பங்குச்சந்தை ஏற்ற, இறக்கம் – இந்த வருடம் என்ன நடக்கலாம் ?

பங்குச்சந்தை ஏற்ற, இறக்கம் – இந்த வருடம் என்ன நடக்கலாம் ?

Indian Stock Market Ups and Downs – What can happen this year 2019 ?

 

கடந்த 2014ம் ஆண்டில் ஏற்றமடைய துவங்கிய சந்தை 2017ம் வருடம் சந்தையின் உச்சத்தில் இருந்தது. கடந்த ஒரு வருடமாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற-இறக்கத்தில் மட்டுமே வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தலை நோக்கி சந்தையின் போக்கு சென்று கொண்டிருந்தாலும், கடந்த வரலாற்றில் அரசியலை சார்ந்து சந்தை பெரும்பாலும் இல்லை என்பது தெளிவாகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பட்ஜெட் தாக்கல் மற்றும் தேர்தல் காலங்கள் சிறிய ஏற்ற இறக்கத்தை சந்தையில் ஏற்படுத்தியிருந்தாலும், அதன் பாதிப்பு இந்திய பங்குச்சந்தையில் வெகுவாக இல்லை எனலாம். நடப்பு நிதி ஆண்டில் சந்தையின் ஏற்ற இறக்கம் பெரும்பாலும் நிறுவனத்தின் வருவாய் அறிக்கை(Company Earnings) மற்றும் சந்தை அதிக மதிப்பில்(Market Valuation) வர்த்தகமாகி கொண்டிருந்தது தான் காரணமாக உள்ளது.

 

இனி அடுத்து வரும் காலங்களில் சந்தை எப்படி இருக்கலாம் என கணிப்பது அவ்வளவு சுலபமல்ல. இருப்பினும் வரலாற்று தகவல்கள் அதற்கான வாய்ப்பை நமக்கு எப்போதும் தந்து கொண்டு தான் இருந்துள்ளது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை, அமெரிக்க-சீன வர்த்தக போர், இங்கிலாந்து நாட்டின் பிரெக்ஸிட்(Brexit) பிரச்னை மற்றும் உள்நாட்டு நிகழ்வுகள் சந்தையில் பங்குகள் வாங்குவதற்கான வாய்ப்பாக அமைந்து கொண்டிருக்கிறது.

 

சந்தையில் முதலீடு செய்ய பல்வேறு வகையான அடிப்படை பகுப்பாய்வுகள் இருப்பினும், ஒட்டுமொத்த சந்தையின் விலையை அறிந்து கொள்ள கீழ்கண்ட நான்கு காரணிகள்(Four Factors) நமக்கு உதவும். இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையின் அடுத்தகட்ட நகர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

 

  • Price to Earnings(P/E)

  • Price to Book Value (P/B)

  • G-sec X PE (Price to Earnings)

  • Market Cap to GDP

 

Price to Earnings மற்றும் Price to Book Value பற்றி நமது வர்த்தக மதுரை தளத்தில் நாம் ஏற்கனவே சொல்லியுள்ளோம். இவை இரண்டும் அடிப்படை பகுப்பாய்வு காரணிகளை(Fundamental Analysis factors) சார்ந்தவை.

 

பங்குச்சந்தையை பற்றிய அடிப்படை கல்வி உங்களுக்கு இலவசமாக வேண்டுமா ?

 

சந்தையில் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்கின் விலையையோ அல்லது ஒட்டுமொத்த சந்தையின் விலையை அதனதன் வருவாயுடன் ஒப்பிட்டு பார்த்தல் Price to Earnings எனப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் அல்லது சந்தையின் விலையுடன் புத்தக மதிப்பை கொண்டு ஒப்பிட்டு ஆராய்தல் Price to Book Value ஆகும். கீழ்காணும் தேசிய பங்குச்சந்தையின் இணைய தளத்தில் இதன் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக சந்தையில் பி.இ. மற்றும் பி.பி. விகிதம் அதிகமாக இருக்கும் சமயத்தில், ஈவு தொகை(Dividend Yield) குறைவாக இருக்கும்.

 

Nifty PE, PB, Dividend Yield Valuation – NSE India

 

மூன்றாவதாக அரசாங்க பத்திரங்கள்(Govt. Securities) வழங்கும் வட்டி விகிதங்களை, PE விகிதத்துடன் பெருக்கி விட்டு அதன் மதிப்பை சார்ந்து பங்குச்சந்தை நகர்வுகளை முடிவெடுப்பது. அரசாங்க பத்திரங்கள் பொதுவாக பத்து வருட காலத்தில்(10 year Bond Yield %)  முதிர்வடையும் திட்டத்திற்கு வட்டி விகிதங்களை அறிவிக்கும். இதனை சந்தையின் பி.இ. விகிதத்தில் ஒப்பிட்டு பார்க்கும் போது, நமக்கு தற்போதைய சந்தையின் நிலை தெரிய வரும்.

 

Valuation = G-Sec X PE

 

நான்காவதாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) எண்களோடு சந்தையின் மதிப்பை(Market Capitalization) ஒப்பிட்டு கொள்வது ஒரு மதிப்பீடு அம்சமாகும். கடந்த பத்து வருட காலத்தில் பங்குச்சந்தையின் மதிப்பை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் சில காலங்களில் சந்தையின் மதிப்பு மிக அதிகமாகவும், அதே வேளையில் பல சமயங்களில் சந்தை தள்ளுபடி விலையில் அதன் மதிப்பை கொண்டிருந்தது.

 

சென்ற வருடம் ஜனவரி மாதத்தில் சந்தையின் மதிப்பு ரூ. 156 லட்சம் கோடியாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 162 லட்சம் கோடியாகவும் இருந்துள்ளது. ஆக, உள்நாட்டு உற்பத்தியில் சந்தை மதிப்பு 4 சதவீத தள்ளுபடியில் மட்டுமே கிடைத்துள்ளது. இதுவே கடந்த டிசம்பர் 2007ல் சந்தை மதிப்பு அதிகமாக இருந்ததன் காரணமாக பின்னர் பெரிய வீழ்ச்சியை கண்டது நினைவிருக்கலாம். பின்னாளில் மார்ச் 2009ம் வருட காலத்தில் சந்தை 39 சதவீத தள்ளுபடியில் கிடைத்ததும், அந்த நேரத்தில் முதலீடு செய்தவர்கள் இன்று லட்சங்களையும், கோடிகளையும் குவித்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

 

தற்போது 2019ம் வருட காலத்தின் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 186 லட்சம் கோடியாகவும், சந்தை மதிப்பு 140 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(Gross Domestic Product) சந்தை மதிப்பு 25 சதவீத தள்ளுபடியில் கிடைத்திருப்பதை காட்டுகிறது. சந்தையின் மதிப்பு எப்போதெல்லாம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறதோ அப்போது தான் முதலீட்டாளராக நாம் முதலீடு செய்ய வேண்டிய காலமிது.

 

சந்தை இன்னும் இறக்கத்தை காணலாம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தற்போது சந்தை தள்ளுபடியில் காணப்படுவதால் பங்குகளை வாங்கி வைப்பதற்கான காலமாகவே இன்று பார்க்கப்படுகிறது. சந்தை மேலும் இறக்கத்தில் சென்றாலும், அது முதலீடு செய்வதற்கான வாய்ப்பாகவே நாம் பார்க்க வேண்டும். இது கடந்த கால புள்ளிவிவர வரலாறு, எதிர்காலத்தை நம்மால் கணிக்க முடியாது. நீண்டகாலத்தில் பங்குச்சந்தை நல்ல வருமானத்தை தரும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 2

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 2

Personal Finance – Survey / Polling

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.

 

முதல் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • சேமிப்பு, முதலீடு  – இரண்டும் ஒன்றா ?

 

விடை:       இல்லை

 

விளக்கம்:  சேமிப்பு என்பது வெறுமனே உண்டியலில் பணம் சேர்ப்பது போன்று. அது வளர்ச்சியை பெறுவதில்லை. உதாரணத்திற்கு நமது சேமிப்பு வங்கி கணக்கு போல, பணவீக்கத்தை விட குறைவான வட்டி விகிதம் வழங்கப்படும். முதலீடு என்பது வளர்ச்சியையும், தொடர்  வருமானத்தையும் கொடுக்கக்கூடியது. உதாரணமாக நிலம், தங்கம், பங்குகள், பரஸ்பர நிதிகள், தொழிலில் முதலீடு.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • அரசு வெளியிடும் பட்ஜெட் தாக்கல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

 

விளக்கம்: ஒரு நாட்டின் அல்லது மாநிலத்தின் அரசு வெளியிடும் பட்ஜெட் தாக்கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தனிநபருக்கான சலுகைகள், தொழிலுக்கான புதிய கொள்கைகள் மற்றும் மாற்றங்கள் ஆகியவை பட்ஜெட்டில் விவாதிக்கப்படும். நமது வரவு-செலவை பாதிக்கும் காரணிகள் பட்ஜெட்டில் இடம்பெறும், அவை நமக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையலாம்.

 

  • உங்கள் குடும்பத்தில் நீங்கள் பட்ஜெட் திட்டமிடுவது உண்டா ?

 

விளக்கம்: அரசின் பட்ஜெட்டை போலவே ஒரு குடும்பத்தின் பட்ஜெட்டும் அவசியமாகும். வரவு-செலவு அறிக்கையை முறையாக நாம் பராமரிப்பதால் கடன் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் தவிர்க்க பட்ஜெட் திட்டமிடல் உதவும். நமது தளத்தில் பட்ஜெட் திட்டமிடல் எவ்வாறு அமைப்பது என்பதை எளிமையாக விளக்கியுள்ளோம் –

 

பட்ஜெட் திட்டமிடலை உருவாக்குவது எப்படி ?

 

  • முதலீடு செய்வதின் நோக்கம் என்ன ?

 

விடை: பணத்தை பெருக்க (Capital Appreciation)

 

விளக்கம்: முதலீடு என்பது பொதுவாக வளர்ச்சியையும், அதனை சார்ந்து தொடர் வருமானத்தையும் தருவதாக இருக்க வேண்டும். நிலம், பங்குகள், பரஸ்பர நிதிகள் போன்றவற்றை முதலீடாக சொல்லலாம்.

 

  • காப்பீடு என்பது ஒரு சிறந்த மற்றும் பாதுகாப்பான முதலீட்டு சாதனம் ?

 

விடை: இல்லை

 

விளக்கம்: காப்பீடு என்பது ஒரு முதலீட்டு சாதனமாக கருத முடியாது. காப்பீட்டின் நோக்கமே எதிர்பாராத நிதி இழப்பினை சரி செய்வதற்கான பாதுகாப்பு அம்சம் தான். இதனை ஒரு முதலீடாக எடுத்து கொள்ள கூடாது. முழுமையான காப்பீடு திட்டத்திற்கு டேர்ம் பாலிசிகளை வாங்கி கொள்ளலாம். காப்பீட்டு நிறுவனங்களில் விற்கப்படும் காப்பீட்டுடன் முதலீடு என்று கூறப்படும் சாதனங்கள் குறிப்பிடத்தக்க வருவாய் தராது.

 

ஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

இந்த வார கேள்விகள்:

 

  1. வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ்(காப்பீடு) என்ற திட்டம் மட்டுமே உள்ளது ?
  2. நமது நாட்டில் தங்கத்தின் விலை மதிப்பு எதனை சார்ந்து மாறுகிறது ?
  3. பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) ஒன்றா ?
  4. நிதி சார்ந்த கல்வியினை பெற நீங்கள் எவ்வளவு தொகையை செலவிட தயாராக உள்ளீர்கள் ?
  5. பங்குச்சந்தை(Share Market) ஒரு ___________ ?

 

குறிப்பு:

நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

 

Personal Finance – Survey 2

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ரூ. 1444 /- மாத முதலீட்டில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்

ரூ. 1444 /- மாத முதலீட்டில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்

Become a Millionaire / Crorepati with a monthly investment of 1444 rupees in SIP

 

சிலருக்கு செல்வம் சேர்ப்பது ஒரு கலையாக இருந்தாலும், பலருக்கு அது ஒரு எட்டாக்கனியாக தான் இருந்து வருகிறது. செல்வம் சேர்ப்பதின் முதல் ரகசியமே சரியான பட்ஜெட் திட்டமிடல்(Budget Planning) தான். நாம் தினசரி மேற்கொள்ளும் வரவு-செலவுகளை எழுதி வைத்து பழக்கப்படுத்தினாலே நமக்கான செல்வ மகள் தானாக வருவாள். கூட்டு குடும்பத்தின் பலம் நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் கூட்டு வட்டியின் பலனை நீங்கள் அனுபவித்தது உண்டா ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உலகின் எட்டாவது அதிசயம், ‘கூட்டு வட்டி (Power of Compounding)’ என்றார் மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஏழு அதிசயங்களை நாம் வரலாற்றில் அவ்வப்போது மாற்றி கொண்டாலும், இன்றும் மாறாதது கூட்டு வட்டியின் ரகசியமே. கூட்டு வட்டியின்(Compound Interest) பலனை அறிய நாம் புத்தகங்கள் எதனையும் வாங்கி படிக்க வேண்டாம். சிறு துளி பெருவெள்ளம் போல, நமது பாரம்பரிய அஞ்சலக சேமிப்பு, மாத சீட்டு கட்டும் முறை, பி.எப்.(Provident Fund) தொகையினை சொல்லலாம்.

 

நாம் சேமிக்கும் மாதாந்திர சீட்டு அல்லது பி.எப். தொகையை நாம் உற்று நோக்கினால் அதற்கான பலன் நமக்கு தெரிய வரும். நாம் சிறுக சிறுக சேமித்து வைத்த பணம் பின்னொரு காலத்தில் மிக பிரமாண்டமான தொகையை நமக்கு கொடுத்திருக்கும். இது கூட்டு வட்டியின் பலனே இன்றி வேறு எதுவுமில்லை. இந்த கூட்டு வட்டியின் பலத்தை நாம் முழுவதுமாக அறிய அல்லது வாழ்நாள் முழுவதும் இதன் பலனை அனுபவிக்க பல முதலீட்டு சாதனங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் எளிமையான மற்றும் நம்பகமான சாதனம் எனில், அது பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) தான்.

 

தங்கம் மற்றும் நிலத்தில் நமது முதலீடுகள் இருப்பினும் நாம் அவற்றில் ஒவ்வொரு மாதமும் அல்லது நம்மிடம் உள்ள சிறு தொகைக்கு வாங்கி வைக்க முடியாது. ஆனால், பரஸ்பர நிதி திட்டங்கள் மற்றும் பங்குச்சந்தையில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் நாம் முதலீடு செய்யலாம். பொதுவாக செல்வம் சேர்ப்பதற்கு தொடர்ச்சியான முதலீடு(Regular Investing) அவசியமாகும். நாம் முதலீடு செய்யும் பணம் சிறு தொகையாக இருப்பினும், தொடர் முதலீடு நமக்கான செல்வத்தை சேர்த்து தரும்.

 

பங்குச்சந்தையில் தொடர் முதலீடு நீண்ட காலத்தில் பெரும் செல்வதை கொடுக்கும். அதே வேளையில் பங்குச்சந்தை போன்ற முதலீட்டில் அடிப்படை நிதி கல்வி அவசியமாகும்(Stock Market Analysis). ஏனென்றால் பங்குச்சந்தை முதலீடுகள் குறுகிய காலத்தில் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டவை. இதற்கு மாற்றாக நாம் பரஸ்பர நிதி முதலீடுகளை தேர்ந்தெடுக்கலாம். பங்குச்சந்தையை பற்றிய நிதி கல்வியை பெற முடியாதவர்கள், நேரம் இல்லாதவர்கள் பரஸ்பர நிதி திட்டங்களில் பங்குச்சந்தை போன்ற நீண்ட கால கூட்டு வட்டியின் பலனை பெறலாம்.

 

உதாரணத்திற்கு, உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தொகையை பெற வேண்டுமென்றால் உங்களுக்கான கால அளவும்(Investment Period), முதலீடு செய்வதற்கான பணமும்(Minimum Investment) முக்கியம். உங்களுக்கு ஐந்து வருடங்களில் ரூ. 1 கோடி வேண்டுமென்றால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1,22,444 பணத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்தாக வேண்டும். இதன் மூலம் 12 சதவீத வட்டி வருமானத்தை கொடுக்கும் பட்சத்தில், உங்களுக்கு ஐந்து வருடத்திற்கு பிறகு ரூ. 1.06 கோடி தொகை கிடைக்கும். இதுவே 15 சதவீத வட்டி எனும் போது, நீங்கள் மாதாமாதம் ரூ. 1,12,899 ஐ அடுத்த ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்தால் மட்டுமே, உங்களுக்கான ஒரு கோடி ரூபாய் இலக்கை அடைய முடியும்.

 

மாதாமாதம் ரூ. 1 லட்சம் ரூபாய் முதலீடா என மலைப்பாக இருக்கிறதா ?

 

இன்றும், இது போன்ற முதலீட்டு தொகையை சிலர் சாத்தியமாக்கி பயனடைந்து வருகின்றனர். சரி வாருங்கள், சிறிய தொகையை கொண்டு பெரிய விஷயங்களை செய்து பார்க்கலாம். உங்களுக்கு தேவையான ஒரு கோடி ரூபாய் இலக்கை நீங்கள் விரைவாக அடைய வேண்டுமெனில், உங்களுக்கான மாத முதலீடு அதிகமாக தான் இருக்கும். அதற்கு பதிலாக, மாதம் ஒரு குறிப்பிட்ட சிறு தொகையை முதலீடு செய்து விட்டு, இலக்கிற்கான காலத்தை நீட்டிக்கலாம்(Time). இதன் வாயிலாக நமக்கான நிதி இலக்கை எளிமையாக பெறலாம்.

 

மாதாமாதம் ரூ.36,335 ஐ அடுத்த பத்து வருடங்களுக்கு சேமிக்கும் பட்சத்தில் நாம் ஒரு கோடி ரூபாய் இலக்கை அடையலாம். இல்லையெனில், 20 வருடங்களுக்கு மாதம் ரூ.6,679/- ஐ முதலீடு(Systematic Investment Plan -SIP)  செய்தாலும் அதன் பலனை பெறலாம். இதனை விட ஒரு எளிமையான முறை உள்ளது, இது ஒரு வெற்றி பெற்றவர்களின் முதலீட்டு முறை என்றும் கூறலாம். அதாவது மாதாமாதம் ரூ.1,444 ஐ நீங்கள் அடுத்த 30 வருடங்களுக்கு முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம் என்பது தான். நாள் ஒன்றுக்கு 50 ரூபாய்க்கும் குறைவாக (48 ரூபாய்) நீங்கள் முதலீடு செய்ய பழகும் போது, 30 வருடங்களில் உங்கள் கனவு இலக்கு சாத்தியமாகும்.

 

ஒரு முறை முதலீடாக(One Time Investment) 1,50,000 ரூபாயை முதலீடு செய்து விட்டு, அடுத்த 30 வருடங்களுக்கு காத்திருக்கும் பட்சத்தில், 15 சதவீத வட்டி வருமானத்தில் உங்களுக்கான ஒரு கோடி ரூபாயை பெறலாம். முப்பது வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் ஒரு கோடி ரூபாயின் இன்றைய மதிப்பு (Present Value of Future Cash) எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா ?

 

30 வருடங்களுக்கு பின்பு கிடைக்கக்கூடிய ஒரு கோடி ரூபாய், இன்றைய சராசரி பணவீக்கமாக 5 சதவீதம் என எடுத்து கொண்டால், இன்று அதன் மதிப்பு ரூ. 23,13,774. பரஸ்பர நிதி திட்டங்களில் இன்றும் இது போன்ற முதலீட்டு வருமானம் சாத்தியமாக தான் இருக்கிறது. ஏன் மற்ற முதலீடுகளில் கிடைப்பதில்லையா என கேட்கலாம். நிலம், தங்கம் போன்ற முதலீடுகளில் நாம் ஏற்ற-இறக்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு எப்போதும் கிடைப்பதில்லை. ஆனால் பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் அந்த வாய்ப்பு ஒவ்வொரு காலத்திலும் அமைந்து கொண்டு தான் இருக்கிறது. தங்கத்தில் வருமானம் கடந்த 20 வருடங்களாக வங்கி வட்டி விகிதத்தை ஒட்டியே அமைந்துள்ளது எனலாம். தங்கத்தின் விலை அதிகரிப்பது டாலர் மதிப்பு உயர்வதால் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பணவீக்கம் குறைந்து வருவதால் வங்கி வைப்பு நிதிகள் மற்றும் சிறு சேமிப்பு திட்டங்களில் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் போதுமானதாக இருப்பதில்லை.

 

பரஸ்பர நிதி திட்டங்களில் மாதம் ரூ. 290 ஐ முதலீடு செய்து 30 வருடங்களில் 20 லட்ச ரூபாயை பெறலாம். இது போன்று, மாதாமாதம் 722 /- ரூபாயை முதலீடு செய்து அடுத்த 30 வருடத்தின் முடிவில் 15 சதவீத வட்டி வருமானத்தில் ரூ. 50 லட்சம் கிடைக்கும். பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் நீண்ட காலத்தில் 15 சதவீத வட்டி என்பது சராசரியாக பெறக்கூடிய வருமானமாகும்.

 

அப்புறம் என்ன, உங்கள் இலக்குகளுக்காக, உங்கள் குழந்தைகளின் தேவைக்காக இப்போதே ஒரு சிறு தொகையை முதலீடு செய்ய ஆரம்பியுங்கள் – கூட்டு வட்டியின் பலனை பெறுங்கள் !

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 மற்றும் இலவச காப்பீடு – பரவலாகும் பரஸ்பர நிதித்திட்டங்கள்

குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 மற்றும் இலவச காப்பீடு – பரவலாகும் பரஸ்பர நிதித்திட்டங்கள்

Minimum Investment amount of 100 rupees and Free Term Insurance – Mutual Funds Schemes

இந்தியாவில் மியூச்சுவல் பண்ட் என்று சொல்லப்படும் பரஸ்பர நிதி துறை(Mutual Fund Industry) 1963ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பரஸ்பர நிதி திட்டங்களுக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்டு பாரத ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வந்தது.

1987-1993 ம் வருட காலங்களில் அரசு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே மியூச்சுவல் பண்ட் திட்டங்களை வழங்கி வந்த நிலையில், பின்னர் தனியார் துறை நிறுவனங்களும் பரஸ்பர நிதி துறையில் நுழைந்தன. அரசு சார்பில் துவங்கப்பட்ட பரஸ்பர நிதிகளில் முதன்முறையாக பொதுத்துறை வங்கிகளும், எல்.ஐ.சி. நிறுவனமும்(LIC India) திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தின. 1992ம் ஆண்டு பரஸ்பர நிதிக்கான ஒழுங்குமுறை செபியிடம்(SEBI) வந்த பிறகு, முதல் தனியார் மியூச்சுவல் பண்ட் நிறுவனமாக கோத்தாரி பயோனியர்(Kothari Pioneer) நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இந்நிறுவனம் பிராங்கிளின் டெம்பிள்டன்(Franklin Templeton) நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

ஆரம்ப காலத்தில் மியூச்சுவல் பண்ட் சார்ந்த விழிப்புணர்வு குறைவாக இருப்பினும், தற்போது பரஸ்பர நிதி திட்டங்கள் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புக்கு மாற்றாக செயல்பட்டு வருகிறது. இன்றும் சிலருக்கு பரஸ்பர நிதி திட்டங்கள் என்றாலே பங்குச்சந்தை தான் என்ற ஐயம் உள்ளது. சமீப காலங்களில் மியூச்சுவல் பண்ட் சார்ந்த விழிப்புணர்வும், திட்டங்களில் உள்ள வடிவமைப்பும் எளிமையாக்கப்பட்டுள்ளன. அரசு சார்பிலும் இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பொது கருத்தரங்குகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

பரஸ்பர நிதி சார்ந்த விழிப்புணர்வை நமது ஊரில் பரவலாக விகடன் குழுமம் (நாணயம் விகடன் – Nanayam Vikatan) சேர்த்து வருவது நல்ல விஷயம். சேமிப்பு மற்றும் முதலீடு சார்ந்த அடிப்படை கல்வி நமக்கு பள்ளி, கல்லூரி காலங்களில் கிடைப்பதில்லை என்றாலும், இன்று அதற்கான தளங்கள் அமைய பெற்றிருப்பது மக்களுக்கு நலன் பயக்கும்.

பரஸ்பர நிதி திட்டங்களில் லிக்விட் பண்டுகள்(Liquid Funds) என்று சொல்லப்படும் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள் முதல் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்கள்(Equity oriented Funds) வரை பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு முதலீட்டாளரின் நிதி இலக்குகள், கால அளவுகளை கொண்டு மற்றும் ரிஸ்க் தன்மையை பொறுத்து பரஸ்பர நிதி திட்டங்கள் வேறுபடும். நீண்டகாலத்தில் பரஸ்பர நிதித்திட்டங்கள் பணவீக்கத்தை காட்டிலும் நல்ல வருமானத்தை கொடுத்து வருகிறது. அதே வேளையில் வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பை காட்டிலும் பெறக்கூடிய நீண்டகால வருமானம் பல மடங்கு லாபத்தை தரக்கூடியவையாக உள்ளது.

இன்றைய நிலையில், வரி சலுகையை பெற மிகவும் குறைந்த லாக் இன் காலம்(Lock in Period) கொண்ட மற்றும் அதிக வருமானத்தை தரும் திட்டமாக மியூச்சுவல் பண்ட் டாக்ஸ் சேவர் திட்டங்கள்(Tax Saving Mutual Funds) உள்ளன. முன்னர் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை (ரூ.500-5000) முதலீடு செய்ய வேண்டும் என்ற நிலையிலிருந்து, தற்போது குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் குறைந்த வருமானம் உள்ளவர்களும் அஞ்சலக சேமிப்பை போல, மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

பரஸ்பர நிதி திட்டங்களில் செய்யப்பட்ட முதலீட்டு தொகையை, நாம் விரும்பும் எந்த நேரத்திலும் பெற்று கொள்ளலாம் என்பது மற்றுமொரு சிறப்பம்சம். சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் நாம் மாதாமாதம் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan -SIP) தொகைக்கு இலவச டேர்ம் பாலிசியையும் வழங்குவது ஆதாயமான விஷயம். நாம் செய்யும் முதலீடு தொகைக்கு ஏற்றாற் போல் மற்றும் கால அளவுகளை பொறுத்து, நமக்கான டேர்ம் காப்பீடு தொகையும்(Term Policy Insurance) அதிகரிக்கும். இதற்காக அந்த நிறுவனங்கள் நம்மிடம் இருந்து எந்தவித கட்டணத்தையும் வசூலிப்பதில்லை.

இருப்பினும், இலவசமாக காப்பீடு கிடைக்கிறது என்பதற்காக மட்டுமே முதலீடு செய்ய வேண்டாம். குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு, நீங்கள் உங்கள் முதலீட்டை வெளியே எடுக்கும் நிலையில் உங்களது காப்பீடு ரத்து செய்யப்படலாம். சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 25 வருடங்கள் முதலீடு செய்தால் மட்டுமே, உங்களுக்கு காப்பீட்டை வழங்கும். எனவே காப்பீடு இலவசமாக கிடைக்கப்பெற்றாலும், தனியாக டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து வைத்து கொள்வது நல்லது.

வரும் காலங்களில் வங்கி வைப்பு தொகை மற்றும் அஞ்சலக திட்டங்களுக்கு மாற்றாக மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு முழுமையாக இருக்கலாம் என்பது தான் உண்மை. அதனால் தான் என்னவோ, சில வங்கிகள் தாமாக முன்வந்து வாடிக்கையாளர்களுக்கு பரஸ்பர நிதி திட்டங்களை பரிந்துரைக்கின்றன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

எஸ்.பி.ஐ. வங்கியில் ஏற்பட்ட மோசடியால் வாடிக்கையாளர்கள் இழந்த பணம் ரூ. 7,951 கோடி

எஸ்.பி.ஐ. வங்கியில் ஏற்பட்ட மோசடியால்  வாடிக்கையாளர்கள் இழந்த பணம் ரூ. 7,951 கோடி

SBI Customers who had lost nearly Rs. 7,951 Crore in Fraudulent Cases

 

நாட்டின் மிகப்பெரிய மற்றும் பன்னாட்டு பொதுத்துறை வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி(State bank of India) திகழ்கிறது. கல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிய இம்பீரியல் வங்கி(Imperial Bank of India) தான் பின்னாளில் பாரத ஸ்டேட் வங்கியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இரு நூறாண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த வங்கி மொத்தம் 24,000 கிளைகளையும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி பணியாளர்களையும் கொண்டு வங்கி சேவைகளை நிர்வகித்து வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த 2018ம் வருடத்தின் அடிப்படையில் பாரத ஸ்டேட் வங்கியின்(SBI) சொத்து மதிப்பு சுமார் 33,12,461 கோடி ரூபாய். கடந்த 2016-17ம் நிதியாண்டில் ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் மட்டும் பணியாளர் ஒருவருக்கு ரூ. 511 /- என்ற அடிப்படையில் வருவாயை ஈட்டியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பிராண்டாகவும்(Branding), நம்பகமான பொதுத்துறை வங்கி என சொல்லப்பட்டாலும் ஸ்டேட் வங்கியில் சிக்கல்கள் ஏராளம்.

 

இந்திய பங்குச்சந்தையில் சந்தை மூலதனமாக ரூ. 2,43,000 கோடியை கொண்டிருக்கும் எஸ்.பி.ஐ. வங்கி கடந்த 2017-18ம் நிதியாண்டில் முதன்முறையாக 4,556 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை அடைந்தது. கடந்த ஐந்து வருடங்களில் வங்கியின் வளர்ச்சியும் சொல்லி கொள்ளுமாறு இல்லை. தனியார்  வங்கிகளின் துரிதமான செயல்பாடும், வங்கிகள் அல்லாத நிதி சேவை நிறுவனங்களின்(NBFC) பங்களிப்பும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு ஒரு சவாலாகவே இருந்துள்ளன.

 

எஸ்.பி.ஐ. வங்கியின் வாராக்கடன்(Non Performing Assets) பிரச்சனையும், அதனை தொடர்ந்து துணை நிறுவன வங்கிகளை ஸ்டேட் வங்கியுடன் இணைத்த நிலையிலும் அதன் சேவையில் பெரிதாக முன்னேற்றம் இல்லை எனலாம். சமீபத்தில் திரு. சந்திரசேகர் என்பவரால் தகவல் சட்ட உரிமையின்(RTI) கீழ் ஸ்டேட் வங்கியிடம் இருந்து சில தகவல்கள் பெறப்பட்டன.

 

கிடைக்கப்பட்ட தகவலில், ஸ்டேட் வங்கி மற்றும் அதன் குழும வங்கியில் நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது (ஏப்ரல் – டிசம்பர் 2018) மாதங்களில் மோசடி வழக்குகளாக 1,885 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏற்பட்ட மோசடியின் மொத்த மதிப்பு சுமார் 7,951 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. நடப்பு நிதி வருடத்தில் முதல் காலாண்டில் 669 புகார்களும், இரண்டாம் காலாண்டில் 660 புகார்களும் மற்றும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 556 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

 

ஒன்பது மாதங்களில் மோசடி பேர்வழிகளால்(Fraudulent Activities) வாடிக்கையாளர்கள் இழந்த தொகை ரூ. 7,951 கோடி, இவற்றில் கடந்த அக்டோபர்-டிசம்பர் காலத்தில் மட்டும்  நடந்த மோசடிகளின் மதிப்பு ரூ. 2,395 கோடியாகும்.

 

தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட மற்றொரு கேள்வியில், வாடிக்கையாளர்கள் இழந்த தொகைக்கான புகார்களில் வங்கியின் தீர்வு என்ன என்பது கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு வங்கியிடம் இருந்த எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. தகவல் பெறும் உரிமை சட்டம் பிரிவு 7(9) ன் கீழ், மேற்சொன்ன கேள்விக்கு பதிலளிக்க எஸ்.பி.ஐ. நிர்வாகம் மறுத்து விட்டது.

 

வங்கிகளின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு பல அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகள் சொல்லப்பட்ட போதிலும், நுகர்வோர் சந்தையை அதிகமாக கொண்டிருக்கும் நமது நாட்டில் வங்கி மோசடிகள்(Bank Frauds) நடந்த வண்ணம் தான் உள்ளன. பெரும்பாலான வங்கி மோசடிகள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணைய பரிமாற்றத்தில் தான் நடைபெறுவதாக வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்தது – மூன்றாம் காலாண்டு

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக குறைந்தது – மூன்றாம் காலாண்டு  

India’s GDP growth slowed to 6.6 percent in the Third Quarter of Current Financial Year 2018-19

 

மத்திய புள்ளியியல் அமைச்சகம்(CSO) நேற்று (28-02-2019) வெளியிட்ட தனது அறிக்கையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.6 சதவீதமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. நடப்பு நிதி வருடத்தின்(2018-19) முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் 7.1 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி விகிதம்(Gross Domestic Product -GDP) கடந்த காலாண்டுகளை ஒப்பிடும் போது குறைவாக உள்ளது. உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேவைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், மேலும் உலகளாவிய பொருளாதார மந்த நிலை ஆகியவை நமது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் காரணிகளாக அமைந்தன.

 

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வெளிவந்த 8.2 சதவீதம் மாற்றியமைக்கப்பட்டு 8 சதவீதமாகவும், இரண்டாம் காலாண்டில் இருந்த 7.1 சதவீதம் பின்னர் 7 சதவீதமாகவும் மாற்றப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. நடப்பு 2018-19 முழு ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) 7.4 சதவீதமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

 

முன்னொரு காலத்தில் விவசாயம் சார்ந்த பகுதியாக இருந்த நம் நாடு தற்போது சேவை துறையில்(Service sector) மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது நினைவிருக்கலாம். கடந்த பிப்ரவரி 8ம் தேதி நிலவரப்படி, மொத்த உள்நாட்டு மதிப்பில்(Gross Value Added -GVA) சேவை துறை 54.40 சதவீதமும், உற்பத்தி துறை(Manufacturing) 29.73 சதவீதமும், விவசாயம்(Agriculture) மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் 15.87 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.   

 

உற்பத்தி துறையில் கடந்த சில காலங்களாக மந்தமான நிலை இருப்பினும், வாகன துறை மிகப்பெரிய சந்தையை உள்நாட்டில் கொண்டிருப்பது சாதகமான அம்சம். உற்பத்தி துறை கடந்த மூன்று ஆண்டுகளில் 1.5 சதவீத வளர்ச்சியை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கொண்டிருக்கிறது.

 

மூன்றாம் காலாண்டுக்கு சொல்லப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவாக இருப்பினும், இது சீன நாட்டின் வளர்ச்சியை காட்டிலும் அதிகமாக தான் உள்ளது. சீனாவின் மூன்றாம் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.4 சதவீதமாக அமைந்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

எல்லையில் பதற்றம், தடுமாற்றத்தில் பங்குச்சந்தை

எல்லையில் பதற்றம், தடுமாற்றத்தில் பங்குச்சந்தை

Tension in the border, the staggering Indian Stock market

 

கடந்த பிப்ரவரி 7ம் தேதி இந்திய பங்குச்சந்தையின் நிப்டி குறியீடு 11,069 புள்ளிகளிலும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 36,971 புள்ளிகளிலும் முடிவடைந்திருந்தது. உலக பொருளாதார மந்த நிலை, அமெரிக்க-சீன வர்த்தக போர், நாட்டில் உள்ள நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் என பல காரணிகள் சந்தையை கடந்த சில நாட்களாக பதம் பார்த்தன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தொடர்ச்சியாக பத்து நாட்களுக்கும் மேலாக சந்தை இறங்குமுகத்தில் பயணிக்க தொடங்கியது. பிப்ரவரி 19ம் தேதியன்று நிப்டி குறியீடு(Nifty50) 10,604 புள்ளிகளிலும், சென்செக்ஸ் குறியீடு(BSE Sensex) 35,352 புள்ளிகளிலும் அன்றைய வர்த்தகத்தை முடித்து கொண்டது. பத்து நாட்களில் தேசிய பங்குச்சந்தை(NSE) குறியீடு கிட்டத்தட்ட 500 புள்ளிகளையும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1600 புள்ளிகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில்(2019 Pulwama Attack) நடந்த அதிபயங்கர தற்கொலை படை தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் தனது விமானப்படை மூலம் பாகிஸ்தானின் பாலக்கோட்(Balakot) பகுதியில் தாக்குதலை நடத்தியது. இவற்றில் அங்கு தங்கியிருந்த 300 தீவிரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது.

 

பத்து நாட்களுக்கு மேலாக இறக்கத்தில் இருந்த சந்தை அடுத்த மூன்று நாட்களில் சிறிது ஏற துவங்கியது. இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் பங்குச்சந்தையிலும் தடுமாற்றத்தை ஏற்படுத்தின. கடந்த இரண்டு நாட்களில் நிப்டி மற்றும் சென்செக்ஸ் முறையே 80 புள்ளிகள் மற்றும் 240 புள்ளிகளும் இறங்கியுள்ளன. பாகிஸ்தானின் கராச்சி சந்தை குறியீடு(KSE) புதன் கிழமை அன்று (27-02-2019) எல்லையில் பதற்றம் என்ற செய்தி வந்த நிலையில், 1500 புள்ளிகள் அல்லது 4 சதவீதம் என்ற வீழ்ச்சியை கண்டது.

 

பொதுவாக இரு நாடுகளிடையே ஏற்படும் போர் சூழல்(Terror attack and War), உலக பொருளாதார காரணிகள் ஆகியவை சந்தையை வெகுவாக  பாதிக்க கூடியவை. தற்போது இது போன்ற சூழ்நிலை தான் இந்திய பங்குச்சந்தையில் நிலவி கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் நாட்டில் தேர்தல் வரவிருக்கும் நிலையில், நடப்பில் ஏற்பட்டு கொண்டிருக்கும் எல்லையில் பதற்றமும்(India-Pakistan) முக்கியத்துவம் பெறுகின்றன.

 

புதன் கிழமை அன்று(27-02-2019) இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, சென்செக்ஸ் 600 புள்ளிகளும், நிப்டி 180 புள்ளிகளும் ஏற்றத்தில் இருந்து இறக்கம் கண்டன. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய விமான படையின் பைலட் திரு. அபி நந்தன் அவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானது. இதனை உறுதி செய்த மத்திய அரசு, அவரை மீட்பதற்கான முயற்சியில் துரிதமடைந்துள்ளது. பங்குச்சந்தையில் பங்குகள் மலிவாக தற்போது கிடைப்பது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருப்பினும், குறுகிய கால மற்றும் தின வர்த்தகர்கள் தங்களது ரிஸ்க் தன்மையை குறைத்து கொள்ள வேண்டிய தருணம் இது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பணத்தை செலுத்த தவறிய நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் இடம் பெறும் – திவால் சட்டத்தில் புதிய மாற்றம்

பணத்தை செலுத்த தவறிய நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் இடம் பெறும் – திவால் சட்டத்தில் புதிய மாற்றம்  

Failure to Pay is on the Blacklist – Changes in IBC Law

 

கம்பெனிகளுக்கான புதிய திவால் சட்டம் கடந்த 2015ம் வருடத்தில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் இச்சட்டம்(Insolvency and Bankruptcy Code) 2016ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. புதிய திவால் சட்டம்(IBC) ஏற்கனவே அமலில் இருக்கும் நிறுவனங்களை சார்ந்த சட்டத்தை ஒருங்கிணைக்கவும், நொடித்து போன மற்றும் திவால் நிலையில் உள்ள நிறுவனங்களில் தீர்வை காணவும் ஒற்றை கட்டமைப்பை உருவாக்க துணைபுரியும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

திவால் சட்டத்தின் மூலம் ஒரு நிறுவனத்தின் கடன் பிரச்னை 270 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும். தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின்(NCLT) மூலம் கடன் பெற்ற நிறுவனத்திடம் இருந்து கடன் தொகைகள் திரும்ப வசூலிக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டிருந்தது. திவால் சட்டம் மூலம் கடந்த ஆண்டு சுமார் 80,000 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் கூறப்பட்டுள்ளது.

 

திவால் நிலையில் தத்தளித்த நிறுவனங்களை மீட்க ஏற்கனவே பெரு நிறுவனங்கள் அதற்கான ஏலத்தில் பங்குபெற்று குறிப்பிட்ட தொகையை அளிப்பதாக கூறியுள்ளன. இந்நிலையில் திவால் சட்ட நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது திவால் நிலையில் உள்ள நிறுவனங்களை மீட்கும் பெரு நிறுவனங்கள் அதற்கான தொகையை உரிய நேரத்தில் செலுத்த வேண்டுமெனவும், அவ்வாறு செலுத்த தவறிய நிறுவனங்கள் அரசின் கருப்பு பட்டியலில் இடம் பெறும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

பொதுவாக திவால் நிலையில் உள்ள நிறுவனங்களின் பிரச்சனை 180 நாட்களுக்குள் தீர்வு செய்யப்பட வேண்டும். இருப்பினும், இந்த சட்டத்தில் கூடுதலாக 90 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. வங்கிகளின் பெரும்பாலான வாராக்கடன் நிலைக்கு(Bad Loans), இந்த திவாலான நிறுவனங்களே பொறுப்பாகும் போது, அந்த பிரச்சனைகளை களைந்து கடன் தொகையை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

கடந்த 2018ம் வருடத்தின் இறுதி நிலவர படி, தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின்(National Company Law Tribunal) கீழ் 898 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் 275 வழக்குகள் மட்டும் 270 நாட்களை கடந்தும் தீர்வு காணப்படவில்லை. மற்ற 166 வழக்குகள் 180 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றன.

 

திவால் சட்டத்தின் மூலம் கடனில் தத்தளிக்கும் நிறுவனங்களை மீட்டெடுப்பதும், வங்கிகளின் வாராக்கடனை குறைக்கவும் அரசு பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இம்முறை மீட்கும் பெரு நிறுவனங்கள் தொகையை செலுத்த தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய நிறுவனங்களின் கோரிக்கைகள் எதிர்காலத்தில் நிராகரிக்கப்படும் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

5 விமான நிலையங்களை கைப்பற்றியுள்ளது அதானி நிறுவனம்

5 விமான நிலையங்களை கைப்பற்றியுள்ளது அதானி நிறுவனம்

Adani Infra wins as highest bidder to operate five airports in India

 

மத்திய அரசு கடந்த சில வருடங்களாக அரசு துறைகளில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை கொண்டு இயங்கி வருகிறது. பொது – தனியார் கூட்டு (Public Private Partnership) மாதிரியின் அடிப்படையில் அரசாங்கத்தை சார்ந்த பல துறைகளில் உலகளவிலான உயர்தர உட்கட்டமைப்பை கொண்டு வரும் முயற்சியில் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தி வருகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டில் முதன்முறையாக தனியார் நிறுவனங்களை மட்டுமே கொண்டு, விமான நிலையங்களை இயக்குவதற்கான முயற்சியை கடந்த சில காலங்களாக மத்திய அரசு எடுத்து வந்தது. இதற்கான ஏல முறையை பொது-தனியார் கூட்டு மதிப்பீட்டு குழு (Public Private Partnership Appraisal Committee – PPPAC) கையாண்டு வருகிறது. இந்த குழுவின் உறுப்பினர்களாக நிதி ஆயோக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி, நிதி மற்றும் விமானத்துறை அமைச்சகங்களின் செயலாளர்கள் அடங்குவர்.

