Category Archives: Stock Analysis

கேஸ்ட்ரால் இந்தியாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் – ரூ. 228 கோடி

கேஸ்ட்ரால் இந்தியாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் – ரூ. 228 கோடி 

Castrol India reported a Net profit of Rs.228 Crore – Q1CY22 Quarterly results

லண்டனை தலைமையிடமாக கொண்ட பிரிட்டிஷ் பெட்ரோலிய(BP) நிறுவனத்தின் துணை நிறுவனமான கேஸ்ட்ரால் இந்தியா, கடந்த 1910ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்தியாவின் வாகன மற்றும் தொழிற்துறைக்கு தேவையான  மசகு எண்ணெய்(Lubricant) உற்பத்தியில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக கேஸ்ட்ரால் இந்தியா உள்ளது.

ஐந்து உற்பத்தி ஆலைகள், 270 விநியோகதாரர்கள் மற்றும் 70,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் தனது சேவையை விரிவடைய செய்துள்ளது இந்நிறுவனம். 1982ம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட கேஸ்ட்ரால் இந்தியாவின் இன்றைய சந்தை மூலதன மதிப்பு ரூ.10,750 கோடி.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூட்டு ஒப்பந்தத்தின் படி, நாட்டில் புதிய எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைத்து கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தையும் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. இதன் மூலம் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான 49 சதவீத பங்குகளை வாங்கியிருந்தது. 

இவற்றில் 1,400 பெட்ரோல் பம்புகளையும், விமான போக்குவரத்துக்கு தேவையான 31 எரிபொருள் நிலையங்களையும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கையகப்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ரிலையன்ஸ்-பிரிட்டிஷ் பெட்ரோலியம்(Jio-Bp) மற்றும் டி.வி.எஸ். மோட்டார் ஆகிய நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான மின்னணு சார்ஜிங் உட்கட்டமைப்பை(EV Charging Infrastructure) ஏற்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 2022 காலாண்டில் கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.1,236 கோடியாகவும், செலவினம் 918 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் இயக்க லாபம்(Operating profit) 317 கோடி ரூபாயாகவும், இயக்க லாப விகிதம் 26 சதவீதமாகவும் உள்ளது. மார்ச் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.228 கோடி.

2021ம் ஆண்டின்(Calendar Year) முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.4,192 கோடியாகவும், நிகர லாபம் 758 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட ஆண்டின் வருவாய், கடந்த பத்து வருடங்களில் இல்லாத வளர்ச்சி அளவாகும். 

கடனில்லா நிறுவனமாக வலம் வரும் கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர்கள் பங்களிப்பு 51 சதவீதமாக உள்ளது. அன்னிய முதலீட்டாளர்களிடம் 11 சதவீத பங்குகளும், உள்ளூர் நிறுவனங்களிடம் 16 சதவீத பங்குகளும் உள்ளது. இவற்றில் எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் 11 சதவீத பங்குகளை வைத்திருப்பது கவனிக்கத்தக்கது. 

கேஸ்ட்ரால்(Castrol Ltd UK) நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் 150 நாடுகளுக்கும் மேலாக விற்பனையில் உள்ளது. போக்ஸ்வேகன், ஆடி(Audi), பி.எம்.டபுள்யூ(BMW) ஆகியவை இதன் முக்கிய வாடிக்கையாளர்கள். இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் விலை, பங்கு ஒன்றுக்கு 108 ரூபாயாக உள்ளது. இதன் உள்ளார்ந்த மதிப்பு(Intrinsic value with MoS) பங்கு ஒன்றுக்கு ரூ.140 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.      

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல்(Fundamental Analysis) மட்டுமே. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

2021-22ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.22,110 கோடி

2021-22ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.22,110 கோடி 

Infosys reported a Net Profit of Rs.22,110 Crore in the Financial year 2021-22 – Results

இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் கடந்த 1981ம் ஆண்டு துவங்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப பிரிவில் டி.சி.எஸ். நிறுவனத்திற்கு பிறகு நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக இன்போசிஸ் திகழ்கிறது. வருவாய் அடிப்படையில் உலகின் முதல் 1000 நிறுவனங்களில்(Public Company) ஒன்றாகவும் இந்நிறுவனம் உள்ளது. 

சுமார் 2.76 லட்சம் பணியாளர்களை கொண்டு இயங்கும் இன்போசிஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள். நிதித்துறை, காப்பீடு, உற்பத்தி மற்றும் பிற துறைகளுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கி கொண்டிருக்கும் இந்நிறுவனம் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் 200க்கும் அதிகமான அலுவலகங்களை கொண்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய பெருநிறுவன பல்கலைக்கழகம்(Corporate University) ஒன்றை சுமார் 337 ஏக்கர் பரப்பளவில் இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த வளாகத்தில் 400க்கும் மேற்பட்ட பயிற்றுனர்களும், 200 வகுப்பறைகளும் உள்ளன. தொழில்நுட்ப பயிற்சி மற்றும் அதனை சார்ந்த வேலைகளுக்கு இப்பல்கலைக்கழகம் பயன்படுகிறது. 

இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 7.35 லட்சம் கோடி ரூபாய். நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.07 ஆக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 13 சதவீதமாகவும், நிறுவனத்தின் சார்பாக பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 152 மடங்குகளில் உள்ளது. 

2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,21,641 கோடியாகவும், செலவினம் 90,150 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) 26 சதவீதமும், வரிக்கு முந்தைய லாபம் 30,110 கோடி ரூபாயாகவும் உள்ளது.

சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனம் நிகர லாபமாக 22,110 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. மார்ச் 2022 முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.73,252 கோடி. செயல்பாட்டு மூலதனம்(Working Capital) மார்ச் 2022ல் 48 நாட்களாக உள்ளது. 

அன்னிய முதலீட்டாளர்களிடம் சுமார் 33 சதவீத பங்குகளும்,  உள்நாட்டு முதலீட்டாளர்களிடம்(Domestic Institutional Investors) 16 சதவீத பங்குகளும் உள்ளது கவனிக்கத்தக்கது. எல்.ஐ.சி. இந்தியா(LIC) காப்பீடு நிறுவனத்திடம் சுமார் 6 சதவீத இன்போசிஸ் பங்குகள் கைவசம் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐ.டி.சி. காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் –  ரூ.4,156 கோடி

ஐ.டி.சி. காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் –  ரூ.4,156 கோடி 

ITC reported a Net Profit of Rs.4,156 Crore – Q3FY22 Results

2.89 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் ஐ.டி.சி. நிறுவனம் தனது 2021-22ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மூன்றாம் காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 16,634 கோடி ரூபாயாகவும், வரிக்கு முந்தைய லாபம் ரூ.5,492 கோடியாகவும் இருந்துள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனம் நிகர லாபமாக ரூ.4,156 கோடியை ஈட்டியுள்ளது. 2020-21ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய வருவாய் 31 சதவீதமும், நிகர லாபம் 12.7 சதவீதமுமாக வளர்ந்துள்ளது. சிகரெட்டு, நுகர்வோர் உணவு பொருட்கள், விவசாயம் சார்ந்த தொழில், பேப்பர் பொருட்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் காணப்பட்ட வருவாய் வளர்ச்சி இதன் ஒட்டுமொத்த வருவாயை அதிகரித்துள்ளது.

எப்.எம்.சி.ஜி.(FMCG) துறையின் கீழ் சுமார் 45 பிரிவுகளில் 700க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது ஐ.டி.சி. நிறுவனம். உணவுப்பொருட்களில் ஆசிர்வாத் கோதுமை, ITC Master Chef, Sunfeast, Bingo, Yippee, Fabelle, Candyman, சன்ரைஸ் மசாலா, டார்க் பேண்டஸி ஆகியவை இந்நிறுவனத்தின் பிரபல பிராண்டுகள்.

Classmate Notebooks, Mangaldeep, Fiama, Vivel, B Natural, Nimyle, Engage, Shower to Shower, Mom;s Magic, Paperkraft, AIM தீப்பெட்டிகள், Charmis, Dermafique, Savlon ஆகியவை நிறுவனத்தின் மற்ற துறை சார்ந்த பிராண்டுகள். ஐ.டி.சி. நிறுவனத்தின் ஹோட்டல் பிரிவில் கிராண்ட் சோழா, விண்ட்சார், கார்டெனியா மிகவும் பிரபலமானவை.

நீர் மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆகியவற்றில் நிறுவனம் திறம்பட நிர்வகித்து வருவதாக தெரிவித்துள்ளது. கார்பன் இல்லாத சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் நோக்கில் நிறுவனத்தின் தொழில் மேம்பட்டு வருகிறது.

நிறுவனத்திற்கு கடன் எதுவும்(Debt to Equity) பெரிதாக இல்லை. செப்டம்பர் 2021 காலாண்டு முடிவின் படி நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.57,955 கோடி. நிறுவனர்கள்(Promoter Holding) சார்பாக பங்குகள் எதுவும் நேரடியாக இல்லை. இருப்பினும் பொதுவெளியில் அவர்களிடம் குறிப்பிடத்தக்க பங்குகள் இருப்பது கவனிக்கத்தக்கது. அந்நிய முதலீட்டாளர்கள் சார்பில் சுமார் 44 சதவீத பங்குகள் உள்ளது. எல்.ஐ.சி. காப்பீட்டு(LIC India) நிறுவனத்திடம் சுமார் 16 சதவீத பங்குகளும் உள்ளன.

நூறு வருடத்திற்கு மேலான தொழில் அனுபவம் கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. சஞ்சீவ் பூரி உள்ளார். 1910ம் ஆண்டு W.D & H.O. Wills நிறுவனத்தால் துவங்கப்பட்ட இம்பீரியல் டொபாகோ கம்பெனி(Imperial Tobacco Company of India) தான் பின்னொரு காலத்தில் ஐ.டி.சி. லிமிடெட் என மாற்றம் பெற்றுள்ளது. புகையிலை தொழிலை ஆரம்ப நிலையாக கொண்டிருந்தாலும், தற்போது நுகர்வோர் உணவுப்பொருட்கள் துறையில் நாட்டின் தவிர்க்க முடியாத நிறுவனமாக ஐ.டி.சி. உருவாகியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பிரைமா பிளாஸ்டிக்ஸ் – பங்குச்சந்தை அலசல்

பிரைமா பிளாஸ்டிக்ஸ் – பங்குச்சந்தை அலசல் 

Prima Plastics Ltd – Fundamental Analysis – Stocks

பிளாஸ்டிக் நாற்காலிகள் என சொன்னவுடன் நமது நினைவுக்கு வருவது சுப்ரீம் மற்றும் நீல்கமல்(இந்தியாவில்) சேர்கள் தான். இதற்கு அடுத்தாற் போல நாற்காலி பிராண்டுகளில் பெயர் போன நிறுவனம் பிரைமா பிளாஸ்டிக்ஸ். பிளாஸ்டிக் வார்ப்பட பர்னிச்சர்கள்(Moulded Furniture) தயாரிப்பு பிரிவில் இந்நிறுவனம் சிறந்து விளங்குகிறது.

கடந்த 1993ம் ஆண்டு திரு. மன்கர்லால் பரேக் அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் பிரைமா பிளாஸ்டிக்ஸ். டாமன் நகரத்தை தலைமையிடமாக கொண்டு, தனது முதல் உற்பத்தி பிரிவை துவக்கியது இந்நிறுவனம். பிளாஸ்டிக் சேர்கள், தட்டுகள், காப்பிடப்பட்ட பெட்டி(Insulated Box), காய்கறி மற்றும் பழங்களை வைப்பதற்கான பெட்டிகள், சாலை பாதுகாப்புக்கு தேவையான பிளாஸ்டிக் உபகரணங்கள், குப்பை தொட்டிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், விடுதிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான இதர பிளாஸ்டிக் வகைகளை உற்பத்தி செய்து வருகிறது.

வெறுமென உற்பத்தியை மட்டும் கொண்டிருக்காமல் விற்பனையில் 20 நாடுகளுக்கும் மேலாக ஏற்றமதியும் செய்து வருகிறது பிரைமா பிளாஸ்டிக்ஸ் நிறுவனம். தனது தொழிலை ஆரம்பித்து 28 வருடங்கள் தான் எனினும், இன்று உலகளவில் ஏழு உற்பத்தி மையங்களையும், 450 விநியோகஸ்தர்கள் மற்றும் 5,500 டீலர்களையும் கொண்டுள்ளது.

மத்திய அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தனது உற்பத்தி கிளைகளை பரவியுள்ளது இந்நிறுவனம். Firstcry, Pepperfry மற்றும் அமேசான் போன்ற பிரபல இணைய பிராண்டுகளுடன் கைகோர்த்து தனது விற்பனையை செய்து வருகிறது. நிறுவனத்தின் பொருட்கள் பெரும்பாலும், ‘Prima’ என்ற பிராண்டின் கீழ் விற்பனையாகிறது.

1995ம் ஆண்டு பிரைமா பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் தனது பொது பங்கு வெளியீட்டை துவங்கியுள்ளது. தற்போது சந்தையில் உள்ள இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 118 கோடி ரூபாய். பங்கு ஒன்றின் விலை 107 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. புத்தக மதிப்பு 104 ரூபாயாகவும், முக மதிப்பு(Face value) 10 ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 58 சதவீதமாகவும், கடன்-பங்கு விகிதம் 0.28 ஆகவும் இருக்கிறது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. 2021ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 119 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம் ரூ.15 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 15 கோடி ரூபாய். அதாவது பங்கு ஒன்றுக்கான லாபம் ரூ.13.63(Earning per share).

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த பத்து வருடங்களில் 6 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 19 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு 103 கோடி ரூபாயாக உள்ளது கவனிக்கத்தக்கது.

2002ம் ஆண்டு நிறுவனர் காலமான பிறகு, திரு. பாஸ்கர் மன்கர்லால் பரேக், நிறுவனத்தின் தலைவராகவும், முழுநேர இயக்குனராகவும் உள்ளார். நிறுவனம் துவங்கிய காலத்திலிருந்து நிர்வாக இயக்குனராக திரு. திலீப் மன்கர்லால் பரேக் வகிக்கிறார். மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டிருக்கும் இந்நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் தற்போது 13 மடங்குகளில் உள்ளது. பங்கு மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் 14 சதவீதமாக இருக்கிறது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

How to track the Stocks(Shares) fundamentally ?

பங்குச்சந்தையில் நாம் காணும் அனைத்து பங்குகளும் வருடத்தின் எல்லா நாட்களிலும் வர்த்தகமாகும் என சொல்லிவிட முடியாது. பொதுவாக லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் நிறுவன பங்குகள் பெரும்பாலும் அனைத்து நாட்களிலும் வர்த்தகமாகி கொண்டிருக்கும். அதே வேளையில் ஸ்மால் கேப் பங்குகள் அப்படியல்ல. அவற்றில் வர்த்தக புழக்கம்(Liquidity) பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) அதிகமாக இருத்தல், பெரு நிறுவன முதலீட்டாளர்களிடம்(Institutional Investors) கைவசம் இல்லாதது மற்றும் பொதுவெளியில் மிகவும் குறைவான பங்குகளே அமைந்திருப்பது அதன் வர்த்தக புழக்கத்திற்கு காரணமாக அமையும். இருப்பினும் ‘மல்டி பேக்கர்(Multibagger)’ என சொல்லக்கூடிய பல மடங்கு லாபத்தை அளிக்கவல்லது இந்த ஸ்மால் கேப் நிறுவன பங்குகள்.

அதிக பங்குகளை கொண்டு வர்த்தகமாகும் அல்லது ஒரே நாளில் வர்த்தக அளவை அதிகமாக கொண்டிருக்கும் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலத்தில் வருவாயை அளிக்கும் என நாம் சொல்ல இயலாது. இதற்கு உதாரணமாக யூனிடெக், ஜே.பி.அசோசியேட்ஸ், யெஸ் பேங்க்,  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வோடபோன், ஜெட் ஏர்வேஸ் போன்ற பங்குகளை சொல்லலாம். நாள் வணிகத்துக்கு(Day Trading) இவை ஏற்றவையாக தெரிந்தாலும், உண்மையில் முதலீடு செய்பவர்களுக்கு நட்டத்தை மட்டும் தான் கொடுத்துள்ளன.

“A stock is not just a ticker symbol or an electronic blip; it is an ownership interest in an actual business, with an underlying value that does not depend on its share price.” – Benjamin Graham(Father of Value Investing), The Intelligent Investor

“ பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் என்பது வெறும் எண்கள் அல்ல. அவை ஒரு நிறுவனத்தின் தொழிலில் உங்களுக்கான உரிமையாகும். உண்மையான தொழிலின் மதிப்பு என்பது அதன் பங்கு விலையை சார்ந்திருக்க  வேண்டும் என்று அவசியமில்லை “ என முதலீட்டின் தந்தை என அழைக்கப்படும் திரு. பெஞ்சமின் கிரகாம் கூறுகிறார்.

