All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

2019-20ம் நிதியாண்டில் ரூ. 16,594 கோடி நிகர லாபம் – இன்போசிஸ்

2019-20ம் நிதியாண்டில் ரூ. 16,594 கோடி நிகர லாபம் – இன்போசிஸ் 

Infosys Net profit of Rs. 16,594 Crore in FY2019-20

இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் கடந்த 1981ம் ஆண்டு துவங்கப்பட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் நாட்டின் 2வது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக வலம் வருகிறது. முதலிடத்தில் டி.சி.எஸ்.(TCS) நிறுவனம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் சில இந்திய நிறுவனங்களில் இன்போசிஸ் உள்ளது.

சுமார் 2.42 லட்சம் பணியாளர்களை கொண்டு உலகெங்கிலும் 120 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கும் இன்போசிஸ் தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனைகள், அவுட்சோர்சிங் மற்றும் அடுத்த தலைமுறைக்கான டிஜிட்டல் சேவைகளை அளித்து வருகிறது. இவற்றில் முக்கியத்துவம் என்னவென்றால், சொல்லப்பட்ட பணியாளர்களில் மகளிரின் எண்ணிக்கை மட்டும் மூன்றில் ஒரு பங்கு – 37 சதவீத பெண் பணியாளர்கள். இன்போசிஸ் நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 3.01 லட்சம் கோடி. 250 அமெரிக்க டாலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இன்று 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட நிறுவனமாக மாறியுள்ளது.

1993ம் ஆண்டு சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்நிறுவனம் பங்கு ஒன்றுக்கு 95 ரூபாய் விலையில் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த பங்கு பெரியளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை. பின்னாளில் இந்த பங்கு ஒருவரை கோடீஸ்வரராக்கும் என பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு தெரியவில்லை. கடந்த 36 வருடங்களில் இந்த பங்கு 3000 மடங்கு அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. அதாவது 1993ம் வருடம் ஒருவர் இன்போசிஸ் பங்குகளில் ரூ. 10,000 ஐ முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், இன்று சுமார் 3.2 கோடி ரூபாயை பெறும். ஆண்டுக்கு 40 சதவீத வருவாய் வளர்ச்சியில் இந்த பங்கு முதலீட்டாளரை செழிக்க வைத்திருக்கும்.

நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கூட்டாளிகளுடன் துவங்கப்பட்ட நிறுவனம் என்பதால், இந்நிறுவனத்தின் நிறுவனர்களின் பங்களிப்பு 13 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) சுமார் 130 மடங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 90,791 கோடியாகவும், செலவினம் ரூ. 68,524 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக ரூ. 2,803 கோடி சொல்லப்பட்டுள்ளது. நிகர லாபம் ரூ. 16,594 கோடியாக இருக்கிறது. இது கடந்த 2018-19ம் நிதியாண்டை காட்டிலும் 7 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

கடந்த 5 வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales Growth) 11 சதவீதமும், லாப வளர்ச்சி(Profit Growth) 6 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) ஐந்து வருடஙக்ளில் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 63,328 கோடி என சொல்லப்பட்டுள்ளது.

இன்போசிஸ் இதுவரை 8 முறை போனஸ் பங்குகளை(Bonus issue) தனது முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. நடப்பு டிவிடெண்ட் தொகை(Dividend yield) 3 சதவீதமாக உள்ளது. இது வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை காட்டிலும் அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது. இன்போசிஸ் நிறுவனத்தின் பணவரத்து அறிக்கையும் சாதகமாக இருந்து வருகிறது.

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் நிறுவனமாக இன்போசிஸ் உள்ளது. எனினும் தற்போது இதன் பங்கு விலை ஏற்றத்தில் உள்ளது. வரக்கூடிய நாட்களில் சுமார் 10-20 சதவீதம் என்ற அளவில் இந்த பங்கு இறக்கம் பெறக்கூடிய நிலையில், நீண்ட கால முதலீட்டிற்கு வாங்கி வைக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை சமீபத்திய ஏற்றம் – எச்சரிக்கை தேவை

பங்குச்சந்தை சமீபத்திய ஏற்றம் – எச்சரிக்கை தேவை 

Bear Market Rally – Recession 2020 – Caution is needed

பொதுவாக பொருளாதாரத்தில் வாய்ப்பை தவற விட்டு விடுவோமோ என்ற அச்சம் நம்மில் பலருக்கு உண்டு. இந்த விடுபடும் என்ற பயம் அல்லது சமூக பதற்றம்(Fear of Missing out – FOMO) பங்குச்சந்தைக்கு மிகவும் பொருந்தும். நாட்டின் பொருளாதாரம் கடந்த இரண்டு வருடங்களாக மந்தநிலையில் இருந்து வந்த சமயம், கொரோனா வைரஸ் தொற்று அலைக்கு பின், கடந்த மார்ச் மாத இறுதியில் பங்குச்சந்தை பலத்த அடி வாங்கியது.

நடப்பு வருடத்தில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி(Nifty50) வாழ்நாள் உச்சபட்சமாக 12,430 புள்ளிகள் வரை சென்றது. இது போல மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்(Sensex) அதிகபட்சமாக 42,274 புள்ளிகள் வரை ஏற்றமடைந்தது. மார்ச் இறுதி வாரத்தில் உலகளவில் பங்குச்சந்தை வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் குறியீடு 52 வார குறைவாக 25,638 புள்ளிகளும், நிப்டி 7,511 புள்ளிகள் என்ற அளவில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாத பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டாளர்களின் ஐந்து வருட முதலீட்டை பதம் பார்த்தது. அந்நிய முதலீட்டாளர்களும் பொருளாதார பின்னடைவை கருத்தில் கொண்டு, தங்களது முதலீட்டை வெளியே எடுக்க துவங்கினர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகெங்கிலும் அதிகரிக்க தொடங்கியது.

ஏப்ரல் மாத முடிவில் பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றம் பெற்றது. இது பொருளாதார மீட்டெடுப்பின் ஒரு அங்கமாக முதலீட்டாளர்களிடம் காணப்பட்டது. பின்னர் மே மாதத்திலும் இந்த ஏற்றம் தொடர்ந்தது. மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின், இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் சுமார் 25 சதவீதத்திற்கு மேலாக ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த ஒரு வார வர்த்தகத்தில் பங்குச்சந்தை 11 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. புதன்கிழமை (03-06-2020) அன்று நிப்டி 10,061 புள்ளிகளிலும், சென்செக்ஸ்(BSE Sensex) 34,109 புள்ளிகளிலும் தனது வர்த்தகத்தை முடித்து கொண்டது. இருப்பினும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி குறியீடு கடந்த ஒரு வருட காலத்தில் 17.50 சதவீத இறக்கத்தையும், மூன்று வருட கால அளவில் 3.50 சதவீத ஏற்றத்தையும் பெற்றுள்ளது.

அமெரிக்க சந்தை குறியீடுகளும் கிடுகிடுவென ஏறி கொண்டிருக்கிறது. பங்குச்சந்தை குறியீடுகள் பழைய நிலைக்கு மேல் சென்று விடும். இனி, காளை ஆட்டம் தொடங்கி விட்டது என்ற வாசகமும் சந்தையில் அடிபட்டு கொண்டு தான் இருக்கின்றன. பொதுவாக பங்குச்சந்தை எதிர்காலத்தில் நிகழப்போகும் ஒரு பொருளாதார காரணிக்கு சந்தையில் முன்னரே பிரதிபலிக்க செய்யும் இயல்பு உண்டு. சில வேளைகளில் எதிர்பாராத ஏற்றத்தை ஜீரணிக்க முடியாமல் இறக்கத்தையும் மெதுவாக காட்டுவதுண்டு.

அதனால் தான், சந்தையின் போக்கை கணிக்காதீர்கள், பங்குகளை கவனியுங்கள் என சந்தை வல்லுநர்கள் சொல்வதுண்டு. மார்ச் மாத இறக்கத்தில் பங்குகளை அலசி ஆராய்ந்து வாங்கியவர்கள், இன்று குறிப்பிடத்தக்க லாபத்தை பார்த்திருப்பார்கள். அதே வேளையில் சந்தை இன்னும் இறங்கும் என காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைவதுண்டு. இதன் விளைவாக சந்தையில் வாய்ப்பை விட்டு விடுவோமோ என்ற பதட்டத்தில் இப்போது பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுவதுண்டு.

பலர் கடந்த மே மாத ஏற்றத்தில் முதலீடு செய்திருக்கலாம். அவர்களின் பங்குகள் மீதான லாபம் தற்போது பெரிதாக ஏறி இருக்க வாய்ப்பில்லை. இப்போது நிப்டி 10,060 புள்ளிகள் தானே இருக்கிறது. விரைவாக முதலீடு செய்து விடலாம் என சமீபத்தில் ஏறக்கூடிய பங்குகளை எல்லாம் வாங்குவர். இது தான் இங்கு பிரச்சனையே. நினைவில் கொள்ளுங்கள், இது கரடி ஆட்டம் மற்றும் பொருளாதார மந்தநிலை காலம். தற்போது நிகழ்வது காளை சந்தையல்ல.

காளை-கரடியில் உங்களுக்கு முரண்பாடு இருந்தாலும், உண்மையில் உலக பொருளாதாரம் சரியான நிலையில் இல்லை என்பதே உண்மை. கடந்த இரண்டு வருட பொருளாதார மந்தநிலை பங்குச்சந்தை குறியீடுகளில் பெரிதாக பிரதிபலிக்கவில்லை என்றாலும், பெரும்பாலான பங்குகளில் அதன் விளைவு காணப்பட்டது. வங்கிகளில் ஏற்பட்ட குறைபாடு வங்கி சார்ந்த பங்குகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவன பங்குகளில் தென்பட்டது. சொல்லப்பட்ட துறையின் பங்குகள் இப்போதும் ஐந்து வருட குறைவாக தான் வர்த்தகமாகி வருகிறது. இது மெட்டல் மற்றும் வாகனத்துறைக்கும் பொருந்தும்.

மார்ச் மாத இறக்கம், கொரோனா கால ஊரடங்கை சந்தையில் காண்பித்து விட்டது. கடந்த 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி(Q4FY20 GDP) எண்களும் பெரிதாக வளர்ச்சியில் இல்லை. ஆனால், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனங்கள் உண்மையில் வருவாயை பெறுமா, அதன் நஷ்ட அளவுகள் எவ்வளவு தூரம் செல்லும், கடன் மற்றும் திவால் நிலைக்கு செல்லும் நிறுவனங்கள் எத்தனை என்பதெல்லாம் வரக்கூடிய காலங்களில் மட்டுமே தெரியும். அப்போது தான் பங்குச்சந்தையின் உண்மையான போக்கை நாம் அறிய முடியும்.

பொதுவாக பங்குச்சந்தை வீழ்ச்சி ஏற்படும் சமயங்களில், நல்ல நிறுவன பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) ஆராய்ந்து மலிவான விலையில் பங்குகளை வாங்குவதே சிறந்தது. இந்த வாய்ப்பு எப்போதும் சந்தையில் உள்ளது. ஆனால், பங்குச்சந்தை வீழ்ச்சி காலங்களில் இது அதிக வாய்ப்பை ஏற்படுத்தும், அவ்வளவே. நமக்கான வாய்ப்பு மார்ச் மாத வீழ்ச்சியில் தென்பட்டது. இப்போதைய ஏற்றத்தில் லாபம் பார்த்திருக்கலாம். பெரும்பாலான பங்குகள் 80-100 சதவீத ஏற்றத்தை கடந்த 50 நாட்களில் அடைந்துள்ளன. இது எதிர்பாராத அபரிதமான முதலீட்டு வளர்ச்சி.

நீண்ட கால முதலீட்டாளர்கள் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை பதிவு செய்யும் பட்சத்தில், செய்த முதலீட்டு தொகையை திரும்ப பெறலாம். மீதமிருக்கும் பங்குகளை அப்படியே சில வருடங்களுக்கு விட்டு விடுவது நன்று. அவை தான் உங்களுக்கான செல்வ வளத்தை ஏற்படுத்தும். கையில் இருக்கும் தொகைக்கு அடுத்த வீழ்ச்சியில் மலிவான விலைக்கு பங்குகளை வாங்கலாம். இதனையெல்லாம் விடுத்து, சந்தை இன்னும் பெரியளவில் ஏறி விடுமோ என அதன் போக்கை பின்தொடர வேண்டாம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை(Quarterly Earnings) அடுத்தடுத்து பின் தொடருங்கள். பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை பின்பற்றி, தற்போது மலிவான விலையில் பங்குகள் கிடைக்க பெற்றிருந்தால் மட்டும் வாங்குங்கள். இல்லையெனில், அவசரம் வேண்டாம்.

அந்நிய முதலீட்டாளர்கள்(FII) வாங்குகிறார்கள் என நீங்கள் வாங்க வேண்டாம். அந்நிய முதலீட்டாளர்கள் என்பவர் நம்மூர் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களை போல தான். அவர்கள் வேறு யாருமல்ல. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் அரசு அவர்களின் மக்களுக்கு பண உதவி செய்து வருகிறது. பணம் தேவைப்பட்டால் தான் அவர்கள் நம் சந்தையிலிருந்து முழுவதுமாக முதலீட்டை எடுப்பதுண்டு. அரசு உதவி செய்யும் போது, சந்தையிலும் பணம் புழங்க தான் செய்யும். அது தான் இப்போது நடந்து வருகிறது. நமது நாட்டிலும், பரஸ்பர நிதி முதலீடுகள்(Mutual Funds – DII) அதிகமாக உள்ளது.

நீங்கள் மாதாமாதம் எஸ்.ஐ.பி. முதலீட்டை தொடரும் பட்சத்தில் சந்தைக்கு உள்ளூர் முதலீட்டாளர்கள்(Domestic Investors) மூலம் முதலீடு வர தான் செய்யும். எனவே தற்போதைய சந்தை ஏற்றத்தில் மிகவும் கவனமாக இருங்கள். கடன் அதிகம் கொண்ட நிறுவனங்களை தவிர்ப்பது நலம். உங்கள் நிதி இலக்குகளுக்கு பரஸ்பர நிதிகளை(SIP Investing for Goals) எப்போதும் போல தொடருங்கள். ஆனால், நேரடி சந்தை முதலீட்டில் இப்போது எச்சரிக்கை தேவை.

நினைவில் கொள்க:

பங்குகளில் குறுகிய கால மூலதன ஆதாயத்திற்கு(STCG Tax) 15 சதவீத வரி செலுத்த வேண்டும். அதே வேளையில் சொல்லப்பட்ட நிதியாண்டில் ஒருவருக்கு ஏற்பட்ட குறுகிய கால மூலதன இழப்பை சரி செய்து கொள்ள இந்த லாபத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

வருமான வரி வரம்பில் இல்லாதோருக்கு குறுகிய கால மூலதன ஆதாயத்தில் வரி விலக்கு உண்டு. எனவே தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் உங்கள் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

குறுகிய காலத்தில் பங்கு விற்பனை மூலம் 50 முதல் 100 சதவீதத்திற்கு மேல் லாபம் பெறுபவர்களுக்கு வரி செலுத்துவதில் பெரிய இழப்பு எதுவும் இருக்காது. இந்த முறையை தற்போதைய பொருளாதார மந்தநிலை ஆதாயமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மந்தமடைந்த வாகனத்துறை விற்பனை நிலவரம் – மே 2020

மந்தமடைந்த வாகனத்துறை விற்பனை நிலவரம் – மே 2020

Weak Auto Sales Data in the month of May 2020 – SIAM

கொரோனா தாக்கத்தின் விளைவாக நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக கடந்த ஒன்றரை வருடமாக மந்தநிலையில் இருந்த வாகனத்துறையின் விற்பனை மேலும் பாதித்தது. துறையில் உள்ள முக்கிய நிறுவனங்கள் ஏப்ரல் மாதத்தில் ஒரு வாகனத்தை கூட விற்க முடியாத நிலைக்கு சென்றன.

வாகனத்துறையின் மே மாதத்திற்கான விற்பனை நிலவரம் நேற்று வெளிவந்தது. மே மாதத்தின் இரண்டாவது வாரத்திற்கு பிறகு ஊரடங்கு நிலை சற்று தளர்த்தப்பட்டது. இதன் காரணமாக உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் தங்களது தொழிலை புரிய அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த மாதத்தில் மாருதி சுசூகி(Maruti Suzuki) நிறுவனம் 18,539 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இவற்றில் உள்ளூர் விற்பனையாக 13,888 வாகனங்களும், 4,651 வாகனங்கள் ஏற்றுமதியாக செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டின் மே மாதத்தில் விற்பனையான மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 1,34,640 ஆகும். எனவே தற்போது சொல்லப்பட்ட வாகன விற்பனை கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, 86 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மே மாதம் இரண்டாம் வாரத்திற்கு பிறகு தான் தங்களது சேவை துவங்கப்பட்டதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது போல மஹிந்திரா நிறுவனம் மே மாத நிலவரமாக 9,560 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. உள்ளூர் விற்பனையாக 9,076 வாகனங்களும், ஏற்றுமதியில் 484 வாகனங்களும் விற்கப்பட்டுள்ளன.

எனினும் கடந்த மாத விற்பனை வளர்ச்சி 79 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இரு சக்கர வாகன பிரிவில் உள்ள ஹீரோ மோட்டார் நிறுவனம்(Hero Motocorp) 1,12,682 வாகனங்களை மே மாதம் விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டின் இதே காலத்தில் நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 6,52,028. ஆக தற்போதைய விற்பனை 83 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது.

சொல்லப்பட்ட வாகனங்களில் 3,834 வாகனங்களை ஹீரோ மோட்டார் நிறுவனம் ஏற்றுமதி(Exports) செய்துள்ளது. ஐஷர் மோட்டார்ஸ்(Eicher Motors) நிறுவனத்தின் ராயல் என்பீல்ட் பிரிவு 69 சதவீத விற்பனை வீழ்ச்சியை மே மாதத்தில் சந்தித்துள்ளது. இந்த இரு சக்கர வாகனம் மே மாதத்தில் 19,113 எண்ணிக்கையில் விற்பனை செய்துள்ளது.

Automobile sales may 2020

இது கடந்த 2019ம் ஆண்டின் இதே காலத்தில் நடந்த விற்பனையின் எண்ணிக்கை 62,371. அசோக் லேலண்ட் நிறுவனம் மே மாத விற்பனையாக 1,420 வாகனங்களை மட்டுமே கொண்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் சொல்லப்பட்ட காலத்தில் 13,172 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. எனவே, தற்போதைய விற்பனை 89 சதவீதம் வீழ்ச்சியை கண்டுள்ளது. அதே வேளையில் மஹிந்திரா டிராக்டர் விற்பனை 2 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. வரக்கூடிய மாதங்களில் வாகன விற்பனை ஊக்குவிக்கப்படுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சமூக இடைவெளி காரணமாக பொது போக்குவரத்தை தவிர்க்கும் பட்சத்தில் வாகன விற்பனை சிறிதளவு அதிகரிக்கலாம். ஆனால், வாகனத்துறை கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சவாலான விஷயங்களை எதிர்கொண்டு வருகிறது. நாட்டில் நுகர்வு தன்மையை அதிகப்படுத்தினால் மட்டுமே, இதன் விற்பனை வளர்ச்சி வரும் நாட்களில் அதிகரிக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எஸ்வின் குழும நிறுவனம் – நம்ம ஈரோட்டை சேர்ந்த பங்குகள்

எஸ்வின் குழும நிறுவனம் – நம்ம ஈரோட்டை சேர்ந்த பங்குகள் 

Esvin Group of Companies and its Shares – Listed Domestic Stock Valuation

ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் எஸ்வின் குழுமம். 1960ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஆரம்ப காலத்தில் சேஷசாயி பேப்பர்(Seshasayee Paper & Boards) மற்றும் அதனை சார்ந்த பலகைகள் தயாரிக்கும் தொழிலை கொண்டிருந்தது. நிறுவனத்தின் நிறுவனரான திரு. எஸ். விஸ்வநாதன் அவர்கள் எஸ்வின் குழுமத்தை பல நிறுவனங்கள் கொண்ட ஒரு அங்கமாக உருவாக்கினார்.

செராமிக்(Ceramic), பேட்டரிகள், உயிரி தொழில்நுட்பவியல், சர்க்கரை மற்றும் ரசாயனம் போன்ற தொழில்களில் குழும நிறுவனங்கள் செயல்பட்டன. 1984ம் ஆண்டு துவங்கப்பட்ட பொன்னி சுகர்ஸ்(Ponni Sugars) நிறுவனம் சர்க்கரை மற்றும் அதனை சார்ந்த ரசாயனங்கள் தயாரிக்கும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் 3000 டி.சி.டி. கொள்ளளவு கொண்ட கலனை ஈரோட்டில் நிறுவியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்திற்கு தேவையான உற்பத்தி பொருட்கள் கரும்பு  சக்கையில் 60 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.

பேட்டரி தயாரிக்கும் தொழிலில் உள்ள எச்.இ.பி.(High Energy Batteries) நிறுவனம், திறன்மிக்க துத்தநாகம் மற்றும் நிக்கல் காட்மியம் வகை பேட்டரிகளை தயாரித்து வருகிறது. உற்பத்தியாகும் பொருட்கள் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆகவே, இந்நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக அரசு பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன.

காகித அச்சடிப்பில் உள்ள பொதுத்துறை நிறுவனமான டி.என்.பி.எல்.(Tamilnadu Newsprint and Papers Limited) வெற்றிகரமாக செயல்படுவதற்கு சேஷசாயி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியத்துவமானது. உலகின் முதல் கரும்பு சக்கையிலான செய்தித்தாள் பிரிவும் இது தான்.

உயிரி தொழில்நுட்பவியலில்(Bio Technology) செயல்படும் நிறுவனம் எஸ்வின் அட்வான்ஸடு டெக்னாலஜிஸ். இந்த துறையில் உயிர் கழிவு மற்றும் எரிபொருளின் வாயுவாக்க வேலைகளை செய்து வருகிறது இந்நிறுவனம். எஸ்வின் குழுமத்தின் சில நிறுவனங்கள் பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.

சேஷசாயி நிறுவனம் பேப்பர் தயாரிப்புக்கென இரு பிரிவுகளை கொண்டுள்ளது. ஈரோடு(Erode) மற்றும் திருநெல்வேலியில் இயங்கும் ஆலைகளில் ஆண்டுக்கு 2 லட்சம் டன்கள் பேப்பர்களை உற்பத்தி செய்யலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 780 கோடி. கடன்கள் எதுவும் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 43 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை.

கடந்த ஒரு வருடமாக இந்த பங்கின் விலை 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருந்தாலும், விற்பனை மற்றும் லாப வளர்ச்சி கடந்த பத்து வருட காலத்தில் நன்றாகவே இருந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பும், பணவரத்தும் சாதகமாக உள்ளது.

மற்றொரு நிறுவனமான பொன்னி சுகர்ஸ் நாளொன்றுக்கு 3500 டன் கரும்புகளை(Sugarcane) நசுக்கி 19 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 120 கோடி ரூபாய். கடன் எதுவும் பெரிதாக இல்லை. அது போல அடமான பங்குகளும் நிறுவனர் சார்பில் இல்லை. விற்பனை மற்றும் லாப வளர்ச்சி பெரும்பாலும் ஏற்ற-இறக்கமாக இருந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது இந்த துறையும்(Sugar Segment), அதனை சார்ந்த அரசு கொள்கைகளும் தான்.

இருப்பினும் நிறுவனம், பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை ஓரளவு பூர்த்தி செய்கிறது பேட்டரி தயாரிப்பில் இருக்கும் நிறுவனம் ஹை எனர்ஜி பேட்டரிஸ்(HEB). இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 35 கோடி. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் ஒன்றுக்கு மேலாக உள்ளது. எனவே இந்த பங்கு பொதுவாக பரிசீலிக்கக்கூடியதாக இல்லை. இதன் வாடிக்கையாளர்கள் இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை என இருந்தாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக தான் இந்நிறுவனம் லாபத்தை ஈட்டி வருகிறது எனலாம்.

பங்குச்சந்தையில் ஈடுபடும் நீண்டகால முதலீட்டாளர்கள் வெளிநாட்டு நிறுவனங்கள், பிரபல பிராண்டுகள் மற்றும் பெயர் அதிகம் தெரியாத மற்ற மாநிலங்களின் நிறுவன பங்குகளை வாங்குவதை விட, நமது ஊரில் உள்ள ஒரு நிறுவனத்தின் தொழிலை கண்டறிந்து முதலீடு செய்வது நமக்கும், நமது மாநிலத்தின் நலனுக்கும் சாதகமாக அமையும்.

மதுரை மாவட்ட தியாகராஜர் மில்ஸ் (Virudhunagar Textile Mills – VTM Ltd), டி.வி.எஸ். குழும நிறுவனங்கள், ராஜபாளையம் ராம்கோ குழும நிறுவனங்கள், முருகப்பா குழும நிறுவனங்கள், கோவை சாந்தி கியர்ஸ், சென்னையை தலைமையிடமாக கொண்ட வாகனத்துறை தயாரிப்பு மற்றும் உபகரணங்களில் உள்ள தமிழக நிறுவனங்களை அலசலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதம் – மார்ச் 2020

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதம் – மார்ச் 2020

India’s Q4FY20 GDP to 3.1 Percent and 4.2 Percent in FY2019-20

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சார்ந்த வளர்ச்சி அறிக்கை, தேசிய புள்ளியியல் மையத்தால் இன்று அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் (Jan – Mar 2020) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 2019-20ம் நிதியாண்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாக அறிவித்துள்ளது.

மூன்றாம் காலாண்டில் 4.7 சதவீதமாக இருந்த நிலையில், நான்காம் காலாண்டான மார்ச் காலத்தில் 3.1 சதவீதமாக குறைந்துள்ளது. இருப்பினும், சந்தை எதிர்பார்த்த அளவை காட்டிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு அதிகரித்துள்ளது. மேலும் மார்ச் மாதத்தில் ஏற்பட்ட ஊரடங்கு காலம் ஒரு வாரமாக இருந்ததால், அதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படவில்லை.

உலகின் மொத்த பொருளாதார உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 2.31 சதவீதமாக இருக்கிறது. கடந்த நிதியாண்டில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சி எண்களும் மற்றும் அதன் மதிப்பீடுகளும் திருத்தப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.6 சதவீதமாக இருந்த வளர்ச்சி தற்போது 5.2 சதவீதமாக குறைத்து திருத்தப்பட்டுள்ளது.

இது போல இரண்டாம் காலாண்டில் 5.1 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாகவும், மூன்றாம் காலாண்டில் இருந்த 4.7 சதவீதத்தை 4.1 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளது. பொருளாதார மொத்த மதிப்பு (GVA) 2019-20ம் நிதியாண்டில் 3.9 சதவீதமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது.

ஏப்ரல் மாத துறை சார்ந்த(Core Sector) தகவல்களும் வெளியிடப்பட்டன. நாட்டின் முக்கிய எட்டு துறைகள் சார்ந்த குறியீடு ஏப்ரல் மாதத்தில் (-38) சதவீதமாக உள்ளது. இது மார்ச் மாதத்தில் (-9) சதவீதமாக இருந்துள்ளது. நிலக்கரி துறை 15.50 சதவீதமும், எஃகு துறை(Steel) 84 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. சிமெண்ட் துறை அதிகபட்சமாக 86 சதவீதமும், இயற்கை எரிவாயு 20 சதவீதமும் வீழ்ச்சி பெற்றுள்ளது. உரம் மற்றும் கச்சா எண்ணெய்யும் 5 சதவீதத்திற்கு மேல் ஏப்ரல் மாதத்தில் இறக்கமடைந்துள்ளது.

சொல்லப்பட்ட மார்ச் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP growth) 16 வருட குறைவான அளவாக சொல்லப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி எண்களில் திருத்தம் செய்யப்படாத பட்சத்தில், அது இருபது வருடங்களுக்கு மேலான குறைவாக காணப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

2019-20ம் நிதியாண்டில் வருவாய் மற்றும் நிதி பற்றாக்குறை(Revenue & Fiscal Deficit) அதிகமாக ஏற்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை பட்ஜெட் மதிப்பில் 122 சதவீதம் அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.59 சதவீதமாக இருந்துள்ளது. ஆனால் அரசு நிர்ணயித்த இலக்கு 3.8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இது போல வருவாய் பற்றாக்குறை மூன்று சதவீதத்திற்கு மேலாக இருந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

.

கதை சொல்லி – பாகம் 2 – பங்குகளும், அதன் மதிப்பீடுகளும்

கதை சொல்லி – பாகம் 2 – பங்குகளும், அதன் மதிப்பீடுகளும் 

Story Teller 2 – Stocks & Valuation – Webinar Meet

பங்குச்சந்தையின் வரலாற்றை படிப்பதை விட, பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவனத்தின் கதையை ஒரு மணிநேரம் படித்தாலே போதும், நாம் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்கும் சூட்சுமத்தை அறிந்து கொள்ளலாம். பங்குகள் வெறும் எண்கள் அல்ல, அவை தொழிலின் மூலதனம்.

நம்மை சுற்றி, நாம் தினம் தினம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவையினை அளிக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டவை. மக்களின் மூலதனம் மற்றும் நுகர்வு தன்மையால் அந்த நிறுவனங்கள் லாபம் காண்கின்றன. அதே வேளையில் நுகர்வோராக மட்டுமே இருப்பதில் நமக்கு என்ன பலன் பெரிதாக இருக்க போகிறது ?

இந்த வார ஞாயிற்றுக்கிழமை(31-05-2020) அன்று பங்குகளின் கதைகளை பற்றி பேச உள்ளோம். வாருங்கள், பங்குகளின் தரத்தை எவ்வாறு மதிப்பீடு செய்ய வேண்டும், பங்குகளில் சூதாட நினைத்தால் அதன் விளைவு என்ன, பங்குச்சந்தையில் அடிப்படை கற்றலை பெறுவது எப்படி, நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதனை பற்றி விவாதிக்க உள்ளோம்.

Story Teller II Online Meet

நடப்பில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி எந்தவிதமான சாதகம் மற்றும் பாதகங்களை ஏற்படுத்தும், பங்குச்சந்தை எண்களின் அடுத்த இரண்டு வருட முன்னெடுப்பு என்ன ஆகியவற்றை பற்றியும் பேச உள்ளோம்.

பண முதலீட்டை கொண்டு பணம் பண்ணும் கலை எவ்வாறு வெற்றி பெறுகிறது, புதிய பங்கு தொகுப்புகள்(Stock Portfolio) சார்ந்த செய்தியும் வெளியிடப்பட உள்ளது. நிகழ்ச்சி நிரலுக்கான பதிவுக்கு…

Registration – Stocks & Valuation (Story Teller II)  

பதிவுக்கு பின்பு, நிகழ்ச்சி நிரலுக்கான இணைப்பு உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சன் பார்மா மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 400 கோடி

சன் பார்மா மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ. 400 கோடி

Sun Pharma’s Net profit falls 37 Percent to Rs. 400 Crore – Q4FY20

நாட்டின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான சன் பார்மா(Sun Pharmaceutical) மருந்து உற்பத்தி, விற்பனை மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. 1983ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் 2014ம் வருடம் ரான்பாக்ஸி மருந்து தயாரிப்பு நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதன் மூலம் உலகின் ஐந்தாவது பெரிய நிறுவனமாக வலம் வந்தது.

சன் பார்மா நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1,10,160 கோடி. நிறுவனத்தின் புத்தக மதிப்பு 173 ரூபாயாக உள்ளது. கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.25 என்ற அளவிலும், வட்டி பாதுகாப்பு விகிதம் 14 மடங்கிலும் இருக்கிறது. நிறுவனர்களின் பங்களிப்பு 55 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 14 சதவீத பங்குகள் அடமானமாக உள்ளது கவனிக்கத்தக்கது.

தற்போதைய பங்கின் விலை புத்தக மதிப்பை காட்டிலும் மூன்று மடங்காக உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 8,185 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 6,822 கோடியாகவும் இருந்துள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 577 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ. 400 கோடியாகவும் உள்ளது.

கடந்த 2018-19ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய லாபம் 37 சதவீதம் குறைந்துள்ளது. மார்ச் 2019 காலாண்டில்(quarterly results) நிறுவனத்தின் வருவாய் ரூ. 7,164 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 636 கோடி. ஒரு முறை வழக்கு செலவாக(Litigation cost) ஒதுக்கிய தொகை காரணமாக லாபம் குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 30 சதவீதமும், லாப வளர்ச்சி 102 சதவீதமும் உயர்ந்துள்ளது. அதே வேளையில், பங்கு மீதான வருவாய்(ROE) எதிர்மறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்புநிலை அறிக்கையில் கையிருப்பு தொகை ரூ. 23,353 கோடியாக சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்திற்கான பணவரத்து அறிக்கை(Cash Flow) சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கடந்த நான்கு நிதியாண்டுகளாக பணவரத்து எதிர்மறையாக தான் உள்ளது. அதே வேளையில் நிலையான சொத்துக்களின் மதிப்பு குறிப்பிடும் அளவில் உள்ளது. கடனாளர் நாட்கள்(Debtor Days) அதிகரித்து வருவது நிறுவனத்திற்கு பாதகமாக அமையும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்த ஐந்து வேலைகளை செய்யாமல் முதலீடு செய்ய வேண்டாமே !

இந்த ஐந்து வேலைகளை செய்யாமல் முதலீடு செய்ய வேண்டாமே !

Don’t invest without doing these Five Commitments – Financial Planning

‘ நீங்கள் பங்குச்சந்தையில் நித்தமும் பணம் சம்பாதிக்கலாம், வாருங்கள் ‘ 

‘ பங்குச்சந்தையின் மூலம் ஒரே வருடத்தில் கோடீஸ்வரராக மாறலாம் ‘

‘ எங்களிடம் முதலீடு செய்யுங்கள், நாங்கள் உங்களுக்கு மாதாமாதம் வட்டி தருகிறோம்,உங்கள் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது ‘

‘ பங்குச்சந்தையில் பகுதி நேரமாக வர்த்தகம் செய்து சம்பாதியுங்கள் ‘

‘ பிட்காயின் முதலீடு, உங்களை கோடீஸ்வரராக்கும் பொன்னான முதலீடு ‘

  • இவ்வாறான வாசகங்கள் உங்களுக்கு பூரிப்பை ஏற்படுத்துகிறதா, இல்லையெனில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறதா ?

நான் எப்போதும் சொல்வது தான், பொருளாதார உலகில் கோடி கோடியாக பணம் சம்பாதிப்பதற்கும், செல்வ வளத்தை குவிப்பதற்கும் ஒரு குறுக்கு வழி கிடைக்கப்பெற்றால், அதனை முதலில் அடைய போவது நீங்கள் அல்ல. இவ்வுலகின் முதல் 100 பணக்காரர்கள் தான். ஒரு லட்ச ரூபாய் முதலீட்டை கொண்டு சில மாதங்களில் கோடிகளை அள்ளலாம் என்றால் ஏன் அமேசான் நிறுவனரும், அம்பானியும் தொழில் செய்ய வேண்டும் ? ஏன் பல கிளைகளையும், வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் ?  பல தலைமுறை கோடீஸ்வரர்களுக்கும் இங்கே குறுக்கு வழி கண்டுபிடிக்கப்படவில்லை.

மாறாக முதலீடு செய்யும் காலமும், முதலீட்டு சாதனமும் தான் அவர்களை அந்த நிலையில் வைத்துள்ளது. ஒரு முதலீட்டு சாதனத்தை பற்றிய முறையான கல்வி வேண்டும், இல்லையெனில் கற்றவரை நாம் வேலைக்கு வைத்திருக்க வேண்டும். அப்படியிருக்கும் பட்சத்தில் மட்டுமே, எந்தவொரு பண முதலீடும் உங்களுக்காக உழைக்கும்.

பங்குச்சந்தை, பரஸ்பர நிதிகள், பிட் காயின் சார்ந்த புத்தகங்கள் சந்தையில் ஏராளம். ஆனால், எந்த புத்தகத்திலும் உங்களுக்கு குறுக்கு வழியை பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை. மாறாக அடிப்படை கற்றலை தான் உங்களுக்கு அந்த புத்தகத்தின்  ஆசிரியர் சொல்ல வருகிறார். பணம் சம்பாதிக்க, அந்த அடிப்படை கற்றலை கொண்டு நீங்கள் தான் சிந்திக்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் மற்றும் செல்வத்தை ஏற்படுத்த காத்திருக்க வேண்டும்.

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டிய முன்னெடுப்புகள் ஐந்து:

  • ஆயுள் காப்பீடு (Term Insurance)
  • மருத்துவ காப்பீடு
  • அவசர கால நிதி திட்டமிடல்
  • கடன்களை குறைத்தல்
  • ஓய்வுக்கால நிதி திட்டமிடல்

மேலே சொன்னவற்றை நீங்கள் செய்து விட்டு தான், உங்கள் முதலீட்டை தொடங்க வேண்டும். ஐந்து முன்னெடுப்புகளும் உங்களை பாதுகாக்கும் நிதி காப்பு ஆகும். உங்களுடைய நிதி ஆலோசகர் இதனை பற்றி உங்களிடம் சொல்லவில்லை என்றால் அவர் உங்கள் நிதி நலனில் அக்கறை கொள்பவரா என்பது சந்தேகமே. நிதி ஆலோசகர்(Personal Financial Advisor) என்பவர் பங்கு தரகர் அல்ல. இன்சூரன்ஸ் ஏஜென்ட் என்பவரும் முழுமையான நிதி ஆலோசகர் அல்ல. உங்களிடம் பரஸ்பர நிதிகளை மட்டும் விற்கும் விநியோகஸ்தரா, அவரும் நிதி ஆலோசகர் என்ற முழு நிலைக்கு வர மாட்டார்.

நிதி ஆலோசகர் என்பவர் உங்களது குடும்ப மருத்துவர் போன்று. மேலே சொன்ன ஐந்தையும் உங்களுக்காக அவர் திட்டமிட வேண்டும். உங்கள் குடும்ப நிதி நிலைமைகளை சரியாக புரிந்து கொண்டு முதலீட்டு முடிவுகளை எடுப்பவராக இருக்க வேண்டும். முடிந்தால், உங்கள் குடும்ப உறவுகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை நபர்களுக்கும் நிதி திட்டமிடலை செய்பவராக இருக்க வேண்டும். உயில், நாமினியை நியமிப்பது, உங்களுக்கான சொத்துக்களை வாரிசு தாரர்களுக்கு பகிர்ந்தளிப்பது போன்றவற்றிலும் அவருடைய உண்மையான அக்கறை இருக்க வேண்டும்.

ஆம், அவர் உங்களிடம் ஒரு கணிசமான கட்டணத்தை பெறுபவராக இருக்க வேண்டும். இலவசமாக அவர் செய்திட முடியாது. ஒருவர் உங்களிடம் நிதி சார்ந்த ஒரு பொருளை அல்லது சேவையை விற்கும் போது இலவசமாக (பொருளுக்கான விலை தவிர்த்து) விற்பவராக இருந்தால், அவர் உங்களிடம் தவறான பொருளை அல்லது உங்களுக்கு தேவையில்லாத ஒரு சேவையை விற்று விட்டு செல்கிறார் என அர்த்தம். இது தான் காப்பீடுகளில் பெரும்பாலும் நடைபெறுகிறது. நீங்கள் தவறான சேவையை தேர்ந்தெடுத்து, அதற்காக ஒரு ஏஜென்ட் கமிஷன் பெறுவதற்கு பதிலாக, அவரிடம் சேவை சார்ந்த ஆலோசனை கேளுங்கள். வெளிப்படைத்தன்மையை அறியுங்கள். பின்பு நீங்கள் தேர்ந்தெடுத்த சேவைக்கு அவருக்கு ஒரு கட்டணத்தையும் அளியுங்கள்.

நீண்ட காலத்திற்கான நிதி ஆலோசகரை கொண்டிருங்கள். அவரது ஆலோசனைகள் உங்களுக்கு புரியவில்லை என்றால், பலமுறை கேட்பதற்கு தயங்காதீர்கள். ஆலோசனை பலனளிக்கவில்லை என்றால், வேறு ஒரு ஆலோசகரை பெறுவதற்கும் தயாராக இருக்க வேண்டும். அதே வேளையில் அடிக்கடி குடும்ப நிதி ஆலோசகரை மாற்றுவதும் ஆரோக்கியமாக இருக்காது.

உங்கள் குடும்ப நிதி நிலையை பாதுகாக்க டேர்ம் பாலிசி(Term Plan) மற்றும் மருத்துவ காப்பீடு(Health Insurance) பெறுவது அவசியம். இன்றைய காலத்தில் எதிர்பாராது நிகழும் பாதிப்புகளால் தான் நமது சேமிப்பு குறைகிறது. சில சமயங்களில் அது நம்மை கடனாளியாக்கி விடும். அதனால் நமது வருவாய்க்கு தகுந்த மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை கவனத்தில் கொண்டு மேலே சொன்ன காப்பீடுகளை பெற வேண்டும்.

அவசர கால நிதியை(Emergency Fund) திட்டமிடுவது உங்கள் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது. இயற்கை சீற்றம் மற்றும் பஞ்ச காலங்களில் நமது உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக கோயில் கோபுரங்களில் கலசங்கள் இருப்பதை நாம் பார்த்திருப்போம். கலசத்தில் சில உணவு தானியங்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அதனை போல தான் நமது அவசர கால நிதியும் இருக்க வேண்டும்.

கடனை அதிகமாக வைத்து கொண்டு, பங்குச்சந்தையில் சம்பாதித்து கடனை அடைத்து விடுவேன் என ஆர்வமாக செயல்பட கூடாது. பங்குச்சந்தை என்பது அதிக ரிஸ்க் கொண்ட, அதே வேளையில் செல்வ வளத்தை ஏற்படுத்தும் ஒரு முதலீட்டு சாதனமாகும். கடன் வாங்கி பங்குகளை வாங்குவது, கடனை குறைக்க பங்குகளில் முதலீடு செய்வதால் நமக்கு சுமையே அதிகம்.

‘ உங்கள் குழந்தைகளின் மேற்படிப்பு கல்வியை விட, உங்களது ஓய்வுக்காலம் மிக முக்கியம் ‘ என நிதி திட்டமிடலில் சொல்வது உண்டு. குழந்தைகளுக்கான வாழும் காலமும், அவர்கள் கற்க வேண்டிய கல்வியும் எப்போதும் இங்கு உள்ளது. ஆனால் உங்கள் ஓய்வுக்காலத்திற்கு அவர்களை நம்பி நீங்கள் இருத்தல் சரி வராது. அந்த ரிஸ்க்கை தான் நம்மில் பெரும்பாலோர் எடுத்து வருகின்றனர். உங்களது ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பை(Retirement Savings) நீங்கள் தான் உருவாக்க வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டியது உங்கள் கடமை. அதற்கு கைமாறாக அவர்கள் உங்களை பார்க்க வேண்டும் என நிர்பந்தம் ஏற்படுத்தாதீர்கள்.

உங்களுக்கான நிதி இலக்கை நீங்கள் தான் திட்டமிட வேண்டும். வயதான காலத்தில் அவர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பது உறவுகளாக(அன்பு) மட்டுமே இருக்க வேண்டும், நிதி அல்ல. உங்கள் குழந்தைகளுக்கான இலக்கு அடுத்த தலைமுறையில் தான் உள்ளது, நீங்கள் மட்டுமே அல்ல.

மேலே சொன்ன ஐந்து முன்னெடுப்புகளை திறம்பட செய்து விட்டு, பின்னர் பங்குச்சந்தைக்கு வாருங்கள்… உங்களுக்காக காத்திருக்கிறது செல்வ வளம்.

குறிப்பு:

என்னிடம், எனது ஆண்டு வருவாயினை போல 50-80 மடங்கு பணம் ரொக்கமாக உள்ளது என சொல்பவரா நீங்கள் ? உங்களுக்கு இந்த ஐந்து வேலைகளும் தேவையில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamdurai.com

தைரோகேர் நிறுவன காலாண்டு முடிவுகள் – ரூ. 18 கோடி நிகர நஷ்டம்

தைரோகேர் நிறுவன காலாண்டு முடிவுகள் – ரூ. 18 கோடி நிகர நஷ்டம் 

Rs. 18 Crore Net loss of Q4FY20 – Thyrocare Quarterly results

இன்று உலக தைராய்டு தினம் – மே 25. சுகாதார பிரிவில் இயங்கும் நிறுவனம் தைரோகேர் டெக்னாலஜிஸ்(Thyrocare Technologies) நிறுவனம். 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆய்வகங்களை மேற்கொண்டு வருகிறது. இந்திய தைராய்டு பரிசோதனையில் முக்கியத்துவமாக பார்க்கப்படும் நிறுவனமாக தைரோகேர் விளங்குகிறது.

இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2,800 கோடி. புத்தக மதிப்பு 75 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.03 என்ற அளவிலும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 66 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

வட்டி பாதுகாப்பு விகிதம் 120 மடங்கில் உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 20 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 15 சதவீதமாகவும் உள்ளது. பங்கு முதலீடு மீதான வருமானம்(ROE) கடந்த 5 வருடங்களில் 19 சதவீதம் உயர்ந்துள்ளது.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 94 கோடி ரூபாயாகவும், செலவினம் 64 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ்(Covid-19) தாக்குதலால், துணை நிறுவனமான நியூக்ளியர் ஹெல்த்கேர் லிமிடெட்டில் முதலீடுகளை குறைப்பதற்கான ஏற்பாடாக, 44.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை தைரோகேர் நிறுவனத்திலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக நிறுவனத்திற்கு நான்காம் காலாண்டில் 18 கோடி ரூபாய் நிகர நஷ்டமாக காட்டப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட ரூ. 44.33 கோடி ஒரு குறைபாட்டு கட்டணமாக(Exceptional charge) நிறுவனத்தின் நிதி அறிக்கையில் உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் வருவாய் 400 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ. 79.45 கோடியாகவும் இருந்துள்ளது.

கடந்த 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 370 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ. 95 கோடியாக இருந்தது கவனிக்கத்தக்கது. இருப்புநிலை கையிருப்பு ரூ. 344 கோடி. ஹெல்த் கேர் பிரிவில் இருக்கும் இந்நிறுவனத்தின் பங்கு விலை தற்போது 500 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. 10-20 சதவீதம் வீழ்ச்சியடையும் போது, இந்த பங்கின் உண்மையான விலைக்கு அருகில் வர்த்தகமாக கூடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த நான்கு பெரிய சவால்கள்

உலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த நான்கு பெரிய சவால்கள் 

The next Four Big challenges await for the Global Market 

2020ம் ஆண்டு உலக சந்தையின் மற்றொரு பொருளாதார வீழ்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது கோவிட்-19. வரலாற்றில் Great Depression, Great Recession என்ற நிலையை தாண்டி இப்போது Great Shutdown (Lockdown) என்ற நிலைக்கு வந்துள்ளது உலக நாடுகள்.

பொதுவாக பொருளாதார வீழ்ச்சிக்கான(Recession) காலங்கள் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்கு மேலாக இருக்கலாம். நடப்பில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெரும்பாலான வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் தான் ஊரடங்கு காலம் அதிகமாக இருந்துள்ளது. இதன் தாக்கம் வரும் காலாண்டுகளின் பொருளாதார எண்களில் தெரிய வரும்.

கடந்த 2007ம் ஆண்டு நிகழ்ந்த சப் பிரைம் அடமான நெருக்கடியால் உலக சந்தை ஆட்டம் கண்டது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி மீண்டு வருவதற்கு 18 மாதங்கள் எடுத்து கொண்டன. 2001ம் ஆண்டு ஏற்பட்ட டாட் காம் குமிழி(Dotcom Bubble) பொருளாதார மந்த நிலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அமெரிக்க சந்தை 75 சதவீதம் வீழ்ச்சியை கண்டது. சொல்லப்பட்ட பொருளாதார மந்தநிலை எடுத்து கொண்ட காலம் வெறும் 8 மாதங்களே.

1929ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார மந்தநிலை சுமார் நான்கு ஆண்டுகள்  இருந்தது. 1929 முதல் 1933 வரை இருந்த இந்த மந்தநிலை, பொருளாதார உலகில் மிகப்பெரிய சரிவாக(Great Depression) சொல்லப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு தயாரான நிலையில், இந்த பொருளாதார மந்தநிலை மீண்டு வர காரணமாக இருந்தது என பொருளாதார வல்லுனர்களும் அக்காலத்தில் கூறியிருந்தனர்.

நடப்பில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை எப்போது சரியாகும் என்பதற்கான அறிகுறி தற்போதைய நிலையில் கிடைக்க  பெறவில்லை. இருப்பினும் அடுத்த இரு வருடங்கள் இந்த நிலை நீடிக்கலாம் எனவும், அதன் காரணமாக பெரும்பாலான நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறையும் எனவும் பொருளாதார வல்லுநர்களால் சொல்லப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக ஏற்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு மெல்ல மெல்ல தளர்வின் மூலம் விடுவிக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்தில் பெரிய வீழ்ச்சி கண்ட உலக பங்குச்சந்தை குறியீடுகள் ஏப்ரல் மாதத்தில் நல்ல ஒரு ஏற்றத்தை சந்தித்தன. இருப்பினும் அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் தவிர மற்ற நாடுகளில் உள்ள சந்தைகள் பெரியளவில் பழைய நிலைக்கு திரும்பவில்லை.

நடப்பு மாதத்தின் இறுதியில் நாட்டின் ஜனவரி – மார்ச் காலத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சியை அறிவிக்க உள்ளது ரிசர்வ் வங்கி. பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரும் நாட்களில் பெரும்பாலானவை வெளிவர உள்ளது. இதன் காரணமாக சந்தை போக்கு மாறலாம்.

உலக சந்தைக்கு காத்திருக்கும் அடுத்த சவாலாக சில முக்கிய காரணிகள் நடப்பு 2020ம் ஆண்டில் உள்ளது. ஊரடங்குக்கு பிறகான தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்புகளின் நிலைமை முக்கியத்துவம் பெறுகிறது. இதனை ஒட்டியே வரக்கூடிய காலாண்டுகளில் பொருளாதார மாற்றம் நிகழும்.

இரண்டாவதாக ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த அமெரிக்க – சீன வர்த்தக போர் எவ்வாறு சூடுபிடிக்க உள்ளது என்பதனையும் உலக சந்தைகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக அமெரிக்க சந்தையில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனங்களின் நிலை என்ன என்பதும் அவசியமாக உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சம்மந்தமாக அமெரிக்கா மற்ற நாடுகளை கூட்டு சேர்த்துள்ளது. இது சீனாவுக்கு எதிராக செயல்படும் நிலையில், உலகின் முக்கிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா, அதனை எப்படி கையாள போகிறது என்பதும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதுவரை தொற்றுநோய் என்றாலே மூன்று நிலைகளுக்கு மேல் இருந்ததாக வரலாற்று தகவல்கள் சொல்கின்றன. ஆனால் சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற தொற்றுகளில் அவ்வாறான பாதிப்புகள் பெரியளவில் ஏற்படவில்லை. ஒரு வேளை கோவிட்-19 மனிதர்களின் உடலுக்குள் மாற்றமடைந்து(Mutation) விட்டால், அது இரண்டாவது அலைக்கு வித்திடலாம். இன்றைய அறிவியல் வளர்ச்சி, மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் எப்படி எதிர்கொள்ள போகின்றன என்பதும் சவாலான விஷயம் தான்.

வைரஸ்களின் வரலாற்றில் இதுவரை பெரும்பான்மையான மற்றும் முக்கிய தொற்றுநோய்களுக்கு மருந்துகளோ, தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது ஆராய்ச்சியில் உள்ளது எனலாம். தொற்றுநோய்களின் தன்மை தானாக வந்து, மறைவதாக தான் உள்ளது. இரண்டாம் அலை வந்தால், ஊரடங்கை அமல்படுத்த போவதில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது. இது திட்டமிட்டபடி நடக்குமா, நடக்கும் பட்சத்தில் ட்ரம்ப் மீண்டும் ஆட்சியை பிடித்தால், அமெரிக்காவின் புதிய கொள்கைகள் எப்படி இருக்கும் என்பதனையும் சந்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஆக, 2020ம் ஆண்டு பங்குச்சந்தைக்கு பண்டிகை காலமாக மாறியுள்ளது என்றால் மறுப்பதற்கில்லை. உலக பங்குச்சந்தை பல வீழ்ச்சிகளையும், பிரமாண்டமான ஏற்றங்களையும் பார்த்த வரலாறு உண்டு.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com