All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

நினைத்து பார்த்திராத கச்சா எண்ணெய் வீழ்ச்சி – பேரல் வாங்குவதற்கான விலையை கூட பெறவில்லை

நினைத்து பார்த்திராத கச்சா எண்ணெய் வீழ்ச்சி – பேரல் வாங்குவதற்கான விலையை கூட பெறவில்லை. 

World’s Biggest Oil Price Crash – WTI Crude at USD  -37.63 per Barrel

உலகளாவிய மீட்டெடுப்பு என காணப்படும் கோவிட்-19 தாக்கம், மெல்ல மெல்ல உலக பொருளாதாரத்தை அழித்து கொண்டிருக்கிறது. வளரும் நாடுகளும், வளர்ந்த அமெரிக்காவும் தங்கள் பொருளாதாரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அதன் போக்கை காட்டி கொண்டிருக்கிறது.

அனைத்து நாடுகளிலும் காணப்படும் ஊரடங்கு உத்தரவால் விமான சேவை, பொது பேருந்து சேவை மற்றும் தொழில்களுக்கான சேவை நகர முடியாதவை ஆகிய காரணங்களால் கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெய்யின் தேவை குறைந்து போனது. அதிகப்படியான உற்பத்தியை செய்து விட்டு, பின்பு பேச்சு வார்த்தையை ஏற்படுத்தி கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க போவதாக எண்ணெய் நாடுகள் சொல்லி கொண்டன.

ஆனால், கச்சா எண்ணெய் மலிவாக கிடைத்தாலும் இப்போதைய நிலையில் எல்லா நாடுகளும் கையிருப்பாக வாங்கி வைத்து கொள்ளும் என சொல்ல முடியாது. நேற்றைய பொழுதில்(20-04-2020) அமெரிக்க கச்சா எண்ணெய் குறியீடு (WTI Crude) வரலாற்றில் இதுவரை பார்த்திராத விலை வீழ்ச்சியை சந்தித்தது.

ஆரம்ப நிலையில் 30 சதவீத இறக்கத்தில் அது 21 வருட குறைவாக சொல்லப்பட்டது. அந்த வேளையில் கச்சா எண்ணெய் பேரலுக்கு 15 டாலர்களுக்கு குறைவாக வர்த்தகமாகி வந்தது. பின்பு 11 டாலர்களுக்கு அருகில் வர்த்தகமாகும் போது, கடந்த 34 வருடங்களில் காணப்பட்ட குறைவான அளவு இது தான் என சொல்லப்பட்டது. ஆனால், இதன் வீழ்ச்சி அப்படியே முடியவில்லை. நேற்றைய இரவில் கச்சா எண்ணெய் விலை ஒரு கட்டத்தில் 99 சதவீதம் வீழ்ச்சி கண்டு பேரலுக்கு வெறும் 15 சென்ட்டுகளுக்கு வர்த்தகமானது.

இறுதியாக பேரலுக்கு (-37.63) டாலர்கள் என்ற நிலையில் வர்த்தகம் முடிவடைந்தது சந்தையில் உள்ளவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தாலும், அடுத்த இரண்டு – மூன்று வருடங்கள் பொருளாதாரம் இயல்பு நிலையை பெற எடுத்து கொள்ளும் காலமாக கருதப்படும். கச்சா எண்ணெய் உற்பத்தியில்(Crude Oil Manufacturing) உள்ள சிறு வணிகர்கள் பெரும்பாலானோர் தங்கள் சேவையை நிறுத்தி விட்டனர்.

எரிபொருட்களுக்கான தேவைப்பாடு இப்போதைய நிலையில் சரியாகாது. இதனிடையே மின்னணு சார்ந்த வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் டெஸ்லா(Tesla) நிறுவனம் சீனாவிற்கு 31,000 மின்சார வாகனங்களை விற்பனை செய்திருந்தது கவனிக்கத்தக்கது.

பொதுவாக கச்சா எண்ணெய் வீழ்ச்சி, இதன் எரிபொருட்களை பயன்படுத்தும் விமான சேவை, பொது போக்குவரத்து மற்றும் பெயிண்ட் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையலாம். இருப்பினும், நாட்டில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு இது பாதகமாக அமையும்.

கச்சா எண்ணெய் வீழ்ச்சியடைந்திருக்கும் நிலையில், இது நம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை(Balance of Trade) சமாளிக்கலாம். அதே வேளையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 77 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. மீண்டும் கச்சா எண்ணெய் தனது பழைய நிலையை எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பின், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பெரும் வீழ்ச்சிடையும். இதனை சரி செய்ய அரசு டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பிழப்பு(Devalue) நடவடிக்கையை ஏற்படுத்த கூடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO)

பங்குச்சந்தை அலசல் – தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO)

National Aluminium Company(NALCO) – Fundamental Analysis

ஒடிசா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனம் தான் நால்கோ (NALCO). மத்திய அரசின் நவரத்னா நிறுவனமாக பார்க்கப்படும் நால்கோ, அலுமினிய உற்பத்தி சேவையை செய்து வருகிறது. பாக்சைட் சுரங்கம், அலுமினிய சுத்திகரிப்பு, அலுமினியத்தை உருக்குதல் மற்றும் வார்ப்பு, மின் உற்பத்தி, ரயில் மற்றும் துறைமுக வேலைகளை தொழிலாக கொண்டுள்ளது.

அலுமினிய துறையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகவும், துறை சார்ந்த பொருட்களை மிக குறைந்த விலையில் வழங்கும் உலகின் முக்கிய நிறுவனமாகவும் நால்கோ சொல்லப்படுகிறது. நிறுவனத்தின் வருவாயில் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்து உள்ளது  கவனிக்கத்தக்கது.

தேசிய அலுமினிய நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 5,960 கோடி. அதன் புத்தக மதிப்பு 55 ரூபாயாகவும், தற்போதைய பங்கு விலை 32 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. டிவிடெண்ட் தொகைக்கு(Dividend yield) பெயர் போன இந்நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கடனில்லா நிறுவனமாக வலம் வரும் நால்கோவின் கடன்-பங்கு விகிதம் 0.01 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 100 மடங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

NALCO DCF

நிறுவனர்களின் பங்களிப்பு 52 சதவீதமாக உள்ளது. நிறுவனர்களாக சொல்லப்படும் மத்திய அரசு பங்குகளை அடமானம் எதுவும் வைக்கவில்லை. இந்த துறையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலை புத்தக மதிப்பு அடிப்படையின் படி மலிவான விலையில் வர்த்தகமாகி வருகிறது. எனினும், இந்த துறை உலக பொருளாதார காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படுவதாக உள்ளன.

தேசிய அலுமினிய நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 11 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 8.50 சதவீதமாகவும் உள்ளது. லாப வளர்ச்சி விகிதம் ஐந்து வருடங்களில் 24 சதவீதமாகவும், பத்து வருட கால அளவில் 3 சதவீதமாகவும் உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் இரு காலாண்டுகளில் இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளன. நான்காம் காலாண்டு முடிவுகள்(Q4FY20) இன்னும் வெளிவரவில்லை. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 42 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. அதே வேளையில் பங்கு மீதான வருவாய் கடந்த 12 மாதங்களில் 16.50 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 11,499 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 1,734 கோடியாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பு மற்றும் பணவரத்து நன்றாக உள்ளது. அதிக ரிஸ்க் கொண்ட இந்த துறை அவ்வப்போது உலகளவில் ஏற்படும் பொருளாதார காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும். அதே நேரத்தில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறந்து விளங்கும் நிறுவனமாகவும் நால்கோ உள்ளது. பங்கு விலை பெரிய அளவில் ஏற்றம் பெறாவிட்டாலும், அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. பங்கு ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகும் போது, இந்த பங்கினை சிறிய அளவில் வாங்கி கொள்ளலாம். நீண்ட கால முதலீட்டில் டிவிடெண்ட் தொகையை ஈர்க்க உதவும் இது போன்ற பங்குகளை சேர்த்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.டி.எப்.சி. வங்கி நான்காம் காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் ரூ. 6,928 கோடி

எச்.டி.எப்.சி. வங்கி நான்காம் காலாண்டு முடிவுகள் – நிகர லாபம் ரூ. 6,928 கோடி 

HDFC Bank’s Standalone Net Profit of Rs. 6,928 Crore – Q4FY20

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய். ஆண்டுக்கு 10 சதவீதத்திற்கு மேல் வருவாய் வளர்ச்சியை கொண்டிருக்கும் இவ்வங்கி 2019-20ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருந்தது.

நான்காம் காலாண்டில்(Quarterly Results) வங்கியின் வருவாய் ரூ. 29,885 கோடியாகவும், இதர வருமானம் ரூ. 6,033 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 9,174 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 6,928 கோடி. கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது, வருவாய் வளர்ச்சி 13.5 சதவீதமும், நிகர லாபம் 17.7 சதவீதமும் வளர்ச்சியை பெற்றுள்ளது.

மார்ச் 2020 காலாண்டு முடிவில் ஒட்டுமொத்த வாராக்கடன்(Gross NPA) விகிதம் 1.26 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 0.36 சதவீதமாகவும் இருந்துள்ளது. இது கடந்த சில காலாண்டுகளை காட்டிலும் குறைவாக தான் காணப்படுகிறது. 2018-19ம் நிதியாண்டின் முடிவில் வங்கி ஒட்டுமொத்தமாக ரூ. 1.05 கோடியை வருவாயாகவும், ரூ. 22,332 கோடியை நிகர லாபமாகவும் வங்கி கொண்டிருந்தது.

எச்.டி.எப்.சி. வங்கியின் வருவாய் கடந்த மூன்று வருடங்களில் 19 சதவீதமும், ஐந்து வருட காலத்தில் 20 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. இது போல லாபத்தில் 20.50 சதவீதமும் (3 வருடங்கள்) மற்றும் ஐந்து வருடங்களில் 21 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது.

தற்போது சொல்லப்பட்ட முடிவுகளில் வங்கியின் வட்டி வருவாய் கடந்த காலத்தை காட்டிலும் 16 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. மார்ச் காலாண்டு முடிவில் மொத்த மூலதன போதுமான விகிதம் 18.50 சதவீதமாக உள்ளது. பாரத ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவுறுத்தலின் படி, எச்.டி.எப்.சி. வங்கி முதலீட்டாளர்களுக்கு ஈவு தொகையை(Dividend) வழங்கப்போவதில்லை என கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவு மற்றும் பொருளாதார மந்தநிலை நிலவும் இது போன்ற காலங்களில் ஈவு தொகையை நிறுத்தி வைப்பதன் மூலம் வங்கியின் மூலதனத்தை பாதுகாக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களும் கடந்த 2019-20ம் நிதியாண்டுக்கான ஈவு தொகையை இனி அறிவிக்காது என தெரிகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

விப்ரோ & டி.சி.எஸ். நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் – மார்ச் 2020

விப்ரோ & டி.சி.எஸ். நிறுவனங்களின் நான்காம் காலாண்டு முடிவுகள் – மார்ச் 2020

Quarterly Results of Wipro and TCS – Q4FY20

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு மற்றும் முழு ஆண்டுக்கான நிறுவனங்களின் நிதி அறிக்கை முடிவுகள் நடப்பு மாதம் முதல் வெளியிடப்படும். ஆரம்ப நிலையில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் காலாண்டு முடிவுகளை வெளியிடும். விப்ரோ மற்றும் டி.சி.எஸ். நிறுவனங்கள் தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் வருவாயாக ரூ. 15,750 கோடியை கொண்டுள்ளது விப்ரோ நிறுவனம். செலவினம் ரூ. 12,631 கோடியாகவும், இதர வருமானமாக 591 கோடி ரூபாயாகவும் உள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ. 2,966 கோடி மற்றும் நிகர லாபம்(Net Profit) ரூ. 2,326 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

2018-19ம் நிதியாண்டின் மார்ச் காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போதைய வருவாய் அதிகமாகும். அதே வேளையில் நிகர லாபம் 6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 6.50 சதவீதமும், பத்து வருட கால அளவில் 9 சதவீதமாகவும் உள்ளது.

இது போல லாப வளர்ச்சி(Profit Growth) ஐந்து வருடங்களில் 3 சதவீதமும், பத்து வருடங்களில் 9 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது கவனிக்கத்தக்கது. பங்கு மீதான வருவாய்(ROE) 5 வருடங்களில் 18.75 சதவீதமும், 10 வருட கால அளவில் 21 சதவீதமாகவும் உள்ளது. இருப்பினும், இதன் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 34 சதவீத இறக்கத்தை சந்தித்துள்ளது.

2019-20ம் நிதியாண்டின் முடிவில் விப்ரோ நிறுவனத்தின் கையிருப்பு ரூ. 54,179 கோடியாக உள்ளது. பணவரத்தும், புதிய சொத்துக்களை வாங்குவதும் நடைபெற்று வந்துள்ளது. இந்த பங்கில் நிறுவனர்களின் பங்களிப்பு 72 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

டி.சி.எஸ். (TCS) Q4FY20:

டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமான டி.சி.எஸ். நிறுவனம் தனது நான்காம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. மார்ச் 2020ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 39,946 கோடியாகவும், செலவினம் ரூ. 28,970 கோடியாகவும் உள்ளது. இதர வருமானமாக 738 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

வரிக்கு முந்தைய லாபம் ரூ. 10,512 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 8,049 கோடியாகும். காலாண்டின் முடிவில் ஒரு பங்கு மீதான வருமானம்(EPS) ரூ. 21.45 ஆக உள்ளது. விற்பனை வளர்ச்சி(Compounded Sales Growth) கடந்த ஐந்து வருடங்களில் 12.35 சதவீதமும், 10 வருட காலத்தில் 18 சதவீதமாகவும் உள்ளது. லாப வளர்ச்சி ஐந்து வருட காலத்தில் 10.55 சதவீதம் மற்றும் 10 வருடங்களில் 20 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. பங்கின் மீதான வருவாய் கடந்த 5 வருடங்களில் 35 சதவீதமாகவும், 10 வருட கால அளவில் 37 சதவீதமாகவும் உள்ளது.

நிறுவனத்தின் கையிருப்பு மார்ச் 2020ம் நிதியாண்டின் முடிவில் ரூ. 83,751 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட இரு நிறுவனங்கள் அடுத்த காலாண்டுக்கான வருவாய் திட்டமிடலை(Guidance) பெரிதாக சொல்லவில்லை.

2019-20ம் நிதியாண்டின் காலாண்டு முடிவுகள் ஓரளவு வருவாயை பெற்று தந்தாலும், வரவிருக்கும் காலாண்டுகள் பெரும்பாலான நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கக்கூடும். நடப்பு ஏப்ரல் மாத ஊரடங்கு அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சியை பாதிக்கும். பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கும் காலமாகவும் ஏப்ரல் – ஜூன் (FY21) காலாண்டு பார்க்கப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் – 5.91 சதவீதம்

மார்ச் மாத சில்லரை விலை பணவீக்கம் – 5.91 சதவீதம் 

India’s Retail Inflation (CPI) – 5.91 Percent in March 2020

நாட்டின் சில்லரை விலை பணவீக்கம்(Consumer Price Index – CPI) கடந்த மார்ச் மாதத்தில் 5.91 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த பணவீக்க விகிதம் நான்கு மாத குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து அதிகரித்து வந்த சில்லரை விலை பணவீக்கம், தேவை நுகர்வு குறைந்து வருவதால் இந்த விலைவாசி விகிதமும் குறைந்து காணப்படுகிறது.

சந்தை எதிர்பார்த்த அளவை காட்டிலும், மார்ச் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் குறைந்துள்ளது. மார்ச் மாதத்தின் உணவுப்பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை, அதற்கு முந்தைய மாதங்களை காட்டிலும் குறைவாக உள்ளது. பிப்ரவரி மாதத்தில் உணவுப்பொருட்களின் பணவீக்க விகிதம் 9.50 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் 7.82 சதவீதமாக குறைந்துள்ளது.

காய்கறிகளின் விலை பிப்ரவரி மாதம் 31.60 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் மாதம் 18.63 சதவீதமாக இருந்துள்ளது. பழங்களின் பணவீக்க விகிதம் நான்கு சதவீதத்திற்கு குறைவாக காணப்படுகிறது. பருப்பு வகைகளின்(Pulses) பணவீக்க விகிதம் 16 சதவீதமாக உள்ளது. அதே வேளையில் தானிய வகைகள் மற்றும் பால் பொருட்களின் விலை மார்ச் மாதத்தில் சற்று உயர்ந்துள்ளது.

வீட்டு மனை, துணிமணிகள் மற்றும் காலணிகளின் பணவீக்க விகிதத்தில் மாற்றம் எதுவுமில்லை. ஒளி மற்றும் எரிபொருட்களின் விலை சற்று உயர்ந்து மார்ச் மாத முடிவில் 6.60 சதவீதமாக உள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 6.4 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது.

நாட்டின் மற்றொரு முறையான மொத்த விலை பணவீக்கம்(WPI Inflation) மார்ச் மாதத்தில் ஒரு சதவீதமாக உள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 2.26 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் உணவு பொருட்களின் தேவை மாறுபட்ட நிலையில் உள்ளது.

வரவிருக்கும் நாட்களில் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்தும், மற்ற பொருட்கள் மற்றும் சேவைகளின் பணவீக்க விகிதம் தேவைக்கு தகுந்தாற் போல் குறைந்தும் காணப்படும். ஊரடங்கு உத்தரவை அடுத்து, அத்தியாவசிய பொருட்களுக்கான தேவை மட்டுமே அதிகமாக உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வரும் நாட்கள் எப்படி இருக்கும் ? பொருளாதார ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்

வரும் நாட்கள் எப்படி இருக்கும் ? பொருளாதார ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் 

Things to consider financially on Covid-19 (Coronavirus)

கோவிட்-19 மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகிய இரண்டும் தாண்டவமாடும் சூழ்நிலையில் நிதி சார்ந்து திட்டமிடுவது அவசியமாகும். தற்போதைய நிலையில் அவசியமற்ற வகையில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும், மற்றவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொழில் சார்ந்த சேவைகளில் பெரும்பாலானவை தற்போது இல்லையென்றாலும், உணவு பொருட்கள் மற்றும் இன்டர்நெட் சேவையின் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தேவையான அளவுக்கு மட்டும் உணவு பொருட்களை கையிருப்பில் வைத்து கொள்ளுங்கள். உணவை வீணாக்க வேண்டாம். தேவைக்கு ஏற்றாற் போல், பசிக்கு மட்டுமே உணவை தயார் செய்து உண்பது சிறந்தது. இதனால் மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய உணவு பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கப்பெறும்.

வரும் நாட்களில் இதன் விலை அதிகமாக செல்லாமல் இருப்பதும், பெரியளவில் உற்பத்தி இல்லாமல் கையிருப்பை பகிர்ந்தளிப்பதும் நம் ஒவ்வொருவரின் இன்றியமையாத கடமையாக செயலாற்ற வேண்டும். நம் நாட்டில் தற்போதைய நிலையில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், அதற்கேற்ற உணவை எடுப்பதிலும் கவனம் வேண்டும். அதிகமான குளிர்ச்சி சார்ந்த உணவினை சாப்பிட்டு விட்டு, பின்பு சிரமப்பட வேண்டாம். எனவே சரிவிகித உணவை எடுத்து கொள்வதில் அக்கறை காட்டுங்கள்.

வீட்டிற்குள் இருப்பது சௌகரியம் என இருக்காமல், சிறிது நேரம் உடல் மற்றும் மனம் சார்ந்த பயிற்சிகளை செய்வது நம்மை ஊக்கப்படுத்தும். தொலைக்காட்சி, கைபேசி மற்றும் இதர தொழில்நுட்ப கருவிகள் இருக்கிறது என்பதற்காக பொழுது போக்க வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயங்களை வீட்டிற்குள் இருந்து செய்யலாம்.

இணைய பயன்பாட்டை முடிந்தவரை குறைத்து கொள்ளுங்கள். அவசியமுள்ள சேவைக்கு மட்டும் இன்டர்நெட் சேவையை பயன்படுத்துங்கள். இணைய வழியிலான வேலைகளை மேற்கொள்பவர்களுக்கு உங்களது குறைந்த இணைய பயன்பாட்டு சேவை உதவும். பெரும்பாலானவர்கள் ஒரே நேரத்தில் இணைய சேவையை பயன்படுத்துவதால், அதன் வேகமும் குறையும். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இன்டர்நெட் கட்டணத்தை அதிகப்படுத்த நீங்களே காரணமாகி விடாதீர்கள்.

கொரோனா வைரஸ் தாக்கம் அடுத்த சில மாதங்களில் குறைய வாய்ப்பிருந்தாலும், பொருளாதார மந்தநிலை அடுத்த இரண்டு வருடங்களுக்கு மேல் செல்லும். இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும். குடும்ப பட்ஜெட்டிலும் துண்டு விழும். எனவே சிக்கனத்தை மேற்கொள்ளுங்கள். பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வோர் கவனமாக கையாண்டு நீண்ட கால தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள். குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கிறேன் என கையில் இருக்கும் பணத்தை இழக்க வேண்டாம்.

வரவிருக்கும் நாட்கள், பொருளாதார ரீதியாக சவாலாக இருக்கும் என்பதால், அவசர தேவைக்கு பணத்தை வங்கியிலோ அல்லது வீட்டிலோ கையிருப்பாக வைத்து கொள்ளுங்கள். முறையான டேர்ம் பாலிசி(Term Insurance) மற்றும் மருத்துவ காப்பீட்டை(Health Insurance) பெறுவது இச்சமயத்தில் அவசியம். தற்போதைய நிலையில் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் கொரோனா வைரஸ் பாதிப்பையும் காப்பீட்டு திட்டத்தில் சேர்த்துள்ளது.

பங்குகளில் முதலீடு செய்ய உள்ளோர், காப்பீடு மற்றும் அவசரகால நிதியை(Emergency Fund) ஏற்படுத்தி விட்டு மட்டுமே, முதலீடு செய்ய துவங்க வேண்டும். நீங்கள் வாங்க கூடிய பங்குகளின் நிறுவனங்கள் கடனில்லாமல்(Debt Free) இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அவற்றின் பணவரத்து(Cash Flow) அதிகமாக இருக்கிறதா என கவனியுங்கள். நிறுவனம் லாபமீட்டவில்லை என்றாலும் பரவாயில்லை. கடன் அதிகமாக கொண்டிருக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலையாட்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறும் நிறுவனங்கள், உலக பொருளாதார வீழ்ச்சியில் காணாமல் போய்விடும் என்பதை மறக்க வேண்டாம்.

பொருளாதார வீழ்ச்சியை தாங்கி நிற்கும் நிறுவனங்கள் தான் தற்போது அவசியம், லாபமல்ல. பங்குச்சந்தை வீழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்றாலும், சிறுக சிறுக முதலீடு செய்வதே சிறந்தது. உதாரணமாக உங்களிடம் ரூ. 50,000 தொகை பங்குகள் வாங்க உள்ளது என்றால், ஒவ்வொரு பெரு வீழ்ச்சியிலும் 10 சதவீதத்திற்கு மேல் முதலீடு செய்யாதீர்கள். நீங்கள் செய்யப்போகும் முதலீடு நீண்ட காலத்திற்கு உரியது. எனவே கவனம் சிதறாமல் முதலீடு செய்வது அவசியம்.

எஸ்.ஐ.பி. முதலீட்டை மேற்கொள்வோர், தற்போதைய சூழ்நிலையில் முதலீட்டை நிறுத்த கூடாது. முடிந்தால், கூடுதல் தொகையை முதலீடு செய்வது நல்லது. மாத வருமானத்தில் சிக்கல் எதுவும் இருந்தால் மட்டுமே, உங்கள் எஸ்.ஐ.பி. தொகையை குறைத்து முதலீடு செய்யலாம். அதே வேளையில் முதலீடு செய்யாமல் இருக்க வேண்டாம்.

வங்கிகளில் வட்டி விகிதங்கள் இனி வரும் காலங்களில் குறைய கூடும் என்பதால், குறைந்த அளவு ரிஸ்க் எடுத்து பரஸ்பர நிதிகளில் கிடைக்கப்பெறும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். உடனடியான தேவைக்கு உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் வைத்து கொள்ளுங்கள். இது போன்ற சூழ்நிலையில் மற்றவர்களுக்கு உதவ முடிந்தால், அதனை செய்யுங்கள். அதற்காக உதவுகிறேன் என சுய விளம்பரம் தேவையில்லை.

ஊரடங்கு நிலை சில மாதங்களுக்கு பின்பு விலக்களிக்க நேர்ந்தாலும், நீங்கள் முடிந்தவரை சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். தேவையில்லாத செலவுகளை வரவிருக்கும் காலங்களில் குறைத்து கொள்வது அவசியம். கடனில்லா வாழ்க்கையும் சுகமே.

மனித நேயமே தற்போதைய தேவை, மரியாதை அல்ல…

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை  

www.varthagamadurai.com

The iDEA of Stock Market and Economic Crisis – T20

The iDEA of Stock Market and Economic Crisis – T20

பங்குச்சந்தை போக்கு மற்றும் பொருளாதார மந்தநிலை – 2020

இந்த நிகழ்வுக்கு உங்களை பதிவு செய்து கொள்ள…

SARAVANAKUMAR NAGARAJ (Founder of Varthaga Madurai E Services) is inviting you to a scheduled Zoom meeting.

Topic: The iDEA of Stock Market and Economic Crisis – T20

Time: Apr 11, 2020 05:30 PM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting

https://us04web.zoom.us/j/3875875746?pwd=eDJxam8xbmZ2WGtuUEtPWjNkblNIZz09

https://js.instamojo.com/v1/button.js 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

மெல்ல மெல்ல ஏற்றம் பெறுகிறதா இந்திய பங்குச்சந்தை ? – மாய வர்த்தகம்

மெல்ல மெல்ல ஏற்றம் பெறுகிறதா இந்திய பங்குச்சந்தை ? – மாய வர்த்தகம் 

Is the Indian Stock Market trading upside ? Trading illusion

பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட்-19 காலங்களில் உலக பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டு வருவதும், பின்பு சில நாட்களின் வர்த்தகத்தில் பெரிய அளவில் ஏற்றம் பெறுவதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பங்குச்சந்தையில் இது போன்ற ஏற்றங்கள் எதனை பிரதிபலிக்கின்றன ?

பொதுவாக பங்குச்சந்தையில் ஊக வணிகங்கள்(Speculation) நடைபெற்று வந்தாலும், நீண்ட காலத்தில் அதன் தாக்கம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சியை சார்ந்து தான் வழிநடத்தும். இவற்றில் முரண்பாடு ஏற்பட்டால், பின்னொரு காலத்தில் பங்குச்சந்தை தன்னை தானே சரி செய்து கொள்ளும். இதனை தான் நாம் பங்குச்சந்தை வீழ்ச்சி என்கிறோம்.

கடந்த சில வருடங்களாக உலக பங்குச்சந்தையில் உள்ள முக்கிய குறியீடுகள் வாழ்நாள் உச்சத்தில் வர்த்தகமாகி வந்தன. அதே வேளையில், அவற்றை சார்ந்த நாட்டின் வளர்ச்சியும்(GDP Growth), நிறுவனங்களின் வருவாயும்(Earnings) சொல்லிக்கொள்ளும் படி இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை, உள்நாட்டில் ஏற்பட்ட வாகனத்துறைக்கான சுணக்கம் ஆகியவை பங்குச்சந்தையை மந்தநிலைக்கு கொண்டு சென்றது.

பின்பு, கொரோனா வைரஸ் என்ற நிகழ்வு வந்தவுடன், அதனை காரணமாக கொண்டு பங்குச்சந்தை அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்தியது. இதன் வெளிப்பாடு தான் தற்போது உலகளவில் ஏற்பட்ட சந்தை வீழ்ச்சியாகும். கடந்த காலத்தில் இது போன்ற வீழ்ச்சி ஏற்பட்டு, பின்பு பங்குச்சந்தை பெருமளவில் மீண்டதும் வரலாற்று புள்ளிவிவரங்கள். தற்போதைய நிலை எப்போது முடிவடையலாம் என யாராலும் அவ்வளவு எளிதாக கணிக்க முடியாது.

இருப்பினும் சந்தை வீழ்ச்சியும், பொருளாதார மந்தநிலையும் நிரந்தரமாக இருக்க போவதில்லை. சந்தை வீழ்ச்சி(Stock Market Crash) என்பது நீண்ட கால முதலீட்டை பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். மதிப்புமிக்க முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை சரிவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, முதலீடு செய்ய துவங்குவர். அவர்கள் பெரும்பாலும் காளை சந்தையை விரும்புவதில்லை. கரடி சந்தையில் மட்டுமே அவர்கள் பணம் பண்ணும் வாய்ப்பை பெறுகின்றனர்.

பணக்கார முதலீட்டு ஜாம்பவான், திரு. வாரன் பப்பெட்(Warren Buffet) அவர்களின் முதலீட்டு உத்தியில் இதுவும் ஒன்று. அவர் அதிக விலை கொடுத்து எந்தவொரு பங்குகளையும் வாங்க விரும்புவதில்லை. பங்குச்சந்தை வீழ்ச்சியும் நாட்டின் பொருளாதாரத்திற்கு தேவையான ஒன்று தான். நிறுவனங்களின் வருவாய் குறைந்திருந்தாலும், அதன் தன்மை பங்குகளின் விலையிலும் தென்பட வேண்டும். இது பொதுவாக சந்தை ஏற்ற(Bull Market) காலங்களில் தெரிவதில்லை. ஆனால் சந்தை தொடர்ச்சியாக வீழும் போது உண்மையான மற்றும் மதிப்புமிக்க பங்குகளின்(Value Stocks) விலை நிலைத்து நிற்கும் அல்லது மலிவாக கிடைக்கப்பெறும். மற்ற பங்குகள் முதலீட்டாளர்களால் ஒதுக்கப்படும்.

கடந்த 2008ம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியின் போது(Global Financial Crisis), இந்திய பங்குச்சந்தை ஒரே வருடத்தில் 60 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சியை சந்தித்தது. அந்த வேளையில், பெரும்பாலானவர்கள் தங்கள் முதலீட்டை இழந்து சந்தையை விட்டு ஒதுங்கினர். சரியான உத்தியை பயன்படுத்தி முதலீடு செய்தவர்கள் இன்று கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்றால் மறுப்பதற்கில்லை. இது தான் வீழ்ச்சியின் ரகசியம்.

2008 Financial Crisis trading

2008ம் ஆண்டின் போது, இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்கள் பெருமளவிலான பங்குகளை விற்று கொண்டும், உள்ளூர் முதலீட்டாளர்கள் வாங்கி கொண்டும் இருந்தனர். இப்படி இருக்கையில், எப்போது தான் அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க முன் வருவர் ? ஏன், உள்ளூர் முதலீட்டாளர்கள் மட்டும் சந்தை வீழ்ச்சியின் போது வாங்க முன் வர வேண்டும் ?

உண்மையில், அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறுவதில்லை. தங்களது பழைய முதலீடுகளை (லாபத்தில் இருக்கும்) விற்று விட்டு, புதிய பங்குகளை மலிவான விலையில் வாங்குவர். இந்த முதலீட்டு அளவு வேண்டுமானால் மாறுபடலாம். உள்ளூர் முதலீட்டாளர்கள் சந்தை இறக்கத்தில் புதிய முதலீட்டை மேற்கொள்வர். அவ்வளவே.

உதாரணமாக, 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் ரூ. 29,447 கோடியை நிகர விற்பனையாக கொண்டிருந்தனர். அதாவது சொல்லப்பட்ட மாதத்தில், ரூ. 97,579 கோடிக்கு பங்குகளை புதிதாக வாங்கியும், ஏற்கனவே இருந்த முதலீட்டில் ரூ. 1.27 லட்சம் கோடி அளவிலான பங்குகளை விற்றும் இருந்தனர். வெறுமனே நிகர விற்பனையை மட்டும் நாம் கருத்தில் கொள்ள கூடாது.

தற்போதைய ஏற்றம் ஒரு தற்காலிகமானதே. ஒரு மாத ஊரடங்கு உத்தரவு, ஒரு வருட வருவாய் பாதிப்பை ஒரு நிறுவனத்திற்கு ஏற்படுத்தும். வேலைவாய்ப்பின்மை விகிதம், வாங்கும் திறன் குறைவு, விற்பனை வளர்ச்சி ஆகியவை வெகுவாக பாதிக்கப்படும். இதன் தாக்கம் வரும் நாட்களில் பொருளாதார வளர்ச்சி குறியீடு மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் தெரிய வரும். ஊரடங்கு உத்தரவில் தனிமனித வாழ்வு பாதிக்கப்படும் போது, நிறுவனங்கள் தப்பி பிழைத்து விடுமா என்ன ?

சில துறைகளுக்கு வேண்டுமானால் அரசின் சலுகைகள் இது போன்ற காலங்களில் கிடைக்கப்பெறலாம். அனைத்து நாடுகளின் அரசுகளும் பங்குச்சந்தை வீழ்ச்சியை தடுக்க புதிய சலுகைகளை அறிவிக்கும். இதன் காரணமாக சில நாட்கள் சந்தை ஏற்றம் பெறும். ஆனால் நீண்ட காலத்தில் ஒரு சந்தை ஏற்றம் பெறுவதற்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், நிறுவனங்கள் மற்றும் தனிமனித வருவாய் மிகவும் அவசியமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மார்ச் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

மார்ச் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் என்ன செய்து விட்டார்கள் ? 

FII & DII Trading activity for the Period of March 2020 – Indian Stock Market

கடந்த மார்ச் மாதம் இந்திய பங்குச்சந்தைக்கு போதாத காலமாக அமைந்து விட்டது எனலாம். ஒரு வருடங்களுக்கு மேலாக இருந்து வந்த பொருளாதார மந்தநிலையை(Economy Slowdown) அடுத்து, கொரோனா வைரஸ் தாக்கமும் இந்திய பொருளாதாரம் மற்றும் பங்குச்சந்தையை வெகுவாக பாதித்தது.

மார்ச் 2020 காலத்தில் பங்குச்சந்தை பெரும்பான்மையான வீழ்ச்சியை சந்தித்தது. இந்த வீழ்ச்சி கடந்த 2008ம் ஆண்டின் உலக பொருளாதார வீழ்ச்சி நாட்களில் ஏற்பட்ட அளவை ஒத்திருந்தது. மார்ச் மாத முடிவில் அன்னிய முதலீட்டாளர்கள் மார்ச் 27ம் தேதி தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களிலும் பங்குகளை விற்று தள்ளியுள்ளனர்.

சொல்லப்பட்ட மாதத்தில் பங்குச்சந்தை 21 நாட்கள் வர்த்தகமாகி உள்ளன. 21 நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் கொள்முதல் செய்த பங்குகளின் மதிப்பு ரூ. 1,54,904 கோடி மற்றும் விற்ற பங்குகளின் மதிப்பு ரூ. 2,20,721 கோடி. ஆக, கடந்த மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் மொத்தமாக ரூ. 65,816 கோடி மதிப்பில் பங்குகளை விற்றுள்ளனர்.

இருப்பினும், உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Investors) மார்ச் 26ம் தேதி தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் பங்குகளை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் முதலீட்டாளர்களின் கொள்முதல் ரூ. 1,57,857 கோடி மற்றும் விற்பனை ரூ. 1,02,262 கோடி. மார்ச் மாதத்தில் ரூ. 55,595 கோடி மதிப்பில் உள்ளூர் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியுள்ளனர்.

நடப்பு 2020ம் வருடத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை மட்டுமே செய்துள்ளனர். ஜனவரி மாதத்தில் ரூ. 5,360 கோடி, பிப்ரவரி மாதம் ரூ. 12,684 கோடியும் மற்றும் மார்ச் மாதத்தில் ரூ. 65,816 கோடியும் நிகர விற்பனையாக அமைந்துள்ளது.

உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பில் பரஸ்பர  நிதிகளின் எஸ்.ஐ.பி.(SIP Investing) முதலீடும் ஊக்கப்படுத்துகிறது. எனினும், அன்னிய முதலீட்டாளர்களின் விற்பனை பங்குச்சந்தை சரிவை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தைகள்  பெருத்த சரிவை ஏற்படுத்தி வரும் இச்சூழலில், அவ்வப்போது ஒரே நாளில் பெரிய ஏற்றத்தை அடைந்து வருவதும் இயல்பு தான்.

நீண்ட கால முதலீட்டாளர்கள், நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து எந்த அவசரமும் காட்டாமல், மலிவான விலை கிடைக்கும் போது மட்டும் முதலீடு செய்யும் மனப்பான்மையை கொண்டிருக்க வேண்டும். சந்தை ஏறுகிறது என பின்னால் சென்று வாங்கி விட்டு, பின்னர் பங்கு விலை இறங்குகிறது என கலங்க வேண்டாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தங்கத்தில் முதலீடு செய்யலாமா – தற்போதைய நிலை எப்படி ?

தங்கத்தில் முதலீடு செய்யலாமா – தற்போதைய நிலை எப்படி ?

Investing in Gold – Is it the right time now ?

நடப்பு காலத்தில் ஏற்பட்டுள்ள சில பிரச்சனைகள் – உலக பொருளாதார மந்தநிலை, கச்சா எண்ணெய் விலை மாற்றம், போர் பதற்றம், வணிக விநியோக சங்கிலி விலகியது(Supply Chain) மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆகியவை. இவற்றால் வரவிருக்கும் நாட்களில் பொருளாதார ரீதியாக பெரும்பாலான பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த நிலை எப்போதும் முடிவுக்கு வரும் என உறுதியாக சொல்ல முடியாது.

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

கொரோனா வைரஸ் பாதிப்பு(Covid-19) சில மாதங்களுக்கு பின், குறைவதற்கான வாய்ப்பு இருந்தாலும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி குறியீடு(GDP) வீழ்ச்சியை நோக்கி சென்றுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அறிக்கை படி, நேற்று இரவு 9 மணி வரை, நாட்டில் ஒட்டுமொத்தமாக 89,534 சோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தளத்தின் அதிகாரபூர்வ அறிக்கையின் படி, இதுவரை 4,289 பேர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 118 பேர் இறந்துள்ளனர் மற்றும் 328 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த மார்ச் 22ம் தேதி 400 ஆக இருந்த பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 10 மடங்கு அளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை குறியீடுகளில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்(BSE Sensex) நடப்பு வருடத்தில் 28 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. இது போல தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி(Nifty50) 30 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

ஒரே காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், அனைத்து நாடுகளின் பங்கு சந்தைகளும் கடந்த மூன்று மாதங்களாக இறக்கத்தை சந்தித்து வருகின்றன. இந்த நிலை அடுத்த ஒரு வருடத்திற்கு பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். பரஸ்பர நிதிகளில் மாத முதலீட்டை தொடர்பவர்கள், இது போன்ற சூழ்நிலையில் மாத முதலீட்டில் கூடுதல் தொகையை சேர்த்து கொண்டு தொடரலாம்.

பங்குகளில் நேரிடையாக முதலீடு செய்து வருபவர்கள், நீண்ட காலத்திற்கான முதலீட்டை தற்போது ஏற்படுத்தலாம். குறுகிய காலத்தில் முதலீடு செய்வதற்கான காலம் தற்போது இல்லை. நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து, மலிவான விலையில் முதலீடு செய்வது அவசியம். பொருளாதார மந்தநிலை காலங்களில் பெரும்பாலான நிறுவன பங்குகள் மலிவாக கிடைப்பது போல தோற்றமளிக்கும். இவற்றில் எச்சரிக்கையை கடைபிடிப்பது அவசியமாகும்.

நிறுவனங்கள்  தங்கள் தொழிலை தொடர முடியாமலும், நிதி நிறுவனங்கள் திவால் நிலைக்கு செல்வதும் இது போன்ற(Recession – Financial Crisis 2020 ) காலங்களில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. பங்குச்சந்தை மற்றும் அதனை சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு அடுத்த சில காலங்களுக்கு ஏற்றமாக இருக்கும்.

பொதுவாக தங்கத்தில் முதலீடு என்பது பொருளாதர மந்தநிலை காலங்களில் பாதுகாப்பான முதலீடாக(Safe Haven – Hedging) கருதப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்கிறேன் என ஆபரண தங்கத்தை வாங்கி வைப்பதில் எந்த பயனும் இல்லை. தங்கத்தில் முதலீடு செய்ய தங்க இ.டி.எப்.(Gold ETF), பரஸ்பர நிதிகளில் கிடைக்கப்பெறும் தங்க பண்டுகள்(Gold Funds) மற்றும் அரசாங்கம் மூலம் கிடைக்கும் தங்க பத்திரங்களில்Gold Bond Scheme) முதலீடு செய்யலாம்.

கடந்த 2016ம் ஆண்டு முதல் தங்கம் ஏற்றத்தில் மட்டுமே இருந்துள்ளது. 2013-15 வருட காலங்களில் அது முதலீட்டில் இழப்பை சந்தித்துள்ள நிலையில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தங்க இ.டி.எப். திட்டங்கள் 35 சதவீதத்திற்கு மேல் வருவாயை தந்துள்ளது. வெள்ளியில் முதலீடு கடந்த ஒரு வருடத்தில் 22 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

பரஸ்பர நிதிகளில் காணப்படும் தங்க பண்டுகள், கடந்த மூன்று வருட காலமாக 14 சதவீதத்திற்கு மேல் லாபத்தை (HDFC Gold Fund, ABSL Gold Fund, SBI & AXIS Gold, ICICI Pru Gold Savings) அளித்துள்ளது. தங்கத்தில் நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தையை காட்டிலும் வருவாய் குறைவாக இருந்தாலும், பொருளாதார  மந்தநிலை ஏற்படும் சமயங்களில் இது மட்டுமே உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

தங்கம் ஒரு முதலீடாக பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளில் கிடைக்கப்பெற்றாலும், நம் நாட்டில் வெள்ளி முதலீடு அவ்வாறாக வர்த்தகமாகவில்லை. வெள்ளி காசுகளாகவோ, இல்லையெனில் பிஸ்கட் போன்ற வடிவில் தான் முதலீட்டு முறை கிடைக்கும். எனவே, தங்கத்தை தற்போதைய சிறு முதலீடாக எடுத்து கொள்ளலாம். பொருளாதாரம் சரிவை நோக்கி செல்லும் காலங்களில், ஒரு முதலீட்டு முறையை மட்டுமே நம்பியிருக்காமல் முதலீட்டை பரவலாக்குவதும்(Asset Allocation) அவசியமாகும். அந்த முறையில் தங்கத்திலும் உங்கள் முதலீடு சிறிய அளவில் இருப்பது சிறந்தது. வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், கடன் பத்திரங்களிலும் சிறிய முதலீட்டை கொண்டிருக்கலாம்.

தற்போது சென்னையில், 10 கிராம் – 24 காரட் (99.9 % Purity) தங்கத்தின் விலை ரூ. 42,400 மற்றும் வெள்ளி(Silver Price) கிராம் ஒன்றுக்கு ரூ. 40.36 – குறித்து வைத்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com