All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

ஹோட்டல்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை குறைக்க பரிந்துரை

ஹோட்டல்களுக்கான ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை குறைக்க பரிந்துரை

Recommendation to reduce the GST rate for Hotel Rooms in Star Hotels

வரவிருக்கும் வெள்ளிக்கிழமை அன்று (20-09-2019) நாட்டின் 37வது ஜி.எஸ்.டி. கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக நேற்று நிதி அமைச்சர் குழுவின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கான உணவு விடுதிகளில் ஜி.எஸ்.டி. வரி குறைப்பை ஏற்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நடப்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ரூ. 7500 க்கும் மேலான தங்கும் அறைகளுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி அமலில் உள்ளது. இதனை 18 சதவீதமாக குறைக்கும் பொருட்டு நேற்றைய பரிந்துரை அமைந்துள்ளது. இந்த அறைகள் சொகுசு ஹோட்டல் பிரிவில்(Luxury Category) காணப்படுவது கவனிக்கத்தக்கது.

இதற்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படலாம் அல்லது ரூ. 7500க்கு குறைவான தங்கும் விடுதிகளின் வரி சலுகை வரம்பு, 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படலாம் என தெரிகிறது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மின்னணு சிகரெட்டு(E-Cigarette) விற்பனையும் இந்தியாவில் தடை செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மின்னணு சிகரெட் பயன்பாட்டால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், இதன் பயன்பாடு மாணவர்களிடையே அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளது. இதன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் விற்பனை இந்தியாவில் முற்றிலும் தடை செய்யப்படுவதாகவும், மீறினால் இது ஒரு குற்றச்செயலாக கருதப்பட்டு அபராதம் மற்றும் சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் இதனை எதிர்க்கும் வகையில் மின்னணு சிகரெட் சார்ந்த அமைப்பு, அரசு கூறும் தகவலுக்கு போதிய ஆதாரம் இல்லையெனவும், தற்போது நடைமுறையில் காணப்படும் புகையிலை மற்றும் அதனை சார்ந்த சிகரெட் போன்றவற்றால் நாட்டில் ஒவ்வொரு வருடமும் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறக்க நேரிடுகிறது. இதனை போன்ற விளைவுகள் இ-சிகரெட் பயன்பாட்டில் மிக குறைவு தான் என எதிர்தரப்பு வாதம் சொல்கிறது.

லாட்டரி(Lottery) விற்பனைக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கான பரிந்துரையும் நேற்று சொல்லப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கூட்டத்தில்(GST Council) முக்கிய நிகழ்வாக வாகனத்துறைக்கான வரி விகித குறைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்னர், ‘ பணப்புழக்க நெருக்கடி காணப்படுவது மற்றும் ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்து வருவதால் சில துறைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு பரிந்துரைக்கப்பட மாட்டாது ‘ என ஜி.எஸ்.டி. குழு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பி.எப். தொகைக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக அறிவிப்பு

பி.எப். தொகைக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக அறிவிப்பு

The EPF Interest rate to 8.65 Percent for 2018-19

2018-19ம் நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான(EPF) வட்டி விகிதம் 8.65 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது சார்ந்து அறிவிக்கப்பட்ட தகவலில் கடந்த 2017-18ம் ஆண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55 சதவீதம் இருந்ததாகவும், தற்போது 2018-19ம் வருடத்திற்கு 10 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 8.65 சதவீதமாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட 8.65 சதவீத வட்டி ஒரு சில நாட்களில் பி.எப். சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என இ.பி.எப். அமைப்பு(EPFO) கூறியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள ஆறு கோடி சந்தாதாரர்கள் பயன் பெறுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வட்டி விகிதம் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தாலும், தற்போதைய நிலையில் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பின், சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும். அடுத்து வரவிருக்கும் வாரங்களில் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை பாரத ரிசர்வ் வங்கி குறைக்கும் பட்சத்தில், அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்திலும் மாற்றம் ஏற்படலாம்.

அஞ்சலக மற்றும் வங்கி சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைவான நிலையில் இருப்பினும், மேலும் இதன் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சார்ந்த தகவல் நடப்பு செப்டம்பர் மாதத்தின் இறுதியில் அறிவிக்கப்படலாம்.

இ.பி.எப். வட்டி விகித வரலாறு – தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

வங்கி வைப்பு நிதி, பொது வருங்கால வைப்பு நிதி(Public Provident Fund) மற்றும் வரி சேமிப்பு சார்ந்த சேமிப்பு திட்டங்களில் வட்டி விகிதம் குறைக்கப்படலாம். இந்த வட்டி விகித மாற்றம் அக்டோபர் – டிசம்பர் காலாண்டுக்கு உட்பட்டதாக இருக்கும்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் கடந்த 2010-11ம் நிதியாண்டில் 9.50 சதவீதமாகவும், 2014-15ம் நிதியாண்டில் 8.75 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சிறு சேமிப்புக்கான வட்டி விகித மாற்றங்கள் பணவீக்க விகிதத்தை(Inflation Rate) சார்ந்து இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஆகஸ்ட் மாத மொத்த விலை பணவீக்கம் 1.08 சதவீதம்

ஆகஸ்ட் மாத மொத்த விலை பணவீக்கம் 1.08 சதவீதம் 

India’s WPI Inflation for August 2019 was 1.08 Percent 

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், நேற்று ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க(WPI) விகிதம் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட்  மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 1.08 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த ஜூலை மாதத்திலும் 1.08 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த  ஒரு வருட காலத்தில் அதிகபட்சமாக 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 5.54 சதவீதமாக இருந்துள்ளது. தற்போது சொல்லப்பட்ட 1.08 சதவீத பணவீக்கம்(Wholesale Price Index) கடந்த இரண்டு வருடங்களில் காணப்பட்ட குறைந்தபட்ச அளவாகும்.

எரிபொருட்களின் விலை(Fuel Prices) சரிவால் தான் தற்போதைய மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது. அதே வேளையில் உணவுப்பொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஜவுளி விலையில் எந்த மாற்றமும் இல்லையெனவும், ரசாயனம், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் அடிப்படை உலோகங்களின்(Basic Metals) விலை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மர சாமான்களின் விலையும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் குறைந்து காணப்படுகிறது. அத்தியாவசிய உணவுப்பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை கடந்த மாதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில் உருளைக்கிழங்கின் விலை குறைந்து காணப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் மாற்றம் எரிவாயு ஆகியவற்றின் விலை ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஜூலை மாதத்தில் 3.64 சதவீதம் என்ற அளவில் சரிந்திருந்தது. மொத்த விலை பணவீக்கம் கடந்த 50 வருட காலங்களில் சராசரியாக 7 சதவீதம் என்ற அளவில் இருப்பது கவனிக்கத்தக்கது. அதிகபட்சமாக கடந்த 1974ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 35 சதவீதமாகவும், குறைந்தபட்சமாகவும் 1976ம் வருட மே மாதத்தில் (-11.31) பணவாட்டமாகவும் இருந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வரும் வாரத்தில் பங்குச்சந்தையை பாதிக்கும் முக்கிய காரணிகள் – செப்டம்பர் 16 – 20

வரும் வாரத்தில் பங்குச்சந்தையை பாதிக்கும் முக்கிய காரணிகள் – செப்டம்பர் 16 – 20

Key Factors that affect the Indian Stock Market in the Upcoming Week (September 16 -20)

 

இந்திய பங்குச்சந்தை கடந்த வார வர்த்தகத்தின் முடிவில் நிப்டி50(Nifty50) 11,075 புள்ளிகள் என்ற அளவிலும், மும்பை சென்செக்ஸ் குறியீடு(BSE Sensex) 37,385 புள்ளிகள் என்ற அளவிலும் இருந்துள்ளது. வரவிருக்கும் வாரத்தில் சந்தையை பாதிக்கக்கூடிய முக்கிய காரணிகளாக சில அமைய உள்ளன.

 

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அடுத்ததாக ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க விகிதம்(WPI Inflation) நாளை அறிவிக்கப்பட உள்ளது. நேற்று (14-09-2019) நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான சில அறிவிப்புகளை வெளியிட்டார். 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வீட்டுமனை துறைக்கும், ஏற்றுமதி துறைக்கும் ஊக்கமளிக்கும் வகையில் சில அறிவிப்புகளை சொல்லியுள்ளார். இருப்பினும் இவை சந்தையில் செயல்பாட்டுக்கு வந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியில் களம் காண சிறிது காலமாகலாம். 

 

நேற்று அதிகாலை சவுதியில் ஆரம்கோ எண்ணெய்(Aramco) நிறுவனத்தின் மீது ஏற்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரு இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு ஏமெனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 5.7 மில்லியன் பேரல் அளவிலான உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது ஆரம்கோ நிறுவனம். ஈராக் நாட்டின் சதாம் ஹுசைன் காலத்திற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது தான் என சொல்லப்படுகிறது.  

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக வருமான வரி துறை நோட்டீஸ்(Income Tax Notice) அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வு நடப்பாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டதாகவும், தற்போது தான் ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது சார்பாக ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. 

 

தாங்கள் இதுவரை வருமான வரித்துறையிடம் இருந்து எந்த நோட்டீஸையும் பெறவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. சவூதி ஆரம்கோ நிறுவனத்தின் மீதான தாக்குதல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவன குடும்பத்தின் கணக்கில் காட்டப்படாத வருவாய் ஆகிய இரு நிகழ்வுகளும் சந்தைக்கு பாதகமாக அமையலாம்.

 

 எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியை விட, மிக குறைவான அளவே இந்திய நாடு வளர்ச்சி பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) கூறியுள்ளது. கார்ப்பொரேட் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பலவீனமடைந்து வருவதாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்துள்ளது சர்வதேச நாணய நிதியம்.

 

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மற்றும் அமெரிக்க வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு ஆகிய காரணிகளும் வரும் வாரத்தின் சந்தை போக்கை தீர்மானிக்கலாம். பங்குச்சந்தை அதிக ஏற்ற – இறக்க காலமாக தற்போது கருதப்படுவதால், நல்ல நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு வாங்குவதற்கான வாய்ப்புகளை கண்டறியலாம். அதே வேளையில் குறுகிய காலத்தில் லாபம் பார்க்கிறேன் என்று கையை சுட்டு கொள்ள வேண்டாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

அக்டோபர் மாதத்தில் வங்கி வட்டி விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் செல்ல வாய்ப்பு

அக்டோபர் மாதத்தில் வங்கி வட்டி விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் செல்ல வாய்ப்பு 

Bank Repo rates likely to go below 5 Percent in the next month October 2019

நாட்டின் பணவீக்க விகிதம் பாரத ரிசர்வ் வங்கியின் இலக்கை விட குறைவாக காணப்படுவதால், மீண்டும் ஒரு வட்டி விகித குறைப்பு நடவடிக்கை ஏற்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரு வருட காலமாக நுகர்வோர் விலை பணவீக்கம்(CPI Retail Inflation) கட்டுக்குள் வைக்கப்பட்டிருப்பது, பொருளாதார மந்த நிலை சமயங்களில் சாதகமான அம்சமாகும்.

ஏற்கனவே கடந்த மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committee) வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், இம்முறையும் அக்டோபர் மாதத்தில் குறைக்கப்படலாம் என தெரிகிறது. தற்போது உத்தேசமாக ரெப்போ விகிதம்(Repo Rate) 50 புள்ளிகள் வரை குறைக்கப்படலாம் என எதிர்க்கபார்க்கப்படுகிறது.

நடப்பில் பாரத ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, ரெப்போ விகிதம் 5.40 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo) 5.15 சதவீதமாகவும் உள்ளது. வங்கி விகிதம்(Bank Rate) 5.65 சதவீதமாக சொல்லப்பட்டிருக்கிறது. கடந்த கூட்டத்தின் போது, வங்கிகளில் ரெப்போ விகிதத்தினை சார்ந்து அதற்கு இணையான வட்டி விகிதம் வாடிக்கையாளர்களுக்கு விகிதப்பட வேண்டும் என்ற பாரத ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.

ஆனால் பெரும்பாலான வங்கிகள் வைப்பு நிதிக்கான(Deposits) வட்டி விகிதங்களை குறைத்ததே தவிர, கடனுக்கான வட்டி விகிதத்தில் பெருவாரியான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனலாம். இந்நிலையில் பணவீக்க விகிதம் 4 சதவீதத்திற்குள் இருப்பதால், வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலும் வட்டி விகிதம் குறையும்பட்சத்தில், அது வாடிக்கையாளர்களை உடனடியாக போய் சேருமா என்பது சந்தேகமே.

தற்போது வங்கிக்கான சேமிப்பு கணக்கு வட்டி விகிதம்(Savings Account) 3.25 சதவீதத்திலிருந்து 3.50 சதவீதம் வரை ரிசர்வ் வங்கியால் சொல்லப்பட்டுள்ளது. இது போல ஒரு வருடத்திற்கு மேலான வைப்பு நிதிக்கு 6.25 சதவீதத்திலிருந்து 7.10 சதவீதம் வரை வட்டி விகிதம் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக வங்கி வட்டி விகிதம் குறையும் போது வங்கியில் முதலீடு செய்வோருக்கு அது சாதகமாக இருப்பதில்லை. குறைவான வட்டி விகிதம் நிலவுவதால் பரஸ்பர நிதிகளில் கடன் பத்திரங்கள் மற்றும் குறுகிய கால திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். அதே வேளையில், கடன் பெறுவோருக்கு வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைய வாய்ப்புள்ளதால், அவர்களின் தேவைக்கு குறைந்த  வட்டியில் கடன் வாங்கி கொள்ளலாம். இருப்பினும், கடன் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் என்ற ஒரு காரணத்திற்காக அவசியமில்லாமல் கடன் வாங்குவது நல்லதல்ல. மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 3.21 சதவீதமாக உயர்வு

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 3.21 சதவீதமாக உயர்வு

India’s Retail Inflation rises to 3.21 Percent in August 2019

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் என்று சொல்லப்படும் சில்லரை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.21 சதவீதமாக இருந்துள்ளது. இது கடந்த ஜூலை மாதத்தில் 3.15 சதவீதமாகவும், கடந்த 2018ம் வருடம் இதே காலத்தில் 3.18 சதவீதமாகவும் இருந்தது.

இருப்பினும் சந்தை எதிர்பார்த்த 3.30 சதவீதம் என்ற அளவை எட்டவில்லை. அதே வேளையில் பாரத ரிசர்வ் வங்கியின்(RBI) நடுத்தர கால இலக்கான 4 சதவீத பணவீக்கம் என்ற அளவிற்குள் உள்ளது பொருளாதாரத்திற்கு சாதகமானது. கடந்த 13 மாத காலமாக நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 4 சதவீதம் என்ற அளவை தாண்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

உணவு பொருட்களின்(Food Prices) விலை உயர்வால் தற்போது சொல்லப்பட்ட பணவீக்க அளவு அதிகரித்துள்ளது. மாமிசம் மற்றும் மீன் வகைகள் 8.51 சதவீதமும், காய்கறிகள் 6.90 சதவீதமும், பருப்பு வகைகள் 6.94 சதவீதம் என்ற அளவிலும் உயர்ந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு, பால் சார்ந்த பொருட்களின் விலையும் சிறிய அளவில் ஏற்றம் பெற்றுள்ளது.

அதே வேளையில் பழங்கள் மற்றும் சர்க்கரை வகைகளின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் சரிந்துள்ளது. கிராமப்புற பணவீக்கம்(Rural Inflation) 2.18 சதவீதமாகவும், நகர்புறத்தில்(Urban) 4.49 சதவீதம் என்ற அளவிலும் சொல்லப்பட்டுள்ளது. மாதாந்திர அடிப்படையில் நுகர்வோர் விலை 0.49 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூலை மாதம் 0.91 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்(Unemployment rate) கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8.19 சதவீதமாக அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. நகர்புறத்தில் 9.71 சதவீதமும், கிராமப்புறத்தில் 7.48 சதவீதம் என்ற அளவிலும் வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. இருப்பினும், தொழிற்துறை உற்பத்தி குறியீடு(Industrial Production) கடந்த ஜூலை மாதத்தில் 4.3 சதவீதமாக கூறப்பட்டுள்ளது சாதகமான விஷயம்.

கடந்த ஜூன் மாத தொழிற்துறை உற்பத்தி குறியீடு(IIP) 1.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வருட காலத்தில் அதிகபட்சமாக 2018ம் வருடம் அக்டோபர் மாதத்தில் 8.4 சதவீதமாக இருந்துள்ளது.

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த 2012ம் ஆண்டு முதல் சராசரியாக 6 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது. 2013ம் வருடம் நவம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 12.17 சதவீதமும், 2017ம் வருடத்தின் ஜூன் மாதத்தில் 1.54 சதவீதம் என்ற குறைந்த அளவிலும் இருந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தையில் நீண்ட காலத்திற்கு பணம் சம்பாதிக்க வேண்டுமா – இதோ ஐந்து வாய்ப்புகள்

பங்குச்சந்தையில் நீண்ட காலத்திற்கு பணம் சம்பாதிக்க வேண்டுமா – இதோ ஐந்து வாய்ப்புகள்

The Profit of a Company can be distributed to Investors in Five ways – Shareholders

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்குவதற்கு முன், அந்த நிறுவனம் சார்ந்த அடிப்படை பகுப்பாய்வுகளை(Fundamental Analysis) ஆராய்வது அவசியம். நிறுவனத்தின் பங்கு என்பது நமக்கான தொழில் வாய்ப்பாகும். அவற்றில் முதலீடு செய்யும் முன், நிறுவனத்தின் தொழில் அனுபவம் மற்றும் நிதி அறிக்கையை முழுமையாக கண்டறிந்து பின்பு முதலீட்டு முடிவை எடுக்கலாம்.

நமது நண்பரோ அல்லது வீட்டிற்கு அருகில் உள்ள நபரோ நம்மிடம் கடனாக ஒரு தொகையை கேட்டால், உடனடியாக கொடுத்து விடுவோமா, என்ன ? சற்று யோசிக்க தான் செய்வோம். சிறு வயது முதல் அவரை பற்றி நன்கு தெரியும், நாணயமானவர் என்றால் கடன் கொடுக்க தயங்க மாட்டோம். பண விஷயத்தில் அவர் சரியில்லை என்று தோன்றினால், உதவி செய்ய யோசிப்போம். ஆனால், பங்குச்சந்தையில் மட்டும் நமது யோசனை தவறாகி விடுகிறது.

காரணம், நாம் நிறுவனத்தின் நிலைமையை புரிந்து கொள்ளாமல், பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருப்பதனால் தான். எந்தவொரு முதலீட்டை மேற்கொள்ளும் முன், அந்த முதலீட்டு சாதனம் நமக்கு புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறதா, வருவாய் ஈட்ட நாம் எவ்வளவு காலம் காத்திருக்கலாம், அவற்றில் உள்ள ரிஸ்க் தன்மை(Risk Management) போன்றவற்றை அறிந்த பின்னரே, முதலீட்டை துவக்க வேண்டும்.

ஆம், பங்குச்சந்தை மற்ற எல்லா முதலீட்டு சாதனங்களையும் விட அதிக வருவாயை கொடுக்க கூடியது. நீண்ட காலத்தில் பணவீக்கத்தை(Inflation) தாண்டிய வருவாய் வாய்ப்பு எப்போதும் உள்ளது. அதே வேளையில், பங்குச்சந்தையில் வருவாய் ஈட்டும் முறையை புரிந்து கொள்வது அவசியம்.

பங்குச்சந்தையில் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்கினை நாம் வாங்கும் போது, வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பு பல வகைகளில் உள்ளது. தின வர்த்தகம் மற்றும் குறுகிய கால வர்த்தகம் என்பதை ஒரு முதலீட்டாக கருத முடியாது. அவையும் பணம் பண்ணும் வாய்ப்பு தான். முதலீடு என்பது நீண்ட காலத்திற்கு உரியது. உதாரணத்திற்கு ஐந்து வருடங்களுக்கு மேல் எனலாம். அதனால் தான் பங்குகளுக்கு நீண்ட கால மூலதன ஆதாயம்(Long term Capital Gains) என்பது ஒரு வருடத்திற்கு மேலாக வைத்திருக்கும் முதலீட்டிற்கு பொருந்தும்.

நாம் வாங்கிய பங்குகளை சில வருடங்கள் வைத்திருக்கும் நிலையில், அவை ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டது. பங்குச்சந்தையில் ஏற்ற – இறக்கம் இருந்தால் மட்டுமே ஒருவர் பணம் பண்ண முடியும் – இது ஒரு வியாபாரம் என்பதை மறவாதீர்கள். உதாரணமாக நாம் இன்று ரூ.100 மதிப்பை கொண்ட ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்கி வைத்திருக்கும் போது, ஒரு வருடத்திற்கு பிறகு அதன் மதிப்பு ரூ. 150 எனும் போது, நமக்கு லாபம் தானே. அதே பங்கின் விலை ஒரு வருடத்திற்கு பிறகு, 50 ரூபாய் எனில், நமக்கு நஷ்டம் தான். முதலீட்டை பொறுத்தவரை லாப, நஷ்டம் என்பது நாம் அந்த பங்கினை விற்றால் ஒழிய, ஏற்பட வாய்ப்பில்லை. நீண்ட காலம் வைத்திருக்கும் நிலையில், அதன் ஏற்ற – இறக்கங்கள் மாறுபட்டு, நல்ல வருவாயை கொண்டிருக்கும். 

Share Market – Free Course – Fundamental Analysis Registration

ஈவு தொகை(Dividend):

ஒரு நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தால் மட்டுமே, முதலீட்டாளர்களுக்கு லாபம் என்பது இல்லை. நிறுவனம் ஈட்டும் லாபத்தின் மூலமும் முதலீட்டாளருக்கு இதர வருவாய் உண்டு. அது தான் ஈவு தொகை எனப்படும் டிவிடெண்ட்(Dividend). இது வங்கியில் அளிக்கப்படும் வட்டி தொகை போன்று. ஒரு நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் லாபமீட்டும் போது, அந்த லாப தொகையை கொண்டு தனது தொழிலை மேம்படுத்த பயன்படுத்தலாம். இதன் மூலம் பங்கு விலை அதிகரிக்கலாம். இல்லையெனில், அந்த லாப தொகையை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதே சிறந்தது. இவை தான் ஈவு தொகையாக வெளிப்படுகிறது.

போனஸ் பங்குகள் (Bonus Shares):

நிறுவனம் தனது லாபத்தை தொழில் வளர்ச்சிக்கு முதலீடு செய்யவில்லை. ஈவு தொகையையும் அளிக்க தயாராக இல்லை எனும் போது, அவை போனஸ் பங்குகளாக மாறலாம். அதாவது பங்குகள் வைத்திருக்கும் முதலீட்டாளருக்கு லாப தொகையை போனஸ் பங்குகளாக பகிர்ந்தளிப்பது. இவை சந்தை மதிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தாது. அதே நேரத்தில், பங்கின் விலை மாறுபடும்.

பங்குகளை திரும்ப பெறுதல்(Buyback of Shares):

பங்குகளை திரும்ப பெறுவது என்பது பணமீட்டுவதற்கான மற்றொரு வாய்ப்பு. நிறுவனம் தனது லாப தொகையை கொண்டு, முதலீட்டாளர்களிடம் உள்ள பங்குகளை, நிறுவனமே திரும்ப வாங்கி கொள்வது. முதலீட்டாளர்களுக்கு வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு இங்கு ஏற்படுகிறது. இதன் மூலம் நிறுவனர்களின் பங்களிப்பு அதிகரிக்கும்.

உரிமை பங்குகள்(Rights Issue):

ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளருக்கு, முன்னுரிமை கொடுக்கும் பட்சத்தில் சலுகை விலையில்(Discount rate) பங்குகள் விற்கப்படும். இவை தான் உரிமை பங்குகள் எனப்படும். அதாவது சந்தையில் ரூ. 100 என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை, ஏற்கனவே முதலீட்டாளராக உள்ள உங்களுக்கு ரூ. 80 என்ற விலையில் வாங்கி கொள்ளுங்கள் என்று சலுகை அறிவித்தால் அவை உரிமை பங்குகளாகும்.

மேலே சொன்னவாறாக ஐந்து முறைகளில் ஒரு முதலீட்டாளராக பங்குகளில் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. சொல்லப்பட்ட அனைத்தையும் ஒரு நிறுவனம் தர வேண்டிய அவசியமில்லை. ஆனால், நல்ல நிறுவன பங்குகள் இதற்கான வாய்ப்பை எப்போதும் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட பங்குகளை கண்டறிவது நமது கடமையாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

11,000 கோடி ரூபாய் கடனை அடைக்கும் முனைப்பில் ஜீ நிறுவனம்

11,000 கோடி ரூபாய் கடனை அடைக்கும் முனைப்பில் ஜீ நிறுவனம் 

Rs.11K Crore Debt Reduction Process by ZEE Enterprises

மும்பையை தலைமையிடமாக கொண்ட எஸ்ஸல் குழுமத்தின்(ESSEL Group) ஒரு அங்கம் தான் ஜீ நிறுவனம். இந்த குழுமம் ஊடகங்கள், பொழுதுபோக்கு, உட்கட்டமைப்பு, கல்வி, பேக்கேஜிங்(Packaging) போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. நடப்பு 2019ம் வருடத்தின் துவக்கத்தில் இந்த குழுமம் கடனை அடைக்கும் பொருட்டு ஜீ பொழுதுபோக்கு(ZEE Entertainment) நிறுவனத்தின் பங்குகளை விற்க தயாராகின.

ஐ.எல்.எப்.எஸ்.(IL & FS) நிறுவனத்தின் நிதி சிக்கலை போலவே, எஸ்ஸல் குழுமத்தின் கடன் சிக்கல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கும், பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கும் பாதகமாக அமைந்தன. பரஸ்பர நிதிகளின் கடன் பத்திர முதலீடு சில காலம் ஆட்டம் காண ஆரம்பித்தது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பரஸ்பர நிதிகளிடம் கடன் வாங்கிய நிறுவனங்கள் குறிப்பிட்ட நாட்களில் அவற்றை அடைக்க முடியாமல் திணறின.

முதிர்வு பெற்ற திட்டங்களுக்கு முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தை கொடுக்க முடியாமல், சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போதைய நிலையில் இது சார்ந்த பிரச்னைகள் 60-70 சதவீதம் களையப்பட்டு விட்டது எனலாம். பொதுவாக கடனை பெற்ற நிறுவனங்கள் அதனை குறிப்பிட்ட காலத்தில் அடைக்க முடியாமல் போவதும், இது சார்ந்து ரேட்டிங் நிறுவனங்கள், கடன் பெற்ற நிறுவனத்தின் தர மதிப்பீட்டை குறைப்பதும் தற்சமயம் சாதாரணமான விஷயமாக மாறி விட்டன.

ஆனால் முதலீட்டாளர்களிடையே இது நம்பகத்தன்மையை ஏற்படுத்தவில்லை. கடன் பத்திரங்களில் இந்த அளவு ரிஸ்க் இருக்கும் போது, நாம் ஏன் பங்குகள் சார்ந்த முதலீட்டில் மட்டும் இருக்க கூடாது என கடன் பத்திர முதலீடு பற்றி யோசிக்க தொடங்கினர். நடப்பு காலத்தில் பொருளாதார மந்த நிலையும் இதற்கு சான்றாக அமைந்து விட்டது.

எஸ்ஸல் குழுமத்தின் சார்பாக உள்ள கடனை குறைக்கும் பொருட்டு, இந்த மாத இறுதிக்குள் 11,000 கோடி ரூபாயை செலுத்த உள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் பரஸ்பர நிதிகளின் நிலுவையில் உள்ள தொகை 50-60 சதவீதம் கிடைக்கப்பெறும். இது பரஸ்பர நிதி முதலீட்டாளர்களுக்கு ஒரு சாதகமான விஷயமே. ஜீ நிறுவனம் சொல்லப்பட்ட கடனை அடைக்கும் பட்சத்தில், ஆதித்யா பிர்லா, எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் கோடக் மஹிந்திரா போன்ற பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு நலன் பயக்கும்.

பரஸ்பர நிதி நிறுவனங்களின் ஜீ நிறுவனத்துடனான கடன் நிலுவை தொகையில் உத்தேசமாக கிடைக்கக்கூடிய தொகை முறையே – ஆதித்யா பிர்லா 760 கோடி ரூபாய், எச்.டி.எப்.சி.(HDFC Mutual Fund) 580 கோடி ரூபாய், ஐ.சி.ஐ.சி.ஐ. 435 கோடி ரூபாய். சமீபத்தில் கோடக் மஹிந்திரா பரஸ்பர நிதி நிறுவனத்திற்கு, ஜீ நிறுவனம் 600 கோடி ரூபாயை செலுத்தியுள்ளன. இது கோடக் மஹிந்திரா நிறுவனத்தின் கடன் நிலுவை தொகையில் சுமார் 52 சதவீதமாகும்.

சொல்லப்பட்ட 11,000 கோடி ரூபாய் கடன் அடைக்கும் இலக்கு, எஸ்ஸல் குழும நிறுவனர்களின் கடன் தொகை மட்டுமே. குழுமத்தின் துணை நிறுவன கடன் தொகையை இவற்றில் சேர்க்க வில்லை என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சந்தையை தாங்கி பிடிக்கும் முதலீடுகள், வாங்கி குவித்த பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள்

சந்தையை தாங்கி பிடிக்கும் முதலீடுகள், வாங்கி குவித்த பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள் 

Positive Inflows in Mutual Funds India – Economy Slowdown Time

நாட்டில் உள்ள பரஸ்பர நிதி தொழிற்துறையை மேம்படுத்துதல், பராமரித்தல் மற்றும் பரஸ்பர நிதி முதலீட்டாளர்களின் நலன்களை பாதுகாக்கும் விஷயங்களில் ஆம்ஃபி (Association of Mutual Funds in India – AMFI) அமைப்பு செயல்படுகிறது. பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் முதலீடு சார்ந்த தரவுகளை ஆம்ஃபி ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய பரஸ்பர நிதி சந்தையில் முதலீடு செய்யப்பட்ட தொகை 1.02 லட்சம் கோடி ரூபாய். இது இதற்கு முந்தைய ஜூலை மாதத்தில் 87,000 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பரஸ்பர நிதி முதலீடுகளின் சொத்து மதிப்பு ஜூலை மாதத்தில் 24.53 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 4 சதவீதம் அதிகரித்து 25.47 லட்சம் கோடியாக இருந்துள்ளது.

நடப்பு வருட ஜூலை மாதத்தில் தங்க இ.டி.எப்.(Gold ETF) திட்டத்தில் முதலீடு எதுவும் செய்யப்படாமல் சுமார் 17 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. ஆனால் ஆகஸ்ட் மாதம் இத்திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை ரூ.145 கோடி. இண்டெக்ஸ் பண்டுகளிலும்(Index Funds) முதலீடு அதிகரித்துள்ளன. ஜூலை மாதத்தில் 224 கோடி ரூபாயாக இருந்த இண்டெக்ஸ் பண்டு முதலீடு, கடந்த மாதம் 345 கோடி ரூபாயாக உள்ளது.

சந்தை இறங்கி வரும் சூழ்நிலையில் பெருவாரியான முதலீடுகள் லிக்விட்(Liquid) மற்றும் பங்கு சார்ந்த(Equity Funds) திட்டங்களில் தான் முதலீடு செய்யப்பட்டு வருகின்றன. வங்கி சேமிப்பு கணக்கிற்கு மாற்றாக சொல்லப்படும் லிக்விட் பண்டுகளில் கடந்த ஜூலை மாதம் 45,441 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதுவே ஆகஸ்ட் மாதத்தில் 79,428 கோடி ரூபாயாக வந்துள்ளது.

பங்கு சார்ந்த திட்டங்களில் ஜூலை மாதம் ரூ. 8,112 கோடி முதலீடு வந்திருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 9,152 கோடி ரூபாயை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. இது போல அல்ட்ரா ஷார்ட் (Ultra Short Duration) பண்டுகளில் ஆகஸ்ட் மாதம் 2,830 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது ஜூலை மாதம் 600 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்துள்ளது.

வரி சேமிப்பு சார்ந்த இ.எல்.எஸ்.எஸ்.(ELSS) பரஸ்பர நிதி திட்டங்களிலும் மாத அடிப்படையில் முதலீடு கணிசமாக அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் 737 கோடி ரூபாயாக இருந்த முதலீடு ஆகஸ்ட் மாதம் 827 கோடி ரூபாயாக உள்ளது.

இருப்பினும் எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan – SIP) முதலீடுகள் ஆகஸ்ட் மாதத்தில் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் ரூ. 8,324 கோடியாக இருந்த எஸ்.ஐ.பி. முதலீடு, கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 8,231 கோடியாக குறைந்துள்ளது. சந்தை இறக்கத்திலும், பரஸ்பர நிதி முதலீடுகள் அதிகரித்து வருவது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றன.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com