது. இது 22 சதவீத ஏற்றமாகும்.

 

தேசிய சந்தையில் பாலிகேப் நிறுவனத்தில் நேற்று வர்த்தகமாகிய மொத்த பங்குகளின் எண்ணிக்கை சுமார் 2.30 கோடி பங்குகளாகும். பாலிகேப் நிறுவனத்திற்கு தொழில் வாய்ப்புகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகள் திருப்திகரமாக உள்ளதாகவும், அதனை சார்ந்து சில பங்குச்சந்தை நிபுணர்கள் இந்நிறுவன பங்கிற்கு குறுகிய கால இலக்கு விலைகளை கூறியுள்ளனர். சந்தையில் இந்த நிறுவனத்திற்கு போட்டியாளர்களாக கேவல்ஸ் இந்தியா(Havells India), பினோலெக்ஸ் கேபிள்ஸ்(Finolex), கெய்(KEI Industries) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

 

ஐ.பி.ஓ. விண்ணப்பம் முடிந்து இரண்டாம் சந்தைக்கு வந்தவுடன் ஒரு நிறுவனத்தில் உடனடியாக முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவு வெளியீடு மற்றும் அதனை சார்ந்து சந்தை செயல்படும் தன்மையை உன்னிப்பாக ஆராய்ந்தவுடன் இது போன்ற பங்குகளில் முதலீட்டை மேற்கொள்வது நீண்ட கால முதலீட்டாளரின் சாராம்சமாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4 விடைகள்

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4 விடைகள்

Personal Finance – Survey / Polling

 

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நான்காம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகத்தின்(Intra Day) மூலம் விரைவாக செல்வம் சேர்க்கலாம் ?

 

விடை:   இல்லை.

 

விளக்கம்:  பொதுவாக பங்குச்சந்தை மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள் ரிஸ்க் நிறைந்தவை. சந்தையில் வர்த்தகத்தின் போது ஏற்ற-இறக்கம்(Volatility) எப்போதும் காணப்படும். பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஒருவர் நீண்ட கால நோக்கத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை நிச்சயம் பெறலாம்.

 

பங்குச்சந்தையில் நாம் பங்குகளை தினமும் வாங்கி விற்கலாம்(Intra day), குறுகிய காலத்தில்(Short term) வர்த்தகம் செய்யலாம் மற்றும் நீண்ட கால முதலீடாகவும் கொள்ளலாம். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவே ஆகும். சந்தையில் தினசரி வர்த்தகத்தில் சிறிய முதலீட்டில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தாலும், எப்போதும் இது சாத்தியமில்லை. உதாரணத்திற்கு நாம் தினமும் பங்குச்சந்தையில் 5000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்பது நமது ரிஸ்க் திறனை பொறுத்தது. ஐயாயிரம் ரூபாய் லாபம் என்பது போல, அதற்கு நேரெதிரான நஷ்டத்திற்கும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் தினசரி வர்த்தகத்தின் மூலம் நாம் விரைவாக செல்வம் சேர்ப்பதற்கு வாய்ப்பு குறைவே. குறுகிய காலத்தில் பங்குச்சந்தையின் மூலம் பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்று யாரவது உங்களிடம் சொன்னால், எச்சரிக்கை தேவை – இது ஏமாற்று பேர்வழிகளின் போன்சி திட்டங்களாக(Ponzi Schemes) இருக்கலாம்.

 

  • வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை ?

 

விடை: இல்லை (தவறு).

 

விளக்கம்: வங்கியில் கிடைக்கும் வட்டி வருமானம் வரி செலுத்துதலுக்கு

உட்பட்டது. சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதிகளுக்கு(Fixed Deposit) வழங்கப்படும் வட்டி, தனி நபர் ஒருவரின் வருமான வரம்பிற்கு உட்பட்டு வரி விதிக்கப்படும். வருமான வரிச்சட்டம் பிரிவு 80TTA ன் கீழ் ஒருவரின் சேமிப்பு கணக்கில் உள்ள வட்டி தொகை வருடத்திற்கு ரூ.10,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு மேலாக கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி உண்டு.

 

வைப்பு நிதிக்கு கிடைக்கப்பெறும் வட்டி தொகைக்கு வங்கிகள் பொதுவாக டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படும். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் வங்கிகள் பிடித்த தொகையை திரும்ப பெற சிறப்பு படிவத்தை(Form 15G & 15H) பூர்த்தி செய்யலாம். நடப்பு வருட பட்ஜெட் தாக்கலின் படி, உங்களின் வைப்பு நிதியில் உள்ள வட்டி தொகை(Interest Income) ரூ. 40,000 மற்றும் அதற்கு குறைவாக இருக்கும் நிலையில், வங்கிகள் உங்களிடம் பிடித்தம் செய்யாது. அதே வேளையில் நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், வரி தாக்கல் செய்யும் போது உங்களது வட்டி வருமானம் மற்றும் டி.டி.எஸ். பிடித்தம் பதிவு செய்யப்படும்.

 

  • நிதி சார்ந்த கல்வியை கற்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்குவது உண்டா ?

 

நாம் கற்கும் எந்தவொரு கல்வியும் நமக்கும், நமது சமுதாயத்திற்கும் பயன்படுமாறு இருத்தல் வேண்டும். அது பண்பாடு அல்லது தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி. நாம் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்வதற்கோ அல்லது தொழிலை தொடங்குவதற்கோ நம்மிடம் தேவையான அடிப்படை திறன்(Basic Skills) இருத்தல் வேண்டும். இதனை நாம் கற்ற கல்வி அல்லது வேலைப்பயிற்சி மூலமாகவோ நாம் பெற்றிருக்கலாம்.

 

நமக்கான வேலை அல்லது தொழிலை செய்வதற்கு முன், நாம் பல வருடங்கள் பள்ளி மற்றும் கல்லூரி கற்றலில் அனுபவம் பெறுகிறோம். பின்னர் ஒரு நிறுவனத்தில் ஆரம்பகட்ட நிலையில் வேலை செய்கிறோம். ஐந்து முதல் பத்து வருட தொழில் அனுபவத்திற்கு பிறகே, நாம் அந்த தொழிலை 50 சதவீதம் புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு வருகிறது.

 

பெரும்பாலோருக்கு ஒரே நிறுவனத்தில் தங்கள் வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நாம் சம்பாதிப்பதற்காகவே நம் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்யும் போது, பொருளாதாரம் அல்லது நிதி சார்ந்த அறிவை(Financial Education) கற்பதற்கு நாம் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம் ?

 

நமது குடும்பத்திற்கான மாத வரவு-செலவு, குழந்தைகளுக்கான எதிர்கால நிதி திட்டமிடல், நமக்கான ஓய்வு கால திட்டமிடல், அவசர காலங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்கிறோமா என்பதனை நாம் சிறிது நேரத்தை ஒதுக்கி தான் திட்டமிட வேண்டும்.

.

உலகின் மாபெரும் முதலீட்டாளர் மற்றும் பணக்காரர் வாரன் பப்பெட், பில் கேட்ஸ் போன்றோர் புத்தக வாசிப்புக்கு மட்டும் தினமும் ஆறு மணிநேரம் செலவிடுகின்றனர். நமக்கு நேரமில்லாமலா போகும் !

 

அட, நம்ம பேஸ்புக் நிறுவனர் மார்க்(Mark Zuckerberg) இரண்டு வாரத்துக்குள் ஒரு புத்தகத்தை படித்து முடித்து விடுகிறாராமே 🙂

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • அவசர கால நிதி(Emergency Fund) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?

 

விளக்கம்: அவசர கால நிதி (Emergency Fund) என்றால் என்ன மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நாம் ஏற்கனவே கீழ்காணும் கட்டுரையில் பதிவிட்டுள்ளோம்.

 

அவசர கால நிதிக்கான திட்டமிடல்

 

அவசரகால நிதியை உருவாக்குவது எப்படி ?

 

  • உங்களுக்கு ஒரு விலையுர்ந்த கைபேசி(Smart Phone) வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. உடனே EMI முறையில் வாங்குவீர்களா அல்லது அதற்கான பணத்தை சேர்த்து வைத்த பின் வாங்க முயல்வீர்களா ?

 

விளக்கம்: அவசரத்திற்கு தவணை திட்டம்(Equated Monthly Installment -EMI) உதவலாம். வருமுன் காப்பது நல்லதா, வந்த பின் வருந்துவதா ? மூளையை யோசிக்க விடுங்கள். கீழே உள்ள சிறு பதிவை படியுங்கள். பின்னர் நீங்களே சாமர்த்தியமாக முடிவெடுப்பீர்கள்.

 

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

 

நிறைவு பெறுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil