முதலீட்டு முடிவுக்காக நீங்கள் எவ்வளவு நேரம் செலவழிக்கிறீர்கள் ?
How much time do you spend for an Investment Decision ?
சமீபத்தில் (07-10-2018) நமது மதுரையில் மியூச்சுவல் பண்டுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மடிட்சியா அரங்கில் நடைபெற்றது. நாணயம் விகடன் மற்றும் ஆம்பி (Association of Mutual Funds in India -AMFI) சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்புரையாளராக திரு. வி. கோபால கிருஷ்ணன் (Money Avenues) அவர்கள் கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ‘ நமது குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் துணிமணிகளை நாம் வாங்க செல்லும் போது அதற்கான நேரம் பொதுவாக 4-5 மணி நேரம் வரை செலவழிக்கப்படுகிறது. அதே நேரத்தில், முதலீடு அல்லது சேமிப்பு என்று வரும் போது, நாம் அதற்கான கால அளவுகளை கொடுக்காமல் உடனே முடிவெடுக்கும் நிலைக்கு வருகிறோம்.
இந்த அவசர முடிவு தான், நம்முடைய முதலீட்டு சாதனங்களில் (Investment Products) நாம் தோல்விடைய வழி வகுக்கிறது. பங்குச்சந்தை அல்லது பரஸ்பர நிதி (Mutual Fund) என்னும் முதலீட்டு சாதனத்தை நாம் தேர்ந்தெடுக்கும் போது, அவசர கதியில் அல்லது நண்பர் சொன்னார் என்று முடிவெடுத்து விட்டு, பின்பு என் முதலீடுகள் நஷ்டத்தில் உள்ளனவே என தடுமாறுகிறோம்.
உங்களுக்கான முதலீட்டு முடிவை (Investment Decision) நீங்கள் தான் எடுக்க வேண்டும். உங்களின் மற்றும் உங்கள் குடும்பத்தின் நிதி நிலைமை உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதனால் நீங்களே பொறுமையாக கையாள வேண்டும். இல்லையெனில், அதற்கு தகுந்த ஒரு நிதி ஆலோசகரை தேர்ந்தெடுக்க வேண்டும். முதலீட்டு முடிவுகளுக்கான நேரத்தை நாம் செலவிடும் போது தான், நமக்கான அக்கறை நிதியிலும் வரும்.
ஒருவர் தனது முதலீட்டு முடிவை எடுக்கும் முன், தனக்கான நிதி இலக்குகள் மற்றும் நோக்கங்கள் என்ன என்பதை கண்டறிய வேண்டும். நிதி இலக்குகள் (Financial Goals) என்பது மேற்படிப்பு, வீடு வாங்குவது, ஓய்வு காலத்திற்கு தேவையான தொகை என இருக்கலாம். நோக்கங்கள் (Objectives) என்பது நமது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை நாம் எந்த கால அளவில் பெற வேண்டும், எவ்வளவு வருமானம் (Better Returns) கிடைத்தால் நாம் இலக்கை அடையலாம் என்பது தான். இதன் பின்னரே அதற்கு பொருத்தமான முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.
சில பேருக்கு மாதாமாதம் தொடர் வருமானம் வேண்டுமென இருக்கலாம்; சிலருக்கோ பத்து வருடங்களுக்கு பிறகு எனக்கு இன்ன தொகை தேவையென இருக்கலாம். இவையெல்லாம் தான் நமது முதலீட்டு நோக்கங்கள். நமது முதலீட்டு முதிர்வு பணவீக்கத்தை தாண்டியதாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் நமது இலக்குகளை அடைய முடியும். ‘ என்றார்.
இதற்கு அடுத்தாற் போல் திரு. பி. ராமசாமி (Easy Investments) அவர்கள் பேசிய போது, ‘ உலகளவில் நம் நாடு மட்டும் தான் தங்கத்தை அதிகமாக பயன்டுத்தி கொண்டிருக்கிறது. தங்கத்தின் அதிகப்படியான இறக்குமதி தான் நம் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. இதன் காரணமாகவும், பல சமயங்களில் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் விலைவாசி அதிகரிக்க செய்கிறது.
மற்ற நாடுகளில் அதன் அரசாங்கம் தான் தங்கத்தை வைத்திருக்கிறது. அதுவும், தங்கள் நாட்டின் பொருளாதார கணக்கை சமப்படுத்துவதற்கான சாதனமாக தான் பயன்படுத்தி வருகிறது. அந்த நாடுகளில் ஓய்வு காலத்திற்கு தேவையான நிதியை ஏற்படுத்துதல், பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை உருவாக்குதல் போன்றவற்றில் கவனத்தை செலுத்துகின்றன.
தங்கத்தை ஒரு முதலீடாக பார்க்கும் போது, தங்க பத்திரங்கள், சந்தையில் வர்த்தகமாகும் கோல்டு ETF (Gold Exchange Traded Fund) ஆகியவை ஓரளவு வருமானத்தை தரும். ஆனால் வெறுமனே ஆபரணமாக வாங்கும் பட்சத்தில், பின்வரும் நாளில் அதன் மதிப்பு குறைவு. எனவே தேவைக்கு மட்டும் சிறிது நகைகளாக வைத்து கொண்டு, தங்கம் சார்ந்த நிறுவனங்கள், பத்திரங்களில் முதலீடு செய்து வருமானத்தை ( Capital Appreciation) பெறலாம் ‘ என்று சொன்னார்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை