Category Archives: Investopedia

உங்கள் வங்கி திவாலானால், உங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை ?

உங்கள் வங்கி திவாலானால், உங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை ?

How much amount you can get, if your Bank goes Bankrupt or Default ?

வங்கிகளின் நிதி நிலைமை மோசமடைந்து வருவதும், அதனை சரி செய்ய பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மூலம் எண்ணிக்கை குறைந்து வருவதும் சமீபத்திய செய்திகளாக உள்ளன. கடந்த வாரம் பி.எம்.சி. வங்கி(PMC Bank) சார்ந்த செய்திகள் அதன் வாடிக்கையாளர்களை கலக்கமடைய செய்தது.

நம் நாட்டில் உள்ள தனியார் வங்கிகளின் மேல் நமக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதே வேளையில் பொதுத்துறை வங்கிகள் மீது நமது நம்பிக்கை தளர்வதில்லை. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, அது போன்ற திவால் நிலையை நாம் கடந்த பல வருடங்களாக கண்டதில்லை. இருப்பினும், நாம் கணக்கு வைத்திருக்கும் ஒரு வங்கி திவால் நிலைக்கு சென்றால், நம்முடைய பணம் அல்லது சேமிப்பு நமக்கு முழுவதும் கிடைக்குமா என்பதே கேள்வி.

 //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பாரத ரிசர்வ் வங்கி(RBI) அறிவுறுத்தலின் படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கியும் அதன் வாடிக்கையாளர்கள் சார்பில், வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவனத்தில்(DICGC) காப்பீடு செய்ய வேண்டியது அவசியம். டி.ஐ.சி.ஜி.சி.(Deposit Insurance & Credit Guarantee Corporation) காப்பீட்டின் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு, வைப்பு மற்றும் தொடர் சேமிப்பு கணக்கு ஆகியவை அடங்கும்.

இவற்றில் வெளிநாட்டு அரசாங்கங்களின் வைப்பு தொகை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வைப்பு நிதி, நில மேம்பாட்டு வங்கிகள், வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட வைப்பு தொகை மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் நிறுவனத்தால் விலக்கு அளிக்கப்பட்ட தொகை ஆகியவை காப்பீட்டு தொகைக்கு எடுத்து கொள்ளப்படும்.

ஒரு வங்கியில் உள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரின் கணக்கிற்கும்  அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை வங்கிகளால் காப்பீடு செய்யப்படும். இவற்றில் ஒருவருடைய அசல் தொகை மற்றும் வட்டி பணம் அனைத்தும் சேர்த்து தான் ரூ. 1 லட்சம் வரம்பு தொகை நிர்ணயிக்கப்படும்.

உதாரணமாக உங்களுடைய வங்கி கணக்கில் அசல் தொகை 95,000 ரூபாயும், அதற்கான வட்டி தொகை ரூ. 8000 என இருக்கும் நிலையில், வங்கி திவால் நிலைக்கு சென்றால், காப்பீடு உரிமையின் படி உங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ. 1 லட்சம் மட்டுமே. அவ்வாறான சமயங்களில் நீங்கள் உங்கள் முழுத்தொகையை வட்டியுடன் கோர முடியாது.

உங்களுக்கு ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு(Current Account), வைப்பு நிதி கணக்கு(Fixed Deposit) மற்றும் தொடர் சேமிப்பு(RD) கணக்கு ஆகியவை இருந்தாலும், அனைத்து கணக்குகளின் கூட்டுத்தொகை ரூ. 1 லட்சத்தை தாண்டினால், உங்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகை என்னவோ, ஒரு லட்ச ரூபாய் தான். வங்கி திவால் நிலைக்கு சென்றால் அல்லது மூடப்பட்டால், நீங்கள் உங்களது முழுத்தொகையையும் பெற முடியாது. இது தான் வங்கிகளின் சட்டம்.

வங்கிக்கணக்குக்கான காப்பீட்டு தொகை, நீங்கள் வங்கியின் பல கிளைகளில் கணக்கு வைத்திருந்தாலும், அனைத்து கிளை கணக்குகளையும் சேர்த்து, ரூ. 1 லட்சம் என்ற காப்பீடு தொகை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதே வேளையில், வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நிலையில், ஒவ்வொரு வங்கிக்கும் ரூ. 1 லட்சம் காப்பீடு தொகை பதிவு செய்யப்படும்.

ஆக, நீங்கள் ஒரே வங்கியின் கீழ் பல கிளைகளில் டெபாசிட் செய்திருந்தால், காப்பீடு தொகை அதிகபட்சம் ரூ. 1 லட்சம் மட்டுமே. பல வங்கிகளில் கணக்கு தொடங்கி டெபாசிட் செய்திருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு வங்கிக்கும் ரூ. 1 லட்சம் காப்பீடு தொகை கோரப்படும்.

நீங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை ஏதுமிருந்தாலும், வங்கி திவால் நிலைக்கு செல்லும் போது அவை காப்பீட்டு தொகையில் கழித்து கொள்ளப்படும். வங்கி வாடிக்கையாளர்களுக்கான காப்பீடு தொகையை அந்தந்த வங்கியே செலுத்த வேண்டும். பொதுவாக அனைத்து வங்கிகளும் காப்பீட்டு வரம்புக்குள் இருந்தாலும், சில தனியார் கூட்டுறவு வங்கிகள் காப்பீடு செய்வதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ரூ.1 லட்சம் காப்பீடு என்பது கடந்த 1993ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமாகும். அதற்கு முன்பு காப்பீடு தொகை ரூ. 30,000 /- ஆக இருந்தது. வங்கி வாடிக்கையாளர்களுக்கான காப்பீட்டு தொகை வரம்பில் கடந்த 26 வருடங்களாக எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நமது வங்கிகளின் காப்பீடு தொகை மிகக்குறைவே.

இருப்பினும், நமது பொதுத்துறை வங்கிகளின் மீதான நம்பிக்கையும், அதனை சார்ந்த சேமிப்பும் தான் அவற்றை பாதுகாக்கிறது. இன்று டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என சொல்லப்பட்டாலும், இணையவழி திருட்டு நடைபெற தான் செய்கிறது. இதனை வங்கிகள் முழுமையாக தடுத்து வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு பாதுகாப்பு தருகிறதா என்பது சந்தேகமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்த 3 விஷயங்கள் இல்லையென்றால் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்காதீர்கள் !

இந்த 3 விஷயங்கள் இல்லையென்றால் பங்குச்சந்தையில் பங்குகளை வாங்காதீர்கள் !

Don’t buy a Stock or Share, before Considering these 3 Factors

பங்குகளில் முதலீடு செய்வது சிலருக்கு ஆரோக்கியமான விஷயமாக இருக்கும். சிலருக்கோ அது கவலை கொள்ளும் நிகழ்வாக இருக்கலாம். எப்படியிருந்தாலும், பங்குகளில் முதலீடு செய்வது என்பது நமது குடும்பத்திற்கான பொருளாதார வளத்தை சேர்ப்பதாகும்.

சிறு முதலீட்டாளர்களால் ஒரு நிறுவனத்தை நடத்த முடியாமல் இருக்கலாம். பட்டியலிடப்பட்ட நிறுவனத்தினை(Listed Companies) நிர்வகிக்கும் பலம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நிறுவனத்தின் சிறு பங்குகளும் நீண்ட காலத்தில் வளம் சேர்க்கும்.

வேகமாக வளர்ச்சியடைவதை விட, நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து நீண்ட காலத்தில் கூட்டு வட்டியின் பலனை பெறுவதே சிறு முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சமாக இருக்கும். எனவே நாம் பெரிய விஷயத்தை செய்வதை விட்டு விட்டு, நமக்கு தெரிந்த மற்றும் நம்மால்  கண்டறிய முடியும் காரணிகளை கொண்டு முதலீட்டினை மட்டும் மேற்கொண்டால் போதும். நிறுவன வளர்ச்சியை அந்த நிறுவனமே பார்த்து கொள்ளட்டும்.

நல்ல நிறுவன பங்குகளை கண்டறிய ஏராளமான அடிப்படை காரணிகள் இருப்பினும், நாம் இங்கே சொல்ல வருகிற மூன்று அடிப்படை காரணிகள் எந்தவொரு தொழிலுக்கும் பொருந்தும். ஆகையால் முதலீட்டாளர்கள் இதனை மட்டும் கருத்தில் கொள்வது அவசியம். மற்ற காரணிகள் எல்லாம், பின்பு தான் செயல்பட கூடும்.

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய 3 முக்கிய அம்சங்கள்:

  • Promoters (நிறுவனர்கள்)
  • Management & Corporate Governance (நிர்வாகம்)
  • Financial Statements (நிதி அறிக்கைகள்)

ஒரு நிறுவனத்தின் நிறுவனர் அல்லது நிறுவனர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர்களுடைய நிறுவனத்தின் மீதான அக்கறையே ஒரு முதலீட்டாளருக்கு  தேவைப்படுகிறது. நிறுவனர்கள் தங்களது நிறுவனத்தை நியாயமாக நடத்துவதும், ஊழியர்கள் மற்றும் பங்குதார்களின்(Employees & Shareholders) அடிப்படை உரிமைகளை பேணிக்காப்பது தான் அவர்களது முதல் கடமை.

நிறுவனர்கள் தங்களது பங்குகளை கொண்டு என்ன செய்கின்றனர் என்பது நாம் பார்க்க வேண்டிய விஷயம். அதே போல, பொதுவாக நிறுவனர்களின் பங்குகள் மீதான பங்களிப்பு அதிகமாக இருக்கும் போது, அது அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை குறிக்கும்.

நிறுவனத்தின் நிர்வாகம் சரியாக கையாளப்படுகிறது என்பது இரண்டாவது முக்கிய விஷயம். நிறுவன ஊழியர்களின் திறன் மற்றும் அவர்களுக்கு நிறுவனம் மூலம் கிடைக்கும் மதிப்பு போன்றவை முதலீட்டாளர்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது. நிறுவனத்தை ஊக்குவிக்க கூடியவர்கள், அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் தான். அதே போல அதன் பொருட்களும், வாடிக்கையாளர் நலனும் பாதுகாக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஊழியர்கள்  மற்றும் பங்குதாரர்கள் நலனில் நிறுவனம் அக்கறைப்படுகிறதா என்பது அவசியமாகும். இவர்களை அலட்சியப்படுத்தும் நிலையில், அவை நிறுவனத்தின் வளர்ச்சியிலும், பங்குகளின் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்.நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக, முதலீட்டாளர்களை ஏமாற்றும் நோக்கில் செயல்படுகிறதா என்பதனை அறிவது அவசியம்.

மூன்றாவதாக நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை(Financial Statements) எளிமையான முறையில் அலசுவது அவசியமாகும். நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி லாபத்தில் எவ்வாறு காண்பிக்கப்பட்டுள்ளது, லாபம் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு துணைபுரிகிறதா என்பதை கவனிக்க வேண்டும். நிறுவனம் காலாண்டு முடிவுகளில் சொன்ன லாபம் உண்மையில் லாபம் தானா, அவை முதலீட்டாளர்களுக்கு பயன் தரக்கூடியதாக உள்ளதா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

பொதுவாக நிறுவனத்தின் லாபம் பங்குகளின் விலையிலும், முதலீட்டாளர்கள் பெறக்கூடிய போனஸ்(Bonus), Buyback மற்றும் டிவிடெண்ட்(Dividend) தொகையில் தெரிய வரும். எனவே நாம் சொன்ன மூன்று அடிப்படை விஷயங்களை எந்த சமரசமும் இல்லாமல் கண்டறிந்து பங்குகளை தேர்வு செய்ய வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான சேமிப்பை உருவாக்குவது எப்படி ?

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான சேமிப்பை உருவாக்குவது எப்படி ?

How to Create Birthday Party Fund ?

குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாடுவது ஒவ்வொரு பெற்றோருக்கும் தனிப்பட்ட மகிழ்ச்சியாக இருக்கும். இன்றளவில் பிறந்த நாள் கொண்டாட்டமும், குடும்பத்தின் ஒரு விழாவாக அமைந்து விட்டது என்றால் மறுப்பதற்கில்லை. அதே வேளையில் கொண்டாடுகிறேன் என்ற பேரில் அதிக செலவை கொண்டிருந்தாலும், பின்னாளில் அது நமது குடும்ப பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நம்மில் சில பெற்றோர்களுக்கு வேறு எதையும் விட, தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் மிக முக்கியமானதாக பார்க்க முடிகிறது. பிறந்த நாள் விழாவிற்கான பட்ஜெட்டை நாம் முன்னரே திட்டமிட்டு செய்வதனால், நமக்கு நிதி சார்ந்த திருப்தியும் ஏற்படும்.

வாருங்கள், நமது குழந்தைகளுக்கான பிறந்த நாள் நிதியை(Birthday Party Fund) உருவாக்குவது எப்படி என பார்ப்போம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த நிதியை உருவாக்க சரியாக ஒரு வருடத்திற்கு முன்பே திட்டமிடுவது இலக்கை வெற்றியடைய செய்யும். உங்களது மழலையின் முதல் பிறந்த நாள் எனில், அவர்களின் முதல் மாதத்திலே திட்டமிடுவது நலம். மற்ற வயது குழந்தைகளுக்கு, அவர்களின் முன் வருட பிறந்த நாள் விழா அன்றே முடிவு செய்வது சிறந்தது.

உதாரணத்திற்கு, சங்கத்தமிழ் என்ற மழலைக்கு இரண்டாவது பிறந்த நாள் விழாவை கொண்டாட அவர்களது பெற்றோருக்கு திட்டமிடலை கொடுப்போம். சங்கத்தமிழுக்கு இப்போது தான் முதல் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்து ஒரு வாரமாகிறது.

2வது பிறந்த நாள் பட்ஜெட் :   ரூ. 15,000 /-

காலம்:  ஒரு வருடம் 

நமக்கு இன்னும் ஒரு வருட காலம் இருப்பதால், மாதம் ரூ. 1200/- வீதம் அஞ்சலக சேமிப்பு(Postal Savings) அல்லது வங்கி சேமிப்பில் அடுத்த ஒரு வருடத்திற்கு சேமித்து வாருங்கள். ஒரு வருட முதிர்வில் 7 சதவீத வட்டி விகிதம் என கொண்டால், கிடைக்கக்கூடிய முதிர்வு தொகை ரூ. 15,000/- ஆகும்.

இவ்வாறாக நமது சேமிப்பை திட்டமிட்டு பிறந்த நாள் விழாவிற்கான நிதியை தயார் செய்யலாம். இது போன்று தங்களுக்கு தேவையான நிதி இலக்கை நிர்ணயித்த பின்னர், மாதாமாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என கணக்கிட்டு கொள்ளுங்கள். பின்பு, திடமாக சேமித்து வாருங்கள், உங்களுக்கான நிதி இலக்கு தொகை எந்த சிரமமும் இல்லாமல் கிடைக்கப்பெறும். பிறந்த நாள் மாதத்தில் மாத பட்ஜெட்டுக்கும் சிக்கல் வராது.

இந்த பிறந்த நாள் விழாவிற்கான நிதியை நீங்கள் மற்றொரு முறை மூலமும் திட்டமிடலாம். உங்கள் குழந்தையிடம் தினமும் 5 ரூபாயை கொடுத்து ஒரு உண்டியலில் போட்டு வர சொன்னால், மாத முடிவில் கிடைப்பது ரூ. 150/- இதனை ஒரு வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கில் முதலீடு செய்து வந்தால், ஒரு வருட முடிவில் 7 சதவீத வட்டியில், முதிர்வு தொகையாக 1870 ரூபாய் கிடைக்கும்.

மேலே சொன்ன ரூ. 15,000/- திட்டமிடலுக்கு தினமும் உங்கள் குழந்தையிடம் 40 ரூபாயை கொடுத்து உண்டியலில் போட்டு வர சொன்னால், மாத முடிவில் ரூ. 1200/- கிடைக்கப்பெறும். பொதுவாக குறுகிய கால ( 6 மாதம் – 3 வருடம்) திட்டமிடலுக்கு வங்கி (RD), அஞ்சலக சேமிப்பு அல்லது பரஸ்பர நிதி வழங்கும் லிக்விட் பண்டுகளில்(Liquid Funds) முதலீடு செய்து வாருங்கள். குறுகிய கால இலக்கிற்கு ரிஸ்க் தன்மை அதிகம் கொண்ட திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.

நாம் சொன்ன நிதி திட்டமிடல் பிறந்த நாள் விழாவிற்கு மட்டுமல்ல. இதனை போல பண்டிகை காலங்கள், பரிசளிப்பது, சுற்றுலா போன்றவற்றிற்கும் திட்டமிடலாம். உங்கள் குழந்தை நன்றாக படித்தால், அவர்களுக்கு ஒரு பரிசு கொடுப்பது என்பது அவர்களையும் ஊக்குவிக்கும், உங்களையும் நிதி சார்ந்த விஷயத்தில் திட்டமிடலை உருவாக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தையில் நீண்ட காலத்திற்கு பணம் சம்பாதிக்க வேண்டுமா – இதோ ஐந்து வாய்ப்புகள்

பங்குச்சந்தையில் நீண்ட காலத்திற்கு பணம் சம்பாதிக்க வேண்டுமா – இதோ ஐந்து வாய்ப்புகள்

The Profit of a Company can be distributed to Investors in Five ways – Shareholders

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்குவதற்கு முன், அந்த நிறுவனம் சார்ந்த அடிப்படை பகுப்பாய்வுகளை(Fundamental Analysis) ஆராய்வது அவசியம். நிறுவனத்தின் பங்கு என்பது நமக்கான தொழில் வாய்ப்பாகும். அவற்றில் முதலீடு செய்யும் முன், நிறுவனத்தின் தொழில் அனுபவம் மற்றும் நிதி அறிக்கையை முழுமையாக கண்டறிந்து பின்பு முதலீட்டு முடிவை எடுக்கலாம்.

நமது நண்பரோ அல்லது வீட்டிற்கு அருகில் உள்ள நபரோ நம்மிடம் கடனாக ஒரு தொகையை கேட்டால், உடனடியாக கொடுத்து விடுவோமா, என்ன ? சற்று யோசிக்க தான் செய்வோம். சிறு வயது முதல் அவரை பற்றி நன்கு தெரியும், நாணயமானவர் என்றால் கடன் கொடுக்க தயங்க மாட்டோம். பண விஷயத்தில் அவர் சரியில்லை என்று தோன்றினால், உதவி செய்ய யோசிப்போம். ஆனால், பங்குச்சந்தையில் மட்டும் நமது யோசனை தவறாகி விடுகிறது.

காரணம், நாம் நிறுவனத்தின் நிலைமையை புரிந்து கொள்ளாமல், பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருப்பதனால் தான். எந்தவொரு முதலீட்டை மேற்கொள்ளும் முன், அந்த முதலீட்டு சாதனம் நமக்கு புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறதா, வருவாய் ஈட்ட நாம் எவ்வளவு காலம் காத்திருக்கலாம், அவற்றில் உள்ள ரிஸ்க் தன்மை(Risk Management) போன்றவற்றை அறிந்த பின்னரே, முதலீட்டை துவக்க வேண்டும்.

ஆம், பங்குச்சந்தை மற்ற எல்லா முதலீட்டு சாதனங்களையும் விட அதிக வருவாயை கொடுக்க கூடியது. நீண்ட காலத்தில் பணவீக்கத்தை(Inflation) தாண்டிய வருவாய் வாய்ப்பு எப்போதும் உள்ளது. அதே வேளையில், பங்குச்சந்தையில் வருவாய் ஈட்டும் முறையை புரிந்து கொள்வது அவசியம்.

பங்குச்சந்தையில் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்கினை நாம் வாங்கும் போது, வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பு பல வகைகளில் உள்ளது. தின வர்த்தகம் மற்றும் குறுகிய கால வர்த்தகம் என்பதை ஒரு முதலீட்டாக கருத முடியாது. அவையும் பணம் பண்ணும் வாய்ப்பு தான். முதலீடு என்பது நீண்ட காலத்திற்கு உரியது. உதாரணத்திற்கு ஐந்து வருடங்களுக்கு மேல் எனலாம். அதனால் தான் பங்குகளுக்கு நீண்ட கால மூலதன ஆதாயம்(Long term Capital Gains) என்பது ஒரு வருடத்திற்கு மேலாக வைத்திருக்கும் முதலீட்டிற்கு பொருந்தும்.

நாம் வாங்கிய பங்குகளை சில வருடங்கள் வைத்திருக்கும் நிலையில், அவை ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டது. பங்குச்சந்தையில் ஏற்ற – இறக்கம் இருந்தால் மட்டுமே ஒருவர் பணம் பண்ண முடியும் – இது ஒரு வியாபாரம் என்பதை மறவாதீர்கள். உதாரணமாக நாம் இன்று ரூ.100 மதிப்பை கொண்ட ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்கி வைத்திருக்கும் போது, ஒரு வருடத்திற்கு பிறகு அதன் மதிப்பு ரூ. 150 எனும் போது, நமக்கு லாபம் தானே. அதே பங்கின் விலை ஒரு வருடத்திற்கு பிறகு, 50 ரூபாய் எனில், நமக்கு நஷ்டம் தான். முதலீட்டை பொறுத்தவரை லாப, நஷ்டம் என்பது நாம் அந்த பங்கினை விற்றால் ஒழிய, ஏற்பட வாய்ப்பில்லை. நீண்ட காலம் வைத்திருக்கும் நிலையில், அதன் ஏற்ற – இறக்கங்கள் மாறுபட்டு, நல்ல வருவாயை கொண்டிருக்கும். 

Share Market – Free Course – Fundamental Analysis Registration

ஈவு தொகை(Dividend):

ஒரு நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தால் மட்டுமே, முதலீட்டாளர்களுக்கு லாபம் என்பது இல்லை. நிறுவனம் ஈட்டும் லாபத்தின் மூலமும் முதலீட்டாளருக்கு இதர வருவாய் உண்டு. அது தான் ஈவு தொகை எனப்படும் டிவிடெண்ட்(Dividend). இது வங்கியில் அளிக்கப்படும் வட்டி தொகை போன்று. ஒரு நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் லாபமீட்டும் போது, அந்த லாப தொகையை கொண்டு தனது தொழிலை மேம்படுத்த பயன்படுத்தலாம். இதன் மூலம் பங்கு விலை அதிகரிக்கலாம். இல்லையெனில், அந்த லாப தொகையை முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதே சிறந்தது. இவை தான் ஈவு தொகையாக வெளிப்படுகிறது.

போனஸ் பங்குகள் (Bonus Shares):

நிறுவனம் தனது லாபத்தை தொழில் வளர்ச்சிக்கு முதலீடு செய்யவில்லை. ஈவு தொகையையும் அளிக்க தயாராக இல்லை எனும் போது, அவை போனஸ் பங்குகளாக மாறலாம். அதாவது பங்குகள் வைத்திருக்கும் முதலீட்டாளருக்கு லாப தொகையை போனஸ் பங்குகளாக பகிர்ந்தளிப்பது. இவை சந்தை மதிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தாது. அதே நேரத்தில், பங்கின் விலை மாறுபடும்.

பங்குகளை திரும்ப பெறுதல்(Buyback of Shares):

பங்குகளை திரும்ப பெறுவது என்பது பணமீட்டுவதற்கான மற்றொரு வாய்ப்பு. நிறுவனம் தனது லாப தொகையை கொண்டு, முதலீட்டாளர்களிடம் உள்ள பங்குகளை, நிறுவனமே திரும்ப வாங்கி கொள்வது. முதலீட்டாளர்களுக்கு வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு இங்கு ஏற்படுகிறது. இதன் மூலம் நிறுவனர்களின் பங்களிப்பு அதிகரிக்கும்.

உரிமை பங்குகள்(Rights Issue):

ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளருக்கு, முன்னுரிமை கொடுக்கும் பட்சத்தில் சலுகை விலையில்(Discount rate) பங்குகள் விற்கப்படும். இவை தான் உரிமை பங்குகள் எனப்படும். அதாவது சந்தையில் ரூ. 100 என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை, ஏற்கனவே முதலீட்டாளராக உள்ள உங்களுக்கு ரூ. 80 என்ற விலையில் வாங்கி கொள்ளுங்கள் என்று சலுகை அறிவித்தால் அவை உரிமை பங்குகளாகும்.

மேலே சொன்னவாறாக ஐந்து முறைகளில் ஒரு முதலீட்டாளராக பங்குகளில் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. சொல்லப்பட்ட அனைத்தையும் ஒரு நிறுவனம் தர வேண்டிய அவசியமில்லை. ஆனால், நல்ல நிறுவன பங்குகள் இதற்கான வாய்ப்பை எப்போதும் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட பங்குகளை கண்டறிவது நமது கடமையாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடனில்லா வாழ்வு பேரின்பமே…

கடனில்லா வாழ்வு பேரின்பமே

 Debt Free Life is a Bliss

 

கடன் அன்பை முறிக்கும்; இல்லையில்லை, கடன் அனைத்தையும் முறிக்கும். கைபேசி வாங்குவதற்கான EMI முதல் ‘Entrepreneurship’ என்னும் தொழில்முனைவு வரை இன்று கடன் பெறுவது என்பது சுலபமானதாக உள்ளது. தேவையிருந்தால்  கடன் வாங்கலாம். ஆனால் கடன் வாங்குவதை மட்டுமே நமது தேவையாக வைத்திருத்தல் நல்லதல்ல. ஏழைக்கும், நடுத்தர மக்களுக்கும் தான் இந்த கடன் ஒரு பிரச்சனை என்றால், பணக்காரர்கள் என்று சொல்பவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் கடன் ஒரு தொல்லையே.

 

இன்று பலருக்கு மரணக்குழிக்கான பாதையை காட்டுவது இந்த கடன்(Debt) தான். நம்மில் பலர் கடன் வாங்கியாவது மற்றவர்களிடம் ஆடம்பரத்தை வெளிப்படுத்த வேண்டும் என முனைகின்றனர். நான்கு சக்கர வாகனம் தேவைப்படாவிட்டாலும், தவணை முறையில் வாங்கி வைத்து விட்டு, சில காலத்திற்கு பின்பு அதனை சுமக்க முடியாமல் விற்பது அல்லது எக்ஸ்சேஞ் மேளாவிற்கு(Exchange Mela) செல்வது நடைபெற தான் செய்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இவ்வுலகில் மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய விஷயம் இன்று, கடன் பெறுவது தான். கடினமான வாழ்க்கை எனில், அது எளிமையாக(Frugality) வாழ்வது தான். கடனில்லாமல் நம்மால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியாது. ஏதேனும் ஒரு காலகட்டத்தில் கடனை வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பரவாயில்லை, கடனை அடைக்க பழகலாம். ஆனால் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன், மேலும் ஒரு கடன் என வாங்க முயலாதீர்கள். இங்கு தான் பெரும்பாலானவர்கள் கடன் வலையில் விழுவதற்கான வாய்ப்பு அதிகம். கந்து வட்டி கதையும் இங்கு தான்.

 

கடனில்லா வாழ்வின் சுகங்கள்:

 

  • நிதி சார்ந்த விஷயத்தில், உங்களிடம் சுய கட்டுப்பாடு(Self Control) இருக்கும். எந்தவொரு பொருளையும் யோசித்து தான் வாங்குவீர்கள்.

 

  • நீங்கள் விரும்பிய தொழிலை, பிடித்த வேலையையோ செய்யலாம்.

 

  • நிதி சுதந்திரம்(Financial Freedom) பெறுவதற்கான முதல் படி கடனில்லாமல் இருப்பது அல்லது கடனை குறைப்பது தான்.

 

  • வரவுக்குள் உங்கள் செலவுகள் உள்ளதை இங்கே உறுதி செய்து கொள்ளலாம்.

 

  • அமைதியான குடும்பம், மன அழுத்தமில்லா வாழ்க்கை(Stress free Life).

 

  • யாரிடமும் நீங்கள் பயமின்றி (பொருளாதார ரீதியாக) பேசலாம்.

 

  • உண்மையில் நீங்கள் தான் பணக்காரர் (வரவுக்குள் செலவு). உங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் ஏராளம்.

 

  • தேவை மற்றும் விருப்பத்திற்கான(Need & Wants) தேர்வை பிரித்துணர முடியும்.

 

  • எப்படிப்பட்ட நிதிச்சிக்கலையும் உங்களால் சமாளிக்க முடியும்.

 

  • குறைவில்லா நிதி வாழ்க்கையை பெற முடியும்.

 

கடனில்லாமல் வாழ்வதற்கான எளிய உத்திகள்

 

  • உங்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்குங்கள்.

 

  • மற்றவர்களிடம் உள்ளது என பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள்.

 

  • கடன் வாங்கும் முன், அது நமக்கு தேவையா என பல முறை யோசியுங்கள். கடன் வாங்க முயலும் போது, குறைந்த வட்டிக்கான வாய்ப்புகளை கண்டறியுங்கள்.

 

  • நிதி சார்ந்த விஷயங்களில் பேரம் பேச தயங்காதீர்கள். அதற்காக இலவசமாக எதையும் பெற வேண்டாம்.

 

  • எப்போதும் பட்ஜெட் திட்டமிடலை(Budget Planning) செயலாற்றுங்கள்.

 

  • கடன் – முதலீடு என வரும் போது, கடனை அடைப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள். நீங்கள் கடனை அடைக்கும் நிலையில், உங்களுக்கான முதலீட்டு வாய்ப்புகள் அமையும்.

 

  • கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வழிகளை பெறுங்கள்.

 

  • எந்தவொரு பொருளை வாங்கும் முன், அதற்கான சேமிப்பை அல்லது முதலீட்டை முன்னரே துவக்கி, முதிர்வு தொகையை கொண்டு உங்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்குங்கள்.

 

  • EMI vs SIP – இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள்.

 

  • வரி சலுகையை திறமையாக பயன்படுத்துங்கள். டேர்ம் பாலிசி(Term Policy) மற்றும் உடல்நல காப்பீட்டுக்கு(Health Insurance) முக்கியத்துவம் கொடுங்கள்.
  • தாமதமான மனநிறைவை கொள்ளுதல் (Delayed Gratification) – இது பணக்காரர் ஆவதற்கான சூத்திரம். நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் போது, கூட்டு வட்டியின் பலனை அனுபவிக்கலாம். இது பிற்காலத்தில் கடன் வாங்குவதை தவிர்க்க உதவும்.

 

 

நீங்கள் இப்போதே பணக்காரரா, ஏழையா என்பதனை அடையாளம் காண:

 

Rich Worth Value (பணக்கார மதிப்பு) =   மொத்த சொத்துக்கள் / மொத்த கடன்கள்

 

உங்களின் பணக்கார மதிப்பு ஒன்றுக்கு(1) மேற்பட்டு இருந்தால் சந்தோசப்பட்டு கொள்ளுங்கள். இன்னும் உயர்த்த தயாராகுங்கள்.

 

சமமாக ஒன்று(1) அல்லது ஒன்றுக்கு குறைவாக இருந்தால், நிதி விஷயத்தில் கவனம் தேவை. இதனை திருத்தி கொள்ளுங்கள் (கடனை குறையுங்கள்).

 

நண்பர் ஒருவர், ‘ எனக்கு இணைய விளையாட்டில் ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் சந்தோஷப்படுவேன் ‘ என்று சொன்னார். ‘ நீங்கள் அந்த ஒரு கோடி ரூபாயை வைத்து என்ன செய்வீர்கள் ‘ என நான் கேட்டேன். அவர் பதிலளிக்கையில், ‘ நான் அதனை எனக்கு பிடித்த விதத்தில் செலவு செய்வேன் ‘ என்கிறார். இங்கு தான் நிதித்திட்டமிடல் முக்கியத்துவம் பெறுகிறது. உங்களிடம் நிறைய பணம் இருந்தால் நன்று. மாறாக, உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் மட்டுமே இருக்கையில், அதனை சாமர்த்தியமாக முதலீடு செய்து, பின்பு அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் செலவு செய்ய தொடங்கினால் – கடனில்லா வாழ்வு பேரின்பமே !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

கோல்டு இ.டி.எப்.(Gold ETF) மற்றும் கோல்டு பண்டு – முதலீடு செய்யலாமா ?

கோல்டு இ.டி.எப்.(Gold ETF) மற்றும் கோல்டு பண்டு – முதலீடு செய்யலாமா ? 

Should you Invest in Gold ETF & Gold Funds ?

 

நாம் கடந்த சில காலங்களாக வர்த்தக மதுரை தளத்தில் சில காரணிகளை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு வருகிறோம். அவை அமெரிக்க – சீன வர்த்தக போர், கச்சா எண்ணெய் விலை, எல்லை பதற்றம் மற்றும் வாகனத்துறை வளர்ச்சி குறைவு. இதன் வெளிப்பாடு உலக பொருளாதார மந்த நிலையாக ஏற்பட்டுள்ளது.

 

வாகனத்துறை வளர்ச்சி பொதுவாக சுழற்சி முறையில் செயல்பட கூடியவை. சில வருடங்கள் விரைவாக வளர்ச்சியை நோக்கி செல்வதும், மற்றொரு காலங்களில் மந்தமடைவதும் இயல்பு. ஆனால் தற்போது மற்ற சிக்கல்களும் சேர்ந்துள்ளதால், நடப்பில் காணப்படும் பொருளாதார மந்த நிலை எப்போது சரி செய்யப்படலாம் என்பது சொல்லப்படாதது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நடப்பு காலத்தில் பங்குச்சந்தை அடுத்தடுத்த சரிவை நோக்கி காத்திருக்கின்றன. இது தற்காலிகமானது தான் எனினும் முதலீட்டு நோக்கில் காணும் போது, மற்ற முதலீட்டு சாதனங்களின் ஏற்றத்தை நாம் பரவலாக(Diversification & Asset Allocation) ஏற்படுத்தலாம். அவ்வாறு காணும் போது பங்குச்சந்தை வீழ்ச்சி சமயத்தில் தங்கத்தின் விலை ஏறுவதும், வங்கிகள் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின்(Bond) விலை அதிகரிப்பதும் இயல்பு.

 

நமது வாசகர்கள் சிலர் தற்போது தங்கத்தை அடிப்படையாக கொண்ட கோல்டு இ.டி.எப். அல்லது கோல்டு பண்டுகளில் முதலீடு செய்யலாமா என கேட்டிருந்தனர். அதே போல இரண்டுக்குமான வித்தியாசம் என்ன என்பது பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தனர். தங்கத்தை ஆபரணங்களாக வாங்க விரும்பாதவர்கள் மற்றும் இதனை ஒரு முதலீடாக கருதுபவர்கள் கோல்டு இ.டி.எப்., கோல்டு பண்டு அல்லது அரசு வழங்கும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இது போன்ற முதலீடுகளில் ஆபரணங்களை போல திருட்டு பயம் என்பது இல்லை. முதலில் கோல்டு இ.டி.எப். என்பதனை பற்றி பார்ப்போம்.

 

Gold ETF என்பது பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Fund Scheme) ஒரு அங்கமாகும். தங்கத்தில் மட்டும் முதலீடு செய்யப்படும் இந்த பரஸ்பர நிதி திட்டம், பங்குச்சந்தையில் பட்டியிலடப்பட்டு(Exchange Traded fund) வர்த்தகமாகும். கோல்டு இ.டி.எப். பொதுவாக தங்கத்தின் விலையை பிரதிபலிக்கும். பரஸ்பர நிதி திட்டமாக இருப்பதால், முதலீட்டாளர்களின் முதலீடு யூனிட்களாக வழங்கப்படும். அதாவது ஒரு கிராம் என்பது ஒரு யூனிட்(Unit) என கொள்ளப்படும்.

 

இந்த திட்டத்தில் உள்ள சாதகமான அம்சமே, நாம் இணையதளத்தின் வாயிலாக கோல்டு இ.டி.எப். யூனிட்களை வாங்கலாம் மற்றும் விற்கலாம். இதற்கு டீமேட் கணக்கு(Demat Account) வைத்திருப்பது அவசியம். தங்கத்தின் விலை மதிப்பு ஒவ்வொரு நாள் வர்த்தகத்திலும் பிரதிபலிக்கும். இவற்றில் முதலீடு செய்வதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்:

 

  • ஒரு கிராம் (யூனிட்) முதல் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம் (வர்த்தக அளவை பொறுத்து)

 

  • நாம் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் மற்றும் விற்கலாம் (பொதுவாக வர்த்தகம் நடைபெறும் நேரங்களில்)

 

  • 99.5 சதவீத சுத்தமான தங்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு.

 

  • செய்கூலி மற்றும் சேதார செலவுகள் எதுவுமில்லை. குறைந்த தரகு கட்டணம்(Brokerage).

 

  • பாதுகாப்பான முதலீடு மற்றும் வரி சலுகைகள்(Tax Benefits) உண்டு.

 

  •  யூனிட்களை அடமானம் வைக்கலாம் மற்றும் பின்னாளில் யூனிட்களை தங்கமாக வாங்கி கொள்ளலாம்.

 

கோல்டு இ.டி.எப். திட்டத்தில் எளிதாக முதலீடு செய்யமுடிந்தாலும், பங்குச்சந்தையில் வர்த்தகமாவதால் இதற்கு டீமேட் கணக்கு வைத்திருப்பது அவசியமாகும். இதனை களையவே கோல்டு பண்டுகள் உள்ளன. கோல்டு இ.டி.எப். ஐ போலவே இந்த பண்டுகளும், ஆனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவது இல்லை. இதனால் இங்கும் எளிமையாக முதலீடு செய்யலாம்.

 

கோல்டு இ.டி.எப். திட்டத்திற்கும், கோல்டு பண்டுக்கும் வேறுபாடு பெரிதாக எதுவுமில்லை. இ.டி.எப். திட்டம் பங்குச்சந்தையில் வர்த்தகமாவதால், தரகு கட்டணம் வசூலிக்கப்படும். கோல்டு பண்டுகளில் தரகு கட்டணத்திற்கு பதிலாக நிர்வாக செலவு கட்டணங்கள்(Expenses) வசூலிக்கப்படும். அதே வேளையில் தங்க ஆபரணங்கள் வாங்கும் போது செலுத்தப்படும் செய்கூலி மற்றும் சேதாரத்தை விட மிக குறைவான செலவுகள் தான் இங்கு காணப்படுகிறது.

 

தற்போது பெரும்பாலான பரஸ்பர நிதி நிறுவனங்கள் கோல்டு பண்டு திட்டங்களை(Gold BeEs) அளித்து வருகின்றன. ஒரு கிராம் ஒரு யூனிட்களாக கணக்கிடப்பட்டாலும், சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் 10ல் ஒரு பங்காக யூனிட் அளவை கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு யூனிட் (1 கிராம்) ரூ. 3200/- என்று ஒரு நிறுவனம் கொண்டிருக்கும் போது, மற்றொரு நிறுவனம் ஒரு யூனிட் 320 ரூபாய்க்கு (10ல் ஒரு பங்கு) வழங்கி வருகிறது.

 

நடப்பில் பங்குச்சந்தை சரிவடையும் நேரத்தில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இருப்பினும் தங்கத்தில் மட்டுமே அதிகமாக முதலீடு செய்யாமல், சிறுக சிறுக முதலீட்டை மேற்கொள்ளலாம். தங்கம் கடந்த ஒரு வருடத்தில் 25 சதவீத வருவாயை தந்துள்ளது. நீண்ட காலத்தில் பங்குச்சந்தையை காட்டிலும் குறைந்த வருமானத்தை கொண்டிருந்தாலும், குறைந்த ரிஸ்க் திறன்(Low risk) கொண்ட முதலீடாக கருதப்படுகிறது. கோல்டு திட்டத்தில் மாதாமாதம் சிறிய அளவில் முதலீடு செய்வது சிறந்தது. தங்கத்தில் முதலீடு செய்வதை முதலீட்டு பரவலாக்கலாக(Asset Allocation) அமைக்க வேண்டும்.

 

பங்குச்சந்தையில் 50 சதவீத முதலீடு மேற்கொண்டால், 20-30 சதவீதத்தை தங்கத்திலும், மீதமுள்ளதை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம். இது ஒவ்வொரு வயதினருக்கும் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்க இ.டி.எப். திட்டம் அல்லது கோல்டு பண்டுகளில் முதலீடு செய்யும் அதே வேளையில், தற்போதைய பங்குச்சந்தை சரிவில் நல்ல நிறுவன பங்குகள்(Value based Stocks) விலை குறைந்து காணப்படுவதும் கவனிக்கத்தக்கது.

 

கோல்டு இ.டி.எப். மற்றும் கோல்டு பண்டுகளில் செய்யப்படும் முதலீடு தங்கத்தின் விலை ஏற்ற-இறக்கத்தை அடிப்படையாக கொண்டது. பின்னாளில் இது போன்ற முதலீட்டை தங்கமாக பெற்று கொள்ள பரஸ்பர நிதி நிறுவனங்கள் சேவையை அளிக்கின்றன. இருப்பினும் சில நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க கிராம் அளவை கொண்டிருந்தால் மட்டுமே தங்கமாக மாற்றி வழங்கும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

டி.எஸ்.ஐ.ஜே. நிறுவனத்தின் ஒன்பது முதலீட்டு பொன்விதிகள்

டி.எஸ்.ஐ.ஜே. நிறுவனத்தின் ஒன்பது முதலீட்டு பொன்விதிகள் 

DSIJ’s Nine Golden Rules for Stock Investing

 

புனே நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் தான் டி.எஸ்.ஐ.ஜே (Dalal Street Investment Journal). 1986ம் ஆண்டு நிதி சார்ந்த பத்திரிகையை தொடங்கிய இந்நிறுவனம் இன்று பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளுக்கான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் நேற்று (28-07-2019) மதுரை ஜே.சி. ரெசிடென்ஸி (JC Residency) விடுதியில் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

டி.எஸ்.ஐ.ஜே. நிறுவனத்துடன் சுந்தரம் பரஸ்பர நிதி(Sundaram Mutual Fund) நிறுவனமும் கூட்டமைத்து ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டது. நிகழ்வில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கான பல விஷயங்கள் எடுத்து சொல்லப்பட்டது. பங்குச்சந்தைக்கு புதிதாக வருகை தரும் முதலீட்டாளர்கள் எவ்வாறான முன்னெச்சரிக்கைகளை கையாள வேண்டும் என சொல்லப்பட்டது.

 

மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களில் தற்போது காணப்படும் வாய்ப்புகள் மற்றும் அதனை சார்ந்த பங்கு மதிப்பீட்டு விஷயங்களும் அலசப்பட்டது. தனிநபர் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் தனிப்பட்ட பங்குகளை சார்ந்து இருக்காமல், போர்ட்போலியோ முதலீட்டு முறையை(Portfolio Investment) பின்பற்ற வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட பங்குகளில் ஏற்படும் எதிர்பாராத இழப்பை சரி செய்து கொள்ளலாம்.

 

பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் வருவாய் தொடர்ச்சியாக சரிவை கொண்டிருந்தால், அந்த பங்கினை நீக்கி விட்டு நல்ல நிறுவன பங்கை தேர்ந்தெடுக்க(Restructuring Portfolio) தயக்கம் காட்ட கூடாது. இளம் வயதில் பங்கு முதலீட்டை மேற்கொள்ளும் போது, நீண்ட காலத்தில் மூலதன ஆதாயத்தை பெறுவது மட்டுமில்லாமல் அடுத்த சந்ததியினருக்கு ஒரு முதலீட்டு சொத்தினை வழங்கலாம்.

 

நிகழ்வின் முக்கிய பகுதியாக வெற்றிகரமான பங்கு முதலீட்டிற்கான ஒன்பது பொன்விதிகளும்(Golden Rules) சொல்லப்பட்டது. அவை பின்வருமாறு,

 

  • உங்களால் முடிந்த முதலீட்டு ரிஸ்க்கை மட்டும் பின்பற்றவும்(Risk Profiling)
  • முதலீட்டு காலத்தை முடிவு செய்தல் (Choose Investment Horizon)
  • ஏற்கனவே நீங்கள் கொண்டிருக்கும் பங்கு முதலீட்டை மறு ஆய்வு செய்தல் (Restructuring existing Portfolio)
  • பங்குச்சந்தை இறக்கத்தில் வாய்ப்புகளை கண்டறிதல்
  • ஒரே துறையில்(Sector) 20 சதவீதத்திற்கு மேல் முதலீடு செய்யக்கூடாது
  • ஒரே நிறுவனத்தில் 15 சதவீதத்திற்கு மேல் முதலீட்டை மேற்கொள்ளக்கூடாது (Limit company exposure to 15 %)
  • சரியான நிதி ஆலோசகரை தேர்ந்தெடுத்தல்(Right Stock / Financial Advisor)
  • தினசரி வர்த்தகத்தில் ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது
  • ஒருபோதும் கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம் (Never borrow & Invest).

 

மேற்சொன்ன பொன்விதிகள் பங்கு முதலீட்டில் உள்ளவர்கள் அறிந்திருந்தாலும், இந்த எளிய விதிகளை பின்பற்றும் போது, நமக்கான போர்ட்போலியோ முதலீட்டு சேவை சிறந்ததாக அமையும்.

 

பங்குச்சந்தையில் நல்ல நிறுவன பங்குகளை அடையாளம் காண்பதும், தொழில் வருவாய் இல்லாத நிறுவன பங்குகளை களைவது தான் அவசியம். பங்குகளை எந்த விலையில் விற்கலாம் என்பது முக்கியமல்ல. 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

பங்குதாரர்கள் ஆண்டு பொது கூட்டத்தில் கலந்து கொள்வதின் அவசியம் என்ன ?

பங்குதாரர்கள் ஆண்டு பொது கூட்டத்தில் கலந்து கொள்வதின் அவசியம் என்ன ?

Why is it necessary for Shareholders to attend the Annual General Meeting (AGM) ?

 

பங்குச்சந்தையில் வெறும் பங்குகளை மட்டுமே வாங்கியும், விற்றும் விட்டு போவது நம் வேலையல்ல. பங்குச்சந்தையை ஒரு தொழில் செய்பவரை போல அணுக வேண்டும். நாம் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யும் போது, அதன் வாடிக்கையாளராகவோ அல்லது அந்த நிறுவனத்தின் தொழிலாளியாகவோ இருக்கலாம். ஆனால் இதனை கடந்து பங்குதாரர்(Shareholder) என்ற சொல், நமக்கு மிகுந்த மரியாதையும், முக்கியத்துவமும் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

 

என்னிடம் அந்த நிறுவனத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது, நான் அப்படி என்ன செய்து விட போகிறேன் என நீங்கள் கேட்கலாம். முன்னொரு காலத்தில் இருந்தது போல, இன்று நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) பெரும்பான்மையாக இல்லை. இன்றையளவில் வங்கிகளும், பரஸ்பர நிதிகளும் தான் குறிப்பிடத்தக்க பங்குகளை ஒரு நிறுவனத்தில் வைத்துள்ளது. இதற்கு அடுத்தாற் போல், சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தான்.

 

சமீபத்தில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ்(Infosys), அதன் 38வது ஆண்டு பொது குழு கூட்டத்தை  பெங்களூரு நகரத்தில் நடத்தியது. சுமார் 800 பங்குதாரர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் இயக்குனர் குழு சார்பில் 2018-19ம் நிதியாண்டின் நிதிநிலை அறிக்கை விவாதிக்கப்பட்டது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இன்போசிஸ் நிறுவனத்தின் சார்பில் பல விஷயங்கள் நேர்மறையாக சொல்லப்பட்டாலும், பல பங்குதாரர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். பெரும்பாலான பங்குதாரர்கள் நிறுவனத்திற்கு பரிந்துரைகளையும், குறைகளையும் முன் வைத்தனர். நிறுவனம் சார்பிலும் அதற்கான பதில்கள் தரப்பட்டன. சில கேள்விகளுக்கு, நிறுவனம் அமைதியை மட்டுமே முன் மொழிந்தது.

 

இத்தனைக்கும் அந்த தொழிலில் கொடி கட்டி பறக்கும் ஒரு நிறுவனம் பங்குதாரர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரும்பாலான நிறுவனங்களின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பங்குதாரர்களின் எண்ணிக்கை நம் நாட்டில் மிக குறைவே. இது பங்குச்சந்தையில் நீண்ட காலம் முதலீடு(Investor) செய்பவர்களுக்கு ஆரோக்கியமான விஷயமல்ல.

 

பங்குதாரர்களாக நாம் ஒரு நிறுவனத்திடம் கேள்விகளை கேட்டால் மட்டுமே, சரியான தீர்வு அமையும். இன்று ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு நேரடியாக செல்லாமல், இணையத்தில் கலந்து கொள்ளும் வசதியும் வந்தாயிற்று. அப்படியிருக்க ஒரு நிறுவனத்தில் நம்முடைய கடமையை நாம் சரியாக செய்யும் போது, நிறுவனர்களுக்கும் தங்கள் தொழிலின் மீதான மரியாதை இருக்கும்.

 

பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் திவால் நிலைக்கு(Bankruptcy) செல்வதும், கடன் சிக்கலில் மாட்டிக்கொள்வதும் இன்று வாடிக்கையாக மாறி விட்டது. இதற்கு காரணமாக நிறுவனத்தின் பங்குதாரர்களும் உள்ளனர் என்பது தான் உண்மை. வெறும் பங்குகளை மட்டுமே கொண்டிருக்காமல், ஒரு நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை(Financial Statements), வாக்களிக்கும் உரிமை(Voting) மற்றும் பொதுக்கூட்டத்தில்(AGM) கேள்வி எழுப்புதல் மூலமே ஒரு பங்குதாரர் தனக்கான மதிப்பை பெற முடியும். இதனை சரியாக செய்து விட்டாலே, பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தில் இயங்க ஆரம்பிக்கும். இதன் காரணமாக முதலீட்டாளருக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.

 

கார்ப்பரேட் நிர்வாகத்தில்(Corporate Governance) ஏற்படும் குழப்பங்கள், நிதிநிலை அறிக்கையில் மோசடிகள் போன்றவற்றை தவிர்க்க பங்குதாரர்கள் அனைவரும் கூடி முடிவெடுப்பது அவசியம். மூன்று மணிநேர சினமா காட்சியை பார்ப்பதால் நமக்கு உத்வேகம் கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் நாம் முதலீடு செய்த நிறுவனத்தின் விஷயங்களை ஆராய்ந்தால் தெளிவு பெறலாம். நிறுவனம் கொண்டு வரும் தீர்மானத்திற்கு வாக்களிப்பதும் நமது கடமை.

 

இது பங்குதாரர்களாக மட்டுமல்ல. நுகர்வோராகவும், பணியாளராகவும், நாட்டின் குடிமகனாகவும் நாம் கேட்டு பெற வேண்டியது ஏராளம். கேள்வியை கேட்பதினால் மட்டுமே விடை கிடைக்கும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

நீங்கள் எந்த துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்ய உள்ளீர்கள் ?

நீங்கள் எந்த துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்ய உள்ளீர்கள் ?

Which sector based stocks are you going to invest in ?

சந்தை குறியீடுகள் உயர்வு நிலை, உலக பொருளாதார மந்த நிலை, வர்த்தக போர் ஆகியவை வரும் காலாண்டில் நிறுவனங்களின் வருவாயை பாதிக்கும் காரணிகளாக இருக்கலாம். சந்தையை குறுகிய காலத்தில் அணுகாமல், நல்ல நிறுவன பங்குகளில் முதலீடு செய்து நீண்ட காலத்தில் காத்திருக்கும் போது, அருமையான வருவாயை முதலீட்டாளர் பெற முடியும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சமீபத்திய பங்குச்சந்தை குறியீடு, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் தன்மை, பணப்புழக்க நெருக்கடி(Liquidity Crisis), அதனை சார்ந்த ஊடக செய்திகளால்(Media Noises) அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது எனலாம். முதலீட்டாளராக ஒருவர் இது போன்ற விஷயங்களை ஆரோக்கியமாக எடுத்து கொள்ள முடியாது. இருப்பினும் ஒரு நீண்ட கால முதலீட்டாளராக இதனை கடந்து தான் செல்ல வேண்டும்.

 

வரவிருக்கும் நாட்களில் பட்ஜெட் தாக்கல் எதிர்பார்ப்பை சார்ந்து பங்குச்சந்தை குறியீடுகள் நகர கூடும். இதுவும் கடந்து போக கூடிய நிலை தான். பொருளாதார உற்பத்தி வளர்ச்சி மற்றும் காலாண்டு முடிவுகளால் சந்தை பாதிப்படையும் சூழ்நிலை இருந்தாலும், நீண்ட காலத்தில் மதிப்புமிக்க பங்குகளில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு நலன் பயக்கும். குறிப்பாக வலுவான துறைகள்(Strong Sectors) என்று சொல்லப்படும் சில துறைகள், பொருளாதார தேக்க நிலையிலும் நிலைத்து நின்று வருவாயை கொடுக்கும்.

 

வருவாயை அதிகமாக கொடுப்பது என்பது பங்குகளின் விலையில் அதிகரிப்பு என்பது மட்டுமல்ல. சந்தை இறக்கத்திலும், ஒருவருக்கு அதிக நஷ்டத்தை தராமல் நிலைத்து நிற்பதும் தான். அது போன்ற துறைகள் சில,

 

  • வாகனத்துறை
  • வங்கி மற்றும் நிதி சேவைகள்
  • நுகர்வோர் பொருட்கள் (FMCG)
  • மருந்து துறை (Pharma)
  • தொழில்நுட்பம் (Information Technology)

 

மேலே கூறப்பட்ட துறைகள் நம்மில் பெரும்பாலோருக்கு எளிதில் புரியக்கூடிய வகையில் இருக்கும். நாம் தினமும் காணும் பொருட்கள், சேவைகள் மற்றும் தினசரி நுகரும் பொருட்களாக இருக்கும்பட்சத்தில், நம்மால் அந்த தொழிலின் தன்மையை எளிதில் அணுக முடியும். இன்றைய நாட்களில் வங்கித்துறையும் அவசியமான ஒன்று. தொழில் துறை வளர்ச்சிக்கு(Industrial Growth) வங்கிகளின் சேவை இன்றியமையாதது.

 

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வங்கிகளுக்கு பலம் சேர்க்கும். அதே வேளையில் வங்கிகளின் நிர்வாகத்தை கருத்தில் கொள்வது அவசியம். கடந்த சில வருடங்களாக பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் பிரச்னையில் சிக்கி தவிக்கின்றன. இதனை நிர்வாக குறைபாடு என்றே சொல்லலாம். இது சார்ந்த அரசாங்கத்தின் கொள்கைகளையும், வரையறைகளையும் நாம் பார்க்க வேண்டும்.

 

மருந்து(Pharma) மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் தவிர்க்க முடியாதவை. இந்த துறைகளுக்கான தேவையும் அதிகமாக தான் உள்ளது. வரும் நாட்களிலும் இதன் தேவை அதிகரிப்பால் உற்பத்தி பெருகக்கூடும் மற்றும் நல்ல வருவாயை எதிர்பார்க்கலாம். இந்த இரு துறையும் பெரும்பாலும் ஏற்றுமதியின் மூலம் தான் தனது வருவாயை கொண்டுள்ளது. நம் நாட்டில் உட்கட்டமைப்புக்கான(Infra) வாய்ப்புகள் ஏராளமாக இருந்தும், அதற்கான மாற்றங்கள் சரியாக அமையவில்லை எனலாம். இருப்பினும், போக்குவரத்தை சார்ந்த வாகனத்துறைக்கு வாய்ப்புகளும், விற்பனையும் சாதகமே.

 

பருவ கால மற்றும் பொருளாதார சுழற்சி முறையில்(Cyclical Sectors) சில துறைகள் உள்ளன. இந்த துறைகள் பெரும்பாலும் உலக பொருளாதார காரணிகளை சார்ந்து நடைபெறும். துறைகள் சில,

 

  • விவசாயம் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகள்
  • ரசாயனம் (Chemicals)
  • உலோகங்கள் (Metals)

 

விவசாயம் வருடத்தின் அனைத்து நாட்களிலும் உற்பத்தியை பெருக்கி வருமானத்தை தரும் என சொல்லிவிட முடியாது. பருவகால மாற்றங்கள்(Seasonal) விவசாய வளர்ச்சியை பாதிக்கக்கூடும். உலோகங்கள் மற்றும் ரசாயன துறைகள் அனைத்து காலாண்டிலும் தொடர்ச்சியான வருவாய் மற்றும் லாப வளர்ச்சியை கொண்டிருக்கும் என நாம் கணிக்க முடியாது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வெறும் சந்தையின் குறியீடுகளை பார்த்து பங்குகளின் விலையில் முதலீடு செய்வது, ஒரு சிறந்த முதலீடாக கருதப்படாது. எந்த துறை சார்ந்த பங்குகள் சிறப்பாக செயல்படுகின்றன, பொருளாதார மந்த நிலையில் எந்த பங்குகள் நிலைத்து நிற்கின்றன போன்ற விஷயங்கள் ஒரு முதலீட்டாளராக கற்று கொள்ள வேண்டியவை. நாம் முதலீடு செய்யப்போகும் பங்குகளின் பொருட்கள் மற்றும் சேவைகளை தெரிந்து வைத்திருப்பது நன்று.

 

சில துறைகள் வருடத்தின் எல்லா நாட்களிலும் வருவாயை பெறக்கூடும்; சில துறைகளோ பருவ காலத்திற்கு ஏற்றாற் போல் செயல்படும். இன்னும் சில எதிர்காலத்தில் மாற்றம் பெறக்கூடிய வகையில் அமையும். மாற்றம் பெறக்கூடிய வகையில் உள்ளவை பொதுவாக ரிஸ்க் தன்மை அதிகம் நிறைந்தது. இவற்றை சரியாக புரிந்து கொண்டால் மட்டுமே, முதலீடு செய்ய வேண்டும். அது போன்ற துறைகள் சில,

 

  • உட்கட்டமைப்பு மற்றும் அதனை சார்ந்தது
  • ஊடகம்(Media) மற்றும் பொழுதுபோக்கு
  • எண்ணெய் மற்றும் எரிபொருள் (Oil Industry)
  • மின் உற்பத்தி மற்றும் விநியோகம்
  • ஜவுளித்துறை
  • தொலைத்தொடர்பு

 

மின் உற்பத்தி சார்ந்த துறைகள் சமீபத்தில் மாற்றமடைந்து வருகின்றன. இன்று காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், எதிர்காலத்தில் அணு மற்றும் சூரிய சக்தியின் மூலம் மட்டுமே மின்சக்தி பெற முடியும் என்ற நிலை வந்தால், நிறுவனத்தில் ஏற்படப்போகும் மாற்றத்தை நாம் கவனிக்க வேண்டும்.

 

ரிலையன்ஸ் ஜியோவின்(Reliance Jio) வருகைக்கு பின்னர் சில நிறுவனங்கள் காணாமல் போய் விட்டன. சில நிறுவனங்களோ கடனில் சிக்கியுள்ளன. ஏர்டெல் நிறுவனம், ஜியோவின் சமீபத்திய வளர்ச்சியால் தனது வருவாயில் தேக்க நிலையை சந்தித்து வருகிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது மாற்றம் பெறமுடியாத நிலை தான்(Transformation). விவசாய துறை வளர்ச்சி பெறாத போது, ஜவுளி துறை மட்டும் பெரிய வளர்ச்சியை கொண்டிருக்க முடியாது.

 

கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் வர்த்தக போர் ஆகியவை எண்ணெய் நிறுவனங்களின் வருவாயில் எந்த சூழ்நிலையிலும் பாதிப்பை ஏற்படுத்த கூடும். நம் நாட்டில் உட்கட்டமைப்பு துறைக்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பினும், இதற்கான கொள்கைகள் தெளிவு பெற முடியாததால், இந்த துறையின் பெரும்பாலான நிறுவனங்கள் கடனில் தவிக்கின்றன. எனவே முதலீடு செய்ய போகும் முன், வலுவான துறைகளை தேர்ந்தெடுத்து விட்டு அதனை சார்ந்த பங்குகளை அடிப்படை பகுப்பாய்வுக்கு(Fundamental Analysis) உட்படுத்தி முதலீடு செய்ய வேண்டும். இது பொருளாதார தேக்க நிலையில், ஒரு முதலீட்டாளரை பாதுகாக்க மட்டுமில்லாமல், முதலீட்டை ஊக்குவிக்கவும் செய்யும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com