Tag Archives: gold etf

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ? (எக்ஸ்க்ளுசிவ் கட்டுரை)

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ? (எக்ஸ்க்ளுசிவ் கட்டுரை)

Asset Class returns Since 1994 in India – Investment Returns Year on Year (Exclusive article)

பொதுவாக பங்குச்சந்தை முதலீடு, சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. ஆம், பங்குச்சந்தையில் முதலீடு செய்கையில் அதிக ஏற்ற-இறக்கத்தை நாம் சந்தித்தாக வேண்டும். ஆனால், பங்குச்சந்தையை தவிர்த்து மற்ற முதலீடுகள் உண்மையில் அபாயமில்லையா(ரிஸ்க் தன்மை) ? இதனை நம்மில் ஒவ்வொருவரும் சிந்தனையாக மாற்றியிருந்தால், அதற்கான விழிப்புணர்வு(Awareness) நமக்கு கிடைத்திருக்கும்.

உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பங்கு இன்று தவிர்க்க முடியாத இடத்தில் இருந்து வருகிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலெல்லாம் ஏற்பட்ட நிதிச்சிக்கல்கள் நம் நாட்டிலும் ஒரு காலத்தில் இருந்துள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் நாம் பல பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் களைந்து, 1992ம் ஆண்டுக்குப் பிறகு அதனைக் கடந்து விட்டோம். உலகின் எந்தவொரு வளர்ந்த நாட்டின் பொருளாதாரத்திலும் தனிநபர் மற்றும் குடும்பத்தின் வருவாயில் அதிக ஏற்ற-தாழ்வு இருப்பதும், ஏழை-பணக்காரர்களுக்கான வருமான இடைவெளி அதிகமாக இருப்பதும் உண்மை தான். ஆனால் அதற்காக நாம் நிதி சார்ந்த கல்வியை கற்காமலும், விழிப்புணர்வை பெறுவதில் தயக்கம் காட்டுவதும் சரியா ?

இவ்வுலகில் ரிஸ்க் இல்லாமல் ஒரு நிகழ்வு இருக்கிறதா என்றால், அப்படியொன்றுமில்லை. சாலையை கடந்தாலும் அபாயம் தான், வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும் ரிஸ்க் தான். வங்கி டெபாசிட் பாதுகாப்பானது என நாம் எண்ணினால் மத்திய வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தை பற்றியும்(Interest rate Risk), வங்கிகளுக்கான DICGC சார்ந்த விதிகளையும் படிக்க வேண்டும். தங்கத்தின் மீதான முதலீடு ரிஸ்க் இல்லையென நினைத்தால், தங்கத்தின் சந்தை எங்கே இருந்து இயக்கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் அது எந்த நாணயத்தால்(Currency) வர்த்தகமாகிறது என்ற விழிப்புணர்வை பெற வேண்டும்.

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறைப் பற்றி நாம் பெரிதாக சொல்ல வேண்டியதில்லை. எல்லா குடும்பங்களுக்கும் ஒரு வீடு தேவை என்ற போதிலும், அவற்றை நாம் முதலீட்டுக் கோணத்தில் அணுகும் போது, அவற்றில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க் நமக்கு தெரிவதில்லை. வீட்டுமனைத் துறையில் நாம் முதலீடு செய்யும் முன் நீர்மை நிறை(Liquidity), வரி விதிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை(Transparency) பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அஞ்சலகங்கள், அரசு கடன் பத்திரங்கள், வருங்கால வைப்பு நிதி என காணுகையில், இது ஒரு நாட்டில் உள்ள அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தைப் பொறுத்துத் தான் அமையும். கிரீஸ், இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா, ஜப்பான், ரசியா, இன்னும் எண்ணற்ற நாடுகளில் வெவ்வேறு காலத்தில் நடந்த பொருளாதார மந்தம் நம் நாட்டில் இனி ஏற்படாது என நாம் எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். 

பொதுவாக ஒரு சாரார் பங்குச்சந்தை முதலீடு ஆபத்தானது, பணக்காரர்களுக்கானது, அது ஒரு சூதாட்டம் என மொத்தமாக ஒதுங்குவதும், மற்றொரு புறம் குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்கிறேன் பேர்வழியாக போன்சி(Ponzi Scam) மோசடித் திட்டங்களில் மொத்த பணத்தையும் இழந்து விட்டு நிற்பதும் அடிக்கடி நடந்து தான் வருகிறது. இது ஒரு புறமென்றால், இந்திய பண(Money Market) மற்றும் முதலீட்டுச் சந்தையில்(Capital Market) பெரிதாக வாய்ப்பொன்றுமில்லை என நினைத்துக் கொண்டு வெளிநாட்டுப் பங்குகளை வாங்குகிறேன், கிரிப்டோவில் விளையாடுகிறேன், ரம்மியில் கோடீஸ்வரராகுகிறேன், பங்குச்சந்தை மற்றும் போரெக்ஸ் சந்தையில் வர்த்தகம் மற்றும் இந்த செயலியில்(Mobile Apps) பணத்தை போட்டு விட்டு சும்மா இருந்தால் பணக்காரராகி விடலாம் என சிக்குகின்றனர்.

சந்தையில் முதலீடு செய்யாமல் இருப்பதும், சந்தையைத் தாண்டி வேறுமொரு புதிய முதலீட்டு வாய்ப்பு இருப்பதாக கருதி, தெரியாத, ‘கேக்குறான் மேக்குறான்’ திட்டத்தில் உழைத்த பணத்தை தொலைப்பது – இரண்டும் ஒன்று தான். மருத்துவத் துறையில் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராக, பொறியியல் துறையில் ஒரு சிறந்த என்ஜினீயராக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் உயர்நிலை அதிகாரியாக வருவதற்கு நாம் நமது பள்ளிக்காலத்திலிருந்தோ அல்லது கல்லூரியிலிருந்தோ அதற்கான விதையை நட்டிருக்க வேண்டும். அதனைத் தான் நாம் அனுபவம் பேசுகிறது என சொல்கிறோம். ஆனால், பங்குச்சந்தையிலோ ஒரு வாரம் பணம் பார்த்து விட்டால் போதும், மிகப் பெரிய வல்லுனராக நம்மை நாமே நினைத்துக் கொண்டு, சந்தையின் அடிப்டைக் கல்வியை கற்காமல், அதன் கோணத்தை அறியாமல் சூதாடி விட்டு, பின்பு பங்குச்சந்தை ஒரு சூதாட்டம் எனவும், இது பணக்காரர்கள் மட்டுமே சம்பாதிக்கக் கூடிய இடமென்றும், மேலும் இது நமக்கு சரிப்பட்டு வராது என நாம் புறந்தள்ளுகிறோம்.

டாட்டாவும், பிர்லாவும்:

பங்குச்சந்தையில் அவ்வளவு எளிதாக சம்பாதித்து பணக்காரராக விட முடியுமென்றால், ஏன் டாட்டா-பிர்லாவும், அம்பானி-அதானியும் பல துறைகளில் தொழில் புரிய வேண்டும். அவர்களிடம் இருக்கும் மூலதனத்தை கொண்டே நித்தமும் ஆயிரம் கோடிகளை பங்குச்சந்தை வர்த்தகத்தில் லாபமாக ஈட்டலாமே ! உண்மையில் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களையும், வழங்கும் சேவைகளையும் நாம் பயன்படுவதால் மட்டுமே அவர்கள் தங்களது தொழிலில் பணக்காரர்களாக உள்ளனர். இதனைத் தான் நாமும் செய்ய வேண்டும் – ஒரு நிறுவனத்தின் அல்லது தொழிலின் உரிமையாளர் மற்றும் முதலீட்டாளரை போல !

கடந்த கால வருவாய் விகிதங்கள்:

சரி, இந்தியப் பங்குச்சந்தை முதலீடு கடந்த 30 ஆண்டுகளில் அப்படி என்ன செய்து விட்டது. மும்பையின் தலால் தெருவை அடையாளமாக கொண்ட மும்பை பங்குச்சந்தை என்னவோ 1875ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த தேசிய பங்குச்சந்தையும் 1992ம் ஆண்டு வாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று 5000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக, அதாவது 1994ம் ஆண்டு முதல் நாம் ஒவ்வொரு வருடமும் முதலீடு செய்து வந்திருந்தால், நடப்பாண்டின் செப்டம்பர் மாத முடிவில் சென்செக்ஸ் குறியீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 14.30 சதவீதமும், நிப்டி-500 குறியீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 15.70 சதவீதமும் ஒரு முதலீட்டாளருக்கு வருவாயாக கிடைத்திருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் ஆண்டுக்கு சுமார் 50,000 ரூபாய் என்ற அளவில் கடந்த 30 ஆண்டுகளாக முதலீடு செய்து வந்திருந்தால்(மொத்தம் 15 லட்சம் ரூபாய்), சென்செக்ஸ் குறியீட்டின் மூலம் இன்று உங்களது ஒட்டுமொத்த முதலீட்டு வருவாய் 2.41 கோடி ரூபாயாகவும், நிப்டி-500 குறியீட்டின் மூலம் அது 2.79 கோடி ரூபாயாகவும் வளர்ந்து நிற்கும். இங்கே அரசியல் சார்ந்த ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறலாம். ஆனால் சந்தையில் நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, முதலீடு செய்த பின் பொறுமையே உங்களது வருவாயை மிகப்பெரிய அளவில் மாற்றும்.

1994ம் ஆண்டு முடிவில் நாட்டின் பணவீக்கம் 9.50 சதவீதமாக இருந்த நிலையில், அந்த வருடத்தின் முடிவில் பொது வருங்கால வைப்பு நிதி அளித்துள்ள வருவாய் சுமார் 12 சதவீதமாகும். இது போன்ற ஒரு வருவாய் இன்று இருந்திருந்தால், நீங்கள் பங்குச்சந்தைக்கு வர வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய அளவில் பங்குச்சந்தையில் ஆண்டுக்கு சராசரியாக 12 – 15% வருவாய் என  நீண்டகாலத்தில் கிடைத்தால், அவர் தான் சந்தையில் சாதனையாளர். சொல்லப்பட்ட 1994ம் வருடம் வங்கியில் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 10 சதவீதமாகவும், சென்செக்ஸ் குறியீடு 19.60 சதவீத வருவாயையும் வழங்கியுள்ளது. அதே வேளையில் தங்கத்தின் தங்கம் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வருவாயையே அந்த வருடத்தில் கொடுத்துள்ளது.

தங்கத்தின் முதலீட்டு வருவாய்:

கடந்த 30 வருடங்களில் தங்கத்தின் மீதான முதலீட்டு வருவாய் ஆறு வருடங்கள், 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்துள்ளது. இதன் மோசமான காலமாக 1997ம் ஆண்டில் தங்கம் (-20.60) சதவீதமும், 2014, 2015ம் ஆண்டு முறையே (-10.80) சதவீதம் மற்றும் (-5.50) சதவீதம் என்ற அளவில் இறக்கத்தை கண்டுள்ளது. அதாவது 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், ஈட்டிய வருவாய் வெறும் 1.84 சதவீதமே. அதாவது சொல்லப்பட்ட வருடத்தில் நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) சராசரியாக 6.27 சதவீதமாகும். 

 தங்கத்தின் பொற்காலமாக 2005ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை(17.70%, 20.40%, 12.90%, 25.30%, 32.80%, 19.50%, 36.90%) இருந்துள்ளது. குறிப்பாக 2007-08ம் ஆண்டு ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார நெருக்கடியில் மற்றும் அதனை ஒட்டியுள்ள காலத்தில் தங்கத்தின் மீதான வருவாய் உயர்ந்து வந்துள்ளது. 2011ம் ஆண்டு மட்டும் தங்கத்தின் மீதான முதலீடு 36.90 சதவீத வருவாயை கொடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 30 ஆண்டுகளில் தங்கத்தின் மீதான வருவாய் சராசரியாக 11.10 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது.

பங்குச்சந்தையில் முதலீடு:

இந்தியப் பங்குச்சந்தையை பொறுத்தவரை சென்செக்ஸ் குறியீடு கடந்த 30 வருடங்களில் 12 வருடங்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமான வருவாயை அளித்துள்ளது. அதிகபட்ச வருவாயாக 2009ம் ஆண்டில் 82 சதவீதத்தை வழங்கியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டான 2008ல் வரலாற்றில் மோசமான வீழ்ச்சியை சந்தித்த தருணம், சுமார் (-51.40) சதவீத வீழ்ச்சி. 30 வருடங்களில் 8 முறை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது போல, நிப்டி-500 குறியீட்டை எடுத்துக் கொண்டால் அதுவும் 8 ஆண்டுகள் இறக்கத்தை சந்தித்துள்ளது. இந்த குறியீடு 1998ம் ஆண்டின் முடிவில் 97.20 சதவீதம் மற்றும் 2009ம் ஆண்டில் 92.90 சதவீத வருவாயை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிப்டி-500 குறியீடு ஒன்பது ஆண்டுகள் 30 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றத்தை பெற்றுள்ளது. 

வெள்ளியில் வாய்ப்பு:

வெள்ளியில் முதலீட்டை மேற்கொள்ளும் போது, பெரும்பாலும் தங்கத்திற்கு எதிர்மாறாகத் தான் இருந்துள்ளது. வெள்ளியின் பயன்பாடு தொழிற்துறையில் காணப்படுவதால், பங்குச்சந்தையை போலவே அதிகமான வருவாயை வெள்ளி முதலீடு வழங்கியுள்ளது. இருப்பினும் முப்பது வருடங்களில் சராசரியாக ஆண்டுக்கு 9.70 சதவீத அளவில் உள்ளது. 

வெள்ளி அதிகபட்ச வருவாயாக 2009ம் ஆண்டில் 63.50 சதவீதமும் மற்றும் 2010ம் ஆண்டில் 59.90 சதவீதமும் தந்துள்ளது. மோசமான வீழ்ச்சியாக 2013ம் ஆண்டில் (-26.60) சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 30 வருடங்களில் ஆறு முறை வெள்ளி முதலீட்டின் மீதான வருவாய் 20 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது. பொதுவாக நம்மில் பலர் தங்கத்தின் மீது கொண்டுள்ள காதலை, வெள்ளிக்கு கொடுக்க மறுக்கின்றனர், அது ஏனோ ! தங்கத்தினை காட்டிலும், வெள்ளியின் பயன்பாடு தொழிற்துறைக்கு தேவை. குறிப்பாக எலக்ட்ரிக் வாகன பேட்டரி தயாரிப்பு, சோலார் பேனல், மருத்துவம், மின்னணுப் பொருட்கள், ரசாயனம், நிழற் படக்கலை(Photography), நீர் சுத்திகரிப்பு, அச்சிடுதல் என பல துறைகளுக்கு வெள்ளியின் தேவை உள்ளது. வெள்ளியை அப்படியே வாங்காவிட்டாலும், முதலீட்டு நோக்கத்தில் சில்வர் இ.டி.எப்.(Silver ETF) அல்லது சில்வர் மியூச்சுவல் பண்டுகள்(Silver Funds) முறையில் வாங்கலாம்.

Asset class returns in India - 30 Yrs Data Since 1994

உங்களின் நிரந்தர பகைவன்:

நாட்டின் பணவீக்கத்தை பொறுத்தவரை 1998 மற்றும் 2009ம் ஆண்டுகளில் 15 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து காணப்படுகிறது. குறைந்தபட்ச விலைவாசியாக கடந்த 1999ம் ஆண்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்த வருடத்தில் தான் சென்செக்ஸ் மற்றும் நிப்டி-500 குறியீடுகள் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் பணவீக்க விகிதம் ஆறு சதவீதத்திற்கும் குறைவாக காணப்பட்டாலும், உணவுப்பொருட்களின் விலை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வந்துள்ளது. கடந்த 30 வருடங்களில் நாட்டின் பணவீக்க விகிதம் சராசரியாக 6 முதல் 7 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது.

ரியல் எஸ்டேட் முதலீட்டு வருவாய்:

ரியல் எஸ்டேட் என சொல்லப்படும் வீட்டுமனைத் துறையில் முதலீடு, கடந்த 20 வருடங்களில் சராசரியாக ஆண்டுக்கு 8.40 சதவீத வளர்ச்சியை அளித்துள்ளது. வீட்டுமனைத் துறைக்கான முதலீட்டு வருவாய் தரவுகள் பெரும்பாலும் மெட்ரோ நகரங்களை கொண்டு கணக்கிடப்பட்டவை. கொல்கத்தா போன்ற நகரங்களில் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை சராசரியாக ஆண்டுக்கு 3 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வருவாய் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. ரியல் எஸ்டேட் துறைக்கு மோசமான காலக்கட்டங்களாக 2008ம் ஆண்டும், 2020ம் ஆண்டும் இருந்துள்ளது. 

ரியல் எஸ்டேட் துறையில் பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் நிலம், வீடு வாங்கலாம் என்ற போதிலும் ஒரு முதலீட்டுச் சாதனமாக அணுகும் போது, அத்துறையில் ஒழுங்குமுறை மற்றும் கொள்கைகள், விலை நிர்ணயம், தொழில்நுட்பங்களை புகுத்துதல் ஆகியவை குறைகளாகவும், அவற்றை நிர்வகிப்பது சவால்களாகவும் இருந்து வந்தது (கணக்கில் காட்டப்படாத பணமும், வரி ஏய்ப்பும் அப்புறம்). இதன் காரணமாகவே பெரிய முதலீட்டாளர்களும், பெரு நிறுவனங்களும் REIT மூலம் முதலீட்டை மேற்கொள்ளத் துவங்கியுள்ளன. இன்னும் ரெய்ட் பற்றிய விழிப்புணர்வு பெரிதாக பரப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில்லறை முதலீட்டாளர்களுக்கு(Retail Investors) கட்டிடத்துடன் கூடிய முதலீட்டை காட்டிலும் பெரும்பாலும் மனை(நிலம்) தான் பல மடங்கு வருவாயை நீண்டகாலத்தில் தந்துள்ளது. வீட்டு வாடகை மூலம் கிடைக்கப்பெறுகிற வருவாய், வங்கி வட்டி விகிதத்தை காட்டிலும் குறைவாக காணப்படுவதாக துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகினறனர். இதன் காரணமாகத் தான் வீட்டு கட்டிடம் தேய்மானமாகவும், நிலம் வருவாய் அளிக்கும் வாய்ப்பாகவும் சொத்து மதிப்பீட்டு அளவில் பார்க்கப்படுகிறது(வணிகக் கட்டிடங்களுக்கு இது விதிவிலக்கு).

வங்கியில் உங்கள் பணம்:

வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதம், கடந்த 30 வருடங்களில் ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டுள்ளது. 1994ம் ஆண்டில் 10 சதவீதமாக இருந்த நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக 1996ம் ஆண்டு, இது 12 சதவீதமாக இருந்துள்ளது. அப்போதைய நாட்டின் பணவீக்கமும் 9.50 சதவீதத்திலிருந்து 10.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. பின்னர் 2004ம் ஆண்டு வாக்கில் வங்கி டெபாசிட் வட்டி விகிதம் 5.40 சதவீதமாக இருந்துள்ளது(பணவீக்கம் 3.80%). 2009ம் ஆண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 15 சதவீதமாக உயர்ந்த நிலையில், அப்போதைய வட்டி விகிதம் 9.30 சதவீதம். பின்னர் 2012ம் ஆண்டு வாக்கில் 8.80 சதவீதமாக வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் இருந்த நிலையில், அப்போதைய பணவீக்க விகிதம் 11.20%.

நடப்பில் வங்கிகளில் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் 7.5 சதவீதத்திற்கும் குறைவே. அதே போன்று நாட்டின் பணவீக்கமும் தற்போது 6 சதவீதத்திற்குள் இருந்து வருகிறது. பொதுவாக அரசின் கடன் வாங்கும் கொள்கைகள் மற்றும் விலைவாசியை கருத்தில் கொண்டு வங்கி வட்டி விகிதங்கள் மாறுபடும். கடந்த சில வருடங்களாக அன்னிய முதலீடு அதிகரித்து வரும் நிலையில், வங்கி கொள்கைகள் மூலம் அரசின் கடன் வாங்கும் தன்மையும் குறைந்து வருகிறது. ஜப்பானும், அமெரிக்காவும் ஒரு சதவீதத்திற்கும், இரண்டு சதவீத வருவாய்க்கும் இந்தியாவில் முதலீடு செய்ய காத்திருக்கும் போது, அரசு ஏன் மக்களிடம் வங்கி மூலம் அதிக வட்டிக்கு கடன் வாங்கப் போகிறது ?

ஓய்வுக்கால வைப்பு நிதித்திட்டம்:

பொது வருங்கால வைப்பு நிதியை(Public Provident Fund – PPF) பொறுத்தவரை, கடந்த 1994ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை நிலையாக 12 சதவீத வட்டி வருவாய் கிடைத்த நிலையில் 2003ம் ஆண்டுக்கு பிறகு 8 சதவீதத்திற்கு கீழ் சரிந்தது. நடப்பில் 7.5 சதவீதத்திற்கும் குறைவாகவே வருங்கால வைப்பு நிதி மூலம் கிடைக்கப்பெறுகிறது. எனினும் இது போன்ற திட்டங்கள், பெரும்பாலும் ஓய்வூதியக் காலத்திற்கு தேவையான தொகையாகவே இருக்கும். அப்படியிருக்கும் பி.எப். திட்டத்தை போல என்.பி.எஸ்.(NPS), ஓய்வுக்கால மியூச்சுவல் பண்டு(Retirement Funds) திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வரிச் சேமிப்பு மட்டுமில்லாமல் ஓய்வுக்காலத்திற்கு தேவையான கார்பஸ் தொகையையும் சற்று அதிகரிக்கச் செய்யலாம். இதன் மூலம் விலைவாசிக்கு ஏற்றாற் போல ஓய்வூதியமும் கிடைக்கும்.

மேலே சொன்ன பல்வகையான முதலீட்டுச் சாதனங்களை காணும் போது, பங்குச்சந்தை முதலீட்டின் மூலமான வருவாய் முதலிடத்தையும், அதற்கடுத்தாற் போல் இரண்டாமிடத்தில் தங்கமும் உள்ளது கவனிக்கத்தக்கது. வெள்ளி மற்றும் ரியல் எஸ்டேட் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. 1994ம் ஆண்டு முதல் வருடந்தோறும் 50,000 ரூபாயை இன்று வரை முதலீடாக மேற்கொண்டிருந்தால், உங்களுக்கு பங்கு முதலீட்டின் மூலம் 15 மடங்குகளிலும், தங்கத்தின் மூலம் 8 மடங்குகளிலும், வெள்ளியின் மூலம் 6 மடங்குகளிலும் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் 4.5 மடங்குகளிலும் வருவாய் கிடைத்திருக்கும். 

நீங்கள் செய்யவில்லையென்றால், வேறொருவர்…

என்ன தான் நாம் நம் பணத்தை ஆயுள் காப்பீட்டிலும்(Insurance), வங்கி டெபாசிட்டிலும் பாதுகாப்புக் கருதி செய்தாலும், மீண்டும் அந்த பணம் அதிக வருமானமீட்டும் பங்குகளைத் தான் தேடிச் செல்லும். ஆனால் நமக்குக் கிடைப்பதோ பாதுகாப்பான(நம்பிக்கையில் மட்டுமே) சொற்ப வருமானமே.  இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. பற்றி சொல்லலாம். இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் 52 லட்சம் கோடி ரூபாய். எல்.ஐ.சி. நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாத பெரு மற்றும் நடுத்தர நிறுவனங்களே இல்லை என சொல்லலாம். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையில் ஒரு குறிப்பிட்டத் தொகை பங்குச்சந்தைக்கு, ஈட்டும் அபரிதமான லாபமோ இந்நிறுவனத்திற்கு. முடிவில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான காப்பீடும் சிறு போனஸ் தொகையும். 

உங்களால் பங்குச்சந்தையை பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், கற்றுக் கொள்ள முயற்சிக்கலாம். இல்லையெனில் தகுந்த ஆலோசகரின் முன்னிலையில் அல்லது பரஸ்பர நிதிகளின்(Mutual Funds) மூலம் சந்தை அபாயத்தையும், உங்களது பயத்தையும் குறைக்கலாம். ஆனால் ரிஸ்க் என்பதை நாம் முழுவதும் தவிர்க்க முடியாது. இன்று பங்குச்சந்தை ரிஸ்க்கை பரவலாக்க மற்றும் நல்ல வருவாய் ஈட்ட இண்டெக்ஸ் பண்டுகளும்(Index Funds) உள்ளன. வெறுமென பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொண்டு குறைந்த வட்டி வருவாய், பணவீக்க விகிதம், இலக்கிற்கான தொகையை அடைய முடியாமல் போவதற்கு சற்று ரிஸ்க் எடுத்துத் தான் பார்க்கலாமே(அறிவார்ந்த – Calculated Risk) ! 

“எண்ணற்ற வழியில் எனக்கு வருவாய் வந்து கொண்டிருக்கிறது, நேர்மையாக அரசுக்கு வரி செலுத்தி அதற்கான வரித்தாக்கலும் செய்து வருகிறேன், தலைமுறை கடந்த சொத்துக்களும் எனக்கு இருக்கிறதென்றால்” நீங்கள் பணவீக்கத்தையும், பங்குச்சந்தை வருவாயைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. மாறாக பங்குச்சந்தையில் உங்களது நிறுவனத்தை பட்டியலிட முனையலாம். “ மாதந்தோறும் போதுமான ஓய்வூதியத் தொகையை பெற்று நிம்மதியாக உள்ளேன். யாருக்காகவும் நான் சேமிக்க வேண்டிய அவசியமில்லை, என்னை நம்பி யாரும் நிதி சார்ந்து இல்லை ” என்றால் நீங்கள் மேலே சொன்ன முதலீட்டு வருவாயைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை(பணவீக்கத்தை கவனத்தில் கொள்க).

“ நீங்கள் கற்றுக் கொள்ளா விட்டால், விழிப்புணர்வை பெறா விட்டால் உங்கள் பணத்தைக் கொண்டு மற்றொருவர் தனது அறிவின் மூலம் பத்தும் செய்வார் “. – பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதன் விதி இது தான் !

தரவுப்பட பகிர்வுக்கு நன்றி(Data Table Courtesy): செல்வி. வித்யாஸ்ரீ – வாடிக்கையாளர் சேவை மேலாளர், (ஆதித்யா பிர்லா சன்லைப் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம்(ABSL AMC))

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஒரு வருடத்தில் 23 சதவீத லாபத்தை தந்துள்ள தங்கம் – இப்போது என்ன செய்யலாம் ?

ஒரு வருடத்தில் 23 சதவீத லாபத்தை தந்துள்ள தங்கம் – இப்போது என்ன செய்யலாம் ?

23 Percent hike in a year – Gold Price in INR

நமது நாட்டில் கூட்டு குடும்பத்தின் மீது நம்பிக்கை உள்ளதோ இல்லையோ, ஆனால் தங்கத்தின் மீதான நம்பிக்கை பெரும்பாலானவர்களிடம் அதிகமாக உள்ளது. எந்தவொரு முதலீட்டு சாதனத்தையும் விட, தங்கம் பாதுகாப்பானதாகவும் மற்றும் அதிக வருவாய் தரக்கூடிய முதலீடாகவும் நம் நாட்டில் பார்க்கப்படுகிறது. மேலும், அது குடும்பத்தின் கவரமாகவும் காணப்படுகிறது எனலாம்.

10 கிராம் அளவை கொண்ட 24 காரட் சுத்த தங்கம் (99.9 சதவீதம்), சென்னை விலை அடிப்படையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 31,970 (10 கிராம்) என்ற விலையில் வர்த்தகமானது. தற்போது 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை 39,500 ரூபாய் விலையில் வர்த்தகமாகி வருகிறது. இது சுமார் 23 சதவீத வருவாய் வளர்ச்சி எனலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இதன் விலை அதிகபட்சமாக 40,450 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. நடப்பில் தங்கத்தின் விலை(Gold Price) ஒரு கிராம் 3,416 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. அவுன்ஸ் அடிப்படையில் 1,06,268 ரூபாய் என்ற விலையில் காணப்படுகிறது.

பொதுவாக பங்குச்சந்தை இறக்கத்தில் காணும் போது, தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். இது போல, உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை, போர் வரும் சூழல் மற்றும் டாலர் மதிப்பு வீழ்ச்சியடையும் போது தங்கத்தின் தேவை அதிகமாக இருக்கும். இதன் காரணமாகவும் தங்கத்தின் விலையில் மாற்றம் அமையும்.

உலகளவில் வர்த்தகமாகும் தங்கம் ஒரு நல்ல முதலீட்டு சாதனம் என்றாலும், நாம் நினைப்பது போல, அது பாதுகாப்பான சாதனம் என நாம் சொல்ல முடியாது. காரணம், தங்கம் என்பது பங்குச்சந்தையை ஒட்டிய ரிஸ்க் தன்மையை எப்போதும் கொண்டிருக்கும். பங்குச்சந்தை போல அதிக ஏற்ற-இறக்கங்கள் இல்லையெனினும், மிதமான ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டது தான் தங்கத்தின் முதலீடு. இதன் காரணமாக தான் அதன் விலை கடந்த 50 வருடங்களில் அதிகரித்துள்ளது எனலாம்.

இன்று அதிகளவிலான தங்கத்தினை கையிருப்பாக வைத்திருக்கும் நாடு, அமெரிக்கா. இதற்கான காரணமும் உண்டு, உலகளவில் தேவைப்படும் தங்கத்தின் வர்த்தகத்தை நிர்வகிக்கவும், டாலர் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலும் அதனை சரிப்படுத்தவே தங்கம் உதவிகரமாக உள்ளது. எப்போதெல்லாம் டாலர் மதிப்பு உயர்கிறதோ, அப்போது தங்கத்தின் தேவை குறையும். ஏனெனில், பெரும்பாலான நாடுகள் அந்நிய செலவாணியை (டாலர்) அதிகளவில் கையிருப்பாக கொண்டிருப்பார்கள். இதன் காரணமாக தங்கத்தின் விலை இறங்கும்.

இதற்கு மாற்றாக, எப்போதெல்லாம் டாலர் மதிப்பு வீழ்ச்சியடைகிறதோ, தங்கத்தின் மீதான தேவை அதிகரிக்கும். இதன் காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கும். சீன-அமெரிக்க வர்த்தக போர் என்றால், டாலரின் மீதான நம்பிக்கை குறைந்து, தங்கத்தின் மீது ஈடுபாடு இருக்கும். ஆக, பெரும்பாலான நாடுகள் தங்கத்தை ஒரு இழப்பு காப்பு வணிகமாக பயன்படுத்தி வருகிறது.

நம் நாட்டில் தங்கத்தின் விலை ஏறுவதற்கான காரணம் பொதுவாக நாம் டாலர் மதிப்பின் அடிப்படையில் இறக்குமதி செய்வதால் தான். எப்படியிருந்தாலும், நமக்கு கிடைக்கப்பெறும் தங்கம் சற்று விலை அதிகமானதே. டாலர் மதிப்பு அதிகரித்தாலும், இல்லையெனில் டாலர் மதிப்பு வீழ்ச்சி பெற்றாலும் நாம் தங்கத்தை அதிக விலை கொடுத்து தான் வாங்க வேண்டும்.

தங்கத்தின் விலை அதிகரித்து வருவது சரி தான். நாம் அதனை நல்ல ஒரு முதலீடாக மாற்றுவது எப்படி ?

  • தங்க ஆபரணத்தை வாங்கி கொண்டு, அதனை முதலீடு என்று நாம் சொல்ல கூடாது. தங்கத்தின் விலையை காட்டிலும், நாம் கூடுதலாக சில செலவுகளை(செய்கூலி, சேதாரம், வரி மற்றும் இதர செலவுகள்) ஏற்க வேண்டியிருக்கும். நாம் அதனை விற்கும் போது, நமக்கு சந்தையில் வர்த்தகமாகும் விலை முழுவதுமாக கிடைக்கும் என சொல்ல முடியாது. நகை அடமான கடைகள் வருங்காலத்தில் அரசு மூலம் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிலை உள்ளது. இதனால், நாம் அடமானம் வைத்தாலும் நமக்கு சரியான விலையில் கடன் கிடைக்குமா என்பது சந்தேகமே.
  • தங்கத்தை ஆபரணமாக கொண்டிருப்பதில் பாதுகாப்பு இல்லை. தங்கத்தை முதலீடாக கொண்டிருக்க தங்க பத்திர திட்டங்கள்(Gold Bond Scheme), கோல்டு இ.டி.எப்.(Gold ETF) மற்றும் கோல்டு பண்டு(Gold Funds) போன்றவற்றில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இதற்கான செலவினங்களும் மிக குறைவு. பின்னாளில் வர்த்தகத்தின் விலையில் பணமாக அல்லது நகையாக பெறலாம்.
  • பொருளாதார மந்தநிலை காலங்களில் தங்கத்தில் சிறிய அளவில் முதலீடு செய்யலாம். ஆபரணங்களை வாங்கி வைத்து கொண்டு முதலீடு என சொல்லாதீர்கள். உங்களுக்கு நகைகளாக வேண்டுமானால், விருப்பத்திற்கு ஏற்றாற் போல் வாங்கி கொள்ளுங்கள். அதே வேளையில் அதனை ஒரு செலவாக மதிப்பிடுங்கள். (உங்கள் சொந்த வீட்டை போல !)
  • முதலீட்டு பரவலாக்கம்(Asset Allocation) செய்யும் போது, தங்கத்திலும் முதலீடு செய்யுங்கள். உங்கள் முதலீட்டில் வங்கி டெபாசிட்டுகள், பங்குகள், பரஸ்பர நிதிகள், நிலம் மற்றும் தங்கத்திற்கும் பங்களிப்பு இருக்கட்டும். ஒரே முதலீட்டு சாதனத்தில் முழு பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம்.
  • தங்கத்தை ஒரு இழப்பு காப்பாகவும்(Hedge), பணவீக்கத்தை சரிக்கட்டவும் பயன்படுத்துங்கள்.

கடந்த மாதத்தில் நாட்டின் தங்க இறக்குமதி அளவு 5 மாத உச்சத்தில் உள்ளது. இருப்பினும், கடந்த வருடத்தை இதே காலத்துடன் ஒப்பிடும் போது, சொல்லப்பட்ட இறக்குமதி அளவு குறைவே. மத்திய அரசு கடந்த சில வருடங்களாக தங்கத்தின் இறக்குமதி அளவை குறைத்து வருகிறது. வர்த்தக சுமையை குறைப்பதற்கான நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கோல்டு இ.டி.எப்.(Gold ETF) மற்றும் கோல்டு பண்டு – முதலீடு செய்யலாமா ?

கோல்டு இ.டி.எப்.(Gold ETF) மற்றும் கோல்டு பண்டு – முதலீடு செய்யலாமா ? 

Should you Invest in Gold ETF & Gold Funds ?

 

நாம் கடந்த சில காலங்களாக வர்த்தக மதுரை தளத்தில் சில காரணிகளை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு வருகிறோம். அவை அமெரிக்க – சீன வர்த்தக போர், கச்சா எண்ணெய் விலை, எல்லை பதற்றம் மற்றும் வாகனத்துறை வளர்ச்சி குறைவு. இதன் வெளிப்பாடு உலக பொருளாதார மந்த நிலையாக ஏற்பட்டுள்ளது.

 

வாகனத்துறை வளர்ச்சி பொதுவாக சுழற்சி முறையில் செயல்பட கூடியவை. சில வருடங்கள் விரைவாக வளர்ச்சியை நோக்கி செல்வதும், மற்றொரு காலங்களில் மந்தமடைவதும் இயல்பு. ஆனால் தற்போது மற்ற சிக்கல்களும் சேர்ந்துள்ளதால், நடப்பில் காணப்படும் பொருளாதார மந்த நிலை எப்போது சரி செய்யப்படலாம் என்பது சொல்லப்படாதது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நடப்பு காலத்தில் பங்குச்சந்தை அடுத்தடுத்த சரிவை நோக்கி காத்திருக்கின்றன. இது தற்காலிகமானது தான் எனினும் முதலீட்டு நோக்கில் காணும் போது, மற்ற முதலீட்டு சாதனங்களின் ஏற்றத்தை நாம் பரவலாக(Diversification & Asset Allocation) ஏற்படுத்தலாம். அவ்வாறு காணும் போது பங்குச்சந்தை வீழ்ச்சி சமயத்தில் தங்கத்தின் விலை ஏறுவதும், வங்கிகள் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின்(Bond) விலை அதிகரிப்பதும் இயல்பு.

 

நமது வாசகர்கள் சிலர் தற்போது தங்கத்தை அடிப்படையாக கொண்ட கோல்டு இ.டி.எப். அல்லது கோல்டு பண்டுகளில் முதலீடு செய்யலாமா என கேட்டிருந்தனர். அதே போல இரண்டுக்குமான வித்தியாசம் என்ன என்பது பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தனர். தங்கத்தை ஆபரணங்களாக வாங்க விரும்பாதவர்கள் மற்றும் இதனை ஒரு முதலீடாக கருதுபவர்கள் கோல்டு இ.டி.எப்., கோல்டு பண்டு அல்லது அரசு வழங்கும் தங்க பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இது போன்ற முதலீடுகளில் ஆபரணங்களை போல திருட்டு பயம் என்பது இல்லை. முதலில் கோல்டு இ.டி.எப். என்பதனை பற்றி பார்ப்போம்.

 

Gold ETF என்பது பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Fund Scheme) ஒரு அங்கமாகும். தங்கத்தில் மட்டும் முதலீடு செய்யப்படும் இந்த பரஸ்பர நிதி திட்டம், பங்குச்சந்தையில் பட்டியிலடப்பட்டு(Exchange Traded fund) வர்த்தகமாகும். கோல்டு இ.டி.எப். பொதுவாக தங்கத்தின் விலையை பிரதிபலிக்கும். பரஸ்பர நிதி திட்டமாக இருப்பதால், முதலீட்டாளர்களின் முதலீடு யூனிட்களாக வழங்கப்படும். அதாவது ஒரு கிராம் என்பது ஒரு யூனிட்(Unit) என கொள்ளப்படும்.

 

இந்த திட்டத்தில் உள்ள சாதகமான அம்சமே, நாம் இணையதளத்தின் வாயிலாக கோல்டு இ.டி.எப். யூனிட்களை வாங்கலாம் மற்றும் விற்கலாம். இதற்கு டீமேட் கணக்கு(Demat Account) வைத்திருப்பது அவசியம். தங்கத்தின் விலை மதிப்பு ஒவ்வொரு நாள் வர்த்தகத்திலும் பிரதிபலிக்கும். இவற்றில் முதலீடு செய்வதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்:

 

  • ஒரு கிராம் (யூனிட்) முதல் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம் (வர்த்தக அளவை பொறுத்து)

 

  • நாம் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் மற்றும் விற்கலாம் (பொதுவாக வர்த்தகம் நடைபெறும் நேரங்களில்)

 

  • 99.5 சதவீத சுத்தமான தங்கத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு.

 

  • செய்கூலி மற்றும் சேதார செலவுகள் எதுவுமில்லை. குறைந்த தரகு கட்டணம்(Brokerage).

 

  • பாதுகாப்பான முதலீடு மற்றும் வரி சலுகைகள்(Tax Benefits) உண்டு.

 

  •  யூனிட்களை அடமானம் வைக்கலாம் மற்றும் பின்னாளில் யூனிட்களை தங்கமாக வாங்கி கொள்ளலாம்.

 

கோல்டு இ.டி.எப். திட்டத்தில் எளிதாக முதலீடு செய்யமுடிந்தாலும், பங்குச்சந்தையில் வர்த்தகமாவதால் இதற்கு டீமேட் கணக்கு வைத்திருப்பது அவசியமாகும். இதனை களையவே கோல்டு பண்டுகள் உள்ளன. கோல்டு இ.டி.எப். ஐ போலவே இந்த பண்டுகளும், ஆனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவது இல்லை. இதனால் இங்கும் எளிமையாக முதலீடு செய்யலாம்.

 

கோல்டு இ.டி.எப். திட்டத்திற்கும், கோல்டு பண்டுக்கும் வேறுபாடு பெரிதாக எதுவுமில்லை. இ.டி.எப். திட்டம் பங்குச்சந்தையில் வர்த்தகமாவதால், தரகு கட்டணம் வசூலிக்கப்படும். கோல்டு பண்டுகளில் தரகு கட்டணத்திற்கு பதிலாக நிர்வாக செலவு கட்டணங்கள்(Expenses) வசூலிக்கப்படும். அதே வேளையில் தங்க ஆபரணங்கள் வாங்கும் போது செலுத்தப்படும் செய்கூலி மற்றும் சேதாரத்தை விட மிக குறைவான செலவுகள் தான் இங்கு காணப்படுகிறது.

 

தற்போது பெரும்பாலான பரஸ்பர நிதி நிறுவனங்கள் கோல்டு பண்டு திட்டங்களை(Gold BeEs) அளித்து வருகின்றன. ஒரு கிராம் ஒரு யூனிட்களாக கணக்கிடப்பட்டாலும், சில பரஸ்பர நிதி நிறுவனங்கள் 10ல் ஒரு பங்காக யூனிட் அளவை கொண்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு யூனிட் (1 கிராம்) ரூ. 3200/- என்று ஒரு நிறுவனம் கொண்டிருக்கும் போது, மற்றொரு நிறுவனம் ஒரு யூனிட் 320 ரூபாய்க்கு (10ல் ஒரு பங்கு) வழங்கி வருகிறது.

 

நடப்பில் பங்குச்சந்தை சரிவடையும் நேரத்தில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இருப்பினும் தங்கத்தில் மட்டுமே அதிகமாக முதலீடு செய்யாமல், சிறுக சிறுக முதலீட்டை மேற்கொள்ளலாம். தங்கம் கடந்த ஒரு வருடத்தில் 25 சதவீத வருவாயை தந்துள்ளது. நீண்ட காலத்தில் பங்குச்சந்தையை காட்டிலும் குறைந்த வருமானத்தை கொண்டிருந்தாலும், குறைந்த ரிஸ்க் திறன்(Low risk) கொண்ட முதலீடாக கருதப்படுகிறது. கோல்டு திட்டத்தில் மாதாமாதம் சிறிய அளவில் முதலீடு செய்வது சிறந்தது. தங்கத்தில் முதலீடு செய்வதை முதலீட்டு பரவலாக்கலாக(Asset Allocation) அமைக்க வேண்டும்.

 

பங்குச்சந்தையில் 50 சதவீத முதலீடு மேற்கொண்டால், 20-30 சதவீதத்தை தங்கத்திலும், மீதமுள்ளதை கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யலாம். இது ஒவ்வொரு வயதினருக்கும் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தங்க இ.டி.எப். திட்டம் அல்லது கோல்டு பண்டுகளில் முதலீடு செய்யும் அதே வேளையில், தற்போதைய பங்குச்சந்தை சரிவில் நல்ல நிறுவன பங்குகள்(Value based Stocks) விலை குறைந்து காணப்படுவதும் கவனிக்கத்தக்கது.

 

கோல்டு இ.டி.எப். மற்றும் கோல்டு பண்டுகளில் செய்யப்படும் முதலீடு தங்கத்தின் விலை ஏற்ற-இறக்கத்தை அடிப்படையாக கொண்டது. பின்னாளில் இது போன்ற முதலீட்டை தங்கமாக பெற்று கொள்ள பரஸ்பர நிதி நிறுவனங்கள் சேவையை அளிக்கின்றன. இருப்பினும் சில நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க கிராம் அளவை கொண்டிருந்தால் மட்டுமே தங்கமாக மாற்றி வழங்கும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

எது சிறந்த முதலீடு – தங்க நகைகள் vs தங்க பண்டுகள் ?

எது சிறந்த முதலீடு – தங்க நகைகள் vs தங்க பண்டுகள் ?

Which is the best Investment – Physical Gold or Gold Funds

 

நமது வர்த்தக மதுரை இணையதளத்தில் கடந்த சில கட்டுரைகளுக்கு முன், தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்கலாம் மற்றும் அதற்கான காரணங்களையும் சொல்லியிருந்தோம். கடந்த பத்து வருட கால அளவில் மதிப்பீடும் போது, தங்கத்தின் மீதான வருமானம் பெரும்பாலும் வங்கிகள் அளிக்கும் வைப்பு நிதிக்கான(Fixed Deposits) வட்டி விகிதத்தை ஒட்டியே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தங்கத்தை நகைகளாக(Jewels) வாங்குவதை காட்டிலும் அதனை ஒரு முதலீட்டு சாதனமாக மாற்றுவதே நமக்கான புத்திசாலித்தனமாகும். நாம் ஏற்கனவே சொன்னது போல, தங்க ஆபரணங்கள் என்பது ஒரு தேய்மான பொருளாகவும், வருமானம் எதுவும் தராமல் போகும் அணிகலனாக மட்டுமே (Liability) உள்ளது. நம்முடைய பெரும்பாலான சேமிப்பு தொகை தங்க நகைகள் வாங்குவதற்காக மட்டுமே செலவிடப்படுகிறது. மாறாக நமக்கான நிதி இலக்குகளுக்கு(Financial Goals) அது துணைபுரிவதில்லை.

 

எந்த ஒரு முதலீட்டு சாதனத்திற்கும் வருமான வாய்ப்பு மற்றும் நீண்ட காலத்தில் வளர்ச்சியும் உண்டு. அந்த வகையில் காணும் போது, நாம் நமது நகைகளை கொண்டு எவ்வளவு சம்பாதித்தோம் என பார்த்தால், தேய்மான செலவும்(Depreciation), தங்கத்தை பரிமாற்றம் செய்த செலவுகள்(Exchange) தான் மிஞ்சும். நமக்கு தேவையான சிறிதளவு நகைகளை மட்டும் வைத்து கொண்டு, தங்கத்தில் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பை கண்டறிவது நல்லது.

 

தங்க நகைகளுக்கு மாற்றாக தங்க பண்டுகள் (அ) தங்க இ.டி.எப்.(Gold ETF) என்று சொல்லக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்களில் நமது முதலீடு இருக்கும் போது, நாம் போதுமான வருமானத்தை பெறலாம். தங்க நகைகளுக்கும், கோல்டு இ.டி.எப். திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை பின்வரும் படத்தில் பாருங்கள்.

Gold vs Gold Fund

பொதுவாக நாம் தங்க நகைகளாக வைத்திருக்கும் போது, அவற்றில் ரிஸ்க் அதிகம். அது ஒரு பாதுகாப்பான முதலீடு என்று நாம் கூறினாலும், நகைகளை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் வாங்கும் தங்கம் சுத்தமான தங்கமா என்பதை நாம் தான் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் 91.6 சதவீத சுத்தமான தங்கத்தை மட்டுமே நாம் வாங்கும் வாய்ப்புண்டு. அதே வேளையில் பரஸ்பர நிதி திட்டங்கள் அளிக்கும் கோல்டு பண்டுகளில்(Gold Mutual Funds) 99.5 சதவீத மதிப்பிலான சுத்த தங்கத்தின் அடிப்படையில் நமது முதலீடு அமையும்.

 

வெறும் தங்க நகைகளாக மட்டுமே நாம் இப்போது வைத்திருக்கும் போது, பிற்காலத்தில் அந்த நகைகள் தேய்மானம் அடைவதும், மீண்டும் நாம் அதற்கான மாற்று பொருளாக புதிய நகைகளை வாங்குவதும் நமக்கு வீண்செலவு தான். அதற்கு பதிலாக இது போன்ற தங்க பண்டுகளில் நாம் முதலீட்டை மேற்கொள்ளும் போது, தேவைப்படும் காலத்தில் நமக்கான புதிய நகைகளை வாங்கி கொள்ளலாம், நமக்கும் இதன் மூலம் வருவாயும் கிடைத்திருக்கும்.

 

நாம் வைத்திருக்கும் தங்க நகைகளை அவ்வளவு எளிதாக பணமாக மாற்ற முடியாது. நகைகளை அடகு வைக்கவோ அல்லது விற்கவோ மட்டுமே நம்மால் முடியும். மேலும் நகைகளின் மதிப்பில் குறைவான பணமே நமக்கு கிடைக்கும். ஆனால் இ.டி.எப்.(Exchange Traded Fund) திட்டங்களில் நாம் எப்போது வேண்டுமானாலும் நமக்கு தேவையான தொகையை பெற்றுக்கொள்ளலாம். பாதுகாப்பான முதலீடும் மட்டுமில்லாமல் இதனை வாங்குவதற்கான செலவும் மிக குறைவு.

 

தங்க இ.டி.எப். திட்டங்களில் குறைந்தபட்ச முதலீடாக(Minimum Investment) ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பை கூட நாம் வாங்கலாம் என்பது கவனிக்கத்தக்கது. குறுகிய கால மற்றும் நீண்ட கால மூலதன ஆதாய வரி அடிப்படையில் தங்க நகைகளுக்கு உள்ள காலங்களே இ.டி.எப். பரஸ்பர நிதி திட்டத்திற்கும் பொருந்தும். நாம் தங்க நகைகளை விற்பனை செய்வதன் மூலம் நமக்கு கிடைக்கும் லாபத்திற்கு செல்வ வரி(Wealth Tax) உண்டு. ஆனால் தங்க பண்டுகளுக்கு இது போன்ற வரிகள் இல்லை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும் – என்ன செய்யலாம் ?

தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும் – என்ன  செய்யலாம் ?

What to do while the prices of Gold increases ?

 

நம் நாட்டிற்கும், தங்கத்திற்கும் இடையே மிகவும் ஆழமான நட்பு இருந்து கொண்டிருப்பதை வரலாற்று புள்ளிவிவரங்களில் நாம் அறியலாம். நமது குடும்பத்திற்கு தேவையான நிதி ஆதாரம் இல்லாவிட்டாலும், தங்கத்தை அதுவும் நகைகளாக வாங்குவது நம்மிடையே இன்னும் குறையவில்லை. தங்கம் விலை இந்த மாதத்தின் துவக்கத்தில் (பிப்ரவரி 2, 2019) 24 காரட் விலை கிராமுக்கு ரூ. 3358/- ஆகவும், 22 காரட் விலை கிராமுக்கு 3170 /- ரூபாயாகவும் வர்த்தகமானது. 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 2613/- ஆக இருந்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்த விலை கடந்த ஐந்து வருடங்களில் இருந்த அதிகபட்ச விலையாக சொல்லப்படுகிறது. பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களை தொடர்ந்து தங்கத்தின் விலை தற்சமயம் அதிக விலையில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பிலும் ஸ்திரத்தன்மை(Stability on Dollar Conversion) உள்ளதால், தங்க இறக்குமதி விலையிலும்(Gold import) வித்தியாசம் காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்து இருந்ததும், விழா காலங்களை முன்னிட்டு மக்களிடையே தங்கத்தின் தேவை அதிகரித்ததும் தான் தங்க நகைகளின் விலையை அதிகரித்துள்ளது.

 

கடந்த ஜனவரி மாதம் மட்டும் தங்கத்தின் இறக்குமதி 46 டன்கள், இது கடந்த 2018 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 64 சதவீதம் அதிகமாகும். கடந்த 2013ம் ஆண்டில் மும்பை சந்தையில் தங்கத்தின் பென்ச்மார்க்(Benchmark Gold Futures) மதிப்பில் 10 கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ.35,074 /- வரை சென்றது. 2013ம் வருடம் பிப்ரவரி 4ம் தேதியன்று 10 கிராம் விலை 33,646 ரூபாயாக இருந்தது. இந்த விலை மதிப்பில் தான் தற்போது வர்த்தகமாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

பொதுவாக நமது நாட்டில் தங்க நகைகளின் விலை அதிகரிப்பதற்கு காரணமாக சொல்லப்படுவது(Reason) அயல்நாட்டில் இருந்து தங்க இறக்குமதி (டாலர் மதிப்பில்), கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் மற்றும் உள்ளூர் தேவைகள்(Domestic Demand). தங்கத்தின் அதிகபட்ச இறக்குமதியால் நாட்டின் நிதி பற்றாக்குறை கணக்கிலும்(Fiscal Deficit) சுமை அதிகரிக்கிறது. அரசாங்கத்தை பொறுத்தவரை தங்கம் ஒரு இழப்புக்காப்பு(Hedging) சார்ந்த சாதனமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இது போர் நிலவும் அவசர காலங்களில் மட்டுமே பயன்பட முடிகிறது. மற்ற நேரங்களில் மக்களின் அணிகலன் விருப்பத்திற்காக மட்டுமே இது உபயோகப்படுத்தப்படும்..

 

கடந்த பத்து ஆண்டுகளில் தங்கத்தை ஒரு முதலீடாக(History of Gold prices) காணும் போது, அதன் வருமானம் வங்கிகளின் வைப்பு நிதி வட்டி விகிதத்தை ஒட்டியே இருந்துள்ளது. இந்த வருமானம் பணவீக்கத்தை(Inflation) தாண்டியதாக இருக்கவில்லை. ஆனால் கடந்த வருடம் பங்குச்சந்தை மந்தமாக இருந்ததால், அதனை காட்டிலும் தங்கத்தில் முதலீடு குறிப்பிடத்தக்க வருமானத்தை கொடுத்துள்ளது. சமீபத்தில் நாட்டின் பணவீக்கமும் குறைந்த அளவிலே உள்ளதால், தங்கத்திற்கு எந்த தாக்கமும் ஏற்படவில்லை. நிதி பற்றாக்குறையை குறைக்க அரசும் தங்கத்தின் இறக்குமதி விகிதத்தை குறைத்து வருவது கவனிக்கத்தக்கது.

 

தங்கத்தில் முதலீடு செய்கிறேன் என்று நாம் தங்க ஆபரணங்களை வாங்கி கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை. முதலீடு என்பது வளர்ச்சியை(Investment must grow) நோக்கி செல்ல வேண்டும். முதலீட்டிற்கு லாப-நட்டங்கள் இருக்கலாம். ஆனால் தேய்மானத்தை மட்டுமே கொண்டிருத்தல் கூடாது. அவ்வாறு காணும் போது, நாம் வாங்கும் தங்க நகைகள் தேய்மானத்தை மட்டுமே கொண்டுள்ளது, எனவே இதனை ஒரு சிறந்த முதலீடாக கருத முடியாது.

 

தங்கத்தின் விலை அதிகரிப்பை லாபமாக பெற விரும்புபவர்கள் முதலீட்டு சாதனமாக தங்க பத்திரங்கள்(Gold Bonds), தங்க இ.டி.எப்.(Gold ETF) திட்டங்களில் முதலீடு செய்யலாம். தங்கள் பெண் குழந்தைகளுக்கு நகை வாங்க விரும்புபவர்களும் இது போன்ற திட்டத்தில் முதலீடு செய்து விட்டு, பிற்காலத்தில் தேவைப்படும் நாட்களில் இதனை விற்று வரும் பணத்தில் தங்கத்தினை அதன் மதிப்பில் வாங்கி கொள்ளலாம். நமக்கான நகைகளும் புதிதாக கிடைக்கும், பழைய நகைகள் மற்றும் தேய்மானம்(Depreciation) போன்ற விஷயங்கள் நடைபெறாது. அரசாங்கம் வெளியிடும் தங்க பத்திரங்களில் குறிப்பிட்ட காலத்தில் வட்டியும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது.

 

நம்மிடம் இருக்கும் தங்க நகைகள் நமக்கு இப்போது தேவைப்படவில்லை என்றால், வங்கிகள் அளிக்கும் தங்க டெபாசிட் திட்டத்தில்(Gold Deposit Scheme) நமது தங்கத்தை முதலீடாக கொண்டு, வட்டி வருமானத்தை பெறலாம். தங்க நகைகள் நமக்கு அவசரகாலத்தில் உதவலாம் என்று நாம் கூறினாலும், இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் உங்கள் வங்கி அட்டையும்(Debit & Credit Cards), ரொக்கமும்(Cash is King) தான் உதவ நேரிடும். தங்கத்தின் விலை அதிகரிப்பு உலகளாவிய பொருளாதார காரணிகள் மற்றும் டாலரின் மதிப்பை சார்ந்தே உள்ளன என்பதை மட்டும் நாம் மறந்திற கூடாது. நமக்கான முதலீட்டு வாய்ப்பை நாம் சரியாக தேர்ந்தெடுக்கும் போது, வருமான வளர்ச்சி தானியங்கியாகவே செயல்படும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

முதலீட்டு முடிவுக்காக நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள் ?

முதலீட்டு முடிவுக்காக நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள் ?

How much time do you spend for an Investment Decision ?

 

சமீபத்தில் (07-10-2018) நமது மதுரையில் மியூச்சுவல் பண்டுக்கான விழிப்புணர்வு  நிகழ்ச்சி, மடிட்சியா அரங்கில் நடைபெற்றது. நாணயம் விகடன் மற்றும் ஆம்பி (Association of Mutual Funds in India -AMFI) சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்புரையாளராக திரு. வி. கோபால கிருஷ்ணன் (Money Avenues) அவர்கள் கலந்து கொண்டார்.

 

அவர் பேசுகையில், ‘ நமது குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் துணிமணிகளை நாம் வாங்க செல்லும் போது அதற்கான நேரம் பொதுவாக 4-5 மணி நேரம் வரை செலவழிக்கப்படுகிறது. அதே நேரத்தில், முதலீடு அல்லது சேமிப்பு என்று வரும் போது, நாம் அதற்கான கால அளவுகளை கொடுக்காமல் உடனே முடிவெடுக்கும் நிலைக்கு வருகிறோம்.

 

இந்த அவசர முடிவு தான், நம்முடைய முதலீட்டு சாதனங்களில் (Investment Products) நாம் தோல்விடைய வழி வகுக்கிறது. பங்குச்சந்தை அல்லது பரஸ்பர நிதி (Mutual Fund) என்னும் முதலீட்டு சாதனத்தை நாம் தேர்ந்தெடுக்கும் போது, அவசர கதியில் அல்லது நண்பர் சொன்னார் என்று முடிவெடுத்து விட்டு, பின்பு என் முதலீடுகள் நஷ்டத்தில் உள்ளனவே என தடுமாறுகிறோம்.

 

உங்களுக்கான முதலீட்டு முடிவை (Investment Decision) நீங்கள் தான் எடுக்க வேண்டும். உங்களின் மற்றும் உங்கள் குடும்பத்தின் நிதி நிலைமை உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதனால் நீங்களே பொறுமையாக கையாள வேண்டும். இல்லையெனில், அதற்கு தகுந்த ஒரு நிதி ஆலோசகரை தேர்ந்தெடுக்க வேண்டும். முதலீட்டு முடிவுகளுக்கான நேரத்தை நாம் செலவிடும் போது தான், நமக்கான அக்கறை நிதியிலும் வரும்.

 

ஒருவர் தனது முதலீட்டு முடிவை எடுக்கும் முன், தனக்கான நிதி இலக்குகள் மற்றும் நோக்கங்கள் என்ன என்பதை கண்டறிய வேண்டும். நிதி இலக்குகள் (Financial Goals) என்பது மேற்படிப்பு, வீடு வாங்குவது, ஓய்வு காலத்திற்கு தேவையான தொகை என இருக்கலாம். நோக்கங்கள் (Objectives) என்பது நமது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை நாம் எந்த கால அளவில் பெற வேண்டும், எவ்வளவு வருமானம் (Better Returns) கிடைத்தால் நாம் இலக்கை அடையலாம் என்பது தான். இதன் பின்னரே அதற்கு பொருத்தமான முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.

 

சில பேருக்கு மாதாமாதம் தொடர் வருமானம் வேண்டுமென இருக்கலாம்; சிலருக்கோ பத்து வருடங்களுக்கு பிறகு எனக்கு இன்ன தொகை தேவையென இருக்கலாம். இவையெல்லாம் தான் நமது முதலீட்டு நோக்கங்கள். நமது முதலீட்டு முதிர்வு பணவீக்கத்தை தாண்டியதாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் நமது இலக்குகளை அடைய முடியும். ‘ என்றார்.

 

இதற்கு அடுத்தாற் போல் திரு. பி. ராமசாமி (Easy Investments) அவர்கள் பேசிய போது, ‘ உலகளவில் நம் நாடு மட்டும் தான் தங்கத்தை அதிகமாக பயன்டுத்தி கொண்டிருக்கிறது. தங்கத்தின் அதிகப்படியான இறக்குமதி தான் நம் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. இதன் காரணமாகவும், பல சமயங்களில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் விலைவாசி அதிகரிக்க செய்கிறது.

 

மற்ற நாடுகளில் அதன் அரசாங்கம் தான் தங்கத்தை வைத்திருக்கிறது. அதுவும், தங்கள் நாட்டின் பொருளாதார கணக்கை சமப்படுத்துவதற்கான சாதனமாக தான் பயன்படுத்தி வருகிறது. அந்த நாடுகளில் ஓய்வு காலத்திற்கு தேவையான நிதியை ஏற்படுத்துதல், பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனத்தை செலுத்துகின்றன.

 

தங்கத்தை ஒரு முதலீடாக பார்க்கும் போது, தங்க பத்திரங்கள், சந்தையில் வர்த்தகமாகும் கோல்டு ETF (Gold Exchange Traded Fund) ஆகியவை ஓரளவு வருமானத்தை தரும். ஆனால் வெறுமனே ஆபரணமாக வாங்கும் பட்சத்தில், பின்வரும் நாளில் அதன் மதிப்பு குறைவு. எனவே தேவைக்கு மட்டும் சிறிது நகைகளாக வைத்து கொண்டு, தங்கம் சார்ந்த நிறுவனங்கள், பத்திரங்களில் முதலீடு செய்து வருமானத்தை ( Capital Appreciation) பெறலாம் ‘ என்று சொன்னார்.

 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com