வரும் வாரத்தில் பங்குச்சந்தையை பாதிக்கும் முக்கிய காரணிகள் – செப்டம்பர் 16 – 20
Key Factors that affect the Indian Stock Market in the Upcoming Week (September 16 -20)
இந்திய பங்குச்சந்தை கடந்த வார வர்த்தகத்தின் முடிவில் நிப்டி50(Nifty50) 11,075 புள்ளிகள் என்ற அளவிலும், மும்பை சென்செக்ஸ் குறியீடு(BSE Sensex) 37,385 புள்ளிகள் என்ற அளவிலும் இருந்துள்ளது. வரவிருக்கும் வாரத்தில் சந்தையை பாதிக்கக்கூடிய முக்கிய காரணிகளாக சில அமைய உள்ளன.
நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் கடந்த வாரத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அடுத்ததாக ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க விகிதம்(WPI Inflation) நாளை அறிவிக்கப்பட உள்ளது. நேற்று (14-09-2019) நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வீட்டுமனை துறைக்கும், ஏற்றுமதி துறைக்கும் ஊக்கமளிக்கும் வகையில் சில அறிவிப்புகளை சொல்லியுள்ளார். இருப்பினும் இவை சந்தையில் செயல்பாட்டுக்கு வந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியில் களம் காண சிறிது காலமாகலாம்.
நேற்று அதிகாலை சவுதியில் ஆரம்கோ எண்ணெய்(Aramco) நிறுவனத்தின் மீது ஏற்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரு இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு ஏமெனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹௌதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு 5.7 மில்லியன் பேரல் அளவிலான உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது ஆரம்கோ நிறுவனம். ஈராக் நாட்டின் சதாம் ஹுசைன் காலத்திற்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது தான் என சொல்லப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக வருமான வரி துறை நோட்டீஸ்(Income Tax Notice) அனுப்பியுள்ளது. இந்த நிகழ்வு நடப்பாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டதாகவும், தற்போது தான் ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது சார்பாக ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.
தாங்கள் இதுவரை வருமான வரித்துறையிடம் இருந்து எந்த நோட்டீஸையும் பெறவில்லை என்று ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. சவூதி ஆரம்கோ நிறுவனத்தின் மீதான தாக்குதல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவன குடும்பத்தின் கணக்கில் காட்டப்படாத வருவாய் ஆகிய இரு நிகழ்வுகளும் சந்தைக்கு பாதகமாக அமையலாம்.
எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சியை விட, மிக குறைவான அளவே இந்திய நாடு வளர்ச்சி பெற்றுள்ளதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) கூறியுள்ளது. கார்ப்பொரேட் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறையில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் பலவீனமடைந்து வருவதாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்துள்ளது சர்வதேச நாணய நிதியம்.
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மற்றும் அமெரிக்க வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்பு ஆகிய காரணிகளும் வரும் வாரத்தின் சந்தை போக்கை தீர்மானிக்கலாம். பங்குச்சந்தை அதிக ஏற்ற – இறக்க காலமாக தற்போது கருதப்படுவதால், நல்ல நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு வாங்குவதற்கான வாய்ப்புகளை கண்டறியலாம். அதே வேளையில் குறுகிய காலத்தில் லாபம் பார்க்கிறேன் என்று கையை சுட்டு கொள்ள வேண்டாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை