யெஸ் வங்கியில் முதலீடு செய்த ஆர்.ஜே
India’s Warren Buffet bought 1.29 Crore of Yes Bank Shares
இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் திரு. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தையில் மிகவும் பிரபலமானவர். ஆப்டெக்(Aptech) கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகிப்பவர் ஜுன்ஜுன்வாலா(Rakesh Jhunjhunwala).
கடந்த 2018ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை புள்ளிவிவரங்களின் படி, நாட்டின் 54வது பணக்காரராக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உள்ளார். பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய். தனது ஆப்டெக் நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை வைத்துள்ள ஜுன்ஜுன்வாலா பெரிய நிறுவனங்களிலும் முதலீட்டை பரவலாக்கி உள்ளார்.
டைட்டன்(Titan), லூபின்(Lupin), ஸ்பைஸ் ஜெட், ராலிஸ் இந்தியா, பெடரல் வங்கி, கரூர் வைசியா, டெல்டா கார்ப்(Delta Corp) என இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அமெரிக்க முதலீட்டாளர் மற்றும் பணக்காரர் திரு. வாரன் பப்பெட்டை போன்று ஜுன்ஜுன்வாலா முதலீட்டு உத்திகளை பயன்படுத்தி செல்வம் சேர்த்துள்ளார் என்றும், அதனால் இவர் இந்தியாவின் வாரன் பப்பெட் எனவும் சொல்லப்படுகிறார்.
வங்கி செயல்பாடுகளுக்கு தேவையான முதலீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் யெஸ் வங்கி கடந்த வாரம் 8500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று (04-11-2019) யெஸ் வங்கியின் பங்குகளை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வாங்கியுள்ளார். நேற்றைய சந்தை வர்த்தகத்தில் சுமார் 87 கோடி ரூபாய் மதிப்பிலான 1.29 கோடி யெஸ் வங்கி(YES Bank) பங்குகளை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் பங்குச்சந்தையில் வாங்கிய விலை பங்கு ஒன்றுக்கு ரூ. 67.10 எனவும், யெஸ் வங்கியின் மொத்த சந்தை மதிப்பில், ஜுன்ஜுன்வாலா வாங்கிய பங்குகளின் பங்களிப்பு 0.5 சதவீதம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
பொதுவாக பங்குச்சந்தையிலும், மற்ற செயல்பாடுகளிலும் வெற்றி பெற்றவர்களை நகல் எடுப்பது இயல்பு தான். இருப்பினும் முதலீடு சார்ந்த உத்தியில் இது பெரும்பாலும் வெற்றியடையாது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்தந்த பங்குகளில் முதலீடு செய்துள்ளார். நாமும் அவ்வாறு முதலீடு செய்தால் அவரை போன்று பணக்காரர் ஆகலாம் என பங்குகளை ஆராயாமல் முதலீடு செய்ய கூடாது. அவருடைய பங்கு அணுகுமுறை மற்றும் பங்குகளை வைத்திருக்கும் காலம் மாறுபடலாம்.
உதாரணத்திற்கு ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அடுத்த 10-20 வருடங்களுக்கு யெஸ் வங்கி பங்குகளை வைத்திருந்து காத்திருக்க தயாராகலாம். பங்கு விலை பெரும் வீழ்ச்சியடைந்தாலோ அல்லது நிறுவனமே காணாமல் போனாலோ, அவருக்கு முதலீட்டு இழப்பை தாங்கக்கூடிய பலம் உள்ளது. ஆனால் நம்மால் அவ்வாறு செய்ய முடியுமா என்பதே முதலீட்டு கேள்வி.
பொதுவாக எந்தவொரு முதலீட்டை பொறுத்தவரை, முதலீட்டு உத்திகள்(Investment Strategy) மற்றும் ரிஸ்க் தன்மை(Risk) அறிந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்கள் செய்கிறார்கள், ஊடகங்களில் பங்கு பரிந்துரை வருகிறது என்பதற்காக வெறுமென நமது பணத்தை வீணடிக்க கூடாது.
நாம் வாங்கப்போகும் பங்குகளின் தொழில் என்ன, அந்த தொழில் நமக்கு எளிய வகையில் புரிகிறதா, நிறுவனத்தின் லாப-நட்ட மற்றும் இருப்பு நிலை நிதி அறிக்கைகள் என்ன சொல்கிறது, நிர்வாக திறன், விற்பனை மற்றும் லாப வளர்ச்சி, எதிர்காலத்தில் நிறுவனத்திற்கான வாய்ப்புகள்(SWOT analysis) போன்றவற்றை தெரிந்து வைத்திருப்பது நல்லது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை