All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

நாட்டின் செப்டம்பர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 5.02 சதவீதம்

நாட்டின் செப்டம்பர் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 5.02 சதவீதம்  

India’s Retail Inflation rate in the month of September 2023 – 5.02 Percent

நாட்டின் சில்லறை விலை(நுகர்வோர்) பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 6.83 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாத முடிவில் 5.02 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. தற்போது சொல்லப்பட்ட செப்டம்பர் மாத பணவீக்க விகிதம், கடந்த மூன்று மாதங்களில் காணப்பட்ட குறைந்த அளவாக உள்ளது.

செப்டம்பர் மாதத்தில் உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் சற்று குறைந்து 6.56 சதவீதமாக முடிவடைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9.94 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலையும் 4.61 சதவீதமாக குறைந்துள்ளது.

வீட்டுமனை, ஒளி மற்றும் எரிபொருட்கள், புகையிலை பொருட்களின் விலையும் செப்டம்பர் மாதத்தில் குறைந்து காணப்படுகிறது. கடந்த 2013ம் ஆண்டின் டிசம்பர் மாதத்திலிருந்து காணுகையில், இரு மாதங்களுக்கு இடையிலான நுகர்வோர் விலை வீழ்ச்சி தற்போதைய ஆகஸ்ட் – செப்டம்பர் 2023 காலத்தில் தான் காணப்படுகிறது.

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்க(Consumer Price Index – CPI) கணக்கீட்டில் உணவுப்பொருட்களின் பங்களிப்பு மட்டும் சுமார் 46 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது. செப்டம்பர் மாத பணவீக்க விகிதம், சந்தை மதிப்பீட்டை(5.5 சதவீதம்) காட்டிலும் குறைவாக காணப்படுகிறது. 

இந்தியாவில் பணவீக்க விலைக் குறியீடு இரு வகைகளில் கணக்கிடப்படுகிறது – சில்லரை(நுகர்வோர்) விலை மற்றும் மொத்த விலை பணவீக்க விகிதம். நாட்டின் நுகர்வோர் விலை அதிக ஏற்ற – இறக்கமாக இருப்பதற்கு காரணமாக பெரும்பாலும் நாம் எரிசக்தி இறக்குமதியை சார்ந்திருப்பது தான். 

இது போக பருவமழையின் நிச்சயமற்ற தாக்கம், மேம்படுத்தப்படாத சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், அதிக நிதிப் பற்றாக்குறையும் பணவீக்க விகித மாற்றங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடனில்லா பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்றால் என்ன ?

கடனில்லா பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்றால் என்ன ?

What means a Debt Free Listed Company in the Stock Market ?

கடனில்லா நிறுவனங்கள் என்பது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு அதன் இருப்புநிலை அறிக்கையில்(Balance Sheet) கடன் எதுவும் இருக்க கூடாது. பொதுவாக ஒரு நிறுவனம் தனது தொழிலை விரிவாக்கம் செய்ய அல்லது தொடர்ந்து தொழில் புரிய கடன் வாங்கலாம். இந்த கடன் பங்குகளாகவோ அல்லது கடன் பத்திரங்களாகவோ(Debt Securities) இருக்கலாம். 

பங்குகளாக கடன் பெறப்பட்டிருந்தால், பின்னாளில் நிறுவனத்தின் லாபத்தில் பங்குதாரர்களுக்கும் பங்குண்டு. அதே வேளையில் கடன் பத்திரங்களின் மூலம்  பெறப்படும் கடன் தொகைக்கு, பின்னாளில் வட்டியுடன் சேர்த்து அசல் தொகையை நிறுவனம், முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டும்.

நிறுவனத்தின் கடன் பொதுவாக குறுகிய கால கடனாகவோ அல்லது நீண்ட கால கடனாகவோ இருக்கலாம். நிகர கடன்(Net Debt) எனும் போது, ஒரு நிறுவனத்திற்கு கடன் இருக்கலாம். அவை குறுகிய கால அல்லது நீண்ட கால கடனாக இருக்கக்கூடும். அந்த கடனை நிறுவனம் இன்றே செலுத்த வேண்டும் என்ற நிலை வந்தால், நிறுவனத்திடம் அதனை செலுத்துவதற்கான ரொக்க தொகை(Cash & Cash Equivalents) உள்ளதா என்பதை ஆராய்வது, நிகர கடனாகும்.

உதாரணமாக, ஒரு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிதியாண்டின் முடிவில் அதன் இருப்புநிலை அறிக்கையின் படி, ரூ.50 கோடி கடன் உள்ளதாக எடுத்து கொள்வோம். இப்போது, சொல்லப்பட்ட ஆண்டின் முடிவில் அந்த நிறுவனத்திடம் ரூ.25 கோடி ரொக்கமாக இருக்கும் நிலையில், அந்த நிறுவனம் தனது கடனை குறைக்கும் பட்சத்தில், மீதமிருக்கும் கடன் ரூ.25 கோடி மட்டுமே.

Net Debt = Borrowings(Short Term Debt + Long Term Debt) – Cash & Cash Equivalents

இதுவே நிறுவனத்திடம் ரொக்க தொகை ரூ.50 கோடியாக இருந்து கடனை அடைக்கும் நிலையில், நிறுவனத்திடம் தற்போது கடன் எதுவும் இருக்காது. இதனை தான் நாம், ‘நிகர கடனில்லா தன்மை(Net Debt Free)’ என்கிறோம். இங்கே நிறுவனம் அந்த கடனை உடனடியாக உண்மையில் செலுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. கடனை திரும்ப செலுத்த கூடிய நிலை ஏற்பட்டால் என்ற தன்மையை மட்டுமே இந்த விதிமுறை கூறுகிறது.

நிறுவனத்தின் கடன் தன்மையை புரிந்து கொள்ள மற்றொரு முறையை நாம் காணலாம். அதாவது நிறுவனத்தின் மொத்த கடனை, அதன் பங்குதாரர்களின் பங்கு மதிப்பை கொண்டு ஒப்பிடுவது. இதனை கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் என்கிறோம்.

Debt to Equity Ratio = Total Liabilities / Shareholder’s Equity

(Simple Way to Calculate from the Balance Sheet: Borrowings / (Equity Share Capital + Reserves))

நிறுவனத்தின் கடன்-பங்கு தன்மை ஒன்று(1.0) என வந்தால், நிறுவனத்தின் கடனும், பங்கு மதிப்பும் சரிசமமாக உள்ளது. இதன் காரணமாக நிறுவனம் பின்னாளில் தனது கடனை அதிகரிப்பதற்கான சூழல் ஏற்படலாம். இது நிறுவனத்திற்கும், பங்குதாரர்களுக்கு நல்லதல்ல. இதுவே 0.5 என விகிதம் இருந்தால், நிறுவனத்தின் கடன் தன்மை, பங்குகளின் மதிப்பில் பாதியாக உள்ளது என பொருளுண்டு. 

சுருக்கமாக சொன்னால், ஒருவருடைய வருவாய் ரூ.1 என கொள்ளும் போது, அதற்குள்ளாகவே அதன் செலவுகளும் இருக்க வேண்டும். மீறினால், கடன் தன்மை அதிகரித்து நிர்வாகம் சீர்கெடும், தொழிலும் பாதிப்படையலாம். இதுவே ஒரு ரூபாய் வருவாய் இருக்கையில், செலவு 50 பைசா அல்லது அதற்கு கீழாக இருக்கும் போது, அவர் பின்னாளில் கடன் வாங்கினாலும் அதனை திரும்ப செலுத்துவதற்கான திறன் உள்ளது. வருவாயை காட்டிலும் செலவு குறைவாக இருக்கும் நிலையில், தொழிலை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏதுமிருக்காது.

மேலே சொல்லப்பட்ட இரு நிலைகளையும் அறிந்து வைத்திருப்பது, பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு அவசியம். ஒரு நிறுவனத்திற்கு நிகர கடன் நன்றாக இருந்தாலும் சரி, கடன்-பங்கு தன்மை 0.5 விகிதத்துக்கு குறைவாக இருந்தாலும் சரி – அவை கடனில்லா நிறுவனங்களாக கருதப்படும்.

ஒரு நிறுவனம் கடனில்லா தன்மையாக இருப்பதில் சாதகமும், பாதகமும் உள்ளது. கடனில்லாமல் இருக்கும் போது, நிறுவனத்தின் லாபத்திலிருந்து கடனுக்கான வட்டி தொகைக்கு ஒதுக்க தேவையில்லை. தொழிலை விரிவாக்கம் செய்ய போதுமான தொகை கையிருப்பில் இருக்கும். லாபத்தில் பங்குதாரர்களுக்கு பங்களிப்பை(Dividend, Buyback) அளிக்கலாம். 

பொதுவாக பொருளாதார மந்தநிலை மற்றும் துறை சார்ந்த நிதிச்சிக்கல் ஏற்படும் போது, கடனில்லா நிறுவனங்கள் தப்பி பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். திவால் நிலையை தவிர்ப்பது கடனில்லா நிறுவனங்களுக்கு எளிது. 

பாதகமான நிலையென்றால், ஒரு நிறுவனம் பங்குகள் மூலம் தனது முதலீட்டை அதிகம் ஈர்க்கையில், அது அந்த நிறுவனத்திற்கு நீண்ட காலத்தில் சாதகமாக அமையாது. ஏனெனில், பொதுவாக கடன் பத்திரங்களின் மூலம் பெறப்படும் கடனுக்கு, பங்குகளை காட்டிலும் செலவு விகிதம் மிக குறைவே. பங்குகள் எனில், லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அதன் பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். கடன் பத்திரங்கள்(Debt Funds) எனில், நிலையான வட்டியுடன் அசலை செலுத்தினால் போதுமானது. இதன் காரணமாக தான் பெரும்பாலான நிறுவனங்கள், வங்கிக்கடனை குறைந்த வட்டி விகிதத்தில் வாங்கி கொள்கிறது.  

இந்திய பங்குச்சந்தையில் கடனில்லா நிறுவனங்கள்:

  • கடன்-பங்கு(Debt to Equity Ratio) விகிதம் ஒன்றுக்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 3,166
  •  கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,550
  • பங்கு மூலதன மதிப்பு(Market Cap) 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 366
  •  பங்கு மூலதன மதிப்பு(Market Cap) 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 50 சதவீதத்திற்கு மேலாகவும், கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 257
  • பங்கு மூலதன மதிப்பு 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், ரொக்க கையிருப்பு(Cash Equivalents) நிறுவனத்தின் கடனை காட்டிலும் அதிகமாகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கு மேலாக மற்றும் கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 147.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சர்வதேச காபி நாள் – அக்டோபர் 1, 2023 – தொழில் பகுப்பாய்வு

சர்வதேச காபி நாள் – அக்டோபர் 1, 2023 – தொழில் பகுப்பாய்வு

International Coffee Day – October 1, 2023 – Industry Insights

காபி உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நியாயமான வர்த்தக காபியை ஊக்குவிக்கவும், 2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ம் நாளில் சர்வதேச காபி தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. தேசிய காபி தினம் என ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தாலும், கடந்த 1963ம் ஆண்டில் லண்டனை தலைமையிடமாக கொண்டு சர்வதேச காபி அமைப்பு(International Coffee Organization) ஏற்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பில் இந்தியா உள்பட 42 நாடுகள் காபி உற்பத்தி உறுப்பினர்களாகவும், 7 நாடுகள் காபி இறக்குமதி செய்யும் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இறக்குமதி செய்யும் உறுப்பினர் நாடுகளாக ஐரோப்பிய யூனியன், ஜப்பான், நார்வே, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய ராச்சியம் மற்றும் துனிசியா ஆகியவை உள்ளன. 

சர்வதேச காபி தினத்தில் சில காபி உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள், அன்றைய நாளில் காபியை இலவசமாகவோ அல்லது தள்ளுபடி விலையிலோ வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. ‘காபி’, ஒரு பிரபலமான பானமாகவும், பொருட்சந்தையில் முக்கிய பொருளாகவும் வர்த்தகமாகி வருகிறது. வளரும் நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறு உற்பத்தியாளர்கள் காபியை வளர்த்து தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்குகிறார்கள். 

உலகில் நாள்தோறும் சுமார் 225 கோடி கப் அளவிலான காபி, 100 கோடி நபர்களால் உட்கொள்ளப்படுகிறது. உலகின் 90 சதவீதத்திற்கும் அதிகமான காபி உற்பத்தி பெரும்பாலும் வளரும் நாடுகளில் தான் உற்பத்தியாகிறது. உலகம் முழுவதும் காபியை உற்பத்தி செய்யும் சிறு வணிகர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2.50 கோடி. தென் அமெரிக்காவில் தான் காபியை உட்கொள்ளும் அல்லது நுகரும் தன்மை அதிகமாக உள்ளது.

சர்வதேச காபி சந்தையின் மதிப்பு சுமார் 127 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய காபி சந்தையின் மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலக காபி விற்பனையின் வளர்ச்சி ஆண்டுக்கு 4 முதல் 5 சதவீதமாக(CAGR 2023-2028) மதிப்பிடப்படுகிறது. உலகின் காபி விற்பனை மூலமான பெரும்பாலான வருவாய் அமெரிக்காவிலிருந்து தான் கிடைக்கப்பெறுகிறது. உலக காபி சந்தையில் ஒரு தனிநபரின் சராசரி நுகரும் அளவு நாளொன்றுக்கு 700 முதல் 800 கிராம்களாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

காபி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது பிரேசில். வியட்நாம், கொலம்பியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஏழாவது மிகப்பெரிய ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இறக்குமதி செய்யும் நாடுகளாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக காபி விற்பனை சந்தையின் நாயகனாக மற்றும் பிராண்டாக, ‘ஸ்டார் பக்ஸ்(Starbucks)’ உள்ளது. இந்நிறுவனம் காபி விற்பனை மூலம் சுமார் 32.25 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டுகிறது. அதாவது அமெரிக்காவின் மொத்த காபி விற்பனை வருவாயில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் 37 சதவீதம். ஸ்டார் பக்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தாற் போல Panera Bread, McCafe, Lavazza, Tim Hortons, Dunkin’s Brands ஆகிய நிறுவனங்கள்(பிராண்டுகள்) உள்ளன.      

2022-2023ம் ஆண்டின் முடிவில் உலக காபி தொழிற்துறையின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 495 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தியாவின் காபி உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை கர்நாடக மாநிலம் மட்டும் கொண்டுள்ளது. இதற்கடுத்தாற் போல கேரளா 23 சதவீதத்தையும், தமிழ்நாடு 6 சதவீதத்தையும் பங்களிப்பாக கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஆண்டுக்கு சுமார் 2.33 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான காபியை உற்பத்தி செய்கிறது. 

இந்திய உள்ளூர் சந்தையில் காபி நுகரும் தன்மை 73 சதவீதம் நகரங்களிலிருந்து தான் வருகிறது. இந்திய காபியை அதிகம் நுகரும்(இறக்குமதி) நாடுகளாக இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், ரஷ்யா, லிபியா, போலந்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் உள்ளது. இந்தியாவின் காபி ஏற்றுமதியில் இத்தாலியின் பங்களிப்பு மட்டும் சுமார் 45 சதவீதம். அடுத்த ஐந்து வருடங்களில்(2023-2028) இந்திய காபி சந்தையின் விற்பனை வளர்ச்சி ஆண்டுக்கு 9 சதவீதத்தை கொண்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 

இந்திய பங்குச்சந்தையில் தோட்டத்துறை பிரிவில்(Plantation) சுமார் 44 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் உட்பிரிவான தேநீர் மற்றும் காபி(Tea & Coffee) துறையில் 26 நிறுவனங்கள் உள்ளன. இச்சந்தையின் முதன்மை இடத்தை, ‘டாட்டா கன்சூமர் ப்ராடக்ட்ஸ்’ தக்க வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.81,400 கோடி. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேயிலை நிறுவனமாகவும் ‘டாட்டா கன்சூமர் ப்ராடக்ட்ஸ் இருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கேப்டன் பைப்ஸ் லிமிடெட் – ராஜ்கோட் – பங்குச்சந்தை அலசல்

கேப்டன் பைப்ஸ் லிமிடெட் – ராஜ்கோட் – பங்குச்சந்தை அலசல் 

Captain Pipes Limited – Fundamental Analysis – Stocks

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கேப்டன் குழுமத்தின் துணை நிறுவனம் தான் கேப்டன் பைப்ஸ் லிமிடெட். பிளாஸ்டிக் செய்யப்படாத பி.வி.சி(UPVC) குழாய்கள் மற்றும் பொருத்துதல் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது கேப்டன் பைப்ஸ் நிறுவனம். 

சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாக கருதப்படும் UPVC குழாய்கள் பொதுவாக வெப்ப செயல்திறன் மற்றும் நீடித்த ஆயுள் காலத்தை கொண்டிருக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் UPVC தொழில்நுட்பம், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. UPVC சாளரங்கள் பெரும்பாலும் பல்நோக்கு செயல்பாடுகளை கொண்டவை. 

கடந்த 2010ம் ஆண்டு துவக்கப்பட்ட கேப்டன் பைப்ஸ் நிறுவனம் UPVC குழாய்கள் பிரிவில் உறை குழாய்கள், பிளம்பிங் குழாய்கள், உறிஞ்சும் குழாய்கள், தோட்ட குழாய்கள், HDPE குழாய்கள் மற்றும் நீர்ப்பாசன உபகரணங்கள், SWR குழாய்கள், கரைப்பான் சிமெண்ட் மற்றும் பி.வி.சி. அழுத்த குழாய்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த குழாய்கள் பெரும்பாலும் நீர் வழங்கல் பகுதிகள்(Water Supply Lines), வடிகால் அமைப்பு, கழிவு நீர் பாதை, நீர்ப்பாசன அமைப்புகள், மின் வழித்தடம் மற்றும் கட்டுமான பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை சுமார் 62,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு, ஜெர்மன் மற்றும் ஜப்பானிய தொழில்நுட்பத்தை(German extrusion lines and Japanese injection molding machine) கொண்டு குழாய்கள் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தனது குழாய் விற்பனை கிளையை நிறுவியுள்ள கேப்டன் பைப்ஸ் நிறுவனம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பெரு நில பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 

அகமதாபாத் அருகே புதிதாக ஒரு ஆலையை(Greenfield Plant) அமைப்பதற்கான திட்டத்திற்கு, சமீபத்தில் நிறுவனத்தின் இயக்குனர் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக அமையவுள்ள ஆலை 20,000 மெட்ரிக் டன் திறன் கொண்டதாகவும், இதற்கான மொத்த முதலீடு 25 கோடி ரூபாய் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய நிலையிலிருக்கும் உற்பத்தி திறனை இரட்டிப்பாக முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு வாக்கில் மும்பை பங்குச்சந்தையின் SME பிரிவில் கேப்டன் பைப்ஸ் நிறுவனம், பங்கு ஒன்றுக்கு 40 ரூபாய் என்ற விலையில் தனது பொதுப்பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. பின்னர் நடப்பு 2023ம் வருடத்தின் ஜூன் மாதத்தில் மும்பை பங்குச்சந்தையின் பிரதான பலகைக்கு(Migration) மாற்றப்பட்டுள்ளது. ஒன்பது வருடத்திற்கு முன்பு, SME பிரிவில் பங்கு வெளியிடுகையில் இதன் சந்தை மதிப்பு சுமார் நான்கரை கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 339 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

நிறுவனத்தின் கடன்-பங்கு தன்மை 0.13 மடங்கிலும், புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.1.44 என்ற அளவிலும் உள்ளது. நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் நிறுவனம் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை அளித்துள்ளது. அதே காலத்தில் நிறுவனத்தின் முக மதிப்பும்(Face value) 10 ரூபாயிலிருந்து ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 85 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.81 கோடியாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) கடந்த பத்து வருடங்களில் சராசரியாக ஐந்து சதவீதம் என்ற அளவில் உள்ளது. சொல்லப்பட்ட நிதி ஆண்டில் நிறுவனம் ரூ.1.81 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 46 சதவீதமாகவும் இருந்துள்ளது. அதே வேளையில் இதன் பங்கு விலை கடந்த மூன்று வருட காலத்தில் 200 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் பெற்றுள்ளது. 2023ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 6.10 கோடி ரூபாயாக உள்ளது. 

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 72 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. நிறுவனத்தின் தலைவராக திரு. ரமேஷ் கிச்சாடியா மற்றும் நிர்வாக இயக்குனராக திரு. கோபால் கிச்சாடியா ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். 

கேப்டன் குழுமத்தின் மற்ற துணை நிறுவனங்களாக கேப்டன் பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட், கேப்டன் பாலிபிளாஸ்ட் லிமிடெட், கேப்டன் டெக்னோகாஸ்ட் மற்றும் கேப்டன் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவை உள்ளன.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஆகஸ்ட் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.83 சதவீதம்

நாட்டின் ஆகஸ்ட் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் – 6.83 சதவீதம்  

India’s Retail Inflation rate in the month of August 2023 – 6.83 Percent

நாட்டின் நுகர்வோர் விலை(Consumer Price Index – CPI) பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.83 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தில் 7.44 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. இருப்பினும் நாடு முழுவதும் காணப்படும் ஒழுங்கற்ற மற்றும் தாமதமான பருவ மழை காரணமாக வரக்கூடிய மாதங்களில் உணவுப்பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 7 சதவீதமாக இருக்கக்கூடும் என சந்தை வல்லுநர்கள் கணித்த நிலையில், இது 6.83 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களின் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 11.51 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இது 9.94 சதவீதமாக குறைந்துள்ளது.

இருப்பினும் கடந்த ஜனவரி 2020 காலத்தை ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்ட உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் அதிகரித்து தான் காணப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் காய்கறிகளின் பணவீக்க விகிதம் 26.14 சதவீதமாகவும், பால் பொருட்களின் விலை 7.73 சதவீதமாகவும் மற்றும் தானியங்களின் விலை 11.85 சதவீதமாகவும் உள்ளது.

பருப்பு வகைகளின் பணவீக்க விகிதம் பெரியளவில் மாற்றம் பெறவில்லை. அதே வேளையில் மசாலா பொருட்களின் விலை 23.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. வீட்டுமனை 4.38 சதவீதமாகவும், ஒளி மற்றும் எரிபொருட்களின் பணவீக்க விகிதம் 4.31 சதவீதமாகவும் அதிகரித்து காணப்படுகிறது.

எல் நினோ(El Nino) காரணமாக பருவமழை இயல்பு நிலையை காட்டிலும் குறைந்துள்ளது. இதன் காரணமாக விவசாய உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி, உணவுப்பொருட்களின் விலை வரக்கூடிய காலங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது. உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக உணவுப்பொருட்களின் விலை உயரக்கூடும் என கருதி அரசும் சர்க்கரை மற்றும் அரிசி உள்ளிட்ட தானியங்களின் ஏற்றுமதியை தடை செய்து வருவது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(பொருளாதார) வளர்ச்சி – 7.8 சதவீதம்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(பொருளாதார) வளர்ச்சி – 7.8 சதவீதம்

India’s Gross Domestic Product(GDP) growth in the April-June Quarter – 7.8%

2022ம் ஆண்டின் முடிவில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.385 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. சொல்லப்பட்ட வருட கணக்கின் படி, உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு 1.51 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவின் பொருளாதார பங்களிப்பு 11.20 சதவீதமாகவும் (25.46 டிரில்லியன் டாலர்கள்), சீனாவின் பங்களிப்பு 7.97 சதவீதமாகவும் (17.96 டிரில்லியன் டாலர்கள்) இருக்கிறது. 

ஜூலை 2023 மாத முடிவில், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 20.67 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. இந்தியாவின் முக்கிய வர்த்தக பங்காளிகளாக அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி மற்றும் ரசியா ஆகிய நாடுகள் உள்ளன. 2022ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவிற்கு சுமார் 80.23 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஏற்றுமதியையும், சீனாவிலிருந்து சுமார் 102.25 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இறக்குமதியையும் மேற்கொண்டிருக்கிறோம். 

உலக வர்த்தகத்தில் நாம் பெரும்பாலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யக்கூடிய பிரிவுகளாக கனிம எரிபொருள்கள், எண்ணெய்கள், முத்துக்கள் மற்றும் விலையுர்ந்த கற்கள், உலோகங்கள், நாணயங்கள், இயந்திரங்கள், அணு உலைகள் மற்றும் கொதிகலன்கள், மின் மற்றும் மின்னணு உபகரணங்கள் ஆகியவை உள்ளன.

கடந்த ஜூலை மாத முடிவில் நாட்டின் ஏற்றுமதி 32.25 பில்லியன் டாலர்களாகவும், இறக்குமதி 52.92 பில்லியன் டாலர்களாவும் இருந்துள்ளது. தங்கத்தின் கையிருப்பு(Gold Reserves) 797.44 டன்களாக உள்ளது. 2022-23ம் நிதியாண்டின் முடிவில் வெளிநாட்டு கடன் 624.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. சந்தை எதிர்பார்த்த வளர்ச்சி மதிப்பீட்டை காட்டிலும், தற்போது சொல்லப்பட்ட வளர்ச்சி சற்று கூடுதலாகும். இதற்கு முந்தைய காலண்டான ஜனவரி – மார்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாகவும், கடந்தாண்டின்(2022-23) ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இது 13.1 சதவீதமாகவும் இருந்துள்ளது.

சேவைத்துறையில் ஏற்பட்ட வலுவான செயல்திறன், நுகர்வோர் தேவை அதிகரிப்பு, அரசு மற்றும் தனியார் ஆகியவற்றின் மூலதன செலவு ஆகியவற்றால், ஏப்ரல் – ஜூன் காலாண்டில் வளர்ச்சி சாத்தியமானது. அதே வேளையில் உற்பத்தி துறை எதிர்பார்த்த வளர்ச்சியை கண்டிருக்கவில்லை. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம் – 7.44 சதவீதம்

நாட்டின் ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம் – 7.44 சதவீதம் 

India’s Retail Inflation Rate in the month of July 2023 – 7.44%

தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை எகிறுவதும், பின் சரிவதும் அடிப்படை பொருளாதாரத்தில் தேவைக்கும், உற்பத்திக்குமான இடைவெளியின் காரணமாக தான். நாட்டின் நுகர்வோர் விலை(Consumer Price Index – CPI) என்றழைக்கப்படும் சில்லரை விலை பணவீக்கம் ஜூலை மாத முடிவில் 7.44 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

ஜூன் மாத முடிவில் இது 4.87 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. உணவுப்பொருட்களின் பணவீக்க விலை 11.51 சதவீதம் என்ற அளவில் அதிகரித்ததால், ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது. இது கடந்த 15 மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். 

உணவுப்பொருட்களின் பணவீக்கத்தில் காய்கறிகளின் விலை 37.30 சதவீதமும், மசாலா பொருட்களின் விலை 21.60 சதவீதமும் மற்றும் பருப்பு வகைகளின் விலை 13.30 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இது போல தானியங்களின் விலை 13 சதவீதமாகவும், பால் பொருட்களின் விலை 8.3 சதவீதம் என்ற அளவிலும் அதிகரித்துள்ளது.

ஒளி மற்றும் எரிபொருட்களின்(Fuel and Light) விலை 3.7 சதவீதமும், வீட்டுமனை 4.5 சதவீதமும் ஜூலை மாதத்தில் உயர்ந்து காணப்படுகிறது. துணிமணிகள் மற்றும் காலணிகளின் விலையும் 5.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த சில்லரை விலை பணவீக்க கணக்கீட்டில் உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக உள்ளது.

india-inflation-cpi-Since 2012-2023

நடப்பு 2023-24ம் நிதியாண்டில் முதன்முறையாக ஜூலை மாத பணவீக்கம், மத்திய ரிசர்வ் வங்கியின் இலக்கினை கடந்து காணப்பட்டுள்ளது. நாட்டின் சில்லரை விலை பணவீக்கத்தை 2 சதவீதம் முதல் 6 சதவீதத்திற்குள்ளாக வைத்திருக்க மத்திய ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது கவனிக்கத்தக்கது. நாடு முழுவதும் ஒழுங்கற்ற மற்றும் தாமதமான பருவமழை முறை, உணவுப்பொருட்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

புரோமோட்டர்களின் பங்களிப்பு இல்லாமல் நிறுவனம் செயல்பட முடியுமா ?

புரோமோட்டர்களின் பங்களிப்பு இல்லாமல் நிறுவனம் செயல்பட முடியுமா ?

Listed companies with Zero Promoter Holding – Fundamental Insights

இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை குறைந்தபட்ச பொது பங்கு(Minimum Public Shareholding) விதியின் படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொதுமக்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத பங்குகளை ஒரு நிறுவனம் ஒதுக்க வேண்டும். பொது மக்களுக்கு என சொல்லும் போது சிறு முதலீட்டாளர், பெரு முதலீட்டாளர் மற்றும் நிறுவனங்களும் அடங்கும். நிறுவனர்களின்(Founders, Promoters) பங்களிப்பை பொறுத்தவரை, நம் நாட்டில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தில் 75 சதவீத பங்குகளுக்கு மேல் வைத்திருக்க கூடாது என்பது சட்ட விதியாக உள்ளது.

75 சதவீதத்திற்கு மேலாக ஒரு நிறுவனம் பங்குகளை தன்வசம் வைத்திருந்தால், அந்த பங்குகளை, பங்கு விலக்கல்(Divestment) முறையில் மற்ற பங்குதாரர்களுக்கு விற்று விட வேண்டும். இது பொதுவாக அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் விலக்கு பெற்ற நிறுவனங்களுக்கு பொருந்தாது. தற்போதைய நிலையில், 75 சதவீத பங்குகளுக்கு மேல் வைத்திருக்கும் பட்டியலிடப்பட்டவை, சுமார் 64 நிறுவனங்கள் தான். இவற்றில் எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் மற்றும் சில பொதுத்துறை வங்கிகளும் அடங்கும்.

பங்குச்சந்தையில் 50 சதவீதத்திற்கும் மேல் நிறுவனர்களின் பங்களிப்பை(Promoter Holding) கொண்டிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 2,854 (ஆகஸ்ட் 8, 2023 முடிவில்). இந்த பட்டியலில் ரூ.5,000 கோடிக்கும் மேலான சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனங்கள் 396. 5,000 கோடி ரூபாய்க்கும் மேலான சந்தை மூலதன மதிப்பு, 50 சதவீதத்திற்கு மேலான நிறுவனர்களின் பங்களிப்பு மற்றும் கடன்-பங்கு விகிதம் 0.5 மடங்குக்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 254.

பொதுவாக நிறுவனர்களின் பங்களிப்பு, பொது மக்கள் மற்றும் பிற உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பை காட்டிலும் அதிகமாக காணப்படுவது, நீண்டகாலத்தில் ஒரு முதலீட்டாளருக்கு சாதகமான அம்சமாக இருக்கும். ஒரு நிறுவனத்தின் மீது அதன் நிறுவனர்களே பங்களிப்பை கொடுக்காவிட்டால், பொது மக்களாகிய நாம் அந்த நிறுவனத்தின்(பங்குகள்) மீது நம்பிக்கை வைத்து என்ன பயன் ? இன்றும், சில நிறுவனங்களின் லாபத்தில் பெரும்பாலான பங்கு பலனை அனுபவிப்பது அதன் நிறுவனர்கள் தான்.

40 வருடங்களுக்கு முன்பு, இந்த ‘ABC’ மற்றும் ‘XYZ’ பங்குகளை வாங்கியிருந்தால், இன்று அது பல கோடிகள் பெற்றிருக்கும் என வெற்று பெருமை பேசி என்ன பயன். ஒரு கட்டுரையீர்ப்புக்கு(Article, Blogging Posts) வேண்டுமானால், இது போன்ற தகவல்கள் பயன்படலாம். உண்மையில், 40 வருடங்களுக்கு முன்பிருந்த ஒரு நிறுவனம், இன்று பல மடங்கு உயர்ந்திருந்தால் அந்த பலனை பெரும்பாலும் அனுபவிப்பது அதன் நிறுவனர்கள் தான். ஏனெனில் அவர்கள் வசம் மட்டும் அந்த பங்குகள் இன்றளவிலும் விற்கப்படாமல் இருந்திருக்கும். பொதுமக்களாகிய நாம் அந்த பங்குகளை எப்பொழுதோ விற்றிருப்போம்.

நிறுவனர்களின் பங்களிப்பு, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. எனினும் சில நிறுவனங்களில் நிறுவனர்கள் சார்பாக எந்த பங்களிப்பும் இல்லாமல் இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட நிறுவனங்கள் நல்ல நிறுவனங்களா  அல்லது சரிப்பட்டு வராதா என கேள்வி கேட்டால், அது அந்த நிறுவனத்தின் தொழில் அனுபவமும், நிர்வாக திறனையும் பொறுத்து தான் உள்ளது. 

இந்திய பங்குச்சந்தையில் புரோமோட்டர்களின் பங்களிப்பு இல்லாமல் சுமார் 110 நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் முக்கிய நிறுவனங்களான ஐ.டி.சி, எச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எல் & டி ஆகியவை அடங்கும். சமீபத்தில் ஜோமாட்டோ மற்றும் பேடிஎம் நிறுவனங்கள். 

நிறுவனர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் இயங்கலாமா ? ஆம், தாராளமாக இயங்கலாம். சில நிறுவனங்கள் தங்கள் தொழிற்துறையின் சாதகத்திற்கு ஏற்ப, நாட்டின் சட்ட விதிகளுக்காக, திறன்மிக்க தொழில் வல்லுநர்களை நியமிப்பதன் மூலம் இது போன்ற நிறுவனங்களை செயல்படுத்துகின்றன. உண்மையில் அவர்களது பங்குகள், நிறுவனர்கள் பட்டியலில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மற்ற பொதுப்பங்கு நிறுவனங்களின் வாயிலாக பங்குகளை கைவசம் வைத்திருந்து, நேரடியாக இல்லாமல் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை வைத்திருப்பர்.

உதாரணமாக ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தில் பெரும்பாலான பங்குகள் இந்திய காப்பீட்டு நிறுவனங்களிடமும், பிற வெளிநாட்டு நிறுவனங்களிடமும் உள்ளன. அதே வேளையில் மேலே சொல்லப்பட்ட நிறுவனங்களில், குறிப்பிடத்தக்க பங்குகளை மறைமுகமாக நிர்வாகத்தை நடத்தும் நிறுவனத்திற்கு உண்டு. இது போல தான் மற்ற நிறுவனர் பங்களிப்பு அல்லாத நிறுவனத்திலும் நடைபெறுகிறது. குழும நிறுவனங்கள்(Group of Companies) சில காலங்களில் இது போன்ற நடைமுறையை பின்பற்றி தங்களது துணை நிறுவனங்களை நடத்துகின்றனர்.

நிறுவனர்கள் தங்களது பங்குகளை வங்கியிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ அடமானம் வைத்து, பின்னர் அது மீட்கப்படாமல் போனாலும் இது போன்ற நிலை ஏற்படலாம். நிறுவன கையகப்படுத்துதல், திவால் நிலை போன்ற சமயங்களிலும் நிறுவனர்களின் பங்களிப்பு இல்லாமல் இருக்கலாம்.

பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை ஆராய, கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய அடிப்படை காரணிகள்(Fundamental Analysis – Factors)

பங்குச்சந்தையில் நிறுவனர்களின் பங்களிப்பு இல்லாவிட்டாலும், அவர்கள் நிறுவனத்தின் நிர்வாகத்தை திறம்பட வைத்திருக்க வேண்டும் என்பது தான் எதார்த்த உண்மை. எனவே, ஒரு நிறுவனத்தை ஆராயும் போது அதன் தொழில் அனுபவம், நிர்வாக திறன், கடனில்லாமை அல்லது கடனை திறம்பட தொழிலில் புகுத்துவது ஆகியவற்றை ஒரு முதலீட்டாளர் கவனிக்க வேண்டியது அவசியம். இல்லையனில் முதலீட்டாளருக்கு, அது ‘விழலுக்கு இறைத்த நீர்’ தான் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு – ஜூலை 31, 2023

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு – ஜூலை 31, 2023

Income Tax Returns – Filing Deadline – July 31, 2023

கடந்த 2022-23ம் நிதியாண்டுக்கான வருமானத்திற்கு நடப்பு மதிப்பீட்டு ஆண்டு 2023-24 காலத்தில் வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். பொதுவாக ஏப்ரல் 1ம் தேதி முதல் துவங்கப்படும் வரி தாக்கல், இம்முறை தாமதமாக துவங்கியது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் வருமான வரி தாக்கலுக்கான கடைசி தேதி இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. 

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடு இம்முறை பெரும்பாலும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே. 2020 மற்றும் 2021ம் வருடங்களில் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட சிரமத்தை சமாளிக்க வரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு இது ஜூலை 31ம் தேதி வரை மட்டுமே இருந்தது.

வருமான வரி தாக்கலை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்யாத நிலையில், அபராத கட்டணம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 60 வயதுக்குட்பட்ட தனிநபர் ஒருவர், ஒரு நிதியாண்டில் அவரது மொத்த வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். அவருக்கு வருமான வரி பிடித்தம் செய்யப்படவில்லை என்றாலும், வரி தாக்கல் செய்வது கட்டாயமாகும்.

நடப்பு ஜூலை 26ம் தேதி வரை, நாட்டில் சுமார் 4.75 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். அதே வேளையில் வருமான வரி தளத்தில்(IT Portal) தங்களது பான் எண் கணக்கை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை சுமார் 11.44 கோடி (தனி நபர்). சொல்லப்பட்ட 4.75 கோடி வருமான வரி தாக்கலில் இதுவரை 4.24 கோடி பேர் மட்டுமே மின்னணு சரிபார்ப்பை(E-Verification) முடித்துள்ளனர்.

பொதுவாக வருமான வரி தாக்கல் செய்திருந்தாலும், மின்னணு சரிபார்ப்பை நிறைவு செய்தால் மட்டுமே அது முழுமையான வரி தாக்கலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தனிநபர் வருமான வரி தாக்கலை செய்துள்ளவர்களில் பெரும்பாலும் ஐ.டி.ஆர் – 1 படிவத்தை பயன்படுத்தியுள்ளவர்களே அதிகம். 

2022-23 மதிப்பீட்டு ஆண்டில்(Assessment year) ஐ.டி.ஆர் – 1 படிவத்தை பயன்படுத்தி வரி தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 37 லட்சமாக இருந்த நிலையில் நடப்பு 2023-24ம் மதிப்பீட்டு ஆண்டில் இது 72.95 லட்சமாக(ஜூன் மாத முடிவில்) இருக்கிறது. அதாவது கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை சுமார் 95.50 சதவீதம் அதிகமான வரி தாக்கல் நடைபெற்றுள்ளது. 

மாநிலங்கள் வாரியாக காணும் போது, மகாராஷ்டிராவில் சுமார் 18.52 லட்சம் வரி தாக்கலும், குஜராத்தில் 14.02 லட்சமும் மற்றும் உத்திரப்பிரதேசத்தில் 11.92 லட்சமும் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் ஜூன் மாத முடிவின் படி, 8.19 லட்சம் வரி தாக்கல் பதிவாகியுள்ளன. 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்போசிஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ. 5,945 கோடி

இன்போசிஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ. 5,945 கோடி 

Infosys reported a net profit of Rs.5,945 Crore in Q1FY24

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட் தனது 2023-24ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டிருந்தது. சொல்லப்பட்ட ஏப்ரல்-ஜூன்  காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 37,933 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 28,869 கோடியாகவும் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இயக்க லாபம் 9,064 கோடி ரூபாய் மற்றும் இயக்க லாப விகிதம்(OPM) 24 சதவீதமாக உள்ளது. இதர வருமானமாக ஜூன் காலாண்டில் 561 கோடி ரூபாயை நிறுவனம் ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.8,362 கோடியாகவும், நிகர லாபம் ரூ.5,945 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 2022-23ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்ட வருவாய் 10 சதவீதமும், நிகர லாபம் 11 சதவீதமுமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஜூன் 2022ல் ஒரு பங்கு மீதான வருவாய்(EPS) ரூ. 12.74 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.14.32 ஆக உள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6.01 லட்சம் கோடி. நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. மார்ச் 2023ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 73,338 கோடி ரூபாய். இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் நிதித்துறை சார்ந்த சேவைகளிலிருந்து பெறப்படுகிறது. 

இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஜூன் காலாண்டின் படி 1,883 வாடிக்கையாளர்கள்(நிறுவனங்கள்) உள்ளனர். நூறு மில்லியன் டாலர்களுக்கு மேலாக வருவாய் அளிக்கும் வாடிக்கையாளர்கள் மட்டும் 38 பேர். 940 நிறுவன வாடிக்கையாளர்கள் சுமார் ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேலான வருவாயை இன்போசிஸ் நிறுவனத்திற்கு அளிக்கின்றனர்.

முதல் 25 நிறுவன வாடிக்கையாளர்கள்(Top 25 Clients) மட்டும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 35 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஜூன் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3.36 லட்சம். இவற்றில் 3.17 லட்சம் ஊழியர்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாகவும், மற்றவர்கள் விற்பனை மற்றும் அதற்கு பிறகான சேவையை வழங்குவதிலும் உள்ளனர். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com