All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

செல்வமகள் (சுகன்யா சம்ரிதி) சேமிப்பு திட்டம் – அஞ்சலக வரி சேமிப்பு

செல்வமகள் (சுகன்யா சம்ரிதி) சேமிப்பு திட்டம் – அஞ்சலக வரி சேமிப்பு 

Sukanya Samriddhi Yojana – Postal Small Savings Scheme

 

அரசாங்கத்தால் வழங்கப்படும் சிறு சேமிப்பு திட்டங்களில் நல்ல வட்டி வருவாயை கொண்டிருப்பது மூத்த குடிமக்கள் திட்டம் எனலாம். இதற்கு அடுத்தாற் போல் இருப்பது பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம்(Sukanya Samriddhi). நடப்பில் இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 8.40 சதவீதம்.

 

செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தங்கள் பெண் குழந்தைகளுக்காக சேமிக்க உள்ள பெற்றோர், விரைவாக கணக்கை துவங்கினால் தான் குறிப்பிட்ட பலனை சரியாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

திட்டத்தில் சேர 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தையாக(Girl Child) இருக்க வேண்டும். எனவே குழந்தை பிறந்த சில நாட்கள் அல்லது வாரங்களில் திட்டமிடுவது சிறந்தது. கணக்கு முடியும் தருணம் குழந்தையின் 21வது வயதில் முடிவடையும். அதாவது ஒரு வயதுக்குள் ஆரம்பிக்கப்பட்ட கணக்கு 21வது வருடத்தில் முடிவு பெறும். நாம் தாமதமாக கணக்கை ஆரம்பிக்கும் போது, முதிர்வு காலமும் மாறுபடும்.

 

பெண் குழந்தையின் பெயரில் அதன் பெற்றோர் அல்லது காப்பாளர் கணக்கை துவங்கி முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச ஆரம்ப முதலீடு(Minimum Investment) ரூ. 250. அதிகபட்சமாக முதலீட்டிற்கு வரம்பு எதுவுமில்லை. ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் வரை முதலீடு செய்யும் ஒருவருக்கு வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வரி சலுகை உண்டு (வருமான வரி செலுத்தக்கூடியவராக இருந்தால்). 

 

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச முதலீடாக ரூ. 1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை செலுத்த தவறும் பட்சத்தில் கணக்கு செயல்பாடு நிறுத்தி வைக்கப்படும். இருப்பினும் அபராத கட்டணத்தை செலுத்தி கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம்.

 

பெண் குழந்தை தனது 18 வயதை அடையும் போது, மேற்படிப்பு செலவுக்காக முதலீடு செய்த தொகையில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை பணமாக பெற்று கொள்ளலாம். மீதமிருக்கும் தொகையை 21 வருட முடிவில் திரும்ப பெறலாம். 18வயது நிரம்பியவுடன் பெண் திருமணம் செய்வதற்கு தயாராகி விட்டால், கணக்கை முன்னரே முடித்து கொள்ளும் சலுகையும் அளிக்கப்படுகிறது.

 

செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான கணக்கை உங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது வங்கியில் துவங்கலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கை மட்டுமே துவங்க முடியும். அதே வேளையில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு கணக்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும் (இரு பெண் குழந்தைகள்).

இரட்டை பெண் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் ஒரு குடும்பத்தில் மூன்று பெண் குழந்தைகளுக்கு கணக்கு துவங்க அனுமதி அளிக்கப்படும். இருப்பினும் அதற்கான பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தத்து எடுக்கப்படும் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து செல்வமகள் கணக்கை தொடங்கலாம்.

 

திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்திற்கு வருமான வரி சட்டம் 80சி கீழ் முழு வரி சலுகையும் உள்ளது. அதாவது முதலீடு செய்யும் பணத்திற்கு, கிடைக்கப்பெறும் வட்டி வருவாய் மற்றும் முதிர்வில் கிடைக்க கூடிய மொத்த தொகை என மூன்று விதமான வரி சலுகை அளிக்கப்படுகிறது. 

 

செல்வமகள் திட்டத்தின் கணக்கை ஆரம்பிப்பதற்கு பெற்றோர் அல்லது காப்பாளரின் அடையாள நகல்(ID Proof), முகவரி நகல், பான் எண்(PAN), பெண் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் குழந்தையின் புகைப்படம் அவசியம். 

 

பரஸ்பர நிதி முதலீட்டை புரிந்து கொண்டு, முதலீடு செய்ய உள்ளோர் செல்வமகள் திட்டத்திற்கு மாற்றாக பரஸ்பர நிதி முதலீட்டு திட்டங்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய நல்ல வருமானத்தை பெறலாம். வரி சலுகைக்காக மட்டுமே செல்வமகள் திட்டத்தை பயன்படுத்தாமல், தங்கள் குழந்தைகளின் எதிர்கால நிதி தேவையை கருத்தில் கொண்டு முதலீடு செய்வது நலம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

   

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 11.01 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பு

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 11.01 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பு

India’s Balance of Trade (Trade Deficit) to USD 11.01 Billion in October 2019

நாட்டின் வர்த்தக பற்றாக்குறை கடந்த அக்டோபர் மாதத்தின் முடிவில் 11.01 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 10.86 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டின் அக்டோபர் காலத்தில் வர்த்தக பற்றாக்குறை 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது.

தற்போது சொல்லப்பட்ட வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) சந்தை எதிர்பார்த்த 12.05 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதனை விட குறைவாக தான் உள்ளது. பெட்ரோலியம் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அளவு குறைந்ததை அடுத்து நாட்டின் அக்டோபர் மாத இறக்குமதி விகிதம் 16 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் இறக்குமதி அளவு 31 சதவீத வீழ்ச்சியும், மின்னணு பொருட்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்கள் முறையே 8.5 சதவீதம் மற்றும் 14.70 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. தங்கத்தின் இறக்குமதி அக்டோபர் மாதத்தில் 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதியை பொறுத்தவரையில் அக்டோபர் மாத முடிவில் ஒரு சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி 14.60 சதவீதம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் 11 சதவீதமும் சரிவை கண்டுள்ளது. இது போல ஜவுளி மற்றும் பருத்தி வகை பொருட்களின் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.

மருந்துகள் மற்றும் மின்னணு பொருட்களும் ஏற்றுமதியில் பெருமளவிலான சரிவை சந்தித்துள்ளது. நாட்டின் தேவை பெரும்பாலும் இறக்குமதியை சார்ந்தே உள்ளதால் வர்த்தக பற்றாக்குறையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவின் பெரும்பாலான வர்த்தக பற்றாக்குறை சீனா, சுவிஸ், சவூதி அரேபியா, ஈராக் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளுடன் தான் ஏற்பட்டுள்ளது. நாட்டின் இறக்குமதியில் அதிக இடத்தை தக்க வைத்திருப்பது கனிம எரிபொருட்கள்(Mineral Fuels), எண்ணெய் வகைகள், முத்துக்கள் மற்றும் நகைகள் ஆகியவை ஆகும்.

நாட்டின் அதிகபட்ச பற்றாக்குறையாக கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 20,210 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. வர்த்தக உபரியாக(Trade Surplus) கடந்த 1977ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 258 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேசிய சேமிப்பு பத்திரம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்

தேசிய சேமிப்பு பத்திரம் – அஞ்சலக வரி சேமிப்பு திட்டம்  

National Savings Certificate (NSC) – Postal Savings Scheme

வருமான வரி சேமிப்பு(Tax Savings) என்றவுடன் பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருவது காப்பீடு திட்டம் தான். இதற்கு அடுத்ததாக நம்மில் பலருக்கு தோன்றுவது அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள் தான். அஞ்சலக சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் பல வரி சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன.

ஐந்து வருட வைப்பு நிதி, செல்வ மகள் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி(PPF), கிசான் விகாஸ் பத்திரம்(KVP), தேசிய சேமிப்பு பத்திரம்(NSC) என வரி சேமிப்பு திட்டங்களை அஞ்சலகத்தில் காணலாம். இங்கு நாம் காணப்போவது தேசிய சேமிப்பு பத்திரம் சார்ந்து.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

என்.எஸ்.சி. எனப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டம் எனலாம். தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது.

அனைத்து இந்திய குடிமக்களும்(Resident Individual) இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர். குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான  வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம்.

தேசிய சேமிப்பு பத்திர திட்டம் பொதுவாக 5 வருட கால அளவை கொண்டிருக்கும். நடப்பில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.9 சதவீதம் (October 2019). வட்டி விகித முறை ஆண்டுக்கு ஒரு முறை கணக்கிடப்படும். அதாவது தற்போது முதலீடு செய்யப்படும் 100 ரூபாய், ஐந்து வருட முடிவில் ரூ. 146.25 ஐ பெற்று தரும்.

5 வருடம் மற்றும் 10 வருடம் என இரு வகைகளில் திட்டம் உள்ளதால், இதனை வங்கிகளில் அடமானம் வைத்து கடனும் பெறலாம் என்பது கூடுதல் அம்சம். வரி சேமிப்பிற்கு அதிகபட்சமாக ஒரு நிதியாண்டில் ரூ. 1.50 லட்சம் வரை (u/s 80C) முதலீடு செய்யலாம். அதற்கு மேற்பட்ட முதலீட்டு தொகைக்கு வரி சலுகை பெற இயலாது.

பொதுவாக இது போன்ற வரி சேமிப்பு திட்டங்களில் கால அளவுகள் (5 அல்லது 10 வருடங்கள்) முடிவதற்கு முன்னர், பணத்தை திரும்ப பெற முடியாது. இருப்பினும், திட்டத்தில் முதலீடு செய்த சந்தாதாரர் ஒருவர் எதிர்பாராத நிகழ்வால் உயிரிழக்க நேரிட்டால் அவரது நாமினி கணக்கை முடித்து கொண்டு பணத்தை உடனே பெறலாம்.

தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தின் முடிவில் கிடைக்கப்பெறும் தொகைக்கு டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படாது. முழுத்தொகையும் சந்தாதாரர்களின் கையில் கிடைக்கப்பெறும். இருப்பினும் ஒருவர் தனது வருமான வரம்பை கணக்கில் கொண்டு, முதலீட்டின் மூலம் கிடைக்கப்பெற்ற வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும்.

வரி சேமிப்பு திட்டத்தினை பொறுத்தவரை லாக்-இன்(Lock-in) எனப்படும் விதிமுறை உண்டு. தற்போதைய நிலையில் குறைந்த லாக்-இன் வசதி, பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் செயல்படும் வரி சேமிப்பு பண்டுகளுக்கு (Tax Savings Funds – ELSS – 3 Years) மட்டுமே உண்டு. மற்ற முதலீடுகள் 5 வருடம், 10 வருடம், 15 வருடங்களுக்கு மேலாக என லாக்-இன் விதிமுறைகள் மாறுபடும்.

வருமான வரி சேமிக்கிறேன் என நமக்கு பயன்படாத திட்டங்களை தேர்ந்தெடுப்பது நல்லதல்ல. நமது வருமான வரியை நேர்மையான முறையில் சேமிக்க வேண்டும், அதே வேளையில் நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தையும் அது தர வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இயக்குனர் பதவியை ராஜினாமா செய்த அனில் அம்பானி – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

இயக்குனர் பதவியை ராஜினாமா செய்த அனில் அம்பானி – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

Anil Dhirubhai Ambani resigns – Director of Reliance Communications

ரிலையன்ஸ் குழும நிறுவனத்தின் சேர்மனாக இருப்பவர் திரு. அனில் திருபாய் அம்பானி. கடந்த 2006ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திலிருந்து பிரிந்த ரிலையன்ஸ் குழும நிறுவனம் அனில் அம்பானியால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் இன்ப்ரா(Reliance Infra), ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஆகியவை ரிலையன்ஸ் குழும நிறுவனங்களாக உள்ளது. செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 30,000 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்ததை ஒட்டி, அதன் நிறுவனர் அனில் அம்பானி இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் ஏற்கனவே திவால் நிலைக்கு தள்ளப்பட்டு, அதற்கான தீர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் அதன் முதலீட்டாளர்களுக்கு 96 சதவீத முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.

தொடர்ச்சியாக பத்து காலாண்டுகளுக்கும் மேலாக  நஷ்டத்தை சந்தித்து வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் சுமார் 47,600 கோடி ரூபாய் கடன் சுமையையும் கொண்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பங்கு ஒன்றின் விலை 100 ரூபாய்க்கு மேலாக இருந்த நிலையில், தற்போது வெறும் 60 பைசாவில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ. 7,767 கோடியாகும். கடந்த 2008ம் ஆண்டில் இந்நிறுவனம் 5400 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

நீண்டகால முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்யும் முன்னர், நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) ஆராய்ந்த பின்னரே முதலீட்டு முடிவை எடுப்பது பாதுகாப்பானது. பொதுவாக கடனில்லாத(Debt Free) நிறுவனங்கள், தொடர்ச்சியான விற்பனை மற்றும் லாப வளர்ச்சியை கொண்டிருக்கும் நிறுவனங்கள், நல்ல நிர்வாக திறனை கொண்டிருப்பவை முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்கும் எனலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஏர்டெல் காலாண்டு முடிவுகள் – 23,000 கோடி ரூபாய் நஷ்டம் – எச்சரிக்கை மணியா !

ஏர்டெல் காலாண்டு முடிவுகள் – 23,000 கோடி ரூபாய் நஷ்டம் – எச்சரிக்கை மணியா !

Alert – Q2FY20 – Bharti Airtel reports 23,000 Crore Loss in Quarterly Results

 

1984ம் ஆண்டு வாக்கில் அழுத்தக்கூடிய பட்டன் தொலைபேசிகளை அமைத்து, நாட்டில் அறிமுகப்படுத்தியவர் சுனில் மிட்டல். பின்னர் 1990ம் ஆண்டுகளில் தொலைநகல் இயந்திரங்கள்(Fax), கம்பியில்லா தொலைபேசி(Cordless Phones) என தொலைத்தொடர்பு சாதனங்களை இந்திய சந்தைக்கு வரவழைத்தார்.

 

1995ம் வருடத்தின் ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் ஏர்டெல் என்னும் பார்தி ஏர்டெல்(Bharti Airtel) நிறுவனம். 15 வருடங்களுக்கு முன்பு ஏர்டெல்லின் சேவையும், அதன் பின்னணி இசையுமே ஒவ்வொரு வாடிக்கையாளரை கவர்ந்திழுத்தது. அதிகமான சந்தாதாரர்களை கொண்டு நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் ஏர்டெல் நிறுவனம் விளங்கியது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ரிலையன்ஸ் ஜியோ(JIO) வருகைக்கு பின் இவையனைத்தும் தலைகீழாக மாறின. அதிக கட்டணம் வசூலிக்கிறது என குறை சொல்லும் அளவிற்கு ஏர்டெல் பெயரெடுக்க, ஜியோவின் கட்டணங்கள் மலிவாகின. பேசுவதற்கும், இணைய பயன்பாட்டிற்கும் தனித்தனியாக அதிகபட்ச கட்டணங்களை செலுத்தி வந்த நிலையில், ஜியோவின் இணைய புரட்சி அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் கட்டண சலுகையை அறிவிக்க வைத்தது.

 

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 1.86 லட்சம் கோடி. அதன் புத்தக மதிப்பு 139 ரூபாய். கடன்-பங்கு(Debt-Equity Ratio) விகிதம் 1.75 என்ற அளவில் அதிகமாக உள்ளது. நிறுவனத்திற்கு கடனாக ரூ. 1.25 லட்சம் கோடி சொல்லப்பட்டுள்ளது.

 

நிறுவனம் கடன் அதிகமாக பெற்றாலும், அதனை செலுத்தக்கூடிய அளவில் வட்டி பாதுகாப்பு விகிதமும்(ICR) இல்லை. தற்போதைய வட்டி பாதுகாப்பு விகிதம் ஒன்றுக்கு குறைவாக உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனர்களின் பங்களிப்பு 62 சதவீதமாக உள்ளது.

 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுவாக தங்களது வாடிக்கையாளர்களின் முன்கூட்டிய செலுத்தும் கட்டணத்தை கொண்டே வளர்ச்சியை பெறும் நிலையில் உள்ளன. ஆகவே விற்பனையை அதிகரிக்க வாடிக்கையாளர்களை தக்க வைப்பது அவசியமாகும். செப்டம்பர் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாயாக ரூ. 21,131 கோடியை பெற்றுள்ளது. 

 

கடந்த 2018ம் வருடம் செப்டம்பர் காலாண்டில் இது 20,147 கோடி ரூபாயாக இருந்தது. எனவே கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது வருவாய் 5 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் 23,045 கோடி ரூபாயை நிகர நஷ்டமாக கொண்டுள்ளது. கடந்த 2018 செப்டம்பர் காலாண்டில் நிகர லாபமாக 118 கோடி ரூபாய் உள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது, தற்போது லாபத்தில் 19,500 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

 

சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக செலுத்தப்பட வேண்டிய நிலுவை தொகையை, பெறப்பட்ட மொத்த வருவாயில் சரி செய்துள்ளது. இதன் காரணமாகவே செப்டம்பர் காலாண்டில் நிகர இழப்பை நிறுவனம் சந்தித்துள்ளது.

 

கடந்த பத்து வருடங்களில் தொலைத்தொடர்பு துறையில் வேகமான மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். வீழ்ச்சி, ஏர் செல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் திவால், வோடபோன்-ஐடியா இணைப்பு, ஜியோ வருகைக்கு பின்னான ஏர்டெல் நிறுவனத்தின் பின்னடைவு மற்றும் இணைய மாற்றங்கள் என பல கட்டங்களை சந்தித்து வருகிறது.

 

தற்போது வோடபோன் நிறுவனமும் தனது சேவையை இந்தியாவில் நிறுத்தி கொள்வதற்கான நிலையில் உள்ளது. வோடபோன்-ஐடியா நிறுவனம் தனது செப்டம்பர் காலாண்டில் 50,897 கோடி ரூபாயை நிகர இழப்பாக கொண்டுள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் இது ரூ. 4,908 கோடி நஷ்டமாகவும், 2018ம்  ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் ரூ. 4,950 கோடியை நஷ்டமாகவும் கொண்டுள்ளது.

 

தற்போது இந்த துறையில் அரசின் கொள்கைகளும் மற்றும் விதிமுறைகளும் மாற்றம் பெற்று வருகின்றன. எனவே முதலீட்டாளர்கள் தொலைத்தொடர்பு துறையில் உள்ள பங்குகளில் முதலீடு செய்வதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். புதிய முதலீட்டாளர்கள் தற்போதைய நிலையில், இந்த துறையை தவிர்ப்பது நலம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

  

நாட்டின் அக்டோபர் மாத சில்லரை விலை பணவீக்கம் 4.62 சதவீதமாக உயர்வு

நாட்டின் அக்டோபர்  மாத சில்லரை விலை பணவீக்கம் 4.62 சதவீதமாக உயர்வு 

India’s Retail Inflation rose to 4.62 Percent – October 2019

சந்தை எதிர்பாராத வகையில் நாட்டின் அக்டோபர் மாத நுகர்வோர் விலை பணவீக்க விகிதம் உயர்ந்துள்ளது. நுகர்வோர் விலை பணவீக்கம்(Consumer Price Index) என்று அழைக்கப்படும் சில்லரை விலை பணவீக்கம் கடந்த அக்டோபர் மாதத்தில் 4.62 சதவீதமாக உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த செப்டம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் 3.99 சதவீதமாகவும், 2018ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 3.38 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சொல்லப்பட்ட சில்லரை பணவீக்க விகிதம் முதன்முறையாக பாரத ரிசர்வ் வங்கியின் 4 சதவீத இலக்கை தாண்டியுள்ளது.

நடப்பு சந்தையில் பெரும்பாலும் 4.25 சதவீதம் என்ற அளவில் பணவீக்கம் இருக்கலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், உணவு பொருட்களின் விலை உயர்வால் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது.

நுகர்வோர் விலை பணவீக்கம் கடந்த ஏழு வருட காலத்தில், அதிகபட்சமாக 2012ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் 12 சதவீதமும், குறைந்த அளவாக 2017ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 1.54 சதவீதமாகவும் இருந்துள்ளது. உணவு பொருட்களின் விலை அக்டோபர் மாதத்தில் சுமார் 8 சதவீதம் உயர்ந்து காணப்பட்டுள்ளது.

காய்கறிகளின் விலை 26 சதவீதமும், எதிர்பாராத மழை பொழிவால் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் 11.72 சதவீதம், மாமிசம் மற்றும் மீன் 9.75 சதவீதம் மற்றும் முட்டை 6 சதவீதம் என விலை உயர்ந்துள்ளது.

இது போல பழங்கள், மசாலா பொருட்கள் மற்றும் பால் பொருட்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டுள்ளது. துணிமணிகள் மற்றும் காலணிகள் விலை சிறிதளவு ஏற்றம் பெற்றுள்ளது. ஆனால் எரிபொருட்களின் பணவீக்கம் 2 சதவீதம் குறைந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் கிராமப்புற பணவீக்க(Rural Inflation) விகிதம் 4.29 சதவீதமாகவும், நகர்ப்புற பணவீக்கம் (Urban Inflation) 5.11 சதவீதமாகவும் உள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அதிகமாக காணப்படுகிறது. இதனை சார்ந்து அடுத்து வரவிருக்கும் மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் வட்டி விகித மாற்றம் ஏற்படுத்தப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – அனுக் பார்மா

பங்குச்சந்தை அலசல் – அனுக் பார்மா 

Anuh Pharma – Fundamental Analysis – Value Investing

மருந்து துறையில் 80 வருடங்களுக்கு மேலான அனுபவத்தை கொண்டிருக்கும் எஸ்.கே. குழும(SK Group) நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் அனுக் பார்மா. காசநோய்க்கான மருந்து, மலேரியா மற்றும் பாக்டீரியா தொற்றுக்கான மருந்து தயாரிப்பில் நாட்டின் மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாக அனுக் பார்மா நிறுவனம் திகழ்கிறது.

மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஏற்றுமதியிலும் தனது சேவையை கொண்டுள்ளது இந்த நிறுவனம். நடப்பாண்டில் இதுவரை 483 அவதானிப்புகளுக்கு(USFDA Observations) அமெரிக்க மருந்து மற்றும் நிர்வாக ஆணையத்திடம் இருந்து ஆய்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த 1960ம் ஆண்டு முதல் மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிட்டிருக்கும் அனுக் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 370 கோடி ரூபாய். சிறு நிறுவனமாக இருந்தாலும், தனது சிறப்பான செயல்பாட்டால் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வருவாயை தந்துள்ளது.

நிறுவனத்தின் கடன்-பங்கு(Debt-Equity Ratio) விகிதம் தற்போது 0.03 புள்ளிகளாக உள்ளது. எனவே கடன் என்று பெரிதாக எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 130 மடங்காக உள்ளது நிறுவனத்திற்கு சாதகமானது. நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாகவும், நிறுவனர்கள் தங்கள் பங்குகளை அடமானம் எதுவும் வைக்கவில்லை என்பதும் முதலீட்டாளர்களுக்கு நல்ல விஷயம்.

காலாண்டு விற்பனை மற்றும் நிகர லாபம் சராசரியான வளர்ச்சியை பெற்றுள்ளது எனலாம். கடந்த மூன்று வருட கால அளவில் இதன் விற்பனை மற்றும் லாப வளர்ச்சி குறைந்துள்ளது. பத்து வருடங்களில் விற்பனையும், லாபமும் 10 சதவீத வளர்ச்சியை கொண்டிருக்கின்றன.

பங்கின் மீதான வருவாய்(ROE) கடந்த மூன்று வருடங்களில் 12 சதவீதமும், ஐந்து வருட கால அளவில் இது 15 சதவீதமாகவும், 10 வருடங்களில் 17 சதவீதமாகவும் உள்ளது. பங்கின் விலை கடந்த மூன்று வருடங்களில் 12 சதவீத இழப்பை சந்தித்துள்ளன. பத்து வருட கால அளவில் 15 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளன.

2018-19ம் நிதியாண்டு முடிவின் படி, நிறுவனத்தின் கையிருப்பு 152 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. ஸ்மால் கேப்(Small Cap) குறியீட்டில் காணப்படும் இந்த நிறுவனத்தின் அடுத்த சில காலாண்டு முடிவுகளை ஆராய்ந்து பங்கு விலையின் மீது கவனம் செலுத்தலாம்.

நிறுவனம் சார்பாக இதுவரை ஐந்து முறை போனஸ் பங்குகள்(Bonus Issue) வழங்கப்பட்டுள்ளன. சமீப போனஸ் பங்குகளாக கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் போனஸாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் ஆறு வருடங்களில் இல்லாத வணிக நம்பிக்கை குறைவு

நாட்டின் ஆறு வருடங்களில் இல்லாத வணிக நம்பிக்கை குறைவு 

India’s Business Confidence Index lowest in Six Years – October 2019

தேசிய பொருளாதார ஆராய்ச்சி குழு(NCAER) கடந்த 1956ம் ஆண்டு பொருளாதாரத்தில் லாப நோக்கமற்ற சிந்தனை குழுவாக உருவாக்கப்பட்டது. டெல்லியை தலைமையிடமாக கொண்டிருக்கும் இந்த குழுவின் தலைவராக திரு. நந்தன் நிலேகனி உள்ளார். இவர் தான் இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதைய சேர்மனும் ஆவார்.

காலாண்டு அடிப்படையில் வணிகம் சார்ந்த கணக்கெடுப்புகளை நடத்தி, சில வணிக புள்ளிவிவரங்களை வெளியிடுவது தேசிய பொருளாதார ஆராய்ச்சி குழுவின் வேலையாகும். நாட்டில் உள்ள 500க்கும் மேற்பட்ட இந்திய வணிக நிறுவனங்களிடம் கேள்விகளை எழுப்பி, அதன் மூலம் பெறப்படும் பதில்களின் அடிப்படையில் வணிகம் சார்ந்த புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது.

நாட்டில் உள்ள தற்போதைய வணிக சூழல் மற்றும் குறுகிய கால வாய்ப்புகள் குறித்த மதிப்பீட்டையும் இக்குழு வழங்குகிறது. இதற்காக நாட்டில் உள்ள முக்கிய ஆறு பெரு நகரங்களில் தரவுகள் சேகரிக்கப்பட்டு, காலாண்டுக்கு ஒரு முறை தகவல்கள் வெளியாகும்.

வணிக நிறுவனங்களில் காணப்படும் உறுதியான பண்புகள், வணிகம் எதிர்பார்க்கும் உள்ளீடு மற்றும் வெளியீடு செலவுகள், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு நிலைமை, ஊதிய நிலை, விற்பனைக்கான வாய்ப்புகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய தகவல்களும் இவற்றில் அடங்கும்.

இதன் மூலம் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகள், முதலீட்டு காலநிலை, நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் திறன் பயன்பாடு(Capacity Utilization) ஆகியவை சார்ந்த புள்ளிவிவரங்கள் கூறப்படும். பொருளாதார கொள்கைகள் சார்ந்த அரசியல் நம்பிக்கை(Political Confidence) பற்றிய குறியீடும் இங்கு சொல்லப்படுகின்றன.

செப்டம்பர் கால வணிக நம்பிக்கை குறியீடு நேற்று(11-11-2019) தேசிய பொருளாதார ஆராய்ச்சி குழுவால் வெளியிடப்பட்டது. இவற்றில் நாட்டின் வணிக நம்பிக்கை குறியீடு(Business Confidence Index) கடந்த ஆறு வருடங்களில் காணப்படாத அளவிற்கு குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இரண்டாம் காலாண்டில் வணிக நம்பிக்கை குறியீடு 15.3 சதவீதம் குறைந்துள்ளது.

வணிக நம்பிக்கை குறியீட்டுக்கான புள்ளிகள் சொல்லப்பட்ட காலத்தில் 103 புள்ளிகளாக உள்ளது. இங்கே வணிக நம்பிக்கையாக குறிப்பிடுவது, ‘ நாட்டின் பொருளாதாரம் அடுத்த ஆறு மாதங்களில் சரியாகும், நிறுவனங்களின் நிதி நிலைமை அடுத்த ஆறு மாதங்களில் சீராகும், தற்போதைய முதலீட்டு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது மற்றும் திறன் பயன்பாடு சாதகமாக உள்ளது ‘ என்பவை வணிக நம்பிக்கையின் அம்சமாக பார்க்கப்படுகின்றன.

ஆனால் மேலே சொல்லப்பட்ட நான்கு தன்மைகளில் இந்திய நிறுவனங்களுக்கு தற்போதைய நிலையில் நம்பிக்கை குறைவாக இருப்பதையே வணிக நம்பிக்கை குறியீடு காட்டுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தனியார் ரயில் ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ முதல் மாத வருவாய் 3.70 கோடி ரூபாய்

தனியார் ரயில் ‘தேஜஸ் எக்ஸ்பிரஸ்’ முதல் மாத வருவாய் 3.70 கோடி ரூபாய்

Private Train Tejas Express earns revenue of nearly Rs. 3.70 Crore in First Month

முழுவதும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை கொண்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்னும் சிறப்பு ரயில் கடந்த 2017ம் ஆண்டு இந்திய ரயில்வே துறையால் துவங்கப்பட்டது. பயணிகளின் பொருட்களை வைப்பதற்கான சிறப்பு வசதி, எல்.இ.டி. டிவி(LED TV), செய்தித்தாள்கள், ராஜ்தானி மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களை காட்டிலும் முன்னுரிமை என பல சிறப்பம்சங்களை கொண்டு இந்த ரயில் இயங்கி வந்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆரம்ப கட்டத்தில் மும்பை முதல் கோவா வரை தொடங்கப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ்(Tejas Express) சேவை, பின்னர் சென்னை – மதுரை இடையே இரண்டாவது தேஜஸ் சிறப்பு ரயில் கொண்டு வரப்பட்டது. எல்.எச்.பி.(LHB Rake) என்ற சிறப்பு பேட்டி, 180 கி.மீ. வேகம், தானியங்கி கதவு, சி.சி.டிவி, புகைபிடிப்பதை கண்டறிவதற்கான அலாரங்கள், பயணிகளுக்கான அதிகபட்ச காப்பீடு என பாதுகாப்பிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்த ரயில் சேவை வழங்கப்பட்டது.

நாட்டின் முதல் தனியார் ரயில் என்ற பிராண்டுடன் கடந்த அக்டோபர் மாதம் ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) நிறுவனத்தால் முதல் தனியார் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சேவை துவங்கப்பட்டது. இந்த ரயில் சேவை லக்னோ – டெல்லி இடையே இருந்தது. இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவனம் தான் ஐ.ஆர்.சி.டி.சி. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் கடந்த மாதம் இந்திய பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. தனியார் ரயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சேவை வந்து ஒரு மாதத்திற்கு மேலாகி உள்ள நிலையில், இதன் நிதி சார்ந்த தகவலும் தற்போது உத்தேசமாக வெளிவந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் வாரத்திற்கு ஆறு நாட்கள் சேவை என கணக்கில் கொண்டு, மொத்தம் 21 நாட்கள் ரயில் சேவை அளிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் டிக்கெட் விற்பனை மூலம் 3.70 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளதாகவும், நிறுவனத்தின் செலவினம் 3 கோடி ரூபாய் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த மாதத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சேவை ஈட்டிய லாபம்(Net Profit) ரூ. 70 லட்சம். நாளொன்றுக்கு டிக்கெட் விற்பனை அடைந்த மதிப்பு சராசரியாக 17.50 லட்சம் ரூபாய். வரவிருக்கும் காலங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் விரிவான அறிக்கைகளை காணலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

தேவைக்கும், விருப்பத்திற்குமான வேறுபாடு – ‘நச்’ புரிதல்கள்

தேவைக்கும், விருப்பத்திற்குமான வேறுபாடு – ‘நச்’ புரிதல்கள்  

Understanding between the Needs and Wants

தேவைக்கும், விருப்பத்திற்குமான இடைவெளியை நம்மால் புரிந்து கொண்டால் மட்டுமே, நிதி சார்ந்த வாழ்க்கையில் எந்த சிக்கலும் இல்லாமல் பயணிக்க முடியும். நமது மனதில் தோன்றியவை எல்லாம் தேவையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

நாம் இன்று உயிர் வாழ தேவையான உணவு, தட்பவெப்ப நிலையை சமாளிக்க தேவையான உடை மற்றும் இருப்பிடம், சுகாதாரம் மற்றும் சுத்தமான காற்று ஆகியவையே நமது இன்றியமையாத தேவையாகும்(Regular Needs). நாம் கற்கும் கல்வி முன்னர் அத்தியாவசியமானதாக சொல்லப்படவில்லை.

இருப்பினும், நாம் மேலே சொன்ன உணவு, உடை, இருப்பிடம் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை அடைய இன்று கல்வி தேவைப்படுகிறது. அதற்கு குறைந்தபட்ச அறிவை பெறுதலே சிறந்தது. தற்சார்பு வாழ்க்கையை நோக்கி பயணிக்கும் தனிநபர் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டாலே, வாழ்வு இனிமையாக அமையும்.

தேவையை பற்றி சொல்லி விட்டோம். தேவையை நாம் எக்காரணத்திற்காகவும் தவிர்க்க இயலாது. விருப்பம் என்பது நமது மனம் கேட்க துவங்கியது, இவற்றில் தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நமது மனம் ஆசைப்பட்ட அனைத்தையும் தேவையாக மாற்றி விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது அவசியம்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், உங்களுக்கு நான்கு சக்கர வாகனம்(Car) வேண்டுமென்றால் நீங்கள் உடனே அதனை தேவையாக எண்ணி விட கூடாது. உங்களுக்கென்று நிறைய மாற்று வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் வசிக்கும் இடம் நகரமாக இருக்கும் பட்சத்தில், உங்களுக்கு அரசு பேருந்து, ஆட்டோ, கால் டாக்ஸி, ரயில் என பல வாய்ப்புகள் இருக்கலாம்.

வாகனம் வாங்குவதை, உங்களின் விருப்பமாக கொண்டு அதன் தினசரி தேவையென்ன மற்றும் அதனை வாங்குவதற்கு நீங்கள் எந்த மாதிரியான நிதித்திட்டமிடலை செய்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். என்னுடன் பணிபுரியும் சக அதிகாரி மற்றும் ஊழியர்கள், நண்பர்கள் இந்தந்த பொருட்களை வாங்கியுள்ளனர். நான் ஏன் வாங்க கூடாது என நிதி சிக்கலில் மாட்டி விட கூடாது.

விருப்பங்களும் விலையேற்றத்துக்கு காரணம்

நாம் சில வருடங்களுக்கு முன்பு, கடைக்கு செல்ல நடந்து சென்றிருப்போம் அல்லது சைக்கிளை பயன்படுத்தியிருப்போம். ஆனால், இப்போது இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம். இதுவும் நமது விருப்பத்தினால் தான். நமக்கு வயதாகி விட்டது, அதனால் நடக்க முடியாது எனில் நாம் வாங்கிய வாகனத்தை நமது குழந்தைகள் ஏன் அதனை உடனே பயன்படுத்த வேண்டும் ? அவர்களையும் சிறிது காலத்திற்கு நடக்க சொல்லி அல்லது சைக்கிளில் பயணம் செய்து கடைக்கு செல்ல அறிவுறுத்தலாமே. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏராளம், ஆனால் அவற்றால் நாம் உற்சாகத்தை இழந்து விடக்கூடாது.

தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இலவசமாக தண்ணீர் கிடைக்கும் போது, சுத்தமான நீர்(RO Water) வேண்டுமென ஆசைப்பட்டோம். ஆனால் இன்று தண்ணீர் கிடைத்தாலே போதும் என்ற தேவைக்காக தள்ளப்பட்டுள்ளோம்.

உங்களுடைய அனைத்து விருப்பங்களையும் பட்டியலிடுங்கள். அவற்றில் எந்தந்த விருப்பங்கள் முதன்மையாக (உண்மையில்) கருதப்படுகிறதோ, அவற்றை அடைவதற்கான நிதி திட்டமிடலை உருவாக்குங்கள். கடனாக வாங்கி சிரமப்படாதீர்கள்.

நான் எப்போதும் சொல்லும் அந்த கூற்று தான் இங்கேயும், ‘உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் கிடைத்தால் அதனை கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள் ? (அதற்காக அதிர்ஷ்டத்தை நம்பி நேரத்தை வீணடிக்க வேண்டாமே).

உங்களுக்கான வாய்ப்புகள்:

  • ஆடம்பரமாக பொருட்களை வாங்கி குவித்து மகிழ்வேன்.
  • எனது கடனை அடைத்து கொள்வேன்.
  • வீட்டிற்குள் பத்திரமாக மறைத்து வைப்பேன்.
  • பாதுகாப்பான வங்கி டெபாசிட்டில் போட்டு வைப்பேன்
  • தொழில் செய்ய பயன்படுத்தி கொள்வேன்
  • நல்ல வருமானம் தரக்கூடிய முதலீட்டை கண்டறிந்து, முதலீடு செய்வேன்.
  • இன்னும் முடிவு செய்யவில்லை / என்ன செய்வதென்று தெரியவில்லை

தேவைகளை ஓரளவு குறைத்து கொள்ளலாம். விருப்பங்களை தேர்ந்தெடுத்து, சரியான நிதி திட்டமிடல் மூலம் அதனை அடைய முயற்சிக்கலாம். தேவைக்கு மட்டும் கடன் பெறுங்கள். அவசியமற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com