செப்டம்பர் மாதம் முதல் அமலில் வரக்கூடிய பங்குச்சந்தை ஒழுங்குமுறை மாற்றங்கள் – 2020
Stock Market Regulatory Changes effective from September 2020
நடப்பாண்டின் மார்ச் மாத வீழ்ச்சிக்கு பிறகு மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ்(BSE Sensex) சுமார் 13,000 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றமடைந்துள்ளது. அதாவது சரிவிலிருந்து தற்போது வரை 35 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே வேளையில், ஜனவரி 1 முதல் கணக்கிடும் போது, சென்செக்ஸ் 5 சதவீத இறக்கத்தில் உள்ளது கவனிக்கத்தக்கது.
கடந்த இரண்டு வருட காலத்தில் சென்செக்ஸ் 1.5 சதவீத ஏற்றம் மட்டுமே அடைந்துள்ளது. இருப்பினும் மூன்று வருட காலத்தில் 24 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது இந்த குறியீடு. பங்குச்சந்தை ஏற்ற-இறக்கம் இருந்து கொண்டிருந்தாலும், நாட்டில் ஏற்படும் பொருளாதார நிலை மாற்றங்கள், பங்குச்சந்தை அமைப்பு ஒழுங்குமுறையிலும் சில மாற்றங்களை கொண்டு வருகிறது.
வரும் செப்டம்பர் மாதம் முதல் பங்குச்சந்தையில் சில ஒழுங்குமுறை மாற்றங்கள் அமலில் வர உள்ளது. அவற்றில் சில முக்கிய தகவல்களை இங்கு காண்போம்.
பங்குச்சந்தையில் எந்த பங்கு பரிவர்த்தனையும் செய்யாதவரா நீங்கள் ?
- பங்குச்சந்தையில் தொடர்ச்சியாக 12 மாதங்கள், பங்குகள் சார்ந்த எந்த பரிமாற்றத்தையும் செய்யாமல் இருக்கும் நிலையில், உங்கள் வர்த்தக கணக்கு செயலற்ற கணக்காக(Inactive) அறிவிக்கப்படும். இந்த நடைமுறை கடந்த மாதம் ஆகஸ்ட் முதல் அமலுக்கு வந்துள்ளது.
- செயலற்ற கணக்கை(Dormant) மீண்டும் புதுப்பிக்க மறு கே.ஐ.சி.(Re-KYC) செய்வது அவசியமாகும். இதற்கு நீங்கள் கணக்கை துவங்கும் போது என்னென்ன ஆவணங்களை கொடுத்தீர்களா, அதே போல மீண்டும் ஒரு முறை சமர்ப்பிப்பது அவசியமாகும். வீட்டு முகவரி மாறியிருந்தால் அதற்கான தகுந்த ஆவணங்களை அளிக்க வேண்டும்.
- பொதுவாக இந்த நடைமுறைக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. இருப்பினும், இது கால விரயம் ஏற்படுத்தும் செயலாக சொல்லப்படுகிறது.
இனி இங்கும் விளிம்பு பற்றாக்குறை அபராதம் உண்டு:
- இதுவரை பணச்சந்தையில்(Cash Market) தரகு நிறுவனங்கள் அறிவிக்கும் பண அளவு இருந்தாலே, நாள் வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி(based on upfront margin) கொள்ளலாம். பங்குச்சந்தைக்கு தேவையான மீதி தொகையை தரகு நிறுவனங்கள் செலுத்தி விடும். பின்பு நாள் வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் செலுத்த வேண்டிய பணத்தை பெற்று கொள்ளும் (பொதுவாக மூன்று நாட்களுக்குள்).
- எனவே இனி பணச்சந்தையில் முழுத்தொகையும் இல்லாமல் மார்ஜின் அளவில் வர்த்தகம் புரிய முடியாது. ரொக்கமாக பணத்தை செலுத்தி விட்டு தான் பங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியும். அதே போல, அன்றைய தினத்தில் விற்ற பங்குகளின் தொகையை கொண்டு புதிய பங்கு பரிவர்த்தனையை மேற்கொள்ள இயலாது. புதிய பரிவர்த்தனைக்கு தேவையான தொகையை சந்தைக்கு முன்னரே செலுத்த வேண்டும்.
- இருப்பினும், ஏற்கனவே பங்குகளை டீமேட் கணக்கில் வைத்திருப்பவர்கள் அதனை அடமானமாக கணக்கில் கொண்டு, மார்ஜின் அளவுகளை பெறலாம். இதற்கு சந்தை அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய உறுதிமொழி இணைப்பை(New Margin Pledge Mechanism) பயன்படுத்த வேண்டும். அடமானத்தை உறுதி செய்த பின்னர், மார்ஜின் அளவு நிர்ணயிக்கப்படும்.
- புதிய அடமான திட்டத்தால் மார்ஜின் வழங்கப்பட்டாலும்,பின் சொல்லப்பட்ட நாளில் பணத்தை முழுவதுமாக செலுத்தாத நிலையில் பற்றாக்குறை அபராதம் உண்டு.
- குறைந்த அளவில் வர்த்தகமாகும் பங்குகள் (illiquid Securities) மற்றும் அதிக ஏற்ற-இறக்கங்களை காணும் பங்குகளுக்கு (100 % VAR) மார்ஜின் அளவு அளிக்கப்படாது.
மார்ஜின் பற்றாக்குறை அபராதம்(Margin Shortage Penalty) எவ்வளவு ?
- பற்றாக்குறை தொகை ரூ.1 லட்சம் மற்றும் சொல்லப்பட்ட மார்ஜின் அளவு 10 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் நிலையில், 0.5 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
- பற்றாக்குறை தொகை ரூ.1 லட்சத்திற்கு அதிகமாக மற்றும் மார்ஜின் அளவும் 10 சதவீதத்திற்கு மேலாக இருக்கும் நிலையில், ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
- மார்ஜின் பற்றாக்குறை(Margin Shortfall) மூன்று நாட்களுக்கு மேலாக செல்லும் போது, நான்காவது நாளிலிருந்து 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். இதுவே ஒரு மாதத்தில் ஐந்து நாட்களுக்கு மேலாக (தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும்) மார்ஜின் பற்றாக்குறை இருக்கும் போதும் 5 சதவீத அபராதம் செலுத்த வேண்டும்.
சொல்லப்பட்ட ஒழுங்குமுறை மாற்றங்களில் சில விதிமுறைகள் நடப்பு ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் முதல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கவனிக்க: சில பங்குகளுக்கு 20 சதவீத தொகை ரொக்கமாக இருந்தாலே, மார்ஜின் அளவு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. மார்ஜின் அளவு மற்றும் அபராதம் சார்ந்த தகவல்களை உங்களது தரகு நிறுவனங்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது நன்று. தரகு நிறுவனங்கள் சார்ந்து செபியிடம்(SEBI) பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை