தேவைக்கும், விருப்பத்திற்குமான வேறுபாடு – ‘நச்’ புரிதல்கள்
Understanding between the Needs and Wants
தேவைக்கும், விருப்பத்திற்குமான இடைவெளியை நம்மால் புரிந்து கொண்டால் மட்டுமே, நிதி சார்ந்த வாழ்க்கையில் எந்த சிக்கலும் இல்லாமல் பயணிக்க முடியும். நமது மனதில் தோன்றியவை எல்லாம் தேவையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
நாம் இன்று உயிர் வாழ தேவையான உணவு, தட்பவெப்ப நிலையை சமாளிக்க தேவையான உடை மற்றும் இருப்பிடம், சுகாதாரம் மற்றும் சுத்தமான காற்று ஆகியவையே நமது இன்றியமையாத தேவையாகும்(Regular Needs). நாம் கற்கும் கல்வி முன்னர் அத்தியாவசியமானதாக சொல்லப்படவில்லை.
இருப்பினும், நாம் மேலே சொன்ன உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை அடைய இன்று கல்வி தேவைப்படுகிறது. அதற்கு குறைந்தபட்ச அறிவை பெறுதலே சிறந்தது. தற்சார்பு வாழ்க்கையை நோக்கி பயணிக்கும் தனிநபர் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டாலே, வாழ்வு இனிமையாக அமையும்.
தேவையை பற்றி சொல்லி விட்டோம். தேவையை நாம் எக்காரணத்திற்காகவும் தவிர்க்க இயலாது. விருப்பம் என்பது நமது மனம் கேட்க துவங்கியது, இவற்றில் தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது மனம் ஆசைப்பட்ட அனைத்தையும் தேவையாக மாற்றி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது அவசியம்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு நான்கு சக்கர வாகனம்(Car) வேண்டுமென்றால் நீங்கள் உடனே அதனை தேவையாக எண்ணி விட கூடாது. உங்களுக்கென்று நிறைய மாற்று வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் வசிக்கும் இடம் நகரமாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு அரசு பேருந்து, ஆட்டோ, கால் டாக்ஸி, ரயில் என பல வாய்ப்புகள் இருக்கலாம்.
வாகனம் வாங்குவதை, உங்களின் விருப்பமாக கொண்டு அதன் தினசரி தேவையென்ன மற்றும் அதனை வாங்குவதற்கு நீங்கள் எந்த மாதிரியான நிதித்திட்டமிடலை செய்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். என்னுடன் பணிபுரியும் சக அதிகாரி மற்றும் ஊழியர்கள், நண்பர்கள் இந்தந்த பொருட்களை வாங்கியுள்ளனர். நான் ஏன் வாங்க கூடாது என நிதி சிக்கலில் மாட்டி விட கூடாது.
விருப்பங்களும் விலையேற்றத்துக்கு காரணம்
நாம் சில வருடங்களுக்கு முன்பு, கடைக்கு செல்ல நடந்து சென்றிருப்போம் அல்லது சைக்கிளை பயன்படுத்தியிருப்போம். ஆனால், இப்போது இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம். இதுவும் நமது விருப்பத்தினால் தான். நமக்கு வயதாகி விட்டது, அதனால் நடக்க முடியாது எனில் நாம் வாங்கிய வாகனத்தை நமது குழந்தைகள் ஏன் அதனை உடனே பயன்படுத்த வேண்டும் ? அவர்களையும் சிறிது காலத்திற்கு நடக்க சொல்லி அல்லது சைக்கிளில் பயணம் செய்து கடைக்கு செல்ல அறிவுறுத்தலாமே. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏராளம், ஆனால் அவற்றால் நாம் உற்சாகத்தை இழந்து விடக்கூடாது.
தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இலவசமாக தண்ணீர் கிடைக்கும் போது, சுத்தமான நீர்(RO Water) வேண்டுமென ஆசைப்பட்டோம். ஆனால் இன்று தண்ணீர் கிடைத்தாலே போதும் என்ற தேவைக்காக தள்ளப்பட்டுள்ளோம்.
உங்களுடைய அனைத்து விருப்பங்களையும் பட்டியலிடுங்கள். அவற்றில் எந்தந்த விருப்பங்கள் முதன்மையாக (உண்மையில்) கருதப்படுகிறதோ, அவற்றை அடைவதற்கான நிதி திட்டமிடலை உருவாக்குங்கள். கடனாக வாங்கி சிரமப்படாதீர்கள்.
நான் எப்போதும் சொல்லும் அந்த கூற்று தான் இங்கேயும், ‘உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் கிடைத்தால் அதனை கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள் ? (அதற்காக அதிர்ஷ்டத்தை நம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாமே).
உங்களுக்கான வாய்ப்புகள்:
- ஆடம்பரமாக பொருட்களை வாங்கி குவித்து மகிழ்வேன்.
- எனது கடனை அடைத்து கொள்வேன்.
- வீட்டிற்குள் பத்திரமாக மறைத்து வைப்பேன்.
- பாதுகாப்பான வங்கி டெபாசிட்டில் போட்டு வைப்பேன்
- தொழில் செய்ய பயன்படுத்தி கொள்வேன்
- நல்ல வருமானம் தரக்கூடிய முதலீட்டை கண்டறிந்து, முதலீடு செய்வேன்.
- இன்னும் முடிவு செய்யவில்லை / என்ன செய்வதென்று தெரியவில்லை
தேவைகளை ஓரளவு குறைத்து கொள்ளலாம். விருப்பங்களை தேர்ந்தெடுத்து, சரியான நிதி திட்டமிடல் மூலம் அதனை அடைய முயற்சிக்கலாம். தேவைக்கு மட்டும் கடன் பெறுங்கள். அவசியமற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை