All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

ஐக்கிய ராச்சியத்தின் பொருளாதார வளர்ச்சி – 16 சதவீதம்

ஐக்கிய ராச்சியத்தின் பொருளாதார வளர்ச்சி – 16 சதவீதம் 

GDP growth to 16 Percent in the 3rd Quarter – United Kingdom

கொரோனா பெருந்தொற்றின் உருமாற்றம் பெற்ற வைரஸ் காரணமாக மீண்டும் ஒரு முறை ஊரடங்கு நிலைக்கு பிரிட்டன் தள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய ராச்சியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) சேவை துறை 79 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கிறது. உற்பத்தி துறை 10 சதவீத பங்களிப்பை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொண்டுள்ளது.

சேவை துறையில் அரசின் பங்களிப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை 19 சதவீதம் என்ற அளவினை கொண்டுள்ளது. ஐக்கிய ராச்சியத்தின் மொத்த பொருளாதார மதிப்பில் விவசாயம் ஒரு சதவீத பங்களிப்பை மட்டுமே பெற்றிருக்கிறது.

பொருட்கள் மற்றும் சேவையில் ஏற்றுமதி 28 சதவீதத்தையும், இறக்குமதி 30 சதவீதத்தையும் கொண்டிருக்கிறது. நடப்பாண்டின் செப்டம்பர் காலாண்டிற்கான பொருளாதார வளர்ச்சியை தற்போது வெளியிட்டுள்ளது இந்த அரசு. ஜூலை முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலாண்டில் ஐக்கிய ராச்சியம் 16 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

இது கடந்த 65 வருடங்களில் காணப்படாத மிக வேகமான பொருளாதார வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தின் ஊரடங்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மதிப்பீடும் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி கொரோனா காலத்திற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது இன்னும் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படவில்லை என்பதனை காட்டுகிறது.

நடப்பாண்டின் முதல் இரு காலாண்டுகள் முறையே (-3) மற்றும் (-18.8) என்ற பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மூன்றாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்ததற்கு காரணமாக தனியார் மற்றும் அரசு நுகர்வு இருந்துள்ளது. முதல் ஊரடங்குக்கு பிறகான காலத்தில் தொழிற்துறை சிறிய அளவில் மட்டுமே வளர்ச்சிக்கு துணைபுரிந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

 நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2021ம் ஆண்டு வரவிருக்கும் புதிய ஐ.பி.ஓ. முதலீடு – என்ன செய்யலாம் ?

2021ம் ஆண்டு வரவிருக்கும் புதிய ஐ.பி.ஓ. முதலீடு – என்ன செய்யலாம் ?

Are you ready to invest in the upcoming IPO ? (IPO Mania 2021)

நடப்பு வருடத்தில் பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியையும், அதற்கடுத்தாற் போல் வரலாற்றில் இல்லாத வெகு குறைவான காலத்தில் மீண்டு வந்ததையும் பார்த்திருப்போம். உலக பொருளாதார மந்தநிலை இன்னும் சரிசெய்யப்படாத நிலையில், வளர்ந்த நாடுகளின் கடன் தன்மை(Debt) அதிகரித்து வரும் நிலையில் பங்குச்சந்தைகள் மட்டும் எப்படி வெற்றி நடைபோடுகின்றன ?

2020ம் வருடத்தின் துவக்கத்தில் மந்தநிலையை சந்தித்து வந்த பங்குச்சந்தை, மார்ச் மாத வீழ்ச்சியில் பல பங்கு முதலீட்டாளர்களை பீதி அடைய வைத்த (வாய்ப்பை அளித்த) சந்தை பின்பு ஐ.பி.ஓ. எனும் முதன்மை சந்தையில் வந்த நிறுவனங்களை வரவேற்று லாபங்களை அள்ளிக்கொடுத்தது எப்படி ?

  • ஐ.பி.ஓ.(IPO) வின் வரலாறு தான் என்ன ?
  • உண்மையில் ஐ.பி.ஓ. மூலம் சிறு முதலீட்டாளர்கள் லாபம் பெற்றுள்ளார்களா ?
  • முதன்மை சந்தையில் லாபம் பார்க்க மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன ?
  • வாய்ப்புகளும், விரயமும் – சொல்லப்படாத ஐ.பி.ஓ. நிகழ்வு
  • 2021ம் ஆண்டு வரவிருக்கும் ஐ.பி.ஓ. நிறுவனங்கள்
  • இதற்கு முந்தைய ஐ.பி.ஓ. முதலீட்டு வாய்ப்புகளை தவற விட்டீர்களா ?

வாருங்கள், வரும் சனிக்கிழமை மாலை 05:15 மணிக்கு இணையம் வழியாக பேசுவோம்…

பதிவுக்கு:

IPO Mania Webinar – Registration

கட்டணம்: ரூ. 199 மட்டும்

நாள் மற்றும் நேரம்: 26-12-2020 & மாலை 05:15 – 06:30

பதிவுக்கு பின்னர் உங்களுக்கான இணைப்பு (Webinar Link) மின்னஞ்சல் மற்றும்  குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் அதிகரித்து வரும் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம்

மீண்டும் அதிகரித்து வரும் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 

Unemployment rate is rising again – CMIE Data

நடப்பாண்டில் ஏப்ரல் மாத ஊரடங்கின் போது, நாட்டின் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது வேலைகளை இழந்தனர். குறிப்பாக அமைப்பு சாரா வேலைகளில் தான் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. அடுத்தடுத்த மாதங்களில் கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை அதிகரித்த நிலையில் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டிருந்தது.

எதிர்பாராமல் ஏற்பட்ட தேவையின் காரணமாக உணவுப்பொருட்கள் சார்ந்த துறையில் பெரிதான பாதிப்பு எதுவுமில்லை. மார்ச் மாதத்தில் காணப்பட்ட நாட்டின் 8.75 சதவீத வேலைவாய்ப்பின்மை விகிதம், ஏப்ரல் மாத ஊரடங்கில் 23.52 சதவீதமாக அதிகரித்தது. இது வரலாற்றில் இல்லாத அளவாக சொல்லப்பட்டது.

2020ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நகர்ப்புறங்களில் 24.95 சதவீதமும், கிராமப்புறங்களில் 22.89 சதவீதமும் வேலைவாய்ப்பின்மை காணப்பட்டது. பின்னர் மே மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 21.73 சதவீதமாகவும், இதுவே ஜூன் மாதத்தின் முடிவில் 10.18 சதவீதமாகவும் இருந்தது.

பின்னர் படிப்படியாக குறைந்த இந்த விகிதம் ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலத்தில் 6-8 சதவீதம் என்ற அளவிற்குள் இருந்தது கவனிக்கத்தக்கது. பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்களில் தற்போது 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பணியாளர்கள் வர தொடங்கியது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு துணைபுரியும்.

அதே வேளையில், பொருளாதார மந்தநிலை இன்னும் ஓய்ந்தபாடில்லை. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் உலகம் முழுவதும் சுமார் 15 கோடி பேர் ஏழ்மைக்கு தள்ளப்படுவர் என சுகாதார புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் குறிப்பாக குறைந்த அளவிலான வருவாய் கொண்டிருப்போர் மற்றும் நீண்டகாலமாக குறைவான வருவாயை மட்டுமே கொண்டிருக்கும் நாடுகள் பாதிக்கப்படும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

உள்நாட்டில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கில் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்புகள் ஒருபுறம் உயர்ந்த நிலையிலும், வேலை இழந்தவர்களில் பெரும்பாலான நபர்கள், இன்னும் கொரோனாவுக்கு முந்தைய ஊதிய விகிதத்தை பெறவில்லை என கொள்கை ஆராய்ச்சிக்கான மையம்(CPR) கூறுகிறது.

நடப்பு மாதத்தில் டிசம்பர் 18ம் தேதி முடிவின் படி, நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 8.6 சதவீதம் மற்றும் கிராமப்புறங்களில் 8.2 சதவீதமாகவும் உள்ளது. டிசம்பர் 1ம் தேதி 6.60 சதவீதமாக இருந்த விகிதம், 18ம் தேதி முடிவில் 8.34 சதவீதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

வேளாண்மை சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின் காரணமாக, நாளொன்றுக்கு 3500 கோடி ரூபாய் வரை பொருளாதார இழப்பு ஏற்பட உள்ளதாக அசோசம் வர்த்தக அமைப்பு(Assocham) தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிக்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சியில் மீண்டும் ஒரு பாதகத்தை ஏற்படுத்தலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் முதல் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதி திட்டம்

நாட்டின் முதல் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதி திட்டம் 

India’s First International REIT Fund – Kotak Mutual Fund

பொதுவாக பங்குச்சந்தைக்கும், ரியல் எஸ்டேட் என சொல்லப்படும் வீட்டுமனை துறைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு நீர்மை நிறை(Liquidity) தான். பங்குச்சந்தையை பொறுத்தவரை பணப்புழக்கம் எப்போதும் அதிகம். அதே வேளையில் நாம் செய்த முதலீட்டு தொகையிலிருந்து சிறிய அளவில் கூட பங்குகளை விற்று எளிதாக பணமாக்கலாம். ஆனால் ரியல் எஸ்டேட் துறையில் உள்ள ஒரே குறை, இந்த நீர்மை நிறை தான்.

மேலும் ரியல் எஸ்டேட் துறையில் நாம் பங்குகளை போல வாங்கிய நாளன்றோ அல்லது நமக்கு எப்போது பணம் தேவைப்படுகிறதோ அப்போது பங்குகளை விற்பது போல இங்கே செய்ய முடியாது. அதற்கான கட்டணங்களும் வீட்டுமனை துறையில் சற்று அதிகம். இந்த குறையை களைய ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்(Real Estate Investment Trust) என்னும்  அமைப்பு கடந்த 2007ம் ஆண்டு செபியால் துவங்கப்பட்டது.

இதுவே அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட காலம் 1960ம் ஆண்டு. ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பெரு நிறுவனங்கள் பங்கேற்பதற்கும், சிறு முதலீட்டாளர்களும் தாங்கள் செய்த முதலீட்டை எளிதாக விற்பதற்கும், தொடர் வருமானத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த அமைப்பு உதவியது. இந்த துறையில் நுழையும் நிறுவனங்களுக்கும் சில வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டது.

குறைந்தபட்ச முதலீடாக 500 கோடி ரூபாயும், 80 சதவீத முதலீடு முழுவதுமாக முடிவடைந்த கட்டிடங்களிலும், 10 சதவீத தொகை மட்டுமே கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கும் மனையிலும்(Under construction) இருக்க வேண்டுமென்ற வரைமுறைகள் உண்டு. ஈட்டப்படும் வருவாய், முதலீட்டாளர்களுக்கு 90 சதவீதம் என்ற அளவில் ஈவுத்தொகையாக (Dividends) மட்டுமே அளிக்கப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்யாமல், ஒரு பெரு மனை சொத்தில் குறிப்பிட்ட தொகையை மட்டுமே முதலீடு செய்து விட்டு, கணிசமான வருவாயை எதிர்பார்க்கலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மதிப்பீடுகள் செய்யப்படும் என்பதும் இதன் சிறப்பு.

ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதிக்கும்(REIT Funds), ரியல் எஸ்டேட் பரஸ்பர நிதி திட்டத்திற்கும்(Real Estate Funds) இடையே உள்ள வேறுபாடு, REIT முதலீட்டில் அதிகப்படியான ஈவுத்தொகை வருவாயை பெறலாம் என்பதே.

ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்டில் பங்கு பெறும் நிறுவனங்கள் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், சேமிக்கும் கிடங்குகள் போன்ற தொடர் வருவாய் அளிக்கும் சொத்துக்களை சொந்தமாக கொண்டிருக்கும் அல்லது நிதியளிக்கும் நிறுவனங்களாக இருக்கும். இது பங்குச்சந்தையில்  பட்டியலிடப்படுவது போன்று வெளிப்படைத்தன்மையுடன் பட்டியலிடப்படும். சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை யாரும் முதலீடு செய்து தொடர் வருவாய் மற்றும் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தலாம். நடப்பில் வீட்டுமனை துறையில் காணப்படும் குறைகளை களைந்து, நேர்மையான முறையில் சிறிய முதலீடும் செய்வதற்கு இந்த முதலீட்டு டிரஸ்ட் உதவும்.

கடந்த ஆண்டு நாட்டின் முதல் REIT ஐ.பி.ஓ. வெளிவந்தது. முதன்மை சந்தையில் வெளிவந்த எம்பஸி ஆபிஸ் பார்க்ஸ் (Embassy Office Parks) நிறுவனம் வாடகை மற்றும் தொடர் வருவாய் அளிக்கும் வீட்டுமனை துறையில் முதலீடு செய்து வருகிறது. மேலும் தனக்கென பல ரியல் ஸ்டேட் சொத்துக்களை கையகப்படுத்தியுள்ளது.

சொல்லப்பட்ட நிறுவனம் உள்நாட்டு சந்தையில் இருந்து வரும் நிலையில், தற்போது கோடக்(Kotak) பரஸ்பர நிதி நிறுவனம் நாட்டின் முதல் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதித்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டமாக வந்திருக்கும் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதி, திறந்த முடிவு திட்டமாக வந்துள்ளது(Open Ended fund – Fof).

நடப்பு டிசம்பர் 7 முதல் 21 வரை ஆரம்ப நிலை பதிவாக வரும் இத்திட்டம் பின்னர் பொதுவெளியில் பரஸ்பர நிதியின் கீழ் செயல்படும். இதன் முதலீட்டு சொத்து பங்களிப்பு சிங்கப்பூரில் 48.8 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 33.7 சதவீதமும், ஹாங்காங் நாட்டில் 9 சதவீதமாகவும் உள்ளது. நியூஸிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் ஒரு சதவீதத்திற்கு மேலாக முதலீடு செய்யப்படும். உள்நாட்டில் 0.9 சதவீதம் என்ற அளவில் மட்டுமே முதலீடு அமையும்.

SMAM(Sumitomo Mitsui DS Asset Management Company) ஆசிய ரியல் எஸ்டேட் முதலீட்டு திட்டத்தின் படி செயல்படும் இந்த திட்டம், ஆசிய-பசிபிக் பகுதியில் முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 8 சதவீத வருவாயை அளிக்கும் இத்திட்டத்தின் முதலீடு டாலர்களில் கையாளப்படுவதால் வெளிநாடுகளில் காணப்படும் ரியல் எஸ்டேட் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய், உள்நாட்டு முதலீட்டாளருக்கு சாதகமாக அமையும்.

எனினும் இது போன்ற திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு தற்போது குறைவு என்பதால், இந்த துறை சிறப்பாக செயல்பட இன்னும் சில காலமாகும். வரி விதிப்புகளும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமையவில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் – 6.93 சதவீதம்

நாட்டின் நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் – 6.93 சதவீதம் 

India’s Retail Inflation to 6.93 Percent in November 2020 – CPI

நடப்பு 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரித்து வந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 5.84 சதவீதமாக இருந்த நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI – Retail Inflation), அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 7.61 சதவீதம் வரை சென்றது. சொல்லப்பட்ட அக்டோபர் மாத பணவீக்க விகிதம், கடந்த ஆறு ஆண்டுகளில் காணப்படாத அதிகபட்ச அளவாக சொல்லப்பட்டிருந்தது.

மத்திய ரிசர்வ் வங்கியின் பணவீக்க கொள்கையின் படி, சில்லரை விலை பணவீக்க இலக்கு 2-6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத பணவீக்கம் வெளியிடப்பட்ட நிலையில், இது 6.93 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக நாட்டின் பணவீக்கம், மத்திய வங்கியின் இலக்கினை விட அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உணவுப்பொருட்கள், வீட்டுமனை, புகையிலை, காலணி மற்றும் துணிமணிகளின் விலை கணிசமாக அதிகரித்து வந்ததன் காரணமாக சில்லரை விலை பணவீக்கம் அதிகமாக உள்ளது. சில்லரை விலை பணவீக்கத்தில் 46 சதவீதம் உணவு மற்றும் குளிர்பானங்களின் பங்களிப்பும், பால் பொருட்கள் 6.61 சதவீதமும், தானிய வகைகள் 9.67 சதவீதமும், காய்கறிகள் 6 சதவீதமும் பங்களிப்பை கொண்டுள்ளது.

எண்ணெய் வகைகள் 3.56 சதவீதம், மாமிசம் மற்றும் மீன் 3.61 சதவீதம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பங்களிப்பு 8.6 சதவீதம், சுகாதாரம் 6 சதவீதமாகவும் உள்ளது. வீட்டுமனை 10 சதவீத பங்களிப்பை சில்லரை பணவீக்கத்தில் கொண்டுள்ளது.

ஒளி மற்றும் எரிபொருட்களின் பங்களிப்பு(Fuel and Light) 6.84 சதவீதமும், துணிமணி மற்றும் காலணிகள் 6.53 சதவீதத்தையும் உள்ளடக்கியுள்ளது. நாட்டின் மொத்த விலை பணவீக்கம்(WPI) நவம்பர் மாதத்தில் 1.55 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஒன்பது மாத உயர்வாக சொல்லப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இளமையில் ஓய்வு – நிச்சயமாக்கும் ஸ்மார்ட் பிளான்

இளமையில் ஓய்வு – நிச்சயமாக்கும் ஸ்மார்ட் பிளான்

Early Retirement – Smart Plan for Success

நவீன யுகத்தில், “Workaholic” என்ற வார்த்தை அடிக்கடி உச்சரிக்கப்பட்டாலும் வேலைப்பளு, வேலை திருப்தியின்மை என்பது ஒரு பக்கம் பரவலாக பார்க்கப்படுகிறது.

அது என்ன ‘ Workaholic ‘ ?

Workaholic என்பது வேலை செய்ய வேண்டிய கட்டாயம் (அ) எப்போதும் வேலை, வேலை என்றிருப்பது.

நம்மில் பெரும்பாலோர் விருப்பமில்லாமல் பணிச்சுமையை ஏற்பதற்கு காரணம் பொருளாதார தேவை தான். இது இன்றைய காலத்தின் அதிக சம்பளம் மற்றும் ஆடம்பரத்துக்கும் பொருந்தும்.  உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்று அத்தியாவசிய தேவைகள் மறைந்து, இன்று விருப்பங்களை நிறைவேற்றும் நிலை மட்டும் தான் தலை தூக்கி உள்ளது. எனக்கு எது தேவை என்பதை விட, எனக்கு இது வேண்டும் என்ற கொள்கை இன்று வளர்கிறது. நாகரீக மாற்றத்தில் இதுவும் அடங்கும் தானே.

“ கால் காசுனாலும் கவர்ன்மென்ட் வேலை “ என்பதெல்லாம் இன்று பொய்யாகி விட்டது.இன்றையளவில் எல்லா வேலைகளிலும் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு என்ற விஷயம் இல்லாமையால், சம்பள அதிகரிப்பை மட்டுமே பெரும்பாலோர் எதிர்பார்க்கின்றனர். ஒரு புறம் நிறுவனங்களுக்கு வேலைக்கு  ஆட்கள் கிடைக்கவில்லை, மறுபுறம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற போதும், தாங்கள் பணிபுரியும் துறையில் நாட்டமின்மை, பணிச்சுமையாக கருதுதல் என்பது வாடிக்கையாகி விட்டது. முன்னொரு காலத்தில் ஒரே துறை அல்லது ஒரே  நிறுவனத்தில் 30 அல்லது 40 வருடங்கள் பணிபுரிந்த அனுபவங்கள் இன்று பார்க்க முடிவதில்லை. இன்னும் சொல்ல போனால், இன்றைய தலைமை அதிகாரிகளும் நீண்ட காலம் ஒரு நிறுவனத்தில் நீடிப்பதில்லை. இதற்கு பொதுவான காரணமாக சொல்லப்படுவது, நாம் நமக்கு பிடித்த  துறையை அல்லது கல்வியை தேர்ந்தெடுக்காதது  தான்; பணியில்  சுமை என்று  நாம் பொத்தாம் பொதுவாக சொல்லி விட முடியாது. தினக்கூலியிலிருந்து, டாட்டா (Tata) வரை எல்லாருக்கும் பணிச்சுமை உள்ளது. அந்த பணிச்சுமை தான் சிலரை மாபெரும் மனிதர்களாக மாற்றியுள்ளது. ஆனால் நவீன யுகம் மீண்டும் தன் நிலைக்கு திரும்புகிறது. இன்றைய தலைமுறையில் பணிச்சுமை என்பதை விட, வேறு ஒரு வார்த்தை புதுமையாக்கப்பட்டுள்ளது – “ இளமையில் ஓய்வு(Early Retirement) ”

இளமையில் ஓய்வு:

“ அப்போதெல்லாம் நாங்க 60 வயது வரை உழைத்து ஓய்வு பெற்றோம் “ என்ற வாசகத்தை இனி நாம் கேட்க போவதில்லை. இன்று இளமையில் ஓய்வு என்ற வார்த்தை தான் போக்காக (Trending) உள்ளது.  இளமையில் ஓய்வு பெறுவதை இருவகையாக பிரித்து பார்க்கலாம்,

  • இருக்கும் பணியிலிருந்து இளமையில் ஓய்வு பெற்று புதிதாக தொழில் தொடங்குவது / தொழில்முனைவோராக விரும்புவது. (Become an Entrepreneur )
  • இனி எந்த வேலையிலும், தொழிலிலும் ஈடுபட போவதில்லை; வாழ்க்கையை விருப்பம் போல கழிக்க வேண்டும் என விரும்புவது. (Live as Life, Live as like ).
Become an Entrepreneur:

இருக்கும் பணியிலிருந்து  இளமையில் ஓய்வு பெற்று அல்லது தன்னை விடுவித்து கொண்டு தொழில் முனைவோராக களமிறங்குவது இன்று நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு. உண்மையில் இது ஒரு நல்ல விஷயம் தான். “ நல்ல தொழில் செய்ய வேண்டும், நாலு பேருக்கு வேலை தர வேண்டும் “ என்பது ஒரு லட்சிய நோக்கமே. பணம் சம்பாதிக்க தான் தொழில் தொடங்கினாலும், மறைமுகமாக நாம் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். ஆனால் தொழில்முனைவோராக சிறக்க சரியான திட்டமிடல் மற்றும் செயலாற்றல் அவசியம். வெறும் புதுமையான யோசனைகளை மட்டும் வைத்து கொண்டு வெற்றி பெற்று விட முடியாது.

Live as Life, Live as like:

“ இனி மேல் நான் எந்த வேலைக்கும் செல்வதை விரும்பவில்லை; தொழில் செய்யவும் இல்லை. எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ போகிறேன். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக வேண்டும், இயற்கையை ரசிக்க வேண்டும்” – இதுவும் இங்கு நடக்கும். சில சமயங்களில் பலருக்கு இந்த நிலை பயன்படாமல் போனாலும், சிலருக்கு அர்த்தமுள்ளதாகி விடும். இருக்கும் வாழ்க்கையை பிடித்தவாறு உணர வேண்டும், பிறரை நேசிக்க வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை. அப்படியே வாழலாம். இன்று நாம் பார்க்கும் புதுமையான தொண்டுகளும், புவி சார்ந்த நிகழ்வுகளும் அப்படி தான் அமைந்தன.

‘ அப்புறம் என்ன பிரச்சனை என்கிறீர்களா  ? ‘

இனிமேல் தானே விஷயம் இருக்கு. இருக்கும் வேலையை விட்டு விட்டு நீங்கள் தொழில்முனைவோரானாலும் சரி, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக உருவாக்கினாலும் சரி – வேலையை கடந்தவுடன் தான் நமது வாழ்க்கை ஆரம்பமாகிறது என்பதை மறக்க வேண்டாம். இளமையில் ஓய்வு பெறுவதற்கு ஒரு மன தைரியம் வேண்டும். இளமை கால ஓய்வு என்பது நாம் இனி வாழ போகும் காலம் நன்மை செய்வதாக இருக்க வேண்டும். அக்கரைக்கு இக்கரை பச்சையாகி விட கூடாது. அதனால் நமது இளமை கால ஓய்வுக்கான நிதித்திட்டமிடல்(Financial Planning) அவசியம்.

உதாரணத்திற்கு, நாம் 40 வயதில் ஓய்வு பெற விரும்பினால் நாம் அடுத்து எத்தனை வயது அல்லது காலம் வரை இருக்க போகிறோம் என்பது முக்கியம். 70 வயது வரை நம்மால் வாழ முடியும் என்ற எண்ணம் (கணிப்பு தான்) இருந்தால், ( 70-40 = 30 ) 30 வருடத்திற்கான  செலவுகளை (அடிப்படை தேவை, மருத்துவம், போக்குவரத்து ) எவ்வாறு  கையாள போகிறோம் என்பது நிபந்தனை. வேலையை துறந்து பின் செயலாற்றல் மிகவும் கடினம். நம்மால் தொழிலில் சிறந்து விளங்க எவ்வளவு காலமாகும், நமது குடும்பத்திற்கான அத்தியாவசிய செலவுகள் என்பவை எல்லாம் கணக்கிடப்பட வேண்டும். இதற்கான தகவல்கள்  நிதி சார்ந்த, காப்பீடு  சம்மந்தமான இணையதளத்தில் Retirement Planning, Retirement Calculator என்ற வசதி உள்ளது. அவற்றை பயன்படுத்தி நமக்கு தேவையான கார்பஸ் தொகையை தயார் செய்து கொள்ளலாம் அல்லது  சொத்துக்களை கையாள வேண்டும். பணவீக்கத்தையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

பொதுவாக, இந்த Retirement Calculator சரியாக சொன்னாலும், நாம் சற்று கூடுதலான பாதுகாப்பை ஏற்படுத்துவது நலம். ஏனென்றால் நாம் இளமையில் சம்பாதிப்பதை விட, வயதான காலத்தில் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவு. அதாவது நாம் பேருந்தில் பயணம் செய்யும் போது, பயணக்கட்டணத்தை விட சற்று கூடுதலான தொகையை வைத்திருப்போமே, அது போன்று கூடுதலாக கார்பஸ் தொகையை ஏற்படுத்த வேண்டும்.

General Retirement Planning:

இந்த முறையில், நமக்கு தேவைப்படும் காரணிகள் – நமது தற்போதைய வயது, ஓய்வு பெறப்போகும் வயது, தற்போதைய ஆண்டு வருமானம், மாத செலவுகள், தற்போதைய  முதலீடு மற்றும் சேமிப்பு இருப்பு, எதிர்காலத்தில் அதற்கு எதிர்பார்க்கும் வருமானம், பணவீக்கம் ஆகியவற்றை நாம் குறித்து வைத்து கொண்டு, நமது இளமை கால நிதித்திட்டமிடலை துவக்கலாம்.

( Current Age, Retirement Age, Annual Income, Monthly Expenses, Current Savings and Investing, Expected Return on Investment(ROI), Inflation )

Early Retirement Formula (ERF):

டக் மஸ்ஸி (Doug Massey) என்ற ஆசிரியர் ஓய்வு கால திட்டத்திற்கான விதியை உருவாக்கியுள்ளார். இவர் தனது 41வது வயதில் மற்றவர்களுக்காக வேலை செய்வதிலிருந்தும், தொழில் மற்றும் முதலீட்டில் இருந்தும் தன்னை முழுமையாக விடுவித்து (ஓய்வு) கொண்டார்.

ERF =  Your Age X  Networth / Yearly Expenses

Maintain the ERF value is > 1000

உதாரணத்திற்கு, உங்களுடைய வயது 30 மற்றும் உங்களிடம் இருக்கும் சொத்து (மனை, வீடு, முதலீடு, சேமிப்பு, பணம் கையிருப்பு) ரூ. 2,00,00,000 /- (2 கோடி) மற்றும் ஆண்டு செலவு- ரூ. 6,00,000 /- எனில்,

[ 30 X 2 Crores / 6 lakhs ] = 1000

– ஓய்வு எண் 1000 க்கு குறையாமல் இருப்பது நல்லது.

இதை போல, நீங்களும் உங்களுடைய இளமை கால ஓய்வு எண்ணை கணக்கிடலாம். அவர் இந்த விதியில் பரிந்துரைப்பது கூடுதலான தொகையை சேர்க்க வேண்டும் என்பது தான்.

இளமையில் ஓய்வு பெறுவதும் ஒரு சாமர்த்தியமான இலக்கு தான்; இலக்கை சரியாக திட்டமிடுங்கள், அதிகப்படியான தொகையை எதிர்காலத்திற்காக இன்றே முதலீடு செய்யுங்கள்.

இளமையில் வெல்லுங்கள் !

வாழ்க வளமுடன், 

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஒரு கோடி ரூபாய்க்கு தனிநபர் விபத்து காப்பீடு – வரைவு விதிமுறை வெளியீடு

ஒரு கோடி ரூபாய்க்கு தனிநபர் விபத்து காப்பீடு – வரைவு விதிமுறை வெளியீடு 

Rs.1 Crore Personal Accident Policy – Draft Norms – IRDAI

மத்திய அரசால் கடந்த 2015ம் ஆண்டு பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்ட திட்டம் தான் பிரதம மந்திரி பாதுகாப்பு காப்பீட்டு திட்டமாகும்(Pradhan Mantri Suraksha Bima Yojana). இது ஒரு விபத்து காப்பீட்டு திட்டம், அனைவரும் பயன்பெறும் வகையில் 2 லட்ச ரூபாய் என்ற பாதுகாப்பு தொகையை குறைந்த பிரீமியத்தில் பெறலாம்.

அனைத்து வங்கிகளிலும் கிடைக்கப்பெறும் இத்திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள தனிநபர் ஒருவர், ஆண்டுக்கு 12 ரூபாய் மட்டுமே செலுத்தி ரூ. 2 லட்சம் காப்பீட்டை பெறலாம். வாகன காப்பீட்டுடன் தனிநபர் விபத்து காப்பீடு சேர்ந்து வந்தாலும், முழுமையான தனிநபர் விபத்து காப்பீடு(Standalone Policy) என்பது அதனை தனி பிரிவாக எடுத்து கொண்டால் நமக்கு முழு பலனை அளிக்கும்.

விபத்து காப்பீட்டை பொறுத்தவரை மருத்துவ காப்பீட்டை அளிக்கும் நிறுவனங்களும் அதற்கான தனிநபர் பாலிசிகளை அளித்து வருகிறது. வெறுமென விபத்தினால் ஏற்படும் இறப்பு மட்டுமில்லாமல், நிரந்தர மற்றும் பகுதி சார்ந்த இயலாமை(Permanent and Partial Disability) இருக்கும் நிலையில் அதற்கான மருத்துவ செலவு மற்றும் முழு காப்பீடு தொகையும் வழங்கப்படுகிறது.

காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.(IRDAI) தற்போது விபத்து காப்பீடு சார்ந்த புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. தனிநபர் விபத்து காப்பீட்டுக்கான தொகையில் குறைந்தபட்சமாக ரூ.2.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை வரைவை அறிவித்துள்ளது.

இந்த வரைவுமுறை வரும் ஏப்ரல் 1, 2021 முதல் புதிய விபத்து காப்பீட்டு திட்டமாக வெளிவர உள்ளது. திட்டத்தில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள தனிநபர் இணையலாம் எனவும், விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் காப்பீட்டு தொகையில் குறிப்பிட்ட தொகையை ரொக்கமாக பெறலாம் என்ற கூடுதல் அம்சங்களையும் கூறியுள்ளது.

எனினும் குறைந்தபட்ச பிரீமிய தொகை எவ்வளவு என்பதனை ஐ.ஆர்.டி.ஏ. சொல்லவில்லை. இதன் காரணமாக காப்பீட்டு நிறுவனங்களே பிரீமிய தொகையை நிர்ணயிக்கலாம் என தெரிகிறது. காப்பீட்டுக்கான பிரீமிய தொகையை  மாதாமாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை, அரையாண்டு, இல்லையெனில் ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கல்யாணி குழுமம் – பங்குச்சந்தை அலசல்

கல்யாணி குழுமம் – பங்குச்சந்தை அலசல் 

Kalyani Group – Conglomerate – Fundamental Analysis

கல்யாணி குழுமம் கடந்த 1960ம் ஆண்டு துவங்கப்பட்டது. தொழிலதிபர் திரு. நீல்காந்த் ராவ் கல்யாணி அவர்களின் புதல்வன் பாபா கல்யாணி(Babasaheb Kalyani) இந்த குழுமத்தின் தலைவராக உள்ளார். இந்திய பன்னாட்டு நிறுவனமாக விளங்கும் கல்யாணி குழுமம் தனது தொழிலை பொறியியல், எஃகு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நகர்ப்புற உள்கட்டமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு ரசாயனம் என பரவலாக்கியுள்ளது. வாகனத்துறை மற்றும் ராணுவத்திற்கு தேவையான கூறுகளை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான பாரத் போர்ஜ்(Bharat Forge), கல்யாணி குழுமத்தின் ஒரு அங்கம் தான்.

பில்லியன் டாலர்களில் வருவாயினை கொண்டிருக்கும் இந்த குழுமம் 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்களையும், பல வளர்ந்த நாடுகளில் தனது கிளைகளையும் அமைத்துள்ளது. உலக தொழில் சந்தையில் தலைமை வகிக்கும் பல நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் கல்யாணி குழும நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

உலகின் மிகப்பெரிய போர்ஜிங்(Forging) நிறுவனம், போர்ஜிங் துறையில் நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமாகவும், முன்னணி பொறியியல் எஃகு உற்பத்தியாளராகவும் இதன் குழும நிறுவனங்கள் உள்ளன. குழுமத்தின் முக்கிய நிறுவனங்களாக பாரத் போர்ஜ், கல்யாணி டெக்னோ போர்ஜ், கல்யாணி ஸ்டீல், கல்யாணி தெர்மல், கல்யாணி டெக்னாலஜிஸ், சி.டி.பி.(CDP) பாரத் போர்ஜ், கல்யாணி பிரேக்ஸ், கல்யாணி ஷார்ப் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

பிரபல ஐ-லீக்(I-League) கால்பந்தாட்டத்தின் பாரத் எப்.சி.(Bharat FC) அணி, கல்யாணி குழுமத்தின் ஒரு அங்கமாகும். இந்திய பங்குச்சந்தையில் கல்யாணி குழுமத்தின் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. பாரத் போர்ஜ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 25,000 கோடி ரூபாய். 50 வருடங்களுக்கு மேலான தொழில் அனுபவத்தை கொண்டிருக்கும் பாரத் போர்ஜ் வார்ப்புகள் மற்றும் போர்ஜிங்(Castings & Forging) பிரிவில் உள்ளது.

உயர்தர கார்பன் மற்றும் அலாய் ஸ்டீல் போர்ஜ், இயந்திர கூறுகளை உற்பத்தி செய்யும் பிரிவில் கல்யாணி டெக்னோபோர்ஜ் நிறுவனம் உள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்ட கல்யாணி ஸ்டீல்(Kalyani Steels) நிறுவனம் இரும்பு மற்றும் எஃகு தயாரிப்புகளின் உற்பத்தி மற்றும் விற்பனை வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. கடனில்லா நிறுவனமாக காணப்படும் இந்த நிறுவனத்தில் பாரத் போர்ஜ் முதலீட்டு நிறுவனம் 39 சதவீத பங்குகளை வைத்துள்ளது. பொதுவாக ஸ்டீல் துறை உலகளாவிய காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும் துறையாக காணப்படுகிறது.

கல்யாணி ஸ்டீல் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக டாட்டா, மஹிந்திரா, வால்வோ, மாருதி சுசூகி, நிசான், பெல்(BHEL), போர்ஸ் மோட்டார்ஸ், போர்டு, ஹூண்டாய், மெரிட்டார், ஐஷர் போன்ற நிறுவனங்கள் உள்ளன.

இருப்பினும், துறை சார்ந்த போட்டிகளை தன்னகத்தே கொண்டு கல்யாணி ஸ்டீல் நிறுவனம் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் கையிருப்பு 996 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 605 கோடி ரூபாய் சந்தை மதிப்புடைய கல்யாணி இன்வெஸ்ட்மென்ட்(Kalyani Investment) நிறுவனம், குழும நிறுவனங்களுக்கு தேவையான முதலீட்டை அளிக்க தொழில் செய்து வருகிறது. கடனில்லா நிறுவனமாக உள்ள இந்த நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 20 சதவீதமாக உள்ளது. கல்யாணி  குழுமத்தில் உள்ள நிறுவனங்களை பின்னொரு பதிவில் ஆழமாக அலசலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்தியாவின் பணக்கார பெண்களில் முதலிடம் – ரோஷ்ணி – எச்.சி.எல்

இந்தியாவின் பணக்கார பெண்களில் முதலிடம் – ரோஷ்ணி – எச்.சி.எல்.

Top Rich woman in India – Roshni Nadar of HCL Technologies

தொழில்முனைவோர்களில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவமானது. வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நாகரீக மாற்றங்கள் ஏற்பட்டு விட்டாலும், தொழில்முனைவில் பெண்கள் ஈடுபடுவது என்பது இன்றும் சவாலான விஷயமாக தான் இருந்து வருகிறது. அப்படியிருக்கும் நிலையில் பெண் தொழில்முனைவோர் ஒருவர் உயர்மட்ட அளவில் நிர்வகிப்பதும், போட்டி சூழலில் சாதிப்பதும் அந்த சமூகத்திற்கு சாதகமான அம்சமாக அமையும்.

இன்று நம் நாட்டில் தொழில்முனைவோர்களாக சாதிப்பதில் பெரும்பாலும் திருமணமான பெண்களே உள்ளனர். படித்து முடித்தவுடன் தொழில்முனைவில் ஈடுபடும் பெண்மணிகளின் விகிதம் அதிகமாகும் போது, அது தனிநபர் வளர்ச்சி மட்டுமில்லாமல் வரக்கூடிய சந்ததிகளின் வளர்ச்சியை பிரதிபலிக்க கூடும்.

நம்மூரில் சேமிப்பு மற்றும் பண நிர்வாகத்தில் இன்றும் வீட்டு பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. சிட் பண்டு, அஞ்சலக சிறு சேமிப்பு முதல் வீட்டிலிருந்தே தொழில்முனைவை ஏற்படுத்துவது வரை அவர்களது நிதி சார்ந்த பண்பு மேம்பட்டு காணப்படுகிறது.

கோடக் வெல்த்(Kotak Wealth) மற்றும் கரூன் இந்தியா(Hurun India) நிறுவனம் இணைந்து நடத்தும் நாட்டின் பணக்கார பெண்மணிகளின் பட்டியல் நேற்று(03-12-2020) வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் தனிநபர் ஒருவரின் நிகர சொத்து மதிப்பு அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்காக சில நெறிமுறைகளையும் இந்த நிகழ்வு கொண்டுள்ளது. அதாவது இந்த பட்டியலில் இடம் பெறுவோர் ஒரு நிறுவனத்தின் முழுநேர இயக்குனர் அல்லது நிர்வாக இயக்குனராக இருக்க வேண்டும், அவர் ஊதியம் பெறும் நபராக இருக்க வேண்டும், நிர்வாகத்தின் முக்கிய பதவிகளை வகிப்பவராக இருத்தல் வேண்டும் என சில கட்டுப்பாடுகளை கொண்டுள்ளது.

பட்டியலில் அடையாளம் காணப்பட்ட பெண்கள் கல்வி மற்றும் சுகாதார பராமரிப்புக்காக தங்களது பங்களிப்பை எவ்வாறு அளிக்கின்றனர் என்பதனையும் இந்த தரவு தெரிவிக்கிறது. சொல்லப்பட்ட பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் எச்.சி.எல். தொழில்நுட்ப நிறுவனத்தை(HCL Technologies) சேர்ந்த ரோஷ்ணி ஆவார். இவர் தற்போது நிறுவனத்தின் தலைவராக உள்ளார். எச்.சி.எல். நிறுவனத்தை துவங்கிய சிவ நாடாரின்(Shiv Nadar) புதல்வி தான் ரோஷ்ணி.

10 பில்லியன் டாலர் வருவாயை கொண்டிருக்கும் எச்.சி.எல். நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாகவும், இதன் கிளைகள் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது சேவையை கொண்டிருக்கிறது. ரோஷ்ணி அவர்களின் செல்வ மதிப்பு ரூ.54,850 கோடி. இரண்டாம் இடத்தில் பயோகான்(Biocon) நிறுவனத்தின் தலைவரான பிரபல கிரண் மசும்தார் உள்ளார். இவரது செல்வ மதிப்பு 36,600 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.

மூன்றாவதாக மருந்து துறையில் உள்ள யு.எஸ்.வி.(USV) நிறுவனத்தின் தலைமை பதவியில் உள்ள லீனா காந்தி உள்ளார். இவரது செல்வ மதிப்பு ரூ.21,340 கோடி. நான்காம் இடத்தில் டிவிஸ் லேப் நிறுவனத்தின் நீலிமா அவர்களும், ஐந்தாம் இடத்தில் மீண்டும் தமிழகத்தை சேர்ந்த பெண்மணி, ராதா வேம்பு (Zoho) அவர்களும் உள்ளனர். சொல்லப்பட்ட செல்வத்தின் மதிப்பு செப்டம்பர் 2020 காலாண்டுடன் முடிவடையும் நிலையில் கணக்கிடப்பட்டுள்ளது.

நூறு பேர் கொண்ட பணக்கார பெண்மணிகளின் பட்டியலில் 19 பெண்கள் நாற்பது வயதுக்கு குறைவானவர்கள், நகரங்கள் அடிப்படையில் மும்பை 32 பெண் பணக்காரர்களையும், டெல்லி 20 நபர்களையும், ஹைதராபாத் 10 நபர்களையும் உள்ளடக்கியுள்ளது. 15 சதவீத பெண்மணிகள் மெட்ரோ அல்லாத நகரங்களிலிருந்து வந்தவர்கள்.

39 வயதாகும் திருமதி. ரோஷ்ணி, சந்தையில் பட்டியலிடப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல் பெண் தலைவர் என்ற சாதனையையும் கொண்டுள்ளார். உலகின் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்களில் 54வது இடத்தை பிடித்துள்ளார் ரோஷ்ணி (போர்ப்ஸ் பட்டியல்). இவரது கணவர் ஷிகர் மல்ஹோத்ரா, எச்.சி.எல். சுகாதார பிரிவில் துணை தலைவராக உள்ளார். ரோஷ்ணிக்கு இரு புதல்வர்கள் உள்ளனர்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பிக் பேஸ்கட் நிறுவனத்தை வாங்கும் டாட்டா

பிக் பேஸ்கட் நிறுவனத்தை வாங்கும் டாட்டா 

Tata Group to buy Big Basket with a majority Stake

பெங்களூரு நகரத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் பிக் பேஸ்கட்(Bigbasket). இணையம் வழியாக மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் சேவையை இந்த நிறுவனம் செய்து வருகிறது. வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் உணவு பொருட்கள் இதன் மளிகை பொருட்களாக இருந்து வருகிறது.

உலகளவில் காணப்படும் சில பெரு நிறுவனங்களுடன் இணைந்து தனது சந்தைப்படுத்துதலை விரிவாக்கம் செய்தது பிக் பேஸ்கட். சுமார் 18,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் 1000 பிராண்டுகளுக்கு மேலாக தனது மளிகை அட்டவணையில் கொண்டிருந்த இந்நிறுவனம் பெங்களூரு மட்டுமில்லாமல், சென்னை, ஹைதராபாத், மும்பை, புனே, கோவை, கொல்கத்தா, டெல்லி மற்றும் மைசூரு என பல மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தனது சேவையை அளித்து வருகிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனமாக வலம் வந்த பிக் பேஸ்கட் நிறுவனத்தில் 17 முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். சொல்லப்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் ஒரு பில்லியன் டாலர்கள் அளவுக்கு முதலீட்டை ஈர்த்துள்ளது இந்தநிறுவனம். முதன்மை முதலீட்டாளர்களாக சீனாவை சேர்ந்த அலிபாபா குழுமம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக் பேஸ்கட் நிறுவனத்தை கையகப்படுத்த சில பெரு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருந்தாலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு டாட்டா குழுமம் சார்பில் பிக் பேஸ்கட் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்க பேச்சு வார்த்தை நடப்பதாக செய்திகள் வெளிவந்தன.

மளிகை விற்பனையில் ஏற்கனவே அனுபவம் கொண்டிருக்கும் டாட்டா குழுமத்திற்கு இந்த நிறுவன கையகப்படுத்துதல் வெற்றிகரமாக முடிந்தால், சந்தையில் புதிய போட்டியை ஏற்படுத்தும். இந்நிலையில் சமீபத்திய செய்தி ஒன்று, பிக் பேஸ்கட் நிறுவனத்தின் 80 சதவீத பங்குகளை டாட்டா குழுமம் வாங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் மளிகை வணிகத்தில் கால்பதித்துள்ள நிலையில், டாட்டா குழுமத்தின் இந்த கையகப்படுத்தல் சந்தையில் சவாலாக இருக்கும்.

டாட்டா குழுமம்(Tata Group) பிக் பேஸ்கட் நிறுவனத்தை வாங்கும் நிலையில், அதன் மதிப்பு சுமார் 1.3 பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. இணைய வழி மளிகை வணிகத்தில் நாட்டின் 50 சதவீத பங்களிப்பை பிக் பேஸ்கட் கொண்டுள்ளது. நஷ்டத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் மதிப்பு 1.6 பில்லியன் டாலர்கள்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கின் போது, இந்த நிறுவனம் இரண்டே நாட்களில் தனது 80 சதவீத வேலையாட்களை இழந்தது. எனினும் அவற்றிலிருந்து மீண்டு வந்த நிறுவனம் 16 நாட்களில் 12,000 பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. 2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 5,200 கோடி ரூபாயாகவும், ரூ. 920 கோடியை நிகர நஷ்டமாகவும் சந்தித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹேக்கர்களால் பிக் பேஸ்கட் நிறுவன வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com