Category Archives: Stock Analysis

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Panama Petrochem Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1982ம் ஆண்டு தனியார் நிறுவனமாக துவக்கப்பட்ட பனாமா பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட், பல்வேறு வகையான பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் தயாரிப்பில் திரவ பாரஃபின் எண்ணெய்கள், பெட்ரோலியம் ஜெல்லி, மை எண்ணெய்கள், ஆன்டிஸ்டேடிக் கோனிங் எண்ணெய், ரப்பர் செயல்முறை எண்ணெய்கள், மின்மாற்றி எண்ணெய்கள், கேபிள் நிரப்புதல் கலவைகள் மற்றும் பாரஃபின் மெழுகு ஆகியவை அடங்கும்.

பெட்ரோலிய சிறப்பு தயாரிப்பு(Petroleum Specialty Products) பிரிவில் 80க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் தொழில் புரிந்து வருகிறது. இவை மைகள் மற்றும் பிசின்கள், ஜவுளி, ரப்பர், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், வாகனம், மின்சாரம், கேபிள்கள் மற்றும் பிற தொழில்துறைகளுக்கு இன்றியமையாதவை. 

1993ம் ஆண்டில் நிறுவனம் பொது நிறுவனமாக(Public Limited) பதிவு செய்யப்பட்டு 1994ம் ஆண்டு வாக்கில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2011ம் ஆண்டில் தேசிய பங்குச்சந்தையில்(NSE) பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்திற்கு தற்போது உள்நாட்டில் 4 உற்பத்தி ஆலைகள் உள்ளது. 

வருவாயை பொறுத்தவரை நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் அழகுசாதனம் மற்றும் மருந்துத்துறை பிரிவுகளில் 24 சதவீதமும், மைகள் / பூச்சுகள் பிரிவில் 21 சதவீதமும், ரப்பர் செயல்முறை பிரிவில் 19 சதவீதமும், ஜவுளித்துறையில் 19 சதவீத வருவாய் பங்களிப்பையும் கொண்டுள்ளது. உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களில் 51 சதவீதம் ஏற்றுமதியில் மட்டுமே உள்ளது.

அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பிராந்தியங்களுக்கு நிறுவனம் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாபர் இந்தியா, ஹூபர் குழுமம், ஏடிசி(ATC) டயர் ஆகியவை உள்ளன. 

நிறுவனம் சமீபத்தில் நான்கு புதிய தயாரிப்பு பொருட்களாக: மை மற்றும் பூச்சு தொழிலுக்கான அரோமா ஃப்ரீ டிஸ்டில்லேட்ஸ்(Aroma Free Distillates), பெயிண்ட் தொழிலுக்கான நறுமண இலவச கரைப்பான்கள், துளையிடுதல் மற்றும் எண்ணெய் ஆய்வுக்கான மக்கும் எண்ணெய்கள் மற்றும் ரப்பர் தொழில்துறைக்கான நறுமணமற்ற புதிய எண்ணெய்கள் ஆகியவற்றை சந்தையில் வெளியிட்டுள்ளது. 

வருங்காலத்தில் பெரும்பாலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தங்களது இலக்கு என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதன் முயற்சியாக கடந்த 2022-23ம் நிதியாண்டில் சுமார் 30,000 டன் திறன் கொண்ட இயந்திரத்தை நிறுவியுள்ளது. இவற்றில் தற்போது 50 சதவீதத்திற்கும் அதிகமானவை வணிகமயமாக்கப்பட்டுள்ளது.

பனாமா பெட்ரோகெம் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு(Market Cap) 1,953 கோடி ரூபாய். நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.157 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 21 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்திற்கு குறுகிய கால மற்றும் நீண்டகால கடன் என பெரிதாக எதுவுமில்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 69 சதவீதமாக இருக்கிறது. நிறுவனர்கள் சார்பாக பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,249 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,940 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) விகிதம் கடந்த பல வருடங்களாக சற்று ஏற்ற-இறக்கமாக இருந்திருந்தாலும், 2021ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம்(PBT) ரூ. 295 கோடியாகவும், நிகர லாபம் 233 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.940 கோடி(மார்ச் 2023). கடந்த 10 ஆண்டுகளில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் வளர்ச்சி சராசரியாக 13 சதவீதமும், கூட்டு லாப வளர்ச்சி 35 சதவீதமுமாக இருந்துள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 5 வருடங்களில் 24 சதவீதமும், இதுவே பத்து வருட காலத்தில் சராசரியாக 20 சதவீத வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது. 

நிறுவனத்தை பொறுத்தவரை பாதகமான நிலையாக மூலப்பொருட்களின் விலை மாற்றம்(கச்சா எண்ணெய்), சுற்றுச்சூழல் அபாயங்கள், டாலர் விலை மாற்றம், துறையில் ஈடுபடும் போட்டி மற்றும் பெரு நிறுவனங்கள், அரசு கொள்கைகள் ஆகியவை. சாதகமான நிலை என காணுகையில் நிறுவனத்தின் தனித்துவமான தயாரிப்பு பொருட்கள், வலுவான வாடிக்கையாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு(R&D) ஆகியவற்றில் கவனம் செலுத்துதல், தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுதல், ஏற்றுமதி சந்தையில் காணப்படும் வாய்ப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்களுக்கான உலகளாவிய தேவை.

2022-23ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனம் ரொக்க கையிருப்பாக(Cash Equivalents) 222 கோடி ரூபாயை வைத்துள்ளது. கடந்த சில வருடங்களாக நிறுவனத்தின் பணப்பாய்வு(Cash Flow) தொகையும் மேம்பட்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

கடனில்லா பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்றால் என்ன ?

கடனில்லா பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்றால் என்ன ?

What means a Debt Free Listed Company in the Stock Market ?

கடனில்லா நிறுவனங்கள் என்பது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு அதன் இருப்புநிலை அறிக்கையில்(Balance Sheet) கடன் எதுவும் இருக்க கூடாது. பொதுவாக ஒரு நிறுவனம் தனது தொழிலை விரிவாக்கம் செய்ய அல்லது தொடர்ந்து தொழில் புரிய கடன் வாங்கலாம். இந்த கடன் பங்குகளாகவோ அல்லது கடன் பத்திரங்களாகவோ(Debt Securities) இருக்கலாம். 

பங்குகளாக கடன் பெறப்பட்டிருந்தால், பின்னாளில் நிறுவனத்தின் லாபத்தில் பங்குதாரர்களுக்கும் பங்குண்டு. அதே வேளையில் கடன் பத்திரங்களின் மூலம்  பெறப்படும் கடன் தொகைக்கு, பின்னாளில் வட்டியுடன் சேர்த்து அசல் தொகையை நிறுவனம், முதலீடு செய்தவர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டும்.

நிறுவனத்தின் கடன் பொதுவாக குறுகிய கால கடனாகவோ அல்லது நீண்ட கால கடனாகவோ இருக்கலாம். நிகர கடன்(Net Debt) எனும் போது, ஒரு நிறுவனத்திற்கு கடன் இருக்கலாம். அவை குறுகிய கால அல்லது நீண்ட கால கடனாக இருக்கக்கூடும். அந்த கடனை நிறுவனம் இன்றே செலுத்த வேண்டும் என்ற நிலை வந்தால், நிறுவனத்திடம் அதனை செலுத்துவதற்கான ரொக்க தொகை(Cash & Cash Equivalents) உள்ளதா என்பதை ஆராய்வது, நிகர கடனாகும்.

உதாரணமாக, ஒரு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட நிதியாண்டின் முடிவில் அதன் இருப்புநிலை அறிக்கையின் படி, ரூ.50 கோடி கடன் உள்ளதாக எடுத்து கொள்வோம். இப்போது, சொல்லப்பட்ட ஆண்டின் முடிவில் அந்த நிறுவனத்திடம் ரூ.25 கோடி ரொக்கமாக இருக்கும் நிலையில், அந்த நிறுவனம் தனது கடனை குறைக்கும் பட்சத்தில், மீதமிருக்கும் கடன் ரூ.25 கோடி மட்டுமே.

Net Debt = Borrowings(Short Term Debt + Long Term Debt) – Cash & Cash Equivalents

இதுவே நிறுவனத்திடம் ரொக்க தொகை ரூ.50 கோடியாக இருந்து கடனை அடைக்கும் நிலையில், நிறுவனத்திடம் தற்போது கடன் எதுவும் இருக்காது. இதனை தான் நாம், ‘நிகர கடனில்லா தன்மை(Net Debt Free)’ என்கிறோம். இங்கே நிறுவனம் அந்த கடனை உடனடியாக உண்மையில் செலுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. கடனை திரும்ப செலுத்த கூடிய நிலை ஏற்பட்டால் என்ற தன்மையை மட்டுமே இந்த விதிமுறை கூறுகிறது.

நிறுவனத்தின் கடன் தன்மையை புரிந்து கொள்ள மற்றொரு முறையை நாம் காணலாம். அதாவது நிறுவனத்தின் மொத்த கடனை, அதன் பங்குதாரர்களின் பங்கு மதிப்பை கொண்டு ஒப்பிடுவது. இதனை கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் என்கிறோம்.

Debt to Equity Ratio = Total Liabilities / Shareholder’s Equity

(Simple Way to Calculate from the Balance Sheet: Borrowings / (Equity Share Capital + Reserves))

நிறுவனத்தின் கடன்-பங்கு தன்மை ஒன்று(1.0) என வந்தால், நிறுவனத்தின் கடனும், பங்கு மதிப்பும் சரிசமமாக உள்ளது. இதன் காரணமாக நிறுவனம் பின்னாளில் தனது கடனை அதிகரிப்பதற்கான சூழல் ஏற்படலாம். இது நிறுவனத்திற்கும், பங்குதாரர்களுக்கு நல்லதல்ல. இதுவே 0.5 என விகிதம் இருந்தால், நிறுவனத்தின் கடன் தன்மை, பங்குகளின் மதிப்பில் பாதியாக உள்ளது என பொருளுண்டு. 

சுருக்கமாக சொன்னால், ஒருவருடைய வருவாய் ரூ.1 என கொள்ளும் போது, அதற்குள்ளாகவே அதன் செலவுகளும் இருக்க வேண்டும். மீறினால், கடன் தன்மை அதிகரித்து நிர்வாகம் சீர்கெடும், தொழிலும் பாதிப்படையலாம். இதுவே ஒரு ரூபாய் வருவாய் இருக்கையில், செலவு 50 பைசா அல்லது அதற்கு கீழாக இருக்கும் போது, அவர் பின்னாளில் கடன் வாங்கினாலும் அதனை திரும்ப செலுத்துவதற்கான திறன் உள்ளது. வருவாயை காட்டிலும் செலவு குறைவாக இருக்கும் நிலையில், தொழிலை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் ஏதுமிருக்காது.

மேலே சொல்லப்பட்ட இரு நிலைகளையும் அறிந்து வைத்திருப்பது, பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு அவசியம். ஒரு நிறுவனத்திற்கு நிகர கடன் நன்றாக இருந்தாலும் சரி, கடன்-பங்கு தன்மை 0.5 விகிதத்துக்கு குறைவாக இருந்தாலும் சரி – அவை கடனில்லா நிறுவனங்களாக கருதப்படும்.

ஒரு நிறுவனம் கடனில்லா தன்மையாக இருப்பதில் சாதகமும், பாதகமும் உள்ளது. கடனில்லாமல் இருக்கும் போது, நிறுவனத்தின் லாபத்திலிருந்து கடனுக்கான வட்டி தொகைக்கு ஒதுக்க தேவையில்லை. தொழிலை விரிவாக்கம் செய்ய போதுமான தொகை கையிருப்பில் இருக்கும். லாபத்தில் பங்குதாரர்களுக்கு பங்களிப்பை(Dividend, Buyback) அளிக்கலாம். 

பொதுவாக பொருளாதார மந்தநிலை மற்றும் துறை சார்ந்த நிதிச்சிக்கல் ஏற்படும் போது, கடனில்லா நிறுவனங்கள் தப்பி பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். திவால் நிலையை தவிர்ப்பது கடனில்லா நிறுவனங்களுக்கு எளிது. 

பாதகமான நிலையென்றால், ஒரு நிறுவனம் பங்குகள் மூலம் தனது முதலீட்டை அதிகம் ஈர்க்கையில், அது அந்த நிறுவனத்திற்கு நீண்ட காலத்தில் சாதகமாக அமையாது. ஏனெனில், பொதுவாக கடன் பத்திரங்களின் மூலம் பெறப்படும் கடனுக்கு, பங்குகளை காட்டிலும் செலவு விகிதம் மிக குறைவே. பங்குகள் எனில், லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அதன் பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். கடன் பத்திரங்கள்(Debt Funds) எனில், நிலையான வட்டியுடன் அசலை செலுத்தினால் போதுமானது. இதன் காரணமாக தான் பெரும்பாலான நிறுவனங்கள், வங்கிக்கடனை குறைந்த வட்டி விகிதத்தில் வாங்கி கொள்கிறது.  

இந்திய பங்குச்சந்தையில் கடனில்லா நிறுவனங்கள்:

  • கடன்-பங்கு(Debt to Equity Ratio) விகிதம் ஒன்றுக்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 3,166
  •  கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,550
  • பங்கு மூலதன மதிப்பு(Market Cap) 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 366
  •  பங்கு மூலதன மதிப்பு(Market Cap) 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 50 சதவீதத்திற்கு மேலாகவும், கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 257
  • பங்கு மூலதன மதிப்பு 5000 கோடி ரூபாய்க்கு மேலாகவும், ரொக்க கையிருப்பு(Cash Equivalents) நிறுவனத்தின் கடனை காட்டிலும் அதிகமாகவும், நிறுவனர்களின் பங்களிப்பு 50 சதவீதத்திற்கு மேலாக மற்றும் கடன்-பங்கு விகிதம் 0.5 க்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 147.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சர்வதேச காபி நாள் – அக்டோபர் 1, 2023 – தொழில் பகுப்பாய்வு

சர்வதேச காபி நாள் – அக்டோபர் 1, 2023 – தொழில் பகுப்பாய்வு

International Coffee Day – October 1, 2023 – Industry Insights

காபி உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நியாயமான வர்த்தக காபியை ஊக்குவிக்கவும், 2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1ம் நாளில் சர்வதேச காபி தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகின்றது. தேசிய காபி தினம் என ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தாலும், கடந்த 1963ம் ஆண்டில் லண்டனை தலைமையிடமாக கொண்டு சர்வதேச காபி அமைப்பு(International Coffee Organization) ஏற்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பில் இந்தியா உள்பட 42 நாடுகள் காபி உற்பத்தி உறுப்பினர்களாகவும், 7 நாடுகள் காபி இறக்குமதி செய்யும் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இறக்குமதி செய்யும் உறுப்பினர் நாடுகளாக ஐரோப்பிய யூனியன், ஜப்பான், நார்வே, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய ராச்சியம் மற்றும் துனிசியா ஆகியவை உள்ளன. 

சர்வதேச காபி தினத்தில் சில காபி உற்பத்தி செய்யும் வணிக நிறுவனங்கள், அன்றைய நாளில் காபியை இலவசமாகவோ அல்லது தள்ளுபடி விலையிலோ வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. ‘காபி’, ஒரு பிரபலமான பானமாகவும், பொருட்சந்தையில் முக்கிய பொருளாகவும் வர்த்தகமாகி வருகிறது. வளரும் நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறு உற்பத்தியாளர்கள் காபியை வளர்த்து தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்குகிறார்கள். 

உலகில் நாள்தோறும் சுமார் 225 கோடி கப் அளவிலான காபி, 100 கோடி நபர்களால் உட்கொள்ளப்படுகிறது. உலகின் 90 சதவீதத்திற்கும் அதிகமான காபி உற்பத்தி பெரும்பாலும் வளரும் நாடுகளில் தான் உற்பத்தியாகிறது. உலகம் முழுவதும் காபியை உற்பத்தி செய்யும் சிறு வணிகர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2.50 கோடி. தென் அமெரிக்காவில் தான் காபியை உட்கொள்ளும் அல்லது நுகரும் தன்மை அதிகமாக உள்ளது.

சர்வதேச காபி சந்தையின் மதிப்பு சுமார் 127 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய காபி சந்தையின் மதிப்பு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலக காபி விற்பனையின் வளர்ச்சி ஆண்டுக்கு 4 முதல் 5 சதவீதமாக(CAGR 2023-2028) மதிப்பிடப்படுகிறது. உலகின் காபி விற்பனை மூலமான பெரும்பாலான வருவாய் அமெரிக்காவிலிருந்து தான் கிடைக்கப்பெறுகிறது. உலக காபி சந்தையில் ஒரு தனிநபரின் சராசரி நுகரும் அளவு நாளொன்றுக்கு 700 முதல் 800 கிராம்களாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

காபி ஏற்றுமதியில் முதலிடத்தில் இருப்பது பிரேசில். வியட்நாம், கொலம்பியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஏழாவது மிகப்பெரிய ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இறக்குமதி செய்யும் நாடுகளாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக காபி விற்பனை சந்தையின் நாயகனாக மற்றும் பிராண்டாக, ‘ஸ்டார் பக்ஸ்(Starbucks)’ உள்ளது. இந்நிறுவனம் காபி விற்பனை மூலம் சுமார் 32.25 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டுகிறது. அதாவது அமெரிக்காவின் மொத்த காபி விற்பனை வருவாயில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் 37 சதவீதம். ஸ்டார் பக்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தாற் போல Panera Bread, McCafe, Lavazza, Tim Hortons, Dunkin’s Brands ஆகிய நிறுவனங்கள்(பிராண்டுகள்) உள்ளன.      

2022-2023ம் ஆண்டின் முடிவில் உலக காபி தொழிற்துறையின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 495 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தியாவின் காபி உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை கர்நாடக மாநிலம் மட்டும் கொண்டுள்ளது. இதற்கடுத்தாற் போல கேரளா 23 சதவீதத்தையும், தமிழ்நாடு 6 சதவீதத்தையும் பங்களிப்பாக கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம் ஆண்டுக்கு சுமார் 2.33 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான காபியை உற்பத்தி செய்கிறது. 

இந்திய உள்ளூர் சந்தையில் காபி நுகரும் தன்மை 73 சதவீதம் நகரங்களிலிருந்து தான் வருகிறது. இந்திய காபியை அதிகம் நுகரும்(இறக்குமதி) நாடுகளாக இத்தாலி, ஜெர்மனி, பெல்ஜியம், ரஷ்யா, லிபியா, போலந்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் உள்ளது. இந்தியாவின் காபி ஏற்றுமதியில் இத்தாலியின் பங்களிப்பு மட்டும் சுமார் 45 சதவீதம். அடுத்த ஐந்து வருடங்களில்(2023-2028) இந்திய காபி சந்தையின் விற்பனை வளர்ச்சி ஆண்டுக்கு 9 சதவீதத்தை கொண்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 

இந்திய பங்குச்சந்தையில் தோட்டத்துறை பிரிவில்(Plantation) சுமார் 44 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றின் உட்பிரிவான தேநீர் மற்றும் காபி(Tea & Coffee) துறையில் 26 நிறுவனங்கள் உள்ளன. இச்சந்தையின் முதன்மை இடத்தை, ‘டாட்டா கன்சூமர் ப்ராடக்ட்ஸ்’ தக்க வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.81,400 கோடி. உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேயிலை நிறுவனமாகவும் ‘டாட்டா கன்சூமர் ப்ராடக்ட்ஸ் இருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கேப்டன் பைப்ஸ் லிமிடெட் – ராஜ்கோட் – பங்குச்சந்தை அலசல்

கேப்டன் பைப்ஸ் லிமிடெட் – ராஜ்கோட் – பங்குச்சந்தை அலசல் 

Captain Pipes Limited – Fundamental Analysis – Stocks

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கேப்டன் குழுமத்தின் துணை நிறுவனம் தான் கேப்டன் பைப்ஸ் லிமிடெட். பிளாஸ்டிக் செய்யப்படாத பி.வி.சி(UPVC) குழாய்கள் மற்றும் பொருத்துதல் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது கேப்டன் பைப்ஸ் நிறுவனம். 

சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாக கருதப்படும் UPVC குழாய்கள் பொதுவாக வெப்ப செயல்திறன் மற்றும் நீடித்த ஆயுள் காலத்தை கொண்டிருக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் UPVC தொழில்நுட்பம், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. UPVC சாளரங்கள் பெரும்பாலும் பல்நோக்கு செயல்பாடுகளை கொண்டவை. 

கடந்த 2010ம் ஆண்டு துவக்கப்பட்ட கேப்டன் பைப்ஸ் நிறுவனம் UPVC குழாய்கள் பிரிவில் உறை குழாய்கள், பிளம்பிங் குழாய்கள், உறிஞ்சும் குழாய்கள், தோட்ட குழாய்கள், HDPE குழாய்கள் மற்றும் நீர்ப்பாசன உபகரணங்கள், SWR குழாய்கள், கரைப்பான் சிமெண்ட் மற்றும் பி.வி.சி. அழுத்த குழாய்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த குழாய்கள் பெரும்பாலும் நீர் வழங்கல் பகுதிகள்(Water Supply Lines), வடிகால் அமைப்பு, கழிவு நீர் பாதை, நீர்ப்பாசன அமைப்புகள், மின் வழித்தடம் மற்றும் கட்டுமான பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை சுமார் 62,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு, ஜெர்மன் மற்றும் ஜப்பானிய தொழில்நுட்பத்தை(German extrusion lines and Japanese injection molding machine) கொண்டு குழாய்கள் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தனது குழாய் விற்பனை கிளையை நிறுவியுள்ள கேப்டன் பைப்ஸ் நிறுவனம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பெரு நில பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 

அகமதாபாத் அருகே புதிதாக ஒரு ஆலையை(Greenfield Plant) அமைப்பதற்கான திட்டத்திற்கு, சமீபத்தில் நிறுவனத்தின் இயக்குனர் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக அமையவுள்ள ஆலை 20,000 மெட்ரிக் டன் திறன் கொண்டதாகவும், இதற்கான மொத்த முதலீடு 25 கோடி ரூபாய் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய நிலையிலிருக்கும் உற்பத்தி திறனை இரட்டிப்பாக முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு வாக்கில் மும்பை பங்குச்சந்தையின் SME பிரிவில் கேப்டன் பைப்ஸ் நிறுவனம், பங்கு ஒன்றுக்கு 40 ரூபாய் என்ற விலையில் தனது பொதுப்பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. பின்னர் நடப்பு 2023ம் வருடத்தின் ஜூன் மாதத்தில் மும்பை பங்குச்சந்தையின் பிரதான பலகைக்கு(Migration) மாற்றப்பட்டுள்ளது. ஒன்பது வருடத்திற்கு முன்பு, SME பிரிவில் பங்கு வெளியிடுகையில் இதன் சந்தை மதிப்பு சுமார் நான்கரை கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 339 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

நிறுவனத்தின் கடன்-பங்கு தன்மை 0.13 மடங்கிலும், புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.1.44 என்ற அளவிலும் உள்ளது. நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் நிறுவனம் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை அளித்துள்ளது. அதே காலத்தில் நிறுவனத்தின் முக மதிப்பும்(Face value) 10 ரூபாயிலிருந்து ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 85 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.81 கோடியாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) கடந்த பத்து வருடங்களில் சராசரியாக ஐந்து சதவீதம் என்ற அளவில் உள்ளது. சொல்லப்பட்ட நிதி ஆண்டில் நிறுவனம் ரூ.1.81 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 46 சதவீதமாகவும் இருந்துள்ளது. அதே வேளையில் இதன் பங்கு விலை கடந்த மூன்று வருட காலத்தில் 200 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் பெற்றுள்ளது. 2023ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 6.10 கோடி ரூபாயாக உள்ளது. 

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 72 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. நிறுவனத்தின் தலைவராக திரு. ரமேஷ் கிச்சாடியா மற்றும் நிர்வாக இயக்குனராக திரு. கோபால் கிச்சாடியா ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். 

கேப்டன் குழுமத்தின் மற்ற துணை நிறுவனங்களாக கேப்டன் பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட், கேப்டன் பாலிபிளாஸ்ட் லிமிடெட், கேப்டன் டெக்னோகாஸ்ட் மற்றும் கேப்டன் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவை உள்ளன.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

புரோமோட்டர்களின் பங்களிப்பு இல்லாமல் நிறுவனம் செயல்பட முடியுமா ?

புரோமோட்டர்களின் பங்களிப்பு இல்லாமல் நிறுவனம் செயல்பட முடியுமா ?

Listed companies with Zero Promoter Holding – Fundamental Insights

இந்திய பங்குச்சந்தையை பொறுத்தவரை குறைந்தபட்ச பொது பங்கு(Minimum Public Shareholding) விதியின் படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொதுமக்களுக்கு குறைந்தபட்சம் 25 சதவீத பங்குகளை ஒரு நிறுவனம் ஒதுக்க வேண்டும். பொது மக்களுக்கு என சொல்லும் போது சிறு முதலீட்டாளர், பெரு முதலீட்டாளர் மற்றும் நிறுவனங்களும் அடங்கும். நிறுவனர்களின்(Founders, Promoters) பங்களிப்பை பொறுத்தவரை, நம் நாட்டில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்தில் 75 சதவீத பங்குகளுக்கு மேல் வைத்திருக்க கூடாது என்பது சட்ட விதியாக உள்ளது.

75 சதவீதத்திற்கு மேலாக ஒரு நிறுவனம் பங்குகளை தன்வசம் வைத்திருந்தால், அந்த பங்குகளை, பங்கு விலக்கல்(Divestment) முறையில் மற்ற பங்குதாரர்களுக்கு விற்று விட வேண்டும். இது பொதுவாக அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் விலக்கு பெற்ற நிறுவனங்களுக்கு பொருந்தாது. தற்போதைய நிலையில், 75 சதவீத பங்குகளுக்கு மேல் வைத்திருக்கும் பட்டியலிடப்பட்டவை, சுமார் 64 நிறுவனங்கள் தான். இவற்றில் எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம் மற்றும் சில பொதுத்துறை வங்கிகளும் அடங்கும்.

பங்குச்சந்தையில் 50 சதவீதத்திற்கும் மேல் நிறுவனர்களின் பங்களிப்பை(Promoter Holding) கொண்டிருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 2,854 (ஆகஸ்ட் 8, 2023 முடிவில்). இந்த பட்டியலில் ரூ.5,000 கோடிக்கும் மேலான சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனங்கள் 396. 5,000 கோடி ரூபாய்க்கும் மேலான சந்தை மூலதன மதிப்பு, 50 சதவீதத்திற்கு மேலான நிறுவனர்களின் பங்களிப்பு மற்றும் கடன்-பங்கு விகிதம் 0.5 மடங்குக்கு குறைவாக இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 254.

பொதுவாக நிறுவனர்களின் பங்களிப்பு, பொது மக்கள் மற்றும் பிற உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்பை காட்டிலும் அதிகமாக காணப்படுவது, நீண்டகாலத்தில் ஒரு முதலீட்டாளருக்கு சாதகமான அம்சமாக இருக்கும். ஒரு நிறுவனத்தின் மீது அதன் நிறுவனர்களே பங்களிப்பை கொடுக்காவிட்டால், பொது மக்களாகிய நாம் அந்த நிறுவனத்தின்(பங்குகள்) மீது நம்பிக்கை வைத்து என்ன பயன் ? இன்றும், சில நிறுவனங்களின் லாபத்தில் பெரும்பாலான பங்கு பலனை அனுபவிப்பது அதன் நிறுவனர்கள் தான்.

40 வருடங்களுக்கு முன்பு, இந்த ‘ABC’ மற்றும் ‘XYZ’ பங்குகளை வாங்கியிருந்தால், இன்று அது பல கோடிகள் பெற்றிருக்கும் என வெற்று பெருமை பேசி என்ன பயன். ஒரு கட்டுரையீர்ப்புக்கு(Article, Blogging Posts) வேண்டுமானால், இது போன்ற தகவல்கள் பயன்படலாம். உண்மையில், 40 வருடங்களுக்கு முன்பிருந்த ஒரு நிறுவனம், இன்று பல மடங்கு உயர்ந்திருந்தால் அந்த பலனை பெரும்பாலும் அனுபவிப்பது அதன் நிறுவனர்கள் தான். ஏனெனில் அவர்கள் வசம் மட்டும் அந்த பங்குகள் இன்றளவிலும் விற்கப்படாமல் இருந்திருக்கும். பொதுமக்களாகிய நாம் அந்த பங்குகளை எப்பொழுதோ விற்றிருப்போம்.

நிறுவனர்களின் பங்களிப்பு, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. எனினும் சில நிறுவனங்களில் நிறுவனர்கள் சார்பாக எந்த பங்களிப்பும் இல்லாமல் இருக்கத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட நிறுவனங்கள் நல்ல நிறுவனங்களா  அல்லது சரிப்பட்டு வராதா என கேள்வி கேட்டால், அது அந்த நிறுவனத்தின் தொழில் அனுபவமும், நிர்வாக திறனையும் பொறுத்து தான் உள்ளது. 

இந்திய பங்குச்சந்தையில் புரோமோட்டர்களின் பங்களிப்பு இல்லாமல் சுமார் 110 நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் முக்கிய நிறுவனங்களான ஐ.டி.சி, எச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எல் & டி ஆகியவை அடங்கும். சமீபத்தில் ஜோமாட்டோ மற்றும் பேடிஎம் நிறுவனங்கள். 

நிறுவனர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் இயங்கலாமா ? ஆம், தாராளமாக இயங்கலாம். சில நிறுவனங்கள் தங்கள் தொழிற்துறையின் சாதகத்திற்கு ஏற்ப, நாட்டின் சட்ட விதிகளுக்காக, திறன்மிக்க தொழில் வல்லுநர்களை நியமிப்பதன் மூலம் இது போன்ற நிறுவனங்களை செயல்படுத்துகின்றன. உண்மையில் அவர்களது பங்குகள், நிறுவனர்கள் பட்டியலில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மற்ற பொதுப்பங்கு நிறுவனங்களின் வாயிலாக பங்குகளை கைவசம் வைத்திருந்து, நேரடியாக இல்லாமல் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டை வைத்திருப்பர்.

உதாரணமாக ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தில் பெரும்பாலான பங்குகள் இந்திய காப்பீட்டு நிறுவனங்களிடமும், பிற வெளிநாட்டு நிறுவனங்களிடமும் உள்ளன. அதே வேளையில் மேலே சொல்லப்பட்ட நிறுவனங்களில், குறிப்பிடத்தக்க பங்குகளை மறைமுகமாக நிர்வாகத்தை நடத்தும் நிறுவனத்திற்கு உண்டு. இது போல தான் மற்ற நிறுவனர் பங்களிப்பு அல்லாத நிறுவனத்திலும் நடைபெறுகிறது. குழும நிறுவனங்கள்(Group of Companies) சில காலங்களில் இது போன்ற நடைமுறையை பின்பற்றி தங்களது துணை நிறுவனங்களை நடத்துகின்றனர்.

நிறுவனர்கள் தங்களது பங்குகளை வங்கியிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ அடமானம் வைத்து, பின்னர் அது மீட்கப்படாமல் போனாலும் இது போன்ற நிலை ஏற்படலாம். நிறுவன கையகப்படுத்துதல், திவால் நிலை போன்ற சமயங்களிலும் நிறுவனர்களின் பங்களிப்பு இல்லாமல் இருக்கலாம்.

பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை ஆராய, கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய அடிப்படை காரணிகள்(Fundamental Analysis – Factors)

பங்குச்சந்தையில் நிறுவனர்களின் பங்களிப்பு இல்லாவிட்டாலும், அவர்கள் நிறுவனத்தின் நிர்வாகத்தை திறம்பட வைத்திருக்க வேண்டும் என்பது தான் எதார்த்த உண்மை. எனவே, ஒரு நிறுவனத்தை ஆராயும் போது அதன் தொழில் அனுபவம், நிர்வாக திறன், கடனில்லாமை அல்லது கடனை திறம்பட தொழிலில் புகுத்துவது ஆகியவற்றை ஒரு முதலீட்டாளர் கவனிக்க வேண்டியது அவசியம். இல்லையனில் முதலீட்டாளருக்கு, அது ‘விழலுக்கு இறைத்த நீர்’ தான் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இன்போசிஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ. 5,945 கோடி

இன்போசிஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு நிகர லாபம் – ரூ. 5,945 கோடி 

Infosys reported a net profit of Rs.5,945 Crore in Q1FY24

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட் தனது 2023-24ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டு முடிவுகளை இன்று வெளியிட்டிருந்தது. சொல்லப்பட்ட ஏப்ரல்-ஜூன்  காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 37,933 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 28,869 கோடியாகவும் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இயக்க லாபம் 9,064 கோடி ரூபாய் மற்றும் இயக்க லாப விகிதம்(OPM) 24 சதவீதமாக உள்ளது. இதர வருமானமாக ஜூன் காலாண்டில் 561 கோடி ரூபாயை நிறுவனம் ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் ரூ.8,362 கோடியாகவும், நிகர லாபம் ரூ.5,945 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 2022-23ம் நிதியாண்டின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்ட வருவாய் 10 சதவீதமும், நிகர லாபம் 11 சதவீதமுமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஜூன் 2022ல் ஒரு பங்கு மீதான வருவாய்(EPS) ரூ. 12.74 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.14.32 ஆக உள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6.01 லட்சம் கோடி. நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. மார்ச் 2023ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 73,338 கோடி ரூபாய். இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் நிதித்துறை சார்ந்த சேவைகளிலிருந்து பெறப்படுகிறது. 

இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஜூன் காலாண்டின் படி 1,883 வாடிக்கையாளர்கள்(நிறுவனங்கள்) உள்ளனர். நூறு மில்லியன் டாலர்களுக்கு மேலாக வருவாய் அளிக்கும் வாடிக்கையாளர்கள் மட்டும் 38 பேர். 940 நிறுவன வாடிக்கையாளர்கள் சுமார் ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேலான வருவாயை இன்போசிஸ் நிறுவனத்திற்கு அளிக்கின்றனர்.

முதல் 25 நிறுவன வாடிக்கையாளர்கள்(Top 25 Clients) மட்டும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 35 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஜூன் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 3.36 லட்சம். இவற்றில் 3.17 லட்சம் ஊழியர்கள் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களாகவும், மற்றவர்கள் விற்பனை மற்றும் அதற்கு பிறகான சேவையை வழங்குவதிலும் உள்ளனர். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022-23ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.19,477 கோடி

2022-23ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.19,477 கோடி 

ITC Ltd reported a net profit of Rs.19,477 Crore in FY 2022-23

112 வருட தொழில் அனுபவம் கொண்ட ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் தனது 2022-23ம் நிதியாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. பில்லியன் டாலர் வருவாயை கொண்ட இந்நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 90 நாடுகளுக்கும் மேலாக இதன் பொருட்கள் ஏற்றுமதியிலும், சுமார் 60 லட்சம் சில்லறை விற்பனை நிலையங்களையும் இந்நிறுவனம் கொண்டிருக்கிறது.

புகையிலை, விவசாயம் மற்றும் உணவுப்பொருட்கள், காகிதம் மற்றும் பேக்கேஜிங், நட்சத்திர தங்கும் விடுதிகள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை நிறுவனத்தின் முக்கிய துறைகளாக உள்ளது. ஐ.டி.சி. நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 5.21 லட்சம் கோடி. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில், புகையிலை பொருட்களின் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் 37 சதவீதமாக உள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.70,937 கோடியாகவும், செலவினம் 45,272 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) 36 சதவீதமாகவும், இதர வருமானமாக ரூ.2,053 கோடியை ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 25,866 கோடி ரூபாய் மற்றும் நிகர லாபம் ரூ.19,477 கோடி.

2021-22ம் நிதியாண்டினை ஒப்பிடுகையில் தற்போது சொல்லப்பட்ட வருவாய் 17.6 சதவீத வளர்ச்சியையும், நிகர லாபம் 24.5 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் பங்குதாரர்களுக்கான ஈவுத்தொகை(Dividend) பங்கு ஒன்றுக்கு ரூ.15.50 ஆக சொல்லப்பட்டுள்ளது(ஏற்கனவே அளிக்கப்பட்ட ரூ.6/பங்கு சேர்த்து).

எப்.எம்.சி.ஜி(FMCG) துறையின் வருவாய் 20 சதவீதமும், விவசாயம் 12 சதவீதமும், காகிதம் மற்றும் பேக்கேஜிங் 19 சதவீதமும் மற்றும் புகையிலை பொருட்களின் வருவாய் 20 சதவீதமுமாக வளர்ச்சி அடைந்துள்ளது. Aashirvaad, Sunfeast, Yippee, Dark Fantasy, Classmate Notebooks, Mangaldeep, Fiama, Vivel, B Natural, Nimyle, Engage, Shower to Shower, Savlon, Fabelle, Mom’s Magic, Sunrise Foods, Paperkraft, AIM தீப்பெட்டிகள், Charmis, Dermafique ஆகியவை நிறுவனத்தின் பிரபல பிராண்டுகளாகும்.

பங்குச்சந்தை – பண்டமென்டல் அனாலிசிஸ் – இலவச வகுப்புகள் – 14 நாட்கள் 

2023ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 67,912 கோடி ரூபாய். நிறுவனத்திற்கு நீண்டகால கடன்கள் எதுவுமில்லை. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 56 ரூபாயாகவும், பங்கு விலைக்கும், விற்பனைக்குமான இடைவெளி 7.35 மடங்குகளிலும் உள்ளது. 

கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் வளர்ச்சி 10 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 12 சதவீதமாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் பங்கு முதலீடு மீதான வருவாய்(Return on Equity) கடந்த பத்து வருட காலத்தில் சராசரியாக 25 சதவீதம் தந்துள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 57 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபத்தில் புகையிலை பொருட்களின்(Cigarettes) பங்களிப்பு மட்டும் 60 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலீடு செய்யலாமா ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலீடு செய்யலாமா ?

Can you invest in Chennai Super Kings – CSK – Unlisted Equity(Pre-IPO) ?

கடந்த 2007ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் துவங்கப்பட்டது தான் இந்தியன் பிரீமியர் லீக்(IPL). உரிமையாளர்(Franchise) சார்ந்து கிரிக்கெட் அணிகள் உருவாக்கப்பட்டு 2008ம் ஆண்டு முதல் இன்று வரை வருடந்தோறும் ஐ.பி.எல். போட்டிகள் நடந்து வருகின்றன. 

இதுவரை நடைபெற்ற 15 வருட ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக ஐந்து முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறையும் கோப்பையை வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 என இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களின் நம்பிக்கை அணிகளாக மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பல வருடங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்ப காலங்களில் மாஸ்டர் பிளாஸ்டர்(Master Blaster) என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இருந்ததும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி தலைமையின் கீழ் அமைந்தது தான்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளராக இந்தியா வின்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக முன்னாள் ஐ.சி.சி. தலைவர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. சீனிவாசன் இருக்கிறார். இந்தியா வின்ஸ ஸ்போர்ட்ஸ் நிறுவனம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஒரு அங்கமாகும். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனாக எம்.எஸ். தோனியே இருந்து வருகிறார். பயிற்சியாளராக நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெமிங் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாட்டின் முதல் யுனிகார்ன் விளையாட்டு நிறுவனமாகும். 100 கோடி அமெரிக்க டாலர் மதிப்பை(USD One Billion – Unicorn) கொண்ட நிறுவனத்தை தான் யுனிகார்ன் நிறுவனம் என கூறுவதுண்டு.

கடந்த 15 வருட ஐ.பி.எல். வரலாற்றில் நான்கு முறை கோப்பையை இந்நிறுவனம் வென்றிருந்தாலும், 2013ம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் சூதாட்ட நிகழ்வில் சிக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016, 2017 என இரண்டு வருடங்கள் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இந்நிகழ்வில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

2013ம் ஆண்டில் லண்டனை சேர்ந்த பிராண்ட் பினான்ஸ் நிறுவனம், உலகின் மதிப்புமிக்க 150 விளையாட்டு அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேர்ந்தெடுத்தது இதன் சிறப்பம்சம். ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ்(Mumbai Indians) அணியும் அதிக போட்டிகளை நேருக்கு நேர் எதிர்கொண்ட அணிகளாக உள்ளது. கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் வாங்கும் முதலீட்டு செலவிலும் இவ்விரு அணிகள் தான் முன்னிலையில் உள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூட்டாக ஏற்படுத்திய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இரு முறை கோப்பைகளை வென்ற அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே உள்ளன. 

பொதுவாக பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தை பட்டியலிட, இந்திய கம்பனிகள் சட்டப்படி, அந்நிறுவனத்தை பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக(Public Limited / Listed) பதிவு செய்ய வேண்டும். பின்னர் தான் அந்த நிறுவனம் சந்தையில் ஐ.பி.ஓ. முறையில் பங்குகளை வெளியிடும். அப்போது தான் பொதுவெளியில் சாமானிய மக்களும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க இயலும். 

இதே முறையில், பொதுவெளியில் பங்குகளை வெளியிடாமல் ஆனால் குறிப்பிட்ட பங்குதாரர்கள் மட்டும் முதலீடு செய்யும் பொருட்டு வந்த நிறுவனங்கள் தான் இன்று பெரும்பாலும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாக வலம் வருகின்றன. உதாரணமாக ஜொமாடோ(Zomato), ஒயோ, ஸ்விக்கி, பைஜூ, போட்(boAt) ஆகிய நிறுவனங்கள்.

இது போன்ற ஸ்டார்ட்-அப் நிறுவனமாகவும், தனியார் முதலீட்டை பெறக்கூடிய பங்குகளை கொண்ட நிறுவனமாகவும் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏறக்குறைய அனைவரும் முதலீடும் செய்யலாம். அதே வேளையில் அந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை(Unlisted Equity). 

2014ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்டு சந்தையில் பட்டியலிடப்படாத(Unlisted) பங்கு முதலீட்டை கொண்ட நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. அதாவது இந்த பங்கு பொதுவெளி சந்தையில் வர்த்தகமாகாது. ஆனால், இந்த பங்குகளை ஏற்கனவே வைத்திருக்கும் குறிப்பிட்ட முதலீட்டாளர்களிடம் அவர்கள் விற்கும் விலையில் வாங்கி கொள்ளலாம்.

2021-22ம் நிதியாண்டின் படி, சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 1.15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. பங்குதாரர்களின் பங்களிப்பில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம்(India Cements Shareholders Trust) 30 சதவீத பங்குகளையும், ஸ்ரீ சாரதா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் 7 சதவீத பங்குகளையும், எல்.ஐ.சி.(LIC India) நிறுவனம் 6 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் டிரஸ்ட் நிறுவனம் 2.50 சதவீத பங்குகளையும், டி மார்ட்(DMart) நிறுவனத்தின் தலைவர் திரு. ராதா கிஷன் தமானி 2.40 சதவீத பங்குகளையும் வைத்துள்ளார். இன்னபிற தனியார் நிறுவனங்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பங்குகளை வைத்துள்ளது. நிறுவனத்தில் உள்ள மொத்த பங்குகளின் எண்ணிக்கை சுமார் 30.81 கோடி(Equity Shares). நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. கல்லிடைக்குறிச்சி விஸ்வநாதன் சுப்பிரமணியம் உள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் பட்டியலிடப்படாத சந்தை மதிப்பு சுமார் ரூ. 5,100 கோடி. பங்கு ஒன்றின் விலை 180 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. குறைந்தபட்சம் ஒரு முதலீட்டாளராக நூறு பங்குகளை வாங்க வேண்டியது அவசியம். 2021-22ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 341 கோடி ரூபாயாகவும், வருவாய் வளர்ச்சி 38 சதவீதமாகவும் இருந்துள்ளது.

CSK - Profit and loss - FY22

சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் செலவினம் 308 கோடி ரூபாயாகவும், நிகர லாபம்(Net Profit) ரூ. 32 கோடியாக உள்ளது. கடன்-பங்கு விகிதம் 0.25 என்ற அளவிலும், ஒரு பங்கு மீதான வருமானம்(EPS) 95 பைசாவாகவும் இருந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நிறுவனத்தின் எட்டாம் ஆண்டு பொதுக்கூட்டம் இணைய வழியில் நடைபெற்றுள்ளது. மார்ச் 2022 முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves & Surplus) 245 கோடி ரூபாயாக உள்ளது. 

நிறுவனத்தின் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 130 கோடி (மார்ச் 2022). 2021-22ம் நிதியாண்டில் நிறுவனம் சார்பில் ஈவுத்தொகை(Dividend) எதுவும் அறிவிக்கப்படவில்லை. சொல்லப்பட்ட காலத்தில் பெறப்பட்ட லாபத்திலிருந்து நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்புக்கு தொகை எதுவும் ஒதுக்கப்படவில்லை. 

சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனம், பங்குச்சந்தைக்கு வருவதற்கான வாய்ப்பை பற்றி தற்போது வெளியிடவில்லை. அதே வேளையில் நிறுவனத்தின் வருமான வாய்ப்புகளாக ஊடக உரிமைகள்(Media Rights), ஸ்பான்சர்சிப், விளம்பரங்கள், போட்டிகளுக்கான டிக்கெட்டுகள், கடிகாரங்கள், டி-சர்ட்டுகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்திற்கு, சூப்பர்கிங்ஸ் வென்ச்சர்ஸ் என்ற துணை நிறுவனமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

CSK நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்யலாமா ?

  • பொதுவாக பங்குச்சந்தையில், பொதுவெளியில் வெளியிடப்படும் நிறுவன பங்குகளில் ரிஸ்க் தன்மை அதிகமாக இருக்கும் நிலையில், பட்டியலிடப்படாத இது போன்ற நிறுவன பங்குகளிலும் ரிஸ்க் தன்மை மிகவும் அதிகமே. பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அதனை களைய செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் உள்ளது. ஆனால் பட்டியலிடப்படாத பங்குகளில் இதனை நாம் காண முடியாது. 
  • பங்குச்சந்தையில் காணப்படும் அதிக ஏற்ற-இறக்கங்கள், பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளில் பொதுவாக நடைபெறாது. இதற்கான காரணம் மிகக்குறைந்த பங்குகள் மட்டும் இங்கே வர்த்தகமாகும். சில நேரங்களில்(மாதங்கள் அல்லது வருடங்கள்) பங்கு வர்த்தகமே ஆகாது. வாங்குவதற்கும், விற்பதற்கும் நித்தமும் ஆட்கள் இருக்க வேண்டுமே !
  • பங்குச்சந்தையில் ஏற்கனவே அளப்பரிய அளவில் முதலீடு செய்து விட்டு, தனியார் நிறுவனங்களில், இது போன்ற பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவோர் இதனை ஒரு வாய்ப்பாக கருதலாம். ஒரு வேளை, இது போன்ற நிறுவனங்கள் பின்னொரு காலத்தில் பங்குச்சந்தைக்கு(IPO Listed) வரும் போது, ஏற்கனவே முதலீட்டு செய்திருக்கும் நிலையில் அதிக விலையில் பங்குகளை விற்று வெளியேறலாம். ஆனால் இதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையும், திறமையான நிர்வாகமும் இதனை வெளிக்காட்டும்.
  • பட்டியலிடப்படாத நிறுவன பங்குகளை, தற்போதைய நிலையில் வெகு சில தளங்களே வாங்கும்-விற்பனை வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. அத்தளங்களின் நம்பகத்தன்மையையும் நாம் சரிபார்த்து கொள்ள வேண்டும். பங்குச்சந்தையில் கைதேர்ந்தவர்களுக்கும்(25 வருடங்களுக்கு மேல் முதலீட்டு அனுபவம்), அச்சந்தையில் அதிக முதலீடு செய்து கோடிகளில் லாபத்தை ஈட்டியவர்களுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற பட்டியலிடப்படாத பங்குகள் ஒரு அரிய முதலீட்டு வாய்ப்பாகும். மற்ற கத்துக்குட்டிகளுக்கு இவற்றிலிருந்து விலகியிருப்பதே நன்மை பயக்கும் !

“Unlisted equity is an opportunity to build wealth, but it’s always risky than listed”

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்கு முதலீடு அடிப்படை பகுப்பாய்வுக்கான(Fundamental Analysis) கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி 

Infosys reported a net profit of Rs.24,108 Crore in the Financial year 2022-23 – Results

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட், கடந்த வார முடிவில் தனது 2022-23ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவு மற்றும் ஒட்டுமொத்த ஆண்டுக்கான நிதி அறிக்கையையும் வெளியிட்டிருந்தது. 

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 37,441 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 28,443 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் இயக்க லாப விகிதம்(OPM %) 24 சதவீதமாக உள்ளது. நான்காம் காலாண்டின் முடிவில் நிறுவனம் ரூ. 6,134 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

இதற்கு முந்தைய ஆண்டின்(2021-22) நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்டிருக்கும் வருவாய் 16 சதவீதமும், நிகர லாபம் 8 சதவீதமுமாக வளர்ந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டினை ஒட்டுமொத்தமாக காணும் போது, நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,46,767 கோடியாகவும், செலவினம் 1,11,637 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. 

சொல்லப்பட்ட நிதியாண்டின் முடிவில் நிறுவனம் 24,108 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் பங்கு மீதான வருவாய்(EPS) 58 ரூபாயாக உள்ளது. 2011-12ம் நிதியாண்டில் இது 18 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் பெரும்பாலான வருவாய் டிஜிட்டல் சேவையை சார்ந்தும், நிதித்துறை(Financial Services) சார்ந்த சேவைகளிலிருந்தும் பெறப்படுகிறது.  

புவியியல் சார்ந்து காணும் போது, நிறுவனத்தின் 62 சதவீத வருவாய் வட அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. ஐரோப்பாவில் 25 சதவீதமும், உள்நாட்டில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே வருவாய் ஈட்டப்படுகிறது. உலகின் சிறப்பான 500 நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனமும் இருப்பது கவனிக்கத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனத்தின்(Infosys Limited) முக்கிய வாடிக்கையாளர்களாக மெர்சிடஸ்-பென்ஸ், எச்.எஸ்.பி.சி. வங்கி, லாக்கீட் மார்ட்டின், அமெரிக்க ராணுவம், அமெரிக்க கடற்படை, ஐ.பி.எம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் டச்சு வங்கி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 5.22 லட்சம் கோடி. 

கடந்த நிதியாண்டில் எதிர்பார்த்த வருவாய் மற்றும் லாப மதிப்பீட்டை காட்டிலும் குறைவாக இருந்ததும், நடப்பு நிதியாண்டுக்கான வருவாய் வழிகாட்டல்(Financial Guidance) நிறுவனத்தின் சார்பில் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்ததால், திங்கள் கிழமை அன்று (17-04-2023) இந்த பங்கின் விலை 10 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியை சந்தித்தது. நீண்டகால முதலீட்டாளர்களிடையே இது எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாது, விலை வீழ்ச்சியால் பங்கு வாங்குவதற்கான வாய்ப்பையும் இது போன்ற நிகழ்வு வழங்குகிறது.

உலக அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை அச்சம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றம் ஆகியவற்றால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை சரிவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இன்போசிஸ் நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. அதன் கடன்-பங்கு விகிதம் 0.11 என்ற அளவில் உள்ளது. மார்ச் 2023 முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 73,338 கோடியாக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி சராசரியாக 14 சதவீதமும், லாப வளர்ச்சி 10 சதவீதமாகவும் இருந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 17 சதவீதம் (கூட்டு வட்டியில்) ஏற்றம் பெற்றுள்ளது. ஒரு வருட காலத்தில் 28 சதவீதம் இறக்கமடைந்துள்ளது. அடிப்படை பகுப்பாய்வின் படி(Cash Flow – Fundamental Analysis), இன்போசிஸ் பங்கின் விலை ரூ. 900 – ரூ. 1,100 என்ற அளவில் அமைந்துள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

Jyothy Labs Limited – Fundamental Analysis – Stocks

கேரள மாநிலத்தை சேர்ந்த திரு. எம்.பி. ராமச்சந்திரன் அவர்களால், கேரளாவை தலைமையிடமாக கொண்டு 1983ம் ஆண்டில் துவங்கப்பட்டது தான் ஜோதி லேப்ஸ் நிறுவனம் (Jyothy Laboratories). எப்.எம்.சி.ஜி.(FMCG) துறையில் தொழில் புரிந்து வரும் இந்நிறுவனம் ஆரம்பநிலையில் ஒரே ஒரு பொருளை மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்தது. இன்று ஆண்டுக்கு பில்லியன் ரூபாய் மதிப்பிலான வருவாயை கொண்டும், சுமார் 6,900 கோடி ரூபாய் சந்தை மதிப்பையும் கொண்ட நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

வீட்டு பராமரிப்பு, துணிமணிகள் மற்றும் தனிநபர் பராமரிப்பு ஆகிய பிரிவுகளில் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பிரபல சொட்டு நீலமான, ‘உஜாலா’ உற்பத்திக்காக 1992ம் ஆண்டு சென்னையில் ஒரு உற்பத்தி ஆலையை துவக்கியது. துணிமணி பராமரிப்பில், ‘ Ujala, Henko, Mr.White மற்றும் More Light’ இதன் முக்கிய பிராண்டுகள். நாட்டின் துணிமணி பராமரிப்புக்கான பொருட்கள் பிரிவில், 81 சதவீத சந்தை மதிப்பை இந்நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் துணிமணி பராமரிப்பு பிரிவு மட்டும் 37 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில்(Dish Wash) இதன் ஒட்டுமொத்த வருவாயில் 38 சதவீதத்தையும், தனிநபர் பராமரிப்பு பிரிவில் 10 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில், ‘Exo, Prill’ இதன் முக்கிய பிராண்டுகள். இந்த துறையில் 11 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளது. இந்த பிரிவில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் ஜோதி லேப்ஸ் வலம் வருகிறது.

தனிநபர் பராமரிப்பு பிரிவில், ‘Margo, Neem Active மற்றும் Fa’ இதன் பிரபல பிராண்டு பொருட்கள். வீட்டு பூச்சிக்கொல்லி சார்ந்த பொருட்களையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இந்த பிரிவில் 21 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் வைத்துள்ளது. ‘Maxo கொசுவர்த்தி, T-Shine Cleaner, Maya ஊதுபத்திகள்’ ஆகியவை இதன் பிராண்டுகளாக உள்ளன. 

நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக சேர, சரக்கு மேலாண்மை அமைப்பையும்(Freight Management System) இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நான்காம் தொழில் புரட்சியின் கீழ் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஜோதி லேப்ஸ் முதலீடு செய்துள்ளது. 

2007ம் ஆண்டு மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஜோதி லேப்ஸ் லிமிடெட் நிறுவனம் பொது நிறுவனமாக பட்டியலிடப்பட்டது. தற்போது நிறுவனத்தின் தலைமையிடமாக மும்பை உள்ளது. இத்துறையில் புதிதாக நுழையும் மற்றும் ஏற்கனவே சந்தையில் சிறந்து விளங்கும் துறை சார் நிறுவனங்களை இந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. 2011ம் ஆண்டில் கென்கேல் இந்தியா(Henkel India) நிறுவனத்தை ஜோதி லேப்ஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.     

ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பிராண்டு பொருட்களுக்கு, பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், திரைப்பட துறையில் உள்ள நடிகைகள் ஷில்பா  ஷெட்டி மற்றும் மாதுரி தீக்சித் ஆகியோர் விளம்பர தூதர்களாக இருந்துள்ளனர். நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. ரா. லட்சுமி நாராயணன் அவர்களும், நிர்வாக இயக்குனராக எம்.ஆர். ஜோதி அவர்களும் உள்ளனர். நாட்டின் நம்பிக்கைக்குரிய பிராண்டுகளில் ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பொருட்கள் இன்றளவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,196 கோடியாகவும், இயக்க லாபம்(Operating Profit) 248 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் சராசரியாக வருடத்திற்கு 12-15 சதவீதம் என்ற அளவில் உள்ளது. சொல்லப்பட்ட ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 159 கோடி. செப்டம்பர் 2022 காலாண்டின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.1,428 கோடி. 

ஜோதி லேப்ஸ் நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக பங்குச்சந்தையில் உள்ளது. உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களிடம் 17 சதவீத பங்குகளும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களிடம் 13 சதவீத பங்குகளும் உள்ளது. கடன் தன்மை குறைவாகவும், பங்கு மூலதனம் மீதான வருவாய் 14 சதவீதமாக(5 வருட காலத்தில்) இருப்பதும் சாதகமான நிலையாக பார்க்கப்படுகிறது.     

ஜோதி லேப்ஸ் நிறுவன பங்கின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் குறைந்தபட்ச விலையாக பங்கு ஒன்றுக்கு ரூ.134 ஆகவும், அதிகபட்ச விலையாக 223 ரூபாய் வரையிலும் வர்த்தகமாகியுள்ளது. 2020ம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு துவக்கத்தில் இந்த பங்கின் விலை 100 ரூபாய்க்கும் கீழ் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு மற்றும் பணப்பாய்வு(Discounted Cash Flow) முறையில் மதிப்பிடும் போது, ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ. 130-160 என்ற சராசரியை பெறும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com