Tag Archives: fundamental analysis

பளிச்சிடும் சூர்யா பல்ப் (சூரிய ரோஷ்ணி) – பங்குச்சந்தை அலசல்

பளிச்சிடும் சூர்யா பல்ப் (சூரிய ரோஷ்ணி) – பங்குச்சந்தை அலசல் 

Surya Roshni – Fundamental Analysis – Stocks

கடந்த 1973ம் ஆண்டு திரு பி.டி.அகர்வால் அவர்களால் துவக்கப்பட்டது தான் பிரகாஷ் சூர்ய ரோஷ்ணி நிறுவனம். பின்னாளில் இது சூர்ய ரோஷ்ணி லிமிடெட் நிறுவனமாக பெயர் மாற்றம் பெற்றது. ஆரம்ப காலத்தில் ஸ்டீல் டியூப்(Tube) தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இந்நிறுவனம் இன்று ஒளி விளக்குகள்(LEDs, Lighting), மின்னணு விசிறிகள், பல்வகையான ஸ்டீல், சமைலயறை உபகரணங்கள்(Kitchen Appliances) மற்றும் பி.வி.சி. பைப்புகள் என எண்ணற்ற பொருட்களை உற்பத்தி செய்து, அதிகளவில் ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனமாகவும் வளர்ந்துள்ளது.

நாட்டின் தலைநகரமான டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் ERW GI பைப் தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும், அதன் ஏற்றுமதியில் நாட்டின் 60 சதவீத சந்தைப் பங்களிப்பை சூர்ய ரோஷ்ணி நிறுவனம் கொண்டுள்ளது. GI பைப் உற்பத்தியில் தென் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகவும் சூர்ய ரோஷ்ணி இருப்பது கவனிக்கத்தக்கது. பூசப்பட்ட குழாய்(Coated API and Spiral Pipes) தயாரிப்பிலும் இந்நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. 

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் ஸ்டீல் பைப் சார்ந்த பொருட்கள் 80 சதவீத பங்களிப்பையும், ஒளி மற்றும் நுகர்வோர் பொருட்கள் 20 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. நிறுவனத்தின் உற்பத்தியில் 16 சதவீதம் ஏற்றுமதியாகிறது. ஒட்டுமொத்த பொருட்கள் விற்பனையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மட்டும் 45 சதவீத வருவாயை அளித்து வருகிறது.  

நிறுவனத்தின் ஸ்டீல் பைப் பிரிவு, குறிப்பாக எண்ணெய், எரிவாயு, விவசாயம், கட்டுமானம் மற்றும் நீர் மேலாண்மைத் துறைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் ஸ்டீல் பைப்புகள் உலகளவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ‘சூர்யா’ மற்றும் ‘பிரகாஷ் சூர்யா’ – உலகளவில் பிரபலமான இதன் முக்கிய பிராண்டுகளாகும். ஸ்டீல் பைப் உற்பத்திக்கான ஆலைகளை அரியானா, குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு இடங்களில் வைத்துள்ளது. இவை ஆண்டுக்கு சுமார் 12.76 லட்சம் MTPA(Million Metric Tonnes per annum) உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. 

மேலும் வாகனத்துறைக்கு தேவையான பைப்புகள், சைக்கிள் ரிம், நிழற்குடை, சோலார், தீத்தடுப்புகள் மற்றும் சாரக்கட்டுகளுக்கு(Scaffoldings) தேவையான பைப்புகள் மற்றும் ஸ்ட்ரிப்புகளையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களையும், 21,000க்கும் மேற்பட்ட சில்லரை வணிகக் கடைகளிலும் நிறுவனத்தின் ஸ்டீல் பைப்புகள் கிடைக்கப்பெறுகிறது.

ஒளி விளக்குகள் பிரிவில் கடந்த 1984ம் ஆண்டு முதல் தான் உற்பத்தி நடைபெற்றிருந்தாலும், இன்று நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக இப்பிரிவில் சூர்ய ரோஷ்ணி உள்ளது. பல்புகள், டியூப் லைட்கள், மின் சேமிப்பு விளக்குகள், ஸ்மார்ட் எல்.இ.டி. விளக்குகள் மற்றும் விசிறிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஆலைகளை உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் மற்றும் கர்நாடகாவில் கொண்டுள்ளது. நிறுவனத்தின் ஒளி விளக்குகள் பிரிவின் ஒட்டுமொத்த வருவாயில், எல்.இ.டி. விளக்குகளின் மூலம் மட்டுமே 62 சதவீத வருவாய் ஈட்டப்படுகிறது. இது போக சமையலறை உபகரணங்கள்(உணவு தயாரித்தல் மற்றும் வெப்பமூட்டுதல்), ஆடை பராமரிப்பு மற்றும் காலநிலை கட்டுப்பாடுகள் என நுகர்வோர் சார்ந்த பொருட்கள்(FMEG Sector) உற்பத்தியிலும் கவனம் செலுத்தி வருகிறது.

இது சார்ந்த தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையம் உத்திரப்பிரதேசத்தின் நொய்டாவில் இயங்கி  வருகிறது. இப்பிரிவில்(Lighting & Consumer Durables) நாடு முழுவதும் 2500க்கும் மேற்பட்ட டீலர்களையும், சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான சில்லறை வணிகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இந்நிறுவனத்தின் ஒளி விளக்குகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மின் விசிறிகள், கிச்சன் அடுப்புகள், குடியிருப்பு நீர் பம்பு மோட்டார்(Surya Water Pumps), பி.வி.சி. டேப்புகள், புதிய வண்ண ஒளி விளக்குகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கூலர்கள் போன்ற பொருட்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

Surya Roshni - New Product launch

நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு(Market Cap) ரூ. 5,578 கோடி(ஜனவரி 9, 2025).நிறுவனத்தின் பி.இ.விகிதம் 17 மடங்குகளிலும், கடன்-பங்கு விகிதம் 0.03 மடங்கு என்ற அளவிலும் உள்ளது. நிறுவனத்திற்கு கடந்த 2020ம் நிதியாண்டில் 1,090 கோடி ரூபாய் கடன் என்றிருந்த நிலையில், 2024ம் நிதியாண்டின் முடிவில் நான்கு கோடி ரூபாய் மட்டுமே கடனாக இருந்துள்ளது. செப்டம்பர் 2024 காலத்தில் நிறுவனம் குறுகிய காலக்கடனாக 60 கோடி ரூபாயை கொண்டுள்ளது. எனினும், தற்போதைய நிலையில், நீண்டகாலக்கடன் எதுவும் நிறுவனத்திற்கு இல்லை.

சூர்ய ரோஷ்ணி நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 20 மடங்குகளிலும், பங்கு விலைக்கும், நிறுவன வருவாய்க்குமான(Price to Sales) விகிதம் 0.75 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாகவும், அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு சுமார் 5 சதவீதம் என்ற அளவிலும் மற்றும் உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு ஒரு சதவீதமாகவும் உள்ளது.

பங்கு மீதான மூலதன வருவாய்(ROE) கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 சதவீதமாகவும், பத்து வருடங்களில் 13 சதவீதமாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 சதவீதமாகவும், இதுவே பத்து வருடங்களில் 10 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனத்தின் கூட்டு லாப வளர்ச்சியை காணுகையில், 5 வருடங்கள் மற்றும் 10 வருடங்கள் முறையே 22% மற்றும் 20% ஆக இருந்துள்ளன.

செப்டம்பர் 2024 காலாண்டு முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.2,213 கோடியாக இருக்கிறது. கடனை பொறுத்தவரை குறுகிய காலக்கடன் ரூ.60 கோடி மற்றும் நீண்ட காலக்கடன் எதுவுமில்லை. நிறுவனத்தின் பணவரத்தை(Cash Flow) பொறுத்தவரை கடந்த காலங்களில் சீராக வந்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒன்றுக்கு ரூ.256 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. நடப்பாண்டின் ஜனவரி ஒன்றாம் தேதி, பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கினை இந்நிறுவனம் வழங்கியுள்ளது. 2023ம் ஆண்டின் அக்டோபர் காலத்தில் இந்நிறுவனத்தின் முகமதிப்பு(Face value) பங்கு ஒன்றுக்கு 10 ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

            

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வுக்கானக் கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஷீலா ஃபோம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

ஷீலா ஃபோம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Sheela Foam Ltd – Fundamental Analysis – Stocks

நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷீலா ஃபோம் நிறுவனம், கடந்த 1971ம் ஆண்டு திருமதி. ஷீலா கவுதம் அவர்களால் துவங்கப்பட்டது. மெத்தை மற்றும் நுரை(ஃபோம்) தயாரிப்புத் துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும், பாலியூரிதீன்(Polyurethane – PU Foam) எனப்படும் பாலிமர் வகையைச் சார்ந்த கூட்டுப் பொருட்களின் மூலமான மெத்தை உற்பத்தியில் அதிக பங்களிப்பை கொண்ட நிறுவனமாகவும் ஷீலா ஃபோம் லிமிடெட் உள்ளது. ஒட்டுமொத்த இந்திய மெத்தைச் சந்தைப் பிரிவில் சுமார் 35 சதவீத பங்களிப்பை இந்நிறுவனம் கொண்டுள்ளது. 

இந்நிறுவனம் தளபாடங்கள்(Furniture Cushions), மெத்தைகள், தலையணைகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், மெத்தை பாதுகாப்பான், சோபா செட்கள் மற்றும் பிற படுக்கைகள் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் முக்கிய பிராண்டுகளாக Sleepwell, Kurl-on, Feather Foam, Joyce, Interplasp, SleepX, Lamiflex, Starlite உள்ளன. நாடெங்கிலும் பெரியளவிலான சுமார் 110 விநியோக நிறுவனங்களும், 13,000க்கும் மேற்பட்ட சில்லறை விநியோகர்களும் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட நேரடி விற்பனை நிலையங்களும் இந்நிறுவனத்திற்கு உள்ளன. ஷீலா ஃபோம் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் 25க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

ஆஸ்திரேலிய நாட்டின் மெத்தை சந்தைப் பிரிவில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் சுமார் 40 சதவீதமாகும். Joyce Foam என்ற நிறுவனப் பிராண்டில் அங்கே இந்நிறுவனத்தின் தொழில் பிரிவு பங்காற்றி வருகிறது. நிறுவனத்தின் வருவாயை பொறுத்தவரை ஒட்டுமொத்த வருவாயில் 70 சதவீதம் உள்நாட்டிலும், 16 சதவீதம் ஆஸ்திரேலியாவிலும் மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் 14 சதவீதமாகவும் உள்ளது.

நிறுவனத்தின் உற்பத்தி மூலமான விற்பனையில் மெத்தைகள் 40 சதவீத பங்களிப்பையும், மரச்சாமான்கள் 13 சதவீதமும், தொழில்நுட்ப ஃபோம் 27 சதவீதம் என்ற அளவிலும், பிற பிரிவுகளின் மூலம் 20 சதவீத வருவாயும் கிடைக்கப்பெறுகிறது. ஷீலா ஃபோம் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் பெரும்பாலும் வாகனத்துறை, ஒலியியல்(Sound absorption Foam), தங்கும் விடுதிகள்(Hotels), திருமண வீடுகள், விருந்தினர் மாளிகை, ஓய்வு விடுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.  

நிறுவனத்தின் முக்கிய மற்றும் பிரபல வாடிக்கையாளர்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பேஸ்3, டெஸ்க்கா, மஹிந்திரா, கம்மின்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், கோயல், மாருதி, அடிடாஸ், ஸ்டட்ஸ், சுப்ரீம், அர்பன் லேடர், ரிலாக்ஸ்வெல் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. 

ஷீலா ஃபோம் நிறுவனத்திற்கு உலகெங்கிலும் 17 உற்பத்தி ஆலைகள் உள்ளன. இவற்றில் ஐந்து ஆலைகள் ஆஸ்திரேலியாவிலும், ஸ்பெயினில் ஒன்றும், பிற ஆலைகள் உள்நாட்டிலும் இருக்கின்றன. உள்நாட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலைகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 1.29 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட உற்பத்தியை இந்நிறுவனத்தால் ஏற்படுத்த முடியும். ஆஸ்திரேலியாவில் உள்ள ஆலைகள் மூலம் சுமார் 11,000 மெட்ரிக் டன்களும், ஸ்பெயின் ஆலை மூலம் 17,000 மெட்ரிக் டன்களும் ஒரு ஆண்டுக்கு உற்பத்தி செய்ய முடியும்.

Sheela Foam - Geo presence in India

நிறுவனம் கடந்த சில வருடங்களாக தனது உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான முதலீடுகளையும், சந்தையில் உள்ள முக்கிய நிறுவனங்களை கையகப்படுத்துவதிலும் முனைப்பாக இருந்து வருகிறது. முக்கியமாக நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 2.5 சதவீதம் வரை விளம்பரத்திற்கு செலவிடப்படுகிறது. குறிப்பாக கடந்த 2023ம் ஆண்டில் நாட்டின் முக்கிய மெத்தை பிராண்டான கர்லான் எண்டர்பிரைசஸ்(Kurl-on) நிறுவனத்தை சுமார் ரூ.2000 கோடிக்கும்(95 சதவீத பங்குகள்), இந்தியாவில் இணைய வழி தளபாடப் பிரிவில்(Online Furniture Rental Platform) ஆதிக்கம் செலுத்தி வரும் பர்லெங்க்கோ(Furlenco) நிறுவனத்தை 300 கோடி ரூபாய்க்கும்(35 சதவீத பங்குகள்) ஷீலா ஃபோம் கையகப்படுத்தியது. 

கையகப்படுத்திய வேளையில் பர்லெங்க்கோ(Furlenco) நிறுவனத்தின் மதிப்பு 857 கோடி ரூபாய் பெறுமானம் என்றும், கர்லான் மெத்தை நிறுவனம் 3000 கோடி ரூபாய் மதிப்பை பெறும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இன்று கர்லான் மெத்தை நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.4,560 கோடி மற்றும் பர்லெங்க்கோ நிறுவனத்தின் மூலதன மதிப்பு 1,920 கோடி ரூபாய் (அக்டோபர் 2024). கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் கர்லான் நிறுவனத்தின் லாபமும் பெரும்பாலும் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே தனது மெத்தைச் சந்தைப் பங்களிப்பு விகிதத்தை அதிகரிக்க ஷீலா ஃபோம் நிறுவனம் கையகப்படுத்துதலை மேற்கொண்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் இன்டெர்ப்லாஸ்ப் நிறுவனத்தை சுமார் 40 மில்லியன் யூரோ முதலீட்டின் மூலம் மற்றும் ஆஸ்திரேலிய மெத்தை சந்தையில் முன்னணியில் உள்ள ஜாய்ஸ் ஃபோம் நிறுவனத்தை வாங்கியதும் இந்நிறுவனத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. உற்பத்தி ஆலைகளின் கொள்ளளவை அதிகரிக்க சமீபத்தில் இந்நிறுவனம் சுமார் 350 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயின் நாட்டில் உள்ள மெத்தைச் சந்தைப் பிரிவில் நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பை அதிகரிக்கத் தேவையான விஷயங்களை இந்நிறுவனம் செய்து வருகிறது. இணையம் வழியிலான விற்பனையையும் அதிகரிக்க பல்வேறு புதுமைகளை இந்நிறுவனம் புகுத்தி வருகிறது. அதன் வெளிப்பாடாக கடந்த சில காலாண்டுகளில் இணையம் வழியான வருவாயும் வளர்ச்சியடைந்துள்ளது.

Sheela Foam - PnL statement

மெத்தை சந்தையை பொறுத்தவரை பெரும்பாலான செலவுகள் மூலப்பொருட்களைச் சார்ந்து தான் உள்ளது. மூலப்பொருட்களின் விலையும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையைச் சார்ந்து இருப்பது, பெரும்பாலும் இந்நிறுவனத்தின் மூலப்பொருட்களுக்கான செலவினத்தில் அதிக ஏற்ற-இறக்கம் காணச் செய்யும். இதன் விளைவாக நிறுவனத்தின் விற்பனை வருவாய் அதிகமாக இருந்தாலும், இயக்க லாபம் மற்றும் நிகர லாபம் குறையலாம். நிறுவனத்தின் செலவுகளை காணுகையில், கடந்த பத்து வருட சராசரியாக மூலப்பொருட்களின் செலவினம் 55-60 சதவீதமாக இருந்துள்ளது.

ஷீலா ஃபோம் லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு(Market Cap) ரூ.9,200 கோடி. கடன்-பங்கு விகிதம் 0.48 மடங்கு என்ற அளவிலும், வட்டி பாதுகாப்பு விகிதம் 2.37 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 65.50 சதவீதமாகவும், நிறுவனத்தின் கடன் 1,436 கோடி ரூபாயாகவும் இருக்கிறது. நிறுவனர்கள் சார்பாக பங்கு அடமானம் எதுவுமில்லை. நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 276 ரூபாயாகவும், தற்போதைய பங்கின் விலை அதன் வருமானத்துடன் ஒப்பிடுகையில்(P/E) 94 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்தின் துறைச் சார்ந்த பி.இ. விகிதம் 62.1 என்பது கவனிக்கத்தக்கது.

2023-24ம் நிதியாண்டில் ஷீலா ஃபோம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ. 2,982 கோடியாகவும், செலவினம் 2,678 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் 10 சதவீதமாகவும், நிகர லாபம் ரூ.184 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் இதர வருமானம் 136 கோடி ரூபாயாக உள்ளது. செப்டம்பர் 2024 காலத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Cash Reserves) ரூ.2,943 கோடி. நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ.1,436 கோடி: இவற்றில் ரூ.496 கோடி குறுகிய காலக் கடனாகவும், 742 கோடி ரூபாய் நீண்டகாலக் கடனாகவும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக நிறுவனத்தின் கடன் தொகையும் அதிகரித்து வருகிறது. இது சார்ந்து நிறுவனத்தின் சொத்துக்களும் அதிகரித்து வந்துள்ளது. அதே வேளையில் சரக்குகளும்(Inventories), வர்த்தக வரவுகளும்(Trade Receivables) அதிகரித்து காணப்படுகிறது. வர்த்தக வரவுகளில் பெரும்பான்மையான தொகை ஆறு மாதத்திற்கு குறைவான காலத்தில் இருந்துள்ளது.

Sheela Foam - Brands

செப்டம்பர் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் நிரந்தர சொத்து(Fixed Assets) மதிப்பு ரூ.3,148 கோடி. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம் கடந்த பத்து ஆண்டு காலத்தில் சராசரியாக 11 சதவீதம் என்ற அளவில் உள்ளது. விற்பனை வருவாய் வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் எட்டு சதவீதமாகவும், அதுவே 10 ஆண்டுகளில் 9 சதவீதமாகவும் இருந்துள்ளது.லாப வளர்ச்சியை பொறுத்தவரை, கடந்த 5 வருடங்களில் ஒரு சதவீதமாகவும், 10 ஆண்டுகளில் இது 17 சதவீதமாகவும் இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவனப் பங்கின் விலை 23 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே வேளையில் 2020ம் ஆண்டில் முதலீடு செய்திருந்தால் தற்போது 36 சதவீத ஏற்றமாகும். கடந்த ஒரு வருடத்தில் இந்தப் பங்கின் அதிகபட்ச விலை ரூ.1297 வரை சென்றுள்ளது. 2022ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்நிறுவனம் ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்குகளை(Bonus issue 1:1) அறிவித்திருந்தது. 

நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. ராகுல் கவுதமும், நிர்வாக இயக்குனராக திரு. துஷார் கவுதமும் உள்ளனர். உலகளவில் இந்தியத் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. நிலேஷ் மசும்தார் உள்ளார்.  நிறுவனம் சார்பில் 65.50 சதவீதப் பங்குகள் உள்ள நிலையில், அவற்றில் திரு. துஷார் கவுதம் மட்டும் தன்னிடத்தே 31.44 சதவீத பங்குகளை வைத்துள்ளார். அன்னிய நிறுவன முதலீட்டுப் பங்களிப்பு(FII) 6.60 சதவீதமாகவும், உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு(DII) 22.30 சதவீதமாகவும் உள்ளது. ஷீலா ஃபோம் நிறுவனத்தின் தற்போதையப் பங்கு விலை ஒன்றுக்கு ரூ.844 என வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்தின் மூலப்பொருட்கள் பெரும்பாலும் கச்சா எண்ணெய் விலையை சார்ந்து இருப்பதால் இதன் வருவாய்-லாப விகிதம் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படலாம். 

ஷீலா ஃபோம் நிறுவனத்திற்கு உலகலாவிய துறைச் சார்ந்த போட்டியாளர்களாக கார்பெண்டர், ரெக்டிசல், ப்ரோசீட், எஸ்ஸென்ட்ரா போன்ற நிறுவனங்கள் உள்ளன. உள்நாட்டில் டூரோபிளக்ஸ், ஸ்ப்ரிங்வெல், காயிர்பிட், திருப்பதி ஃபோம்  மற்றும் பிற நிறுவனங்கள் போட்டியாளராக உள்ளன.

Sleep Well(Strong in North & West in India): Focus on PU Foam Mattress

Kurl-on (Strong in East & South in India): Focus on Rubberized Coir Mattress  

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வுக்கானக் கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல்

மூச்சுப்பயிற்சியும், மூலதனமும் – சாமானியனின் நிதித்திட்டமிடல் 

Layman’s Personal Financial Planning – Invest & Breathe

“மனதைத் தெளிவுபடுத்துவதற்கும், மன அழுத்தத்தைப் போக்குவதற்கும் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியே அடிப்படை” என மருத்துவம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. 

“A Deep breathing exercise to clear the mind and relieve stress”

மூச்சுப்பயிற்சியினால் மனித உடலின் இரத்த அழுத்தம் குறைவதும், மற்ற உடலுறுப்புக்கள் சீராக இயங்குவது மட்டுமில்லாமல், அமைதி மற்றும் நல்வாழ்வு வாழ்வதற்கான புது தெம்பும் நமக்கு கிடைக்கப்பெறுகிறது.    

நவீன உலகத்தில் உடல்நலனும், செல்வமும் இரு நண்பர்களாக தான் வலம் வருகிறது. பொருள் ஆதாரமற்ற மனித வாழ்க்கையை இன்று நாம் இவ்வுலகில் காண இயலாது. அதே போல சுவர் இருந்தால் தான் சித்திரமும். 

அதற்காக நாம் கடினமாக உழைப்பதோ, உடல்நலத்தை பேணுகிறேன், உடல் எடையை இத்தனை நாட்களில் குறைக்கிறேன் என நாள்தோறும் ‘ஜிம்(Gym)’ பேர்வழியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சாதாரண நடைப்பயிற்சியும், மூச்சுப்பயிற்சியும் மற்றும் உணவில் கவனம் – அவரவர் வயது சார்ந்து மற்றும் தொழிலுக்கு ஏற்ப இதனை மாற்றிக் கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் அறிவை பயன்படுத்தி மற்றும் அதனை மேம்படுத்துதல் மூலம் நாம் செல்வத்தை எளிமையாக ஈட்டலாம். ஈட்டிய செல்வத்தை சேமிப்பு மற்றும் முதலீட்டின் மூலம் பெருஞ்செல்வமாக மாற்றலாம். 

நமது உடல்நலனை நாம் எப்படி பொறுமையாக கருத்தில் கொண்டு பேணுகிறோமோ, அதனை போல செல்வம் சேர்ப்பதிலும் கற்றல் மற்றும் பொறுமையும் அவசியம். ‘அதிகரித்த உடல் எடையை, சில நாட்களில் மிக விரைவாக குறைக்கிறேன்’ என நாம் எடுக்கும் ரிஸ்க் தன்மையும், ‘குறுகிய காலத்தில் பெரிய லாபத்தை அள்ளி விட வேண்டும்’ என முதலீட்டில் நாம் விளையாடும் ஊக வணிகமும்(Speculation) – இரண்டும் பக்கவிளைவை தரக்கூடியவையே !

பல வருடங்களாக நமது உடலில் இருக்கும் நோய்த்தன்மையை ஓரே நாளில் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விட்டால், பின்னாளில் நமது உடல் இயக்கங்கள் அடுத்து வரும் நாட்களில் தடுமாறும். இதன் காரணமாக மீண்டுமொரு கவனத்தை நாம் நம் உடல் நலன் மீது செலுத்த நேரிடும். இதற்கான காலமும், பணச்செலவும் அதிகமே. இதனை போல பல ஆண்டுகள் உழைத்து சம்பாதித்த பணத்தை கொண்டு பங்குச்சந்தையில் ஒரே நாளில் பல லட்சங்களையும், கோடிகளையும் ஈட்ட வேண்டுமென்ற ஆசை(பேராசை) எல்லோருக்கும் தான். ஆனால் அது அனைவருக்கும், எல்லா நேரங்களிலும் சாத்தியமா !    

கடந்த 2022-23ம் நிதியாண்டில் செபி|(SEBI) வெளியிட்ட ஒரு அறிக்கையின் படி, இந்திய பங்குச்சந்தையில் ஈடுபடும் 10 நபர்களில் ஒன்பது பேர் (Futures & Options Traders) தங்களது முதலீட்டு பணத்தை இழக்கின்றனர் என கூறுகிறது. சந்தையில் பணத்தை இழக்கும் நபர்களின் சராசரி இழப்பு ரூ.50,000 வரை உள்ளதாகவும், 28 சதவீதம் பேர் தங்களது முதலீட்டு இழப்பை, வெறும் பரிவர்த்தனை கட்டணங்கள் செலுத்துவதில் சந்திக்கின்றனர் எனவும் இந்த தரவு அறிக்கை கூறுகிறது. 

அப்படியிருக்க நாம் எதனை நோக்கி நாம் உழைத்த பணத்தை கொண்டு சென்றிருக்கிறோம் ? பங்குச்சந்தை முதலீடு நீண்ட காலத்தில் பலன் தரும் என நிரூபிக்கப்பட்டிருந்தாலும், அரசாங்கமே இதனை வெளிப்படையாய் சொன்னாலும்(சந்தை அபாயங்களுக்கு உட்பட்டதும்) நாம் என்னவோ குறுகிய காலத்தில் பணக்காரனாக ஆசைப்படுவதே. உண்மையில் பங்குச்சந்தையில் எளிமையாகவும், மிக விரைவாகவும் லாபமீட்ட முடிந்தால், ஏற்கனவே சந்தையில் லட்சம் கோடி ரூபாய்களில் மூலதன மதிப்பை கொண்ட டாட்டா, அம்பானி, பஜாஜ், கோத்ரேஜ், இன்னபிற குழுமங்கள் எங்கே ? அவர்களிடம் இல்லாத பணமா, நிர்வாகமா அல்லது அவர்களுக்கு தெரியாத பங்குச்சந்தை ரகசியமா. சொல்லப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தாலும், உண்மையில் அவை தங்களது தொழில்களை தான் நம்பியுள்ளன. அவர்களது தொழிற் திறனும், வாடிக்கையாளர்களும் தான் பின்னாளில் முதலீட்டாளர்களால் பங்கு விலையில் அங்கீகரிக்கப்படுகிறது.

சாமானியனின் நிதித்திட்டமிடலில் முதல் படி:

தனது குடும்பத்திற்கு தேவையான நிதிப்பாதுகாப்பை ஏற்படுத்துவது தான் –  வருவாய் ஈட்டும் குடும்பத் தலைவருக்கு போதுமான டேர்ம் காப்பீடு(Term Insurance), குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்ந்தாற் போல மருத்துவ காப்பீடு(Mediclaim), அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்யும் நபராக இருக்கும் நிலையில், அவருக்கு தேவையான விபத்துக் காப்பீடு(Accidental Coverage).

இது போக அவசர கால நிதியை(Emergency Fund) உருவாக்குதல், குடும்ப நபர்களுக்கான நிதித்தேவையை இலக்குகளாக மாற்றுதல்(Creating Financial Goals). மேலே சொன்ன ஐந்து நிலைகளுக்கும் தனிநபர் ஒருவரின் வருமானம் மற்றும் குடும்ப நபர்களின் தேவையை கருத்தில் கொண்டு திட்டமிடலாம். இந்த ஐந்தும் தவிர்க்க இயலாத நிலைகளாக மற்றும் அவசியமான ஒன்றாக உள்ளது.

நிதித்திட்டமிடலின் இரண்டாவது படியில்,

உங்களது நிதி இலக்குகளுக்கான சரியான சேமிப்பு அல்லது முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது(Identifying Suitable Investment schemes). பொதுவாக சேமிப்பு எனும் போது அரசு சார்ந்த அஞ்சலக சேமிப்பு, வங்கி சேமிப்பு, பி.எப். பிடித்தம், சிறியளவில் நகை சேமிப்பு, சீட்டு(அரசு பதிவு பெற்ற மற்றும் நம்பகமான) ஆகியவை நமக்கு நினைவில் வரும். 

இவை பெரும்பாலும் குறைந்த வட்டி வருவாயை(பணவீக்கத்தை விட குறைவு) கொண்டிருந்தாலும், குறுகிய கால இலக்குகளுக்கு சிறந்தது. இதனை விடுத்து அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொன்சி(Ponzi Scam) மோசடி பேர்வழிகளிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை அரசாங்கம் வெளியிடும் அல்லது அரசு நிர்வாகம் செய்யும் சேமிப்பு திட்டங்களை மட்டுமே நாடுவது நல்லது.

நடுத்தர மற்றும் நீண்டகால நிதி இலக்குகளுக்கு மியூச்சுவல் பண்ட்(Mutual Funds) என சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். இந்த திட்டங்களில் ஏற்ற-இறக்க ரிஸ்க் தன்மை இருப்பதால், நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை ஏற்படுத்தலாம. இதன் காரணமாக நமது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை சரியான காலத்தில் பெற முடியும். பரஸ்பர நிதிகளில் நீண்டகாலத்திற்கு என முதலீட்டு செய்து விட்டு, இலக்குகளை அடையும் முன்னர் அல்லது இடைவெளி காலத்தில் முடிந்தளவு பணத்தை வெளியில் எடுக்காமல் இருப்பது நல்லது. அவ்வாறு எடுக்கும் நிலையில், நாம் கூட்டு வட்டியின் முழுமையான பலனை(Power of Compounding) அடைய முடியாமல் போகலாம்.

பரஸ்பர நிதி முதலீட்டின் வாயிலாக நாம் அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், பங்குகள் என பல்வேறு வகையான திட்டங்களில்(Asset Allocation) நமது முதலீட்டை பரவலாக்க முடியும். 

மூன்றாவது மற்றும் இறுதிப்படியாக,

பெருஞ்செல்வத்தை ஈட்டுவது இன்றைய காலத்தில் தேவையான ஒன்றாகி விட்டது. முன்னொரு காலத்தில் மனித உடற்சக்தியை மட்டுமே நம்பியிருந்த குடும்பச் சமூகம், இன்று நிதிச் சொத்துக்களை தான் குடும்பத்திற்கான ஆதாரமாக வைத்துள்ளது. எனவே நாம் நம் குடும்ப உறுப்பினர்களுக்கான மற்றும் அடுத்த தலைமுறைக்கான செல்வத்தை சேர்ப்பதிலும், அவற்றினை கற்றுத்தருவதிலும் ஆர்வம் காட்ட வேண்டிய நிலையுள்ளது. செல்வம் சேர்ப்பது என்பது பணக்காரர்களுக்கு மட்டுமானதல்ல.

பெருஞ்செல்வம் ஈட்ட நாம் தொழில் திறனை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நமக்கான தொழில் ஏதுமில்லை அல்லது அவற்றை செய்ய நமது மனம் விரும்பாத போது, மற்றவர்களின் தொழிலில் முதலீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்(அதற்காக மீண்டும் பொன்சி மோசடியிடம் மாட்டி கொள்ளாதீர்கள் !). முதலீடு செய்யப்படும் தொழில் நிறுவனம் அரசு அல்லது சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகவும், நிர்வாகத்திறன் படைத்ததாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் நாம் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கா விட்டாலும், நமது முதலீட்டு பணம் நமக்காக திறம்பட வேலை செய்யும்.  

மற்றவர்களது தொழிலில் ஒரு சாமானியனும் முதலீடு செய்யலாம் என்பதே, இன்றைய பங்குச்சந்தை வாய்ப்பு(Public & Private Equity – Listed & Unlisted). பங்குச்சந்தை முதலீடு பற்றிய அடிப்படை கற்றலை கற்றுக் கொண்ட பின்னர் தான், சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமென்ற நோக்கத்தை கொண்டிருந்தால் சிறப்பு. இல்லையென்றால்,பதிவு பெற்ற மற்றும் நம்பகத்தனமான நிறுவனங்களின் மூலம் மட்டுமே முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். பங்குச்சந்தையிலும் பேராசை காட்டி மோசடி செய்யும் பேர்வழிகள் ஏராளம் ! 

உங்களால் பங்குச்சந்தையை புரிந்து கொள்ள முடியவில்லை எனில், முதலிரண்டு படிநிலைகளோடு இருந்து விடுவது நல்லது. 

மூச்சுப்பயிற்சியை மெதுவாக கவனித்தால் தான் மெருகும், நிதி முதலீடும் சாமானியனுக்கு அப்படித்தான் 🙂

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

பனாமா பெட்ரோகெம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Panama Petrochem Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1982ம் ஆண்டு தனியார் நிறுவனமாக துவக்கப்பட்ட பனாமா பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட், பல்வேறு வகையான பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் தயாரிப்பில் திரவ பாரஃபின் எண்ணெய்கள், பெட்ரோலியம் ஜெல்லி, மை எண்ணெய்கள், ஆன்டிஸ்டேடிக் கோனிங் எண்ணெய், ரப்பர் செயல்முறை எண்ணெய்கள், மின்மாற்றி எண்ணெய்கள், கேபிள் நிரப்புதல் கலவைகள் மற்றும் பாரஃபின் மெழுகு ஆகியவை அடங்கும்.

பெட்ரோலிய சிறப்பு தயாரிப்பு(Petroleum Specialty Products) பிரிவில் 80க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் தொழில் புரிந்து வருகிறது. இவை மைகள் மற்றும் பிசின்கள், ஜவுளி, ரப்பர், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், வாகனம், மின்சாரம், கேபிள்கள் மற்றும் பிற தொழில்துறைகளுக்கு இன்றியமையாதவை. 

1993ம் ஆண்டில் நிறுவனம் பொது நிறுவனமாக(Public Limited) பதிவு செய்யப்பட்டு 1994ம் ஆண்டு வாக்கில் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. 2011ம் ஆண்டில் தேசிய பங்குச்சந்தையில்(NSE) பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்திற்கு தற்போது உள்நாட்டில் 4 உற்பத்தி ஆலைகள் உள்ளது. 

வருவாயை பொறுத்தவரை நிறுவனம் கடந்த 2022-23ம் நிதியாண்டில் அழகுசாதனம் மற்றும் மருந்துத்துறை பிரிவுகளில் 24 சதவீதமும், மைகள் / பூச்சுகள் பிரிவில் 21 சதவீதமும், ரப்பர் செயல்முறை பிரிவில் 19 சதவீதமும், ஜவுளித்துறையில் 19 சதவீத வருவாய் பங்களிப்பையும் கொண்டுள்ளது. உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களில் 51 சதவீதம் ஏற்றுமதியில் மட்டுமே உள்ளது.

அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க துணைக் கண்டம், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பிராந்தியங்களுக்கு நிறுவனம் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாபர் இந்தியா, ஹூபர் குழுமம், ஏடிசி(ATC) டயர் ஆகியவை உள்ளன. 

நிறுவனம் சமீபத்தில் நான்கு புதிய தயாரிப்பு பொருட்களாக: மை மற்றும் பூச்சு தொழிலுக்கான அரோமா ஃப்ரீ டிஸ்டில்லேட்ஸ்(Aroma Free Distillates), பெயிண்ட் தொழிலுக்கான நறுமண இலவச கரைப்பான்கள், துளையிடுதல் மற்றும் எண்ணெய் ஆய்வுக்கான மக்கும் எண்ணெய்கள் மற்றும் ரப்பர் தொழில்துறைக்கான நறுமணமற்ற புதிய எண்ணெய்கள் ஆகியவற்றை சந்தையில் வெளியிட்டுள்ளது. 

வருங்காலத்தில் பெரும்பாலும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே தங்களது இலக்கு என நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதன் முயற்சியாக கடந்த 2022-23ம் நிதியாண்டில் சுமார் 30,000 டன் திறன் கொண்ட இயந்திரத்தை நிறுவியுள்ளது. இவற்றில் தற்போது 50 சதவீதத்திற்கும் அதிகமானவை வணிகமயமாக்கப்பட்டுள்ளது.

பனாமா பெட்ரோகெம் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு(Market Cap) 1,953 கோடி ரூபாய். நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.157 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 21 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்திற்கு குறுகிய கால மற்றும் நீண்டகால கடன் என பெரிதாக எதுவுமில்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 69 சதவீதமாக இருக்கிறது. நிறுவனர்கள் சார்பாக பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 2,249 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.1,940 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) விகிதம் கடந்த பல வருடங்களாக சற்று ஏற்ற-இறக்கமாக இருந்திருந்தாலும், 2021ம் ஆண்டு முதல் ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம்(PBT) ரூ. 295 கோடியாகவும், நிகர லாபம் 233 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.940 கோடி(மார்ச் 2023). கடந்த 10 ஆண்டுகளில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் வளர்ச்சி சராசரியாக 13 சதவீதமும், கூட்டு லாப வளர்ச்சி 35 சதவீதமுமாக இருந்துள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(Return on Equity) கடந்த 5 வருடங்களில் 24 சதவீதமும், இதுவே பத்து வருட காலத்தில் சராசரியாக 20 சதவீத வளர்ச்சியையும் பெற்றிருக்கிறது. 

நிறுவனத்தை பொறுத்தவரை பாதகமான நிலையாக மூலப்பொருட்களின் விலை மாற்றம்(கச்சா எண்ணெய்), சுற்றுச்சூழல் அபாயங்கள், டாலர் விலை மாற்றம், துறையில் ஈடுபடும் போட்டி மற்றும் பெரு நிறுவனங்கள், அரசு கொள்கைகள் ஆகியவை. சாதகமான நிலை என காணுகையில் நிறுவனத்தின் தனித்துவமான தயாரிப்பு பொருட்கள், வலுவான வாடிக்கையாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு(R&D) ஆகியவற்றில் கவனம் செலுத்துதல், தொடர்ச்சியாக வருவாய் ஈட்டுதல், ஏற்றுமதி சந்தையில் காணப்படும் வாய்ப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்களுக்கான உலகளாவிய தேவை.

2022-23ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனம் ரொக்க கையிருப்பாக(Cash Equivalents) 222 கோடி ரூபாயை வைத்துள்ளது. கடந்த சில வருடங்களாக நிறுவனத்தின் பணப்பாய்வு(Cash Flow) தொகையும் மேம்பட்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

 

கேப்டன் பைப்ஸ் லிமிடெட் – ராஜ்கோட் – பங்குச்சந்தை அலசல்

கேப்டன் பைப்ஸ் லிமிடெட் – ராஜ்கோட் – பங்குச்சந்தை அலசல் 

Captain Pipes Limited – Fundamental Analysis – Stocks

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கேப்டன் குழுமத்தின் துணை நிறுவனம் தான் கேப்டன் பைப்ஸ் லிமிடெட். பிளாஸ்டிக் செய்யப்படாத பி.வி.சி(UPVC) குழாய்கள் மற்றும் பொருத்துதல் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது கேப்டன் பைப்ஸ் நிறுவனம். 

சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாக கருதப்படும் UPVC குழாய்கள் பொதுவாக வெப்ப செயல்திறன் மற்றும் நீடித்த ஆயுள் காலத்தை கொண்டிருக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் UPVC தொழில்நுட்பம், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. UPVC சாளரங்கள் பெரும்பாலும் பல்நோக்கு செயல்பாடுகளை கொண்டவை. 

கடந்த 2010ம் ஆண்டு துவக்கப்பட்ட கேப்டன் பைப்ஸ் நிறுவனம் UPVC குழாய்கள் பிரிவில் உறை குழாய்கள், பிளம்பிங் குழாய்கள், உறிஞ்சும் குழாய்கள், தோட்ட குழாய்கள், HDPE குழாய்கள் மற்றும் நீர்ப்பாசன உபகரணங்கள், SWR குழாய்கள், கரைப்பான் சிமெண்ட் மற்றும் பி.வி.சி. அழுத்த குழாய்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த குழாய்கள் பெரும்பாலும் நீர் வழங்கல் பகுதிகள்(Water Supply Lines), வடிகால் அமைப்பு, கழிவு நீர் பாதை, நீர்ப்பாசன அமைப்புகள், மின் வழித்தடம் மற்றும் கட்டுமான பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலை சுமார் 62,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு, ஜெர்மன் மற்றும் ஜப்பானிய தொழில்நுட்பத்தை(German extrusion lines and Japanese injection molding machine) கொண்டு குழாய்கள் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் தனது குழாய் விற்பனை கிளையை நிறுவியுள்ள கேப்டன் பைப்ஸ் நிறுவனம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா ஆகிய பெரு நில பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. 

அகமதாபாத் அருகே புதிதாக ஒரு ஆலையை(Greenfield Plant) அமைப்பதற்கான திட்டத்திற்கு, சமீபத்தில் நிறுவனத்தின் இயக்குனர் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக அமையவுள்ள ஆலை 20,000 மெட்ரிக் டன் திறன் கொண்டதாகவும், இதற்கான மொத்த முதலீடு 25 கோடி ரூபாய் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய நிலையிலிருக்கும் உற்பத்தி திறனை இரட்டிப்பாக முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு வாக்கில் மும்பை பங்குச்சந்தையின் SME பிரிவில் கேப்டன் பைப்ஸ் நிறுவனம், பங்கு ஒன்றுக்கு 40 ரூபாய் என்ற விலையில் தனது பொதுப்பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. பின்னர் நடப்பு 2023ம் வருடத்தின் ஜூன் மாதத்தில் மும்பை பங்குச்சந்தையின் பிரதான பலகைக்கு(Migration) மாற்றப்பட்டுள்ளது. ஒன்பது வருடத்திற்கு முன்பு, SME பிரிவில் பங்கு வெளியிடுகையில் இதன் சந்தை மதிப்பு சுமார் நான்கரை கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 339 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

நிறுவனத்தின் கடன்-பங்கு தன்மை 0.13 மடங்கிலும், புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.1.44 என்ற அளவிலும் உள்ளது. நடப்பாண்டின் மார்ச் மாதத்தில் நிறுவனம் ஒரு பங்குக்கு இரண்டு பங்குகள் என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை அளித்துள்ளது. அதே காலத்தில் நிறுவனத்தின் முக மதிப்பும்(Face value) 10 ரூபாயிலிருந்து ஒரு ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 85 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.81 கோடியாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) கடந்த பத்து வருடங்களில் சராசரியாக ஐந்து சதவீதம் என்ற அளவில் உள்ளது. சொல்லப்பட்ட நிதி ஆண்டில் நிறுவனம் ரூ.1.81 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

கடந்த பத்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 46 சதவீதமாகவும் இருந்துள்ளது. அதே வேளையில் இதன் பங்கு விலை கடந்த மூன்று வருட காலத்தில் 200 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் பெற்றுள்ளது. 2023ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 6.10 கோடி ரூபாயாக உள்ளது. 

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 72 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. நிறுவனத்தின் தலைவராக திரு. ரமேஷ் கிச்சாடியா மற்றும் நிர்வாக இயக்குனராக திரு. கோபால் கிச்சாடியா ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். 

கேப்டன் குழுமத்தின் மற்ற துணை நிறுவனங்களாக கேப்டன் பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட், கேப்டன் பாலிபிளாஸ்ட் லிமிடெட், கேப்டன் டெக்னோகாஸ்ட் மற்றும் கேப்டன் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவை உள்ளன.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022-23ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.19,477 கோடி

2022-23ம் நிதியாண்டில் ஐ.டி.சி. நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ.19,477 கோடி 

ITC Ltd reported a net profit of Rs.19,477 Crore in FY 2022-23

112 வருட தொழில் அனுபவம் கொண்ட ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம் தனது 2022-23ம் நிதியாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. பில்லியன் டாலர் வருவாயை கொண்ட இந்நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 90 நாடுகளுக்கும் மேலாக இதன் பொருட்கள் ஏற்றுமதியிலும், சுமார் 60 லட்சம் சில்லறை விற்பனை நிலையங்களையும் இந்நிறுவனம் கொண்டிருக்கிறது.

புகையிலை, விவசாயம் மற்றும் உணவுப்பொருட்கள், காகிதம் மற்றும் பேக்கேஜிங், நட்சத்திர தங்கும் விடுதிகள், தகவல் தொழில்நுட்பம் ஆகியவை நிறுவனத்தின் முக்கிய துறைகளாக உள்ளது. ஐ.டி.சி. நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 5.21 லட்சம் கோடி. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில், புகையிலை பொருட்களின் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய் 37 சதவீதமாக உள்ளது.

2022-23ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.70,937 கோடியாகவும், செலவினம் 45,272 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) 36 சதவீதமாகவும், இதர வருமானமாக ரூ.2,053 கோடியை ஈட்டியுள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 25,866 கோடி ரூபாய் மற்றும் நிகர லாபம் ரூ.19,477 கோடி.

2021-22ம் நிதியாண்டினை ஒப்பிடுகையில் தற்போது சொல்லப்பட்ட வருவாய் 17.6 சதவீத வளர்ச்சியையும், நிகர லாபம் 24.5 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது. 2022-23ம் நிதியாண்டில் பங்குதாரர்களுக்கான ஈவுத்தொகை(Dividend) பங்கு ஒன்றுக்கு ரூ.15.50 ஆக சொல்லப்பட்டுள்ளது(ஏற்கனவே அளிக்கப்பட்ட ரூ.6/பங்கு சேர்த்து).

எப்.எம்.சி.ஜி(FMCG) துறையின் வருவாய் 20 சதவீதமும், விவசாயம் 12 சதவீதமும், காகிதம் மற்றும் பேக்கேஜிங் 19 சதவீதமும் மற்றும் புகையிலை பொருட்களின் வருவாய் 20 சதவீதமுமாக வளர்ச்சி அடைந்துள்ளது. Aashirvaad, Sunfeast, Yippee, Dark Fantasy, Classmate Notebooks, Mangaldeep, Fiama, Vivel, B Natural, Nimyle, Engage, Shower to Shower, Savlon, Fabelle, Mom’s Magic, Sunrise Foods, Paperkraft, AIM தீப்பெட்டிகள், Charmis, Dermafique ஆகியவை நிறுவனத்தின் பிரபல பிராண்டுகளாகும்.

பங்குச்சந்தை – பண்டமென்டல் அனாலிசிஸ் – இலவச வகுப்புகள் – 14 நாட்கள் 

2023ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 67,912 கோடி ரூபாய். நிறுவனத்திற்கு நீண்டகால கடன்கள் எதுவுமில்லை. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 56 ரூபாயாகவும், பங்கு விலைக்கும், விற்பனைக்குமான இடைவெளி 7.35 மடங்குகளிலும் உள்ளது. 

கடந்த ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் வளர்ச்சி 10 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 12 சதவீதமாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் பங்கு முதலீடு மீதான வருவாய்(Return on Equity) கடந்த பத்து வருட காலத்தில் சராசரியாக 25 சதவீதம் தந்துள்ளது. பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 57 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபத்தில் புகையிலை பொருட்களின்(Cigarettes) பங்களிப்பு மட்டும் 60 சதவீதமாக இருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி

2022-23ம் நிதியாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் – ரூ. 24,108 கோடி 

Infosys reported a net profit of Rs.24,108 Crore in the Financial year 2022-23 – Results

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட், கடந்த வார முடிவில் தனது 2022-23ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவு மற்றும் ஒட்டுமொத்த ஆண்டுக்கான நிதி அறிக்கையையும் வெளியிட்டிருந்தது. 

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 37,441 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ. 28,443 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலாண்டில் இயக்க லாப விகிதம்(OPM %) 24 சதவீதமாக உள்ளது. நான்காம் காலாண்டின் முடிவில் நிறுவனம் ரூ. 6,134 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

இதற்கு முந்தைய ஆண்டின்(2021-22) நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது சொல்லப்பட்டிருக்கும் வருவாய் 16 சதவீதமும், நிகர லாபம் 8 சதவீதமுமாக வளர்ந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டினை ஒட்டுமொத்தமாக காணும் போது, நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,46,767 கோடியாகவும், செலவினம் 1,11,637 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. 

சொல்லப்பட்ட நிதியாண்டின் முடிவில் நிறுவனம் 24,108 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் பங்கு மீதான வருவாய்(EPS) 58 ரூபாயாக உள்ளது. 2011-12ம் நிதியாண்டில் இது 18 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் பெரும்பாலான வருவாய் டிஜிட்டல் சேவையை சார்ந்தும், நிதித்துறை(Financial Services) சார்ந்த சேவைகளிலிருந்தும் பெறப்படுகிறது.  

புவியியல் சார்ந்து காணும் போது, நிறுவனத்தின் 62 சதவீத வருவாய் வட அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. ஐரோப்பாவில் 25 சதவீதமும், உள்நாட்டில் 3 சதவீதத்திற்கும் குறைவாகவே வருவாய் ஈட்டப்படுகிறது. உலகின் சிறப்பான 500 நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனமும் இருப்பது கவனிக்கத்தக்கது.

இன்போசிஸ் நிறுவனத்தின்(Infosys Limited) முக்கிய வாடிக்கையாளர்களாக மெர்சிடஸ்-பென்ஸ், எச்.எஸ்.பி.சி. வங்கி, லாக்கீட் மார்ட்டின், அமெரிக்க ராணுவம், அமெரிக்க கடற்படை, ஐ.பி.எம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் டச்சு வங்கி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இன்போசிஸ் நிறுவனத்தின் இந்திய சந்தை மதிப்பு ரூ. 5.22 லட்சம் கோடி. 

கடந்த நிதியாண்டில் எதிர்பார்த்த வருவாய் மற்றும் லாப மதிப்பீட்டை காட்டிலும் குறைவாக இருந்ததும், நடப்பு நிதியாண்டுக்கான வருவாய் வழிகாட்டல்(Financial Guidance) நிறுவனத்தின் சார்பில் குறைவாக மதிப்பிடப்பட்டிருந்ததால், திங்கள் கிழமை அன்று (17-04-2023) இந்த பங்கின் விலை 10 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியை சந்தித்தது. நீண்டகால முதலீட்டாளர்களிடையே இது எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாது, விலை வீழ்ச்சியால் பங்கு வாங்குவதற்கான வாய்ப்பையும் இது போன்ற நிகழ்வு வழங்குகிறது.

உலக அளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலை அச்சம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மாற்றம் ஆகியவற்றால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை சரிவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இன்போசிஸ் நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. அதன் கடன்-பங்கு விகிதம் 0.11 என்ற அளவில் உள்ளது. மார்ச் 2023 முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ. 73,338 கோடியாக உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி சராசரியாக 14 சதவீதமும், லாப வளர்ச்சி 10 சதவீதமாகவும் இருந்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 17 சதவீதம் (கூட்டு வட்டியில்) ஏற்றம் பெற்றுள்ளது. ஒரு வருட காலத்தில் 28 சதவீதம் இறக்கமடைந்துள்ளது. அடிப்படை பகுப்பாய்வின் படி(Cash Flow – Fundamental Analysis), இன்போசிஸ் பங்கின் விலை ரூ. 900 – ரூ. 1,100 என்ற அளவில் அமைந்துள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

நம்ம ‘சொட்டு நீலம்’ நிறுவனம் – ஜோதி லேப்ஸ் லிமிடெட்(உஜாலா)

Jyothy Labs Limited – Fundamental Analysis – Stocks

கேரள மாநிலத்தை சேர்ந்த திரு. எம்.பி. ராமச்சந்திரன் அவர்களால், கேரளாவை தலைமையிடமாக கொண்டு 1983ம் ஆண்டில் துவங்கப்பட்டது தான் ஜோதி லேப்ஸ் நிறுவனம் (Jyothy Laboratories). எப்.எம்.சி.ஜி.(FMCG) துறையில் தொழில் புரிந்து வரும் இந்நிறுவனம் ஆரம்பநிலையில் ஒரே ஒரு பொருளை மட்டும் உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்தது. இன்று ஆண்டுக்கு பில்லியன் ரூபாய் மதிப்பிலான வருவாயை கொண்டும், சுமார் 6,900 கோடி ரூபாய் சந்தை மதிப்பையும் கொண்ட நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

வீட்டு பராமரிப்பு, துணிமணிகள் மற்றும் தனிநபர் பராமரிப்பு ஆகிய பிரிவுகளில் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பிரபல சொட்டு நீலமான, ‘உஜாலா’ உற்பத்திக்காக 1992ம் ஆண்டு சென்னையில் ஒரு உற்பத்தி ஆலையை துவக்கியது. துணிமணி பராமரிப்பில், ‘ Ujala, Henko, Mr.White மற்றும் More Light’ இதன் முக்கிய பிராண்டுகள். நாட்டின் துணிமணி பராமரிப்புக்கான பொருட்கள் பிரிவில், 81 சதவீத சந்தை மதிப்பை இந்நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் துணிமணி பராமரிப்பு பிரிவு மட்டும் 37 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில்(Dish Wash) இதன் ஒட்டுமொத்த வருவாயில் 38 சதவீதத்தையும், தனிநபர் பராமரிப்பு பிரிவில் 10 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. பாத்திரம் கழுவும் பிரிவில், ‘Exo, Prill’ இதன் முக்கிய பிராண்டுகள். இந்த துறையில் 11 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளது. இந்த பிரிவில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் ஜோதி லேப்ஸ் வலம் வருகிறது.

தனிநபர் பராமரிப்பு பிரிவில், ‘Margo, Neem Active மற்றும் Fa’ இதன் பிரபல பிராண்டு பொருட்கள். வீட்டு பூச்சிக்கொல்லி சார்ந்த பொருட்களையும் இந்நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இந்த பிரிவில் 21 சதவீத பங்களிப்பை ஜோதி லேப்ஸ் வைத்துள்ளது. ‘Maxo கொசுவர்த்தி, T-Shine Cleaner, Maya ஊதுபத்திகள்’ ஆகியவை இதன் பிராண்டுகளாக உள்ளன. 

நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக சேர, சரக்கு மேலாண்மை அமைப்பையும்(Freight Management System) இந்நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நான்காம் தொழில் புரட்சியின் கீழ் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஜோதி லேப்ஸ் முதலீடு செய்துள்ளது. 

2007ம் ஆண்டு மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் ஜோதி லேப்ஸ் லிமிடெட் நிறுவனம் பொது நிறுவனமாக பட்டியலிடப்பட்டது. தற்போது நிறுவனத்தின் தலைமையிடமாக மும்பை உள்ளது. இத்துறையில் புதிதாக நுழையும் மற்றும் ஏற்கனவே சந்தையில் சிறந்து விளங்கும் துறை சார் நிறுவனங்களை இந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. 2011ம் ஆண்டில் கென்கேல் இந்தியா(Henkel India) நிறுவனத்தை ஜோதி லேப்ஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.     

ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பிராண்டு பொருட்களுக்கு, பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், திரைப்பட துறையில் உள்ள நடிகைகள் ஷில்பா  ஷெட்டி மற்றும் மாதுரி தீக்சித் ஆகியோர் விளம்பர தூதர்களாக இருந்துள்ளனர். நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. ரா. லட்சுமி நாராயணன் அவர்களும், நிர்வாக இயக்குனராக எம்.ஆர். ஜோதி அவர்களும் உள்ளனர். நாட்டின் நம்பிக்கைக்குரிய பிராண்டுகளில் ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பொருட்கள் இன்றளவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,196 கோடியாகவும், இயக்க லாபம்(Operating Profit) 248 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் சராசரியாக வருடத்திற்கு 12-15 சதவீதம் என்ற அளவில் உள்ளது. சொல்லப்பட்ட ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 159 கோடி. செப்டம்பர் 2022 காலாண்டின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.1,428 கோடி. 

ஜோதி லேப்ஸ் நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக பங்குச்சந்தையில் உள்ளது. உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களிடம் 17 சதவீத பங்குகளும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்களிடம் 13 சதவீத பங்குகளும் உள்ளது. கடன் தன்மை குறைவாகவும், பங்கு மூலதனம் மீதான வருவாய் 14 சதவீதமாக(5 வருட காலத்தில்) இருப்பதும் சாதகமான நிலையாக பார்க்கப்படுகிறது.     

ஜோதி லேப்ஸ் நிறுவன பங்கின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் குறைந்தபட்ச விலையாக பங்கு ஒன்றுக்கு ரூ.134 ஆகவும், அதிகபட்ச விலையாக 223 ரூபாய் வரையிலும் வர்த்தகமாகியுள்ளது. 2020ம் ஆண்டின் கொரோனா ஊரடங்கு துவக்கத்தில் இந்த பங்கின் விலை 100 ரூபாய்க்கும் கீழ் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வு மற்றும் பணப்பாய்வு(Discounted Cash Flow) முறையில் மதிப்பிடும் போது, ஜோதி லேப்ஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ. 130-160 என்ற சராசரியை பெறும்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டாட்டா மெட்டாலிக்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

டாட்டா மெட்டாலிக்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

TATA Metaliks Limited – Fundamental Analysis – Stocks

நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான டாட்டா குழுமத்தின் ஒரு அங்கம் தான் டாட்டா மெட்டாலிக்ஸ். டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனமான டாட்டா மெட்டாலிக்ஸ் கடந்த 1990ம் ஆண்டு துவங்கப்பட்டது. இரும்பு குழாய்(Pig iron and Ductile Iron Pipes) உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனமாக டாட்டா மெட்டாலிக்ஸ் உள்ளது.

ஆண்டுக்கு சுமார் 5.50 லட்சம் கொள்ளளவு உலோக உற்பத்தி திறன் கொண்ட ஆலையை இந்நிறுவனம் கொண்டுள்ளது. நாட்டின் இரும்பு(Pig Iron) உற்பத்தியில் 20 சதவீத பங்களிப்பை டாட்டா மெட்டாலிக்ஸ் கொண்டிருக்கிறது. இதன் உற்பத்தி பெரும்பாலும் வாகனம், விவசாயம், மின்சாரம், ரயில்வே போன்ற துறைகளுக்கு பயன்படுகிறது. 

நிறுவனத்தின் இரும்பு குழாய் உற்பத்தி 14 வகையான முதன்மை தரங்களை கொண்டதாக உள்ளது. ‘TATA efee’ இந்நிறுவனத்தின் முக்கிய பிராண்டாக வலம் வருகிறது. நிறுவனத்தின் விற்பனை உள்நாட்டில் மட்டுமில்லாமல் ஐக்கிய அரபு, கத்தார், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் பரவலாகியுள்ளது. 

நிறுவனத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் ஆஸ்திரேலியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகிறது. நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 60 சதவீதமாக உள்ளது. நிறுவனராக டாட்டா ஸ்டீல் நிறுவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு பரஸ்பர நிதி நிறுவனங்களிடம்(Mutual Funds) சுமார் 9 சதவீத பங்குகள் உள்ளது. 

நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.10 மடங்கு என்ற அளவில் உள்ளது. புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 483 ரூபாயாகவும், முக மதிப்பு 10 ரூபாயாகவும் உள்ளது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 8 மடங்குகளில் இருக்கிறது. 2021-22ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,746 கோடியாகவும், நிகர லாபம் 237 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

பொதுவாக உலோக துறையில் காணப்படும் உலகளாவிய தாக்கம், வருவாயில் காணப்படும் ஏற்ற-இறக்கம் டாட்டா மெட்டாலிக்ஸ் நிறுவனத்திற்கும் பொருந்தும். நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) மார்ச் 2022 முடிவில் ரூ.1,494 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) நன்றாக உள்ளது. 

கடந்த ஐந்து வருட காலத்தில் டாட்டா மெட்டாலிக்ஸ் நிறுவனத்தின் வருவாய் 14 சதவீதமாகவும், நிகர லாபம் 13 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் 23 சதவீதமும், பத்து வருட காலத்தில் 27 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 30 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது கவனிக்கத்தக்கது. 

நிறுவனத்தின் விற்பனைக்கும், பங்கு விலைக்குமான இடைவெளி(Price to Sales) 0.82 மடங்காகவும், வருவாய்க்கும், பங்கு விலைக்குமான இடைவெளி(P/E) 19 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்தின் கடன் 148 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

        

பிரைமா பிளாஸ்டிக்ஸ் – பங்குச்சந்தை அலசல்

பிரைமா பிளாஸ்டிக்ஸ் – பங்குச்சந்தை அலசல் 

Prima Plastics Ltd – Fundamental Analysis – Stocks

பிளாஸ்டிக் நாற்காலிகள் என சொன்னவுடன் நமது நினைவுக்கு வருவது சுப்ரீம் மற்றும் நீல்கமல்(இந்தியாவில்) சேர்கள் தான். இதற்கு அடுத்தாற் போல நாற்காலி பிராண்டுகளில் பெயர் போன நிறுவனம் பிரைமா பிளாஸ்டிக்ஸ். பிளாஸ்டிக் வார்ப்பட பர்னிச்சர்கள்(Moulded Furniture) தயாரிப்பு பிரிவில் இந்நிறுவனம் சிறந்து விளங்குகிறது.

கடந்த 1993ம் ஆண்டு திரு. மன்கர்லால் பரேக் அவர்களால் துவங்கப்பட்ட நிறுவனம் பிரைமா பிளாஸ்டிக்ஸ். டாமன் நகரத்தை தலைமையிடமாக கொண்டு, தனது முதல் உற்பத்தி பிரிவை துவக்கியது இந்நிறுவனம். பிளாஸ்டிக் சேர்கள், தட்டுகள், காப்பிடப்பட்ட பெட்டி(Insulated Box), காய்கறி மற்றும் பழங்களை வைப்பதற்கான பெட்டிகள், சாலை பாதுகாப்புக்கு தேவையான பிளாஸ்டிக் உபகரணங்கள், குப்பை தொட்டிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், விடுதிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான இதர பிளாஸ்டிக் வகைகளை உற்பத்தி செய்து வருகிறது.

வெறுமென உற்பத்தியை மட்டும் கொண்டிருக்காமல் விற்பனையில் 20 நாடுகளுக்கும் மேலாக ஏற்றமதியும் செய்து வருகிறது பிரைமா பிளாஸ்டிக்ஸ் நிறுவனம். தனது தொழிலை ஆரம்பித்து 28 வருடங்கள் தான் எனினும், இன்று உலகளவில் ஏழு உற்பத்தி மையங்களையும், 450 விநியோகஸ்தர்கள் மற்றும் 5,500 டீலர்களையும் கொண்டுள்ளது.

மத்திய அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தனது உற்பத்தி கிளைகளை பரவியுள்ளது இந்நிறுவனம். Firstcry, Pepperfry மற்றும் அமேசான் போன்ற பிரபல இணைய பிராண்டுகளுடன் கைகோர்த்து தனது விற்பனையை செய்து வருகிறது. நிறுவனத்தின் பொருட்கள் பெரும்பாலும், ‘Prima’ என்ற பிராண்டின் கீழ் விற்பனையாகிறது.

1995ம் ஆண்டு பிரைமா பிளாஸ்டிக்ஸ் நிறுவனம் தனது பொது பங்கு வெளியீட்டை துவங்கியுள்ளது. தற்போது சந்தையில் உள்ள இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 118 கோடி ரூபாய். பங்கு ஒன்றின் விலை 107 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. புத்தக மதிப்பு 104 ரூபாயாகவும், முக மதிப்பு(Face value) 10 ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 58 சதவீதமாகவும், கடன்-பங்கு விகிதம் 0.28 ஆகவும் இருக்கிறது. நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. 2021ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் 119 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம் ரூ.15 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட ஆண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 15 கோடி ரூபாய். அதாவது பங்கு ஒன்றுக்கான லாபம் ரூ.13.63(Earning per share).

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த பத்து வருடங்களில் 6 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 19 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு 103 கோடி ரூபாயாக உள்ளது கவனிக்கத்தக்கது.

2002ம் ஆண்டு நிறுவனர் காலமான பிறகு, திரு. பாஸ்கர் மன்கர்லால் பரேக், நிறுவனத்தின் தலைவராகவும், முழுநேர இயக்குனராகவும் உள்ளார். நிறுவனம் துவங்கிய காலத்திலிருந்து நிர்வாக இயக்குனராக திரு. திலீப் மன்கர்லால் பரேக் வகிக்கிறார். மும்பை பங்குச்சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டிருக்கும் இந்நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் தற்போது 13 மடங்குகளில் உள்ளது. பங்கு மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் 14 சதவீதமாக இருக்கிறது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com