 

தனியார் நிறுவனங்கள் விமான நிலையங்களை  இயக்குவதற்கான ஏலத்தில் மொத்தம் பத்து நிறுவனங்கள் கலந்து கொண்டன. இவைகளின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் 32 மற்றும் முதல் கட்டமாக ஆறு விமான நிலையங்களில் ஐந்து விமான நிலையங்களுக்கு  விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

 

ஏல முறை பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில்(Bid per passenger basis) நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ஏலத்தில் ஜி.எம்.ஆர்(GMR), பி.என்.சி.(PNC), அதானி(Adani Infra), ஆம்ப் கேப்பிடல்(Amp Capital), ஆட்டோ ஸ்ட்ரேட்(Autostrade), கொச்சி சர்வதேச விமான நிலையம் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. அறிவிக்கப்பட்ட ஆறு விமான நிலையங்களில் ஐந்து நிலையங்களில் அதானி  நிறுவனம், மற்ற நிறுவனங்களை காட்டிலும் ஏலத்திற்கான விற்பனை தொகையை அதிகமாக கொண்டிருந்தது.

 

திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு பயணி ஒருவருக்கு ரூ.168/- வீதம் கொடுத்து ஏலத்தில் முதலிடத்தை பிடித்தது அதானி. இதற்கு அடுத்தபடியாக கே.எஸ்.ஐ.டி.சி. நிறுவனம் பயணி ஒருவருக்கு ரூ. 135/- ஆக அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. இதே போல மங்களூரு விமான நிலையத்திற்கு அதானி இன்ப்ரா நிறுவனம் 115 ரூபாயும், கொச்சின் சர்வேதச நிறுவனம் 45 ரூபாயும், ஜி.எம்.ஆர். 18 ரூபாயை ஏல மதிப்பாக அறிவித்தது.

 

அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ விமான நிலையங்களுக்கும்(Airports Authority of India -AAI) அதானி நிறுவனம் அதிக மதிப்பை ஏலத்தில் அறிவித்திருந்தது. இதன் மூலம் சொல்லப்பட்ட ஐந்து விமான நிலையங்களை இனி அதானி இன்ப்ரா நிறுவனம் நிர்வாகம் செய்யும். கவுகாத்தி விமான நிலையத்திற்கான ஏல விற்பனை, செவ்வாய் கிழமை(26-02-2019) அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கவுகாத்தி(Guwahati) ஏல விற்பனை முடிந்தவுடன் நியமிக்கப்படும் நிறுவனங்களின் முடிவுகள் அறிவிக்கப்படும். அதன் அடிப்படையில் பார்த்தால் அதானி நிறுவனம் ஏற்கனவே 5 விமான நிலையங்களின் ஏலத்தில் முதலிடத்தில் உள்ளது.  ஏலத்தில் விமான நிலையங்களை கைப்பற்றும் நிறுவனங்கள் அடுத்த 50 வருடங்களுக்கு நிர்வாகம் செய்யலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

இ.பி.எப். வட்டி விகித வரலாறு – தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

இ.பி.எப். வட்டி விகித வரலாறு – தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

Employees Provident Fund Interest Rate History

 

தொழிலாளர்களுக்கான பி.எப். வட்டி விகிதத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக உயர்த்தியுள்ளது மத்திய அரசு. தற்சமயம் 2018-19ம் நிதியாண்டுக்கான பி.எப். வட்டி விகிதம் 8.65 சதவீதமாக உள்ளது. வருங்கால வைப்பு நிதி(Employees Provident Fund) என்று சொல்லப்படும் பி.எப். க்கான வட்டி விகிதங்கள் கடந்த காலங்களில் எவ்வாறு இருந்துள்ளது என பார்ப்போம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த 1952ம் வருடம் மார்ச் மாதத்தில் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான சட்டம்(EPF Act) நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. ஒரு நிறுவனத்தில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் தங்களது நிறுவனத்தை இ.பி.எப். அமைப்பில்(EPFO) பதிவு செய்ய வேண்டும். இ.பி.எப். அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பி.எப். க்கான தொகையை தங்கள் தொழிலாளர்களின் வருமானத்தில் பிடித்தம் செய்திருக்க வேண்டும். அதே வேளையில் நிறுவனத்தின் பங்களிப்பையும் அளிக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது.

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் டெபாசிட் செய்யப்படும் தொகை அரசாங்கத்தின் கடன் பத்திரங்களில்(Bonds) மட்டுமே முதலீடு செய்யப்பட்டு வந்த நிலையில், இனி பி.எப். தொகையை பங்குச்சந்தையிலும்(Equity exposure) முதலீடு செய்யலாம் என்ற சட்டம் சில காலங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. எனவே, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எப். தொகையின் ஒரு பகுதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

EPF Interest Rate History 1952

1952ம் வருடம் இ.பி.எப். க்கான சட்டம் இயற்றப்பட்ட நிலையில், 1952-53ம் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட முதல் வட்டி விகிதம் 3 சதவீதமாகும். பின்னர் பி.எப். வட்டி விகிதங்கள்(Interest rate) நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க எண்களை சார்ந்து படிப்படியாக உயர்த்தப்பட்டன.

 

1976-77 மற்றும் 1977-78ம் நிதி ஆண்டுகளில் பி.எப். சந்தாதாரர்கள் தங்களது பி.எப். கணக்கில் எந்தவொரு பணத்தையும் எடுக்காத பட்சத்தில், 1978-79ம் நிதியாண்டில் 8.25 சதவீத வட்டியுடன் 0.5 சதவீத போனஸ் வட்டியும்(Bonus Rate) அளிக்கப்படும் என இ.பி.எப். வாரியத்தால் அறிவிக்கப்பட்டது.

 

1990ம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு பி.எப். வட்டி விகிதம் 12 சதவீதமாக கொடுக்கப்பட்டது, இது இ.பி.எப். வரலாற்றில் அளிக்கப்பட்ட அதிகபட்ச வட்டி விகிதம். பின்னர் 2001ம் வருடம் முதல் பி.எப்.வட்டி விகிதம் குறைந்து கொண்டே வந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட குறைந்த வட்டி விகிதமாக, 2011-12ம் ஆண்டு 8.25 சதவீதமாக இருந்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil