Category Archives: Investopedia

தேசிய பென்ஷன் திட்டத்தில்(NPS, UPS) புதிய மாற்றம் – நீங்கள் செய்து விட்டீர்களா ?

தேசிய பென்ஷன் திட்டத்தில்(NPS, UPS) புதிய மாற்றம் – நீங்கள் செய்து விட்டீர்களா ?

Major Changes in the National Pension System – NPS and UPS

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு முன்னர் பழைய ஓய்வூதியத் திட்டம்(OPS) இருந்து வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில், பென்ஷன் வழங்குவதற்கான நிதியை அரசு ஏற்றுக் கொள்ளும். 2003 மற்றும் 2004ம் ஆண்டுக்கு பின்னர், பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றாக புதிய அல்லது தேசிய பென்ஷன் முறை(NPS) என்ற திட்டம் வந்தது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்களின் தங்களது மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையையும், அரசு சார்பில் ஒரு குறிப்பிட்ட கூட்டுப் பங்களிப்பு தொகையையும் பென்ஷன் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீடு, ஒரு தொகுப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யப்படும்(அரசு பத்திரங்கள், தனியார் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள், பிற முதலீடுகள்). இதன் மூலம் கிடைக்கப்பெறும் கார்பஸ் தொகை மூலமே, ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும்.

இன்று இந்தியாவில் பெரும்பாலும் பழைய பென்ஷன் என்ற திட்டம் இல்லை எனலாம்(பாதுகாப்பு துறை உட்பட). மாநில அளவில் CPS(Contributory Pension Scheme) என்ற திட்டம் தனியாக உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஊழியர்கள் மற்றும் சங்கங்கள் வாயிலாக எதிர்ப்பு இருந்தாலும், அரசின் நிதி பொறுப்புடைமை சார்பில் காணும் போது பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. எனவே, இதனை களையும் பொருட்டு, கடந்த 2024ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய முறை(Unified Pension Scheme) என்ற புதிய பென்ஷன் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.  இந்த திட்டம் புதிதாக இருந்தாலும், தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள துணை வடிவம் தான், இந்த UPS பென்ஷன் திட்டம். 

2024-25ம் நிதியாண்டின் முடிவில் தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 14.43 லட்சம் கோடி ரூபாய்(அடல் பென்ஷன் திட்டத்தை தவிர்த்து). இந்த திட்டத்தில் உள்ள பயனாளர்களின் எண்ணிக்கை 2.09 கோடி பேர்(அக்டோபர் 2025 தரவு – அரசு, தனியார் மற்றும் குடிமக்கள் சேர்த்து).   

NPS மற்றும் UPS பற்றிய தகவல்கள், வேறுபாடுகள் மற்றும் எது சிறந்தது என்பது தொடர்பான விவரங்களை பற்றி நாம் ஏற்கனவே எழுதியுள்ளோம். படிப்பதற்கு,

NPS vs UPS – Pension Comparison and Calculator

https://varthagamadurai.com/2025/05/09/nps-vs-ups-pension-calculator/

UPS(Unified Pension Scheme) திட்டத்தில், செப்டம்பர் மாத முடிவு வரை, சுமார் ஒரு லட்சத்திற்கும் குறைவான ஊழியர்களே சேர்ந்திருப்பதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒட்டுமொத்த ஒன்றிய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் 24 லட்சம். அதாவது சொல்லப்பட்ட காலம் வரை பதிவு செய்யப்பட்ட UPS சந்தாதாரர்கள் 4% மட்டுமே.

சரி, இந்த புதிய மாற்றத்தை பற்றி பார்ப்போம்…

தேசிய பென்ஷன் திட்டம் துவங்கிய காலத்தில், அரசு ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் அரசின் பங்களிப்பு தொகை என, 100 சதவீதம் அரசு கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு வந்தது.(Default Scheme: LIC, UTI and SBI Pension Funds). இவற்றில் முதலீட்டின் மீதான எந்த ரிஸ்க் தன்மையும் பெரிதாக இல்லை(அரசாங்கம் திவாலானால் மட்டுமே ரிஸ்க்). அதே வேளையில், முதலீட்டின் வருவாயும் நீண்டகாலத்தில் பெரிதாக வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. 

இதனை களையும் பொருட்டு, பின்னர் பங்குகளிலும், தனியார் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய சில உட்திட்டங்களையும் அரசு இந்த பென்ஷன் திட்டத்தில் அறிமுகப்படுத்தியது. அவை Active Choice, Auto Choice மற்றும் Default Scheme என பிரிக்கப்பட்டது. Active Choice பிரிவில் பங்குகள், அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், பிற முதலீடுகள் என கலவையாக முதலீடு செய்யலாம். இருப்பினும், இது பெரும்பாலும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே சாத்தியமானதாக அமைந்தது. நிதி பாதுகாப்பு கருதி, அரசு ஊழியர்களுக்கு இந்த வசதி அவ்வளவு எளிமையாக்கப்படவில்லை எனலாம்.

Auto Choice ஐ பொறுத்தவரை சுழற்சி முறையில் மேலே சொல்லப்பட்ட முதலீட்டு சாதனங்களில்(Equity, Corporate Bonds, Govt. Securities, Alternative Investment funds) கலவையாக முதலீடு செய்யப்படும். அதாவது ஒருவரின் வயதை அடிப்படையாக கொண்டு இங்கே முதலீட்டை பண்ட் நிர்வாகம் மேற்கொள்ளும். அதற்கேற்றாற் போல Conservative(LC25), Moderate(LC50) மற்றும் Aggressive(LC75) என்ற நிலைப்பாடுகளில் ஏதேனும் ஓன்றை நாம் தேர்ந்தெடுத்தாக வேண்டும். உதாரணமாக LC25 நிலைப்பாட்டை நாம் தேர்ந்தெடுத்தால், 35 வயது வரை – 25 சதவீதத் தொகை பங்குகளிலும், பிற தொகை அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். 35 வயதுக்கு பின்னர் பங்குகளின் தொகை குறைக்கப்பட்டு பெரும்பாலும் கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும்(Portfolio Rebalancing – Risk Management). 

Default Scheme என்பது நாம் ஏற்கனவே சொன்னது போல, தேசிய பென்ஷன் திட்டத்தின் துவக்க காலத்தில் வந்தது தான். 100 சதவீத தொகையும் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். ரிஸ்க் குறைவு, பெரிய அளவில் வருவாய் வளர்ச்சி இருக்காது. 

நடப்பு காலத்தில் மியூச்சுவல் பண்டுகளிலும், பங்குச்சந்தையிலும் முதலீட்டை மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டின் மீதான விழிப்புணர்வும் கிடைக்கப் பெறுகிறது(அரசு சார்பிலும் விளம்பரம் செய்யப்படுகிறது). இதன் காரணமாக தேசிய பென்ஷன் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களும் தங்களது NPS அல்லது UPS திட்டத்தில் சற்று ரிஸ்க் எடுத்து வருமானம் ஈட்ட விரும்புகின்றனர். இந்த வாய்ப்பு, கடந்த அக்டோபர் மாதம் வரை கிட்டாமல் இருந்த நிலையில், அக்டோபர் 24ம் தேதி அன்று ஒன்றிய நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு புதிய உட்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Balanced Life Cycle 50 (Modified Version of LC50):

இத்திட்டம், பங்குகளில் கணிசமான பங்களிப்பை மேற்கொள்ள ஏதுவாக உள்ளது. அதாவது Balanced LC50 திட்டத்தில் உங்களது 45 வயது வரை – 50 சதவீதத் தொகை பங்குகளிலும், 30 சதவீதத் தொகை தனியார் கடன் பத்திரங்கள் மற்றும் 20 சதவீதத் தொகை அரசு கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். அதன் பின்னர், படிப்படியாக ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அடிப்படையில் பங்குகளை குறைத்து கடன் பத்திரங்களில் உங்களது 55 வயது வரை முதலீடு செய்யப்படுகிறது. 

55 வயது முடியும் தருவாயில், பங்குகள் 35%, தனியார் கடன் பத்திரங்கள் 10 சதவீதம் மற்றும் அரசு கடன் பத்திரங்கள் 55 சதவீதம் என்ற அடிப்படையில், உங்களது NPS போர்ட்போலியோ மறு சமநிலைப்படுத்தப்படும்(Portfolio Rebalancing). இதற்கு பிறகான காலத்திலிருந்து உங்களது ஓய்வு காலம் வரை பெரும்பாலும் அரசு பத்திரங்களில் உங்கள் முதலீடு இருக்கும். 

நீங்கள் ஏற்கனவே மேலே சொன்ன வேறு ஏதேனும் உட்திட்டத்தில் தற்போது இருந்தால், நடப்பு மாதம் முதல் CRA NSDL தளத்தில் சென்று இந்த புதிய திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். Balanced LC50 திட்டம், NPS மற்றும் UPS என இரண்டு முறைகளுக்கும் பொருந்தும். இந்த திட்டத்தில் அரசு ஊழியர் மட்டுமல்லாது தனியார் மற்றும் இந்திய குடிமக்கள் யாவரும் மாற்றிக் கொள்ளலாம் என்பது இன்னொரு சிறப்பு.

Balanced LC50 திட்டத்தின் மூலம் உங்களது ஓய்வுக்கால கார்பஸ்(Retirement Corpus) தொகையில் நல்ல வளர்ச்சியும், ஓய்வுகாலத்திற்கான பென்ஷன் தொகையும் சற்று கூடுதலாக கிடைக்க வழிவகை செய்யும்.

சுற்றறிக்கை விவரம்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182253&reg=3&lang=2

சுற்றறிக்கையை தமிழில் படிக்க…

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182536&reg=3&lang=2

  

சரவணகுமார் நாகராஜ்,

Registered NPS Distributor (ARN-158941)

Distributor Code: BZBPS3240P00158941

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யப் போகிறீர்களா ? இந்திய பரஸ்பர நிதியின் சுருக்கமான வரலாறு

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யப் போகிறீர்களா ? இந்திய பரஸ்பர நிதியின் சுருக்கமான வரலாறு 

A Brief history of Mutual Funds in India – MF Industry Insights

கடந்த அக்டோபர் மாத முடிவில், இந்திய பரஸ்பர நிதி நிர்வகிக்கும் சொத்து மதிப்பு(AUM) மட்டும் 79.87 லட்சம் கோடி ரூபாய். அதாவது கடந்த ஐந்து வருடங்களில் மூன்று மடங்கு வளர்ச்சியையும், இதுவே பத்து வருட காலத்தில் ஆறு மடங்கு வளர்ச்சியையும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2014ம் ஆண்டின் மே மாத முடிவில் இந்திய மியூச்சுவல் பண்ட் துறை நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது.இது அடுத்த மூன்று வருடங்களில் 20 லட்சம் கோடி ரூபாயாக(ஆகஸ்ட் 2017) விரைவான வளர்ச்சியை அடைந்திருந்தது. 

பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்வது இன்று எளிமையாக்கப்பட்டிருந்தாலும், அதற்கான திறன்களும், நிறுவனங்களை பகுப்பாய்வு செய்வதும் அவ்வளவு எளிதல்ல. அதற்கான முறையான கல்வியையும், அடிப்படையாக தொழில் முறையை புரிந்து கொள்ளுதல் மற்றும் முதலீட்டின் மீதான கவனம் அவசியம். இதற்கான நேரத்தை செலவிட இயலாதவர்கள் தகுந்த நிதி ஆலோசகரின் வழிகாட்டுதல் படி, தங்களது முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம். 

அதே வேளையில், இது அனைவருக்கும் சாத்தியமா மற்றும் அதற்கான கட்டணத்தை கவனத்தில் கொள்வதும் அவசியம். இதற்கு மாற்றாக காணப்படுவது தான், பரஸ்பர நிதி முதலீடு எனப்படும், ‘மியூச்சுவல் பண்டு(Mutual Funds)’. மியூச்சுவல் பண்டு என்றவுடன் நம்மில் பெரும்பாலானோர் ஏதோ சீட்டு பண்டு என்றோ அல்லது பங்குச்சந்தையில் முழுவதுமாக முதலீடு செய்வது, இதன் காரணமாக ரிஸ்க் அதிகமிருக்கும் என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் மியூச்சுவல் பண்டு துறை பல்வேறு, கலப்பின முதலீட்டு வாய்ப்புகளை நமக்கு அளிக்கிறது. 

நாம் பங்குகள், தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள் என பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்களை மியூச்சுவல் பண்டில் தேர்ந்தெடுக்கலாம். இல்லையெனில் இவற்றினை கலந்த திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். பிரபலமான வெளிநாட்டு சந்தைகளிலும், அதன் பங்கு நிறுவனங்களிலும் நாம் மியூச்சுவல் பண்டு மூலம் முதலீட்டை மேற்கொள்ளலாம். ஒவ்வொரு திட்டங்களுக்கு தகுந்தாற் போல ரிஸ்க் தன்மை மாறுபடும். குறைந்த மற்றும் நடுத்தர காலத்திற்கு ரிஸ்க் குறைந்த முதலீட்டு திட்டங்கள், நீண்டகாலத்தில் அதிக வருவாய் ஈட்ட ரிஸ்க் அதிகம் கொண்ட திட்டங்கள் என நமது இலக்குகளுக்கு ஏற்றவாறு முதலீடு செய்யலாம்.

மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு செய்வதால் சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் வங்கிகளில் கிடைக்கப்பெறும் வட்டி விகிதத்தை விட, அதிகமாக வருவாய் பெறுவதும் மேலும் சில கூடுதல் நன்மைகளும் உள்ளன. குறிப்பாக நமது முதலீட்டை கவனித்து கொள்ள திறன் கொண்ட பண்டு மேலாண்மை குழு(Professionally Fund Management), ரிஸ்க்கை பரவலாக்குதல்(Diversification), அவசர தேவைக்கு எளிமையாக பணத்தை திரும்பப் பெறுதல்(Liquidity), குறைந்த கட்டணம்(Low Cost) மற்றும் குறைந்த முதலீட்டு தொகை(Investing in Small amounts), மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வசதி(Upgraded Technology), முறையான ஒழுங்குமுறை ஆணையம்(Regulator – SEBI AMFI) மற்றும் வரிச்சலுகை(Tax Benefits) ஆகியவை. இன்னொரு சிறப்பு – மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு(Demat Account) தேவையில்லை.

காலங்காலமாக, நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிந்த மற்றும் நாம் அறிந்த சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்கள் எனில் தங்கம், நிலம், வீடு, வங்கி டெபாசிட், அஞ்சலக சிறு சேமிப்பு மற்றும் பி.எப். ஆகியவை தான். இவை அத்தனையும் கொண்ட ஒரு பெரும் சந்தையை கொண்டது தான் மியூச்சுவல் பண்டு துறை. நாம் நினைப்பதும் போல இந்தியாவில் மியூச்சுவல் பண்டு முதலீடு கடந்த பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது அல்ல. 

கடந்த 1963ம் ஆண்டு வாக்கில் இந்திய அரசால் யூ.டி.ஐ.(Unit Trust of India – UTI) எனப்படும் மியூச்சுவல் பண்டு நிறுவனம் முதன்முதலில் துவக்கப்பட்டது. இதுவே இந்தியாவின் மியூச்சுவல் பண்டு துறைக்கான அடித்தளம். அப்போது ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) இதற்கான ஒழுங்குமுறை ஆணையமாக செயல்பட்டிருந்தது. தற்போது இதனை செபி(SEBI-AMFI) கவனித்து கொள்கிறது. இந்தியாவில் 1987ம் ஆண்டு வரை யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு மட்டுமே கோலோச்சியது குறிப்படத்தக்கது. இதற்கு பிறகான காலத்தில் அரசு பொதுத்துறை வங்கிகள் மியூச்சுவல் பண்டு துறையில் தங்களது கால்களை பதித்தன எனலாம்.

1992ம் ஆண்டுக்கு பிறகு பெரும்பாலான தேசியமயமாக்கப்பட்ட தனியார் வங்கிகளும் இத்துறையில் நுழைந்தன. இன்று இந்தியாவில் செபியில் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டும் 52. மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு(AUM) அடிப்படையில் முன்னிலையில் உள்ள சில நிறுவனங்கள்,

  1. SBI Mutual Fund
  2. ICICI Prudential Mutual Fund
  3. HDFC Asset Management
  4. Kotak Mahindra Mutual Fund
  5. Nippon Life India Fund
  6. Aditya Birla Sunlife(ABSL) Mutual Fund
  7. UTI Mutual Fund
  8. Axis Asset Management
  9. Mirae Asset Investment Managers(India)
  10. DSP Mutual Fund

எஸ்.பி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு மட்டும் 11.13 லட்சம் கோடி ரூபாய்(டிசம்பர் 2024 தரவு). ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் எச்.டி.எப்.சி. முறையே ரூ.8.73 லட்சம் கோடி மற்றும் 7.87 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்தியாவின் மியூச்சுவல் பண்டு நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில்(MF AUM to GDP Ratio) 19.9 சதவீதமாக உள்ளது(மார்ச் 2025). AMFI(Association of Mutual Funds in India) அமைப்பின் சமீபத்திய மதிப்பீட்டின் படி, இந்திய மியூச்சுவல் பண்டு துறை 2047ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை தாண்டி இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.    

இந்திய மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்கள் 13 சதவீத பங்களிப்பை குறைந்த மற்றும் நடுத்தர ரிஸ்க் கொண்ட திட்டங்களிலும், 87 சதவீத தொகையை அதிக ரிஸ்க் கொண்ட பங்குகளிலும் முதலீடு செய்கின்றனர். இதுவே நிறுவனங்கள்(வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள், அன்னிய நாட்டு நிறுவனங்கள்) 53 சதவீத தொகையை குறைந்த மற்றும் நடுத்தர ரிஸ்க் தன்மை கொண்ட திட்டங்களிலும், 47 சதவீதத்தை பங்குகளிலும் மேற்கொள்கின்றனர். செப்டம்பர் 2025 தரவின் படி, சிறு முதலீட்டாளர்களின் மொத்த முதலீட்டு சொத்து மதிப்பு 47.21 லட்சம் கோடி ரூபாயாகவும், நிறுவன முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 30.57 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும் முன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகள்:

  1. எதற்காக முதலீடு செய்ய உள்ளோம் ? (இலக்குகளை நிர்ணயித்தல்)
  2. எவ்வளவு காலத்திற்கு மேற்கொள்ள உள்ளோம் ? (இலக்குகள் வரை காத்திருத்தல், இடையில் பணத்தை எடுக்காமல் இருத்தல்)
  3. எதிர்பார்க்கும் வருவாய் ? (வங்கி வட்டி விகிதங்களை காட்டிலும் சற்று அதிகம், பணவீக்கத்தை தாண்டிய வருவாய் பெறுதல், போன்சி மோசடிகள், கந்து வட்டி போன்ற பேராசை கூடாது)
  4. திட்டங்களை சரியாக புரிந்து கொள்ளுதல் அல்லது நமது பணம் எங்கே  முதலீடு செய்யப்படுகிறது என அறிந்திருத்தல்.
  5. நாம் மேற்கொள்ளும் முதலீட்டில் அவசர தேவைக்கு பணத்தை திரும்ப பெற முடியமா மற்றும் வரிச்சலுகை எப்படி ? (தொடர் முதலீடு அவசியம், ஆனால் அவசரமும் கவனம் கொள்ள வேண்டியவை)

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய, பங்குச்சந்தையை போல திறமையை கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மாறாக மேலே சொன்ன ஐந்து காரணிகளை புரிந்து கொண்டு முதலீடு செய்தால் போதுமானது. 

“பொதுவாக நமது இலக்குகள் சார்ந்த முதலீடுகளுக்கு மியூச்சுவல் பண்டு எனும் வளமான மரத்தையும், செல்வம் ஈட்டுவதற்கு(ரிஸ்க் அதிகம்) நேரடியாக பங்குகள் எனும் மாமரத்தையும் தாங்கி பிடித்துக் கொள்ளலாம் !”

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்தியாவில் நீரிழிவு என்ற சர்க்கரை நோய் – துறை சார்ந்த அலசல்

இந்தியாவில் நீரிழிவு என்ற சர்க்கரை நோய் – துறை சார்ந்த அலசல் 

Diabetes in India – Sectoral Analysis

உலக நீரிழிவு நாள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டு நடத்தப்பட்ட Lancet – Medical Journal ஆய்வின் படி, உலகளவில் நீரிழிவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மட்டும் 82.8 கோடி. இவற்றில் நான்கில் ஒரு பங்கு அளவு இந்தியாவில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்க தரவாக வெளிவந்துள்ளது. அதாவது இந்தியாவில் மட்டும் நீரிழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 21.2 கோடி. சீனாவில் இது 14.8 கோடியாக உள்ளது. உலகின், ‘நீரிழிவு நோயின் தலைநகரமாக’ இந்தியா நினைவூட்டப்படுகிறது. கடந்த 35 ஆண்டுகளில் உலக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சராசரியாக நூறில் பதினான்கு பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. பாதிக்கப்பட்டோர்களில் 60 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான் அதற்கான மருத்துவத்தையோ, வாழ்வியல் முறையையோ பேணுகின்றனர் என்கிறது இந்த ஆய்வுக்கட்டுரை. இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களின் விகிதம் 21.5 சதவீதமாகவும், பெண்கள் 23.7 சதவீதமாகவும் இருக்கின்றனர். நகர்ப்புறங்களில் 29.5 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 15 சதவீதமாகவும் காணப்படுகிறது. அதே வேளையில் மேற்குலக நாடுகளில் உள்ளது போல, டைப்-1 நீரிழிவு நோய் இந்தியாவில் பெரும்பாலும் இல்லை என்பதும், பாதிக்கப்பட்டோரில் சுமார் 95 சதவீதம் பேருக்கு வாழ்வியல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் சார்ந்த டைப்-2 நீரிழிவு இருப்பதும் ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 30 சதவீத மக்கள் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்பதனை அறியாமலே, தங்களது வாழ்க்கையை தொடர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அதிகரித்த எண்ணிக்கைகு காரணமாக சொல்லப்படுவது மரபணு, நகரமயமாக்கலுக்கு பிறகான உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைகள்(அதிகப்படியான உணவு எடுத்தல், குறைவான உழைப்பு மற்றும் தூக்கமின்மை, உளவியல் சார்ந்த சிக்கல்கள்) தான். பக்கவாதம், தமனி நோய், நுரையீரல் அடைப்பு, நாள்பட்ட சிறுநீரக நோய், இரும்புச்சத்து குறைபாடு, பிறந்த குழந்தைகளுக்கு காணப்படும் குறைபாடு ஆகியவற்றுக்கு மூலமாக இந்த வாழ்வியல் மற்றும் உணவு முறை சார்ந்த நீரிழிவு காரணமாகி விடுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திட்டங்களையும் அரசு ஏற்படுத்தியுள்ளது. 1987ம் ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தேசிய நீரிழிவு கட்டுப்பாட்டு திட்டம் முன்னரே துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவை முறையான உடற் பரிசோதனை மற்றும் உணவுமுறை ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. மேற்குலக நாடுகளில் இவற்றுக்கான மருத்துவ செலவு அதிகமிருந்தாலும், இந்தியா, சீனா, இந்தோனேஷியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இதற்கான செலவினம் சற்று குறைவே. அதாவது இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 10,000 ரூபாய்(தனிநபர்) என்ற விகித அடிப்படையில் இது இருந்து வருகிறது.

இந்தியாவின் நீரிழிவு சந்தை மதிப்பு சுமார் ரூ.31,600 கோடி(2024 தரவு). இது 2034ம் ஆண்டு வாக்கில் 1,39,400 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 16 சதவீத வளர்ச்சி. நீரிழிவு நோய்க்கான மருந்துகளின் இந்திய சந்தை மதிப்பு மட்டும் சுமார் 23,800 கோடி ரூபாய். இது அமெரிக்காவில் சுமார் 3.58 லட்சம் கோடி ரூபாயாக காணப்படுகிறது. மாறுபட்ட வாழ்க்கை முறைகள் மற்றும் உணவுப்பழக்க முறைகளின் அதிகரிப்பு காரணமாக நீரிழிவு நோய் எதிர்ப்புக்கான மருந்துகளின் தேவையும் அதிகரித்து வந்துள்ளது.

நோய் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், நவீன மருத்துவத்தின் வளர்ச்சியும், பிற மருத்துவ முறைகளின்(அலோபதி தவிர்த்து) ஆய்வும் அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறையில் காணப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், டிஜிட்டல் வழி சிகிச்சை, டெலிமெடிசின் போன்ற மேம்பாடுகள் கிராமப்புறங்கள் வரை கொண்டு செல்கிறது. கடந்த சில வருடங்களாக சுகாதாரத் துறையில் தேவையான வசதியை மேம்படுத்த அரசும் முதலீடு(உட்கட்டமைப்பு, புதிய சாதனங்கள், காப்பீடு மற்றும் மலிவான மருந்துகள்) செய்து வருகிறது.   

இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருத்துவத்தில் பெரும்பாலும் இன்சுலின் மருந்து அல்லாத மாத்திரை வடிவிலான சந்தை தான் அதிகரித்து காணப்படுகிறது. இவற்றில் முதன்மை மருந்துகளாக மெட்ஃபார்மின்(Metformin), சல்போனிலூரியா(Sulfonylureas), டிபிபி(Dipeptidyl peptidase-4), ஆல்பா-குளுக்கோசிடேஸ் தடுப்பான்கள்(Alpha-glucosidase) மற்றும் தியாசோலிடினியோன்கள்(TZDs) ஆகியவை உள்ளன. உலகளவில் மெட்ஃபார்மின்(Metformin) மருந்துச் சந்தை மதிப்பு மட்டும் 36 கோடி அமெரிக்க டாலர்கள். இவற்றில் இந்தியாவின் பங்களிப்பு(உற்பத்தி மற்றும் நுகர்வு) மட்டும் 46 சதவீதமாக உள்ளது. 

இந்த மருந்து தயாரிக்கும் API நிறுவனங்களை இந்தியாவில் காணும் போது, Wanbury, Aarti Drugs, USV, Harman Finochem, Exemed Pharma ஆகியவை உள்ளன. அதே வேளையில் ஒட்டுமொத்த நீரிழிவு சந்தைக்கான இந்திய பெரு நிறுவனங்கள் என காணுகையில் Sun Pharma, Dr. Reddy’s Lab, Biocon, Novo Nordisk, Sanofi India, Glenmark Pharma, Johnson & Johnson, Abbott India, Lupin, Torrent Pharma, Merck, Cadilla, AstraZeneca ஆகிய நிறுவனங்கள் உள்ளன. 

மெட்ஃபார்மின்(Metformin) மருந்து தயாரிப்பில் முதல் 5 நிறுவனங்கள் மட்டுமே, ஒட்டுமொத்த சந்தையில் 60 சதவீத பங்களிப்பை(Market Share) கொண்டுள்ளன. USV Private Ltd  22 சதவீத பங்களிப்புடன், இந்த மருந்து பிரிவில் முன்னிலையில் உள்ளது. இதற்கடுத்தாற் போல சன் பார்மா (Sun Pharma) 15%, Zydus Cadila 12%, Cipla 10% மற்றும் Dr.Reddy’s 8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. இப்பிரிவின் பெரும்பாலான மாத்திரைகள் ஒரு ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது(மாத்திரை ஒன்றுக்கு). அரசின் மானிய விலையில் காணும் போது ஒரு மாத்திரையின் விலை இரண்டு ரூபாய்க்கும்  குறைவாகவே உள்ளது. பிரபல பிராண்டுகளாக Glycomet(USV Product), Metformin-Sun, Emsulide (Sun Pharma), Zita-met(Zydus Brand), Ciplament, Glyciphage(Cipla Product), Metformin-DR, Trijardy (Dr. Reddy’s) உள்ளன. குறிப்பிட்ட தயாரிப்பில் தனி நிறுவன காப்புரிமை இல்லாததால், இது 100 சதவீத பொதுவான தயாரிப்பு சந்தையாக(Generic Medicine) உள்ளது. இதுவே சில நிறுவனங்களுக்கு பாதகமாக உள்ளது. அதே வேளையில் மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கப்பெறுவதால், இதன் பிராண்டுகளும் குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டுகின்றன.

அரசு சார்பில் மானிய விலையில் மருந்துகளை வழங்க பல்வேறு விநியோகத் திட்டங்கள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் நீரிழவுக்கான கட்டுப்படுத்தல் மற்றும் பராமரிப்புகளையும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மருந்துகள் போதுமான அளவு கிடைக்கப்பெறுவதனையும் அரசு கண்காணித்து வருகிறது.

உலக நீரிழிவு மருத்துவ சாதனங்களின்(Medical Devices) சந்தை மதிப்பு சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவற்றில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 7.5 சதவீதம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா 20 சதவீதத்தை பங்களிப்பை கொண்டுள்ளது. 2024ம் ஆண்டு தரவின் படி, இந்திய இன்சுலின் சந்தையின் மதிப்பு சுமார் 1.02 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் குளுக்கோஸ் கண்காணிப்பு சார்ந்த சாதனங்களின் சந்தை மதிப்பு 5.6 கோடி அமெரிக்க டாலர்கள்.          

நாடு முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த டெலிமெடிசின் மற்றும் ஏ.ஐ. மூலம் இயக்கப்படும் நவீன சிகிச்சை கண்காணிப்பு ஆகியவற்றால் இத்துறையின் வளர்ச்சியும் டிஜிட்டல் வழி சுகாதார முன்னேற்றமாக வடிவமைக்கப்பட உள்ளது. 

(தகவல்கள் மற்றும் தரவுகள்): Expertmarketreseach, JETIR Report, ICMR, CDSO, Lancet, IDMA)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பிக்ஸ் டிரான்ஸ்மிஷன் – பங்குச்சந்தை அலசல்

பிக்ஸ் டிரான்ஸ்மிஷன் – பங்குச்சந்தை அலசல் 

Pix Transmission – Fundamental Analysis – Stocks

கடந்த 1981ம் ஆண்டு வாக்கில் மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர் நகரை தலைமையிடமாக கொண்டு துவக்கப்பட்ட நிறுவனம் தான் பிக்ஸ் டிரான்ஸ்மிஷன் லிமிடெட். பெல்ட்டுகள் மற்றும் பவர் டிரான்ஸ்மிஷன்(Belts & Mechanical Power Transmission) பிரிவில் தனது உற்பத்தியை கொண்டிருக்கும் இந்நிறுவனம் தொழிற்துறை, வேளாண்மை, தோட்டப் பராமரிப்பு, புல் வெட்டும் இயந்திரம் மற்றும் வாகனத்துறைக்கு தேவையான பெல்ட்டுகள் மற்றும் அதிக சக்தி தாங்கும் பெல்ட்டுகளை தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. 

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பெல்ட் தயாரிக்கும் உற்பத்தி நிலையங்களையும், தானியக்க ரப்பர் கலவை(Rubber Mixing) வசதியையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது. நிறுவனத்தின் விற்பனைப் பொருட்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை சொந்த பிராண்டுகளாகவே உள்ளன. நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் பெரும்பாலும் வாகனம், வேளாண்மை, கட்டுமானம், உணவு பதப்படுத்தல், குளிர் சேமிப்பு மற்றும் வீட்டு பயன்பாட்டு பொருட்கள் ஆகிய துறைகளால் பயன்படுத்தப்படுகிறது.   

நிறுவனத்தின் விற்பனைப் பொருட்களாக தொழிற்துறை பெல்ட்டுகள், விவசாயம், புல்வெளி மற்றும் தோட்டத்துறை சார்ந்த பெல்ட்டுகள், உயர் சக்தி மதிப்பிடப்பட்ட பெல்ட்டுகள், வாகனத்திற்கு தேவையான பெல்ட்டுகள் மற்றும் பல்வேறு உதிரிப் பாகங்களும் உள்ளன. நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் 50 சதவீத வருவாய் ஏற்றுமதியிலிருந்து பெறப்படுகிறது. நிறுவனத்தின் வருவாயில் 98 சதவீத பங்களிப்பு, அதன் உற்பத்தியின் மூலம் பெறப்படுவது கவனிக்கத்தக்கது.

நிறுவனத்திற்கு உள்நாட்டில் மூன்று உற்பத்தி ஆலைகளும், இரண்டு அலுவலகங்களும் உள்ளன. இது போக அயல்நாட்டில் நான்கு அலுவலகங்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. விற்பனைக்காக மட்டும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 250 கூட்டு விற்பனை நிலையங்களை நிறுவனம் வைத்துள்ளது. நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் பெரும்பாலும் வணிக நிறுவனங்களுக்கானது(B2B).  

பிக்ஸ் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் விற்பனையில் 36 சதவீத வருவாய், தனது முதல் 10 வாடிக்கையாளர் நிறுவனங்களின் மூலம் பெறப்படுகிறது. விற்பனைக்கு பிந்தைய சேவைகளிலும் இந்நிறுவனம் முக்கியத்துவம் காட்டி வருகிறது. நிறுவனத்திற்கு ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பிடத்தக்க துணை நிறுவனங்களும் உள்ளன. உலகளவில் பசுமை தொழில்நுட்பங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்நிறுவனத்திற்கான தொழில் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.1,950 கோடி. நிறுவனத்திற்கான கடன் பெரிதாக எதுவுமில்லை என்பதால், இதன் கடன்-பங்கு விகிதம் 0.06 என்ற அளவில் உள்ளது. மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் 20 சதவீதமாக இருந்துள்ளது. விற்பனை மீதான வருவாய் கடந்த ஐந்து வருட காலத்தில் சராசரியாக 14 சதவீதமாகவும், கூட்டு லாப வளர்ச்சி 29 சதவீதமாகவும் இருந்துள்ளது.

2024-25ம் நிதியாண்டு முடிவில், நிறுவனத்தின் வருவாய் 589 கோடி ரூபாயாகவும், அடிப்படை செலவினம் 426 கோடி ரூபாயாகவும் உள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) கடந்த பத்து வருட காலத்தில் சராசரியாக 20 சதவீதத்திற்கும் மேலாக காணப்படுகிறது. 2025ம் நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.113 கோடியாகவும், ஒரு பங்கு மீதான வருவாய்(EPS) ரூ.83 ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.582 கோடி. 

நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) கடந்த பத்து வருட காலத்தில் மேம்பட்டு வந்துள்ளது. 2023-24ம் நிதியாண்டில் நிறுவனம் சுமார் 91 கோடி ரூபாயையும், 2024-25ம் நிதியாண்டில் 71 கோடி ரூபாயையும் தொழில் விரிவாக்கத்திற்காக  முதலீடு செய்துள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 62 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்கு அடமானம் எதுவுமில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. அடிப்படைப் பகுப்பாய்வு தரவின் படி(2024-25), நிறுவனத்தின் பங்கு விலை சராசரியாக பங்கு ஒன்றுக்கு ரூ.1,232 முதல் 1,540 ரூபாய் மதிப்பை பெறும். தற்போது இந்த பங்கின் விலை பங்கு ஒன்றுக்கு ரூ.1,430 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.

நிறுவனத்திற்கான கடன் 35 கோடி ரூபாயாகவும், ரொக்க கையிருப்பு 69 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது(2024-25 நிதியாண்டு தரவு). நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.438 என்ற விலையையும், இதன் பி.இ. விகிதம் 17.2 என்ற அளவிலும் உள்ளது. தற்போது இத்துறையின் பி.இ. விகிதம் 33.1 என்ற அளவில் இருக்கிறது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 46 மடங்குகளில் உள்ளது. 

பிக்ஸ் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் வலிமை மற்றும் பலவீனங்களாக காணுகையில், இத்துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. பல்வேறுபட்ட துறைகளுக்கு தேவையான பெல்ட்டுகளை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபடுதல், நவீன தொழில்நுட்பத்தை கொண்டிருத்தல், சொந்த பிராண்டு பொருட்கள் மற்றும் விற்பனைக்கு பிறகான சேவை ஆகியவை இதன் வலிமையை காட்டுகிறது.

அதே வேளையில், குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் மூலம் மட்டுமே பெரும்பாலான வருவாய் ஈட்டப்படுவது, மூலப்பொருட்களின்(ரப்பர்) விலை மாற்றம், சுழற்சி முறையில் இயங்கும் சில துறைகளின் தாக்கம், உலக பொருளாதார மந்தநிலை, ஏற்றுமதிக்கான கட்டுப்பாடு மற்றும் நாணயத்தின் மாற்று மதிப்பு, சுற்றுச்சூழல் விதிமுறைகள் ஆகியவை இந்நிறுவனத்தின் வருவாயை பாதிக்கக்கூடும்.

துறை சார்ந்த மதிப்பீட்டை பொறுத்தவரை, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இத்துறை சராசரியாக ஆண்டுக்கு 6 சதவீத வளர்ச்சியை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பிக்ஸ் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்திற்கு, நம்ம மதுரையை சார்ந்த ஜேகே பென்னர்(JK Fenner) நிறுவனம் ஒரு முக்கிய போட்டி நிறுவனமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் இந்நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை. ஜேகே குழுமத்தின் மற்ற நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இருப்பது நாம் அறிந்தவையே ! 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2024-25ம் நிதியாண்டில் நேஷனல் அலுமினியம்(நால்கோ) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,268 கோடி

2024-25ம் நிதியாண்டில் நேஷனல் அலுமினியம்(நால்கோ) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,268 கோடி  

NALCO India reported a Net Profit of Rs.5,268 Crore in the FY 2024-25 Consolidated – Results

ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த முதன்மை அலுமினிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினிய கம்பெனி(National Aluminium Company) நிறுவனம் தனது 2024-25ம் நிதியாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டிருந்தது. நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பாக்சைட்- அலுமினா – அலுமினிய – மின்சார வளாகங்களை கொண்ட நிறுவனமாகவும் நால்கோ உள்ளது.

கடந்த 1981ம் ஆண்டு வாக்கில் துவக்கப்பட்ட இந்நிறுவனம் அலுமினா மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதன் உட்பிரிவுகளாக அலுமினிய கம்பிகள், உருட்டப்பட்டவை, கீற்றுகள்(Strips), பில்லெட்டுகள், கால்சின் செய்யப்பட்ட அலுமினா மற்றும் இதர அலுமினா பொருட்கள் உள்ளது. உலகளவில் குறைந்த விலையில் அலுமினியத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் நால்கோ இருக்கிறது. 

பொதுவாக பாக்சைட், அலுமினியம் உற்பத்திக்கான மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. அதே வேளையில் அலுமினியத்தின் தேவை கட்டுமானம், மின்னணுவியல், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்படுகிறது. வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பாக்சைட் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற பகுதிகளில் பாக்சைட் அமைந்துள்ளன. இவற்றில் ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது கவனிக்கத்தக்கது.

நால்கோ நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் உள்நாட்டில் தான் பெறப்படுகிறது. ஏற்றுமதியில் இதன் வருவாய் முப்பது சதவீதமாக இருந்துள்ளது. 2024-25ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.16,788 கோடியாகவும், செலவினம் 9,280 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் இயக்க லாபம் 7,508 கோடி ரூபாயாகவும், இயக்க லாப விகிதம்(OPM) 45 சதவீதமாகவும் இருக்கிறது. பொதுவாக இத்துறையில் இயக்க லாப விகிதம் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மூலப்பொருட்களுக்கான செலவினம் உலகளாவிய சந்தையை சார்ந்திருப்பது தான். 

2024-25ம் நிதியாண்டில் நிறுவனத்தின் இதர வருவாய் 357 கோடி ரூபாயாகவும் நிகர லாபம் ரூ.5,268 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஈவுத்தொகை விகிதம்(Dividend Yield) தற்போதைய பங்குவிலையில் சராசரியாக நான்கு சதவீதத்திற்கும் மேலாக உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 2024-25ம் நிதியாண்டு முடிவில் ரூ.16,887 கோடி. நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 சதவீதமாகவும், இதுவே பத்து வருடங்களில் 9 சதவீதமாகவும் இருந்துள்ளது. லாப வளர்ச்சியை காணுகையில், ஐந்து வருட காலத்தில் 108 சதவீதமாகவும், இதுவே 10 வருடங்களில் 16 சதவீதமாகவும் இருந்துள்ளது.

2025ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு(Cash Equivalents) ரூ. 5,427 கோடி. கடந்த காலத்தில் நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) கணிசமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் நிறுவனர்களை பொறுத்தவரை, இது அரசு பொதுத்துறை நிறுவனம் என்பதால், ஒன்றிய அரசிடம் 51 சதவீத பங்குகள் கைவசம் உள்ளது. அன்னிய மற்றும் உள்நாட்டு நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களிடம் சராசரியாக 16 சதவீதப் பங்குகள் உள்ளது. 

நால்கோ நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 33,765 கோடி ரூபாய். நிறுவனத்தின் பி.இ. விகிதம் தற்போது 6.5 என்ற மடங்குகளில் உள்ளது(மே 2025). பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 20 சதவீதமாகவும், பத்து ஆண்டுக்காலத்தில் 14 சதவீதமாகவும் இருக்கிறது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 121 மடங்குகளிலும், கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.01 என்ற அளவிலும் உள்ளது. 

நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.97 என சொல்லப்பட்டிருந்தாலும், தற்போதைய பங்கு விலை(ரூ.184), அதன் தள்ளுபடி மதிப்பை(ரூ.226) காட்டிலும் குறைவாக தான் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. 

நிறுவனத்திற்கு கடன் ஏதும் பெரிதாக இல்லையென்றாலும், துறை சார்ந்த ரிஸ்க் தன்மை உலகளாவிய சந்தையை சார்ந்துள்ளது. இதன் காரணமாக மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செலவினம் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படலாம். எனவே இதன் லாப விகிதமும் ஒவ்வொரு நிதியாண்டிலும் மாறுபடக்கூடிய நிலை உள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வுக்கானக் கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேசிய பென்ஷன் திட்டமும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமும் – கணக்கீடு

தேசிய பென்ஷன் திட்டமும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமும் – கணக்கீடு 

National Pension System(NPS) vs Unified Pension Scheme(UPS) –  Calculation & illustration

இந்த பதிவு, நாட்டின் ஓய்வூதியத் திட்டத்தை பற்றி விரிவாக கூறவில்லை. மாறாக NPS மற்றும் UPS ஆகியவற்றுக்கு இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகள் மற்றும் கணக்கீட்டை பயன்படுத்த உதவுகிறது.

2003ம் ஆண்டுக்கு பிறகு, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம்(OPS) மாற்றியமைக்கப்பட்டு, தேசிய ஓய்வூதியத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்ப நிலையில். புதிய பென்ஷன் திட்டம் என வழக்காக சொல்லப்பட்ட நிலையில், பின்னர் தேசிய பென்ஷன் திட்டம்(NPS) என்ற முறை அறியப்பட்டது. அதாவது பழைய பென்ஷன் திட்டத்தில், ஓய்வூதியத்திற்காக எந்த நிதிப் பங்களிப்பும் தொழிலாளர்களிடம் இருந்து பெறப்படுவதில்லை. 

பழைய பென்ஷன் திட்டத்தில், ஓய்வூதியத்திற்கான நிதியை அரசே ஏற்றுக் கொள்ளும். தொழிலாளர்களிடம் இருந்து மாதந்தோறும் பெறப்படும் பி.எப்.(சேமநல நிதி) பங்களிப்பும் வட்டியுடன் சேர்த்து பின்னர் அவர்களுக்கே அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தேசிய பென்ஷன் திட்டத்தில் அப்படியொன்றும் இல்லை. 

2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பென்ஷன் திட்டத்தில், ஊழியர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் 10 சதவீத பங்களிப்பும், அரசின் சார்பில் 10 சதவீத பங்களிப்பும் என கூட்டாக ஒரு தொகை ஒதுக்கப்பட்டு பென்ஷனுக்கான ஒரு திட்டத்தில்(Pension Funds) முதலீடு செய்யப்படும். பின்னர் ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான நிதியாக கருதப்பட்டு, ஊழியர் தனது 60 வயதை கடந்தவுடன், சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து மாதந்தோறும் வட்டி வருவாய் அளிக்கப்படும். தற்போது தேசிய பென்ஷன் திட்டத்திற்கான அரசின் பங்களிப்பானது 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய பென்ஷன் திட்டத்தை பொறுத்தவரை ஊழியர் ஒருவர் தனது பணிக்காலம் முழுவதும் வேலை பார்த்து ஓய்வு பெறும் நிலையில், சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து 60 சதவீதத் தொகையை ரொக்கமாகவும், மீதமுள்ள 40 சதவீதத் தொகைக்கு வட்டி வருவாயும்(Annuity Plan – Rates) பெறலாம். அதாவது ஓய்வு பெற்றாலும் அவரால் மீதமிருக்கும் 40 சதவீதத் தொகையை முழுவதுமாக பெற இயலாது. இந்த தொகை ஓய்வூதியத்தை உறுதிப்படுத்துவதற்காகவே செய்யப்பட்டுள்ள ஒரு முறை. 

அதே வேளையில் ஓய்வு பெறும் ஒருவர் பின்னாளில் இறந்து விட்டால், அவருடைய நாமினிக்கு இரு வாய்ப்புகள் தரப்படுகிறது. அதாவது, தனது துணையை போலவே, ஓய்வூதியம் பெற(40% தொகையில் வட்டி வருவாய்) விரும்புகிறாரா அல்லது முழுத்தொகையை பெற விரும்புகிறாரா என்பது தான்.   

ஊழியர் ஒருவர் தனது பணிக்காலத்தை முழுமை செய்யாத நிலையில், சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து 20 சதவீதத் தொகை மட்டுமே அவருக்கு ரொக்கமாக வழங்கப்படும். மீதமிருக்கும் 80 சதவீத தொகையில்(80% Annuity Plan) வட்டி வருவாய் அளிக்கப்படும். மாறாக, அவர் 20 சதவீதத் தொகையை உடனே பெற விரும்பாவிட்டால், 60 வயது முடியும் வரை அவர் சொல்லப்பட்ட தொகுப்பு நிதிக்காக தனது பங்களிப்பை வழங்கலாம். இல்லையெனில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 ஐ மட்டும் செலுத்தி கணக்கை செயல்படுத்தும் நிலையில்(NPS Tier- I Activation) வைத்துக் கொள்ளலாம். 

பொதுவாக தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் நிலையான ஓய்வூதியம் என்ற ஒன்றில்லை. மாறாக சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியும், அவற்றின் வளர்ச்சி(அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், பங்குகளில் முதலீடு) – Retirement Corpus மற்றும் வட்டி விகிதத்தை(Annuity Rates) பொறுத்தது தான். அரசு ஊழியர்களுக்கு மட்டுமே என இருந்த தேசிய பென்ஷன் திட்டம் பின்னர் 2009ம் ஆண்டு வாக்கில் தனியார் துறை ஊழியர்கள், சுய தொழில் புரிபவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என பெரும்பாலான இந்தியக் குடிமக்களுக்கு அறிமுகமானது.

பழைய பென்ஷன் திட்டத்தை ஒப்பிடும் போது, தேசிய பென்ஷன் திட்டம் பாதுகாப்பற்றதாகவும், நிலையான வருமானத்தை ஓய்வுக் காலத்தில் அளிப்பதில்லை எனவும் அரசு ஊழியர் சங்கங்களும், தொழிலாளர்களும் விமர்சித்து வந்த நிலையில், 2024ம் ஆண்டு ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம்(Unified Pension Scheme) அறிமுகமானது. இருப்பினும் இவை நடைமுறைக்கு வருவதற்கு ஓராண்டுக்கு மேலாகியுள்ளது. 

பழைய, தேசிய மற்றும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டங்களின் பயன்கள் மற்றும் அவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

NPS vs UPS கணக்கீடு (தோராயமாக மட்டுமே):

நீங்கள் உள்ளீட(Inputs) வேண்டியவை:

உங்கள் பெயர், பிறந்த தேதி, வேலைக்கு சேர்ந்த தேதி, ஓய்வு பெறக்கூடிய நாள், இதுவரை பணியாற்றிய ஆண்டுகள், இன்னும் பணியாற்ற வேண்டிய வருடங்கள், நடப்பு என்.பி.எஸ். கார்ப்ஸ் தொகை, அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சதவீதம்.

[Name, DOB, Date of Joining, Date of Retirement, Completed Service, Years to Retirement, Current NPS Investment Corpus value, Current Basic Pay and Dearness Allowance % ]

எச்சரிக்கை: மற்றவற்றை பதிவிட அல்லது திருத்த முயற்சிக்க வேண்டாம். கணக்கீட்டில் பிழை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

Warning: Do not attempt to input or edit others. There is a possibility of error in the Calculation Sheet.

NPS vs UPS – Calculator – Spreadsheet

மேலும் விவரங்களுக்கு அரசின் சுற்றறிக்கையை முழுவதுமாக படித்து அறிந்து கொள்ளவும். அதற்கான இணைப்பும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வேறுபாடு சார்ந்த தகவல் பெறப்பட்ட இணைப்பு: 

https://proteantech.in/articles/ops-vs-nps-vs-ups-retirement-plan-em1822025/

UPS Circular Document:

PFRDA UPS Rules (1)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்தியாவில் காப்பீட்டுத் துறை – துறை சார்ந்த அலசல்

இந்தியாவில் காப்பீட்டுத் துறை – துறை சார்ந்த அலசல்

Insurance Industry in India – Sectoral Analysis 

காப்பீடு என்பது கடந்த நூறு வருடங்களோ அல்லது 200 வருடங்களுக்கு முன்னரோ துவக்கப்பட்ட ஒரு சிந்தனை என நாம் நினைக்கலாம். உண்மையில் காப்பீட்டின்(Insurance) வரலாறு என்பது சுமார் 6000 வருடங்களுக்கு முன்னர் தோன்றியவை. தொழிற்புரட்சியின் போது தான் காப்பீட்டின் தேவையையும் உணர வேண்டியிருந்தது. பொதுவாக ‘காப்பீடு’ என்பது உங்களுக்கும்(தனி நபர், சொத்து, நிறுவனம் அல்லது அரசு) ஒரு காப்பீட்டை அளிக்கக்கூடிய நிறுவனத்திற்குமான ஒப்பந்தம் தான். ஏதேனும் நிதி சார்ந்த இழப்பு உங்களுக்கு ஏற்படும் போது, அதற்கான இழப்பீட்டை கோருவதற்கு தான் இந்த ஒப்பந்தம் பயன்படுகிறது. அதாவது உங்களுக்கான ரிஸ்க்கை நீங்கள் மற்றொருவரிடம்(காப்பீட்டு நிறுவனம்) மாற்றியுள்ளீர்கள்(Transferring the Risk). 

இந்தியாவில் காப்பீட்டின் தோற்றம் 1818ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் முதல் காப்பீட்டு நிறுவனமான ஓரியண்டல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் 1818ம் ஆண்டு ஐரோப்பியர்களால் துவக்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவின்(இந்தியர்களால்) முதல் காப்பீட்டு நிறுவனமான பம்பாய் மியூச்சுவல் லைப் இன்சூரன்ஸ் சொசைட்டி 1870ம் ஆண்டில் தான் தோற்றுவிக்கப்பட்டது. நாட்டின் இன்றைய மிகப்பெரிய காப்பீடு நிறுவனமாக வலம் வரும் எல்.ஐ.சி. இந்தியா(LIC India) கடந்த 1956ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு மட்டும் சுமார் 52 லட்சம் கோடி ரூபாய்(மார்ச் 2024 தரவு). 

245க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அந்நிய நாட்டின் காப்பீட்டு நிறுவனங்களும், வருங்கால வைப்பு நிதி சங்கங்களும் சேர்ந்தது தான் இன்றைய எல்.ஐ.சி. இந்தியா நிறுவனம்(தேசியமயமாக்கப்பட்டது).  

2023ம் ஆண்டின் முடிவில், உலகளவில் காப்பீட்டுத்(இன்சூரன்ஸ்) துறையின் மதிப்பு ஒன்பது டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இவற்றில் அமெரிக்காவின் பங்களிப்பு மட்டும் சுமார் 40 சதவீதம், அதாவது 3.60 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும். அதற்கடுத்தாற் போல சீனாவில் சுமார் 723 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. மூன்றாம் மற்றும் நான்காம் இடம் முறையே ஐக்கிய ராச்சியம்(UK) மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. ஐரோப்பிய யூனியன் என காணுகையில் அந்நாடுகள் ஒருங்கிணைந்து 16 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.

2032ம் ஆண்டு முடிவில் இது 18.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2024ம் வருடம் முதல் 2032ம் வருடம் வரை, ஆண்டுக்கு சராசரியாக 13 சதவீத கூட்டு வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்கள் சில – ஜெர்மனியின் அல்லையன்ஸ்(1,250 பில்லியன் டாலர்கள்), அமெரிக்காவின் பெர்க்சயர் ஹாத்வே(அட, திருவாளர் வாரன் பப்பெட் அவர்களின் நிறுவனம் தான் – 960 பில்லியன் டாலர்கள்) மற்றும் ப்ரூடென்ட்சியல்(938 பில்லியன் டாலர்கள்), சீனாவின் பிங் ஆன்(937 பில்லியன் டாலர்கள்) மற்றும் சீனா லைப் இன்சூரன்ஸ்(900 பில்லியன் டாலர்கள்), பிரான்ஸின் ஆக்சா, அமெரிக்காவின் மெட்லைப், ஐக்கிய ராச்சியத்தின் லீகல் & ஜெனரல், ஜப்பானின் நிப்பான் லைப் மற்றும் அமெரிக்காவின் யுனைடெட் ஹெல்த் ஆகிய நிறுவனங்களாகும்.

காப்பீட்டுத் துறை பொதுவாக மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீடு, ஆயுள் அல்லாத காப்பீடு(Non-Life) மற்றும் மருத்துவக் காப்பீடு(Health). ஆயுள் அல்லாத காப்பீடும், மருத்துவக் காப்பீடும் ஜெனரல் இன்சூரன்ஸ் எனவும், ஆயுள் காப்பீடு லைப் இன்சூரன்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. வாகனம், மருத்துவம், பயணம், வீடு மற்றும் சொத்துக்கள், வணிகம், விபத்து, பயிர் மற்றும் கால்நடை, வான்வழி மற்றும் கடல்வழி, திருட்டு மற்றும் தீப்பிடித்தல் ஆகியவற்றுக்கு எடுக்கப்படும் காப்பீடுகள் அனைத்தும் ஜெனரல் இன்சூரன்ஸ் பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றை உள்ளடக்கிய காப்பீடுகள் லைப் இன்சூரன்ஸ் பிரிவின் கீழ் உள்ளது. இது போக Reinsurance என சொல்லப்படும் காப்பீடு நிறுவனங்களிடையே தங்களது ரிஸ்க்கை பரவலாக்குவதற்கான(Transferring the Risk) காப்பீடும் உள்ளது. ஆனால் இவை பெரும்பாலும் தனி நபருக்கானதல்ல.

2023ம் ஆண்டில் சொல்லப்பட்ட 9.0 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், ஆயுள் அல்லாத காப்பீட்டின் மதிப்பு மட்டும் சுமார் 4.41 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும். உலகளவில் காப்பீட்டு சந்தையின் மதிப்பு, ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தில் 7 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ளது.  இருப்பினும், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் ஆயுள் காப்பீட்டின் தேவை மற்றும் அதன் மதிப்பு கடந்த சில காலாண்டுகளாக உயர்ந்து வருகிறது. 

இந்தியாவில் காப்பீட்டு சந்தை எப்படி ?

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் வெறும் 2.7 சதவீதமாக இருந்த(2000ம் ஆண்டு) இந்திய காப்பீட்டுச் சந்தை தற்போது 4 சதவீதமாக(2022) உயர்ந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த காப்பீட்டு சந்தையின் மதிப்பு சுமார் 131 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(2022). 2031ம் ஆண்டின் முடிவில் இது 318 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலக காப்பீட்டுச் சந்தையை ஒப்பிடுகையில், இந்தியாவின் பங்களிப்பு குறைவே. இருப்பினும் ஒட்டுமொத்த பிரீமியம் மதிப்பு அடிப்படையில் பத்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. 

இந்திய காப்பீடு சந்தையில் ஆயுள் காப்பீடு மட்டும் 70 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சந்தையில் மொத்தமாக 24 ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் எல்.ஐ.சி. இந்தியா(அரசு பொதுத்துறை) நிறுவனம் மட்டும் 60 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது. பொதுவாக ஆயுள் காப்பீடு சந்தையில் பிரீமியம் இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது – புதிய வணிக பிரீமியம்(New Business Premium) மற்றும் புதுப்பிக்கப்படும் பிரீமியம்(Renewal Premium). புதிய வணிக பிரீமியம் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், புதுப்பிக்கப்படும் பிரீமியம் ஒவ்வொரு ஆண்டும் ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது பெரும்பாலும் காப்பீட்டின் தேவையை உணராமல், ஆண்டுதோறும் தொடர்ச்சியாக பிரீமியத்தை கட்டாமல் இருப்பது தான்.

இந்தியாவில் ஆயுள் காப்பீட்டில் உள்ள முக்கிய நிறுவனங்கள்:

  • எல்.ஐ.சி. இந்தியா 
  • எச்.டி.எப்.சி. லைப் 
  • எஸ்.பி.ஐ. லைப் 
  • ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரூடென்ட்சியல் லைப் 
  • ஆக்ஸிஸ் மேக்ஸ் லைப் 

2022-23ம் ஆண்டு முடிவில், இந்தியாவில் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் 7.83 லட்சம் கோடி ரூபாய். சொல்லப்பட்ட வருவாய், இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13 சதவீத வளர்ச்சியாகும். எல்.ஐ.சி. இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு 59 சதவீதமாகவும், எச்.டி.எப்.சி. லைப் 8%, எஸ்.பி.ஐ. லைப் 10 சதவீதம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. ப்ரூடென்ட்சியல் லைப் நிறுவனத்தின் பங்களிப்பு 5 சதவீதமாகவும் இருந்துள்ளது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் வெறுமனே நிதிப் பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை வழங்குவதோடு ஓய்வூதியம் சார்ந்த திட்டங்களையும்(Pension System – Annuity Plans) வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் அல்லாத காப்பீட்டு சந்தை:

உலகளவில் இந்திய ஆயுள் அல்லாத காப்பீட்டு சந்தை 14வது இடத்திலும், ஆசியாவில் நான்காவது மிகப்பெரிய சந்தையாகவும்(ஜெனரல் இன்சூரன்ஸ்) உள்ளது. இச்சந்தை 2022-23ம் ஆண்டு முடிவில் சுமார் 2.57 லட்சம் கோடி ரூபாயை பிரீமியம் வருவாயாக ஈட்டியுள்ளது. மருத்துவ காப்பீட்டின் மூலம் 38 சதவீதமும், வாகனங்கள் மூலம் 32 சதவீதமும், தீப்பிடித்தல்(Fire Insurance) 9 சதவீதம், தனிநபர் விபத்துக் காப்பீடு 3 சதவீதம் மற்றும் கடல் சார்ந்த காப்பீடு 2 சதவீத பங்களிப்பையும் ஒட்டுமொத்த வருவாயில் அளித்துள்ளது.

சில முக்கிய ஆயுள் அல்லாத காப்பீட்டு நிறுவனங்கள்:

  • நியூ இந்தியா (13%)
  • ஐ.சி.ஐ.சி.ஐ லோம்பார்ட் (9%)
  • பஜாஜ் அல்லையன்ஸ் (7%)
  • யுனைடெட் இந்தியா (7%)
  • ஓரியண்டல் இன்சூரன்ஸ் (6%)
  • எச்.டி.எப்.சி. எர்கோ (6%) 

சில முக்கிய மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள்:

  • ஸ்டார் ஹெல்த் & அல்லைடு இன்சூரன்ஸ் 
  • கேர் ஹெல்த் 
  • எச்.டி.எப்.சி எர்கோ 
  • நிவா புபா 
  • ஆதித்யா பிர்லா 
  • மணிப்பால் சிக்னா 
  • ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் 
  • டாடா ஏ.ஐ.ஜி 

ஜெனரல் இன்சூரன்ஸை(ஆயுள் அல்லாத மற்றும் மருத்துவ) பொறுத்தவரை 62 சதவீத பங்களிப்பு தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து தான் வருகிறது. இச்சந்தையில் தனித்த மருத்துவக் காப்பீட்டை(Standalone Health Insurance) மட்டும் அளிக்கும் நிறுவனங்களின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது. ஸ்டார் ஹெல்த், கேர் ஹெல்த், ஆதித்யா பிர்லா ஹெல்த், நிவா புபா போன்ற நிறுவனங்கள் தனித்த மருத்துவக் காப்பீட்டை வழங்கும் நிறுவனங்களாகும்.

காப்பீட்டில் அரசின் பங்களிப்பு மற்றும் அன்னிய முதலீடுகள்:

1991-92ம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கை, நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். அதன் காரணமாக நாட்டில் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கையும், அன்னிய முதலீடுகளும் கவரப்படும் நாடாக இந்தியா மாறியுள்ளது. இதற்கு காப்பீட்டுத் துறையும் விதிவிலக்கல்ல. 

கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய காப்பீட்டு துறை ஈர்த்த அன்னிய முதலீடுகளின் மதிப்பு மட்டும் 6.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாய் மதிப்பில் 54,000 கோடி). இது போல இந்திய காப்பீட்டு நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணையும் அந்நிய நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்துள்ளது. உதாரணமாக டாடா-ஏ.ஐ.ஜி(AIG), பார்தி-ஆக்சா, பஜாஜ்-அல்லயன்ஸ்(சமீபத்தில் அல்லயன்ஸ் பங்குகளை பஜாஜ் நிறுவனம் வாங்கப்போவதாக தகவல்).

கடந்த 2015ம் ஆண்டுக்கு முன்பு வரை, காப்பீட்டு துறையில் அன்னிய முதலீடுகளின் வரம்பு 26 சதவீதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து இன்று 74 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை(பட்ஜெட் 2025) என்ற வரைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறாக அரசின் கொள்கைகள் இருக்கும் நிலையில் அரசின் காப்பீட்டு பங்களிப்பும் மாற்றம் பெற்று வருகிறது. 

மருத்துவக் காப்பீட்டை பொறுத்தவரை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீடுகள் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளன. ஆயுள் மற்றும் விபத்து சார்ந்த காப்பீடுகள் ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கப்பெறுகிறது. நடப்பு பட்ஜெட்டில் பயிர் காப்பீட்டுக்காக இந்திய அரசு சுமார் 1.75 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்குவதாக கூறியுள்ளது. இது கடந்த ஆறு வருடங்களில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.

இது போல இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.(IRDAI) 2047ம் ஆண்டு முடிவில் நாட்டில் உள்ள ‘அனைவருக்கும் காப்பீடு’ என்ற வாசகத்தை கொண்டு இலக்கினை நிர்ணயித்துள்ளது. மற்றொரு புறம் தகவல் தொழில்நுட்பமும்(Blockchain & AI Technology) காப்பீட்டு துறையில் புகுத்தப்பட்டு அதனை எளிமையாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. 

ஸ்வாட் ஆய்வு(SWOT Analysis) காப்பீட்டு துறைக்கு எப்படி ?
  • பலம்: நாட்டின் மக்கட் தொகை மற்றும் தனிக்குடும்பம் அதிகரித்து வருதல்  மற்றும் அதன் காரணமாக காப்பீட்டின் தேவை.  அரசின் காப்பீட்டுக் கொள்கைகள், காப்பீட்டில் தகவல் தொழிநுட்பத்தின் தேவை அதிகரிப்பு மற்றும் அந்நிய முதலீடுகளின் வரம்பு உயர்வு.
  • பலவீனம்: நாட்டின் மக்கட் தொகை மற்றும் பொருளாதாரத்தில் குறைவான பங்களிப்பு (5 சதவீதத்திற்கும் கீழ்), கிராமப்புறங்களில் காப்பீட்டின் தேவை பற்றிய விழிப்புணர்வு இல்லாமை, காப்பீட்டில் ஏற்படும் மோசடிகள் மற்றும் தவறான காப்பீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கும் நிலை, வாடிக்கையாளர்கள் எளிமையாக புரிந்து கொள்ள முடியாத எண்ணற்ற பாலிசி திட்டங்கள்.
  • வாய்ப்புகள்: அதிகரித்து வரும் மருத்துவ செலவுகளால் காப்பீடு எடுக்க வேண்டிய தேவை, கிராமப்புறங்களில் காப்பீட்டுக்கான வாய்ப்புகள், ஏ.ஐ. மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்ப வரவால் காப்பீடு பெறுதல் மற்றும் கிளைம் செய்வதில் உள்ள எளிமை.
  • அச்சுறுத்தல்கள்: ஒழுங்குமுறை ஆணையத்தின் மாற்றங்கள், இணைய வழி தாக்குதல் மற்றும் வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாப்பதில் உள்ள சிக்கல்கள், இயற்கை பேரழிவு, காலநிலை மாற்றங்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் போது மக்களிடம் போதுமான பணப்புழக்கம் இல்லாதது, அதிகரித்து வரும் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் அதன் சார்ந்த விலையில் உள்ள போட்டிகள் 

 

பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் சில காப்பீட்டு நிறுவனப் பங்குகள்:

இந்தியப் பங்குச்சந்தையில் இதுவரை 11 காப்பீடு சார்ந்த நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றில் எல்.ஐ.சி. இந்தியாவின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.5 லட்சம் கோடிக்கும் மேல். தற்போது வரை, நாட்டின் மிகப்பெரிய ஐ.பி.ஓ.(IPO – Public Offering) வெளியீடும் இது தான்.

  • எல்.ஐ.சி. இந்தியா 
  • எஸ்.பி.ஐ. லைப் 
  • எச்.டி.எப்.சி. லைப் 
  • ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் 
  • ஐ.சி.ஐ.சி.ஐ. புரு லைப் 
  • ஜெனரல் இன்சூரன்ஸ் 
  • கோ டிஜிட் 
  • நியூ இந்தியா அஸுரன்ஸ் 
  • ஸ்டார் ஹெல்த் 
  • நிவா புபா 
  • மெடி அசிஸ்ட் 

தனிநபர் மற்றும் குடும்பத்தின் வருமான விகிதம் அதிகரித்து வரும் நிலையில், வருங்காலத்தில் நாட்டின் மற்றும் உலகின் பொருளாதார சூழல் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படலாம். வருமானம் ஈட்டும் தனிநபர் ஒருவர் தனது குடும்பத்தின் நிதி நலனை பாதுகாக்க டேர்ம் இன்சூரன்ஸ், மருத்துவ மற்றும் விபத்துக் காப்பீடு, ஓய்வூதியம் போன்ற திட்டங்களை தேர்ந்தெடுக்கும் நிலை உள்ளது. இது காப்பீட்டுத் துறைக்குமான வளர்ச்சியாகவும் உள்ளது. 

வெறுமனே வரிச் சலுகைக்காகவும், சேமிப்புக்காகவும் காப்பீட்டு திட்டங்களை பயன்படுத்தாமல், சரியான காப்பீட்டை தேர்ந்தெடுப்பதும் தனிநபர் ஒருவரின் நிதி சார்ந்த கடமையாகும் ! 

 

(தகவல்கள் மற்றும் தரவுகள்): Allied Market Research, IBEF, IRDAI & ChatGpt & Others

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குதாரர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறுவன நிர்வாகத் தன்மை

பங்குதாரர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறுவன நிர்வாகத் தன்மை 

Why is Corporate Governance so important for the Shareholders – Equity Investments ?

பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு பங்கின் விலை ஏறுவதற்கும், இறங்குவதற்கும் பொதுவான காரணியாக தேவைக்கும், இருப்புக்குமான இடைவெளி(Demand-Supply) தான் எனினும், அவற்றை தூண்டக்கூடிய விஷயங்களாக பல்வேறு நிலைகள் உள்ளன. உதாரணமாக பொதுவெளியில் ஒரு நிறுவனப்பங்கை பற்றிய செய்திகள், பங்குகளில் ஈடுபடும் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களின் மனநிலை, அரசியல் தாக்கங்கள், நாட்டின் பொருளாதார நிலை, துறை சார்ந்த மாற்றங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். 

இருப்பினும், நீண்டகால பங்கு முதலீட்டாளர்களுக்கு மிகவும் அடிப்படை காரணிகளாக மூன்று விஷயங்களை சொல்லலாம். அவை ஒரு பங்கின் நிறுவனர்கள்(Founders & Promoters), நிறுவனத்தின் நிதி அறிக்கைகள்(Financial Statements) மற்றும் நிர்வாகத் திறமை அல்லது தன்மை(Corporate Governance) ஆகியவை. குறுகிய காலத்தில் ஒரு பங்கின் விலை அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படுவது இயல்பு தான். அது ஒரு வகையில், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்பையும் வழங்கும். அதே சமயத்தில், மேலே சொன்ன மூன்று காரணிகள் தான் பெரும்பாலும் பங்குதாரர்கள் தங்களது பங்குகளை நீண்டகாலத்திற்கு வைத்திருக்க உதவும். 

“ சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் “ – இது தான் ஒரு பங்கு நீண்டகாலத்தில் விலையேற்றம் பெறுவதற்கும்.

நிறுவனர்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் எப்படி ?

இன்று சந்தையில் உள்ள பங்கு நிறுவனங்களில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்யும் பழமையான நிறுவனங்கள் பல உள்ளன. உதாரணமாக பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் வாடியா நிறுவனக் குழுமம்(தோற்றம்: 1736ம் ஆண்டு) துவக்கப்பட்டு 289 வருடங்கள் ஆகி விட்டது. ஆதித்யா பிர்லா குழுமம் துவங்கப்பட்டது 1857ம் வருடம், ரேமண்ட்ஸ் நிறுவனம் நூறு வருடங்களை கடந்து விட்டது. நம்ம ஊரு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 1921ம் ஆண்டு, கரூர் வைசியா வங்கி 1916, டாட்டா குழுமம் 1868, முருகப்பா குழுமம் 1900ம் ஆண்டு, டி.வி.எஸ். குழுமம்(1911), அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இந்துஜா குழுமம்(1914), லட்சுமி மில்ஸ்(1910), முத்தூட்(1887), பேரிஸ்(Parrys’ – EID Parry – 1788), ஸ்டேட் பேங்க்(SBI – 1806), கனரா வங்கி(1906), அட நம்ம மும்பை பங்குச்சந்தை(BSE) துவங்கப்பட்டது 1875ம் ஆண்டு என சொல்லிக் கொண்டே போகலாம். நூறு ஆண்டுகளை கடந்து தொழில் செய்யும் இந்திய நிறுவனங்கள் மட்டுமே 150க்கும் அதிகமாக உள்ளன.

பொதுவாக ஒரு நிறுவனம் துவங்கப்படும் போது, அந்நிறுவனத்தின் நிறுவனருக்கு(Founder) தொழில் அல்லது சமூகம் சார்ந்த ஒரு நோக்கம் இருந்திருக்கும். வெறுமென பணமீட்டுவது மட்டுமே அவரது நீண்டகால நோக்கமாக இருந்திருக்காது. அவ்வாறு நீண்டகாலத்தில் ஈட்ட வேண்டுமென்றால், அவரது இலக்கும் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறை தொழில்முனைவோர்களால் பராமரிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். இல்லையெனில், வரலாற்றில் நாம் எத்தனையோ பாரம்பரியமான பிராண்டு நிறுவனங்களை தொலைத்திருப்போம். நிறுவனத்தை துவக்கியவரின் ஆசை அல்லது நோக்கம் என்னவோ இருந்திருக்கலாம். ஆனால் அதனை பல வருடங்கள் சிறப்பாக வழிநடத்த அடுத்த தலைமுறை ஆட்கள் ஒத்துழைத்திருக்க வேண்டும். 

நிறுவனத்தை ஆரம்பநிலையில் துவக்கியவர் பொதுவாக Founder என அழைக்கப்படுவதுண்டு. அதற்கடுத்தாற் போல, அத்தொழிலை வழி நடத்தும் தலைமுறைகள் பெரும்பாலும் Promoters ஆக இருப்பர். சில சமயங்களில் ஒரு நிறுவனத்தின் Founder மற்றும் Promoter ஒரு நபரோ அல்லது குடும்ப நபர்களோ அமைவதுண்டு. நிறுவனத்தை துவக்கியவரின் நோக்கம் ஒரு புறம் இருக்க, இன்றைய அளவில் அந்நிறுவனத்தை வழிநடத்தும்(Promoters) இவர்களின் தொலைநோக்கு பார்வை எப்படியிருக்கும் ? இது தான் ஒரு பங்கு முதலீட்டாளருக்கு அவசியமானது.

“ தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி தூரம் பாயும் “ – நமக்கு பதினாறு அடியெல்லாம் பாய வேண்டாம். நிறுவனம் திவாலாகாமல் பங்குதாரர்களுக்கு நாணயமாக இருக்கிறதா என்பது தான் அவசியம். குறிப்பாக எந்த தொழிலையுமே செய்யாமல், வெறும் நிறுவனப் பங்கின் விலையை மட்டும் குறுகிய காலத்தில் ஏற்றி, லாபம் பார்த்து விட்டு பங்கு முதலீட்டாளர்களை பாதாளத்தில் தள்ளும் ‘ஷெல் நிறுவனங்கள்(Shell Companies)’ சந்தையில் பல உள்ளன. அப்படியிருக்க தொழிலை நாணயமாக செய்து கொண்டு, மாற்றத்திற்கும் உட்படும் நிறுவனங்கள் தான் ஒரு பங்கு முதலீட்டாளர்களுக்கு அவசியம். இதன் மூலம் மட்டுமே ஒருவர் நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டில் செல்வ வளத்தை ஏற்படுத்த முடியும்.

அதென்ன தொழில் நாணயம் ? (Corporate Governance):

“ ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் “ – இது ஒரு குடும்பத்திற்கும், நிறுவனத்திற்கும் பொருந்தும்.  

குடும்ப உறவுகளிடம் ஏற்படும் பிரச்சனைகள் பொதுவெளியில் தெரிய வந்தாலும், அதனை குடும்ப உறுப்பினர்களே முடிந்தவரை பேசி தீர்த்துக் கொள்வது, நீண்டகாலத்தில் நன்மை பயக்கும். இதனை போன்று தான், ஒரு நிறுவனத்தின் நிர்வாகம், தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நிதி அறிக்கைகளில் ஏற்படும் பொதுவெளியிலான சிக்கல்களை அந்த நிறுவனம் சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், முதலீட்டாளர்களிடம்(பங்கு விலை மற்றும் வாக்களிப்பு) அதன் தாக்கம் தெரிய வரும். இது நீண்டகாலத்தில் அந்நிறுவனத்திற்கும் பாதகத்தை ஏற்படுத்தலாம்.

உதாரணமாக தொழிலாளர்களிடையே வேலைநிறுத்த போராட்டம் ஏற்பட்டால், அது அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிலைத்தன்மையை பாதிக்க காரணமாக அமைந்து விடும். இதனை நிறுவனத்தின் நிர்வாகம், பொதுவெளியில் சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். நிர்வாகத்துக்குள் ஏற்படும் மேலாண்மை சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள், வாடிக்கையாளர்களின் நலனை பராமரித்தல், நிதி சார்ந்த கடன்கள் மற்றும் அறிக்கைகள், பொருளாதாரம் மற்றும் துறை சார்ந்த மந்தநிலை ஆகியவற்றில் நிறுவனத்தலைவர்கள் மற்றும் மேலிட நிர்வாகம் அதனை எவ்வாறு கையாளுகிறது என்பது ஒரு நிறுவனத்தின் நலனுக்கு மட்டுமிலலாமல், நீண்டகாலத்தில் முதலீட்டாளருக்கும் நலன் அளிக்கும்.

ஒரு நல்ல அல்லது நாணயமான நிறுவனம் என்பது அதன் நிர்வாகம் – பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் நல்ல நம்பிக்கையையும், உறவையும் பேண வேண்டும். இது பொதுவெளியில் அந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

ஏன் நிறுவனத்தின் நிர்வாகத்தன்மை(Corporate Governance) ஒரு முதலீட்டாளருக்கு அவசியம் ?

ஒரு நிறுவனம் தனது தொழிலில், ‘ரிஸ்க்’ எடுத்து ஏதேனும் புதிய முயற்சியை அல்லது அதிகக் கடன் வாங்கி விரிவாக்கம் செய்யும் நிலையில் அதன் வெளிப்படைத்தன்மையை பங்குதாரர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களுடன் அறிக்கைகளாக(Statements) தெரிவிப்பது அவசியமாகும். இது அந்நிறுவனத்தின் செயல்திறனையும் மேம்படுத்த உதவும். காலாண்டுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் நிதி அறிக்கைகளில் சொல்லப்படும் விஷயங்கள், நோக்கங்கள் மற்றும் இலக்குகள் தவறும் பட்சத்தில் அதனை முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவை ஏற்படுத்த வேண்டும்.

உதாரணமாக, “ பொருளாதார மந்த நிலைக் காரணமாக எங்கள் நிறுவனம் இன்னென்ன சிக்கல்களை சந்திக்கும். அதனை களைய எங்கள் முன் உள்ள சில தீர்வுகள்”; “கடந்த சில காலாண்டுகளாக நிறுவனம் லாப வளர்ச்சியை நோக்கி செல்ல முடியாததற்கான காரணங்கள் மற்றும் துறை சார்ந்த நிலைகள்”; “ புதிய நிர்வாகம் அமைந்த பின் எங்களது தொழில் சார்ந்த மாற்றங்கள்”; “வேலை நிறுத்த போராட்டத்தால் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதனை களைய நாங்கள் கொண்டுவரும் தீர்வுகள்”; “இது போன்ற மோசடிகள்(Whistleblower, Scam, Fraud) இனி மேல் எங்கள் நிறுவனத்தில் நடைபெறா வண்ணம் நாங்கள் செய்த விஷயங்கள் ” – இவ்வாறு நிர்வாகத்தின் அறிக்கைகள் மூலம் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் சரியான நேரத்தில் தகவல்களை பகிர வேண்டும். அது வெறுமென பங்கு விலைகளை கட்டுப்படுத்தும் மற்றும் ஏற்றும் போலிச் செய்தியாக இருந்து விடக் கூடாது.

      

பொதுவாக பங்குதாரர்கள் ஒரு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரத்தில் தலையிடுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்களுக்கும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கு உள்ளது. அதன் காரணமாக தான் பங்குதாரர்கள் மூலம் ஒரு இயக்குனர் குழுவை தேர்ந்தெடுப்பது, நிறுவனத்தின் பிற கடமைகளை வாக்களிப்பு மூலம் ஏற்படுத்துவது என முடிவெடுக்கும் காரணிகளாக உள்ளன. இதனை நம்பிக்கைக்குரிய வகையில் அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவும், நிர்வாகமும் கடைபிடிப்பது அவசியமாகும். ஒரு சாமானிய பொது பங்குதாரரும்(Retail / Public Shareholders) ஒரு நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அங்கம் வகிப்பதற்கான சட்டம் உள்ளது.

பங்கு முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை(Annual Reports and Other Financial Statements) தங்களது முகவரிக்கு அனுப்பி வைக்க சொன்னால், அதனை அனுப்பி வைப்பது ஒரு நிர்வாகத்தின் கடமையாகும். இது போன்று தான் வாக்களிப்பது, ஈவுத்தொகை(Dividend), போனஸ் பங்குகள், ரைட்ஸ் பங்குகள் மற்றும் பிற பங்குதாரர் சார்ந்த நிலைகள். இதற்காக தான் ஒரு நிறுவனத்தில் பங்குதாரர் நலனைப் பாதுகாக்க செயலாளரும்(Company Secretary) நியமிக்கப்பட்டுள்ளார். 

நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு(Annual General Meeting – AGM) பங்குதாரர்களை அழைப்பது நிர்வாகத்தின் கடமை. அது இணைய வழியிலோ அல்லது நேரடியான உரையாடலாக இருக்கலாம். ஆனால் பங்குதார்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவும் மற்றும் இன்னபிற அதிகாரிகளும் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும். இது போன்ற கூட்டங்களில் நிறுவனத்தின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதனை பங்குதாரர்கள் அறியலாம். 

நீங்கள் ஒரு நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கு(Factory Visit) சென்று, அதன் தொழிலை பற்றி புரிந்து கொள்ள, அவர்களின் பொருட்கள் அல்லது சேவை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதனை அறிய, அந்நிறுவனத்தின் நிர்வாகத்திடம் ஒரு பங்குதாரராக அனுமதி கேட்கலாம். சில நிறுவனங்கள் இதற்கான அனுமதியையும் அளித்து வருகிறது. இன்னும் சில நிறுவனங்களோ அதன் உற்பத்தி ஆலையில் தான் ஆண்டு பொதுக்கூட்டத்தை நடத்துவதுடன், பங்குதாரர்களுக்கு ஆலையையும் சுற்றி காண்பிக்க உதவுகிறது. இதன் மூலம் பங்குதாரர்கள்-நிர்வாக உறவு மேம்படும்.  

பொதுவெளியில் மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை சிக்கல்களை ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் செவிக்கொடுத்து கேட்கிறதா என்பதனை பங்குதாரர்களுக்கு நிறுவனம் தெரியப்படுத்த வேண்டும். நிறுவனத்தின் நிதி அறிக்கைகள் மற்றும் இன்னபிற ஆவணங்கள் ஆகியவற்றை ஒரு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு சரியான நேரத்தில் பகிர்தலையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆக சுருக்கமாக சொன்னால், பொறுப்புடைமை(Accountability), வெளிப்படைத்தன்மை(Transparency), இடர் மேலாண்மை(Risk Management), நாணயம்(Fairness) மற்றும் பங்குதாரர்களிடம் இணக்கத்தை(Shareholders Relationship) ஒரு நிறுவனம் கொண்டிருக்க வேண்டும். இதுவே ஒரு முதலீட்டாளருக்கும் அதன் பங்கு விலையில் நீண்டகாலத்தில் வெளிப்படும்.

இன்றும் நூறு வருட பாரம்பரிய நிறுவனங்கள் நிலைத்து நின்று தொழில் புரிவதற்கு அதன் வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் தான் காரணம் – அவர்கள் நிறுவனத்தின் நிர்வாகத்தன்மையில் நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தால் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பளிச்சிடும் சூர்யா பல்ப் (சூரிய ரோஷ்ணி) – பங்குச்சந்தை அலசல்

பளிச்சிடும் சூர்யா பல்ப் (சூரிய ரோஷ்ணி) – பங்குச்சந்தை அலசல் 

Surya Roshni – Fundamental Analysis – Stocks

கடந்த 1973ம் ஆண்டு திரு பி.டி.அகர்வால் அவர்களால் துவக்கப்பட்டது தான் பிரகாஷ் சூர்ய ரோஷ்ணி நிறுவனம். பின்னாளில் இது சூர்ய ரோஷ்ணி லிமிடெட் நிறுவனமாக பெயர் மாற்றம் பெற்றது. ஆரம்ப காலத்தில் ஸ்டீல் டியூப்(Tube) தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இந்நிறுவனம் இன்று ஒளி விளக்குகள்(LEDs, Lighting), மின்னணு விசிறிகள், பல்வகையான ஸ்டீல், சமைலயறை உபகரணங்கள்(Kitchen Appliances) மற்றும் பி.வி.சி. பைப்புகள் என எண்ணற்ற பொருட்களை உற்பத்தி செய்து, அதிகளவில் ஏற்றுமதி செய்யும் பன்னாட்டு நிறுவனமாகவும் வளர்ந்துள்ளது.

நாட்டின் தலைநகரமான டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் ERW GI பைப் தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும், அதன் ஏற்றுமதியில் நாட்டின் 60 சதவீத சந்தைப் பங்களிப்பை சூர்ய ரோஷ்ணி நிறுவனம் கொண்டுள்ளது. GI பைப் உற்பத்தியில் தென் இந்தியாவின் முன்னணி நிறுவனமாகவும் சூர்ய ரோஷ்ணி இருப்பது கவனிக்கத்தக்கது. பூசப்பட்ட குழாய்(Coated API and Spiral Pipes) தயாரிப்பிலும் இந்நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. 

நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் ஸ்டீல் பைப் சார்ந்த பொருட்கள் 80 சதவீத பங்களிப்பையும், ஒளி மற்றும் நுகர்வோர் பொருட்கள் 20 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. நிறுவனத்தின் உற்பத்தியில் 16 சதவீதம் ஏற்றுமதியாகிறது. ஒட்டுமொத்த பொருட்கள் விற்பனையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மட்டும் 45 சதவீத வருவாயை அளித்து வருகிறது.  

நிறுவனத்தின் ஸ்டீல் பைப் பிரிவு, குறிப்பாக எண்ணெய், எரிவாயு, விவசாயம், கட்டுமானம் மற்றும் நீர் மேலாண்மைத் துறைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் ஸ்டீல் பைப்புகள் உலகளவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ‘சூர்யா’ மற்றும் ‘பிரகாஷ் சூர்யா’ – உலகளவில் பிரபலமான இதன் முக்கிய பிராண்டுகளாகும். ஸ்டீல் பைப் உற்பத்திக்கான ஆலைகளை அரியானா, குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு இடங்களில் வைத்துள்ளது. இவை ஆண்டுக்கு சுமார் 12.76 லட்சம் MTPA(Million Metric Tonnes per annum) உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது. 

மேலும் வாகனத்துறைக்கு தேவையான பைப்புகள், சைக்கிள் ரிம், நிழற்குடை, சோலார், தீத்தடுப்புகள் மற்றும் சாரக்கட்டுகளுக்கு(Scaffoldings) தேவையான பைப்புகள் மற்றும் ஸ்ட்ரிப்புகளையும் உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களையும், 21,000க்கும் மேற்பட்ட சில்லரை வணிகக் கடைகளிலும் நிறுவனத்தின் ஸ்டீல் பைப்புகள் கிடைக்கப்பெறுகிறது.

ஒளி விளக்குகள் பிரிவில் கடந்த 1984ம் ஆண்டு முதல் தான் உற்பத்தி நடைபெற்றிருந்தாலும், இன்று நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக இப்பிரிவில் சூர்ய ரோஷ்ணி உள்ளது. பல்புகள், டியூப் லைட்கள், மின் சேமிப்பு விளக்குகள், ஸ்மார்ட் எல்.இ.டி. விளக்குகள் மற்றும் விசிறிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் ஆலைகளை உத்தரகாண்ட், மத்தியபிரதேசம் மற்றும் கர்நாடகாவில் கொண்டுள்ளது. நிறுவனத்தின் ஒளி விளக்குகள் பிரிவின் ஒட்டுமொத்த வருவாயில், எல்.இ.டி. விளக்குகளின் மூலம் மட்டுமே 62 சதவீத வருவாய் ஈட்டப்படுகிறது. இது போக சமையலறை உபகரணங்கள்(உணவு தயாரித்தல் மற்றும் வெப்பமூட்டுதல்), ஆடை பராமரிப்பு மற்றும் காலநிலை கட்டுப்பாடுகள் என நுகர்வோர் சார்ந்த பொருட்கள்(FMEG Sector) உற்பத்தியிலும் கவனம் செலுத்தி வருகிறது.

இது சார்ந்த தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையம் உத்திரப்பிரதேசத்தின் நொய்டாவில் இயங்கி  வருகிறது. இப்பிரிவில்(Lighting & Consumer Durables) நாடு முழுவதும் 2500க்கும் மேற்பட்ட டீலர்களையும், சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான சில்லறை வணிகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இந்நிறுவனத்தின் ஒளி விளக்குகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. சமீபத்தில் இந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மின் விசிறிகள், கிச்சன் அடுப்புகள், குடியிருப்பு நீர் பம்பு மோட்டார்(Surya Water Pumps), பி.வி.சி. டேப்புகள், புதிய வண்ண ஒளி விளக்குகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கூலர்கள் போன்ற பொருட்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 

Surya Roshni - New Product launch

நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு(Market Cap) ரூ. 5,578 கோடி(ஜனவரி 9, 2025).நிறுவனத்தின் பி.இ.விகிதம் 17 மடங்குகளிலும், கடன்-பங்கு விகிதம் 0.03 மடங்கு என்ற அளவிலும் உள்ளது. நிறுவனத்திற்கு கடந்த 2020ம் நிதியாண்டில் 1,090 கோடி ரூபாய் கடன் என்றிருந்த நிலையில், 2024ம் நிதியாண்டின் முடிவில் நான்கு கோடி ரூபாய் மட்டுமே கடனாக இருந்துள்ளது. செப்டம்பர் 2024 காலத்தில் நிறுவனம் குறுகிய காலக்கடனாக 60 கோடி ரூபாயை கொண்டுள்ளது. எனினும், தற்போதைய நிலையில், நீண்டகாலக்கடன் எதுவும் நிறுவனத்திற்கு இல்லை.

சூர்ய ரோஷ்ணி நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 20 மடங்குகளிலும், பங்கு விலைக்கும், நிறுவன வருவாய்க்குமான(Price to Sales) விகிதம் 0.75 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாகவும், அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு சுமார் 5 சதவீதம் என்ற அளவிலும் மற்றும் உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு ஒரு சதவீதமாகவும் உள்ளது.

பங்கு மீதான மூலதன வருவாய்(ROE) கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 சதவீதமாகவும், பத்து வருடங்களில் 13 சதவீதமாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 சதவீதமாகவும், இதுவே பத்து வருடங்களில் 10 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனத்தின் கூட்டு லாப வளர்ச்சியை காணுகையில், 5 வருடங்கள் மற்றும் 10 வருடங்கள் முறையே 22% மற்றும் 20% ஆக இருந்துள்ளன.

செப்டம்பர் 2024 காலாண்டு முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ.2,213 கோடியாக இருக்கிறது. கடனை பொறுத்தவரை குறுகிய காலக்கடன் ரூ.60 கோடி மற்றும் நீண்ட காலக்கடன் எதுவுமில்லை. நிறுவனத்தின் பணவரத்தை(Cash Flow) பொறுத்தவரை கடந்த காலங்களில் சீராக வந்துள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒன்றுக்கு ரூ.256 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. நடப்பாண்டின் ஜனவரி ஒன்றாம் தேதி, பங்குதாரர்களுக்கு ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்கினை இந்நிறுவனம் வழங்கியுள்ளது. 2023ம் ஆண்டின் அக்டோபர் காலத்தில் இந்நிறுவனத்தின் முகமதிப்பு(Face value) பங்கு ஒன்றுக்கு 10 ரூபாயிலிருந்து ஐந்து ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   

            

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வுக்கானக் கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(பங்குச்சந்தை) தெரியுமா ?

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(பங்குச்சந்தை) தெரியுமா ? 

History of Madras Stock Exchange(MSE) 

தமிழ்நாட்டை தலைநகரமாக கொண்ட சென்னை நீடித்த வரலாற்றையும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பையும் கொண்டிருக்கிறது. 2022ம் ஆண்டு முடிவில் சென்னையின் பொருளாதார மதிப்பு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாயில் 7.87 லட்சம் கோடி). இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு, சென்னையின் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதியும் ஒரு காரணம் எனலாம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் சென்னையின் பங்களிப்பு மட்டும் சுமார் 33 சதவீதமாகும். உலகின் பிரபலமான நகரங்களில் முதல் 50 நகரங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் சென்னையின் இடத்தை தவிர்க்க முடியாதது.

ஆசியாவின் டெட்ராய்ட்(Detroit of Asia) என அழைக்கப்படும் சென்னை, வாகனத்துறைக்கான உதிரி பாகங்கள் உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது. நாட்டின் வாகன உதிரி பாகங்கள் பிரிவில் சென்னை மட்டும் 35 சதவீத பங்கினை கொண்டுள்ளது. இந்திய நான்கு சக்கர வாகன உற்பத்திப் பிரிவில் இதன் பங்களிப்பு மட்டும் 30 சதவீதமாக உள்ளது. கனரக வாகனங்கள், டயர்கள், வாகன சோதனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, துறைமுகங்கள், உலகின் முக்கிய நிறுவனங்களின் அலுவலகங்கள் என வாகனத்துறைக்கு தேவையான பெரும்பாலான நிலைகளை சென்னை உள்ளடக்கியுள்ளது. 

அப்படியிருக்க, சென்னையில் ஒரு பங்குச்சந்தை…  

கடந்த 1937ம் ஆண்டு துவக்கப்பட்டது தான் மெட்ராஸ் பங்குச்சந்தை(தலைமை அலுவலகம்: சென்னை). நாட்டின் நான்காவது பங்குச்சந்தையாகவும், தென் இந்தியாவில் துவக்கப்பட்ட முதல் பங்குச்சந்தையாகவும், மெட்ராஸ் பங்குச்சந்தை இருந்தது. இந்த சந்தை மேலே சொல்லப்பட்ட காலத்தில் துவக்கப்பட்டிருந்தாலும், 1957ம் ஆண்டு தான் இச்சந்தைக்கு தேவையான ஒழுங்குமுறைகளும், இன்னபிற வழிமுறைகளும் சட்டமாக்கப்பட்டு இயக்கத்தில் வந்தன.

ஆரம்ப நிலையில் ஐந்து நிறுவனங்களின் துணை மூலம் தோற்றுவிக்கப்பட்ட மெட்ராஸ் சந்தை, பின்னர் பெரிய சந்தையாக சுமார் 120 உறுப்பினர்களுடன் இயங்கியது. 1996ம் ஆண்டு முதல் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட சந்தையாக, 120 பங்குத்தரகு அலுவலகங்களுடன், மெட்ராஸ் பங்குச்சந்தை செயல்பட்டது.

 2001ம் ஆண்டு வாக்கில் சுமார் ரூ.3,000 கோடி வர்த்தக அளவை கொண்டிருந்த மெட்ராஸ் பங்குச்சந்தை, 2012ம் ஆண்டில் சுமார் 19,900 கோடி ரூபாய் வர்த்தகம் என்ற அளவில் வளர்ச்சியடைந்தது. 2001ம் ஆண்டில் சொல்லப்பட்ட 3,000 கோடி ரூபாய் வர்த்தகம் என்பது அப்போதைய மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையை ஒப்பிடுகையில், இது மூன்று சதவீதம் என்ற அளவில் மட்டுமே இருந்துள்ளது.

மெட்ராஸ் பங்குச்சந்தையில் சுமார் 1,785 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. மெட்ராஸ் பங்குச்சந்தைக்கு ஒரு துணை நிறுவனமும் உண்டு – எம்எஸ்இ பைனான்சியல் சர்வீஸஸ்(MSE Financial Services). 2012ம் ஆண்டு வாக்கில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி(SEBI) அறிவித்த ஒரு செய்தியால், மெட்ராஸ் பங்குச்சந்தையை மூடுவதற்கு காரணமாக அமைந்தது. இந்தியாவில் உள்ள ஒரு பங்குச்சந்தை குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய்க்கு பங்குகளில் பணப்புழக்கத்தை(Minimum Liquidity) ஏற்படுத்த வேண்டுமென்பது தான். அதாவது ஒரு முதலீட்டாளரோ, வர்த்தகம் செய்பவரோ தான் வாங்கியிருக்கும் பங்குகளை விற்க முனைந்தால், மற்றொரு புறம் வாங்குவதற்கு ஆள் வேண்டுமே, அது தான் இந்த பணப்புழக்கம்(Liquidity). 

மேற்சொன்ன அறிவிப்பை தொடர முடியாத நிலையில் பெங்களூர் பங்குச்சந்தையுடன், மெட்ராஸ் பங்குச்சந்தை இணைக்கப்பட்டது. பின்னாளில் இச்சந்தையும் மூடப்பட்டது.  இதனைத் தொடந்து 2015ம் ஆண்டின் மே மாதத்தில் தனது வர்த்தக செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக மெட்ராஸ் பங்குச்சந்தை அறிவித்தது. பின்னர் செபியும் அதனை ஏற்றுக் கொண்டது. 77 வருட பாரம்பரிய பங்குச்சந்தையாக திகழ்ந்த மெட்ராஸ் பங்குச்சந்தை 2015ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேக் என 1990 மற்றும் 2000களில் இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்ட நிலையில், 1992ம் ஆண்டு துவக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தை மற்றும் ஆசியாவின் பழமையான மும்பை பங்குச்சந்தை போன்ற ராட்சத அலைகளுக்கு முன்னர் தென் இந்தியாவின் முதற் பங்குச்சந்தை நிற்க இயலவில்லை. நாடெங்கிலும் எண்ணற்ற பங்குச்சந்தைகள்(20க்கும் மேற்பட்ட) இருந்த நிலையில், அவற்றை கையாள்வது கடினம் மற்றும் முதலீட்டாளர் நலனை பாதுகாக்க இது போன்ற நிகழ்வுகளை செபி(SEBI) ஏற்படுத்தியிருந்தது. 

இந்தியப் பங்குச்சந்தையில் தற்போதைய முதலீட்டாளர் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வு அன்றைய காலத்தில் இல்லாததும் ஒரு காரணமே !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com