All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

அடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

அடுத்த பங்குச்சந்தை வீழ்ச்சி எப்போது, முதலீட்டாளராக என்ன செய்ய வேண்டும் ?

5 Precautions to do in the Market Crash – Recession 2020

நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பிறகு உலக பங்குச்சந்தை குறியீடுகள் மிக வேகமாக எழுந்து வந்துள்ளது. உள்நாட்டில் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் கடந்த மூன்று மாதங்களில் 20 சதவீத ஏற்றத்தை அடைந்துள்ளது. அதே வேளையில் 2020ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து காணும் போது இன்னும் 13 சதவீத இறக்கத்தில் உள்ளது.

அமெரிக்க பங்குச்சந்தை வரலாறு காணாத உச்சத்தை நடப்பாண்டில் இரண்டாவது முறையாக அடைந்தது. கடந்த இரண்டு வருடங்களாக காணப்பட்ட பொருளாதார மந்தநிலை என்ற செய்தி வலுவடைந்து தற்போது உலக பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வளர்ந்த நாடுகளை காட்டிலும் வளரும் நாடுகள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து விரைவாக மீட்டெடுக்கப்படும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

நடப்பு வருடத்தில் முக்கியமாக கருதப்படும் நிகழ்வாக கொரோனா வைரஸ் தாக்கம்(Covid-19), வர்த்தக போர்(Trade war), எண்ணெய் நாடுகளில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் விலை மாற்றம், அமெரிக்க தேர்தல், நாடுகளிடையே காணப்படும் போர் பதற்ற சூழ்நிலை(War Panic) தான் உள்ளது. பொருளாதார மந்தநிலையால் அடுத்து வரவிருக்கும் காலாண்டுகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டிருக்காது.

ஆனால், உலக பங்குச்சந்தை குறியீடுகள் ஏற்றத்தில் மட்டும் சென்று கொண்டிருக்கின்றன. தற்போது சந்தையில் நிலவுவது காளையா அல்லது கரடியா என்ற ஐயத்தில் வர்த்தகர்களும், முதலீட்டாளர்களும் அணுகுகின்றனர். மார்ச் மாத வீழ்ச்சி போன்று மறுபடியும் நடப்பு வருடத்தில் ஏற்பட வாய்ப்புண்டா என கேள்வி எழுப்பினால், நடப்பதற்கான சாத்திய கூறு அதிகம் தான்.

கடந்த இரண்டு வருடத்தில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டதும், அதற்கு மாறாக பங்குச்சந்தை குறியீடுகள் மேலே சென்றதும் தான் மார்ச் மாத வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கொரோனா தாக்குதலுக்கு பின்னால் உள்ள பொருளாதார எண்கள் தான் உண்மை நிலவரத்தை விவரிக்கும். அமெரிக்க சந்தைகள் போல, இந்திய பங்குச்சந்தைகளும் ஏற்றமடைவதற்கான கூறுகள் உள்ளன.

இருப்பினும், இது சந்தை நிலவரம் சரியான பாதையில் செல்லவில்லை என்பதனையே காட்டுகிறது. கொரோனா தாக்கத்தின் இரண்டாம் அலையால் ஊரடங்கு ஏற்படாவிட்டாலும், இயல்பு வாழ்க்கை என்பது சாதாரண நிகழ்வாக இருக்காது. இது சந்தை சங்கிலியை(Supply Chain) பாதிக்க கூடும். எனவே மற்றொரு சந்தை வீழ்ச்சி நாம் மேலே சொன்ன சில காரணிகளால் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இங்கே யூகிப்பதற்கு எதுவுமில்லை. அதே வேளையில் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். எனவே பங்குச்சந்தை வீழ்ச்சியை கணிப்பதை தவிர்த்து, அதற்கான முன்னெச்சரிக்கை விஷயங்களை நாம் பின்பற்றினால், சந்தையில் நீண்டகாலத்தில் நல்ல வருவாயை ஈட்டலாம்.

  • சரியான நிதி திட்டமிடல் எப்போதும் அவசியம்:

தற்போது உள்ள சூழ்நிலை அடிக்கடி நிகழும் நிகழ்வாக வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை. எனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் முன்னர், உங்களையும், உங்கள் குடும்ப நிதி பாதுகாப்பை உறுதி செய்ய டேர்ம் பாலிசி, மருத்துவ காப்பீடு மற்றும் அவசர கால நிதி ஆகியவற்றை ஏற்படுத்துவது அவசியம்.

அதற்கு பின்னர் தான் உங்கள் உபரி தொகையை சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற காலங்களில் சந்தையில் குறுகிய காலத்தில் விரைவாக பணம் பண்ணுகிறேன் என மொத்த பணத்தையும் இழக்க வேண்டாம். நீண்ட காலத்திற்கு நல்ல நிறுவனங்களை மட்டும் தேர்வு செய்து முதலீடு செய்க.

  • உங்கள் நிதி இலக்குகளுக்கு நேரிடையாக பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்:

நிதி இலக்குகளுக்காக சந்தையில் முதலீடு செய்ய உள்ளவர்கள், நீண்டகால இலக்கை மட்டும் கொண்டிருத்தல் நலம். குறுகிய மற்றும் நடுத்தர கால இலக்கிற்கு தற்போதைய நிலையில் நேரடி பங்குகளை அணுக வேண்டாம். அதற்கு மாறாக பரஸ்பர நிதி திட்டங்களை(Mutual Funds Schemes) பயன்படுத்தி கொள்ளலாம்.

நல்லதொரு செல்வத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள் பங்குச்சந்தை முதலீட்டை நீண்டகால நோக்கில் அணுகலாம். நடப்பில் உள்ள சந்தை வீழ்ச்சிகளில் முதலீடு செய்யும் பட்சத்தில், அடுத்த சில வருடங்களில் நல்ல வருவாயினை சந்தையில் ஈட்டலாம்.

  • ஒரு  முறை  முதலீடாக மொத்த பணத்தையும் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்(Don’t invest as Lumpsum):

உங்களிடம் உள்ள மொத்த முதலீட்டு தொகையை தற்போதைய சந்தையில் ஒரே பங்கில் போட்டு விட்டு, அடுத்த சில வருடங்களில் கோடிகளை அள்ளலாம் என உங்கள் நிதி ஆதாரத்தை மீறி ரிஸ்க் எடுக்க வேண்டாம். குறுகிய காலத்தில் சந்தை மிகவும் ஆபத்தானது. பொருளாதார வீழ்ச்சி காலங்களில் உங்களிடம் உள்ள மொத்த முதலீட்டில் 10-20 சதவீதம் என்ற அளவில் ஒவ்வொரு பெரிய இறக்கத்திலும் முதலீடு செய்வது நன்று.

ஒரே ஒரு முறை மட்டும் முதலீடு செய்து விட்டு, பின்பு இறக்கத்தில் உங்களால் பங்குகளை வாங்க முடியாவிட்டால், அதற்கான வாய்ப்பு பின்னாளில் கிட்டாது.

  • பரஸ்பர நிதிகளில் பரிமாற்ற திட்டத்தை(STP) பயன்படுத்துங்கள்:

பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வோர், மொத்த முதலீட்டை பங்குகளில் மேற்கொள்ளாமல், அதனை லிக்விட்(Liquid Fund) அல்லது ரிஸ்க் குறைந்த கடன் பத்திர(Debt Funds) திட்டங்களில் முதலீடு செய்து விட்டு, தொடர் பரிமாற்ற திட்டத்தை(Systematic Transfer Plan) தேர்ந்தெடுத்து பங்குகளில் முதலீடு செய்யலாம்.

வார எஸ்.டி.பி. அல்லது மாத எஸ்.டி.பி. திட்டங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் சந்தை இறக்கத்தில் அமையும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம். எஸ்.ஐ.பி.(SIP) முறையில் முதலீடு செய்வோர் தங்கள் மாதாந்திர அல்லது வார முதலீட்டு தொகையை அடுத்த ஓரிரு வருடங்களுக்கு அதிகரித்து கொள்ளலாம். வேலையை இழந்தவர்கள் தாங்கள் ஏற்கனவே செய்த மாத முதலீட்டை தொடர முடியவில்லை எனில், கணக்கை முடித்து கொள்ள வேண்டாம். அதற்கு பதிலாக தற்காலிகமாக மாத முதலீட்டை நிறுத்தி வைக்கலாம்.

  • ரொக்கமாக பணத்தை வைத்திருங்கள், மதிப்பீடுகள் மிக முக்கியம்:

சந்தை எப்போது வீழ்ச்சியடையும் என யாராலும் கணிக்க முடியாது. அதே வேளையில் பொருளாதாரம் சரியில்லாத போது , அதற்கான நகர்வுகள் சந்தையில் நிச்சயமாக நிகழும். குறுகிய காலத்தில் சந்தை வாக்கு இயந்திரமாகவும், நீண்டகாலத்தில் அது எடைபோடும் இயந்திரமாகவும் மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சந்தை வீழ்ச்சியின் போது முதலீடு செய்ய ரொக்கமாக பணத்தை(Sitting with a Cash) கொண்டிருக்க வேண்டும். அவற்றுக்காக காத்திருக்காமல் முன்னரே திட்டமிடுங்கள். உலக பொருளாதார வீழ்ச்சியில் நல்ல நிறுவனங்களும் (கடனில்லா, பணவரத்து கொண்டிருக்கும் நிறுவனங்கள்), அதன் மதிப்பீடுகளும் தான் நிலைத்து நிற்கும். மற்றவை திவாலாகி விடும். எனவே பங்குகளை கவனமாக தேர்ந்தெடுப்பது அவசியம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஜூன் மாதத்திலும் தொடரும் வாகன துறை விற்பனை மந்தம்

ஜூன் மாதத்திலும் தொடரும் வாகன துறை விற்பனை மந்தம் 

Declining Auto Sales for the month of June 2020 – Automobile India

2020ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் இந்திய வாகனத்துறைக்கு ஆறுதலான  இரண்டு விஷயங்கள் – கிராமப்புறங்களுக்கு தேவையான டிராக்டர் விற்பனை வளர்ச்சி  மற்றும் ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் 4.5 லட்ச வாகன விற்பனை சாதனை ஆகியவற்றை தவிர்த்து வேறு எதுவுமில்லை.

கடந்த ஏப்ரல் மாத முழு ஊரடங்கின் போது, வாகனத்துறையில் உள்ள முக்கிய நிறுவனங்கள் எந்த விற்பனையையும் செய்ய முடியாமல் இருந்தன. மே மாதத்தில் வாகன விற்பனை ஓரளவு இருந்தாலும், கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது சுமார் 60-80 சதவீத விற்பனை வீழ்ச்சியை சந்தித்தன.

இந்த விற்பனை மந்தம் ஜூன் மாதத்திலும் நடந்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட வாகனத்துறை விற்பனை சார்ந்த புள்ளிவிவரத்தில் மாருதி சுசூகி(Maruti Suzuki) நிறுவன உள்நாட்டு விற்பனையில் 54 சதவீத விற்பனை வீழ்ச்சியை கொண்டிருந்தன. 2019ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 1.14 லட்சம் வாகனங்கள் விற்ற நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் இது 53,139 ஆக இருந்துள்ளது.

Automobile sales june 2020

ஏற்றுமதியில் கடந்த வருட ஜூன் மாதத்தின் போது 9,847 வாகனங்கள் விற்றிருந்த நிலையில், தற்போது 4,289 வாகனங்களாக சொல்லப்பட்டுள்ளன. ஆக மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகன ஏற்றுமதியும்(Exports) 56 சதவீத விற்பனை வீழ்ச்சியை கொண்டுள்ளது. இது போல ஐஷர் மோட்டார்ஸ்(Eicher Motors) நிறுவனத்தை காணும் போது உள்நாட்டு விற்பனையில் 75 சதவீத வீழ்ச்சியையும், ஏற்றுமதியில் 17 சதவீத விற்பனை குறைவையும் அடைந்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம்(Mahindra & Mahindra) விவசாய துறை சார்ந்த டிராக்டர் விற்பனையில் 10 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இருப்பினும் மற்ற பிரிவுகளில் 50 சதவீதத்திற்கு மேலாக விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஏப்ரல் – ஜூன் காலாண்டு விற்பனை புள்ளிவிவரங்களை கூறியிருந்தது. 2019ம் ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 1,31,879 வாகனங்களை விற்றிருந்த நிலையில், நடப்பாண்டின் இதே காலத்தில் 23,845 வாகனங்கள் மட்டுமே விற்பனையானது. விற்பனை வளர்ச்சியில் 82 சதவீத வீழ்ச்சியை டாடா மோட்டார்ஸ் சந்தித்துள்ளது.

எஸ்கார்ட்ஸ்(Escorts) நிறுவனம் தனது ஜூன் மாத டிராக்டர் விற்பனையில் 21 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் அதன் ஏற்றுமதி அளவு குறைந்துள்ளது. அசோக் லேலண்ட்(Ashok Leyland) மற்றும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியும் குறைந்துள்ளது. பொது போக்குவரத்து அவ்வப்போது நிறுத்தப்படுவதால், ஹீரோ மோட்டார் நிறுவனத்தின் ஜூன் மாத விற்பனை ஓரளவு வந்துள்ளது. அதே வேளையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 27 சதவீதம் குறைவே. 2019ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் 6,16,526 ஆக இருந்த வாகன விற்பனை தற்போது 4,50,744 வாகனங்களாக உள்ளது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள்

பொருளாதார சிக்கலில் இருந்து தப்பிக்க இந்த ஆறு விஷயங்களை கற்று கொள்ளுங்கள் 

6 Things to Learn on Personal Finance – Escape from the Economic Crisis

தனிநபர் நிதி சார்ந்த கற்றல் என்பது நம் நாட்டை பொறுத்தவரை தற்போதைய நிலையில் குறைவு தான். அதே வேளையில் சேமிப்பு என்ற ஒற்றை வார்த்தை நமக்கு பல காலமாக நம்முடைய குடும்பத்தில் இருந்துள்ளது. நுகர்வோர் சந்தையில் வெறுமென சம்பாதித்த பணத்தை செலவழிப்பது, எதற்கெடுத்தாலும் கடன் வாங்குவது, தேவையில்லாத பொருட்களை வீட்டில் வாங்கி குவிப்பது, எதிர்காலத்தில் இது தேவைப்படும் என உபயோகமில்லாத விஷயங்களை செய்வது என நாம் பொதுவாக நேரத்தையும், பணத்தையும் விரயமாக்கி வருகிறோம்.

ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவையென்றால் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் – உணவு, உடை மற்றும் உறைவிடம். நவீன யுகத்தில் அடிப்படை கல்வியும், பொருளாதாரம் சார்ந்த சில நிதி பாதுகாப்புகளும் மட்டுமே கூடுதல் தேவையாக இருக்கும். ஆனால் நாம் நிதி பாதுகாப்புகளை செய்வதை விட்டு விட்டு எண்ணிலடங்கா பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கி குவித்து வருகிறோம். என் தாத்தா-பாட்டி காலத்தில் இருந்த சாமான்கள் இன்றும் என் வீட்டில் ஒரு ஓரத்தில் உள்ளது என சொல்வதை கேட்டிருப்போம்.

நம்மை சுற்றிய பொருட்கள் மற்றும் சேவைகள் ஒன்றும் கண்காட்சி பொருட்கள் அல்ல. அது பெருமையாக பேசக்கூடிய விஷயமும் அல்ல. தனிநபர் ஒருவர் தனக்கு தேவையில்லாத ஒரு பொருள் அல்லது சேவையை வாங்கும் போது , தேவைப்படும் ஒருவருக்கு அது கிடைக்காமல் செய்கிறது அல்லது அதன் விலை அதிகமாக கூடும்.

எனவே தேவையறிந்து, வாங்க கூடிய ஒவ்வொரு விஷயங்களையும் பயன்படுத்தும் நோக்கில் இருக்க வேண்டும். அப்படி சொல்லும் போது, தனிநபர் நிதி விஷயத்தில் ஆறு விஷயங்களை அடிப்படை நிகழ்வாக கற்று கொள்ளலாம்.

  • சேமிப்புக்கும், முதலீட்டிற்கும் இடையேயான புரிதல் 
  • பணவீக்கம்
  • நிதி இலக்குகளை திட்டமிடுதல்
  • காத்திருக்கும் ரகசியம்
  • கூட்டு வட்டியின் மகிமை – பள்ளிக்கால பணக்கார பாடம்
  • எந்தவொரு முதலீட்டையும் தொழில் போல அணுக கற்று கொள்ளுங்கள் 

பொதுவாக நம்மில் பெரும்பாலானோர் சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்வதில் சிரமப்படுவர். எல்.ஐ.சி. நிறுவனத்தில் காப்பீடு திட்டத்தை வாங்கி கொண்டு நான் சேமிக்கிறேன் அல்லது முதலீடு செய்கிறேன் என நினைத்து கொள்வர். சேமிப்பு என்பது பெரிதாக வளரும் வாய்ப்பு இல்லாதது. அது பணவீக்கத்தை விட குறைவான வட்டி வருவாயை தான் கொண்டிருக்கும். உதாரணமாக, அஞ்சலகம், வங்கி, சீட்டு, தங்கம், ரொக்கம் ஆகியவற்றை சொல்லலாம். அஞ்சலகத்தில் கிடைப்பதை சிறு சேமிப்பு திட்டம் என்று தான் சொல்வர். அதனை முதலீடு என சொல்லப்படவில்லை.

முதலீடு(Investing) என்பது இரண்டு விஷயங்களை நிறைவு செய்பவை. ஒன்று தொடர் வருமானத்தை(Regular income or Cash Flow) ஏற்படுத்துவது, மற்றொன்று நீண்டகாலத்தில் அதனை வைத்து கொண்டு பின்னர் ஒரு நல்ல விலைக்கு விற்பதன் மூலம் லாபம்(Capital Appreciation) ஏற்படுத்துவது. ரியல் எஸ்டேட், பங்குகள், தொழில்கள் ஆகியவை முதலீடு என சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் அவை இரு வகையான வருமானங்களை தர கூடியவை. வெறுமென வீட்டு மனைகளை மட்டும் விற்காமல், வீட்டு வாடகை, வணிக வளாகங்கள் மூலம் கிடைக்க பெறும் தொடர் வருமானம், பங்குகளில் கிடைக்கும் டிவிடெண்ட் தொகை, தொழில்களில் கிடைக்கக்கூடிய வருமானம் ஆகியவற்றை சொல்லலாம். எதிர்காலத்தில் இந்த மூன்றையும் விற்றால் அதற்கும் லாபம் கிடைக்கும். எனவே சேமிப்பும், முதலீடும் ஒன்று அல்ல.

நினைவில் கொள்ளுங்கள், தங்கம் என்பது பணவீக்கத்தை ஒட்டியும், எதிர்பாராத பொருளாதார வீழ்ச்சி காலங்களில் மட்டுமே அதன் செயல்பாடுகள். அது ஒரு பெரிய முதலீட்டு வாய்ப்பு என சொல்லமுடியாது. நீங்கள் வாங்கக்கூடிய தங்கம் உங்கள் வாழ்நாளில் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பயன்படும். அதுவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில். உங்களுக்கு அது அடிக்கடி பயன்படக்கூடியது என நீங்கள் நினைத்தால், உண்மையில் உங்கள் நிதி நலனில் சில பிரச்சனைகள் உள்ளது என அர்த்தம்.

தங்கத்தின் மூலம் தொடர் வருமானத்தை ஏற்படுத்த முடியாது என்பதனால் தான் அது சேமிப்பு பிரிவில் உள்ளது. தங்கம் கடந்த 20 வருடங்களில் வங்கி டெபாசிட்டுக்கான வட்டி வருவாயை ஒட்டி தான் உள்ளது. டாலர் மதிப்பில் அது வர்த்தகமாவதன் காரணமாகவே தங்கத்தின் விலை அதிகரிப்பது போல தோன்றுகிறது. நாணயம் என்ற தொட்டுணரக்கூடிய விஷயம் இல்லையென்றால், தங்கத்திற்கும் மதிப்பு கிடையாது. இது தான் கடந்த வரலாற்றில் அலுமினியத்தில் நடந்தது.

மாத முதலீட்டிற்கும், மாத தவணைக்கும்(SIP vs EMI) உள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள். மாதாமாதம் சேமித்து அல்லது முதலீடு செய்து, முதிர்வில் ஒரு பொருளை வாங்க வேண்டுமா அல்லது இ.எம்.ஐ.(EMI) என கடன் வாங்கி ஒரு பொருளை வாங்க வேண்டுமா ? நீங்கள் கடன் மூலம் ஒரு பொருளை உடனே வாங்கி விட்டாலும், அந்த கடனை அடைக்கும் வரை அதற்கு நீங்கள் உரிமையாளர் கிடையாது. இது கடன் மூலம் பெற்ற வீடு, வாகனம், கைபேசி, குளிர்சாதனம் என அனைத்துக்கும் பொருந்தும். சேமித்த பணத்தை கொண்டு ஒரு பொருளை வாங்கினாலும் அதற்கு முழு உரிமையாளர் நீங்களே.

கிரெடிட் கார்டுகளில் கவனம் தேவை. உண்மையில் தொழில் செய்பவர்களுக்காக  அறிமுகப்படுத்தபட்ட கடன் அட்டைகள் தான் அவை. ஆனால் இன்று தொழில் புரிபவர்கள் அதனை தவிர்த்து மாத சம்பளக்காரர்கள் கடன் அட்டையை அதிகமாக பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல. தேவையில்லாமல் கடன் வாங்க கூடாது, கடனில்லா வாழ்வும் ஒரு சுகமே. வல்லரசான அமெரிக்காவில் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடன் அட்டையிலும், கடனிலும் தத்தளிப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே 80 சதவீதத்திற்கு மேல். அமெரிக்காவில் தனிநபர் ஒருவரின் கடன் மட்டும் சராசரியாக 90,500 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 68 லட்சம் ரூபாய்) !

பணவீக்கத்தை பற்றிய புரிதல் ஒவ்வொருவருக்கும் தேவை. தேவையில்லாத பதுக்கல், எதிர்பாராத கூடுதல் தேவைகள் தான் ஒரு பொருள் அல்லது சேவையின் விலையை நிர்ணயிக்கின்றன. அதிகமான உற்பத்தி இருக்கும் நிலையில், தேவை குறைவாக இருப்பின் அதன் விலை அதிகமாக இருக்காது. நீண்டகாலத்தில் பணவீக்கம் மோசமான விளைவை ஏற்படுத்த கூடிய ஒன்று.

நிதி இலக்குகளை திட்டமிடுதலின்(Financial Goals) அவசியம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவை. அவை குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால இலக்குகளாக இருக்கலாம். குடும்பத்திற்கான தேவையான அளவு காப்பீடு, மருத்துவம் சார்ந்த பாதுகாப்பு, அவசரகால நிதி போன்றவற்றை ஏற்படுத்தி விட்டு தான் நிதி இலக்குகளை திட்டமிட வேண்டும்.

பணத்தின் மூலம் பணம் பண்ணும் கலை காத்திருத்தல்(Delayed Gratification) மூலமே கிடைக்கும். உலகின் பெரும்பாலான பணக்காரர்கள் எளிமையான வாழ்க்கையை கொண்டிருப்பவர்கள் தான். தேவையில்லாத செலவுகளை தவிர்த்து, நீண்டகாலத்தில் முதலீடு செய்து அதனை அறுவடை செய்வது தான் அவர்களின் வேலை. நீண்டகால முதலீட்டிற்கு மட்டுமே அரசு சார்பில் வரி சலுகையும் கிடைக்கப்பெறுகிறது, குறுகிய கால லாபத்திற்கு அல்ல.

கூட்டு வட்டியின் மகிமை நமது பள்ளிக்கால பாடத்தில் இருந்த ஒரு பக்கம் தான். ஆனால், உண்மையில் நாம் கல்வியை முடித்து விட்டு வேலைக்கு சென்றவுடன் அதனை மறந்து விட்டோம். அதிகமாக சம்பாதிப்பது ஒன்றும் ஒருவரை உயர்த்தி விடாது. கடனில்லாமல், அளவாக சம்பாதித்தாலும் நல்ல ஒழுக்கத்தை ஏற்படுத்தி கொண்டு எளிமையாக வாழ பழகினால் அதுவே உயர்வாகும். இதனை தான் பெரும் பணக்காரர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். இளமை காலம் முதல் செய்யப்படும் தொடர் முதலீடு தான் ஒருவரின் செல்வத்தை உயர்த்துகிறது.

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

முதலீட்டை மேற்கொள்ளும் முன்னர், ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்த பின்னர் தான் அதற்கான முதலீட்டு முடிவை எடுக்க வேண்டும். வெறுமென போன்சி  (மோசடி திட்டம் – வட்டிக்கு பெரும் வட்டி) பேர்வழிகளிடம் மாட்டிக்கொண்டு எனக்கு மாதாமாதம் பணம் வருகிறது என சொல்லிக்கொண்டு ஏமாற வேண்டாம். உண்மையில் நம் முதலீட்டை கொண்டு ஒருவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதனை அறிவது அவசியமாகும். உங்கள் பணத்தை கொண்டு ஒருவர் நேர்மையாக தொழில் செய்தால் மட்டும் தான், உங்களுக்கான வருவாய் நிச்சயம். இல்லையென்றால், அது திவால் தான்.

சொல்லப்பட்ட கற்றலின் மூலம் நமது நிதி சிந்தனை மேம்படும். அளவான வாழ்க்கையை வாழ இயலும், அளவில்லா மகிழ்ச்சியை பெற முடியும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

ஐ.டி.சி. நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 3,857 கோடி

ஐ.டி.சி. நான்காம் காலாண்டு நிகர லாபம் ரூ. 3,857 கோடி 

ITC reported Net Profit of Rs. 3,857 Crore in Q4FY20 – Quarterly results

நாட்டின் வேகமாக நகரும் நுகர்வோர் துறையில்(FMCG) மிகப்பெரிய நிறுவனமாக இருப்பது ஐ.டி.சி. நிறுவனம். புகையிலை தொழிலை முதன்மையாக கொண்டிருந்தாலும் உணவு பொருட்கள், விடுதிகள், காகித பலகைகள் மற்றும் பேக்கேஜிங், விவசாயம் சார்ந்த பொருட்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் முக்கிய இடத்தை கொண்டுள்ளது இந்நிறுவனம்.

ஐ.டி.சி. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2.40 லட்சம் கோடி ரூபாய். இதன் புத்தக மதிப்பு 47 ரூபாயாகவும், நடப்பு பங்கு விலை ரூ. 200 ஆகவும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன் எதுவுமில்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 370 மடங்கிலும், நிகர சொத்து மதிப்பு ரூ.58,487 கோடியாகவும் இருக்கிறது.

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 14 சதவீதமாகவும் இருந்துள்ளது. பங்கு மீதான வருவாய்(Return on Equity) 27 சதவீதமாக உள்ளது. எனினும் இந்த பங்கு விலை கடந்த 12 மாதங்களில் 30 வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது நீண்டகால முதலீட்டாளர்களுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 12,561 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 8,057 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. நான்காம் காலாண்டில் நிகர லாபம் ரூ. 3,857 கோடி. இது கடந்த 2019ம் நிதியாண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது 9 சதவீத வளர்ச்சியாகும். 2019-2020 ஒட்டுமொத்த நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 53,991 கோடி ரூபாயும், நிகர லாபம் 15,584 கோடி ரூபாயாகவும் உள்ளது.

காலாண்டு அடிப்படையில் காணும் போது, அனைத்து பிரிவுகளிலும் வருவாய் வளர்ச்சியை பெற்றுள்ளது ஐ.டி.சி. நிறுவனம். அதே வேளையில் வரிக்கு முந்தைய லாபத்தில் குறைந்துள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 2020ம் ஆண்டின் மார்ச் முடிவில் ரூ. 64,044 கோடியாக இருந்துள்ளது.

பங்கு ஒன்றுக்கு 10.15 ரூபாயை ஈவு தொகையாக(Dividend) முதலீட்டாளர்களுக்கு ஐ.டி.சி. நிறுவனம் அறிவித்துள்ளது. உபரி பணவரத்து(Free Cash Flow) அடிப்படையில் 30 சதவீத வலுவான வளர்ச்சியை பெற்றுள்ளது இந்நிறுவனம். வருட அடிப்படையில் வரிக்கு பிந்தைய லாபம் 21 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஒரு சிறுகதை. முக்கிய பதிவுகள். உங்கள் செல்வத்தை அழிக்கும் பங்குச்சந்தையின் கதை

ஒரு சிறுகதை. முக்கிய பதிவுகள். உங்கள் செல்வத்தை அழிக்கும்  பங்குச்சந்தையின் கதை 

A Short Story. Key Points. Wealth Destroyer – Stocks

பொதுவாக பங்குச்சந்தையில் சில நிறுவன பங்குகளை நீங்கள் வாங்கியிருந்தால் கோடீஸ்வரராக மாறலாம் என சொல்வதை கேட்டிருப்போம். 20 வருடங்களுக்கு முன்பு நீங்கள் இந்த பங்கில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்திருந்தால் இன்று அது 5 கோடி ரூபாய் பெறுமானம் பெறும் என்பதனையும் சிலர் சொல்வதுண்டு.

நடைமுறையில் உள்ள முதலீட்டு சாதனங்களில் தொழில்களை கொண்டு நல்ல  வருவாயை ஈட்ட முடியும் எனில், அது பங்குச்சந்தையில் முதலீடு செய்வதனால் மட்டுமே. அதே வேளையில் உங்கள் பணம் மற்றும் செல்வத்தை பதம் பார்க்கும் ஒரு முதலீட்டு சாதனமும் உண்டு. அதுவும் பங்குச்சந்தை தான்.

அப்படிப்பட்ட முதலீட்டு இழப்புகளை ஏற்படுத்திய நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் பல உண்டு. அவற்றின் சிறுகதைகளை இங்கே பார்ப்போம். சிறுகதைகளுக்கு இருக்கும் அழகே தனி தான். பங்குகளை அலசி ஆராய்வதில் சிறிய கதைகளாக சொல்லும் போது அதன் தன்மை ஆழமான வாசிப்பை ஏற்படுத்தும்.

சொல்லப்பட உள்ள பங்கின் நிறுவன பெயரை கதையின் முடிவில் நீங்களே அறிந்து கொள்ளலாம். பொருளாதார சிக்கலில் மாட்டி கொண்டு முதலீட்டாளர்களின் பணத்தை பதம் பார்க்கும் பங்கு ஒன்று இதோ…

தற்போது இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் இந்த பங்கு 60 சதவீத ஏற்றத்தை அடைந்துள்ளது. நல்ல பங்கு தானே, வாருங்கள் கதைக்கு.

  • சொல்லப்பட்ட உள்ள நிறுவனம் கடந்த 2002ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் இந்திய பணக்காரர்களில் ஒருவராவார். முதலீடுகளை பெறுவதில் அவர் வல்லவரும் கூட.
  • தொலைத்தொடர்பு சேவையில் மேம்பட்ட CDMA தொழில்நுட்பத்தை பயன்படுத்திய நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் வாடிக்கையாளர்களை கொண்டிருந்தது. சிறிது வருடங்கள் கழிந்ததும், நிறுவனம் மற்றொருவரிடம் கைமாறியது. அவரும் இந்த நிறுவனத்தை தொடங்கியவருக்கு உறவுக்காரர் தான்.
  • நான்கு முறை சிறந்த விருதுகளை பெற்றவர் நமது புதிய ஓனர். ஆம், நாட்டின் மிக சிறந்த தொழிலதிபருக்கான விருதுகளை அவர் பெற்றார்.
  • 2008ம் ஆண்டில் மற்றொரு தொழில்நுட்ப சேவையில் அவர் நுழைந்தார். 3ஜி தொழில்நுட்பத்தை 2011ம் ஆண்டு கொண்டு வந்தார். 58,640 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலத்தில் எடுத்தார்.
  • எம்.டி.எஸ். கேபிள்(MTS Cable) என்ற நிறுவனத்தையும், டிஜி கேபிள்(Digicable) என்ற மற்றொரு நிறுவனத்தையும் கையகப்படுத்தினார். சில காரணங்களால் அவரால் 4ஜி தொழில்நுட்பத்தில் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை.
  • தொழில் போட்டி மற்றும் அதிக கடனால் தள்ளாடினார். ஏர்செல்(Aircel) என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் தனது நிறுவனத்தை இணைக்க முயற்சி செய்தார். ஆனால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.
  • எரிக்சன்(Ericsson) என்ற நிறுவனத்துடன் இவருக்கு முதலீடு சார்ந்த மோதல் ஏற்பட்டது. எரிக்சன் இவருடைய நிறுவனத்தின் மீது வழக்கும் தொடுத்தது.
  • 12 வருடங்களுக்கு முன்பு உலகின் 6வது பணக்காரராக இருந்தவர் இப்போது அதிக கடனை மட்டும் கொண்டு நிறுவனத்தை திவால் நிலைக்கு அறிவித்து விட்டார். 42 பில்லியன் டாலர்கள் (இன்றைய மதிப்பில் 3.15 லட்சம் கோடி ரூபாய்) சாம்ராஜ்யத்தை கொண்டிருந்தவர் இன்று தன்னிடம் எதுவுமில்லை என கூறியுள்ளார்.
  • 2008ம் ஆண்டில் 800 ரூபாய்க்கு வர்த்தகமாகி கொண்டிருந்த அவருடைய நிறுவனத்தின் பங்கு விலை 2020ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 80 பைசாவுக்கு வந்தடைந்தது. போனஸ் பங்குகள் எதுவும் தரப்படவில்லை என்பதனை கவனிக்கவும்.

எந்த நிறுவனம் என்று உங்களால் அறிய முடிகிறதா ?

பங்குச்சந்தையில் வெறும் விலைகளை மட்டுமே பார்க்காமல், நிறுவனத்தின் கடன் தன்மை எவ்வாறு உள்ளது, நிர்வாகம் நன்றாக செயல்பட்டு வருகிறதா மற்றும் வருவாய் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதனையும் ஆராய வேண்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை குமிழியும், அதன் தன்மைகளும் – இந்த வார இணைய வழி நிகழ்வு

பங்குச்சந்தை குமிழியும், அதன் தன்மைகளும் – இந்த வார இணைய வழி நிகழ்வு 

The Big Bubble and Delisting opportunity – Online Meet

நடப்பு 2020ம் வருடத்தின் மார்ச் மாதத்தில் உலக பங்குச்சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. கொரோனா தாக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகிய காரணங்களால் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை குறியீடு சந்தையில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு இழப்பை ஏற்படுத்தின. பின்பு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நல்ல ஒரு ஏற்றத்தில் மீண்டு வந்தன.

பங்குச்சந்தை குறியீடுகள் உயர்ந்து காணப்பட்டாலும், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நிலவி வரும் பொருளாதார மந்தநிலை மீட்கப்படவில்லை எனலாம். இந்த மந்தநிலை கொரோனா தாக்கத்தால் மேலும் அதிகமாகியுள்ளது. மீண்டும் உலக பங்குச்சந்தைகள் 2020ம் ஆண்டில் வீழ்ச்சியை சந்திக்குமா ?

பொருளாதார மற்றும் பங்குச்சந்தை குமிழிகள் எவ்வாறு நடைபெறும் ? 

பங்குச்சந்தை வீழ்ச்சியின் போது ஒரு முதலீட்டாளராக நாம் கடைபிடிக்க வேண்டியவை  

நல்ல நிறுவன பங்குகளை கண்டறிவதற்கான எளிய உத்திகள் 

உண்மையில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவன தொழில்கள் லாபத்தில் உள்ளதா ?

நீங்கள் வாங்கிய பங்கு, பங்குச்சந்தையிலிருந்து நீக்கப்பட உள்ளதா ?

Stock Market Bubble Webinar

வாருங்கள், இந்த வார ஞாயிற்றுக்கிழமை இணைய வழியிலான நிகழ்வில் பேசலாம்.

Registration for Webinar Meet – The Big Bubble & Delisting Opportunity

பதிவுக்கு பின் நிகழ்வுக்கான இணைப்பு உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பியூன் முதல் பிடிலைட் நிறுவனம் வரை – பெவிகால் வரலாறு

பியூன் முதல் பிடிலைட் நிறுவனம் வரை – பெவிகால் வரலாறு 

The Peon to Pidilite Industries – Fevicol Branding

1925ம் ஆண்டு குஜராத் மாநிலம் மகுவாவில் பிறந்த பல்வந்த் தனது பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் முடித்து விட்டு, பம்பாயில் உள்ள அரசு சட்ட கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்றார். படித்தது என்னவோ சட்டக்கல்வி, ஆனால் வேலைக்கு சென்றது சாயமிடுதல் மற்றும் அச்சக தொழிற்சாலைக்கு தான். சட்டம் சார்ந்த தனது படிப்பு வேலையை அவர் தனது வாழ்நாளில் ஒரு முறை கூட செயல்படுத்தவில்லை.

அச்சக துறையில் சலித்து போன அவர், மும்பையிலுள்ள மரச்சாமான்கள் செய்யும் ஒரு அலுவலகத்தில் பியூனாக வேலைக்கு சேர்ந்தார். அந்த அலுவலகத்தின் பட்டறையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். பல்வந்துக்கு(Balvant Parekh) தொழில் செய்ய வேண்டுமென்ற ஆசை அவ்வப்போது ஏற்பட்டது. தொழில் செய்ய வேண்டுமென்றால் என்ன தொழில் செய்யலாம் மற்றும் தொழிலுக்கான முதலீட்டை தயார் செய்ய வேண்டுமே என்ற சிந்தனையும் அவரது மனதில் ஓடியது.

ஒரு முறை தனது நண்பர் ஒருவரின் மூலம் தொழில் செய்வதற்கான முதலீட்டை பெற முனைந்தார். பின்பு அவருடைய உதவியில் மோகன் என்பவர் அறிமுகமானார். மோகன் முதலீடு செய்ய தயாராக, பல்வந்த் தனது வேலையை விட்டு விட்டு சொந்த தொழிலில் களம் இறங்கினார். மேற்கத்திய நாடுகளிலிருந்து காகித சாயங்கள்(Paper Dye), பாக்கு கொட்டைகள், சைக்கிள் போன்றவற்றை இறக்குமதி செய்து, விற்பனை செய்வது – இது தான் பல்வந்தின் தொழில். தொழிலில் சக்கை போடு போட்டார். தொழில் சார்ந்த புதிய மனிதர்களுடன் அவருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது.

இறக்குமதி தொழிலில் இருந்ததால், ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெட்கோ(Fedco) என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு பல்வந்த்துக்கு கிடைத்தது. 50 சதவீத பங்களிப்புடன் கூட்டாளியாக பெட்கோ நிறுவனத்தில் இணைந்தார். பெட்கோ நிறுவனத்தின் வாயிலாக மற்றொரு ஜெர்மன் நிறுவனத்தை கண்டறிந்தார் பல்வந்த், உடனடியாக அங்கும் சென்றார். ஹோஸ்ட்(Hoechst) என்ற ஜெர்மன் நிறுவனம் ரசாயன தொழிலில் இருந்து வந்தது. இது தற்போதைய சனோபி பார்மா(Sanofi Pharma) நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ளது.

ஹோஸ்ட் நிறுவனத்தில் இவரது தொழில் பங்களிப்பு இருந்தது. அந்த நிறுவனத்தின் இயக்குனர் மறைவுக்கு பின், நிறுவனம் நேரடி விற்பனைக்கு தயாரானது. பின்னர் 1954ம் ஆண்டு உள்நாட்டுக்கு வந்த பல்வந்த் தொழில் அனுபவத்தை கொண்டு தனது சகோதரர்களுடன் மும்பையில், ‘பரேக் டை கெமிக்கல்’ நிறுவனத்தை துவங்கினார். ஜெர்மனியிலிருந்து தொழில்துறைக்கு தேவையான ரசாயனங்கள் மற்றும் நிறமிகளை இறக்குமதி செய்து அதற்கான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

பசை போன்ற ஒரு பொருளை தயாரித்து அதற்கு, ‘பெவிகால் -Fevicol’ என பெயர் சூட்டினார். ‘Col – கால்’ என்றால் ஜெர்மனி மொழியில் இரு விஷயங்களை இணைப்பதன் பொருளாம். பரேக் டை கெமிக்கல் நிறுவனமே(Parekh Dyechem) பின்னர் பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பல்வந்த் மறைவுக்கு பின் தற்போது அவரது மகன் மதுக்கர் பரேக் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். வினைல் கெமிக்கல் நிறுவனத்தின் தலைவராகவும், இயக்குனராகவும் இவர் இருந்து வருகிறார். நாட்டின் 16வது பணக்காரராக மதுக்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 7.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.71,000 கோடி. நிறுவனத்திற்கான கடன் பெரிதாக எதுவுமில்லை. இந்த துறையில் சந்தை முன்னணியாகவும் நிறுவனம் திகழ்கிறது. வட்டி பாதுகாப்பு விகிதம் 47 மடங்கில் உள்ளது. பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 16 மடங்காக உள்ளது கவனிக்கத்தக்கது. நிறுவனர்களின் பங்களிப்பு 70 சதவீதம் மற்றும் நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் ஏதுமில்லை.

சமீபத்தில் வெளியிடப்பட்ட நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் குறைந்துள்ளது. 2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 158 கோடி ரூபாயாக சொல்லப்பட்ட நிலையில், இது 33 சதவீத குறைவாகும். எனினும் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் நீண்டகாலத்தில் நன்றாக உள்ளது.

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 14 சதவீதமாகவும், லாபம் 24 சதவீதமாகவும் உள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய் 5 வருடங்களில் 26 சதவீதமும், பத்து வருட கால அளவில் 27 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு ரூ. 4,400 கோடியாக உள்ளது. 2010ம் ஆண்டு பிடிலைட் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.100 ஆக இருந்த நிலையில் இன்று 1400 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. இதுவரை மூன்று முறை போனஸ் பங்குகள் பங்குதாரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை(Fundamental Analysis) பூர்த்தி செய்யும் இந்த நிறுவனம் பங்கு விலையில் மட்டும் அதிகமாக காணப்படுகிறது. வரவிருக்கும் நாட்களில் இந்த பங்கு இறங்கும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் குறைவான அளவில் முதலீட்டிற்கு வாங்கி வைத்து கொள்ளலாம். பங்குகளை வாங்குவதற்கு அடிப்படை அலசல் அவசியம். எனவே தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் முடிவு எடுப்பது நன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலகின் சிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பமா ? – உங்களுக்காக 3 பரஸ்பர நிதி திட்டங்கள்

உலகின் சிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய விருப்பமா ? –  உங்களுக்காக 3 பரஸ்பர நிதி திட்டங்கள் 

Best 3 Global Funds to Invest – Mutual Funds in 2020

நான் எப்போதும் சொல்லும் வாசகம் இது தான், ‘ நேரிடையாக பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்கள் ரிஸ்க் தன்மையை புரிந்து கொண்டு தங்கள் உபரி பணத்தை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ஊக வணிகம் மற்றும் சூதாடுவதை தவிர்க்க வேண்டும். நிதி இலக்குகளை கொண்டிருப்பவர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் கிடைக்கப்பெறும் எஸ்.ஐ.பி.(SIP Investing) முதலீட்டின் மூலம் நீண்டகாலத்தில் நல்ல வருவாயை பெறலாம். இதன் மூலம் ஒருவரின் நிதி இலக்கை நிறைவு செய்யலாம். உங்கள் நிதி இலக்குகளுக்காக நேரிடையாக பங்குச்சந்தைக்கு வராதீர்கள்.

பங்குச்சந்தையில் பங்குகளை வாங்குவது உங்களது உபரி பணத்தில் தான். செல்வ வளத்தை சேர்க்கவும், சமூகத்தில் தொண்டு செய்வதற்கான நிதியை பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் பெறுங்கள். ஆனால் உங்கள் நிதி இலக்குகளில் அதனை பரிசோதனை செய்ய வேண்டாம். பங்குகள் மூலம் சில வருடங்களில் நீங்கள் குட்டி அம்பானியாகி விட முடியாது. அதற்கு இரண்டு தலைமுறைகள் கஷ்டப்பட வேண்டும். நீண்டகால தன்மையும், பொறுமையும் அவசியம்.‘

வங்கிகளில் வட்டி விகிதங்கள் கடந்த சில வருடங்களாக குறைந்து வருகிறது. இதற்கு இரண்டு விஷயங்களை காரணமாக எடுத்து கொள்ளலாம். ஒன்று பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. இல்லையெனில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இது போல வேகமாக வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் பொதுவாக வட்டி விகிதம் குறைவாக தான் காணப்படும். அப்படியிருக்கும் போது வருங்காலங்களில் வங்கிகள் மூலம் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் அதிகமாக இருக்காது (அதிக பணவீக்க காலத்தை தவிர்த்து). எனவே அவற்றுக்கு மாற்றாக பார்க்கும் போது, இன்று பரஸ்பர நிதிகள்(Mutual Funds) பிரபலமடைந்து வருகிறது.

அதே வேளையில் பரஸ்பர நிதிகள் என்றாலே பங்குச்சந்தை தான் எனவும் எடுத்து கொள்ளக்கூடாது மற்றும் வருவாய் நன்றாக உள்ளது என அலட்சியத்துடனும் இருந்து விட கூடாது. பரஸ்பர நிதிகள் பல கலவை திட்டங்களை கொண்டவை. நீங்கள் பார்க்கும் சீட்டு, அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட், பத்திரங்களில் முதலீடு, வீட்டுமனை, தங்கம், பங்குகள் என பல பரிணாமங்களை பரஸ்பர நிதிகளில் ஒரு சேர காணலாம்.

இருப்பினும் ஒருவருடைய தேவை மற்றும் காலத்திற்கு ஏற்ப தான் பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். ரிஸ்க் என்பது எந்த முதலீட்டிலும் உண்டு. குறைந்த ரிஸ்க்(No Risk or Low Risk) கொண்ட லிக்விட் பண்டுகள் முதல் அதிக ரிஸ்க் கொண்ட பங்கு சார்ந்த பண்டுகள்(High Risk) வரை இங்கு கிடைக்கப்பெறுகிறது. திட்ட ஆவணங்களை சரியாக படிப்பதும், தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

உலக பங்குச்சந்தை முதலீட்டில் நமது நாட்டின் சந்தை மதிப்பு மூன்று சதவீதமே. நம் நாட்டில் பங்குச்சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் மூன்று சதவீதத்திற்கு குறைவே. சமீபத்தில் பங்குச்சந்தையில் புதிய கணக்குகள் அதிகமாக துவங்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அவை கொரோனா காலத்தில் பங்குச்சந்தை மூலம் ஊக வணிகம் மற்றும் தினசரி வர்த்தகத்தில் பகுதி நேரமாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆர்வத்தினால் தான். உண்மை புள்ளிவிவரம் என்னவெனில் நாட்டில் ஏப்ரல் மாதம் வரை சுமார் 4 கோடி டீமேட் கணக்குகள் உள்ளதாகவும், இவற்றில் ஒரு கோடிக்கும் குறைவாகவே செயல்பாட்டில் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது தொடங்கப்பட்ட பங்குச்சந்தை கணக்குகளில் 75 சதவீதம் செயல்படாமல் இருந்துள்ளன. மீதம் சொல்லப்பட்ட ஒரு கோடிக்கும் குறைவான கணக்குகளில் முதலீடு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை பாதியை கூட பெறாது. இவற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம், யார் உண்மையில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்று… ஆம், பங்கு தரகர்களும், நீண்டகால முதலீட்டாளர்களும்.

வெளிநாட்டு நிறுவன பங்குகளில் நாம் நேரிடையாக முதலீடு செய்வதற்கான சாதனம் நமது பங்குச்சந்தை அமைப்புகளில் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால், பரஸ்பர நிதி திட்டங்களின் மூலம் வெளிநாட்டு நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம். அப்படி காணும் போது, நாம் சிறந்த மூன்று திட்டங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

  • பிராங்க்ளின் பீடர் அமெரிக்க முதலீட்டு வாய்ப்பு (Franklin India Feeder US Opportunities)
  • டி.எஸ்.பி. ப்ளாக்ராக் அமெரிக்க முதலீடு (DSP Blackrock US Flexible Equity)

மேலே சொல்லப்பட்ட மூன்று பரஸ்பர நிதிகளில் பராக் பரிக் உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் நிறுவனர் மதிப்புமிக்க முதலீட்டாளர்களில் ஒருவராவார். இன்றும் மூன்று திட்டங்களை மட்டுமே கொண்டு செயல்படும் இந்த பரஸ்பர நிதி நிறுவனம் உலகின் தலைசிறந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகிறது.

வெறுமென உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமில்லாமல், முதலீட்டாளர்களுக்கு உலக நிறுவனங்களிலும் முதலீடு செய்யும் வாய்ப்பை பராக் பரிக் தருகிறது. இந்த பண்டுகளில் குறைந்தபட்ச முதலீடாக மாதாமாதம் ரூ. 1000 ஐ முதலீடு செய்யலாம். பராக் பரிக் நீண்டகால பங்கு திட்டம் தொடங்கப்பட்டு ஆறு வருடங்கள் ஆகும். இதுவரை 15 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ. 3,200 கோடி.

கூகுள் (Alphabet), அமேசான், முகநூல்(Facebook), சுசூகி, மைக்ரோசாப்ட், எச்.டி.எப்.சி., ஐ.டி.சி., ஆரக்கிள், கேடிலா ஹெல்த்கேர் என பல முக்கிய நிறுவனங்களில் இந்த திட்டம் முதலீடு செய்யும். முதலீடு பரவலாக்கத்தில் 55 சதவீதம் பெரு நிறுவனங்களிலும்(Giant), லார்ஜ் கேப் 13 சதவீதம், மிட் கேப் 12 சதவீதம் மற்றும் மீதம் உள்ளவை சிறு நிறுவனங்களில்(Small cap) முதலீடு செய்யப்படும். அதிக ரிஸ்க் கொண்ட இந்த திட்டம் மல்டி கேப் முதலீட்டு பிரிவில் வருகிறது. நீண்டகால முதலீட்டிற்கு மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.

மற்ற பண்டுகளை பற்றி வரவிருக்கும் பதிவுகளில் காணலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

உலக நாடுகளின் போட்டி தரவரிசை: சிங்கப்பூருக்கு முதலிடம், சரிந்த அமெரிக்கா

உலக நாடுகளின் போட்டி தரவரிசை: சிங்கப்பூருக்கு முதலிடம், சரிந்த அமெரிக்கா 

World Competitiveness Ranking 2020 – Singapore tops in the list

ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த மேலாண்மை மேம்பாட்டுக்கான சர்வதேச நிறுவனம்(IMD) வணிகம் சார்ந்த கல்வி மையத்தை நடத்தி வருகிறது. உலகளவில் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள நாடுகள் மற்றும் போட்டி திறனை கொண்ட நாடுகளின் பட்டியலையும் ஆராய்ந்து வெளியிடுகிறது.

ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படும் இந்த பட்டியல் தற்போது 2020ம் ஆண்டுக்கான தர வரிசையை தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் போட்டி தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்திலும், ஹாங்காங் இரண்டாம் இடத்திலும்  இருந்தது குறிப்பிடத்தக்கது.

தரவரிசை பட்டியல் சார்ந்த தரவுகள் நான்கு முக்கிய பொருளாதார காரணிகளை கொண்டு வடிவமைக்கப்படுகிறது. பொருளாதார செயல்பாடு(Economic Performance), அரசு செயல்திறன்(Government Efficiency), வணிக திறன்(Business Efficiency) மற்றும் உட்கட்டமைப்பு(Infrastructure) ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஆய்வுகள் நடைபெறுகிறது. 2020ம் ஆண்டின் இரண்டாம் இடத்தில் டென்மார்க், மூன்றாம் இடத்தில் ஸ்விட்சர்லாந்து உள்ளன.

நான்காம் மற்றும் ஐந்தாம் இடம் முறையே நெதர்லாந்து, ஹாங்காங் நாடுகள் உள்ளன. கடந்த முறை மூன்றாம் இடத்தில் இருந்த ஸ்வீடன் இம்முறை ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளன. நார்வே, கனடா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் 7,8 மற்றும் ஒன்பதாவது இடத்தை அடைந்துள்ளன.

2019ம் ஆண்டு(World Competitiveness Ranking) மூன்றாம் இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. சீன குடியரசில் உள்ள தைவான் 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே வேளையில் சீன நாடு 14வது இடத்திலிருந்து 20வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா 43வது இடத்தில் உள்ளது. கடந்த வருடமும் இதே இடத்தில் இருந்தது, அதே நேரம் 2016ம் ஆண்டு 41வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகளவிலான நாடுகளின் பொருளாதார செயல்பாட்டில் இந்தியாவிற்கு 37வது இடமும், அரசு செயல்திறனில் 50வது இடமும் கிடைத்துள்ளது. தொழில்புரியும் திறனில் 32வது இடமும், உட்கட்டமைப்பில் 49வது இடமும் 2020ம் ஆண்டுக்கான பட்டியலில் கிடைத்துள்ளது.

ஒட்டுமொத்த தரவுகளில் 63 நாடுகள் உள்ளன. 63வது இடத்தில் வெனிசுலா நாடு உள்ளது. முன்னணி பொருளாதார நாடுகளில் தற்போது அமெரிக்க மற்றும் சீன நாடுகள் தான் பின்னுக்கு சென்றுள்ளது. பொருளாதார செயல்பாட்டு காரணியை பொறுத்தவரை உள்நாட்டு பொருளாதார நிலவரம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, அந்நிய முதலீடு, வேலைவாய்ப்புகள் மற்றும் விலைவாசி ஆகியவைகளை கொண்டு அளவிடப்படுகிறது.

அரசு செயல்திறனை காணும் போது நிதி ஆதாரம், வரி சார்ந்த கொள்கைகள், நிறுவன கட்டமைப்பு மற்றும் சமூக கட்டமைப்பு, வணிக சட்டங்கள் ஆகியவை முக்கிய புள்ளிவிவரங்களாக பெறப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டாட்டா மோட்டார்ஸ் – நான்காம் காலாண்டில் ரூ.9,894 கோடி நிகர நஷ்டம்

டாட்டா மோட்டார்ஸ் – நான்காம் காலாண்டில் ரூ.9,894 கோடி நிகர நஷ்டம் 

Net Loss of Rs.9,894 Crore in Q4FY20 – Tata Motors

வாகனத்துறையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருப்பது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம். டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமாக விளங்கும் இந்நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 3.07 லட்சம் கோடி ரூபாய். நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 82,800.

1945ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் உலகின் முக்கிய 500 நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. ரயில் இன்ஜின்கள், பயணிகளுக்கான பிரிவில் பெரு வாகனங்கள், லாரிகள், வேன்கள், பேருந்துகள், நான்கு சக்கர வாகனங்கள், கட்டுமான துறைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் ராணுவத்திற்கு தேவையான வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

இங்கிலாந்தின் ஜாக்குவார் லேண்ட் ரோவர்(Jaguar Land Rover) நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, டாட்டா நிறுவனத்திற்கு உலகளவில் பல சவால்கள் ஏற்பட்டது. பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட அரசு கொள்கைகளில் மாற்றம் ஜாக்குவார் விற்பனையை பதம் பார்த்தது. உள்நாட்டில் டாட்டா மோட்டார்ஸ் நல்ல விற்பனை வளர்ச்சியை கொண்டிருந்தாலும், ஜாக்குவார்(JLR) இழப்பை மட்டுமே சந்தித்து வருகிறது.

மின்னணு வாகன பிரிவில் டாட்டா மோட்டார்ஸ் முக்கிய நிறுவனமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் துறைக்கான ஆராய்ச்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் வெளிப்பாடு வரவிருக்கும் காலங்களில் தெரிய வரும். அதே வேளையில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி கடந்த நான்கு வருடங்களாக பெரிதும் பாதித்துள்ளது.

2019-20ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில்(Quarterly Results) நிறுவனத்தின் வருவாய் ரூ. 62,493 கோடியாகவும், செலவினம் 61,806 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது. வரிக்கு பிந்தைய வருவாய் ரூ.9,894 கோடியை நஷ்டமாக கொண்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நான்காம் காலாண்டில் விற்பனையும் 30 சதவீதம் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த நிதியாண்டிலும் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 12 சதவீதம் குறைவாக இருந்துள்ளது. இருப்பினும் 2018-19ம் நிதியாண்டை காட்டிலும் சென்ற நிதியாண்டில் நிகர நஷ்டம் குறைந்துள்ளது. ஆனால் லாப பாதைக்கு நிறுவனம் எப்போது திரும்பும் என்பது தான் முதலீட்டாளர்களின் கேள்வி.

கடந்த ஐந்து வருட காலத்தில் விற்பனை வளர்ச்சி 5 சதவீதமாகவும், லாப வளர்ச்சி எதிர்மறையாகவும் உள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் 40 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) மூன்று வருட காலத்தில் 6 சதவீதமாகவும், 5 வருடங்களில் 11 சதவீதமாகவும் உள்ளது.

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.33,300 கோடி. கடன்-பங்கு விகிதம் 1.83 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் ஒரு மடங்கு அளவிலும் உள்ளது. நிறுவனத்தின் கடன் மட்டும் ரூ. 95,465 கோடி. நிறுவனர்களின் பங்களிப்பு 43 சதவீதமாகவும், 4 சதவீத பங்குகள் அடமானமாகவும் உள்ளது. அன்னிய முதலீட்டாளர்களின்(FII Holding) பங்களிப்பு 17 சதவீதமாக உள்ளது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com