Category Archives: Stock Analysis

ஜிஆர்பி லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

ஜிஆர்பி லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

GRP Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1974ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்ட ஜிஆர்பி லிமிடெட்(Gujarat Reclaim & Rubber Products Ltd), பயன்படுத்தப்பட்ட டயர்களிலிருந்து ரப்பரை மீட்டெடுக்கும் பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். இது போக நைலான் கழிவுகளில் இருந்த எடுக்கப்படும் பொருட்கள், பாலிமர் கலவை, மறுபயன்படுத்தப்பட்ட பாலியோல்ஃபின்ஸ், பொறியியல் பிளாஸ்டிக்குகள் மற்றும் டை (Custom Die Forms) படிவங்கள் என தனது தொழிலை விரிவாக்கம் செய்துள்ளது.

நிறுவனத்தின் பாலிமர் கலவை நூறு சதவீத மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், மரப்பொருட்களை விட வலுவாக மற்றும் நீடித்தவையாகவும் உள்ளன. இந்த தயாரிப்புகள் பெரும்பாலும் கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு, விமானப் போக்குவரத்து, கடல், தொழிற்துறை மற்றும் விவசாயத்துறைக்கு பயன்படுகிறது.

நிறுவனத்தின் பொறியியல் பிளாஸ்டிக் பிரிவு, வாகனத் துறைக்கு தேவையான உட்புற மற்றும் வெளிப்புற பயன்பாடுகளுக்கு உதவுகிறது. பாலியோல்ஃபின்ஸ் பிரிவு பெயிண்ட், எண்ணெய் மற்றும் வாகனப் பேட்டரி உறைகளுக்கு பயன்படுகிறது. டை படிவங்கள் பிரிவு வாகனங்களுக்கு தேவையான கதவு விரிப்புகள், இணைப்பு பாய்கள், தொழிற்துறை பாய்கள் மற்றும் கப்பல்துறைக்கு தேவையான பம்பர்களுக்கு பயன்படுகிறது. 

உலகளாவிய பாலிமர் துறையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்நிறுவனத்தின் தயாரிப்பு பயன்படுகிறது. ஜிஆர்பி லிமிடெட் ஆண்டுக்கு சுமார் 81,200 மெட்ரிக் டன்களை கையாளும் திறன் கொண்ட ஏழு உற்பத்தி ஆலைகளை இந்தியாவில் நிறுவியுள்ளது. இதன் சேவைகள் 60க்கும் மேற்பட்ட நாடுகளிலும், 400க்கும் அதிகமான மதிப்புமிக்க வாடிக்கையாளர்களையும் நிறுவனம் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக குட்இயர், பிரிட்ஜ்ஸ்டோன், சியட், அப்பல்லோ டயர், பிர்லா டயர், எம்ஆர்எப், யோகோகமா, பிரேலி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. டயர் உற்பத்தி துறையில் உலகின் முன்னணியில் உள்ள முதல் பத்து நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள், ஜிஆர்பி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிறுவனத்தின் மொத்த வருவாயில் டயர்களிலிருந்து மீட்டெடுக்கப்படும் ரப்பர் பிரிவின் பங்களிப்பு மட்டும் 94 சதவீதமாகும். நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் ஏற்றுமதி பங்களிப்பு மட்டும் சுமார் 70 சதவீதமாகும். மீட்டெடுக்கப்படும் ரப்பர் பிரிவில் நாட்டின் 18 சதவீத பங்களிப்பையும், ஏற்றுமதியில் நாட்டின் 40 சதவீத பங்களிப்பையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.  

2023-24ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 461 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.411 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) 11 சதவீதமாகவும், வரிக்கு முந்தைய லாபம் 30 கோடி ரூபாயாகவும் உள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனம் 23 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி 5 சதவீதமாகவும், கூட்டு லாப வளர்ச்சி 35 சதவீதமாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.68 மடங்கு என்ற அளவில் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 5.5 மடங்குகளிலும், புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.1,251 என்ற விலையிலும் உள்ளது. நிறுவனத்தின் பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் சராசரியாக 7 சதவீதமாக இருக்கிறது.

நிறுவனர்களின் பங்களிப்பு 40 சதவீதமாகவும், பிற பொது முதலீட்டாளர்களின் பங்கு 60 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பில் 0.19 சதவீதம் என்ற அளவில் பங்கு அடமானம் உள்ளது. 2024ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 165 கோடி ரூபாயாக உள்ளது. நிறுவனத்தின் கடன்களில் குறுகிய கால கடன் ரூ.91 கோடியாகவும், நீண்டகால கடன் 22 கோடி ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனத்தின் பணப்பாய்வு(Cash Flow) ஒவ்வொரு ஆண்டும் சீராக வந்துள்ளது. அதே வேளையில் கடந்த சில வருடங்களாக நிறுவனம் அசையா சொத்துக்களில்(Fixed Assets) குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்து வருகிறது. 2023-24ம் நிதியாண்டு முடிவில் நிறுவனம் ஒரு பங்குக்கு ஈட்டிய வருவாய் ரூ.170 (Earning per Share) ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒன்றுக்கு ரூ.15,770 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. 

கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 300 சதவீதத்திற்கும் மேலாக ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த 52 வார குறைந்தபட்ச விலை 3,417 ரூபாயாகவும், அதிகபட்ச விலை பங்கு ஒன்றுக்கு ரூ.16,746 ஆகவும் இருந்துள்ளது. தற்போது நிறுவனம் பங்கு ஒன்றுக்கு மூன்று பங்குகளை போனசாக(Bonus issue) வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான பதிவு நாள் வரக்கூடிய ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனத்தின் முக்கிய போட்டியாளர்களாக (பட்டியலிடப்பட்ட) எல்ஜி ரப்பர் கம்பெனி, இன்டாக் ரப்பர், ஆப்கோடெக்ஸ், மகாலட்சுமி ரப்டெக் மற்றும் இன்னபிற நிறுவனங்கள் உள்ளன.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ.12,105 கோடி

டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ.12,105 கோடி 

TCS reported a Net Profit of Rs.12,105 Crore – Q1FY25

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் மிகப்பெரிய நிறுவனமாகவும், டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமுமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் 2024-25ம் நிதியாண்டுக்கான முதலாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 62,613 கோடி ரூபாயாகவும், செலவினம் 45,951 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) 27 சதவீதமாக உள்ளது. இதர வருமானமாக 962 கோடி ரூபாயை சொல்லியிருந்த இந்நிறுவனம் முதலாம் காலாண்டின் முடிவில் ரூ.12,105 கோடியை நிகர லாப ஈட்டியுள்ளது. BFSI பிரிவில் 23,074 கோடி ரூபாயையும், உற்பத்தி பிரிவில் 6,271 கோடி ரூபாயையும், நுகர்வோர் தொழிற் பிரிவில் ரூ.9,991 கோடியையும் வருவாயாக பெற்றுள்ளது. தொடர்பு மற்றும் ஊடகப் பிரிவில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.10,794 கோடி மற்றும் மருத்துவப் பிரிவில் 6,909 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது.

நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் வட அமெரிக்காவிலிருந்து வந்துள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு ரூ. 15.14 லட்சம் கோடி. நாட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்தாற் போல் அதிக சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனம் டி.சி.எஸ். ஆகும். மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) 90,127 கோடி ரூபாய். 

நிறுவனத்தின் கூட்டு வருவாய் வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 10 சதவீதமாகவும், லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 72 சதவீதமாகவும், உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்களிப்பு 4.86 சதவீதமாகவும் உள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 82 மடங்குகளில் இருந்துள்ளது.

நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு மட்டும் சுமார் 13.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக கூகுள், அமேசான், அடோப், இன்டெல், ஆப்பிள், ஆரக்கிள், ஐபிஎம், பாஸ்ச் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை டி.சி.எஸ். நிறுவனத்திற்கு செலுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மட்டும் 50. பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் சராசரியாக 43.8 சதவீதமாக உள்ளது. 

டி.சி.எஸ். நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு இதுவரை மூன்று முறை ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் போனஸ் பங்குகளை அளித்துள்ளது. பங்குகளை திரும்பப் பெறும்(Buyback of Shares) செயல்பாடுகளை ஐந்து முறை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் – நிதி அறிக்கை: 2023-24 சுருக்கம்

கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் – நிதி அறிக்கை: 2023-24 சுருக்கம் 

Financial Highlights of Kothari Petrochemicals Ltd – FY 2023-24

சென்னை – நுங்கம்பாக்கத்தில் தனது தலைமையகத்தை கொண்டு தொழில் புரிந்து வரும் கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனம் சமீபத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான அறிக்கையை வெளியிட்டிருந்தது. நாட்டின் பிரபல HCK (HC Kothari Group) குழுமத்தின் துணை நிறுவனம் தான் கோத்தாரி பெட்ரோகெமிக்கல்ஸ். 1990களில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் எரிபொருள் சேர்க்கை, ரப்பர் உற்பத்தி, கிரீஸ், பி.வி.சி. குழாய் மற்றும் மாஸ்டர் பேட்ச் கலவை ஆகியவற்றுக்கு தேவையான உயர்தர மற்றும் நடுத்தர மூலக்கூறுகளை(Poly Isobutylene) தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த மூலக்கூறுகள் பொதுவாக மடிப்பு ஓட்டும் தன்மை, நீர்க்கசிவு தன்மையை களைய, பாகுத்தன்மையை மேம்படுத்த மற்றும் சிறந்த மின் காப்பாகவும் பயன்படுகிறது. உட்கட்டமைப்பு, வாகனங்கள், பேக்கேஜிங், எரிபொருள், உலோகம், பசை மற்றும் ரப்பர் துறைகளுக்கு இவை பயன்படுத்தப்படுகிறது.

நிறுவனத்தின் உற்பத்தி ஆலை சென்னை – மணலியில் சுமார் 10,000 சதுர அடியில் உற்பத்திக்கு தேவையான வசதிகளுடன் 36,000 TPA திறன் கொண்டு இயங்கி வருகிறது. உரிமம் பெற்ற திறன் அடிப்படையில் 100 சதவீத திறன் உற்பத்தி பயன்படுத்தப்பட்டு வருவதாக நிறுவனம் கூறியுள்ளது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக லூப்ரிசோல் இந்தியா, இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், சிங்கப்பூரின் இன்பைனம் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.  

நிறுவனத்தின் பொருட்கள், 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசிய பசிபிக், தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகியவை. பாலி ஐசோபூடலைன் மூலக்கூறுகளின் தேவையும்(பல்வேறு பயன்பாடுகளுக்கு) சொல்லப்பட்ட நாடுகளில் அதிகமாக உள்ளது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் ரூ.603 கோடியாகவும், செலவினம் 507 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) 16 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது. இது கடந்த 10 வருட காலத்தில் இல்லாத வளர்ச்சியாகும். இதர வருவாயாக ரூ.8 கோடியும், வரிக்கு முந்தைய லாபம் 95 கோடி ரூபாயாகவும் உள்ளது.

சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனம், 64 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. விற்பனை மற்றும் லாப வளர்ச்சியை காணுகையில், கடந்த 10 ஆண்டுகளில் விற்பனை சராசரியாக 6 சதவீதமும், லாபம் சராசரியாக 23 சதவீதமுமாக வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 5 வருடங்களில் 24 சதவீதமாகவும், 10 வருட காலத்தில் 21 சதவீதமாகவும் உள்ளது.

2023-24ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்திற்கு கடன் எதுவுமில்லை. ரொக்க கையிருப்பாக(Cash Equivalents) 12 கோடி ரூபாயை கொண்டுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 187 கோடி ரூபாயாக உள்ளது. பணவரத்து பொறுத்தவரை, நிறுவனம் ஒவ்வொரு வருடமும் அதனை சரியாக கையாண்டு வருகிறது. 2023-24ம் நிதியாண்டில் ரூ.15.56 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களில் முதலீடு செய்துள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 71 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 42 ரூபாய் என்ற அளவிலும், வட்டி பாதுகாப்பு விகிதம் 81 மடங்குகளிலும் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 130 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

  

 

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடலாமா ?

Can Govt. Employees participate in the Stock(Share) Market ? (CCS Rules, 1964)

இந்தியாவில் அரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் டீமேட் கணக்கு துவங்கி, பங்குகளில் வர்த்தகம் அல்லது முதலீடு செய்யலாமா என்பது பெரும்பாலான அரசு ஊழியர்களின் கேள்வி. நமது வாசகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிலர் இது சார்ந்த சந்தேகத்தை கேட்டிருந்தனர். இது சார்ந்த விதிகளை பற்றி மத்திய சிவில் சேவைகள் (நடத்தை), 1964 – Central Civil Services(Conduct) Rules, 1964 ஆவணத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சிவில் சேவைகள்(நடத்தை), 1964 ஆவணத்தில் வரிசை எண்.21, விதி எண்.16ன் கீழ், முதலீடு, கடன் கொடுத்தல் மற்றும் கடன் வாங்குதல் பகுதியில் 35(1) மூலம் அரசு ஊழியர்கள் முதலீடு சார்ந்த விஷயங்களில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி கூறப்பட்டுள்ளது.

“ 35(1) எந்தவொரு பங்கு, பங்கு சார்ந்த அல்லது மற்ற முதலீட்டில் எந்த ஒரு அரசு ஊழியரும் ஊகம்(Speculative) சார்ந்த வணிகத்தில் ஈடுபடக் கூடாது. இந்த துணை விதியில் உள்ள பங்கு மூலம் அவ்வப்போது செய்யப்படும் முதலீடுகளுக்கு இது பொருந்தாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில் எந்தவொரு அரசு ஊழியரும் பங்குகளிலோ அல்லது மற்ற முதலீடுகளிலோ ஊகம் சார்ந்த, அதாவது நாள் வர்த்தகம், ஊக வணிகம்(Speculative Trading & Derivatives) போன்ற நிகழ்வுகளில் ஈடுபடக் கூடாது எனவும், அதே வேளையில் சொல்லப்பட்ட முதலீட்டு திட்டங்களில் அவ்வப்போது முதலீடாக செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

மேலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தரகர்(Stock Broker) அல்லது உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டும் தான் அவர்களது முதலீட்டை மேற்கொள்ள வேண்டுமென்றும் சொல்லப்பட்டுள்ளது.

இங்கே ஊகம் என்பது அடிக்கடி பங்குகள் அல்லது மற்ற முதலீடுகளை வாங்கி அடிக்கடி விற்பது என்பதாக கருதப்படுகிறது. 

“40(2) (i) எந்தவொரு அரசு ஊழியரும் அவருடைய குடும்பத்தில் உள்ள எந்தவொரு நபரையும் அவர் சார்பாகவோ அல்லது குடும்பத்தின் நலன் சார்பாகவோ ஊக வர்த்தகத்தில் ஈடுபட வைக்கக் கூடாது மற்றும் அனுமதிக்க கூடாது.”

மேலே சொல்லப்பட்ட விதி என்னவெனில், அரசு ஊழியர்கள் தங்கள் சார்பாகவோ அல்லது மற்றவரின் நலனுக்காகவோ, தங்களது குடும்ப நபர்களை பங்குச்சந்தையில் மற்றும் பிற முதலீட்டில் ஊக வணிகம்(Day Trading & Derivatives) செய்ய அனுமதிக்க கூடாது என சொல்லப்பட்டுள்ளது. 

ஐ.பி.ஓ(IPO – Initial Public Offering) போன்ற முதன்மை சந்தையில் அரசு ஊழியர்கள் ஈடுபடலாம் எனவும், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சார்ந்த ஐ.பி.ஓ. வெளியீட்டின் போது அவர்கள் முதலீட்டாளராக பங்கேற்கலாம் எனவும் கூறியுள்ளது. அதே வேளையில் அவர்களுக்கு பங்குகளின் விலையை நிர்ணயம் செய்வதற்கான முடிவெடுக்கும் செயல்பாட்டில் அனுமதியில்லை(Decision making process of Fixation of price) எனவும் சொல்லப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஐ.பி.ஓ. வெளியீட்டில் முதலீடு செய்த பின்பு, இரண்டாம் நிலை சந்தையில்(Secondary Market) கிடைத்த லாபத்தை பங்கு வெளியீட்டு நாளன்று எடுப்பதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அரசு ஊழியர்கள் தங்களது வழக்கமான அரசு வேலைகளை நிறைவேற்ற கடமைப்பட்டவர்(Discharge of his official duties) எனவும், மக்களிடம் பெறப்பட்ட அரசு வரி வருவாய் மூலம் அவர்களுக்கான ஊதியம் செலுத்தப்படுவதால், இது போன்ற ஊக வணிகத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாதென விளக்கப்பட்டுள்ளது. எனவே பங்குச்சந்தையில் அரசு ஊழியர்கள் நீண்டகாலத்தில் முதலீடு செய்வதை தான் அரசு அறிவுறுத்துகிறது.

மேலும் வங்கிகளில் கடன் வாங்குதல், வங்கிகளில் டெபாசிட் செய்தல், மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தல், மற்றவர்களுக்கு பணத்தை கடனாக கொடுத்தல் போன்றவற்றிற்கான விதிகளும் சொல்லப்பட்டுள்ளது.

Central Civil Services(Conduct) Rules, 1964 பற்றி அறிய…

Central Civil Services(Conduct) Rules, 1964

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

 

உலகின் முக்கிய பங்குச்சந்தைகளின் வர்த்தக நேரம் எப்படி ?

உலகின் முக்கிய பங்குச்சந்தைகளின் வர்த்தக நேரம் எப்படி ?

Market Trading hours of the Major Stock exchanges around the World

இந்தியாவில் மும்பை பங்குச்சந்தை(BSE) துவங்கப்பட்டு சுமார் 148 வருடங்கள் முடிந்தாகி விட்டது. கடந்த 1875ம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கப்பட்ட மும்பை பங்குச்சந்தை இன்று 4.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாயில் சுமார் 366 லட்சம் கோடி – ஜனவரி 2024 தரவு) கொண்ட சந்தை மதிப்பாக உருவாகியுள்ளது. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

1992ம் ஆண்டு வாக்கில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தையின்(NSE) இன்றைய மதிப்பு 4.2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் 335 லட்சம் கோடி – டிசம்பர் 2023 தரவு). இச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 2,190. 

அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் இந்திய பங்குச்சந்தையை மதிப்பிடும் போது, ஒவ்வொரு 25 ஆண்டுகளில் இந்திய சந்தை நான்கு முறை கரடிப் பிடியில்(Bear Market) சிக்குவதாகவும், அமெரிக்க சந்தை போலவே இந்திய சந்தையிலும் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கரடிச் சந்தையை முதலீட்டாளர்கள் சந்திப்பதாகவும் மற்றும் தேசிய பங்குச்சந்தையான நிப்டி50 குறியீடு கடந்த 25 வருடங்களில் எட்டு முறை 20 சதவீத வீழ்ச்சியை சந்தித்திருப்பதாகவும் கூறியுள்ளது.

2022-23ம் நிதியாண்டு தரவுப்படி உலகளவில் பங்குச்சந்தை பங்களிப்பு விகிதத்தை காணுகையில், அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 55 சதவீதத்திற்கும் அதிகமானோர் நேரடியாக பங்குச்சந்தையில் முதலீடு(Trading & Delivery) செய்கின்றனர். இதுவே ஐக்கிய ராச்சியத்தில்(UK) 33 சதவீதமாகவும், சீனாவில் 13 சதவீதமாகவும், பிரேசிலில் 2 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் இது 3 சதவீத பங்களிப்பாக உள்ளது. அதே வேளையில் இந்தியாவில் குடும்பங்கள் வாரியாக காணும் போது, இது 17 சதவீதமாக இருந்துள்ளது. 

இந்தியாவில் பங்குச்சந்தையில் ஈடுபடும் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும், பொதுவாக மற்றும் பரவலாக சொல்லப்படும் காரணி அதன் சந்தை வர்த்தக நேரம் தான். காலை ஒன்பது மணி முதல் மதியம் 03:30 மணி வரை. இந்த வேளையில் பெரும்பாலானோர் தங்களது நிறுவன வேலை அல்லது தொழிலில் ஈடுபட்டு கொண்டிருப்பர். இதுவே சந்தை பங்களிப்பு குறைவிற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்க அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், நம்ம நாட்டு பக்கத்துல இருக்கிற சீனாவின் பங்களிப்பு எப்படி அதிகரித்தது, அதன் வர்த்தக நேரம் தான் என்ன ?

(See Table below)

Market Trading Hours - Global Equity Markets

பொதுவாக அமெரிக்காவில் நிறுவன முதலீட்டாளர்களின்(Institutional Investors) பங்களிப்பு, பங்குச்சந்தையில் அதிகமாக இருக்கும். வல்லரசாக மட்டுமில்லாமல் வளர்ந்த பங்குச்சந்தையாகவும் அமெரிக்க சந்தை உள்ளது. இதன் காரணமாகவே நேரடி முதலீட்டாளர்களின் பங்களிப்பும், PMS, Hedge Fund மற்றும் Index Fund வாயிலாக முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும், அதன் மதிப்பும் அதிகம். இதுவே நம் நாட்டில் PMS மற்றும் Index Fund என்பது இன்னும் புது வரவாகவே இருக்கிறது. கடந்த சில வருடங்களாக தான் இந்திய சந்தையில் முதலீட்டாளர்களின் பங்களிப்பு(மியூச்சுவல் பண்டு மூலமாக) அதிகரித்து வருகிறது.

சீனாவை பொறுத்தவரை அந்நாட்டின் பங்குச்சந்தைக்கும், பொருளாதாரத்திற்கும் பெரிதாக இணைப்பு இல்லை. சீனச் சந்தை, இந்திய சந்தையை காட்டிலும் அதிக மதிப்பை கொண்டிருந்தாலும் அங்கு பெரும்பாலும் அரசு கட்டுப்பாட்டில் தான் அவை இயங்கும். சந்தையும் உள்ளூர் முதலீட்டாளர்களை தான் அதிகமாக கொண்டிருக்கிறது. இது போல ஹாங்காங் சந்தையிலும் தொழில் வணிகர்கள் குறிப்பிடத்தக்க முதலீடு செய்திருந்தாலும் சீனச் சந்தை அமைப்பின் கீழ் தான் இயங்கி வருகிறது. 

சீன பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்குச்சந்தை பங்களிப்பு 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுவே இந்தியாவில் பொருளாதாரத்தில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்படுகிறது. சீனச் சந்தையில் பெரும்பாலும் அதன் அரசு கொள்கைகள் தான் ஆதிக்கம் செலுத்தும். இதுவே இந்தியாவில் சந்தை ஒதுக்கீடு பொறிமுறையில்(Market allocation mechanism) இயங்கும்.

பெரும்பான்மையான நாடுகளில் ஈர்க்கப்படும் முதலீடுகள் ETF(Exchange Traded Fund) அல்லது மியூச்சுவல் பண்டு வாயிலாக தான் வருகின்றன. ஆசியாவின் மிகப்பழமையான சந்தையாக இந்தியாவின் மும்பை பங்குச்சந்தை இருந்திருந்தாலும், இங்குள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, வேகமாக வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் மிகவும் குறைவே.   

இந்தியாவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாக இருப்பதற்கு பொதுவான காரணங்களாக நிதி சார்ந்த கல்வியறிவின்மை, பணப்பற்றாக்குறை, பாரம்பரிய முதலீடுகளை அதிகமாக சார்ந்திருப்பது(தங்கம், நிலம், வங்கி டெபாசிட்), பங்குச்சந்தையில் பொறுமையின்மை மற்றும் குறுகிய காலத்தில் அதிக லாபமீட்ட எண்ணம், பாதுகாப்பான அணுகுமுறையை விரும்புதல் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த கடந்த கால அச்சம் ஆகியவை உள்ளது.

மேலே காணப்பட்ட வர்த்தக நேரப் பட்டியலின் முடிவில், உலகின் பெரும்பாலான சந்தைகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பகலில் மட்டுமே இயங்குகிறது. ‘வாரம் இருமுறை சந்தைக்கு விடுமுறை’ என்பதனை பெரும்பாலான சந்தைகள் அமெரிக்காவின் நகலாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

      

கால்பந்து களப் பகுப்பாய்வு – உங்களது முதலீட்டு மதிப்பீட்டை மேம்படுத்தும் நுட்பங்கள்

கால்பந்து களப் பகுப்பாய்வு – உங்களது முதலீட்டு மதிப்பீட்டை மேம்படுத்தும் நுட்பங்கள் 

 

Football Field Analysis – Asset Valuation Techniques

பொருளாதாரவியலில் எந்தவொரு சொத்துக்கும் மதிப்பொன்று உள்ளது. முதலீட்டு மதிப்பீட்டின் மூலம் ஒரு குறிப்பிட்ட சொத்தின் மதிப்பை நாம் அறியலாம். இதற்கென மதிப்பீட்டு பகுப்பாய்வு(Valuation Analysis) என்ற ஒரு அலகு உள்ளது. மதிப்பீட்டு பகுப்பாய்வு என்பது ஒரு சொத்தின் தோராயமான மதிப்பை மதிப்பிடும் ஒரு செயல்முறையாகும்.

 

மதிப்பீட்டு பகுப்பாய்வு முறை பலவகைகளில் கிடைக்கப்பெற்றாலும், சுருக்கமாக இரு வகைகளை நாம் சொல்லலாம். அதாவது ஒப்பீட்டு முறை(Relative Valuation) மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை(Absolute Valuation). ஒப்பீட்டு முறை என்பது ஒரு சொத்தினை அதனை ஒத்த மற்ற சொத்துக்களுடன் ஒப்பிடுவது அல்லது ஒரு நிறுவனத்தின் மதிப்பை, அதே துறையை சேர்ந்த மற்ற நிறுவனங்களின் மதிப்புடன் ஒப்பிட்டு முடிவினை அடைவதாகும். 

 

முழுமையான மதிப்பீட்டு முறை என்பது அவ்வாறாக இல்லாமல், ஒரு சொத்தின் அல்லது நிறுவனத்தின் உள்ளார்ந்த மதிப்பை (மற்றவற்றுடன் ஒப்பிடாமல்) பெறுவதாகும். இதன் மூலம் ஒரு சொத்து அல்லது நிறுவனம்  இவ்வளவு மதிப்பை கொண்டிருக்கும் என சொல்வதாகும்.

 

சிறு உதாரணத்தின் மூலம் மேலே சொன்ன இரு மதிப்பீட்டு பகுப்பாய்வு முறைகளை பார்ப்போம். ஒருவரின் தோட்டத்தில் (ஒரு ஏக்கர் நிலம்) நூறு கொய்யா மரங்கள் உள்ளது. ஒவ்வொரு மரமும் ஆண்டுக்கு நூறு கொய்யா பழங்களை தருகிறது என வைத்துக் கொள்வோம். இப்போது அவரது தோட்டத்தில் ஆண்டுக்கு ஆயிரம் கொய்யா பழங்கள்(100 மரங்கள் X 100 பழங்கள்) காய்த்து அதற்கான வருவாயை தருகிறது. இங்கே கொய்யா பழத்திற்கான விலை, ஒவ்வொரு கொய்யா மரத்தின் வாழ்நாட்கள் மற்றும் பருவம், கழிவு, விலைவாசி(உற்பத்தி செலவு மற்றும் பணவீக்கம்), அடுத்த 10-15 வருடங்களுக்கான விளைச்சல் எதிர்பார்ப்பு  ஆகியவற்றை பொறுத்து அத்தோட்டத்திற்கு ஒரு மதிப்பை கொடுக்கலாம். பின்னாளில் அவர் இந்த தோட்டத்தினை விற்க முனைகையில் மேலே சொன்ன மதிப்பீட்டை கருத்தில் கொண்டு விலையை பேசலாம். இதனை தான் நாம் முழுமையான மதிப்பீட்டு முறை(Absolute Valuation) என சொல்கிறோம்.

 

இதுவே பக்கத்து தோட்டத்துக்காரர் தான் வைத்திருக்கும் ஒரு ஏக்கர் நிலத்தில்  கொய்யா மரங்கள்(எண்ணிக்கை மாறுபடலாம்) அடங்கிய தோட்டத்திற்கு எந்தவொரு முழுமையான மதிப்பீட்டையும் செய்யாமல், முதலாமவரின் தோட்டத்தினை போல தனது தோட்டமும் இவ்வளவு மதிப்பை பெறும் என ஒப்பிட்டு முறையில் சொன்னாலே, அதுவே ஒப்பீட்டு பகுப்பாய்வு முறையாகும்(Relative Valuation).

 

இதனை தான் பங்குச்சந்தை முதலீட்டில் நாம் காணும் P/E(Price to Earning per Share) Ratio, P/Bv(Price to Book value) Ratio, P/S (Price to Sales), EV/EBITDA, etc. – ஒப்பீட்டு பகுப்பாய்வு முறை. பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவனப் பங்கின் விலையை அதன் ஒரு பங்கிற்கான வருவாயுடன் ஒப்பிடுவது, பங்கு  விலையை அதன் நிறுவன விற்பனையுடன், புத்தக மதிப்புடன்(Book value) ஒப்பிடுவது என சொல்லலாம். ஒரு நிறுவனத்தின் P/E விகிதத்தை, அதே துறையை சேர்ந்த மற்ற நிறுவனத்தின் P/E விகிதத்துடன் ஒப்பிடுவது. 

 

Discounted Cash Flow(DCF), DDM(Discounted Dividend Model), Discounted Asset Model(DAM) போன்றவை முழுமையான ஒப்பீட்டு பகுப்பாய்வு முறையை சேர்ந்தவையாகும். இவை அந்நிறுவனத்தின் பணவரத்து, ஈவுத்தொகை(Dividend) மற்றும் கணக்கில் உள்ள சொத்துக்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு முழுமையாக மதிப்பீடு செய்வதாகும். 

 

மதிப்பீட்டு பகுப்பாய்வு முறை(Valuation Analysis) என்பது வெறுமனே பங்குச்சந்தை முதலீட்டுக்கு மட்டுமல்ல. ரியல் எஸ்டேட்(வீட்டுமனைத் துறை), தங்கம், விவசாய நிலம், தொழில் மற்றும் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் பயன்படுத்தலாம்.

 

ஒவ்வொரு மதிப்பீட்டு பகுப்பாய்வு முறையும் வெவ்வேறு வகையான முடிவுகளை அளிக்கும். இதன் காரணமாக சில நேரங்களில் முதலீடு செய்பவருக்கு ஏற்ற அல்லது உகந்த மதிப்பீடுகளை எடுத்துக் கொள்வது இயல்பு. எனினும், பெரும்பாலும் வழக்கத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மதிப்பீடாக ஒப்பீட்டு முறை உள்ளது. அதே வேளையில் ஒப்பீட்டு முறையை காட்டிலும் முழுமையான மதிப்பீட்டு முறையே(Absolute Valuation) ஒரு முதலீட்டாளருக்கு சிறந்த முடிவாகவும், நீண்டகாலத்தில் நல்ல வருவாயை அளிக்க கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது. 

 

நான் பெரிசா, நீ பெரிசா என ஒவ்வொரு மதிப்பீட்டு முறையை கொண்டு போட்டி போடுவதை தவிர்த்து விட்டு, அனைத்து அல்லது பெரும்பான்மையான முறைகளை கணக்கில் எடுத்து கொண்டு முடிவுகளை எடுக்க கால்பந்து களப் பகுப்பாய்வு(Football Field Analysis) உதவுகிறது. வெவ்வேறு மதிப்பீட்டு முறைகளின் முடிவுகளை ஒப்பிட்டு சுருக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு வரைபடத்தை(Graph /Chart)  இந்த ஆய்வு ஏற்படுத்துகிறது. 

 

இது பல்வேறு மதிப்பீட்டு முறைகள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமையும் ஒரு நிறுவனத்திற்கான மதிப்புகளின் வரம்பை சுருக்கமாக கூறுகிறது. இந்த வரைபடத்தின் மூலம் பெரும்பான்மையான மதிப்பீட்டு  முறைகள் வாயிலாக, ஒரு நிறுவனத்தின் சராசரி விலை என்ன என்பதனை அறிந்து கொள்ளலாம். 

 

பொருளாதாரத்தில் காணப்படும் நிச்சயமற்ற தன்மைகளைக் கையாள்வதற்கும், மதிப்பீடுகளில் ஏற்படும் பிழைகளை குறைப்பதற்கும் இம்முறையை பயன்படுத்தலாம். 

 

உதாரணமாக ஒரு நிறுவனப் பங்கின் விலையை பணவரத்து(DCF) மதிப்பீட்டு முறையில் கணக்கிடும் போது ஒரு பங்கிற்கான மதிப்பு ரூ. 100 என கொள்வோம். இதுவே PE மதிப்பீட்டு முறையில் காணும் போது ஒரு பங்கிற்கு 80 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை வாங்கலாம் என பரிந்துரைக்கிறது. புத்தக மதிப்பு(Book value) அடிப்படையில் பார்க்கையில் ஒரு பங்குக்கு ரூ.85 என மதிப்பினை பெறுகிறது. கடந்த ஒரு வருட பங்கின் அதிகபட்ச விலை ரூ.150 ஆகவும், குறைந்தபட்ச விலை 65 ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட ஒரு வருடத்தின் பெரும்பாலான நாட்களில் ரூ.87 – ரூ.102 என்ற விலையில் வர்த்தகம் நடந்துள்ளது.

 

இப்போது ஏதேனும் மற்றொரு மதிப்பீட்டு முறை மூலம் ஆய்வு செய்யும் போது பங்கு ஒன்றுக்கு 82 ரூபாய் என காட்டுகிறது. முடிவில் மேலே சொன்ன அனைத்து மதிப்பீட்டு முறைகளின் மூலம் கிடைக்கப்பெற்ற மதிப்புகளை, கால்பந்து களப் பகுப்பாய்வு வரைபடத்தில் குறிப்பிட வேண்டும். தற்போது நடப்பில் ஒரு பங்கின் விலை ரூ.102 க்கு வர்த்தகமாகிறது என வைத்துக் கொள்வோம். 

 

கால்பந்து களப் பகுப்பாய்வின் மூலம் நாம் பெறுவது, ஒவ்வொரு மதிப்பீட்டின் அடிப்படையில் நாம் பெறக்கூடிய சராசரி விலை தான். இதனை தற்போதைய பங்கு விலையுடன் ஒப்பிட்டு வாங்கலாமா, காத்திருக்கலாமா என்பதனை முடிவு செய்யலாம். 

 

Football field analysis

 

நீங்களும் இதனை பரிசோதித்து பாருங்கள்… இதன் மூலம் உங்களது முதலீட்டு சிந்தனையை மேம்படுத்துங்கள் !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

   

    

 

 

மின்சார வாகனப் பிரிவில் கவனம் செலுத்தி வரும் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம்

மின்சார வாகனப் பிரிவில் கவனம் செலுத்தி வரும் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் 

Greaves Cotton Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1859ம் ஆண்டு ஜேம்ஸ் கிரீவ்ஸ் மற்றும் ஜார்ஜ் காட்டன் ஆகிய இருவரால் துவங்கப்பட்ட நிறுவனம் தான் கிரீவ்ஸ் காட்டன்(Greaves Cotton). பொறியியல் மற்றும் உற்பத்தித் துறையில் உள்ள இந்நிறுவனம் 1947ம் ஆண்டு வாக்கில் இந்தியத் தொழிலதிபரான திரு. லாலா கரம் சந்த் தப்பார் (தப்பார் குழுமம்) அவர்களால் வாங்கப்பட்டது. 1950ம் ஆண்டில் கிரீவ்ஸ் காட்டன் பொது நிறுவனமாக(Public Ltd) பதிவு செய்யப்பட்டது. தற்போது மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்டு நிறுவனம் தனது தொழிலை செய்து வருகிறது.

நிறுவனத்தின் தலைவராக திரு. கரண் தப்பார் உள்ளார். வாகனங்களுக்கான இன்ஜின்கள், உதிரி பாகங்கள், வாகன கட்டுப்பாட்டு அமைப்புகள், பண்ணை உபகரணங்கள், துணை சக்தி(Auxiliary Power) மற்றும் மின்சார வாகனங்களை தயாரித்து விற்பனையில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் இன்ஜின் பிரிவு 62 சதவீதத்தையும், மின்சார வாகனப் பிரிவு 30.5 சதவீதத்தையும் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. 

வருவாயில் உள்நாட்டு பங்களிப்பு 97 சதவீதமாகவும், ஏற்றுமதி 3 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக Greaves Electric Mobility (இரு மற்றும் மூன்று சக்கர மின்சார வாகன உற்பத்தி), Greaves Retail(உதிரி பாகங்கள், மின்சார வாகன ஏற்றுமதி, பராமரிப்பு), Greaves Engineering(எரிபொருளுக்கான தீர்வு, இயக்க கட்டுப்பாட்டு அமைப்புகள், இன்ஜின் பிரிவு, ஜென்செட்டுகள் மற்றும் பம்பு செட்டுகள்), Greaves Technologies(பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, டிஜிட்டல் சேவைகள்) மற்றும் Greaves Finance(மின்சார வாங்கனங்களுக்கான நிதி சேவைகள்) ஆகியவை உள்ளன.  

விவசாயம், கட்டுமானம், சக்தி மற்றும் பிற தொழிற்துறைக்கு தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்திற்கு நாடு முழுவதும் சுமார் 6500கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களும், 350க்கும் மேற்பட்ட விநியோகச் சேவைகளும்(Dealers) உள்ளது. உதிரிப் பாகங்களுக்கான பிரிவில் நாடு முழுவதும் சுமார் 400க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் 6000க்கும் மேற்பட்ட சிறிய சில்லறை விற்பனை நிலையங்களையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் தயாரிப்பு சேவை உள்நாட்டில் மட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. நிறுவனம் இந்திய குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றும் அனுபவம் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் மற்றும் திறமையான தலைமைத்துவத்தை கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

மின்சார வாகனப் பிரிவில் இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனம் இப்பிரிவில் இந்திய அளவில் பெரும்பான்மையான பங்களிப்பை தன்னகத்தே கொண்டு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மின்சார வாகனங்களில் மூன்று முக்கிய பிரிவுகளில் பிராண்டுகளை உற்பத்தி செய்து(Ampere, ele, Greaves Eltra) இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இரு சக்கர மின்னணு வாகனப் பிரிவில் 6 வகைகளையும், மூன்று சக்கர மின்னணு வாகனப் பிரிவில் 10க்கும் மேற்பட்ட வகைகளிலும் உள்ளன.

நிறுவனத்தின் கீழ் பல பிராண்டு உதிரி பாகங்கள், மின்சார வாகனங்களுக்கான உதிரி பாகங்கள், பேட்டரிகள், சார்ஜிங், பிற கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையில் உள்ளது. கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், ‘Ampere Vehicles’ நிறுவனத்தில் கிரீவ்ஸ் காட்டன் நிறுவனம் 81 சதவீத பங்குகளை வாங்கி கையகப்படுத்தியுள்ளது. 

‘E-Rickshaw’ பிரிவில் பெஸ்ட்வே நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளது கிரீவ்ஸ் காட்டன். இது போக வாகனங்களுக்கான இயக்க கட்டுப்பாட்டு(Motion Control Systems) பிரிவில் தொழில் செய்து வரும் எக்சல் கண்ட்ரோலிங்கேஜ்(Excel Controlinkage Pvt Ltd) நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும், எம்.எல்.ஆர். ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளது. ஐக்கிய ராச்சியத்தை(United Kingdom) சேர்ந்த ஈட்டா கிரீன் பவர் நிறுவனத்துடன் இணைந்து எலக்ட்ரிக் டிரைவ் சிஸ்டம் வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறது.

மஹிந்திரா நிறுவனம் காட்டன் கிரீவ்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்.6 வாகனப் பிரிவுக்கான பவர் ட்ரெயின்(Powertrain) தீர்வுகளை செய்து வருகிறது. மூன்று மற்றும் நான்கு சக்கர வணிக வாகனங்களுக்கான இன்ஜின்களை(Petrol, Diesel, CNG/LPG) உற்பத்தி செய்து விற்பனையிலும் காட்டன் கிரீவ்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

மின்சார வாகனப் பிரிவில் தனது விற்பனையை அதிகரிக்க சவுதியை சேர்ந்த ஏ.எல்.ஜே(ALJ) குழும நிறுவனத்துடன் இணைந்து மேம்பாடுகளை செய்து வருகிறது. கடந்த 1945ம் ஆண்டு துவங்கப்பட்ட ALJ(Abdul Latif Jameel) நிறுவனம் வாகனப் பிரிவில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தொழிலை செய்து வருகிறது.   

மூன்று சக்கர வாகனப் பிரிவில் உலகின் சிறந்த பிராண்டாக காணப்படும், ‘Piaggio’ நிறுவனம் ஐரோப்பாவில் பெரும்பான்மையான சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு தேவையான இன்ஜின் மற்றும் பிற உதிரி பாகங்களை கடந்த 1998ம் வருடம் முதல் கிரீவ்ஸ் காட்டன் செய்து வழங்கி வருகிறது. சொல்லப்பட்ட வருடத்தில் பியாஜியோ – கிரீவ்ஸ் கூட்டு நிறுவனங்களாக செயல்பட்டு இந்தியாவில் மூன்று சக்கர வாகனங்களை விற்பனை செய்து வந்தது. பின்னர் 2001ம் ஆண்டு வாக்கில் பியாஜியோ நிறுவனத்தின் தலைமைக் குழும நிறுவனமான P&C முழு பங்குகளையும் வாங்கி கொண்டது.

நிறுவனத்தின் முதலீட்டை பொறுத்தவரை, கடந்த 2021ம் ஆண்டில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மின்சார வாகனங்களை தயாரிக்கும் இலக்கை கொண்டு, தமிழ்நாட்டில் அடுத்த பத்து வருடங்களில் சுமார் 700 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய உள்ளதாக கிரீவ்ஸ் காட்டன், தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மின்சார வாகன உற்பத்திக்காக நாடு முழுவதும் ஆறு ஆலைகளை கொண்டுள்ளது இந்நிறுவனம்.

நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக மொத்த வருவாயில் 1.6 சதவீதம் வரை செலவிடப்படுகிறது. மின்சார வாகனங்கள் வாங்குவதற்கான கடன் வழங்கும் சேவையை வாடிக்கையாளர்களுக்கு கிரீவ்ஸ் பைனான்ஸ்(Greaves Finance) நிறுவனம் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது.

கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் நிதிநிலையை பொறுத்தவரை இதன் சந்தை மூலதன மதிப்பு ரூ.3,830 கோடி. நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 16 மடங்குகளிலும், நிறுவனர்களின் பங்களிப்பு 56 சதவீதமாகவும் உள்ளது. 

கடந்த 2020-21 மற்றும் 2021-22ம் நிதியாண்டு முறையே ரூ.19 கோடி மற்றும் ரூ.35 கோடியை நிறுவனம் நட்டமாக சொல்லியுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,699 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.2,573 கோடியாகவும் சொல்லப்பட்டுள்ளது. இயக்க லாப விகிதம் 4 சதவீதமாக உள்ளது.

சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனம் 70 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. எனினும் கடந்த நான்கு காலாண்டுகளில் டிசம்பர் 2023 காலாண்டை தவிர்த்து மற்ற மூன்று காலாண்டுகளிலும் நிறுவனம் நட்டத்தை சந்தித்துள்ளது. இதற்கு காரணமாக சமீபத்தில் ஏற்பட்ட நிதிச் செலவின அதிகரிப்பு மற்றும் மின்சார வாகன மானியத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய அபாரதத் தொகையும் அடங்கும்.  

கடந்த சில வருடங்களாக இந்நிறுவனம் மின்சார வாகன உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருவதால், முதலீடும் அது சார்ந்த செலவினமும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சந்தையிலும் இந்தப் பங்கின் விலை அதிக ஏற்ற-இறக்கத்தை சந்தித்து வருகிறது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு செப்டம்பர் 2023 காலத்தின் படி ரூ.1,328 கோடி என சொல்லப்பட்டுள்ளது. 

2022-23ம் நிதியாண்டில் என்ஜின் பிரிவு மூலம் நிறுவனத்திற்கு ரூ.1,425 கோடியும், மின்சார வாகனப் பிரிவின் மூலம் ரூ.1,124 கோடியும், பிற விற்பனை மூலம் 150 கோடி ரூபாயும் வருவாயாக கிடைத்துள்ளது. இருப்பினும் வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபத்தில்(PBIT) இன்ஜின் பிரிவு 165 கோடி ரூபாயையும், மின்சார வாகனப் பிரிவு ஒரு கோடி ரூபாயையும் நிறுவனம் பெற்றுள்ளது. 

கடன்-பங்கு விகிதம் 0.06 மடங்கு, வட்டி பாதுகாப்பு விகிதம் மற்றும் இருப்புநிலை கையிருப்பு தொகை இந்நிறுவனத்திற்கு சாதகமாக இருந்தாலும், மின்னணு வாகனப் பிரிவில் இந்நிறுவனம் செய்த முதலீடு, அதன் முறிவு புள்ளியை(Breakeven) கடக்கும் வரை நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் அதிக மாறுபாடுகளை காணலாம்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகளும், நாடுகளின் சந்தை மதிப்பும்

உலகின் மிகப்பெரிய பங்குச்சந்தைகளும், நாடுகளின் சந்தை மதிப்பும்

World’s Top Stock Exchanges and Countries by Market Capitalization

உலகின் நான்காவது பெரிய பங்குச்சந்தையாக ஹாங்காங் நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது. ஹாங்காங் நாட்டின் பங்குச்சந்தையை நாம் முந்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த பங்குச்சந்தையின் மதிப்பு 4.37 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும்(இந்திய ரூபாயில் சுமார் 363 லட்சம் கோடி ரூபாய்).

பங்குச்சந்தை உலகின் ராஜாவாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதன் சந்தை மதிப்பு 49.65 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாய் மதிப்பில் 4,127 லட்சம் கோடி ரூபாய்). இரண்டாமிடத்தில் 10.89 டிரில்லியன் டாலர்களுடன் சீனாவும், மூன்றாவது இடத்தில் 5.47 டிரில்லியன் டாலர்களுடன் ஜப்பான் நாடும் உள்ளது.

அமெரிக்காவின் மேலே சொல்லப்பட்ட சந்தை மதிப்பு அந்நாட்டின் பொருளாதார(GDP) மதிப்பில் 194.5 சதவீதமாகும். ஹாங்காங் நாட்டின் பங்குச்சந்தை 3.96 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆறாம் மற்றும் ஏழாம் இடம் முறையே பிரான்சு மற்றும் ஐக்கிய ராச்சியம் ஆகிய நாடுகள்(2.82 டிரில்லியன் டாலர்கள்) உள்ளன.

எட்டாவது இடத்தில் கனடா 2.64 லட்சம் கோடி டாலர்களுடனும், ஒன்பதாவது இடத்தில் சவுதி அரேபியா 2.42 லட்சம் கோடி டாலர்களுடனும் மற்றும் பத்தாவது இடத்தில் ஜெர்மனி 2.28 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடனும் உள்ளது. சொல்லப்பட்ட தரவுகள் 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டுகளுக்குள் கணக்கிடப்பட்டது.

கடந்த 1975ம் ஆண்டில் உலக பங்குச்சந்தையின் மதிப்பு 11.4 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தநிலையில் 2020ம் ஆண்டின் முடிவில் 93.68 லட்சம் கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது. அதாவது உலக பொருளாதார மதிப்பில் வெறும் 27 சதவீதமாக இருந்த பங்குச்சந்தை பங்களிப்பு இன்று 135 சதவீதத்திற்கும் மேலாக காணப்படுகிறது.

நடப்பில் மிகப்பெரிய பங்குச்சந்தை உள்ள நாடுகளில் குறிப்பிட்ட பங்குச்சந்தை(Stock Exchange) அடிப்படையில் காணுகையில், அமெரிக்காவின் நியூயார்க் சந்தை(NYSE) 26.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இந்த சந்தை கடந்த 1792ம் ஆண்டு துவங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தில் அமெரிக்காவின் நாஷ்டாக்(NASDAQ) சந்தை உள்ளது. கடந்த 1866ம் வருடம் துவங்கப்பட்ட சீனச் சந்தையின் ஷாங்காய்(SSE) 6.87 டிரில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நான்காம் இடத்தில் ஐரோப்பாவின் யூரோ நெக்ஸ்ட்(EuroNext) சந்தையும், ஐந்தாவது இடத்தில் ஹாங்காங் சந்தையின் HKEXம் உள்ளன. இந்தியாவின் பழமையான மும்பை பங்குச்சந்தை பத்தாவது இடத்தில் 3.59 டிரில்லியன் டாலர்களுடன் உள்ளது. இச்சந்தை கடந்த 1875ம் வருடம் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் அதிக சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனத்தின் அடிப்படையில், ஆப்பிள் நிறுவனம் 2.9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனமும், மூன்றாம் இடத்தில் சவுதி அரம்கோ நிறுவனமும் உள்ளன.

நான்காம் மற்றும் ஐந்தாம் இடம் முறையே கூகுள்-ஆல்பாபெட் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஆறாவது இடத்தில் என்விடியா(Nvidia) மற்றும் ஏழாம் இடத்தில் மெட்டா(Meta) நிறுவனமும் உள்ளது.

திருவாளர் வாரன் பப்பெட்டின் பெர்க்சயர் ஹாத்தவே நிறுவனம் எட்டாம் இடத்திலும், எலான் மஸ்க்கின் டெஸ்லா ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. எலி லில்லி நிறுவனம் 597 பில்லியன் டாலர்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி,வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

2023ம் ஆண்டில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

2023ம் ஆண்டில் உலக பங்குச்சந்தை குறியீடுகளின் வளர்ச்சி விகிதம் எப்படி ?

Global Market Indices in the year 2023 – Returns %

2023ம் ஆண்டை பொறுத்தவரை உலக பங்குச்சந்தையில் காணும் முக்கிய சந்தை குறியீடுகள் 20 சதவீதத்திற்கு மேலாக வருவாயை கொடுத்துள்ளன. குறிப்பாக அமெரிக்க பங்குச்சந்தை S&P 500 குறியீடு 24 சதவீதமும், ஜப்பானின் Nikkei 225 குறியீடு 30 சதவீதமும், ஐரோப்பாவின் Stoxx 50 குறியீடு 17.3 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சியடைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடுகளான தேசிய பங்குச்சந்தையின்  நிப்டி50 குறியீடு 22.60 சதவீதமும், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 21 சதவீதமும் உயர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் பங்குச்சந்தை 7.8 சதவீதமும், தென் கொரியாவின் கோஸ்பி(Kospi) 18.7 சதவீதமும் அதிகரித்துள்ளது. இருப்பினும் சீனாவின் S&P China 500 குறியீடு 12.50 சதவீதம் மற்றும் ஹாங்காங் நாட்டின் Hang Seng 14 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

2023ம் ஆண்டில் காணப்பட்ட உலகளாவிய போர் பதற்ற சூழ்நிலை, பொருளாதார மந்தநிலை மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட சிக்கல் ஆகியவற்றால் தங்கத்தின் தேவை அதிகரித்து சொல்லப்பட்ட வருடத்தில் தங்கம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகளவில் வீட்டுமனைத் துறை(Real Estate – REITs) குறியீடும் 11.50 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. 2020 மற்றும் 2021ம் வருடங்களில் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கிற்கு பிறகு, கடந்த 2023ம் ஆண்டில் நாட்டின் முக்கிய பெருநகரங்களில் வீட்டுமனை விற்பனை 25 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் Dow Jones Real Estate குறியீடு 7.8 சதவீதம் வளர்ந்துள்ளது. அதே வேளையில் கச்சா எண்ணெய் கடந்த ஆண்டு 11 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.    

அமெரிக்க கடன் பத்திரங்களின் வருவாய் 2023ம் ஆண்டில் 5.8 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளில் கடந்த சில காலாண்டுகளாக பணவீக்க விகிதம் ஏற்ற-இறக்கமாக காணப்பட்ட நிலையில் வங்கி வட்டி விகிதமும் கணிசமான வருவாயை கடந்த ஆண்டு தந்துள்ளது. பரஸ்பர நிதியில் கிடைக்கப்பெறும் கடன் பண்டுகள்(Debt Mutual Funds) சராசரியாக 6 முதல் 7 சதவீதம் வரை வருவாயை அளித்துள்ளது.

நாணயச்சந்தையில் மெக்ஸிகோ நாட்டின் பெசோ(Peso) 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இது போல சுவிட்சர்லாந்து நாட்டின் பிரான்க் 10 சதவீதமும், பிரிட்டிஷ் பவுண்டு 5.30 சதவீதமும் மற்றும் யூரோ 3 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் அமெரிக்க டாலர் 2 சதவீதமும், சீன யுவான் 2.80 சதவீதமும் மற்றும் ரசியாவின் ரூபெல் 17.50 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்திய ரூபாயும் 0.5 சதவீதம் என்ற அளவில் குறைந்து காணப்பட்டுள்ளது.   

வரக்கூடிய காலம் உலக பொருளாதாரத்திற்கு மிகவும் நெருக்கடியான கால நிலையாக இருப்பதால், தொடர்ச்சியாக ஏற்றத்தில் இருந்து வரும் பங்குச்சந்தையில் அதிக ஏற்ற-இறக்கத்தை எதிர்பார்க்கலாம். எந்தவொரு முதலீட்டுத் திட்டமும்(Shares, Gold, Bonds, Real Estate) நீண்டகாலம் தொடர்ச்சியாக பல வருடங்களுக்கு ஏற்றத்தை மட்டுமே சந்திக்கும் என்பது பொருளாதார வரலாற்றில் இல்லை. இது போன்ற சூழ்நிலையில் முதலீட்டை பரவலாக்கம்(Asset Allocation) செய்வது நல்லது. நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டை மேற்கொள்பவர்களுக்கு பொருளாதார மந்தநிலை, பங்கு முதலீட்டு வாய்ப்பை மேலும் அதிகப்படுத்தும்.

நேரடியான பங்கு முதலீட்டை(Direct Equity) சரியாக கையாளத் தெரியாதவர்கள் அல்லது நேரமில்லை என சொல்பவர்கள், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Multi Asset, Asset Allocator, Hybrid, Flexi & Multicap) மூலம் தங்களது முதலீட்டை பரவலாக்கம் செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com