All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

தங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் ?

தங்கம் கையிருப்பு – உலகளவில் யார் முதலிடம் ? 

Global Gold Reserves – Top 10 Nations in the world

தங்க கையிருப்பு(Gold Reserves) என்பது ஒரு நாட்டின் மத்திய வங்கி வைத்திருக்கும் தங்கத்தின் இருப்பு ஆகும். பொதுவாக தங்கத்தின் மீது இருப்பை கொள்வதற்கான காரணம், அந்த நாட்டின் நாணய மதிப்பை மேம்படுத்துவதற்காக அல்லது பாதுகாப்பாக இருப்பதற்கான நடவடிக்கையாகும்.

உதாரணமாக நம் நாட்டில் மத்திய வங்கியான பாரத ரிசர்வ் வங்கி நாணயத்தை(Currency Notes) அச்சடிக்கும் பணியையும், அதனை நிர்வகிக்கவும் செய்கிறது. இது போக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மூலம் பெறப்பட்ட வைப்பு தொகையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய வேலையும் ஒரு மத்திய வங்கிக்கு உள்ளது.

நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான பண மதிப்பையும் ஒரு அரசு கவனிக்க வேண்டியுள்ளது. மேலே சொல்லப்பட்ட ஏதேனும் ஒரு விஷயத்தில் அரசு அல்லது அந்த நாட்டின் அரசாங்கம் திவாலானால் அதனை ஈடுகட்ட உத்தரவாதம் அளிக்கும் பயன்பாடு தான் தங்கத்தை வாங்கி வைத்து கொள்வது.

ஒரு குறிப்பிட்ட வங்கி திவாலாகும் போதோ, நாம் மற்றொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்த பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணத்தை திரும்ப அளிக்க முடியாத நிலையிருந்தோ அதனை சரிக்கட்ட நம்மிடம் இருக்கும் தங்க கையிருப்பை கொண்டு நடவடிக்கையை எடுக்கலாம்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக நமது குடும்பத்தினை எடுத்து கொள்ளலாம். நாம் பல வருடங்களாக அல்லது தலைமுறையாக சிறுகச்சிறுக சேர்த்து வைத்த தங்கத்தை பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. அவசர காலம் அல்லது இக்கட்டான சமயங்களில் தான் நாம் அதனை அடமானம் வைக்க அல்லது விற்க முற்படுவோம். இதனை போன்று தான் அரசும் செய்து  வருகிறது. ஒரு நாடு கடனிலிருந்து மீள முடியாமல் இருக்கும் சமயத்தில், தங்கத்தினை அடமானம் வைத்து அல்லது விற்று அதன் நிலையை சரிசெய்யும்.

அடிக்கடி கையிருப்பில் இருக்கும் தங்கத்தை அடமானம் வைப்பது வீட்டிற்கும், நாட்டின் அரசுக்கும் சரியான திட்டமிடல் கிடையாது. அவை பண நிர்வாகத்தை சீர்குலைக்கும். மிகவும் அரிதான நிலையில் மட்டுமே அவை பயன்படுத்தப்படுகிறது. மற்ற வேளைகளில் நாம் தங்க கையிருப்பை அதிகரிப்பதே சிறந்த முறை.

நம் நாட்டில் தங்கத்தின் பயன்பாடு சற்று அதிகம் என்று சொல்லலாம். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நாம் அதிகமாக தங்கத்தை வாங்குவது என்றால் அது மட்டுமே காரணம் இல்லை. உண்மையில் நாம் தங்கத்தை அமெரிக்க டாலர் மதிப்பில் இறக்குமதி செய்து வருகிறோம். எனவே அமெரிக்க டாலரின் மதிப்பு எப்போதும் உயர்ந்திருக்கும் ஒரு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை பெரும்பாலும் குறைவதில்லை. இதுபோக உள்நாட்டில் நிலவும் தங்கத்தின் மீதான வரி விதிப்புகளும் அதன் சில்லரை விலையை உயர்த்தி வருகிறது.

ஆபரணம் அல்லது அணிகலன்களாக நமக்கு தேவைப்படாத நிலையில், தங்கத்தை மின்னணு முறையில்(Gold Fund, Gold ETF, Gold Bond) வாங்குவது தான் சிறந்தது. அதற்காக மோசடி நிறுவனங்களிடம் சிக்கி கொள்ளாதீர்கள். உலகளவில் தங்கத்தின் மீதான வர்த்தகம் என சொல்லிக்கொண்டு பல மோசடி கும்பல்கள் செய்து வருகிறது கவனிக்கத்தக்கது. அரசு ஒழுங்குமுறை படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் மட்டும் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது.

தங்கத்தின் மீதான கையிருப்பை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் தான் அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் தங்கத்தின் தேவை அதிகமாக காணப்பட்டாலும், நாம் பெரும்பாலும் இறக்குமதி தான் செய்து வருகிறோம். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு தங்கத்தின் மீதான பல்வேறு நாடுகளின் கையிருப்பு கணிசமாக குறைந்திருந்தது. இருப்பினும் அவற்றின் விலை கடந்த வருடம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 2021 மாத முடிவின் படி, உலகளவில் தங்கம் கையிருப்பில் முதலிடத்தில் உள்ள நாடு – அமெரிக்கா. சுமார் 8,134 டன் அளவை அமெரிக்க நாடு தனது தங்க கையிருப்பாக கொண்டுள்ளது. இரண்டாம் இடத்தில் 3,364 டன் மதிப்புடன் ஜெர்மனியும், மூன்றாவது இடத்தில் இத்தாலி 2,452 டன்களுடனும் உள்ளது.

நான்காம் இடத்தில் 2,436 டன்களுடன் பிரான்ஸ், ரஷ்யா சுமார் 2,300 டன்களுடன் ஐந்தாம் இடத்திலும், ஆறாம் இடத்தில் 1,948 டன்களுடன் சீனாவும் உள்ளது. ஏழாம் இடத்தில் சுவிட்ஸர்லாந்து 1,040 டன்களுடனும், எட்டாமிடத்தில் ஜப்பான் 765 டன்கள் என்ற அளவுடனும் உள்ளது.

ஒன்பதாவது இடத்தில் இந்தியா 658 டன் தங்க கையிருப்புடன் உள்ளது. பத்தாவது இடத்தில் 613 டன் மதிப்புடன் நெதர்லாந்து நாடு உள்ளது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வருகிறது தங்கத்திற்கான வர்த்தக சந்தை – செபியின் புதிய திட்டம்

வருகிறது தங்கத்திற்கான வர்த்தக சந்தை  – செபியின் புதிய திட்டம் 

India’s Gold Exchange – SEBI’s Proposed framework

கடந்த 2018-19ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் தாக்கலில் தங்கத்திற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையை நிறுவுவதற்கான யோசனை சொல்லப்பட்டிருந்தது. இதனையே நடப்பு 2021-22 நிதியாண்டின் பட்ஜெட்டில் நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் முன்மொழிந்தார். தங்க முதலீட்டிற்கான தனி வர்த்தக சந்தையை உள்நாட்டில் அமைப்பதும், பொருட்சந்தைக்கான(Commodity Market) நிலையை வலுப்படுத்தவும் பேசப்பட்டது.

பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி திங்கட்கிழமை(17-05-2021) அன்று முன்மொழியப்பட்ட கட்டமைப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அவற்றில் சொல்லப்பட்டதாவது, ‘தங்க பரிவர்த்தனைக்கான தனி சந்தையை உருவாக்குவதென்றும், தங்க பரிமாற்றத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான வரைவு செபி(வால்ட் மேலாளர்கள்) விதிமுறைகள் 2021 ஏற்படுத்த வேண்டும்’.

இது சார்ந்த கருத்துக்களை கேட்க செபி மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது. உலக தங்க சந்தையில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவமானது. நாம் பெரும்பாலும் தங்கத்தின் இறக்குமதியை சார்ந்தே இருந்து வருகிறோம். ஆண்டுக்கு தோராயமாக 900 டன் அளவில் நாட்டின் தங்க இறக்குமதி தேவை உள்ளது.

இந்த புதிய சந்தை வரும் நிலையில், தனிநபர் ஒருவரிடம் உள்ள தங்கத்தை(Physical Gold) தங்கச்சந்தையின் மூலம் மின்னணு முறையிலான தங்கமாக மாற்றி கொள்ளலாம். மின்னணு முறையிலான தங்கம், இந்த சந்தையில் வர்த்தகமாகும். புதிதாக ஒருவர் தங்கச்சந்தையின் மூலமும் மின்னணு முறையில் தங்கத்தை வாங்கலாம், விற்கலாம்.

பின்னர் நமக்கு தேவைப்படும் காலத்தில், மின்னணு முறையிலிருந்து தங்கமாக(Physical Gold) மாற்றி பெற்று கொள்ளலாம். தற்போது பொருட்சந்தையில் வர்த்தகமாகும் மற்றும் பிற சந்தைகளில் உள்ள தங்கத்தின் மீதான வர்த்தகம், சொல்லப்பட்ட சந்தைக்கு பின்பு நடைமுறையில் இருக்குமா, வரி விதிப்புகள் எப்படி, பணப்புழக்கம் போன்ற விவரங்கள் வரக்கூடிய காலங்களில் தெரிய வரலாம்.

Electronic Gold Receipt Exchange

புதிய தங்கச்சந்தையில் தனிநபர் மட்டுமில்லாது சில்லறை முதலீட்டாளர்கள், நகைக்கடை விநியோகஸ்தர்கள், வங்கிகள், பெரு முதலீட்டாளர்கள் மற்றும்  அன்னிய முதலீட்டாளர்கள் போன்றோர்களும் வர்த்தகம் செய்யலாம். இதனை பற்றிய மற்ற விவரங்களை மத்திய அரசு வெளியிடும் நிலையில் நாம் அறிந்து கொள்ளலாம்.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

செல்வ வளத்தை பெருக்குவதற்கான ஐந்து நுட்பங்கள்

செல்வ வளத்தை பெருக்குவதற்கான ஐந்து நுட்பங்கள் 
Five techniques for the Wealth Creation

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதை போல, நம்மிடம் இருக்கும் பணம் வளர்வதற்கும் இரு விஷயங்கள் தேவைப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு திட்டத்தில் நாம் முதலீடு செய்ய முனைந்தாலும், காலம் மற்றும் வருவாய் விகிதம் அதன் மதிப்பீட்டை தருகின்றன. பணவீக்கம், வரி விதிப்பு, முதலீட்டு தொகை மற்றும் பிற காரணிகள் ஒருபுறம் இருந்தாலும், முதலீடு செய்யும் காலமும்(Tenure), அதனை சார்ந்த வருவாய் விகிதமும்(Investment Returns%) தான் ஒருவருக்கான செல்வத்தை ஏற்படுத்துகிறது.

குறுகிய காலத்தில் விரைவாக ஈட்டப்படும் பணம், நீண்ட காலத்தில் பயனளிக்க வேண்டுமானால் மறுமுதலீடு செய்து காத்திருந்தால் மட்டுமே, அவை பெரும் செல்வத்தை அளிக்கும். இல்லையெனில் அதன் திறன் செயலிழந்து விடும். ஏழை மற்றும் நடுத்தர வருவாய் கொண்டவர்கள் குறுகிய காலத்தில் அதிக லாபமீட்ட விரும்புவதும், பணக்காரர்கள் நீண்டகாலத்தில் பணத்தை விதைத்து விட்டு, காத்திருந்து பின் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்துவது தான் செல்வத்தின் ரகசியம். இங்கே பணக்காரர்கள் எனப்படுபவர் முதலீட்டு ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்.

நாம் எந்த வேலை பார்த்து கொண்டிருந்தாலும், பணக்காரர்களின் சிந்தனைகளை எளிமையாக கடைபிடிக்கலாம். அது போன்ற செல்வ வளத்தை ஏற்படுத்துவதற்கான ஐந்து நுட்பங்களை நாம் இங்கே காணலாம்.

நிதி பாதுகாப்பு எப்போதும் அவசியம்:

பணம் பண்ணுவதே மட்டுமே பணக்காரர்களின் இலக்காக இருக்க முடியாது. மாறாக நமது எதிர்பாராத மற்றும் அவசியமில்லாத செலவுகளையும் கட்டுப்படுத்த வேண்டும். உங்களுக்கு மற்றும் குடும்பத்தாருக்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மட்டும் செலவு செய்ய பழகுங்கள். ‘தேவையில்லாத பொருட்களை நீங்கள் வீட்டில் வாங்கி குவிக்கும் போது, ஒரு நாள் உங்களுக்கு தேவைப்பட்ட ஒரு பொருளை நீங்கள் விற்க நேரிடும்’ என திருவாளர் வாரன் பப்பெட் கூறுகிறார்.

அவசியமில்லாத செலவுகளை குறைத்து கொள்வதை போல, எதிர்பாராது வரும் செலவுகளையும் முடிந்தவரை தவிர்த்தல் நலம். அடிப்படை நிதி பாதுகாப்பை(Financial Protection) அளிக்கும் டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ மற்றும் விபத்து காப்பீட்டை பெறுவது அவசியம். இதன் மூலம் வரும் நாட்களில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளை தவிர்க்கலாம். சொல்லப்பட்ட காப்பீடு திட்டங்கள் உண்மையில் உங்கள் உடல்நலனை பாதுகாக்கா விட்டாலும், நீங்கள் இதுவரை சேமித்து வைத்திருந்த பணத்தை விரயம் செய்ய விடாது.

அவசர கால நிதியை(Emergency Fund) எப்போதும் உங்கள் நண்பனாக்கி கொள்ளுங்கள். உங்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் சமயத்தில், நோய்த்தொற்று காலத்தில், தொழிலில் மந்தநிலை ஏற்படும் சமயம் என பல்வேறு சூழ்நிலைகளில் அவசர கால நிதி உங்களுக்கு உதவும். அவசர கால நிதி எனும் போது, குறைந்தபட்சம் உங்களது மாத வருமானத்தை போல 6 முதல் 12 மடங்குகளில் தொகையை சேமித்து வைத்திருப்பது நல்லது. இந்த நிதியை ரிஸ்க் தன்மை அதிகம் கொண்ட முதலீட்டு திட்டத்தில் போட கூடாது. அவசரத்திற்கு எப்போதும் பணத்தை எடுக்குமாறு, பாதுகாப்பான வங்கி சேமிப்பு கணக்கு அல்லது லிக்விட் பண்டுகளில் கையிருப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

நிதி இலக்குகளும், அதற்கான திட்டமிடலும்:

உங்களது ஒவ்வொரு தேவைக்கும், முன்னரே திட்டமிட்டு கொள்வது அந்த தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்து கொள்ள உதவும். தேவையெனும் போது சில வாரங்கள் முதல் மாதங்கள் அல்லது வருடங்கள் வரை இருக்கலாம். ஒவ்வொரு தேவையையும் நிதி இலக்குகளாக(Create Financial Goals) உருவாக்கி கொள்ளுங்கள். அதனை அடைய தேவையான தொகை, காலம், எதிர்பார்க்கும் வட்டி விகிதம் மற்றும் அதனை சார்ந்த மாதாந்திர அல்லது வாராந்திர முதலீட்டு தொகை என திட்டமிட்டு கொள்ளுங்கள்.

உதாரணமாக வருடாவருடம் உங்கள் குழந்தைக்கு பிறந்தநாள் விழா கொண்டாட விரும்பினால், அதனை ஒரு இலக்காக(Birthday Fund) நிர்ணயித்து, பிறந்தநாள் விழாவுக்கு தேவையான செலவுகளை, மாத முதலீடாக கணக்கிட்டு கொள்ளுங்கள். பின்பு அதனை பாதுகாப்பான அல்லது குறைந்த ரிஸ்க் தன்மை கொண்ட முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்து வாருங்கள். விழாவுக்கு முன்னர் தேவையான தொகையை நீங்கள் அத்திட்டத்தில் இருந்து எடுத்து செலவழித்து கொள்ளலாம். இது போன்று குழந்தை மேற்படிப்பு, திருமண செலவுகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவது என பல்வேறு இலக்குகளுக்கு இந்த உத்தியை பயன்படுத்தலாம். குறுகிய கால இலக்கிற்கு ரிஸ்க் குறைவான முதலீட்டு திட்டத்தையும், நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளுக்கு மிதமானது முதல் ரிஸ்க் அதிகம் கொண்ட திட்டங்களையும் தேர்ந்தெடுக்கலாம்.

அஸெட் அலோகேஷன்(Asset Allocation) எனும் பணவளக்கலை:

சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் பல இருந்தாலும், அனைத்தும் ஒருசேர திறம்பட வருவாயை அளிப்பதோ, குறைவதோ கிடையாது. ஒவ்வொரு முதலீட்டு திட்டத்திற்கும் தனித்துவமான தன்மைகளும், காலமும் உண்டு. உதாரணமாக பொருளாதாரம் நன்றாக வளர்ந்து வரும் நிலையில் பங்குச்சந்தைகள் ஏறுவதும், இதற்கு மாறாக பொருளாதாரம் சரியும் நிலையில் தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பதும் இயல்பு. இது போன்று வங்கிகளின் வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் நிலையில், முதலீட்டாளர் ஒருவர் வேறொரு முதலீட்டு வாய்ப்பை தேடுவதும் ஏற்படத்தான் செய்யும்.

பங்குகள், பத்திரங்கள், வங்கி டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட் என ஒவ்வொரு முதலீட்டு திட்டமும் வெவ்வேறு காலத்தில் ஏற்ற-இறக்கத்தை சந்திக்கும். ஒரே முதலீட்டு திட்டத்தில் நாம் முதலீடு செய்யும் நிலையில், அதற்கான ரிஸ்கும் மிக அதிகம். எனவே நமது முதலீட்டை, அஸெட் அலோகேஷன் முறையில் பரவலாக்க சிறிதளவு தங்கம், வங்கி டெபாசிட், பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குகள், பிற முதலீடுகள் கொஞ்சம் என முதலீடு செய்யலாம்.

இதன் மூலம் ஏதேனும் ஒரு முதலீட்டு திட்டம் சரிவை கண்டாலும், நமது முதலீட்டு போர்ட்போலியோ அதிகம் பாதிக்கப்படாது. அஸெட் அலோகேஷன்  முறையில்  நீண்டகாலத்தில் நல்ல வருவாயை ஏற்படுத்தலாம்.

பங்கு முதலீட்டை பல்வகைப்படுத்துதல்(Diversification):

கடந்த ஐம்பது வருடங்களில் பங்குச்சந்தை போன்ற அருமையான ஒரு முதலீட்டு வாய்ப்பு(உலகளவில்) எங்கும் கிடைக்கப்பெறவில்லை. இன்று எளிமையாக கையாளும் நிலையில், யாரும் முதலீடு செய்யக்கூடிய வகையில் பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளன. அதே வேளையில் நல்ல நிறுவனங்களையும், நீண்டகாலத்தில் வருவாய் ஈட்டக்கூடிய துறைகளை கண்டறிவதும் சவாலான விஷயம்.

துறை சார்ந்த பங்குகளை ஆராயும் போது, அவற்றின் தொழில் அடிப்படை பகுப்பாய்வுகளை(Business Fundamentals) நாம் அறியலாம். இருப்பினும் நாம் இப்போது முதலீடு செய்யும் துறை எக்காலத்திலும் வருவாயை அளித்து கொண்டு தான் இருக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டினால் ஒவ்வொரு துறையும், அதனை சார்ந்த தொழில் நிறுவனங்களும் மாற்றமடைந்து வருகின்றன. இதனை சமாளிக்க முடியாத துறைகள் மற்றும் நிறுவனங்கள் பின்னாளில், முதலீட்டாளர்களுக்கு எந்தவொரு வருவாயை அளிக்க முடியாத நிலையாக அமைகின்றன.

எனவே பங்கு முதலீட்டை மேற்கொள்ளும் போது, பல்வேறு துறை சார்ந்த நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து முதலீடு செய்ய வேண்டும். உலோகங்கள்(Metals) சார்ந்த துறை பொதுவாக சுழற்சி கால அடிப்படையில் இயங்கும். உலக பொருளாதாரத்தால் அதிகம் பாதிப்படையும் துறையாக இருக்கும். அதே நேரத்தில் நுகர்வோர் பொருட்கள் மற்றும் சாதனங்கள்(FMCG and Consumer Durables) போன்ற துறைகளின் தேவை நாள்தோறும் உள்ளது.

நுகர்வோர் பொருட்கள், வாகனம், பார்மா, தகவல் தொழில்நுட்பம், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், ரசாயனம், உட்கட்டமைப்பு என துறை வாரியாக நாம் பிரித்து முதலீடு செய்யும் போது, நீண்டகாலத்தில் நல்ல வருவாயை ஏற்படுத்தலாம்.

காத்திருக்கும் விளையாட்டு(Waiting Game – Delayed Gratification):

இன்றைய காலத்தில் பணம் சேர்ப்பது அப்படியொன்றும் கடினமான வேலையல்ல. ஆனால் அதனை மென்மேலும் பெருக்குவதோ, ஈட்டிய செல்வத்தை தக்க வைப்பதோ பணக்காரர்களின் ரகசியம். இது நாம் அனைவரும் அறிந்த ரகசியமும் கூட. இருப்பினும் அனைவராலும் கடைபிடிக்கப்படுவதில்லை.

மாதாமாதம் சிறுகச்சிறுக முதலீடு செய்து விட்டு, நீண்டகாலம் காத்திருந்து பெரும் செல்வத்தை ஈட்ட பொறுமையும் அவசியம். காத்திருத்தல் எவ்வளவு முக்கியமோ, அதனை போன்று காலமும், வட்டி விகிதமும் அவசியம். அதன் மூலமே நாம் கூட்டு வட்டியின் பலனை முழுவதுமாக பெற முடியும். நம்மில் பெரும்பாலானோர் நீண்டகாலத்திற்கென முதலீடு செய்த தொகையை, அவ்வப்போது தேவைப்படும் செலவுக்கு எடுப்பது, தொடர் முதலீட்டை நிறுத்துவது அல்லது தாமதப்படுத்துவது போன்ற காரணங்களால், அந்த முதலீடு நீண்டகாலத்தில் வளர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதில்லை.

இன்று பொன்சி(Ponzi) போன்ற ஏமாற்று திட்டங்களில் மோசடி பேர்வழிகளிடம் மாட்டிக்கொள்வது குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என பேராசைப்படுபவர்கள் தான். நீண்டகாலத்தில் பொறுமையாக முதலீடு செய்து விட்டு, முதலீட்டு பலனை அனுபவிப்பவர்கள் இது போன்ற ஏமாற்று திட்டங்களில் கவனம் செலுத்துவதில்லை.

பிறக்கும் குழந்தை ஒரே நாளில் படித்து விட்டு, வேலைக்கு சென்று சம்பாதிப்பதோ அல்லது தொழில் புரிவதோ இல்லை. அதற்கான காலமும் அதிகம், காத்திருந்து முதலீடு செய்வதே சாலச்சிறந்தது. இது தான் பணக்காரர்களின் ரகசியம். தனிநபர் ஒருவர் துவங்கிய சிறு நிறுவனங்கள் பல, பின்னாளில் பெரு நிறுவனங்களாக கட்டமைக்கப்படுவதும் காத்திருத்தலின் பயனால் தான். “பணக்காரர்கள் நேரத்தில் முதலீடு செய்கிறார்கள், ஏழைகள் பணத்தில் முதலீடு செய்கிறார்கள்” என்கிறார் உலக பெரும் பணக்காரர் வாரன்.

ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் எப்போதும், எந்த பொருளையும் உடனடியாக வாங்கும் முயற்சியில் / உணர்ச்சியில் உள்ளனர்; பணக்காரர்கள் எப்போதும் தங்களது தேவையறிந்து, காத்திருந்தே முடிவில் அனுபவிக்கிறார்கள்; அதனால் தான் அவர்கள் எப்போதும் பணக்காரர்கள் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பிரின்ஸ் பைப்ஸ் நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ.97 கோடி நிகர லாபம்

பிரின்ஸ் பைப்ஸ் நான்காம் காலாண்டு முடிவுகள் – ரூ.97 கோடி நிகர லாபம் 

Prince pipes reported a Net Profit of Rs.97 Crore – Q4FY21

1987ம் ஆண்டு துவங்கப்பட்ட பிரின்ஸ் பைப்ஸ் நிறுவனம் பாலிமர் குழாய்கள் உற்பத்தியில் தொழில் செய்து வருகிறது. பி.வி.சி. பைப்புகளில் முன்னணி நிறுவனமாகவும், பாலிமர் பிரிவில் 30 வருடங்களுக்கு மேலான அனுபவத்தையும் கொண்டிருக்கிறது பிரின்ஸ் பைப்ஸ். யூ.பி.வி.சி.(UPVC), சி.பி.வி.சி., பி.பி.ஆர். மற்றும் பி.பி.(PP) ரக பிரிவில் குழாய்கள் உற்பத்தி மற்றும் பொருத்துதலை முக்கிய பணியாக கொண்டுள்ளது.

பிரின்ஸ் பைப்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.6,300 கோடி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பங்கு ஒன்றுக்கு 75 ரூபாய் விலையில் வர்த்தகமாகி கொண்டிருந்த இந்த பங்கு, தற்போது பங்கு ஒன்றுக்கு 600 ரூபாய்க்கு அருகில் வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.08 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio – ICR) 16 மடங்குகளிலும் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. 2020-21ம் நிதியாண்டின் மார்ச் மாத நான்காம் காலாண்டில்(Quarterly results) வருவாய் 761 கோடி ரூபாயாகவும், செலவினம் 615 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.97 கோடி.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 933 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக வருவாய் 2,072 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,710 கோடியாக உள்ளது. மார்ச் 2021ம் ஆண்டின் முடிவில் நிறுவனம் 222 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய லாபம் இரு மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை 16 சதவீதமும், லாபம் 49 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. பிளம்பிங், நிலத்தடி, கழிவுநீர், விவசாய போர்வெல், நீரேற்றம், கேபிள் குழாய் மற்றும் பிற தொழிற்துறைக்கான தேவையையும் பிரின்ஸ் பைப்ஸ் செய்து வருகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவன காலாண்டு லாபம் – ரூ. 38 கோடி

தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவன காலாண்டு லாபம் – ரூ. 38 கோடி 

Thyrocare Technologies Q4FY21 – Net profit of Rs.38 Crore

கோவை அப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த திரு. வேலுமணி அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் தைரோகேர் டெக்னாலஜிஸ். சுகாதார துறையில் தொழில் செய்து வரும் இந்நிறுவனம், நாட்டில் உள்ள நோயாளிகள், ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மலிவான விலையில் தரமான நோயறிதல் சேவைகளை வழங்குவதில்(Diagnostic Services) முதன்மை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

நிறுவனத்தின் நிறுவனரான திரு. வேலுமணி அவர்கள் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது. தைரோகேர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு 5,600 கோடி ரூபாய். நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கடன்-பங்கு விகிதம் 0.02 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 176 மடங்குகளிலும் இருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது.

நிறுவனர்கள் சார்பில் 66 சதவீத பங்குகளும், பங்கு அடமானம் எதுவும் நிறுவனர்கள் தரப்பாக வைக்கப்படவில்லை. 2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.147 கோடியாகவும், செலவினம் 95 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக ரூ.4 கோடியும், சொல்லப்பட்ட காலாண்டின் நிகர லாபம் 38 கோடி ரூபாயாக உள்ளது.

ஒட்டுமொத்தமாக 2021ம் நிதியாண்டில் வருவாய் ரூ. 495 கோடியாகவும், நிகர லாபம் 113 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் 14 சதவீதமும், நிகர லாபம் 28 சதவீதமாகவும் வளர்ந்துள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 374 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை 15 சதவீதமும், லாபம் 17 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 5 வருட காலத்தில் 21 சதவீதமாக இருந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நம்ம மதுரையை சேர்ந்த பங்கு – விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ்

நம்ம மதுரையை சேர்ந்த பங்கு – விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ் 

VTM(Virudhunagar Textile Mills) Limited – Fundamental Analysis

கடந்த 1946ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட நிறுவனம் விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ். நெசவு சார்ந்த உற்பத்தியை தனது தொழிலாக கொண்டிருக்கும் இந்நிறுவனம், தியாகராஜர் குழுவின்(Thiagarajar Mills Group) ஒரு அங்கமாகும். மதுரை மாவட்டம் கப்பலூரை சேர்ந்த தியாகராஜர் மில்ஸ் நிறுவனம், ஜவுளித்தொழிலில் புகழ் பெற்ற நிறுவனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

திரு. கருமுத்து தியாகராஜ செட்டியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்நிறுவன குழுமம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, தியாகராஜர் மேலாண்மை கல்வி நிறுவனம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி உட்பட சுமார் 19 கல்வி நிலையங்களை தமிழகத்தில் தோற்றுவித்துள்ளது.

துவக்க காலத்தில் உள்நாட்டுக்கு தேவையான உற்பத்தியை செய்து வந்த நிலையில், தற்போது பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்துள்ளது. நெசவு சார்ந்த உற்பத்தியில் நவீனமயமாக்கும் முயற்சியில் முதலீடுகளை ஒவ்வொரு காலத்திலும் செய்து வந்துள்ளது இந்நிறுவனம்.

உற்பத்தி பிரிவில் 258 அதிநவீன தறிகளை இந்நிறுவனம் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. சிறந்த துணி உற்பத்தியை எண்ணிக்கையிலும், சிக்கலான தன்மைகளை சரி செய்வதற்கான போதுமான உபகரணங்களையும் வி.டி.எம். நிறுவனம் கொண்டுள்ளது. பருத்தி நூல் வரம்பில் நூறு சதவீத நிபுணத்துவம் பெற்றுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. வாயு நூல்(Gassed yarn) செயலாக்கம் நிறுவனத்தின் சிறப்பம்சமாக உள்ளது.

வி.டி.எம். நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக திரு.கண்ணன் உள்ளார். நிறுவனர்கள் பங்களிப்பில் கண்ணன் மற்றும் அவரை சார்ந்த நிறுவனங்களிடம் 59 சதவீத பங்குகளும், தியாகராஜர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் 7 சதவீத பங்குகளும், பிற நிதி நிறுவனம் சார்ந்து 9 சதவீத பங்குகளும் உள்ளது. ஒட்டுமொத்தமாக நிறுவனர்களின் பங்களிப்பு 75 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.100 கோடி. புத்தக மதிப்பு 55 ரூபாயாகவும், கடன்-பங்கு விகிதம் 0.03 ஆகவும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 16 மடங்குகளில் இருக்கிறது. 2020-21ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.143 கோடியாகவும், செலவினம் 126 கோடி ரூபாயாகவும் உள்ளது. சொல்லப்பட்ட வருடத்தில் நிகர லாபம் 10 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

கடந்த பத்து வருடங்களில் லாப வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருந்து வந்தாலும், விற்பனை வளர்ச்சி சொல்லிக்கொள்ளும் படி இல்லை. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 215 கோடி ரூபாயாக உள்ளது. சிறு நிறுவன பங்குகளில் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படாத நிறுவனமாகவும், தொடர்ச்சியாக ஈவுத்தொகையை(Dividend) அளிக்கும் நிறுவனமாகவும் விருதுநகர் டெக்ஸ்டைல் மில்ஸ் நிறுவனம் உள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நுகர்வோர் சாதனங்கள் – தேநீர் – ரப்பர் – துறை சார்ந்த அலசலும், முதலீட்டு வாய்ப்புகளும்

நுகர்வோர் சாதனங்கள் – தேநீர் – ரப்பர் – துறை சார்ந்த அலசலும், முதலீட்டு வாய்ப்புகளும் 

Sectoral Analysis & Investment Opportunities – Webinar 

பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களுக்கு பொதுவாக வங்கிகள், நிதி நிறுவனங்கள், வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த துறைகளின் நிறுவன பங்குகள் தான் உடனடியாக ஞாபகத்திற்கு வரும். தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரிந்து தகவல். ஆனால் நாம் நித்தமும் வீட்டில் பார்க்கும், பயன்படுத்தும் பொருட்களை பற்றிய நிறுவனங்களை அவ்வளவாக கண்டு கொள்வதில்லை.

அது போன்ற நிறுவனங்களில் நீடித்த தன்மை இல்லாத நுகர்வோர் பொருட்களை(FMCG) கூறலாம். நீடித்த தன்மை இல்லாத பொருட்கள் என சொல்லும் போது உணவு பொருட்கள் மற்றும் தனிநபர் சார்ந்த அழகு சாதன பொருட்களை சொல்லலாம். அதே வேளையில் நீடித்த தன்மை கொண்ட சில பொருட்களை சொல்ல வேண்டுமெனில் நம் வீட்டில் அதிக இடத்தை அடைத்து கொள்வது அவை தான்.

மரச்சாமான்கள், குளிர்சாதன பெட்டி, மைக்ரோவேவ், ஏர் கண்டிஷனர், துணி சலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்திகள், சமையலறை அடுப்புகள், ஹீட்டர்கள் மற்றும் இதர மின்னணு சாதனங்களை சொல்லலாம். இவை பொதுவாக ஒரு வருடத்திற்கு மேலாக பயன்படுத்தக்கூடிய மற்றும் நீடித்த தன்மை கொண்ட பொருட்கள்(Consumer Durables) எனலாம்.

மேலே சொல்லப்பட்ட Consumer Durables துறை, சந்தையில் பெரும்பாலோனர்களால் அறியப்படுவதில்லை. இவற்றின் தொழில்கள் வணிக சுழற்சியாக இருந்தாலும், நீண்ட காலத்தில் நல்ல வருவாயை முதலீட்டாளர்களுக்கு அளிக்கக்கூடியவை. இதனை பற்றிய அடிப்படை அலசலை தான் நாம் வரவிருக்கும் இணைய நிகழ்வில் பேச போகிறோம்…

வாங்க பேசுவோம்,

  • துறை சார்ந்த அலசல்: நுகர்வோர் சாதனங்கள், தேநீர், ரப்பர் துறைகள்
  • சாத்தியமான முதலீட்டு உத்திகள்(Potential Investing Strategies)
  • பங்குகளை எளிதாக அளவிட்டு, சரியான பங்குகளை தேர்ந்தெடுப்பது எப்படி ?
  • அடிப்படை முதலீட்டு பகுப்பாய்வு: சாக்லேட் அனாலிசிஸ்
  • பரஸ்பர நிதிகளின்(Mutual Funds) மூலம் நீண்டகாலத்தில் செல்வத்தை பெருக்குதல்

Stock Insights Version 4

நிகழ்ச்சி நிரல்:

நாள் & நேரம்:  08-05-2021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 05:30 மணிக்கு (இரண்டு மணிநேர பேச்சு)

கட்டணம்: ரூ. 499 மட்டுமே (ஐந்து வாரங்களுக்கு)

இது ஒரு இணைய வழியிலான நிகழ்வு. நிகழ்வுக்கு பதிவு செய்ய…

https://www.instamojo.com/varthagamadurai/stock-insights-version-40/

பதிவுக்கு பின், நிகழ்ச்சிக்கான இணைப்பு உங்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

பொறுப்பு-துறப்பு:

இந்த நிகழ்ச்சி நிரல் பங்குச்சந்தை அடிப்படை கற்றலுக்கான இணைப்பு மட்டுமே. இங்கே எந்தவொரு பங்குகளும் பரிந்துரைக்கப்படாது, அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) கொண்டு அலசப்படும் பங்குகள் விளக்கத்திற்கு மட்டுமே. முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்துஸ்தான் யூனிலீவர் நான்காம் காலாண்டில் ரூ.2,186 கோடி நிகர லாபம்

இந்துஸ்தான் யூனிலீவர் நான்காம் காலாண்டில் ரூ.2,186 கோடி நிகர லாபம்  

HUL(Hindustan Unilever Ltd) reported a Net Profit of Rs.2,186 Crore in Q4FY21

1931ம் ஆண்டு இந்துஸ்தான் வனஸ்பதி உற்பத்தி நிறுவனமாக துவங்கப்பட்டது தான் பின்னாளில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனமாக மாறியது. இதன் தாய் நிறுவனம் லண்டனை தலைமையிடமாக கொண்ட யூனிலீவர்(Unilever). பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் யூனிலீவர் குழுமம் தனது தொழிலை 190 நாடுகளிலும், 400க்கும் மேற்பட்ட பிராண்டுகளையும் கொண்டு இயங்குகிறது.

இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் உணவு, தனிநபர் மற்றும் வீட்டு பராமரிப்பு, குடிநீர் சுத்திகரிப்பு போன்றவற்றில் தனது தொழிலை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 5.65 லட்சம் கோடி ரூபாய். கடனில்லா நிறுவனமாக வலம் வரும் இந்துஸ்தான் யூனிலீவர் 62 சதவீத நிறுவனர்கள் பங்களிப்பை கொண்டிருக்கிறது.

சரும(Skincare) பராமரிப்பில் 54 சதவீத சந்தை பங்களிப்பையும், சலவை(Dish washing Detergent) பிரிவில் 55 சதவீதமும், சாம்பூ(Shampoo) பிரிவில் 47 சதவீதம், தனிநபர் பிரிவில் 37 சதவீதமும் மற்றும் பற்பசை பிரிவில் 17 சதவீத சந்தை பங்களிப்பையும் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கொண்டுள்ளது.