நீண்டகாலத்தில் பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் செல்வத்தை ஏற்படுத்த வெறுமனே பங்குகளை வாங்கி விட்டால் மட்டும் போதாது. அதனை நமது சொந்த தொழிலை போல கண்காணிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

  • காலாண்டு முடிவுகளும், ஆண்டு பொதுக்கூட்டமும்:

சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும் தனது தொழிலுக்கான காலாண்டு மற்றும் நிதியாண்டு முடிவுகளை வெளியிட வேண்டியது அவசியம். இது அவர்களுக்கானதல்ல, நம்மை போன்ற முதலீட்டாளர்கள், நாம் வாங்கிய பங்கு நிறுவனத்தின் நிதிநிலை  அறிக்கைகளை(Financial Statements) அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. நிறுவனம் பின்னொரு காலத்தில் சந்திக்கவிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நாம் இது போன்ற முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நிறுவனத்தின் விற்பனையும், லாபமும் ஒவ்வொரு காலாண்டிலும் எப்படி உள்ளது, இதர வருமானம்(Other income) மட்டுமே அதிகரித்து வருகிறதா, நிறுவனத்தின் கடன் தன்மை எவ்வாறு, நிறுவனர்களின் பங்கு அடமானம், பங்குதாரர்களின் பங்களிப்பு(Shareholding Pattern), டிவிடெண்ட் அறிவிக்கப்படும் தேதி என அனைத்து தகவல்களையும் ஒருசேர காலாண்டு முடிவுகளில் பெற்று விடலாம். இதன் வாயிலாக பிற்காலத்தில் நமது முதலீட்டு முடிவை பரிசீலிக்க இவை உதவும்.

காலாண்டு முடிவுகளும், நிதியாண்டுக்கான நிதி அறிக்கைகளும் இணையத்தில்(BSE, NSE, Company website) எப்போதும் கிடைக்கப்பெறுகிறது. அதனை சரியான காலத்தில் வாசிப்பது முதலீட்டாளரான நமது கடமை. நிறுவனம் சார்பாக ஆண்டுக்கொரு முறை பங்குதாரர்கள் கூட்டமும்(Annual General Meeting – AGM) நடைபெறுகிறது. இணையவழி மற்றும் நேரடியாக சென்றும் இது போன்ற நிகழ்வுகளில் நாம் கலந்து கொண்டு, நிறுவனத்தின் மீது நமக்கு ஏற்படும் சந்தேகங்களையும், தொழில் சார்ந்த பொதுவான கேள்விகளையும் நாம் அங்கே கேட்கலாம்.

  • வாக்களிப்பதுஉங்கள் கடமை, பங்குச்சந்தையிலும்: 

ஒரு பங்குதாரராக நிறுவனத்தில் ஏற்படப்போகும் மாற்றத்திற்கும், தொழில் கொள்கைகளை தீர்மானிக்கவும் நமக்கான வாக்களிக்கும் உரிமை பங்குச்சந்தையில் உண்டு. “ என்னிடம் அந்த நிறுவனத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது, நான் அப்படி என்ன செய்து விட போகிறேன் “ என நீங்கள் கேட்கலாம். முன்னொரு காலத்தில் இருந்தது போல, இன்று நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) மற்றும் தொழில் ஆதிக்கம் பெரும்பான்மையாக இல்லை. இன்றையளவில் வங்கிகளும், பரஸ்பர நிதிகளும் தான் குறிப்பிடத்தக்க பங்குகளை ஒரு நிறுவன பங்குகளில் வைத்துள்ளது. இதற்கு அடுத்தாற் போல், சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தான்.

இயக்குனர் குழு மற்றும் நிறுவன பொறுப்புகளில் ஒருவரை நியமனம் செய்தல், நீக்குதல், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுதல் போன்றவற்றிற்கு உங்களது வாக்கு ஒரு நிறுவனத்திற்கு அவசியமானது. நீங்கள் வாக்களிக்க தவறும் நிலையில், முடிவுகளும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் டாட்டா குழுமத்தில் மிஸ்திரி குடும்ப பங்குகளின் தாக்கம், வேதாந்தா நிறுவனம் பங்குச்சந்தையை விட்டு வெளியேற முடியாமல் சென்ற தருணம், யெஸ் வங்கி பங்குகளின் முடக்கம், நிறுவனங்களின் பங்குகளை திரும்ப பெறும்(Buyback of Shares) முறை, போனஸ் பங்குகள், புதிய பங்கு வெளியீடு என பல்வேறு செயல்பாடுகளுக்கு வாக்களிப்பதன் மூலமே நிறைவேற்ற முடியும்.

வாக்குகளை நேரடியாக அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இணைய வழியிலான(E-Voting) வாக்களிக்கும் வசதியும் இன்று நடைமுறையில் உண்டு. இது போன்ற சேவையை NSDL மற்றும் CDSL தளங்கள் நமக்காக செய்து கொடுக்கிறது. இதற்கான சேவை கட்டணத்தை(Brokerage & DP Charges) நாம் ஏற்கனவே பங்குகளை வாங்கும் போதே அந்த நிறுவனத்திற்கு செலுத்தி விட்டோம் என்பதனை நினைவில் கொள்ளவும்.

  • நிறுவனங்களை நேரடியாக காணுங்கள், தொழிற்சாலைக்கு செல்லுங்கள்:

ஒரு நிறுவன பங்கை நாம் இணையம் வழியாக வாங்கி விட்டால், அதனோடு பங்கு முதலீடு முடிந்து விடப்போவதில்லை. இணையம் மட்டும் பங்கு முதலீட்டுக்கான வாழ்க்கையல்ல. அவை நமக்கான எளிய கட்டமைப்பு. நீங்கள் குடியிருக்கும் அல்லது வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில், நீங்கள் வாங்கிய பங்கு நிறுவன அலுவலகம் அல்லது தொழிற்சாலை அமைந்திருந்தால் அங்கே சென்று பாருங்கள்.

நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவை எப்படி என நேரடியாக கண்காணியுங்கள். முடிந்தால், நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவிடம் அனுமதி பெற்று அவர்களது தொழிற்சாலையை சுற்றி பாருங்கள். இதற்கான வசதியை ஒரு நிறுவனத்தின் கம்பெனி செயலாளர்(Company Secretary) பொதுவாக செய்து கொடுப்பார். நிறுவனம் சார்ந்த ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் அவருக்கு மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

உண்மையில் எந்த தொழிலையும், அலுவலகத்தையும் கொண்டிருக்காமல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் ஷெல் நிறுவனங்களும்(Shell companies) உண்டு என்பது சந்தை வரலாறு. சந்தையில் அவற்றின் பங்கு விலை நாள்தோறும் ஏற்றமடைகிறது என்ற ஒற்றை காரணத்திற்காக பங்குகளை வாங்காமல், நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளை கண்காணிப்பதும் அவசியம்.

நண்பர்களோடு சுற்றுலா செல்வது போல, ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு நிறுவனத்தை நேரடியாக சுற்றி பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு அருகில் இருக்கும் கடைகளில் விற்பனையாகும் பொருட்கள் மற்றும் சேவைகள்:

நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைகள் எப்.எம்.சி.ஜி.(FMCG) பொருட்களை விற்கும்(Retail & Super Market) கடைகளாக தான் இருக்கும். நம் நாட்டை பொறுத்தவரை எப்.எம்.சி.ஜி. துறையில் காணப்படும் பிரபலமான பொருட்கள் பெரும்பாலும் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பொருட்களாக தான் இருக்கும். உதாரணமாக இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி., டாபர், கோத்ரேஜ், மாரிகோ, கோல்கேட், பஜாஜ், டி-மார்ட் போன்ற நிறுவனங்கள் தான். நமது நகரில் அல்லது குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளில் பெரும்பாலும் தென்படும் பிராண்டுகளின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம். பேச்சுவாக்கில் கடை உரிமையாளர் அல்லது விற்பனை மேலாளரிடம் பொருட்களின் கொள்முதல் மற்றும் விற்பனை எப்படி உள்ளதென அறிய முற்படலாம். இதற்கெல்லாம் நாம் நிதி மேலாண்மையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை (ரியல் எஸ்டேட் முதலீட்டில் விசாரிக்கிறோமே !).

  • துறை சார்ந்த நண்பர்களிடம் கலந்துரையாடுங்கள்:

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் பல துறைகளை சார்ந்தவை. வங்கிகள், நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், வாகனம், நுகர்வோர் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள்(Consumer Durables), எண்ணெய் சுத்திகரிப்பு, எரிசக்தி, விவசாயம், கல்வி, மின்னணு பொருட்கள், பொழுதுபோக்கு, மருத்துவம், கட்டுமானம்,காப்பீடு, காலணிகள், ஏற்றுமதி, ஜவுளி, தொலைத்தொடர்பு என பல துறைகளை உள்ளடக்கியவை.

நீங்கள் தொழில் செய்யும் நபராக இருந்தால், உங்களது துறையில் உள்ள சாதக-பாதகங்கள் உங்களுக்கு பொதுவாக தெரிந்திருக்கும். பொருளாதார மந்தநிலை காலங்களில் உங்களது தொழில் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும், அரசு கொள்கைகள் உங்கள் தொழிலுக்கு சாதகமாக உள்ளதா எனும் விஷயங்கள் உங்களது முதலீட்டுக்கான அடிப்படை காரணிகள். இதனை நீங்கள் பங்குச்சந்தையிலும் பயன்படுத்தலாம்.

ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யும் நபராக இருந்தால், உங்கள் துறையில் உள்ள சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் துறை சார்ந்த ஆலோசனைகள், விவாதங்களை முன் வைக்கலாம். இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் உங்களது பங்கு முதலீட்டுக்கு உதவும்.

நண்பர் ஒருவர் அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) துறையின் முக்கிய பதவியில் வேலை பார்த்து வந்தால் அவரிடம் துறை சார்ந்த வளர்ச்சியையும், எதிர்காலத்தில் இவற்றின் தாக்கம் எப்படி உள்ளதென கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இன்று பங்கு முதலீடு சார்ந்த கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையம் வாயிலாக கிளப் ஹவுஸ், முகநூல்(Facebook Events), வலைப்பக்க நிரல்கள்(Webinars) நாள்தோறும் நடைபெறுகின்றன. இவற்றில் கலந்து கொண்டு பங்கு சார்ந்த தொழில் புரிதலை ஏற்படுத்தி கொள்ளலாம். அதே வேளையில் நாம் அதிகாரபூர்வ மற்றும் அரசு அங்கீகரிக்கும் நிறுவன தளம் மற்றும் ஆலோசகர்களிடம் தகவல்களை பெறுகிறோமா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

வாட்சப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் யாரோ ஒருவர் பரிந்துரைத்தார் என பங்குகளை வாங்கி பின்னர் நட்டமடைவதை தவிர்க்க மேலே சொன்ன விஷயங்கள் நமக்கு நீண்டகாலத்தில் பயனளிக்கும். வெறுமென ஊக விஷயங்களுக்கு பின்னால் நகர்வதை விட, நாமே நமது தொழிலுக்கான(பங்கு முதலீடு) அக்கறையை கொண்டிருப்பது நலம்.

பங்குகளை கண்காணிக்க நேரமில்லை என சொல்பவர்களுக்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள்(Equity Mutual Funds) உள்ளது. உங்களுக்காக ஒரு பண்ட் மேனேஜர் அங்கே நிர்வகிக்க தயாராக உள்ளார். நீண்டகாலத்தில் முதலீடு செய்து விட்டு செல்வமீட்டலாம்.

பங்குகள் உங்களின் செல்ல(செல்வ) குழந்தைகள், அவற்றை வளரும் போது நீங்கள் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வந்தால், பின்னொரு காலத்தில் அவை உங்களை கவனித்து கொள்ளும் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேசிய பங்குச்சந்தைக்கு தயாராகும் அனுக் பார்மா நிறுவனம்

தேசிய பங்குச்சந்தைக்கு தயாராகும் அனுக் பார்மா நிறுவனம் 

Anuh Pharma will be listed soon in NSE(National Stock Exchange)

எஸ்.கே. குழுமத்தின் அங்கமான அனுக் பார்மா நிறுவனம் மருந்து தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறது. 61 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்நிறுவனம் காசநோய்க்கு எதிரான மருந்து தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது. அனுக் பார்மா பாக்டீரியா, மலேரியா, கார்டிகோஸ்டீராய்டுகள் ஆகியவற்றை எதிர்க்க தேவையான மருந்து பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. இது போல பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

530 கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்ட ஸ்மால் கேப் நிறுவனமாக இருந்தாலும், கடந்த 50 வருடங்களுக்கு மேலாக மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.23 என்ற விகிதத்திலும், நிறுவனர்களின் பங்களிப்பு 70 சதவீதமாக உள்ளது.

செப்டம்பர் 2021 காலாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 172 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது சந்தை மூலதன மதிப்பில் மூன்றில் ஒரு பங்காக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் அனுக் பார்மா நிறுவனத்தின் முக மதிப்பு(Face value) 10 ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டது.

2006ம் வருடத்தின் ஜனவரி மாதத்தில் பங்கு ஒன்றுக்கு ரூ.20 ஆக வர்த்தகமான நிலையில், நாம் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீட்டு மதிப்பு அப்போது 20,000 ரூபாயாக இருந்திருக்கும். முகமதிப்பு மாற்றியமைக்கப்பட்ட பின்பு நமது கையிருப்பு பங்குகள் 2,000 (முதலீட்டு மதிப்பில் மாற்றமில்லை).

அதே வருடத்தில் ஒன்றுக்கு ஒன்று போனஸ்(1:1 Bonus issue) பங்குகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, நமது கையில் உள்ள 2,000 பங்குகள் 4,000 பங்குகளாக மாறியிருக்கும். பின்பு 2010ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள்(2:1 Bonus issue) என்ற விகிதத்தில் போனஸ் பங்குகள் வெளியிடப்பட்டது. இப்போது நமது கையிருப்பு 12,000 பங்குகள்.

மீண்டும் 2015ம் ஆண்டில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற அடிப்படையில்  போனஸ் பங்குகள். இந்த நிகழ்வுக்கு பின்பு நம்மிடம் 36,000 பங்குகளாக சொல்லப்பட்டிருக்கும். கடந்தாண்டு (செப்டம்பர் 2020) கொரோனா காலத்திலும் 1:1 போனஸ் பங்குகள் அறிவிக்கப்பட்டது. இதனையும் நாம் கணக்கில் கொண்டால் இப்போது 72,000 பங்குகள் நம் கைவசம் இருந்திருக்கும். நடப்பில்(03-08-2021) அனுக் பார்மா நிறுவனத்தின் பங்கு ஒன்று அதிகபட்சமாக 150 ரூபாய்க்கு வர்த்தகமானது. 15 வருடங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் 1000 பங்குகளை வாங்கியிருந்தால் நமது முதலீடு அப்போதைய நிலையில் ரூ.20,000 ஆக இருந்திருக்கும். சொல்லப்பட்ட ஆகஸ்ட் 2021 விலையில் நம்மிடம் ரூ.1.08 கோடியும், 72000 பங்குகளும் கைவசம் இருக்கும்(பங்குகளை இதுவரை விற்காமல் இருந்திருந்தால் !). தற்போது இந்த பங்கு ரூ.105 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே வர்த்தகமாகும் இந்நிறுவன பங்கு, கடந்த நவம்பர் 6ம் தேதி நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிறுவனத்தை பட்டியலிடுவதற்கான முடிவை பங்குதாரர்களிடம் இருந்து பெற்றது. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு(Q2FY22 results) முடிவுகளின் நிகழ்விலும் உறுதி செய்யப்பட்டது. அடுத்த இரு மாதங்களுக்குள் அனுக் பார்மா நிறுவனம், தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என நிறுவனமும் கூறியுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி,  வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

Trading activity of Foreign Institutional Investors(FII) in the Indian Equity Market 

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதமும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி(Nifty50) குறியீடு 52 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நடப்பு வருடத்தில் சொல்லப்பட்ட இரண்டு குறியீடுகளும் இதுவரை 20 சதவீதத்திற்கு மேல் ஏற்றமடைந்துள்ளது. சமீபத்தில் இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான நிப்டி மற்றும் சென்செக்ஸ் தனது வாழ்நாள் உச்சபட்ச விலையில் வர்த்தகமானது.

தற்போது உச்சநிலையிலிருந்து, இந்த இரண்டு குறியீடுகளும் 5 சதவீதம் இறக்கம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. எனினும் இதனை மிகப்பெரிய இறக்கம் என நாம் சொல்லிவிட முடியாது. நடப்பு அக்டோபர் மாதம் 29ம் தேதியுடன் முடிவடைந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 59,307 புள்ளிகளுடனும், நிப்டி 17,672 புள்ளிகளுடனும் உள்ளது.

கடந்தாண்டின் கொரோனா பெருந்தொற்றுக்கு(Covid-19) பிறகான காலத்தில் பங்குச்சந்தை முதலீடும், டீமேட் கணக்கு துவங்கும் எண்ணிக்கைகளும் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. பெருந்தொற்றுக்கு முந்தைய காலமான 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் காணப்பட்ட உலக பொருளாதார மந்தநிலை, நாடுகளிடையேயான வர்த்தக போர், போர் பதற்றம், காலநிலை மாற்றங்கள் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

வங்கிகளில் காணப்படும் வட்டி விகித குறைவு, பணவீக்க விகிதம் மற்றும் வீட்டுமனை துறையில் உள்ள சுணக்க நிலை ஆகியவற்றால் பங்குச்சந்தை மற்றும் மெய்நிகர் நாணய(அரசு அங்கீகரிக்கப்படாத – Unregulated) முதலீடு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் பணவீக்க விகிதம் அதிகரிக்கும் நிலையில், இது போன்ற முதலீடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். சந்தை இறக்கம் காணும் போது தங்கம் போன்ற முதலீடுகளின் வருவாய் அதிகரிக்க கூடும்.

இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை பெரும்பாலும் அன்னிய முதலீட்டாளர்களின் கை ஓங்கி தான் இருக்கும். பங்குச்சந்தைக்கும், கடன் பத்திரங்களுக்கும் அன்னிய முதலீட்டாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் முதலீடு கணிசமாக இருக்கும். கடந்த ஒன்றரை வருடத்தில் காணப்பட்ட பங்குச்சந்தை ஏற்றத்தால், தற்போது அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் அன்னிய முதலீட்டாளர்கள் இதுவரை(அக்டோபர் மாத முடிவில்) ரூ.68,500 கோடி என்ற அளவில் இந்திய பங்குச்சந்தையில் பங்குகளை விற்றுள்ளனர். இதற்கு நேர்மாறாக உள்நாட்டு முதலீடு(Domestic Institutional Investors) 56,179 கோடி ரூபாய் சந்தைக்கு வந்துள்ளது. சமீபத்தில் மதிப்பீட்டு மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் சில, இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய மதிப்பு ஏற்றக்கொள்ளக்கூடியாத இல்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FII & DII Trading Activity

அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த, கடந்த ஏழு மாதங்களில் அன்னிய முதலீட்டாளர்கள் 11.75 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், ரூ.12.43 லட்சம் கோடி மதிப்பில் பங்குகளை விற்றும் உள்ளனர். நிகர விற்பனையாக 68,500 கோடி ரூபாய் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில், உள்ளூர் முதலீட்டாளர்கள் 8.62 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியும், 8.06 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர். இதன் காரணமாக அவர்களது நிகர கொள்முதல்(Net Purchase) ரூ.56,179 கோடியாக உள்ளது.

அதிகபட்சமாக அக்டோபர் மாதத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் 25,572 கோடி ரூபாயை நிகர விற்பனையாக கொண்டுள்ளனர். இதே மாதத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் 4,470 கோடி ரூபாயை நிகர கொள்முதலாக கொண்டுள்ளனர். சந்தையில் உள்ள பல நிறுவன பங்குகளின் விலை, அதன் வருவாயுடன் எந்த தொடர்பும் இல்லாமல் அதிகபட்ச விலையில் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும், அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) நிறைவு செய்யும் நல்ல நிறுவன பங்குகள் மலிவான விலையில் கிடைக்கப்பெறுவதும் தற்சமயம் உள்ளது.

சந்தை புதிய உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், தரமான நிறுவனங்களை தள்ளுபடி விலையில்(Discounted Value) வாங்கவில்லையென்றால், முதலீட்டில் அதிகப்படியான சரிவை சந்திக்கும் காலமாக தற்போது நிலவுகிறது. சந்தையில் புதிதாக பட்டியலிடப்படும் நிறுவனங்கள் தங்களுக்கான முதலீட்டை விரைவாக பெற வேண்டிய நிலையில், புதிய முதலீட்டாளர்கள் சற்று பொறுமை காத்து, பங்குகளை ஆராய்ந்து நீண்டகால முதலீட்டிற்கு தயாராக வேண்டியது அவசியம். முதலீட்டை எப்போதும் பரவலாக்கம்(Asset Allocation & Diversification) செய்வதன் காரணமாக, நட்டத்தை தவிர்க்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐ.டி.சி. நிறுவன இரண்டாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.3,714 கோடி

ஐ.டி.சி. நிறுவன இரண்டாம் காலாண்டு நிகர லாபம் – ரூ.3,714 கோடி

ITC reported a Net Profit of Rs.3,714 Crore – Q2FY22 results

பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் ஐ.டி.சி. நிறுவனம், புகையிலையை தனது முதன்மை தொழிலாக கொண்டிருந்தாலும், இன்று நுகர்வோர் பொருட்கள், ஆடைகள், நட்சத்திர விடுதிகள், பேப்பர் பொருட்கள், பேக்கேஜிங்(Packaging), விவசாயம் சார்ந்த பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை என தனது தொழிலை விரிவடைய செய்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் சுமார் 2.94 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்டிருக்கும் இந்நிறுவனம் கடனில்லா நிறுவனமாகவும்(Debt Free) இருப்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 564 மடங்குகளில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது.

2020-21ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 49,257 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.13,161 கோடியாகவும் இருந்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) ஆண்டுக்கு சராசரியாக 35 சதவீதம் என்ற அளவில் உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு மார்ச் 2021 முடிவில் ரூ.59,100 கோடி.

நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு(ஜூலை – செப்டம்பர் Quarterly results) முடிவுகளை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.13,751 கோடியாகவும், செலவினம் 8,740 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 469 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டின் நிகர லாபமாக ரூ.3,714 கோடி இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.5,055 கோடி. கடந்த ஜூலை 2021 காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போதைய வருவாய் 4 சதவீதமும், நிகர லாபம் 13 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது.

முந்தைய வருடத்தின்(2020-21) இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, நிறுவனத்தின் வருவாய் தற்போது 14 சதவீதமும், நிகர லாபம் 10 சதவீதமும் உயர்ந்துள்ளது. எனினும் கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்களின் வருவாய், கடந்த நிதியாண்டை காட்டிலும் நடப்பில் அதிகரித்து காணப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 3,259 கோடி

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 3,259 கோடி 

HCL Technologies reported a net profit of Rs.3,259 Crore – Q2FY22 results

3.40 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கொண்ட எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப சேவையை தனது தொழிலாக கொண்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திரு. சிவ நாடார் அவர்களால், கடந்த 1976ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் இன்று பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாகும்.

2021ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் லாபம் மட்டுமே 1.5 பில்லியன் டாலர். சுமார் இரண்டு லட்சம் பணியாளர்களை கொண்டு 50க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது கிளைகளை பரவியுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய தலைவராக சிவ நாடார் அவர்களின் புதல்வி திருமதி. ரோஷ்ணி உள்ளார். இவர் ஐ.டி. நிறுவனத்தை(Listed Company) வழிநடத்தும் நாட்டின் முதல் பெண் தலைவராகவும் பார்க்கப்படுகிறார்.

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகளில்(நடப்பு 2021) ரோஷ்ணியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் மொத்த வருவாய் பங்களிப்பில் அமெரிக்கா 58 சதவீதமும், ஐரோப்பா 27 சதவீதமும் கொண்டுள்ளது. உள்நாட்டில் ஈட்டப்படும் வருவாய் மூன்று சதவீதம் மட்டுமே.

நிதிச்சேவை, உற்பத்தி, சில்லறை வணிகம், தொலைத்தொடர்பு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், வாழ்வியல் மற்றும் ஆரோக்கியம் என பல துறைகளுக்கு தேவையான தகவல் தொழில்நுட்ப சேவையை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் காலாண்டு முடிவுகளை(Quarterly results) எச்.சி.எல். நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. செப்டம்பர் 2021 காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 20,655 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.15,633 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,259 கோடி.

இயக்க லாப விகிதம்(OPM) சராசரியாக ஒவ்வொரு காலாண்டிலும் 25 சதவீதம் என்ற அளவை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.60,133 கோடியாகவும், விற்பனை வளர்ச்சி கடந்த பத்து ஆண்டுகளில் 20 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாகவும், கடன்-பங்கு விகிதம் 0.10 ஆகவும் இருக்கிறது.

நிறுவனர் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம் 42 மடங்குகளிலும், பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 10 வருடங்களில் 25 சதவீதம் வளர்ந்துள்ளது. 2020ம் ஆண்டின் ஏப்ரல் மாத துவக்கத்தில் பங்கு ஒன்றுக்கு 400 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகி கொண்டிருந்த நிலையில்(உள்ளார்ந்த மதிப்புக்கு கீழ் – Undervalued), தற்போது 1,250 ரூபாய் என்ற விலையில் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அமர ராஜா பேட்டரிஸ் – முதலாம் காலாண்டு நிகர லாபம் ரூ.124 கோடி

அமர ராஜா பேட்டரிஸ் – முதலாம் காலாண்டு நிகர லாபம் ரூ.124 கோடி 

Amara Raja Batteries reported a Net Profit of Rs.124 Crore – Q1FY22 results

ஆந்திர மாநிலம் திருப்பதியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய பன்னாட்டு குழும நிறுவனம், அமர ராஜா பேட்டரிஸ். பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் இந்நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ், பேட்டரி, சோலார்,  உட்கட்டமைப்பு, பதப்படுத்தப்பட்ட உணவு, பொழுதுபோக்கு மற்றும் ஊடகம் என பல துறைகளில் தொழில் புரிந்து வருகிறது. அயர்லாந்து நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ஜான்சன் கண்ட்ரோல்(Johnson Controls) நிறுவனத்துடன் இணைந்து கூட்டு முயற்சியில் தனது சேவையை விரிவாக்கம் செய்துள்ளது அமர ராஜா.

வாகனத்துறைக்கு தேவையான பேட்டரி தயாரிப்பில், எக்சைட் இண்டஸ்ட்ரீஸ்(Exide) நிறுவனத்திற்கு அடுத்தாற்போல் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக அமர ராஜா பேட்டரிஸ் உள்ளது. 15,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு, உலகெங்கும் தனது சேவைகளை பரவலாக்கியுள்ளது இந்நிறுவனம்.

அமரான்(Amaron), குவாண்டா, கல்லா(Galla), பவர் ஜோன்(Powerzone) என பல பிராண்டுகளில் இதன் தயாரிப்பு பொருட்கள் சந்தையில் விற்பனையாகின்றன. நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.12,300 கோடி. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 246 ரூபாய் விலையிலும், சந்தை விலை பங்கு ஒன்றுக்கு ரூ.720 என்ற விலையிலும் வர்த்தகமாகி வருகிறது.

நிறுவனத்தின் கடன்-பங்கு(Debt to Equity) 0.02 என்ற விகிதத்திலும், வட்டி பாதுகாப்பு விகிதம் 88 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 28 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. கடந்த 2018ம் ஆண்டு ஜான்சன் கண்ட்ரோல் நிறுவனம் தனது 26 சதவீத பங்குகளை விற்ற பின்னர், அமர ராஜா நிறுவனர்களின் பங்களிப்பு 28 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், அன்னிய முதலீட்டாளர்களிடம் 22 சதவீத பங்குகளும், உள்ளூர் முதலீட்டு மற்றும் நிதி நிறுவனங்களிடம் 15 சதவீத பங்குகளும் கையிருப்பில் உள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 1,886 கோடி ரூபாயாகவும், செலவினம் 1,636 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டில்(Quarterly results) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.124 கோடி. மார்ச் 2021 ஆண்டு முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.4,193 கோடி. இதர வருமானமாக ஜூன் காலாண்டில் 17 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. முக்கிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு விற்பனைக்கு பிறகு, இந்நிறுவனத்தின் பங்கு விலை பெரிய ஏற்றம் பெறவில்லை. இருப்பினும் தனது துறையின் தவிர்க்க முடியாத நிறுவனமாக அமர ராஜா பேட்டரிஸ் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com