Category Archives: Think Invest

தேசிய பென்ஷன் திட்டத்தில்(NPS, UPS) புதிய மாற்றம் – நீங்கள் செய்து விட்டீர்களா ?

தேசிய பென்ஷன் திட்டத்தில்(NPS, UPS) புதிய மாற்றம் – நீங்கள் செய்து விட்டீர்களா ?

Major Changes in the National Pension System – NPS and UPS

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு முன்னர் பழைய ஓய்வூதியத் திட்டம்(OPS) இருந்து வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில், பென்ஷன் வழங்குவதற்கான நிதியை அரசு ஏற்றுக் கொள்ளும். 2003 மற்றும் 2004ம் ஆண்டுக்கு பின்னர், பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றாக புதிய அல்லது தேசிய பென்ஷன் முறை(NPS) என்ற திட்டம் வந்தது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்களின் தங்களது மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையையும், அரசு சார்பில் ஒரு குறிப்பிட்ட கூட்டுப் பங்களிப்பு தொகையையும் பென்ஷன் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீடு, ஒரு தொகுப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யப்படும்(அரசு பத்திரங்கள், தனியார் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள், பிற முதலீடுகள்). இதன் மூலம் கிடைக்கப்பெறும் கார்பஸ் தொகை மூலமே, ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும்.

இன்று இந்தியாவில் பெரும்பாலும் பழைய பென்ஷன் என்ற திட்டம் இல்லை எனலாம்(பாதுகாப்பு துறை உட்பட). மாநில அளவில் CPS(Contributory Pension Scheme) என்ற திட்டம் தனியாக உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஊழியர்கள் மற்றும் சங்கங்கள் வாயிலாக எதிர்ப்பு இருந்தாலும், அரசின் நிதி பொறுப்புடைமை சார்பில் காணும் போது பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. எனவே, இதனை களையும் பொருட்டு, கடந்த 2024ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய முறை(Unified Pension Scheme) என்ற புதிய பென்ஷன் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.  இந்த திட்டம் புதிதாக இருந்தாலும், தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள துணை வடிவம் தான், இந்த UPS பென்ஷன் திட்டம். 

2024-25ம் நிதியாண்டின் முடிவில் தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 14.43 லட்சம் கோடி ரூபாய்(அடல் பென்ஷன் திட்டத்தை தவிர்த்து). இந்த திட்டத்தில் உள்ள பயனாளர்களின் எண்ணிக்கை 2.09 கோடி பேர்(அக்டோபர் 2025 தரவு – அரசு, தனியார் மற்றும் குடிமக்கள் சேர்த்து).   

NPS மற்றும் UPS பற்றிய தகவல்கள், வேறுபாடுகள் மற்றும் எது சிறந்தது என்பது தொடர்பான விவரங்களை பற்றி நாம் ஏற்கனவே எழுதியுள்ளோம். படிப்பதற்கு,

NPS vs UPS – Pension Comparison and Calculator

https://varthagamadurai.com/2025/05/09/nps-vs-ups-pension-calculator/

UPS(Unified Pension Scheme) திட்டத்தில், செப்டம்பர் மாத முடிவு வரை, சுமார் ஒரு லட்சத்திற்கும் குறைவான ஊழியர்களே சேர்ந்திருப்பதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒட்டுமொத்த ஒன்றிய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் 24 லட்சம். அதாவது சொல்லப்பட்ட காலம் வரை பதிவு செய்யப்பட்ட UPS சந்தாதாரர்கள் 4% மட்டுமே.

சரி, இந்த புதிய மாற்றத்தை பற்றி பார்ப்போம்…

தேசிய பென்ஷன் திட்டம் துவங்கிய காலத்தில், அரசு ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் அரசின் பங்களிப்பு தொகை என, 100 சதவீதம் அரசு கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு வந்தது.(Default Scheme: LIC, UTI and SBI Pension Funds). இவற்றில் முதலீட்டின் மீதான எந்த ரிஸ்க் தன்மையும் பெரிதாக இல்லை(அரசாங்கம் திவாலானால் மட்டுமே ரிஸ்க்). அதே வேளையில், முதலீட்டின் வருவாயும் நீண்டகாலத்தில் பெரிதாக வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. 

இதனை களையும் பொருட்டு, பின்னர் பங்குகளிலும், தனியார் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய சில உட்திட்டங்களையும் அரசு இந்த பென்ஷன் திட்டத்தில் அறிமுகப்படுத்தியது. அவை Active Choice, Auto Choice மற்றும் Default Scheme என பிரிக்கப்பட்டது. Active Choice பிரிவில் பங்குகள், அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், பிற முதலீடுகள் என கலவையாக முதலீடு செய்யலாம். இருப்பினும், இது பெரும்பாலும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே சாத்தியமானதாக அமைந்தது. நிதி பாதுகாப்பு கருதி, அரசு ஊழியர்களுக்கு இந்த வசதி அவ்வளவு எளிமையாக்கப்படவில்லை எனலாம்.

Auto Choice ஐ பொறுத்தவரை சுழற்சி முறையில் மேலே சொல்லப்பட்ட முதலீட்டு சாதனங்களில்(Equity, Corporate Bonds, Govt. Securities, Alternative Investment funds) கலவையாக முதலீடு செய்யப்படும். அதாவது ஒருவரின் வயதை அடிப்படையாக கொண்டு இங்கே முதலீட்டை பண்ட் நிர்வாகம் மேற்கொள்ளும். அதற்கேற்றாற் போல Conservative(LC25), Moderate(LC50) மற்றும் Aggressive(LC75) என்ற நிலைப்பாடுகளில் ஏதேனும் ஓன்றை நாம் தேர்ந்தெடுத்தாக வேண்டும். உதாரணமாக LC25 நிலைப்பாட்டை நாம் தேர்ந்தெடுத்தால், 35 வயது வரை – 25 சதவீதத் தொகை பங்குகளிலும், பிற தொகை அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். 35 வயதுக்கு பின்னர் பங்குகளின் தொகை குறைக்கப்பட்டு பெரும்பாலும் கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும்(Portfolio Rebalancing – Risk Management). 

Default Scheme என்பது நாம் ஏற்கனவே சொன்னது போல, தேசிய பென்ஷன் திட்டத்தின் துவக்க காலத்தில் வந்தது தான். 100 சதவீத தொகையும் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். ரிஸ்க் குறைவு, பெரிய அளவில் வருவாய் வளர்ச்சி இருக்காது. 

நடப்பு காலத்தில் மியூச்சுவல் பண்டுகளிலும், பங்குச்சந்தையிலும் முதலீட்டை மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டின் மீதான விழிப்புணர்வும் கிடைக்கப் பெறுகிறது(அரசு சார்பிலும் விளம்பரம் செய்யப்படுகிறது). இதன் காரணமாக தேசிய பென்ஷன் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களும் தங்களது NPS அல்லது UPS திட்டத்தில் சற்று ரிஸ்க் எடுத்து வருமானம் ஈட்ட விரும்புகின்றனர். இந்த வாய்ப்பு, கடந்த அக்டோபர் மாதம் வரை கிட்டாமல் இருந்த நிலையில், அக்டோபர் 24ம் தேதி அன்று ஒன்றிய நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு புதிய உட்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Balanced Life Cycle 50 (Modified Version of LC50):

இத்திட்டம், பங்குகளில் கணிசமான பங்களிப்பை மேற்கொள்ள ஏதுவாக உள்ளது. அதாவது Balanced LC50 திட்டத்தில் உங்களது 45 வயது வரை – 50 சதவீதத் தொகை பங்குகளிலும், 30 சதவீதத் தொகை தனியார் கடன் பத்திரங்கள் மற்றும் 20 சதவீதத் தொகை அரசு கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். அதன் பின்னர், படிப்படியாக ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அடிப்படையில் பங்குகளை குறைத்து கடன் பத்திரங்களில் உங்களது 55 வயது வரை முதலீடு செய்யப்படுகிறது. 

55 வயது முடியும் தருவாயில், பங்குகள் 35%, தனியார் கடன் பத்திரங்கள் 10 சதவீதம் மற்றும் அரசு கடன் பத்திரங்கள் 55 சதவீதம் என்ற அடிப்படையில், உங்களது NPS போர்ட்போலியோ மறு சமநிலைப்படுத்தப்படும்(Portfolio Rebalancing). இதற்கு பிறகான காலத்திலிருந்து உங்களது ஓய்வு காலம் வரை பெரும்பாலும் அரசு பத்திரங்களில் உங்கள் முதலீடு இருக்கும். 

நீங்கள் ஏற்கனவே மேலே சொன்ன வேறு ஏதேனும் உட்திட்டத்தில் தற்போது இருந்தால், நடப்பு மாதம் முதல் CRA NSDL தளத்தில் சென்று இந்த புதிய திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். Balanced LC50 திட்டம், NPS மற்றும் UPS என இரண்டு முறைகளுக்கும் பொருந்தும். இந்த திட்டத்தில் அரசு ஊழியர் மட்டுமல்லாது தனியார் மற்றும் இந்திய குடிமக்கள் யாவரும் மாற்றிக் கொள்ளலாம் என்பது இன்னொரு சிறப்பு.

Balanced LC50 திட்டத்தின் மூலம் உங்களது ஓய்வுக்கால கார்பஸ்(Retirement Corpus) தொகையில் நல்ல வளர்ச்சியும், ஓய்வுகாலத்திற்கான பென்ஷன் தொகையும் சற்று கூடுதலாக கிடைக்க வழிவகை செய்யும்.

சுற்றறிக்கை விவரம்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182253&reg=3&lang=2

சுற்றறிக்கையை தமிழில் படிக்க…

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182536&reg=3&lang=2

  

சரவணகுமார் நாகராஜ்,

Registered NPS Distributor (ARN-158941)

Distributor Code: BZBPS3240P00158941

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேசிய பென்ஷன் திட்டமும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமும் – கணக்கீடு

தேசிய பென்ஷன் திட்டமும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமும் – கணக்கீடு 

National Pension System(NPS) vs Unified Pension Scheme(UPS) –  Calculation & illustration

இந்த பதிவு, நாட்டின் ஓய்வூதியத் திட்டத்தை பற்றி விரிவாக கூறவில்லை. மாறாக NPS மற்றும் UPS ஆகியவற்றுக்கு இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகள் மற்றும் கணக்கீட்டை பயன்படுத்த உதவுகிறது.

2003ம் ஆண்டுக்கு பிறகு, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம்(OPS) மாற்றியமைக்கப்பட்டு, தேசிய ஓய்வூதியத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்ப நிலையில். புதிய பென்ஷன் திட்டம் என வழக்காக சொல்லப்பட்ட நிலையில், பின்னர் தேசிய பென்ஷன் திட்டம்(NPS) என்ற முறை அறியப்பட்டது. அதாவது பழைய பென்ஷன் திட்டத்தில், ஓய்வூதியத்திற்காக எந்த நிதிப் பங்களிப்பும் தொழிலாளர்களிடம் இருந்து பெறப்படுவதில்லை. 

பழைய பென்ஷன் திட்டத்தில், ஓய்வூதியத்திற்கான நிதியை அரசே ஏற்றுக் கொள்ளும். தொழிலாளர்களிடம் இருந்து மாதந்தோறும் பெறப்படும் பி.எப்.(சேமநல நிதி) பங்களிப்பும் வட்டியுடன் சேர்த்து பின்னர் அவர்களுக்கே அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தேசிய பென்ஷன் திட்டத்தில் அப்படியொன்றும் இல்லை. 

2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பென்ஷன் திட்டத்தில், ஊழியர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் 10 சதவீத பங்களிப்பும், அரசின் சார்பில் 10 சதவீத பங்களிப்பும் என கூட்டாக ஒரு தொகை ஒதுக்கப்பட்டு பென்ஷனுக்கான ஒரு திட்டத்தில்(Pension Funds) முதலீடு செய்யப்படும். பின்னர் ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான நிதியாக கருதப்பட்டு, ஊழியர் தனது 60 வயதை கடந்தவுடன், சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து மாதந்தோறும் வட்டி வருவாய் அளிக்கப்படும். தற்போது தேசிய பென்ஷன் திட்டத்திற்கான அரசின் பங்களிப்பானது 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய பென்ஷன் திட்டத்தை பொறுத்தவரை ஊழியர் ஒருவர் தனது பணிக்காலம் முழுவதும் வேலை பார்த்து ஓய்வு பெறும் நிலையில், சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து 60 சதவீதத் தொகையை ரொக்கமாகவும், மீதமுள்ள 40 சதவீதத் தொகைக்கு வட்டி வருவாயும்(Annuity Plan – Rates) பெறலாம். அதாவது ஓய்வு பெற்றாலும் அவரால் மீதமிருக்கும் 40 சதவீதத் தொகையை முழுவதுமாக பெற இயலாது. இந்த தொகை ஓய்வூதியத்தை உறுதிப்படுத்துவதற்காகவே செய்யப்பட்டுள்ள ஒரு முறை. 

அதே வேளையில் ஓய்வு பெறும் ஒருவர் பின்னாளில் இறந்து விட்டால், அவருடைய நாமினிக்கு இரு வாய்ப்புகள் தரப்படுகிறது. அதாவது, தனது துணையை போலவே, ஓய்வூதியம் பெற(40% தொகையில் வட்டி வருவாய்) விரும்புகிறாரா அல்லது முழுத்தொகையை பெற விரும்புகிறாரா என்பது தான்.   

ஊழியர் ஒருவர் தனது பணிக்காலத்தை முழுமை செய்யாத நிலையில், சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து 20 சதவீதத் தொகை மட்டுமே அவருக்கு ரொக்கமாக வழங்கப்படும். மீதமிருக்கும் 80 சதவீத தொகையில்(80% Annuity Plan) வட்டி வருவாய் அளிக்கப்படும். மாறாக, அவர் 20 சதவீதத் தொகையை உடனே பெற விரும்பாவிட்டால், 60 வயது முடியும் வரை அவர் சொல்லப்பட்ட தொகுப்பு நிதிக்காக தனது பங்களிப்பை வழங்கலாம். இல்லையெனில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 ஐ மட்டும் செலுத்தி கணக்கை செயல்படுத்தும் நிலையில்(NPS Tier- I Activation) வைத்துக் கொள்ளலாம். 

பொதுவாக தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் நிலையான ஓய்வூதியம் என்ற ஒன்றில்லை. மாறாக சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியும், அவற்றின் வளர்ச்சி(அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், பங்குகளில் முதலீடு) – Retirement Corpus மற்றும் வட்டி விகிதத்தை(Annuity Rates) பொறுத்தது தான். அரசு ஊழியர்களுக்கு மட்டுமே என இருந்த தேசிய பென்ஷன் திட்டம் பின்னர் 2009ம் ஆண்டு வாக்கில் தனியார் துறை ஊழியர்கள், சுய தொழில் புரிபவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என பெரும்பாலான இந்தியக் குடிமக்களுக்கு அறிமுகமானது.

பழைய பென்ஷன் திட்டத்தை ஒப்பிடும் போது, தேசிய பென்ஷன் திட்டம் பாதுகாப்பற்றதாகவும், நிலையான வருமானத்தை ஓய்வுக் காலத்தில் அளிப்பதில்லை எனவும் அரசு ஊழியர் சங்கங்களும், தொழிலாளர்களும் விமர்சித்து வந்த நிலையில், 2024ம் ஆண்டு ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம்(Unified Pension Scheme) அறிமுகமானது. இருப்பினும் இவை நடைமுறைக்கு வருவதற்கு ஓராண்டுக்கு மேலாகியுள்ளது. 

பழைய, தேசிய மற்றும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டங்களின் பயன்கள் மற்றும் அவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

NPS vs UPS கணக்கீடு (தோராயமாக மட்டுமே):

நீங்கள் உள்ளீட(Inputs) வேண்டியவை:

உங்கள் பெயர், பிறந்த தேதி, வேலைக்கு சேர்ந்த தேதி, ஓய்வு பெறக்கூடிய நாள், இதுவரை பணியாற்றிய ஆண்டுகள், இன்னும் பணியாற்ற வேண்டிய வருடங்கள், நடப்பு என்.பி.எஸ். கார்ப்ஸ் தொகை, அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சதவீதம்.

[Name, DOB, Date of Joining, Date of Retirement, Completed Service, Years to Retirement, Current NPS Investment Corpus value, Current Basic Pay and Dearness Allowance % ]

எச்சரிக்கை: மற்றவற்றை பதிவிட அல்லது திருத்த முயற்சிக்க வேண்டாம். கணக்கீட்டில் பிழை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

Warning: Do not attempt to input or edit others. There is a possibility of error in the Calculation Sheet.

NPS vs UPS – Calculator – Spreadsheet

மேலும் விவரங்களுக்கு அரசின் சுற்றறிக்கையை முழுவதுமாக படித்து அறிந்து கொள்ளவும். அதற்கான இணைப்பும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வேறுபாடு சார்ந்த தகவல் பெறப்பட்ட இணைப்பு: 

https://proteantech.in/articles/ops-vs-nps-vs-ups-retirement-plan-em1822025/

UPS Circular Document:

PFRDA UPS Rules (1)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குதாரர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறுவன நிர்வாகத் தன்மை

பங்குதாரர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறுவன நிர்வாகத் தன்மை 

Why is Corporate Governance so important for the Shareholders – Equity Investments ?

பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு பங்கின் விலை ஏறுவதற்கும், இறங்குவதற்கும் பொதுவான காரணியாக தேவைக்கும், இருப்புக்குமான இடைவெளி(Demand-Supply) தான் எனினும், அவற்றை தூண்டக்கூடிய விஷயங்களாக பல்வேறு நிலைகள் உள்ளன. உதாரணமாக பொதுவெளியில் ஒரு நிறுவனப்பங்கை பற்றிய செய்திகள், பங்குகளில் ஈடுபடும் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களின் மனநிலை, அரசியல் தாக்கங்கள், நாட்டின் பொருளாதார நிலை, துறை சார்ந்த மாற்றங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். 

இருப்பினும், நீண்டகால பங்கு முதலீட்டாளர்களுக்கு மிகவும் அடிப்படை காரணிகளாக மூன்று விஷயங்களை சொல்லலாம். அவை ஒரு பங்கின் நிறுவனர்கள்(Founders & Promoters), நிறுவனத்தின் நிதி அறிக்கைகள்(Financial Statements) மற்றும் நிர்வாகத் திறமை அல்லது தன்மை(Corporate Governance) ஆகியவை. குறுகிய காலத்தில் ஒரு பங்கின் விலை அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படுவது இயல்பு தான். அது ஒரு வகையில், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்பையும் வழங்கும். அதே சமயத்தில், மேலே சொன்ன மூன்று காரணிகள் தான் பெரும்பாலும் பங்குதாரர்கள் தங்களது பங்குகளை நீண்டகாலத்திற்கு வைத்திருக்க உதவும். 

“ சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் “ – இது தான் ஒரு பங்கு நீண்டகாலத்தில் விலையேற்றம் பெறுவதற்கும்.

நிறுவனர்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் எப்படி ?

இன்று சந்தையில் உள்ள பங்கு நிறுவனங்களில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்யும் பழமையான நிறுவனங்கள் பல உள்ளன. உதாரணமாக பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் வாடியா நிறுவனக் குழுமம்(தோற்றம்: 1736ம் ஆண்டு) துவக்கப்பட்டு 289 வருடங்கள் ஆகி விட்டது. ஆதித்யா பிர்லா குழுமம் துவங்கப்பட்டது 1857ம் வருடம், ரேமண்ட்ஸ் நிறுவனம் நூறு வருடங்களை கடந்து விட்டது. நம்ம ஊரு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 1921ம் ஆண்டு, கரூர் வைசியா வங்கி 1916, டாட்டா குழுமம் 1868, முருகப்பா குழுமம் 1900ம் ஆண்டு, டி.வி.எஸ். குழுமம்(1911), அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இந்துஜா குழுமம்(1914), லட்சுமி மில்ஸ்(1910), முத்தூட்(1887), பேரிஸ்(Parrys’ – EID Parry – 1788), ஸ்டேட் பேங்க்(SBI – 1806), கனரா வங்கி(1906), அட நம்ம மும்பை பங்குச்சந்தை(BSE) துவங்கப்பட்டது 1875ம் ஆண்டு என சொல்லிக் கொண்டே போகலாம். நூறு ஆண்டுகளை கடந்து தொழில் செய்யும் இந்திய நிறுவனங்கள் மட்டுமே 150க்கும் அதிகமாக உள்ளன.

பொதுவாக ஒரு நிறுவனம் துவங்கப்படும் போது, அந்நிறுவனத்தின் நிறுவனருக்கு(Founder) தொழில் அல்லது சமூகம் சார்ந்த ஒரு நோக்கம் இருந்திருக்கும். வெறுமென பணமீட்டுவது மட்டுமே அவரது நீண்டகால நோக்கமாக இருந்திருக்காது. அவ்வாறு நீண்டகாலத்தில் ஈட்ட வேண்டுமென்றால், அவரது இலக்கும் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறை தொழில்முனைவோர்களால் பராமரிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். இல்லையெனில், வரலாற்றில் நாம் எத்தனையோ பாரம்பரியமான பிராண்டு நிறுவனங்களை தொலைத்திருப்போம். நிறுவனத்தை துவக்கியவரின் ஆசை அல்லது நோக்கம் என்னவோ இருந்திருக்கலாம். ஆனால் அதனை பல வருடங்கள் சிறப்பாக வழிநடத்த அடுத்த தலைமுறை ஆட்கள் ஒத்துழைத்திருக்க வேண்டும். 

நிறுவனத்தை ஆரம்பநிலையில் துவக்கியவர் பொதுவாக Founder என அழைக்கப்படுவதுண்டு. அதற்கடுத்தாற் போல, அத்தொழிலை வழி நடத்தும் தலைமுறைகள் பெரும்பாலும் Promoters ஆக இருப்பர். சில சமயங்களில் ஒரு நிறுவனத்தின் Founder மற்றும் Promoter ஒரு நபரோ அல்லது குடும்ப நபர்களோ அமைவதுண்டு. நிறுவனத்தை துவக்கியவரின் நோக்கம் ஒரு புறம் இருக்க, இன்றைய அளவில் அந்நிறுவனத்தை வழிநடத்தும்(Promoters) இவர்களின் தொலைநோக்கு பார்வை எப்படியிருக்கும் ? இது தான் ஒரு பங்கு முதலீட்டாளருக்கு அவசியமானது.

“ தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி தூரம் பாயும் “ – நமக்கு பதினாறு அடியெல்லாம் பாய வேண்டாம். நிறுவனம் திவாலாகாமல் பங்குதாரர்களுக்கு நாணயமாக இருக்கிறதா என்பது தான் அவசியம். குறிப்பாக எந்த தொழிலையுமே செய்யாமல், வெறும் நிறுவனப் பங்கின் விலையை மட்டும் குறுகிய காலத்தில் ஏற்றி, லாபம் பார்த்து விட்டு பங்கு முதலீட்டாளர்களை பாதாளத்தில் தள்ளும் ‘ஷெல் நிறுவனங்கள்(Shell Companies)’ சந்தையில் பல உள்ளன. அப்படியிருக்க தொழிலை நாணயமாக செய்து கொண்டு, மாற்றத்திற்கும் உட்படும் நிறுவனங்கள் தான் ஒரு பங்கு முதலீட்டாளர்களுக்கு அவசியம். இதன் மூலம் மட்டுமே ஒருவர் நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டில் செல்வ வளத்தை ஏற்படுத்த முடியும்.

அதென்ன தொழில் நாணயம் ? (Corporate Governance):

“ ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் “ – இது ஒரு குடும்பத்திற்கும், நிறுவனத்திற்கும் பொருந்தும்.  

குடும்ப உறவுகளிடம் ஏற்படும் பிரச்சனைகள் பொதுவெளியில் தெரிய வந்தாலும், அதனை குடும்ப உறுப்பினர்களே முடிந்தவரை பேசி தீர்த்துக் கொள்வது, நீண்டகாலத்தில் நன்மை பயக்கும். இதனை போன்று தான், ஒரு நிறுவனத்தின் நிர்வாகம், தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நிதி அறிக்கைகளில் ஏற்படும் பொதுவெளியிலான சிக்கல்களை அந்த நிறுவனம் சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், முதலீட்டாளர்களிடம்(பங்கு விலை மற்றும் வாக்களிப்பு) அதன் தாக்கம் தெரிய வரும். இது நீண்டகாலத்தில் அந்நிறுவனத்திற்கும் பாதகத்தை ஏற்படுத்தலாம்.

உதாரணமாக தொழிலாளர்களிடையே வேலைநிறுத்த போராட்டம் ஏற்பட்டால், அது அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிலைத்தன்மையை பாதிக்க காரணமாக அமைந்து விடும். இதனை நிறுவனத்தின் நிர்வாகம், பொதுவெளியில் சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். நிர்வாகத்துக்குள் ஏற்படும் மேலாண்மை சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள், வாடிக்கையாளர்களின் நலனை பராமரித்தல், நிதி சார்ந்த கடன்கள் மற்றும் அறிக்கைகள், பொருளாதாரம் மற்றும் துறை சார்ந்த மந்தநிலை ஆகியவற்றில் நிறுவனத்தலைவர்கள் மற்றும் மேலிட நிர்வாகம் அதனை எவ்வாறு கையாளுகிறது என்பது ஒரு நிறுவனத்தின் நலனுக்கு மட்டுமிலலாமல், நீண்டகாலத்தில் முதலீட்டாளருக்கும் நலன் அளிக்கும்.

ஒரு நல்ல அல்லது நாணயமான நிறுவனம் என்பது அதன் நிர்வாகம் – பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் நல்ல நம்பிக்கையையும், உறவையும் பேண வேண்டும். இது பொதுவெளியில் அந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

ஏன் நிறுவனத்தின் நிர்வாகத்தன்மை(Corporate Governance) ஒரு முதலீட்டாளருக்கு அவசியம் ?

ஒரு நிறுவனம் தனது தொழிலில், ‘ரிஸ்க்’ எடுத்து ஏதேனும் புதிய முயற்சியை அல்லது அதிகக் கடன் வாங்கி விரிவாக்கம் செய்யும் நிலையில் அதன் வெளிப்படைத்தன்மையை பங்குதாரர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களுடன் அறிக்கைகளாக(Statements) தெரிவிப்பது அவசியமாகும். இது அந்நிறுவனத்தின் செயல்திறனையும் மேம்படுத்த உதவும். காலாண்டுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் நிதி அறிக்கைகளில் சொல்லப்படும் விஷயங்கள், நோக்கங்கள் மற்றும் இலக்குகள் தவறும் பட்சத்தில் அதனை முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவை ஏற்படுத்த வேண்டும்.

உதாரணமாக, “ பொருளாதார மந்த நிலைக் காரணமாக எங்கள் நிறுவனம் இன்னென்ன சிக்கல்களை சந்திக்கும். அதனை களைய எங்கள் முன் உள்ள சில தீர்வுகள்”; “கடந்த சில காலாண்டுகளாக நிறுவனம் லாப வளர்ச்சியை நோக்கி செல்ல முடியாததற்கான காரணங்கள் மற்றும் துறை சார்ந்த நிலைகள்”; “ புதிய நிர்வாகம் அமைந்த பின் எங்களது தொழில் சார்ந்த மாற்றங்கள்”; “வேலை நிறுத்த போராட்டத்தால் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதனை களைய நாங்கள் கொண்டுவரும் தீர்வுகள்”; “இது போன்ற மோசடிகள்(Whistleblower, Scam, Fraud) இனி மேல் எங்கள் நிறுவனத்தில் நடைபெறா வண்ணம் நாங்கள் செய்த விஷயங்கள் ” – இவ்வாறு நிர்வாகத்தின் அறிக்கைகள் மூலம் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் சரியான நேரத்தில் தகவல்களை பகிர வேண்டும். அது வெறுமென பங்கு விலைகளை கட்டுப்படுத்தும் மற்றும் ஏற்றும் போலிச் செய்தியாக இருந்து விடக் கூடாது.

      

பொதுவாக பங்குதாரர்கள் ஒரு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரத்தில் தலையிடுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்களுக்கும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கு உள்ளது. அதன் காரணமாக தான் பங்குதாரர்கள் மூலம் ஒரு இயக்குனர் குழுவை தேர்ந்தெடுப்பது, நிறுவனத்தின் பிற கடமைகளை வாக்களிப்பு மூலம் ஏற்படுத்துவது என முடிவெடுக்கும் காரணிகளாக உள்ளன. இதனை நம்பிக்கைக்குரிய வகையில் அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவும், நிர்வாகமும் கடைபிடிப்பது அவசியமாகும். ஒரு சாமானிய பொது பங்குதாரரும்(Retail / Public Shareholders) ஒரு நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அங்கம் வகிப்பதற்கான சட்டம் உள்ளது.

பங்கு முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை(Annual Reports and Other Financial Statements) தங்களது முகவரிக்கு அனுப்பி வைக்க சொன்னால், அதனை அனுப்பி வைப்பது ஒரு நிர்வாகத்தின் கடமையாகும். இது போன்று தான் வாக்களிப்பது, ஈவுத்தொகை(Dividend), போனஸ் பங்குகள், ரைட்ஸ் பங்குகள் மற்றும் பிற பங்குதாரர் சார்ந்த நிலைகள். இதற்காக தான் ஒரு நிறுவனத்தில் பங்குதாரர் நலனைப் பாதுகாக்க செயலாளரும்(Company Secretary) நியமிக்கப்பட்டுள்ளார். 

நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு(Annual General Meeting – AGM) பங்குதாரர்களை அழைப்பது நிர்வாகத்தின் கடமை. அது இணைய வழியிலோ அல்லது நேரடியான உரையாடலாக இருக்கலாம். ஆனால் பங்குதார்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவும் மற்றும் இன்னபிற அதிகாரிகளும் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும். இது போன்ற கூட்டங்களில் நிறுவனத்தின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதனை பங்குதாரர்கள் அறியலாம். 

நீங்கள் ஒரு நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கு(Factory Visit) சென்று, அதன் தொழிலை பற்றி புரிந்து கொள்ள, அவர்களின் பொருட்கள் அல்லது சேவை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதனை அறிய, அந்நிறுவனத்தின் நிர்வாகத்திடம் ஒரு பங்குதாரராக அனுமதி கேட்கலாம். சில நிறுவனங்கள் இதற்கான அனுமதியையும் அளித்து வருகிறது. இன்னும் சில நிறுவனங்களோ அதன் உற்பத்தி ஆலையில் தான் ஆண்டு பொதுக்கூட்டத்தை நடத்துவதுடன், பங்குதாரர்களுக்கு ஆலையையும் சுற்றி காண்பிக்க உதவுகிறது. இதன் மூலம் பங்குதாரர்கள்-நிர்வாக உறவு மேம்படும்.  

பொதுவெளியில் மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை சிக்கல்களை ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் செவிக்கொடுத்து கேட்கிறதா என்பதனை பங்குதாரர்களுக்கு நிறுவனம் தெரியப்படுத்த வேண்டும். நிறுவனத்தின் நிதி அறிக்கைகள் மற்றும் இன்னபிற ஆவணங்கள் ஆகியவற்றை ஒரு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு சரியான நேரத்தில் பகிர்தலையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆக சுருக்கமாக சொன்னால், பொறுப்புடைமை(Accountability), வெளிப்படைத்தன்மை(Transparency), இடர் மேலாண்மை(Risk Management), நாணயம்(Fairness) மற்றும் பங்குதாரர்களிடம் இணக்கத்தை(Shareholders Relationship) ஒரு நிறுவனம் கொண்டிருக்க வேண்டும். இதுவே ஒரு முதலீட்டாளருக்கும் அதன் பங்கு விலையில் நீண்டகாலத்தில் வெளிப்படும்.

இன்றும் நூறு வருட பாரம்பரிய நிறுவனங்கள் நிலைத்து நின்று தொழில் புரிவதற்கு அதன் வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் தான் காரணம் – அவர்கள் நிறுவனத்தின் நிர்வாகத்தன்மையில் நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தால் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(பங்குச்சந்தை) தெரியுமா ?

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(பங்குச்சந்தை) தெரியுமா ? 

History of Madras Stock Exchange(MSE) 

தமிழ்நாட்டை தலைநகரமாக கொண்ட சென்னை நீடித்த வரலாற்றையும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பையும் கொண்டிருக்கிறது. 2022ம் ஆண்டு முடிவில் சென்னையின் பொருளாதார மதிப்பு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாயில் 7.87 லட்சம் கோடி). இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு, சென்னையின் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதியும் ஒரு காரணம் எனலாம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் சென்னையின் பங்களிப்பு மட்டும் சுமார் 33 சதவீதமாகும். உலகின் பிரபலமான நகரங்களில் முதல் 50 நகரங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் சென்னையின் இடத்தை தவிர்க்க முடியாதது.

ஆசியாவின் டெட்ராய்ட்(Detroit of Asia) என அழைக்கப்படும் சென்னை, வாகனத்துறைக்கான உதிரி பாகங்கள் உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது. நாட்டின் வாகன உதிரி பாகங்கள் பிரிவில் சென்னை மட்டும் 35 சதவீத பங்கினை கொண்டுள்ளது. இந்திய நான்கு சக்கர வாகன உற்பத்திப் பிரிவில் இதன் பங்களிப்பு மட்டும் 30 சதவீதமாக உள்ளது. கனரக வாகனங்கள், டயர்கள், வாகன சோதனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, துறைமுகங்கள், உலகின் முக்கிய நிறுவனங்களின் அலுவலகங்கள் என வாகனத்துறைக்கு தேவையான பெரும்பாலான நிலைகளை சென்னை உள்ளடக்கியுள்ளது. 

அப்படியிருக்க, சென்னையில் ஒரு பங்குச்சந்தை…  

கடந்த 1937ம் ஆண்டு துவக்கப்பட்டது தான் மெட்ராஸ் பங்குச்சந்தை(தலைமை அலுவலகம்: சென்னை). நாட்டின் நான்காவது பங்குச்சந்தையாகவும், தென் இந்தியாவில் துவக்கப்பட்ட முதல் பங்குச்சந்தையாகவும், மெட்ராஸ் பங்குச்சந்தை இருந்தது. இந்த சந்தை மேலே சொல்லப்பட்ட காலத்தில் துவக்கப்பட்டிருந்தாலும், 1957ம் ஆண்டு தான் இச்சந்தைக்கு தேவையான ஒழுங்குமுறைகளும், இன்னபிற வழிமுறைகளும் சட்டமாக்கப்பட்டு இயக்கத்தில் வந்தன.

ஆரம்ப நிலையில் ஐந்து நிறுவனங்களின் துணை மூலம் தோற்றுவிக்கப்பட்ட மெட்ராஸ் சந்தை, பின்னர் பெரிய சந்தையாக சுமார் 120 உறுப்பினர்களுடன் இயங்கியது. 1996ம் ஆண்டு முதல் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட சந்தையாக, 120 பங்குத்தரகு அலுவலகங்களுடன், மெட்ராஸ் பங்குச்சந்தை செயல்பட்டது.

 2001ம் ஆண்டு வாக்கில் சுமார் ரூ.3,000 கோடி வர்த்தக அளவை கொண்டிருந்த மெட்ராஸ் பங்குச்சந்தை, 2012ம் ஆண்டில் சுமார் 19,900 கோடி ரூபாய் வர்த்தகம் என்ற அளவில் வளர்ச்சியடைந்தது. 2001ம் ஆண்டில் சொல்லப்பட்ட 3,000 கோடி ரூபாய் வர்த்தகம் என்பது அப்போதைய மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையை ஒப்பிடுகையில், இது மூன்று சதவீதம் என்ற அளவில் மட்டுமே இருந்துள்ளது.

மெட்ராஸ் பங்குச்சந்தையில் சுமார் 1,785 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. மெட்ராஸ் பங்குச்சந்தைக்கு ஒரு துணை நிறுவனமும் உண்டு – எம்எஸ்இ பைனான்சியல் சர்வீஸஸ்(MSE Financial Services). 2012ம் ஆண்டு வாக்கில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி(SEBI) அறிவித்த ஒரு செய்தியால், மெட்ராஸ் பங்குச்சந்தையை மூடுவதற்கு காரணமாக அமைந்தது. இந்தியாவில் உள்ள ஒரு பங்குச்சந்தை குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய்க்கு பங்குகளில் பணப்புழக்கத்தை(Minimum Liquidity) ஏற்படுத்த வேண்டுமென்பது தான். அதாவது ஒரு முதலீட்டாளரோ, வர்த்தகம் செய்பவரோ தான் வாங்கியிருக்கும் பங்குகளை விற்க முனைந்தால், மற்றொரு புறம் வாங்குவதற்கு ஆள் வேண்டுமே, அது தான் இந்த பணப்புழக்கம்(Liquidity). 

மேற்சொன்ன அறிவிப்பை தொடர முடியாத நிலையில் பெங்களூர் பங்குச்சந்தையுடன், மெட்ராஸ் பங்குச்சந்தை இணைக்கப்பட்டது. பின்னாளில் இச்சந்தையும் மூடப்பட்டது.  இதனைத் தொடந்து 2015ம் ஆண்டின் மே மாதத்தில் தனது வர்த்தக செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக மெட்ராஸ் பங்குச்சந்தை அறிவித்தது. பின்னர் செபியும் அதனை ஏற்றுக் கொண்டது. 77 வருட பாரம்பரிய பங்குச்சந்தையாக திகழ்ந்த மெட்ராஸ் பங்குச்சந்தை 2015ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேக் என 1990 மற்றும் 2000களில் இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்ட நிலையில், 1992ம் ஆண்டு துவக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தை மற்றும் ஆசியாவின் பழமையான மும்பை பங்குச்சந்தை போன்ற ராட்சத அலைகளுக்கு முன்னர் தென் இந்தியாவின் முதற் பங்குச்சந்தை நிற்க இயலவில்லை. நாடெங்கிலும் எண்ணற்ற பங்குச்சந்தைகள்(20க்கும் மேற்பட்ட) இருந்த நிலையில், அவற்றை கையாள்வது கடினம் மற்றும் முதலீட்டாளர் நலனை பாதுகாக்க இது போன்ற நிகழ்வுகளை செபி(SEBI) ஏற்படுத்தியிருந்தது. 

இந்தியப் பங்குச்சந்தையில் தற்போதைய முதலீட்டாளர் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வு அன்றைய காலத்தில் இல்லாததும் ஒரு காரணமே !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

முதலீட்டு வருவாய்க்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள், ஏன் ?

முதலீட்டு வருவாய்க்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள், ஏன் ?

Do not focus only on Investment returns – Fallacy of Investing

கிரேஸ் குரோனர்(Grace Groner):  தனது 12ம் வயதில் அனாதையானாள். அவள் திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவளுக்கு காரும்(நான்கு சக்கர வாகனம்) ஓட்டத் தெரியாது. தனது வாழ்நாள் முழுவதும் சின்னதொரு வீட்டில் வசித்து வந்துள்ளாள். எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக வாழ்ந்து வந்தவள். தனது வாழ்நாளில் சுமார் 43 வருடங்கள் அப்போட் பார்மா(Abbott Pharma) நிறுவனத்தில் செயலாளராக வேலை செய்வதிலேயே இருந்துள்ளார். தனது 101வது வயதை கொண்டாட இன்னும் மூன்று மாதங்களே இருந்த நிலையில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் மறைந்தார்.

1935ம் ஆண்டு வாக்கில் கிரேஸ், தனது நிறுவனத்தின் பங்குகளை சுமார் 180 டாலர்களுக்கு(ஒரு பங்கின் விலை 60 டாலர்கள் – 3 பங்குகள் மட்டுமே) வாங்கியுள்ளார். அடுத்த 75 வருடங்களில், அவர் தனது நிறுவனத்தின் மூலம் கிடைத்த ஈவுத்தொகையை(Dividends) மறுமுதலீடு செய்து வந்துள்ளார். 2010ம் ஆண்டு வாக்கில் அவர் மறைந்த போது, அதன் மதிப்பு சுமார் 7.2 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. இறக்கும் முன்பு, தனது அனைத்து சொத்துக்களையும், தான் வளர்ந்த மற்றும் இளம்வயதில் படித்த கல்லூரியை சேர்ந்த அறக்கட்டளைக்கு கொடையாக வழங்க உயில் எழுதியுள்ளார். அவர் மறைவுக்கு பின்பு, அந்த உயில் மூலம் அறக்கட்டளைக்கு சொத்துக்களும் மாற்றப்பட்டது. 2024ம் ஆண்டின் துவக்கத்தில், அதன் மதிப்பு சுமார் 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(2010ம் ஆண்டு முதல் டிவிடெண்ட் தொகை சேர்க்காமல்) என அப்போட் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் 1909ம் ஆண்டு பிறந்தவர் தான் செல்வி. கிரேஸ் குரோனர் அவர்கள் !

ஒரு வேளை அவர் தான் வாங்கிய பங்குகளுக்கு மாற்றாக, 180 அமெரிக்க டாலர்களை, ஏதேனும் ஒரு வங்கியில் அப்போது முதலீடு செய்து, தனது வாழ்நாள் முழுவதும் வைத்திருந்தால் அதன் மதிப்பு சில ஆயிரம் டாலர்களாக மட்டுமே இருந்திருக்கும் என முதலீட்டு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ரிச்சர்ட் பஸ்கோன்: கடந்த 1914ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்ட முதலீட்டு மேலாண்மை நிறுவனம் தான் மெரில்(Merrill Lynch). அமெரிக்க நிறுவனங்களின் வங்கி என சொல்லப்படும் மெரில் நிறுவனத்தில் 1970 களில் துணைத்தலைவராக வேலை பார்த்தவர் ரிச்சர்ட் பஸ்கோன்(Richard Matthew Fuscone). அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை மேலாண்மை பட்டப்படிப்பை முடித்தவர். அமெரிக்க பங்குச்சந்தையின் அனுபவம், நல்ல திறமை, அதிக சம்பளம், ஆடம்பரமான வாழ்க்கை, சுமார் 20,000 சதுர அடியில் சொகுசு வீடு என ரிச்சர்டுக்கு கிட்டியது. பங்கு முதலீட்டில் அவருக்கு கிடைக்காத வெற்றி என அப்படியொன்றுமில்லை. பெரு நிறுவனங்களில் அவர் வகிக்காத முக்கிய பதவிகள் இல்லையெனலாம். தனது 40வது வயதிலேயே நாள்தோறும் பணிபுரியும் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர். மேலும் தனது சொத்துக்களை கொடையாக அளிக்க முனைந்தவர். 

2008ம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி திரு. ரிச்சர்ட் பஸ்கோனையும் பொருளாதாரம் சார்ந்து பாதித்தது எனலாம். வங்கியில் அதிகக் கடன், முதலீட்டில் அதிக ரிஸ்க் தன்மை மற்றும் அவரது ஆடம்பர வாழ்க்கையின் அடிப்படை செலவினங்கள் ஆகியவை அவரை 2010ம் ஆண்டு திவாலுக்கு தள்ளியது.     

“பொருளாதாரத்தில் ஒரு தனி மனிதர் வெற்றி பெறுவது என்பது நீங்கள் புலமை படைத்த மற்றும் அதிகமாக கற்றுக்கொள்ளும் நிலையில் அல்ல, மாறாக நீங்கள் அதனை எவ்வாறு புரிந்து கொண்டு நடக்கிறீர்கள்” என்பது தான்.

மேலே சொன்ன இரண்டு மனிதர்கள் வாயிலாக இங்கே ஆடம்பரம் கேடானது, எளிமை நல்லது என நாம் எடுத்துக் கொள்ள கூடாது. மாறாக நாம் ஒரு முதலீட்டை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறோம் மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதில் தான் நமது நிதி சார்ந்த வளம் இருக்கிறது. இங்கே வெற்றி-தோல்வி என்பது வெறும் அளவீட்டில் அல்ல.

பங்குச்சந்தை முதலீட்டில் நான் வெகு விரைவாக பணம் பண்ணுகிறேன் என்ற பேர்வழியில் அதிக ரிஸ்க் தன்மை கொண்ட மற்றும் புரிந்து கொள்ள முடியாத ஏதேனும் திட்டங்களில் பணத்தை போட்டு விட்டு, நாம் எவ்வளவு எளிமையாக இருந்தாலும் சரி, அது நம்மை பாதாளத்துக்கு தள்ளி விடும். கற்றல் மிகவும் அவசியம், அதனை விட கற்றவற்றை கவனமாக செயல்படுவதே இன்னும் சிறப்பு. கீழே சொல்லப்பட்ட சில வாக்கியங்களை படியுங்கள்…

அதிக வருவாய்(High Returns) அளித்த மியூச்சுவல் பண்டு திட்டங்கள்…

ஒரே மாதத்தில் அல்லது ஒரே வருடத்தில் அதிக விலையை(High Risk, High Returns) கொடுத்த பங்குகள்…

ஒரு லட்சம் ரூபாய் போட்டால் மாதத்துக்கு 10,000 ரூபாய் (பத்து பைசா வட்டி: மாதத்துக்கு 10% வருவாய் எனில் வருடத்தில் 120%)…

இந்த கிரிப்டோவில் பணம் போட்டால் ஒரே மாதத்தில் டபுள் ஆகும்…

இந்த மனையை நீங்கள் இப்போது வாங்கி வைத்தால் ஐந்து வருடத்தில் ஐந்து மடங்கு லாபம்…

இது போன்ற முதலீடுகளை நாங்கள் யாருக்கும் பரிந்துரைக்கவில்லை. இது உங்களுக்காக மட்டுமே. இப்போது முதலீடு செய்தால் கொள்ளை லாபம்…

பங்குச்சந்தையில் நீங்கள் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்தால், தினமும் 5,000 ரூபாய் பார்ட் டைம்(Part Time Income) வருவாயாக சம்பாதிக்கலாம்…

ஒரு மொபைல் ஆப் மூலம், நீங்கள் வீட்டில் இருந்து கொண்ட கை நிறைய சம்பாதிக்கலாம்…

பணக்காரர்கள் ஒரு இல்லுமினாட்டிகள், அவர்கள் நம்மை போன்றவர்களை ஏமாற்றுகிறார்கள். நமக்காகவே இது போன்ற மல்டி லெவல் தொழில்கள் வந்துள்ளன. நாமும் தொழிலதிபராக மாறலாம்…

இன்னும் எண்ணற்ற…

மேற்சொன்னவற்றில் நாம் விழுவது இரண்டே இரண்டு விஷயங்களில் தான் – குறுகிய காலத்தில் நிறைய பணம்(High Returns) மற்றும் சமூக அந்தஸ்து(Social Status). 

நம்மில் பலரும் இன்னும் பங்குச்சந்தை என்பது F&O என சொல்லப்படும் ஊக வணிகமும், இன்ட்ரா டே என சொல்லப்படும் நாள் வணிகம்(Day Trading) தான் என நினைத்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் நம்மால் மேலே சொன்ன பல வழிகளில் குறுகிய காலத்தில் அதிக பணத்தை தேடிச் செல்லும் போது நாம் இன்னும் பணக்காரர்களை வெல்லவில்லை என்பதும் புரியும்(பணக்காரர்களாக தோற்றமளிக்க மட்டுமே உதவும்).

மெட்ராஸ் பங்குச்சந்தை அமைப்பின் முன்னாள் தலைவர் திரு.வ. நாகப்பன் அவர்கள் சொல்வது போல, ‘நீங்கள் பெரு நிறுவனங்களை கேள்வி கேட்க வேண்டுமானால், பங்குச்சந்தையில் சிறு முதலீட்டாளர்களாக நாம் நமது பங்கு முதலீட்டின் அளவை(சிறு முதலீட்டாளர்களின் வரவு) அதிகரிப்பதன் மூலம் மட்டுமே அந்த நிகழ்வு ஏற்படும்’ என்பார். உண்மையும் அது தான். உலகப் பொருளாதாரத்தில் நாம் இன்று வாங்கும் பொருளும், சேவையும் ஏதோவொரு நிறுவனத்தின் உற்பத்தி தான். அந்த நிறுவனத்தின் பங்கும் பெரும்பாலும் சந்தையில் பட்டியலிடப்பட்டது தான். 

இன்று நம் நாட்டில் தேசியமயமாக்கப்பட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளும் (தனியார் வங்கிகளும் தான்) பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டவை தான்.  கடந்த 30 வருடங்களில் வங்கி டெபாசிட், தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், பங்குகள் என பல்வேறு வகையான முதலீட்டை நாம் கொண்டிருந்தால் முடிவில் பங்குச்சந்தையை தாண்டிய வருவாய் வேறு எவற்றிலும் கிடைக்கப்பெறவில்லை. பங்குச்சந்தைக்கு அடுத்தாற் போல, அதிக வருவாய் அளித்த முதலீடாக பார்த்தால் தங்கத்தின் மீதான முதலீடு தான். அதுவும் பங்குச்சந்தையை காட்டிலும் கடந்த 30 வருடங்களில் ஆண்டுக்கு சராசரியாக நான்கு சதவீதம் குறைவாகவே காணப்பட்டுள்ளது. பின்னர் நாம் ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் மற்றும் பி.எப் கணக்குகளை பற்றி சொல்லத் தேவையில்லை. 

நம்மில் பெரும்பாலோர் அதிக வருவாயை குறுகிய காலத்தில் ஈட்ட வேண்டுமென்ற ஆசையே, பெரும்பாலும் தவறான முதலீட்டு முடிவுகளை எடுக்க காரணமாக இருந்துள்ளது. சில நேரங்களில் பாதுகாப்பாக கருதப்படும் அஞ்சலக சேமிப்பு மற்றும் பி.எப் கணக்குகள் கூட பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறாவிட்டாலும், முதலுக்கு மோசம் தராது. ஆனால் வெகு விரைவாக பணம் சம்பாதிக்கிறேன் பேர்வழியாக நாம் தவறான முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ளுகையில், நம் முதல் மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கும் ஆளாகிறோம். 

எனவே, நாம் அதிக வருவாய் அளிக்கும் பங்குச்சந்தையாக இருந்தாலும் சரி, பாதுகாப்பானது என எண்ணப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களானாலும் சரி, முதலீட்டு வருவாய்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நமது இலக்கினை நீண்டகாலமாக நிர்ணயித்து, தொடர் முதலீட்டை(Consistency) மேற்கொள்ளுவது தான் சிறப்பு.

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ?

உண்மையில், நீங்கள் பெறும் அல்லது பெறக்கூடிய வருவாய்(லாபம்) என்பது மற்றொருவருடன் ஒப்பிட்டு பார்ப்பதல்ல. நீங்கள் முதலீடு செய்யும் திட்டங்களையும் சார்ந்தது அல்ல. மாறாக நீங்கள் எப்போது அந்த முதலீட்டை வெளியே எடுக்கிறீர்களோ அது தான் உங்கள் லாபம் அல்லது வருவாய்(Booked Profit / Redemption). உதாரணமாக ‘ABC’ என்ற பங்கையோ அல்லது மியூச்சுவல் பண்ட் திட்டத்தையோ நீங்களும், உங்களது நண்பரும் தேர்ந்தெடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்களுக்கான காலம் அடுத்த 10 ஆண்டுகள் என கொள்ளலாம். எந்தவொரு முதலீட்டுக்கான வருவாயும் ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டது(வங்கி வட்டி விகிதம் உட்பட). இடையில் 5 வருடங்களுக்கு பிறகு, நீங்கள் பங்குகளை விற்று அல்லது அந்த திட்டத்திலிருந்து வெளியேறினால், நீங்கள் உங்கள் பணத்தை வெளியே எடுத்த நாளே உங்களது லாபமாக அல்லது நட்டமாக இருக்கும். அன்றைய நாளில் தான் உங்கள் முதலீட்டுக்கான வருவாய் விகிதம்(Returns %) கணக்கிடப்படும். அதுவே உங்களது நண்பர் 8 வருடங்களுக்கு பின்னர், முதலீட்டை விலக்கினால், விற்ற நாளில் உள்ள வருவாயே அவரது லாபமோ அல்லது நட்டமோ ஆகும்.

மாறாக ஒரு குறிப்பிட்ட பங்குகள் அல்லது மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் இவ்வளவு வருவாயை(20%, 30%, 50%), இந்த காலக்கட்டத்தில்(20,10, 5 வருடங்கள்) அளித்துள்ளது என சொன்னாலும், ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டை எப்போது விற்கிறாரோ அன்றைய நாள் வரை கணக்கிடப்படுவது தான் அவருடைய வருவாய் விகிதம். இதனை விட்டு விட்டு இந்த பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் 30 சதவீத வருவாயை கொடுத்துள்ளது, இந்த மியூச்சுவல் பண்ட் திட்டம் கடந்த 5 வருடங்களில் ஆண்டுக்கு 20 சதவீத வருவாயை அளித்துள்ளது, இந்த இடத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், நீங்கள் மனை வாங்கியிருந்தால் இப்போது மூன்று மடங்கு லாபம் என்ற கதையெல்லாம் உங்களுக்கான கதையல்ல. அது ஏற்கனவே நடந்து முடிந்த விஷயம்.

அதனால் தான் பங்குச்சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது, ஏற்ற-இறக்கங்கள் பங்குகளில் நடைபெறும், மியூச்சுவல் பண்ட் திட்டம் மூலம் கடந்த காலத்தில் கிடைக்கப்பெற்ற வருவாய், எதிர்காலத்தில் அப்படியே கிடைக்கப்பெறும் என்பதில் எந்த உத்தரவாதமும் கிடையாது என்ற வாசகங்கள் இடம் பெறுகின்றன.

நாம் என்ன செய்ய வேண்டும் ?

  • உங்களுக்கான நிதி இலக்குகளை(Financial Goals) நிர்ணயம் செய்து கொள்ளுங்கள் 
  • இலக்குகளுக்கான சரியான திட்டம்(Returns & Investment Period) எதுவென்பதை கண்டறியுங்கள் 
  • இலக்கு காலம் முடியும் வரை தொடர்ச்சியாக(Disciplined Investing) முதலீடு செய்து வாருங்கள்
  • இடைப்பட்ட காலத்தில் எந்தவொரு காரணத்திற்காகவும் முதலீட்டை நிறுத்துவதோ, இல்லையெனில் பணத்தை வெளியே எடுப்பதையோ செய்யாதீர்கள் 
  • உங்களது இலக்கு காலத்திற்கு முன்னரே, உங்களுக்கு தேவையான தொகை சேர்ந்து விட்டால், அதனை வெளியே எடுத்து பாதுகாப்பான அல்லது குறைந்த ரிஸ்க் தன்மை கொண்ட திட்டத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்(Corpus achieved before Maturity).
  • நீங்கள் இலக்குகளுக்கான தொகையை என்றைக்கு சேர்ந்தவுடன் எடுத்தீர்களோ, அன்றைய நாள் தான் உங்களது முதலீட்டு வருவாய்(Booked Returns%) கணக்கிடப்படும். அதற்கு முன்பு வரை இருந்த எல்லாமே வெற்று லாப-நட்ட கணக்கு தான்(Notional Gain / Loss).   

எனவே, நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது, உங்களது முதலீட்டு வருவாய்க்கு அல்ல, தொடர்ச்சியான முதலீடு மட்டுமே !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஒவ்வொரு வருடமும் நீங்கள் உங்களது முதலீட்டை அல்லது சேமிப்பை அதிகரிக்கிறீர்களா ?

வ்வொரு வருடமும் நீங்கள் உங்களது முதலீட்டை அல்லது சேமிப்பை அதிகரிக்கிறீர்களா ?

Do you increase your Savings or Investment every year ?

“உங்களது முதலீட்டு வருவாயை(லாபம்) காட்டிலும், நீங்கள் செய்யும் முதலீட்டு அதிகரிப்பே உங்களது நிதி இலக்கை அடையச் செய்யும்”.

பொதுவாக நம்மில் பலர் தங்களது நிதி இலக்கிற்கு பெரும்பாலும் சேமநல நிதி(பி.எப்), அஞ்சலக மற்றும் வங்கி மாதாந்திர அல்லது வைப்புத் தொகை(FD) போன்ற சேமிப்புத் திட்டங்களைத் தான் நம்பியிருப்பர். கூடுதலாக போனால் தங்கம் மற்றும் வீட்டுமனையில் நீண்டகாலம் முதலீடு செய்வதுண்டு. ஆனால் சிறு சேமிப்புத் திட்டங்களில் சேர்க்கப்படும் தொகை, பின்னாளில் நமது நிதி இலக்கிற்கு போதுமான தொகையை அளிக்குமா என்றால் சந்தேகம் தான். சிறு சேமிப்புத் திட்டங்களின் மூலம் குறுகிய கால இலக்கிற்குத் தேவையான தொகையை நாம் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் ஏற்படுத்தி விட முடியும். அதே வேளையில் இதன் மூலம் நீண்டகால இலக்குகளுக்கு அது சாத்தியமா ?

உதாரணமாக, குமார் என்பவரின் இரண்டு வயதான குழந்தைக்கு, பின்னாளில் மேற்படிப்புக்கு தேவையானத் தொகையை அவர் இன்று முதல் சேமிக்க முற்படுகிறார் என வைத்துக் கொள்வோம். மேற்படிப்பிற்கான(பட்டப்படிப்பு) இன்றைய செலவுத்தொகை ஐந்து லட்சம் ரூபாய் எனக் கொண்டால், 15 வருடங்களுக்கு பிறகு அதாவது குழந்தையின் 17 வயது முடிவில், ஆண்டுக்கு சராசரியாக 7% விலைவாசியில்(பணவீக்கம்) 13.80 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதனை அவர் இன்றே சேமிக்க வேண்டுமெனில், மாதத்திற்கு 4,350 ரூபாயை அடுத்த 15 வருடங்களுக்கு 7 சதவீத வட்டி வருவாய் அளிக்கும் சேமிப்புத் திட்டத்தில் மேற்கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக அவர் 12 % வருவாய் அளிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய முனைந்தால், மாதத்திற்கு ரூ.2,750 மட்டுமே என்ற முறையில் அடுத்த 15 வருடங்களுக்கு ஏற்படுத்தினால் அவரது இலக்கை அடையலாம். ஒரு முறை மட்டும் வைப்புத் தொகையாக(Fixed Deposit or One Time Investment) முதலீடு செய்ய வேண்டுமென்றால் இன்றே ரூ.5 லட்சத்தை ஒரு சேமிப்புத் திட்டத்தில் போட்டு விட்டு, அடுத்த 15 வருடங்களுக்கு காத்திருந்தால் 7 சதவீத வட்டி வருவாயில் நமது இலக்கை அடையலாம். இதுவே 12 சதவீத வருவாய் எனில், ரூ.2.50 லட்சம் போதுமானது.

பாதுகாப்பானது என நாம் மேலே சொன்ன சேமிப்புத் திட்டங்களில் அடுத்த 15 வருடங்களுக்கு உறுதியாக ஆண்டுக்கு 7 சதவீத வட்டி வருவாய் கிடைக்கக்கூடும் என நம்மால் சொல்லிவிட முடியுமா ? 12 சதவீத வருவாய் ஆண்டுக்கு கிடைக்கும் என்றால், அது ரிஸ்க் இல்லாமல் தான் கிடைத்திருமா ? இன்றைய 5 லட்ச ரூபாய் தொகைக்கே இவ்வளவு கணக்கு என்றால், ஆண்டுக்கு 10, 20 லட்சம் செலவாகும் மேற்படிப்புகளுக்கு நாம் நிதி இலக்கை நிர்ணயித்தால் மாதாமாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் ?

பொதுவாக நீண்ட கால நிதி இலக்கிற்குத் தேவையான தொகையை நாம் மாதாமாதம் முதலீடு செய்கையில் அவ்வளவு எளிதில் அந்த இலக்கை எட்டி விட முடியாது. இடைப்பட்ட காலத்தில் அவசரத்தேவை என நாம் நம் முதலீட்டையோ, சேமிப்பையோ நிறுத்த நேரிடலாம், இல்லையெனில் பணத்தை வெளியே எடுத்து விடலாம் அல்லது நாம் சேமித்த பணம் பின்னொரு காலத்தில் விலைவாசி உயர்வு காரணமாக இலக்கிற்கான காலத்தில் போதுமானதாக இல்லாமல் போய்விடக் கூடும். நமது வருவாய்க்கு தகுந்தாற் போலத் தான் நாம் சேமிப்பையும், செலவையும் நிர்வகிக்க முடியும். சில நீண்ட கால நிதி இலக்குகளுக்கு சேமிக்க, நம்மிடம் போதுமான தொகை இருந்திருக்காது. இது போன்ற சமயங்களில் தான் நாம் நம்மால் எந்தளவுக்கு சேமிக்க முடியுமோ அதனை உடனே துவங்கி விட்டு, பின்பு சிறுகச்சிறுக ஆண்டுக்கு ஓரு முறையோ அல்லது வருவாய் அதிகரிக்கும் பட்சத்தில் நமது சேமிப்பு அல்லது முதலீட்டுத்தொகையை அதிகரித்து செய்யும் போது, இலக்குகளை நெருங்கலாம்.

உதாரணமாக நாம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாதாமாதம் ரூ.5,000 ஐ முதலீடு செய்தால், 12 சதவீத வருவாய் கிடைக்கும் நிலையில், முடிவில் ரூ.50 லட்சத்தொகை கிடைக்கும். இதுவே சொல்லப்பட்ட ரூ.5,000 மாதாந்திர தொகையை ஒவ்வொரு வருடமும் 3 சதவீதம் அதிகரித்து வந்தால், முடிவில் 60 லட்ச ரூபாய் கிடைக்கக் கூடும். ஆண்டுக்கு 5 சதவீதம் அதிகரித்து செய்தால் 68 லட்ச ரூபாயும், இதுவே 8 சதவீதம் என்றால் ரூ.85.23 லட்சமும் கிடைக்கும். இது அவ்வளவு எளிதான காரியமல்ல. பழக்கத்தின் மூலம் மட்டுமே இதனை நாம் செய்தாக வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் நமது வருவாய் எவ்வளவு சதவீதம் உயர்கிறதோ, அந்த அளவினை நாம் நம் முதலீட்டிலும் அதிகரிக்கச் செய்யலாம்.

ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 தொகையை அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்தால் ரூ.1.50 கோடி கிடைக்கும்(12 சதவீத வருவாய் எதிர்பார்ப்பு). இதுவே ஆண்டுக்கொரு முறை 3 சதவீதம் என அதிகரித்து செய்தால், முடிவில் 1.80 கோடி ரூபாயாகும். இதனை நாம் 25 வருடங்களாக செய்யும் போது, 3.51 கோடி ரூபாயும், 30 வருடங்களாக இருந்தால் ரூ.6.65 கோடி வருவாயையும் ஏற்படுத்தலாம். குறிப்பாக இளம் வயதில் வேலைக்கு செல்வோர் அல்லது இளம் தொழில்முனைவோர் தங்களது  வருவாய் ஈட்டுதலின் துவக்கக் காலத்தில் இதனை பின்பற்றினால் ஓய்வுக்காலத்திற்கு தேவையான செல்வத்தை பெற்று விடலாம்.

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர்(பிப்ரவரி மாதம், 1994) அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பரஸ்பர நிதித்திட்டம்(Mutual Funds Scheme) கடந்த அக்டோபர் 2024 வரை ஆண்டுக்கு சராசரியாக 18.40 சதவீத வருவாயை அளித்துள்ளது. உதாரணமாக மாதாமாதம் ரூ.1500 ஐ மட்டுமே நாம் 30 வருடங்களுக்கு மேற்கொண்டிருந்தால், 15 சதவீத வருவாய் கிடைக்கும் பட்சத்தில், முடிவில் ரூ.1.05 கோடி கிடைத்திருக்கும். இதுவே மாதாமாதம் 15,000 ரூபாய் என்றால், 10.51 கோடி ரூபாய் ! இது தான் கூட்டு வட்டியின் பலன். கூட்டு வட்டியின் பலனை அனுபவிக்க நாம் காலத்தையும், ஆண்டுக்கொரு முறை முதலீட்டுத்தொகையையும் அதிகரிப்பதை மட்டும் செய்தால் போதுமானது.

Step Up SIP:

இது ஒரு டாப்-அப்(Top-up) முதலீட்டு அணுகுமுறை. நமது சம்பளம் ஆண்டுக்கொரு முறை எவ்வாறு உயர்ந்து வருகிறதோ, நாம் நுகரும் பொருட்களின் விலை எவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகரித்து வருகிறதோ அது போலத்தான் இதுவும். நாம் மேற்கொள்ளும் முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் முதலீட்டுத் தொகையை அதிகரித்து கொண்டு செல்வது தான் Step-Up SIP. 

உதாரணமாக மாதாமாதம் ரூ.1,000 ஐ சேமித்து வருகிறேன் என்றால், ஆண்டுக்கொரு முறை 5 சதவீதம் அல்லது 50 ரூபாய் உயர்த்தி, இரண்டாவது வருடத்திலிருந்து செய்வது. இது போல ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் தொகையை அதிகரிக்கச் செய்து முதலீட்டை மேற்கொள்வது தான் ஸ்டெப்-அப் திட்டம். இந்த திட்டங்கள் பெரும்பாலும் மியூச்சுவல் பண்டு எனப்படும் பரஸ்பர நிதிகளின் வாயிலாக கிடைக்கப்பெறுகிறது. நாம் பொதுவாக மேற்கொள்ளும் அஞ்சலக மற்றும் வங்கி சிறுசேமிப்புத் திட்டங்களில் இது போன்ற அணுகுமுறைத் திட்டங்கள் கிடைக்கப்பெறாது மற்றும் அரிது.

Conventiona SIP vs Step-up SIP

ஸ்டெப்-அப் அணுகுமுறையில் ஒவ்வொரு வருடத்தின் முடிவில் தான் தொகையை அதிகரிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒவ்வொரு மாதமும், காலாண்டுக்கொரு முறை, 6 மாதத்திற்கு ஒரு முறை என எப்படி வேண்டுமானாலும் எவ்வளவு தொகை அல்லது சதவீத அடிப்படையிலும் அதிகரித்து செய்யலாம். இது ஒரு தானியங்கி செயல்முறை(Automated Process) என்பதால், ஒரு முறை ஏற்படுத்தி விட்டால் போதும்; தொடர்ந்து கவனிக்க வேண்டிய அவசியமில்லை. அதே வேளையில் இது போன்ற முறைகளில் முதலீடு செய்யும் முன், சரியான மற்றும் நீண்ட காலத்திற்கு வருவாய் அளிக்கக்கூடிய சிறந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பதும் அவசியமாகும்.

இன்றைய 10 லட்ச ரூபாய் மதிப்பு, அடுத்த 20 வருடங்களுக்கு பிறகு 7 சதவீத பணவீக்கத்தில்(விலைவாசி உயர்வு) ரூ. 38.69 லட்சமாக இருக்கும். 20 வருடங்களுக்கு பிறகு கிடைக்கக்கூடிய ஒரு கோடி ரூபாயின் இன்றைய மதிப்பு ரூ.25.84 லட்சமே !

சிறு துளி பெருவெள்ளம் என்பது ஒரே அளவிலான துளி இறுதி வரை இருப்பதில்லை. அதன் வேகமெடுக்கும் திறனும், அதிகரிக்கும் அளவும் காரணத்தினால் தான் பெருவெள்ளமாகிறது. 

பாதுகாப்பானது என பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறாமல் சிரமப்படுவதை காட்டிலும், ரிஸ்க் தன்மை கொண்ட மற்றும் முதலீட்டை பரவலாக்கம்(Diversification) செய்யக்கூடிய திட்டங்களை புரிந்து கொண்டு முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம்; அதன் மூலம் நமது இலக்கையும் அடையலாம்.

எந்தவொரு இலக்கும் இல்லாமல் மாதாமாதம் ரூ.10,000 முதலீடு செய்கிறேன் என அடுத்த 20 வருடங்களுக்கு செய்தாலும், நாம் செய்யும் தவறு – ஆண்டுக்கு ஒரு முறை நமது வருவாய் விகிதம் கூடினாலும், நமது முதலீட்டினை அதிகரிக்காமல் இருப்பதே ! 

“ஒரு கோடிப்பே… நீ பாத்த… 

ஆமப்பே நா பாத்தேன் ஒரு கோடிப்பே !”

     

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ? (எக்ஸ்க்ளுசிவ் கட்டுரை)

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ? (எக்ஸ்க்ளுசிவ் கட்டுரை)

Asset Class returns Since 1994 in India – Investment Returns Year on Year (Exclusive article)

பொதுவாக பங்குச்சந்தை முதலீடு, சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. ஆம், பங்குச்சந்தையில் முதலீடு செய்கையில் அதிக ஏற்ற-இறக்கத்தை நாம் சந்தித்தாக வேண்டும். ஆனால், பங்குச்சந்தையை தவிர்த்து மற்ற முதலீடுகள் உண்மையில் அபாயமில்லையா(ரிஸ்க் தன்மை) ? இதனை நம்மில் ஒவ்வொருவரும் சிந்தனையாக மாற்றியிருந்தால், அதற்கான விழிப்புணர்வு(Awareness) நமக்கு கிடைத்திருக்கும்.

உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பங்கு இன்று தவிர்க்க முடியாத இடத்தில் இருந்து வருகிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலெல்லாம் ஏற்பட்ட நிதிச்சிக்கல்கள் நம் நாட்டிலும் ஒரு காலத்தில் இருந்துள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் நாம் பல பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் களைந்து, 1992ம் ஆண்டுக்குப் பிறகு அதனைக் கடந்து விட்டோம். உலகின் எந்தவொரு வளர்ந்த நாட்டின் பொருளாதாரத்திலும் தனிநபர் மற்றும் குடும்பத்தின் வருவாயில் அதிக ஏற்ற-தாழ்வு இருப்பதும், ஏழை-பணக்காரர்களுக்கான வருமான இடைவெளி அதிகமாக இருப்பதும் உண்மை தான். ஆனால் அதற்காக நாம் நிதி சார்ந்த கல்வியை கற்காமலும், விழிப்புணர்வை பெறுவதில் தயக்கம் காட்டுவதும் சரியா ?

இவ்வுலகில் ரிஸ்க் இல்லாமல் ஒரு நிகழ்வு இருக்கிறதா என்றால், அப்படியொன்றுமில்லை. சாலையை கடந்தாலும் அபாயம் தான், வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும் ரிஸ்க் தான். வங்கி டெபாசிட் பாதுகாப்பானது என நாம் எண்ணினால் மத்திய வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தை பற்றியும்(Interest rate Risk), வங்கிகளுக்கான DICGC சார்ந்த விதிகளையும் படிக்க வேண்டும். தங்கத்தின் மீதான முதலீடு ரிஸ்க் இல்லையென நினைத்தால், தங்கத்தின் சந்தை எங்கே இருந்து இயக்கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் அது எந்த நாணயத்தால்(Currency) வர்த்தகமாகிறது என்ற விழிப்புணர்வை பெற வேண்டும்.

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறைப் பற்றி நாம் பெரிதாக சொல்ல வேண்டியதில்லை. எல்லா குடும்பங்களுக்கும் ஒரு வீடு தேவை என்ற போதிலும், அவற்றை நாம் முதலீட்டுக் கோணத்தில் அணுகும் போது, அவற்றில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க் நமக்கு தெரிவதில்லை. வீட்டுமனைத் துறையில் நாம் முதலீடு செய்யும் முன் நீர்மை நிறை(Liquidity), வரி விதிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை(Transparency) பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அஞ்சலகங்கள், அரசு கடன் பத்திரங்கள், வருங்கால வைப்பு நிதி என காணுகையில், இது ஒரு நாட்டில் உள்ள அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தைப் பொறுத்துத் தான் அமையும். கிரீஸ், இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா, ஜப்பான், ரசியா, இன்னும் எண்ணற்ற நாடுகளில் வெவ்வேறு காலத்தில் நடந்த பொருளாதார மந்தம் நம் நாட்டில் இனி ஏற்படாது என நாம் எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். 

பொதுவாக ஒரு சாரார் பங்குச்சந்தை முதலீடு ஆபத்தானது, பணக்காரர்களுக்கானது, அது ஒரு சூதாட்டம் என மொத்தமாக ஒதுங்குவதும், மற்றொரு புறம் குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்கிறேன் பேர்வழியாக போன்சி(Ponzi Scam) மோசடித் திட்டங்களில் மொத்த பணத்தையும் இழந்து விட்டு நிற்பதும் அடிக்கடி நடந்து தான் வருகிறது. இது ஒரு புறமென்றால், இந்திய பண(Money Market) மற்றும் முதலீட்டுச் சந்தையில்(Capital Market) பெரிதாக வாய்ப்பொன்றுமில்லை என நினைத்துக் கொண்டு வெளிநாட்டுப் பங்குகளை வாங்குகிறேன், கிரிப்டோவில் விளையாடுகிறேன், ரம்மியில் கோடீஸ்வரராகுகிறேன், பங்குச்சந்தை மற்றும் போரெக்ஸ் சந்தையில் வர்த்தகம் மற்றும் இந்த செயலியில்(Mobile Apps) பணத்தை போட்டு விட்டு சும்மா இருந்தால் பணக்காரராகி விடலாம் என சிக்குகின்றனர்.

சந்தையில் முதலீடு செய்யாமல் இருப்பதும், சந்தையைத் தாண்டி வேறுமொரு புதிய முதலீட்டு வாய்ப்பு இருப்பதாக கருதி, தெரியாத, ‘கேக்குறான் மேக்குறான்’ திட்டத்தில் உழைத்த பணத்தை தொலைப்பது – இரண்டும் ஒன்று தான். மருத்துவத் துறையில் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராக, பொறியியல் துறையில் ஒரு சிறந்த என்ஜினீயராக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் உயர்நிலை அதிகாரியாக வருவதற்கு நாம் நமது பள்ளிக்காலத்திலிருந்தோ அல்லது கல்லூரியிலிருந்தோ அதற்கான விதையை நட்டிருக்க வேண்டும். அதனைத் தான் நாம் அனுபவம் பேசுகிறது என சொல்கிறோம். ஆனால், பங்குச்சந்தையிலோ ஒரு வாரம் பணம் பார்த்து விட்டால் போதும், மிகப் பெரிய வல்லுனராக நம்மை நாமே நினைத்துக் கொண்டு, சந்தையின் அடிப்டைக் கல்வியை கற்காமல், அதன் கோணத்தை அறியாமல் சூதாடி விட்டு, பின்பு பங்குச்சந்தை ஒரு சூதாட்டம் எனவும், இது பணக்காரர்கள் மட்டுமே சம்பாதிக்கக் கூடிய இடமென்றும், மேலும் இது நமக்கு சரிப்பட்டு வராது என நாம் புறந்தள்ளுகிறோம்.

டாட்டாவும், பிர்லாவும்:

பங்குச்சந்தையில் அவ்வளவு எளிதாக சம்பாதித்து பணக்காரராக விட முடியுமென்றால், ஏன் டாட்டா-பிர்லாவும், அம்பானி-அதானியும் பல துறைகளில் தொழில் புரிய வேண்டும். அவர்களிடம் இருக்கும் மூலதனத்தை கொண்டே நித்தமும் ஆயிரம் கோடிகளை பங்குச்சந்தை வர்த்தகத்தில் லாபமாக ஈட்டலாமே ! உண்மையில் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களையும், வழங்கும் சேவைகளையும் நாம் பயன்படுவதால் மட்டுமே அவர்கள் தங்களது தொழிலில் பணக்காரர்களாக உள்ளனர். இதனைத் தான் நாமும் செய்ய வேண்டும் – ஒரு நிறுவனத்தின் அல்லது தொழிலின் உரிமையாளர் மற்றும் முதலீட்டாளரை போல !

கடந்த கால வருவாய் விகிதங்கள்:

சரி, இந்தியப் பங்குச்சந்தை முதலீடு கடந்த 30 ஆண்டுகளில் அப்படி என்ன செய்து விட்டது. மும்பையின் தலால் தெருவை அடையாளமாக கொண்ட மும்பை பங்குச்சந்தை என்னவோ 1875ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த தேசிய பங்குச்சந்தையும் 1992ம் ஆண்டு வாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று 5000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக, அதாவது 1994ம் ஆண்டு முதல் நாம் ஒவ்வொரு வருடமும் முதலீடு செய்து வந்திருந்தால், நடப்பாண்டின் செப்டம்பர் மாத முடிவில் சென்செக்ஸ் குறியீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 14.30 சதவீதமும், நிப்டி-500 குறியீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 15.70 சதவீதமும் ஒரு முதலீட்டாளருக்கு வருவாயாக கிடைத்திருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் ஆண்டுக்கு சுமார் 50,000 ரூபாய் என்ற அளவில் கடந்த 30 ஆண்டுகளாக முதலீடு செய்து வந்திருந்தால்(மொத்தம் 15 லட்சம் ரூபாய்), சென்செக்ஸ் குறியீட்டின் மூலம் இன்று உங்களது ஒட்டுமொத்த முதலீட்டு வருவாய் 2.41 கோடி ரூபாயாகவும், நிப்டி-500 குறியீட்டின் மூலம் அது 2.79 கோடி ரூபாயாகவும் வளர்ந்து நிற்கும். இங்கே அரசியல் சார்ந்த ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறலாம். ஆனால் சந்தையில் நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, முதலீடு செய்த பின் பொறுமையே உங்களது வருவாயை மிகப்பெரிய அளவில் மாற்றும்.

1994ம் ஆண்டு முடிவில் நாட்டின் பணவீக்கம் 9.50 சதவீதமாக இருந்த நிலையில், அந்த வருடத்தின் முடிவில் பொது வருங்கால வைப்பு நிதி அளித்துள்ள வருவாய் சுமார் 12 சதவீதமாகும். இது போன்ற ஒரு வருவாய் இன்று இருந்திருந்தால், நீங்கள் பங்குச்சந்தைக்கு வர வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய அளவில் பங்குச்சந்தையில் ஆண்டுக்கு சராசரியாக 12 – 15% வருவாய் என  நீண்டகாலத்தில் கிடைத்தால், அவர் தான் சந்தையில் சாதனையாளர். சொல்லப்பட்ட 1994ம் வருடம் வங்கியில் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 10 சதவீதமாகவும், சென்செக்ஸ் குறியீடு 19.60 சதவீத வருவாயையும் வழங்கியுள்ளது. அதே வேளையில் தங்கத்தின் தங்கம் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வருவாயையே அந்த வருடத்தில் கொடுத்துள்ளது.

தங்கத்தின் முதலீட்டு வருவாய்:

கடந்த 30 வருடங்களில் தங்கத்தின் மீதான முதலீட்டு வருவாய் ஆறு வருடங்கள், 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்துள்ளது. இதன் மோசமான காலமாக 1997ம் ஆண்டில் தங்கம் (-20.60) சதவீதமும், 2014, 2015ம் ஆண்டு முறையே (-10.80) சதவீதம் மற்றும் (-5.50) சதவீதம் என்ற அளவில் இறக்கத்தை கண்டுள்ளது. அதாவது 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், ஈட்டிய வருவாய் வெறும் 1.84 சதவீதமே. அதாவது சொல்லப்பட்ட வருடத்தில் நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) சராசரியாக 6.27 சதவீதமாகும். 

 தங்கத்தின் பொற்காலமாக 2005ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை(17.70%, 20.40%, 12.90%, 25.30%, 32.80%, 19.50%, 36.90%) இருந்துள்ளது. குறிப்பாக 2007-08ம் ஆண்டு ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார நெருக்கடியில் மற்றும் அதனை ஒட்டியுள்ள காலத்தில் தங்கத்தின் மீதான வருவாய் உயர்ந்து வந்துள்ளது. 2011ம் ஆண்டு மட்டும் தங்கத்தின் மீதான முதலீடு 36.90 சதவீத வருவாயை கொடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 30 ஆண்டுகளில் தங்கத்தின் மீதான வருவாய் சராசரியாக 11.10 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது.

பங்குச்சந்தையில் முதலீடு:

இந்தியப் பங்குச்சந்தையை பொறுத்தவரை சென்செக்ஸ் குறியீடு கடந்த 30 வருடங்களில் 12 வருடங்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமான வருவாயை அளித்துள்ளது. அதிகபட்ச வருவாயாக 2009ம் ஆண்டில் 82 சதவீதத்தை வழங்கியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டான 2008ல் வரலாற்றில் மோசமான வீழ்ச்சியை சந்தித்த தருணம், சுமார் (-51.40) சதவீத வீழ்ச்சி. 30 வருடங்களில் 8 முறை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது போல, நிப்டி-500 குறியீட்டை எடுத்துக் கொண்டால் அதுவும் 8 ஆண்டுகள் இறக்கத்தை சந்தித்துள்ளது. இந்த குறியீடு 1998ம் ஆண்டின் முடிவில் 97.20 சதவீதம் மற்றும் 2009ம் ஆண்டில் 92.90 சதவீத வருவாயை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிப்டி-500 குறியீடு ஒன்பது ஆண்டுகள் 30 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றத்தை பெற்றுள்ளது. 

வெள்ளியில் வாய்ப்பு:

வெள்ளியில் முதலீட்டை மேற்கொள்ளும் போது, பெரும்பாலும் தங்கத்திற்கு எதிர்மாறாகத் தான் இருந்துள்ளது. வெள்ளியின் பயன்பாடு தொழிற்துறையில் காணப்படுவதால், பங்குச்சந்தையை போலவே அதிகமான வருவாயை வெள்ளி முதலீடு வழங்கியுள்ளது. இருப்பினும் முப்பது வருடங்களில் சராசரியாக ஆண்டுக்கு 9.70 சதவீத அளவில் உள்ளது. 

வெள்ளி அதிகபட்ச வருவாயாக 2009ம் ஆண்டில் 63.50 சதவீதமும் மற்றும் 2010ம் ஆண்டில் 59.90 சதவீதமும் தந்துள்ளது. மோசமான வீழ்ச்சியாக 2013ம் ஆண்டில் (-26.60) சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 30 வருடங்களில் ஆறு முறை வெள்ளி முதலீட்டின் மீதான வருவாய் 20 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது. பொதுவாக நம்மில் பலர் தங்கத்தின் மீது கொண்டுள்ள காதலை, வெள்ளிக்கு கொடுக்க மறுக்கின்றனர், அது ஏனோ ! தங்கத்தினை காட்டிலும், வெள்ளியின் பயன்பாடு தொழிற்துறைக்கு தேவை. குறிப்பாக எலக்ட்ரிக் வாகன பேட்டரி தயாரிப்பு, சோலார் பேனல், மருத்துவம், மின்னணுப் பொருட்கள், ரசாயனம், நிழற் படக்கலை(Photography), நீர் சுத்திகரிப்பு, அச்சிடுதல் என பல துறைகளுக்கு வெள்ளியின் தேவை உள்ளது. வெள்ளியை அப்படியே வாங்காவிட்டாலும், முதலீட்டு நோக்கத்தில் சில்வர் இ.டி.எப்.(Silver ETF) அல்லது சில்வர் மியூச்சுவல் பண்டுகள்(Silver Funds) முறையில் வாங்கலாம்.

Asset class returns in India - 30 Yrs Data Since 1994

உங்களின் நிரந்தர பகைவன்:

நாட்டின் பணவீக்கத்தை பொறுத்தவரை 1998 மற்றும் 2009ம் ஆண்டுகளில் 15 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து காணப்படுகிறது. குறைந்தபட்ச விலைவாசியாக கடந்த 1999ம் ஆண்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்த வருடத்தில் தான் சென்செக்ஸ் மற்றும் நிப்டி-500 குறியீடுகள் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் பணவீக்க விகிதம் ஆறு சதவீதத்திற்கும் குறைவாக காணப்பட்டாலும், உணவுப்பொருட்களின் விலை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வந்துள்ளது. கடந்த 30 வருடங்களில் நாட்டின் பணவீக்க விகிதம் சராசரியாக 6 முதல் 7 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது.

ரியல் எஸ்டேட் முதலீட்டு வருவாய்:

ரியல் எஸ்டேட் என சொல்லப்படும் வீட்டுமனைத் துறையில் முதலீடு, கடந்த 20 வருடங்களில் சராசரியாக ஆண்டுக்கு 8.40 சதவீத வளர்ச்சியை அளித்துள்ளது. வீட்டுமனைத் துறைக்கான முதலீட்டு வருவாய் தரவுகள் பெரும்பாலும் மெட்ரோ நகரங்களை கொண்டு கணக்கிடப்பட்டவை. கொல்கத்தா போன்ற நகரங்களில் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை சராசரியாக ஆண்டுக்கு 3 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வருவாய் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. ரியல் எஸ்டேட் துறைக்கு மோசமான காலக்கட்டங்களாக 2008ம் ஆண்டும், 2020ம் ஆண்டும் இருந்துள்ளது. 

ரியல் எஸ்டேட் துறையில் பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் நிலம், வீடு வாங்கலாம் என்ற போதிலும் ஒரு முதலீட்டுச் சாதனமாக அணுகும் போது, அத்துறையில் ஒழுங்குமுறை மற்றும் கொள்கைகள், விலை நிர்ணயம், தொழில்நுட்பங்களை புகுத்துதல் ஆகியவை குறைகளாகவும், அவற்றை நிர்வகிப்பது சவால்களாகவும் இருந்து வந்தது (கணக்கில் காட்டப்படாத பணமும், வரி ஏய்ப்பும் அப்புறம்). இதன் காரணமாகவே பெரிய முதலீட்டாளர்களும், பெரு நிறுவனங்களும் REIT மூலம் முதலீட்டை மேற்கொள்ளத் துவங்கியுள்ளன. இன்னும் ரெய்ட் பற்றிய விழிப்புணர்வு பெரிதாக பரப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில்லறை முதலீட்டாளர்களுக்கு(Retail Investors) கட்டிடத்துடன் கூடிய முதலீட்டை காட்டிலும் பெரும்பாலும் மனை(நிலம்) தான் பல மடங்கு வருவாயை நீண்டகாலத்தில் தந்துள்ளது. வீட்டு வாடகை மூலம் கிடைக்கப்பெறுகிற வருவாய், வங்கி வட்டி விகிதத்தை காட்டிலும் குறைவாக காணப்படுவதாக துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகினறனர். இதன் காரணமாகத் தான் வீட்டு கட்டிடம் தேய்மானமாகவும், நிலம் வருவாய் அளிக்கும் வாய்ப்பாகவும் சொத்து மதிப்பீட்டு அளவில் பார்க்கப்படுகிறது(வணிகக் கட்டிடங்களுக்கு இது விதிவிலக்கு).

வங்கியில் உங்கள் பணம்:

வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதம், கடந்த 30 வருடங்களில் ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டுள்ளது. 1994ம் ஆண்டில் 10 சதவீதமாக இருந்த நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக 1996ம் ஆண்டு, இது 12 சதவீதமாக இருந்துள்ளது. அப்போதைய நாட்டின் பணவீக்கமும் 9.50 சதவீதத்திலிருந்து 10.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. பின்னர் 2004ம் ஆண்டு வாக்கில் வங்கி டெபாசிட் வட்டி விகிதம் 5.40 சதவீதமாக இருந்துள்ளது(பணவீக்கம் 3.80%). 2009ம் ஆண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 15 சதவீதமாக உயர்ந்த நிலையில், அப்போதைய வட்டி விகிதம் 9.30 சதவீதம். பின்னர் 2012ம் ஆண்டு வாக்கில் 8.80 சதவீதமாக வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் இருந்த நிலையில், அப்போதைய பணவீக்க விகிதம் 11.20%.

நடப்பில் வங்கிகளில் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் 7.5 சதவீதத்திற்கும் குறைவே. அதே போன்று நாட்டின் பணவீக்கமும் தற்போது 6 சதவீதத்திற்குள் இருந்து வருகிறது. பொதுவாக அரசின் கடன் வாங்கும் கொள்கைகள் மற்றும் விலைவாசியை கருத்தில் கொண்டு வங்கி வட்டி விகிதங்கள் மாறுபடும். கடந்த சில வருடங்களாக அன்னிய முதலீடு அதிகரித்து வரும் நிலையில், வங்கி கொள்கைகள் மூலம் அரசின் கடன் வாங்கும் தன்மையும் குறைந்து வருகிறது. ஜப்பானும், அமெரிக்காவும் ஒரு சதவீதத்திற்கும், இரண்டு சதவீத வருவாய்க்கும் இந்தியாவில் முதலீடு செய்ய காத்திருக்கும் போது, அரசு ஏன் மக்களிடம் வங்கி மூலம் அதிக வட்டிக்கு கடன் வாங்கப் போகிறது ?

ஓய்வுக்கால வைப்பு நிதித்திட்டம்:

பொது வருங்கால வைப்பு நிதியை(Public Provident Fund – PPF) பொறுத்தவரை, கடந்த 1994ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை நிலையாக 12 சதவீத வட்டி வருவாய் கிடைத்த நிலையில் 2003ம் ஆண்டுக்கு பிறகு 8 சதவீதத்திற்கு கீழ் சரிந்தது. நடப்பில் 7.5 சதவீதத்திற்கும் குறைவாகவே வருங்கால வைப்பு நிதி மூலம் கிடைக்கப்பெறுகிறது. எனினும் இது போன்ற திட்டங்கள், பெரும்பாலும் ஓய்வூதியக் காலத்திற்கு தேவையான தொகையாகவே இருக்கும். அப்படியிருக்கும் பி.எப். திட்டத்தை போல என்.பி.எஸ்.(NPS), ஓய்வுக்கால மியூச்சுவல் பண்டு(Retirement Funds) திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வரிச் சேமிப்பு மட்டுமில்லாமல் ஓய்வுக்காலத்திற்கு தேவையான கார்பஸ் தொகையையும் சற்று அதிகரிக்கச் செய்யலாம். இதன் மூலம் விலைவாசிக்கு ஏற்றாற் போல ஓய்வூதியமும் கிடைக்கும்.

மேலே சொன்ன பல்வகையான முதலீட்டுச் சாதனங்களை காணும் போது, பங்குச்சந்தை முதலீட்டின் மூலமான வருவாய் முதலிடத்தையும், அதற்கடுத்தாற் போல் இரண்டாமிடத்தில் தங்கமும் உள்ளது கவனிக்கத்தக்கது. வெள்ளி மற்றும் ரியல் எஸ்டேட் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. 1994ம் ஆண்டு முதல் வருடந்தோறும் 50,000 ரூபாயை இன்று வரை முதலீடாக மேற்கொண்டிருந்தால், உங்களுக்கு பங்கு முதலீட்டின் மூலம் 15 மடங்குகளிலும், தங்கத்தின் மூலம் 8 மடங்குகளிலும், வெள்ளியின் மூலம் 6 மடங்குகளிலும் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் 4.5 மடங்குகளிலும் வருவாய் கிடைத்திருக்கும். 

நீங்கள் செய்யவில்லையென்றால், வேறொருவர்…

என்ன தான் நாம் நம் பணத்தை ஆயுள் காப்பீட்டிலும்(Insurance), வங்கி டெபாசிட்டிலும் பாதுகாப்புக் கருதி செய்தாலும், மீண்டும் அந்த பணம் அதிக வருமானமீட்டும் பங்குகளைத் தான் தேடிச் செல்லும். ஆனால் நமக்குக் கிடைப்பதோ பாதுகாப்பான(நம்பிக்கையில் மட்டுமே) சொற்ப வருமானமே.  இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. பற்றி சொல்லலாம். இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் 52 லட்சம் கோடி ரூபாய். எல்.ஐ.சி. நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாத பெரு மற்றும் நடுத்தர நிறுவனங்களே இல்லை என சொல்லலாம். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையில் ஒரு குறிப்பிட்டத் தொகை பங்குச்சந்தைக்கு, ஈட்டும் அபரிதமான லாபமோ இந்நிறுவனத்திற்கு. முடிவில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான காப்பீடும் சிறு போனஸ் தொகையும். 

உங்களால் பங்குச்சந்தையை பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், கற்றுக் கொள்ள முயற்சிக்கலாம். இல்லையெனில் தகுந்த ஆலோசகரின் முன்னிலையில் அல்லது பரஸ்பர நிதிகளின்(Mutual Funds) மூலம் சந்தை அபாயத்தையும், உங்களது பயத்தையும் குறைக்கலாம். ஆனால் ரிஸ்க் என்பதை நாம் முழுவதும் தவிர்க்க முடியாது. இன்று பங்குச்சந்தை ரிஸ்க்கை பரவலாக்க மற்றும் நல்ல வருவாய் ஈட்ட இண்டெக்ஸ் பண்டுகளும்(Index Funds) உள்ளன. வெறுமென பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொண்டு குறைந்த வட்டி வருவாய், பணவீக்க விகிதம், இலக்கிற்கான தொகையை அடைய முடியாமல் போவதற்கு சற்று ரிஸ்க் எடுத்துத் தான் பார்க்கலாமே(அறிவார்ந்த – Calculated Risk) ! 

“எண்ணற்ற வழியில் எனக்கு வருவாய் வந்து கொண்டிருக்கிறது, நேர்மையாக அரசுக்கு வரி செலுத்தி அதற்கான வரித்தாக்கலும் செய்து வருகிறேன், தலைமுறை கடந்த சொத்துக்களும் எனக்கு இருக்கிறதென்றால்” நீங்கள் பணவீக்கத்தையும், பங்குச்சந்தை வருவாயைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. மாறாக பங்குச்சந்தையில் உங்களது நிறுவனத்தை பட்டியலிட முனையலாம். “ மாதந்தோறும் போதுமான ஓய்வூதியத் தொகையை பெற்று நிம்மதியாக உள்ளேன். யாருக்காகவும் நான் சேமிக்க வேண்டிய அவசியமில்லை, என்னை நம்பி யாரும் நிதி சார்ந்து இல்லை ” என்றால் நீங்கள் மேலே சொன்ன முதலீட்டு வருவாயைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை(பணவீக்கத்தை கவனத்தில் கொள்க).

“ நீங்கள் கற்றுக் கொள்ளா விட்டால், விழிப்புணர்வை பெறா விட்டால் உங்கள் பணத்தைக் கொண்டு மற்றொருவர் தனது அறிவின் மூலம் பத்தும் செய்வார் “. – பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதன் விதி இது தான் !

தரவுப்பட பகிர்வுக்கு நன்றி(Data Table Courtesy): செல்வி. வித்யாஸ்ரீ – வாடிக்கையாளர் சேவை மேலாளர், (ஆதித்யா பிர்லா சன்லைப் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம்(ABSL AMC))

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள் என்னென்ன ?

Regulatory authorities in India

‘தாலாட்டு கேட்குதம்மா’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் பிரபுவும், கவுண்டமணியும் இரவு நேரத்தில் ஒரே சைக்கிளில்(டபுள்ஸ் தான்!) வந்து கொண்டிருப்பார்கள். அப்போது எதிரே வரும் போலீஸ்காரரை கண்ட பிரபு, கவுண்டமணி அவர்களை சைக்கிளிலிருந்து இறங்கச் சொல்வார். பின்பு வரும் போலீஸ்காரர் அந்த சைக்கிளை நிறுத்தி, ‘என்னய்யா சைக்கிள்ல லைட் இல்லாம வர்ற’ என கேட்க அதற்கு பிரபு சிரித்துக் கொண்டே, ‘நானாவது சைக்கிள்ல லைட் இல்லாம வரேன், பின்னாடி ஒருத்தரு சைக்கிளே இல்லாம வர்றாரு’ என காமெடியாக சொல்வார். இதனை நம்பி, அந்த போலீஸ்காரரும் பின்னாடி வரும் கவுண்டமணியை விசாரிப்பது போல நகைச்சுவை உரையாடல் நிகழும்.

இப்படித்தான் நம்ம ஊரில் பெரும்பாலான போன்சி – ஏமாற்று பேர்வழிகளின் மோசடித் திட்டங்களில்(Ponzi Scam) மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை, இருக்கும் சொத்துக்களை விற்றுப் போட்டு விட்டு, மாதாமாதம் பணம் வரும் என பேராசையில் இருந்து விடுகின்றனர். மோசடி பேர்வழிகளும் ஆயிரம் கோடிகளில் பணத்தை சுருட்டி விட்டு, ஊரை விட்டு ஓடுகையில் நம் மக்கள் இது சார்ந்த புகாருக்கு அணுகும் முதல் நிலை, ‘காவல் நிலையம்’ தான். இது போன்ற மோசடித் திட்டங்களை முன்னரே அறிந்து, எச்சரிக்கையாக இருக்கும் சிலரும் இது சார்ந்த புகாரை எங்கு சொல்ல வேண்டுமென்ற விவரங்களை தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். 

தகவல் தொழில்நுட்ப புரட்சியில் இன்று, ஒவ்வொரு துறைக்கும் வாடிக்கையாளர் சேவை மற்றும் புகார்களுக்கு தானியங்கி மூலம் வந்து விட்டது. இருப்பினும் இவர்களை கட்டுப்படுத்த, வரையறுக்க யாரவது ஒருவர் வேண்டுமல்லவா, அவர் தான் ஒழுங்குமுறை ஆணையம் எனும் பாதுகாப்பு வளையம்.

ஒழுங்குமுறை ஆணையம் என்றால் என்ன ?

பொதுவாக, ஒழுங்குமுறை என்பது விதிகள் மற்றும் போக்குகளின் தொகுப்பின் படி, ஒரு சிக்கலான அமைப்புகளின் மேலாண்மை ஆகும். உதாரணமாக பள்ளிகளில் நாம் காணும் ஆசிரியர்-மாணவர்களுக்கான ஒழுங்குமுறையை பள்ளி நிர்வாகம் அல்லது கல்வி அமைச்சகம் நிர்ணயிக்கும். அதனால் தான் நாம் பள்ளிகளில் கல்வியுடன் அடிப்படை ஒழுக்கத்தையும் கற்கிறோம். 

ஒழுங்குமுறை என்பது சமூக, அரசியல், உளவியல் மற்றும் பொருளாதாரக் களங்களில் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். இவை அரசாங்கத்தால் அல்லது சில சட்டக் கட்டுப்பாடுகள், இல்லையெனில் ஒரு குறிப்பிட்ட அமைப்பால் நிர்வகிக்கப்படலாம். உதாரணமாக டிராபிக் சிக்னல்களில், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்ட வரையறை, அடிப்படை உரிமைகள், உரிமை மீறல்களை கட்டுப்படுத்தவதற்கான சட்டங்கள்.

ஒரு ஒழுங்குமுறை ஆணையம் என்பது ஒரு அமைப்பாகவோ, நிறுவனமாகவோ இருக்கலாம். இந்த ஆணையம் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது நிலை சார்ந்த உரிமம் மற்றும் ஒழுங்குபடுத்தும் திறனில் மனித செயல்பாட்டின் சில பகுதிகளின் மீது தன்னாட்சி ஆதிக்கத்தை செலுத்துவதே ஆகும். இதன் மூலம் அந்த ஆணையத்திற்கு சிறப்பு அதிகாரமும் வழங்கப்பட்டிருக்கும். இந்த அதிகாரத்தை ஒரு நாட்டின் அரசாங்கமோ அல்லது அந்நாட்டின் விதிகளின் படி அதிகாரம் பெற்ற தனிநபரோ வழங்கியிருக்கலாம். உதாரணமாக சந்தைகளில் நுகர்வோரை பாதுகாக்க சட்டம் , தொலைத்தொடர்பு துறையை ஒழுங்குமுறைப்படுத்த டிராய்(TRAI) என சொல்லலாம்.

இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறை ஆணையங்கள்:    

இந்தியாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்கள் தற்போது உள்ளன. இவற்றில் முக்கியமாக கவனத்தில் உள்ளவை RBI, SEBI, IRDAI, PFRDA போன்றவை. இது போக சிலவற்றையும் நாம் இங்கு பார்ப்போம்.

  • RBI(Reserve Bank of India):

கடந்த 1935ம் வருடம் துவங்கப்பட்ட பாரத ரிசர்வ் வங்கி, 1949ம் ஆண்டு வாக்கில் தேசியமயமாக்கப்பட்டு நாட்டின் வங்கி, நிதி மற்றும் பணவியல் சார்ந்த கொள்கைகளை நிர்வகித்து வருகிறது. இந்தியாவில் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாகவும், இந்தியாவின் மத்திய வங்கியாகவும் ரிசர்வ் வங்கி உள்ளது. 

இந்திய வங்கி அமைப்பை ஒழுங்குபடுத்துதல், ரூபாயின் கட்டுப்பாடு, வெளியீடு மற்றும் விநியோகத்தை பராமரிப்பது ரிசர்வ் வங்கியின் பொறுப்பாகும். நாட்டின் முக்கிய ரூபாய் கட்டண முறைகளையும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான வேலையையும் இந்த மத்திய வங்கி ஏற்படுத்தி கொடுப்பது இதன் கடமையாகும்.

ஜனவரி 2024 தரவின் படி, ரிசர்வ் வங்கியின் கையிருப்பு மட்டும் 623 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

  • SEBI(Securities and Exchange Board of India):

கடந்த 1988ம் ஆண்டு வாக்கில் ஏற்படுத்தப்பட்ட செபி(SEBI) எனும் ஒழுங்குமுறை ஆணையம் நாட்டில் உள்ள பங்குச்சந்தை மற்றும் பொருட்சந்தையை(Securities & Commodity Market) கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக முதலீட்டாளர் நலன் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், சந்தையை ஒழுங்குபடுத்துதல் ஆகிய வேலையை செய்கிறது.

பங்குச்சந்தையில் ஈடுபடும் தரகு நிறுவனங்களையும், அதன் தரகர்களையும் முறையாக பதிவு மற்றும் ஆய்வு செய்தல், சந்தையில் ஏற்படும் முறைகேடுகளை அகற்றுதல் ஆகிய முதலீட்டாளர் நலன் சார்ந்த பொறுப்பை செபி கொண்டுள்ளது.

இந்திய நிதிச்சந்தையில் சுமார் 20 உட்துறைகளை கொண்டு செபி தனது ஒழுங்குமுறை வேலைகளை செய்து வருகிறது. பாரத ரிசர்வ் வங்கி போலவே, செபியும் நாட்டின் முக்கிய ஒழுங்குமுறை ஆணையமாக காணப்படுகிறது.

  • IRDAI (Insurance Regulatory and Development Authority of India)

கடந்த 1999ம் உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.டி.ஏ. ஒழுங்குமுறை ஆணையம் இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. நாட்டில் காப்பீடு சார்ந்த தொழில்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் அதனை ஒழுங்குபடுத்துதல் இதன் வேலையாகும். 

இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், ஐந்து முழு நேர மற்றும் நான்கு பகுதி நேர உறுப்பினர்கள் உட்பட 10 உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக ஐ.ஆர்.டி.ஏ. ஆணையம் உள்ளது. இந்தியாவில் கடந்த 1818ம் ஆண்டு முதல் காப்பீடு சார்ந்த தொழில்கள் இருந்து வந்தாலும், இந்த ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகே பல்வேறு காப்பீட்டு கொள்கைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டன.

பாலிசிதாரரின் நலனை பாதுகாத்தல், மின்னணு வடிவத்தில் பாலிசிதாரர் காப்பீட்டை பெற உதவும் பொறுப்பையும் ஐ.ஆர்.டி.ஏ கொண்டுள்ளது.

  • PFRDA (Pension Fund Regulatory and Development Authority)

கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் துவங்கப்பட்ட இந்த ஒழுங்குமுறை ஆணையம் இந்தியாவில் ஓய்வூதியங்களின் ஒட்டுமொத்த மேற்பார்வை மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றை பொறுப்பாக கொண்டுள்ளது. நாட்டின் முதியோர் சமூக மற்றும் வருமான பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை ஆய்வு செய்வதும் இதன் வேலையாகும். 

இன்று நாட்டில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிலையான பென்ஷன் இல்லை(பழைய ஓய்வூதிய திட்டம் தவிர்த்து). இந்நிலையில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், அனைத்து இந்திய குடிமகன்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆகிய அனைவரும் தங்களது ஓய்வூதிய பலனை பெற, தேசிய பென்ஷன் திட்டம்(NPS – National Pension System) ஏற்படுத்தப்பட்டு, பி.எப்.ஆர்.டி.ஏ ஒழுங்குமுறை ஆணையத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

  • EPFO (Employees’ Provident Fund Organisation):

கடந்த 1952ம் ஆண்டு துவக்கப்பட்ட இ.பி.எப்.ஓ. ஒழுங்குமுறை ஆணையம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் அதன் சார்ந்த ஓய்வூதிய திட்டங்களை பொறுப்பாக கொண்டு நிர்வகித்து வருகிறது.

இந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் தாய் அமைப்பாக மத்திய அறங்காவலர் குழு(Central Board of Trustees) உள்ளது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்டம் 1952 சட்டம், ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம், 1976 மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம், 1995 (ஊழியர்களின் குடும்ப ஓய்வூதியத் திட்டம், 1971க்குப் பதிலாக) ஆகிய சட்டங்களை கருத்தில் கொண்டு இந்த ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது.

கட்டாய வருங்கால வைப்பு நிதி(Mandatory of Provident Fund), அடிப்படை ஓய்வூதிய திட்டங்கள், ஊனமுற்றோர் மற்றும் இறப்பு காப்பீடு, அத்துடன் பல்வேறு சர்வதேச அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் சமூக பாதுகாப்பு ஒப்பந்தங்களை எளிதாக்குதல் ஆகிய வேலைகளை இ.பி.எப்.ஓ. ஆணையம் செய்து வருகிறது.

மேலே சொன்ன முக்கிய ஒழுங்குமுறை ஆணையங்கள் போக, பின்வரும் சில ஒழுங்குமுறை அமைப்புகளும் இந்தியாவில் பங்காற்றி வருகின்றன.

  • FSSAI (Food Safety and Standards Authority of India)
  • NASSCOM (National Association of Software and Service Companies)
  • TRAI (Telecom Regulatory Authority of India)
  • CERC (Central Electricity Regulatory Commission)
  • CDSCO (Central Drugs Standard Control Organisation)
  • FIEO (Federation of Indian Export Organisation)
  • AMFI (Association of Mutual Funds in India)
  • BIS (Bureau of Indian Standards)
  • BCCI (Board of Control for Cricket in India)
  • ASCI (Advertising Standards Council of India)
  • NHB (National Housing Bank)
  • CBFC (Central Board of Film Certification)
  • NABARD (National Bank for Agriculture and Rural Development)
  • ICC (Indian Chemical Council)
  • AERB (Atomic Energy Regulatory Board)
  • NHAI (National Highways Authority of India)
  • ICAI (The Institute of Chartered Accountants of India)

மற்றும் இன்னும் சில…

நாட்டில் ஏற்படும் முதலீடு சார்ந்த மோசடித் திட்டங்களை அரசாங்கத்தால் தடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது போன்ற மோசடிகள் பெரும்பாலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில்(Tier-II and Tier-III Cities) தான் நடைபெறுகிறது. மக்களின் குறுகிய காலத்தில் அதிக வருவாய் ஈட்ட முனைதல் மற்றும் பேராசையே இது போன்ற மோசடிகள் அடிக்கடி நடைபெறுவதற்கான காரணம். இருப்பினும், முதலீடு சார்ந்த விழிப்புணர்வு கிடைக்கும் நிலையில் இது போன்ற நிகழ்வுகளை நாம் தவிர்க்கலாம்.

எந்தவொரு முதலீட்டுத் திட்டத்திலும் நம் பணத்தை போடும் முன், இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது என அந்த நிறுவனமே சொன்னாலும், இந்த நிறுவனம் மற்றும் திட்டங்கள் எந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வருகிறது என்பதனை தெரிந்து வைத்திருத்தல் அவசியம். ஏனெனில், பெரும்பாலான மோசடி நிறுவனங்கள், ‘நாங்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம்’ என பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு மக்களை ஏமாற்றி விடுவார்கள். 

இன்று நாட்டில் உள்ள எந்தவொரு தொழிலும், முதலீட்டுத் திட்டங்களும் ஏதாவதொரு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வந்து தான் ஆக வேண்டும். எனவே, இதனை கருத்தில் கொண்டு நாம் எச்சரிக்கையாகவும், அதன் சார்ந்த புகார்களை தெரிவிக்கவும் முனையலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை,

www.varthagamadurai.com

   

       

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

Can Govt. Employees participate in the Stock(Share) Market ? (CCS Rules, 1964)

இந்தியாவில் அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் டீமேட் கணக்கு துவங்கி, பங்குகளில் வர்த்தகம் அல்லது முதலீடு செய்யலாமா என்பது பெரும்பாலான அரசு ஊழியர்களின் கேள்வி. நமது வாசகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிலர் இது சார்ந்த சந்தேகத்தை கேட்டிருந்தனர். இது சார்ந்த விதிகளை பற்றி மத்திய சிவில் சேவைகள் (நடத்தை), 1964 – Central Civil Services(Conduct) Rules, 1964 ஆவணத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சிவில் சேவைகள்(நடத்தை), 1964 ஆவணத்தில் வரிசை எண்.21, விதி எண்.16ன் கீழ், முதலீடு, கடன் கொடுத்தல் மற்றும் கடன் வாங்குதல் பகுதியில் 35(1) மூலம் அரசு ஊழியர்கள் முதலீடு சார்ந்த விஷயங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி கூறப்பட்டுள்ளது.

“ 35(1) எந்தவொரு பங்கு, பங்கு சார்ந்த அல்லது மற்ற முதலீட்டில் எந்த ஒரு அரசு ஊழியரும் ஊகம்(Speculative) சார்ந்த வணிகத்தில் ஈடுபடக் கூடாது. இந்த துணை விதியில் உள்ள பங்கு மூலம் அவ்வப்போது செய்யப்படும் முதலீடுகளுக்கு இது பொருந்தாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில் எந்தவொரு அரசு ஊழியரும் பங்குகளிலோ அல்லது மற்ற முதலீடுகளிலோ ஊகம் சார்ந்த, அதாவது நாள் வர்த்தகம், ஊக வணிகம்(Speculative Trading & Derivatives) போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக் கூடாது எனவும், அதே வேளையில் சொல்லப்பட்ட முதலீட்டு திட்டங்களில் அவ்வப்போது முதலீடாக செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தரகர்(Stock Broker) அல்லது உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டும் தான் அவர்களது முதலீட்டை மேற்கொள்ள வேண்டுமென்றும் சொல்லப்பட்டுள்ளது.

இங்கே ஊகம் என்பது அடிக்கடி பங்குகள் அல்லது மற்ற முதலீடுகளை வாங்கி அடிக்கடி விற்பது என்பதாக கருதப்படுகிறது. 

“40(2) (i) எந்தவொரு அரசு ஊழியரும் அவருடைய குடும்பத்தில் உள்ள எந்தவொரு நபரையும் அவர் சார்பாகவோ அல்லது குடும்பத்தின் நலன் சார்பாகவோ ஊக வர்த்தகத்தில் ஈடுபட வைக்கக் கூடாது மற்றும் அனுமதிக்க கூடாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில், அரசு ஊழியர்கள் தங்கள் சார்பாகவோ அல்லது மற்றவரின் நலனுக்காகவோ, தங்களது குடும்ப நபர்களை பங்குச்சந்தையில் மற்றும் பிற முதலீட்டில் ஊக வணிகம்(Day Trading & Derivatives) செய்ய அனுமதிக்க கூடாது என சொல்லப்பட்டுள்ளது. 

ஐ.பி.ஓ(IPO – Initial Public Offering) போன்ற முதன்மை சந்தையில் அரசு ஊழியர்கள் ஈடுபடலாம் எனவும், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சார்ந்த ஐ.பி.ஓ. வெளியீட்டின் போது அவர்கள் முதலீட்டாளராக பங்கேற்கலாம் எனவும் கூறியுள்ளது. அதே வேளையில் அவர்களுக்கு பங்குகளின் விலையை நிர்ணயம் செய்வதற்கான முடிவெடுக்கும் செயல்பாட்டில் அனுமதியில்லை(Decision making process of Fixation of price) எனவும் சொல்லப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஐ.பி.ஓ. வெளியீட்டில் முதலீடு செய்த பின்பு, இரண்டாம் நிலை சந்தையில்(Secondary Market) கிடைத்த லாபத்தை பங்கு வெளியீட்டு நாளன்று எடுப்பதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் தங்களது வழக்கமான அரசு வேலைகளை நிறைவேற்ற கடமைப்பட்டவர்(Discharge of his official duties) எனவும், மக்களிடம் பெறப்பட்ட அரசு வரி வருவாய் மூலம் அவர்களுக்கான ஊதியம் செலுத்தப்படுவதால், இது போன்ற ஊக வணிகத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாதென விளக்கப்பட்டுள்ளது. எனவே பங்குச்சந்தையில் அரசு ஊழியர்கள் நீண்டகாலத்தில் முதலீடு செய்வதை தான் அரசு அறிவுறுத்துகிறது.

மேலும் வங்கிகளில் கடன் வாங்குதல், வங்கிகளில் டெபாசிட் செய்தல், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தல், மற்றவர்களுக்கு பணத்தை கடனாக கொடுத்தல் போன்றவற்றிற்கான விதிகளும் சொல்லப்பட்டுள்ளது.

Central Civil Services(Conduct) Rules, 1964 பற்றி அறிய…

Central Civil Services(Conduct) Rules, 1964

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

 

சனிக்கிழமை எச்சரிக்கை(Saturday Warning) – 09-03-2024

சனிக்கிழமை எச்சரிக்கை(Saturday Warning) – 09-03-2024

Investor awareness Arena

கடந்த சில வாரங்களாக நமது வாசகர்களும், சில வாடிக்கையாளர்களும் (குறிப்பாக நெருங்கிய நண்பர்களும்) தாங்கள் ஏற்கனவே நீண்டகாலத்திற்கு முதலீடு செய்திருந்த பண்டுகளை சந்தையில் உள்ள மற்ற பண்டுகளுடன் ஒப்பிட்டு, அந்த பண்டு கடந்த ஒரு வருடத்தில் 50 சதவீதத்திற்கும் மேல் வருவாயை அளித்துள்ளது. நாம் ஏற்கனவே செய்துள்ள முதலீட்டை, இந்த பண்டில் மாற்றலாமே என கேட்கிறார்கள்.   

  • பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும் போது, குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் பெரும்பாலான பண்டுகள்(Mutual Funds) நிறைய வருவாயை கொடுக்கும். ஆனால், நீண்டகாலத்தில் இது சாத்தியமில்லை. 
  • ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு பண்டுகள் ராஜநடை போடும். இதனை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் நீண்டகாலத்தில் நல்ல வருமானத்தை பெற இயலாது.
  • பொதுவாக அதிக வருவாயை கொடுக்கும் பண்டுகள், பின்னொரு காலத்தில் சரிவை சந்திக்கும். எனவே எச்சரிக்கையுடன் நமது முதலீட்டு நோக்கம், நம் குழந்தைகளுக்கான மற்றும் சந்ததிக்கான செல்வத்தை சேர்க்க முயல வேண்டும் ! 
  • பண்டுகளை அடிக்கடி மாற்றுகையில் அதற்கான செலவினமும், வரியும் உண்டு. சிறுதுளி பெரு வெள்ளம் என்பதனை கவனத்தில் கொண்டு, நீண்டகாலத்தில் பொறுமையாக முதலீடு செய்வதே நன்று. 
  • பண்டுகளை ஒவ்வொரு வருடமும் மதிப்பீடு செய்வது அவசியம். பண்டுகளை மாற்ற வேண்டுமா, கூடுதலாக முதலீடு செய்யலாமா அல்லது இந்த பண்டில் முதலீட்டில் குறைக்கலாமா என்பதனை உங்களது நிதி ஆலோசகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அவருக்கான வேலையை நீங்கள் கொடுக்கும் போது, உங்களுக்கான குழப்பம் தீரும்.
  • எந்தவொரு ஆலோசகரின் உதவியின்றி நீங்களாவே பங்குச்சந்தை அல்லது மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய நினைத்தால், சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்கான அடிப்படை காரணிகள் மற்றும் படிப்புகளை கற்பது அவசியம். கற்ற பின், முதலீடு செய்ய துவங்கலாம், தவறுகள் குறையலாம்.
  • பக்கத்து வீட்டுக்காரர் அந்த கார் மாடல் வைத்துள்ளார், எதிர் வீட்டுக்காரர் இந்த கைபேசி வைத்துள்ளார், மச்சான் இந்த பிரேஸ்லெட் அணிந்துள்ளார் என ஒவ்வொருடன் நாம் ஒப்பிட்டு கொண்டிருந்தால், நாம் நமக்கான இலக்கை அடைய முடியாது. நமக்கென்ன தேவை, நமக்கான நிதி இலக்குக்கான தொகை மற்றும் காலம் எவ்வளவு, அதனை அடைய நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தான் அவசியம். 
  • 11 வயதில் முதலீடு செய்ய ஆரம்பித்த, திருவாளர் வாரன் பப்பெட்(Warren Buffett) அவர்கள் தனது 55 வயதிற்கு பின்னரே உலகளவில் பிரபலமானார். குறுகிய காலத்திலோ, குறுக்கு வழியிலோ யாரும் நிரந்தர செல்வங்களை முடியாது.  
  • இந்திய பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டை பொறுத்தவரையில் அடுத்த 20-30 வருடங்கள் மட்டுமே பிரகாசமான காலம்(பொருளாதாரம் சார்ந்து வாய்ப்புகள் கொட்டிக் கிடைக்கும் காலம்). அதற்கு பிறகு, உங்களுக்கு வங்கி வட்டி விகிதத்திற்கு மேல் ஒரு சதவீதம் கிடைத்தாலே பெருமை தான். இது தான் வல்லரசான அமெரிக்காவிலும், ஐக்கிய ராச்சியத்திலும், ஜப்பானிலும் நடந்துள்ளது.

முதலீட்டாளர், முதலீடு செய்யும் முன் கவனிக்க:

* முதலீடு செய்வதற்கான நோக்கம்(ஓய்வுக்கால நிதி, குழந்தைகளுக்கான கல்விச் செலவு, திருமணச்செலவு, வீடு கட்டுவது / வாங்குவது, வாகனம் வாங்குவது, சுற்றுலா, பிடித்த வேலையை செய்ய, தொழில் புரிய, அப்படி ஒண்ணுமில்லைங்க)

* முதலீடு செய்ய உள்ள தொகை 

* முதலீடு செய்யும் காலம் 

* எதிர்பார்க்கும் வருவாய் (கார்பஸ் தொகையை கணக்கிடுவது அவசியம்)

* மேலே சொல்லப்பட்டவைக்கான சரியான முதலீட்டு திட்டம் (முதலீட்டு ஆலோசகரின் உதவியுடன் அணுகுதல்)

நிதி சார்ந்த அக்கறையுடன், வர்த்தக மதுரை 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com