2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 12,433 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.9,391 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் 24 சதவீதமாகவும், நிகர லாபம் 2,186 கோடி ரூபாயாகவும் உள்ளது. கடந்த 2019-20ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிகர லாபம் 44 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த பத்து வருட கால அளவில் காணும் போது நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 9 சதவீதமும், லாபம் 15 சதவீதமாகவும் உள்ளது. மார்ச் 2020ம் வருட முடிவின் படி, இருப்புநிலை கையிருப்பு 8,013 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தில், எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் சுமார் 4 சதவீத பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கேஸ்ட்ரால் இந்தியா – காலாண்டு முடிவுகள் – இரட்டிப்பான நிகர லாபம்

கேஸ்ட்ரால் இந்தியா – காலாண்டு முடிவுகள் – இரட்டிப்பான நிகர லாபம் 

Castrol India reported a Net profit of Rs.244 Crore – Q1CY2021

நூறு வருடத்திற்கு மேலான தொழில் அனுபவம் கொண்ட கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனம், வாகன மற்றும் தொழிற்துறைக்கான மசகு எண்ணெய்(Lubricant) உற்பத்தியை செய்து வருகிறது. இந்த துறையில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும், மசகு எண்ணெய் பிரிவில் 20 சதவீத சந்தை பங்களிப்பையும்(Market Share) கொண்டுள்ளது கேஸ்ட்ரால்.

பிரிட்டனை சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் கேஸ்ட்ரால் இந்தியா. உலகெங்கிலும் உள்ள வாகன, தொழிற்துறை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து, எண்ணெய் ஆய்வு மற்றும் மசகு எண்ணெய்,  கிரீஸ்கள், அதனை தொடர்புடைய சேவைகளை அளிக்கும் இந்நிறுவனம் உலகின் முன்னணி உற்பத்தியாளராகவும், சந்தைப்படுத்துதல் மற்றும் விநியோகஸ்தராகவும் விளங்குகிறது.

நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.12,400 கோடி. நிறுவனர்களின் பங்களிப்பு 51 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. கடனில்லா நிறுவனமாக வளம் வரும் கேஸ்ட்ரால் இந்தியாவின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 257 மடங்குகளில் உள்ளது.

2021-22ம் ஆங்கில ஆண்டின் முதல் காலாண்டில்(மார்ச் 2021 – Quarterly results) நிறுவனத்தின் வருவாய் ரூ.1,139 கோடியாக உள்ளது. இதன் செலவினம் 799 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.332 கோடியாகவும், நிகர லாபம் 244 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

கடந்த மார்ச் 2020ம் காலாண்டில் வருவாய் 688 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.125 கோடியாக இருந்தது கவனிக்கத்தக்கது. இதனை ஒப்பிடுகையில் தற்போதைய லாபம் 95 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. டிசம்பர் 2020 காலத்தின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 920 கோடி ரூபாய்.

கேஸ்ட்ரால் இந்தியா நிறுவனத்தின் உள்ளூர் முதலீட்டாளர் பங்களிப்பில், எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் சுமார் 11 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. கேஸ்ட்ரால் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2,394 கோடியாக உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.1,102 கோடி

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.1,102 கோடி 

HCL Technologies reported a net profit of Rs.1,102 Crore – Q4FY21

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனம், தூத்துக்குடியை சேர்ந்த திரு. சிவ நாடார் அவர்களால் கடந்த 1976ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய பன்னாட்டு நிறுவனமாக விளங்கும் எச்.சி.எல். தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. 46 நாடுகளில் தனது அலுவலகங்களையும், சுமார் 1.6 லட்சம் பணியாளர்களையும் கொண்டு நிறுவனம் தனது தொழிலை புரிந்து வருகிறது.

பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.59 லட்சம் கோடி. நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 86,194 கோடி ரூபாய். நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. நிறுவனத்தின் முதல் நூறு மில்லியன் டாலர் வருவாய், வெறும் 15 வாடிக்கையாளர்களின் மூலம் பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.

வருவாய் ஈட்டலில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் வணிக சேவை மூலம் 72 சதவீதமும், பொறியியல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் 17 சதவீதமும், தயாரிப்புகள் மற்றும் தளங்களின்(Production & Platforms) வாயிலாக  11 சதவீதமும் இருந்துள்ளது. நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் அமெரிக்க சந்தையிலிருந்து தான் பெறப்படுகிறது.

அமெரிக்காவில் 58 சதவீதம், ஐரோப்பிய பகுதியில் 27 சதவீதம், உள்நாட்டில் 3 சதவீதமும் மற்றும் பிற நாடுகளின் மூலம் 12 சதவீத பங்களிப்பும் வருவாயாக உள்ளது. 2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில்(Quarterly results) நிறுவனத்தின் வருவாய் 19,641 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.15,092 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 244 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,102 கோடி. இதனை கடந்த 2019-20ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 65 சதவீத குறைவாகும். வரி செலுத்துதலில் சுமார் 67 சதவீதம் செலவிட்டதன் காரணமாக மார்ச் 2021 காலாண்டின் நிகர லாபம் குறைந்துள்ளது.

2020-21ம் நிதியாண்டில் நிறுவனம் 10 பில்லியன் டாலர் வருவாயை கடந்த நிலையில், பங்குதாரர்களுக்கு 16 ரூபாயை (பங்கு ஒன்றுக்கு) ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது எச்.சி.எல். நிறுவனம்.

கடந்த 10 வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 20 சதவீதமும், லாபம் 24 சதவீதமுமாக உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Balance sheet reserves) மார்ச் 2021 முடிவின் படி 59,370 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 32 மடங்காகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com