All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

மியூச்சுவல் பண்டு vs பங்குச்சந்தை – எங்கே முதலீடு செய்வது ?

மியூச்சுவல் பண்டு vs பங்குச்சந்தை – எங்கே முதலீடு செய்வது ?

Mutual Funds vs Stock (Share) Market – Where to invest ?

நம்மில் பலர் மியூச்சுவல் பண்டு என சொல்லப்படும் பரஸ்பர நிதியும், பங்குச்சந்தையும் ஒன்று என நினைத்து கொள்கின்றனர். அது போல, சொல்லப்பட்ட இரண்டுமே மிக அதிகமான ரிஸ்க் தன்மை கொண்டவை, அதனால் முதலீட்டுக்கு ஏற்றதல்ல என்ற தவறான எண்ணமும் உள்ளது.

உண்மையில் மியூச்சுவல் பண்டு(Mutual Funds) என்பது முதலீட்டாளர்களிடம் பெறப்படும் முதலீடு பல்வேறு சாதனங்களில் பிரித்து முதலீடு செய்யப்படும் முறையாகும். இதற்காக பல பிரிவுகளும், திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை நிர்வகிப்பது அஸெட் மேனேஜ்மென்ட்(Asset Management Company) என சொல்லப்படும் நிறுவனங்களாகும். பெரும்பாலும் இந்நிறுவனங்கள் வங்கி சேவையிலிருந்து வந்தவை ஆகும். ஆதலால் இந்த நிறுவனங்களின் நிதி சார்ந்த அனுபவமும் நீண்ட காலத்திற்கு உரியவை.

2020ம் ஆண்டு முடிவின் படி, அமெரிக்காவின் பரஸ்பர நிதிகளின் சொத்து மதிப்பு(AUM) சுமார் 24 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய பரஸ்பர நிதிகள் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு ரூ. 33 லட்சம் கோடி (மே 31, 2021). உலகளவில் முதல் பத்து இடங்களில் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் நிதி(Financial Assets) சார்ந்த சொத்துக்களை மட்டுமே சேர்த்து வைத்துள்ளனர். அதாவது அவர்களிடம் நிலம், தங்கம், வைரம் போன்றவையாக இல்லாமல் வங்கி முதலீடு, மியூச்சுவல் பண்டு, பங்குச்சந்தை மற்றும் இதர நிதி சார்ந்த முதலீடுகளாக இருக்கலாம்.

பரஸ்பர நிதி சேவையில் பல திட்டங்கள் உள்ளன. இவை பல இனங்கள் சேர்ந்த ஒரு கூட்டு கலவையாக உள்ளன. சீட்டு, அஞ்சலக சேமிப்பு, வங்கி டெபாசிட் ஆகியவற்றுக்கு மாற்றாக, அரசு மற்றும் தனியார் பத்திரங்கள், அந்நிய நிறுவனத்தில் முதலீடு, பங்குச்சந்தை, குறிப்பிட்ட துறை சார்ந்த என முதலீடு திட்டங்கள் பல உள்ளன. இவை அனைத்தும் கிடைக்கப்பெறும் சந்தை தான் மியூச்சுவல் பண்டு சேவையாகும்.

தனிநபர் ஒருவர் தனக்கும், தனது குடும்பத்திற்கும் தேவையான நிதி இலக்குகளை நிர்ணயித்து பின்பு அதற்கேற்ற பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். இங்கே கால அளவு என்பது முக்கியம். நீங்கள் எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்ய உள்ளீர்கள் மற்றும் எப்போது இந்த முதலீடு உங்களுக்கு தேவைப்படும் என்பதையும் அறிந்திருத்தல் அவசியம். மியூச்சுவல் பண்டு முதலீடு ரிஸ்க் தன்மை கொண்டது. ஆனால் அனைத்து மியூச்சுவல் பண்டு திட்டங்களும் ஒரே அளவிலான ரிஸ்க் தன்மை கொண்டவையல்ல. ஒரு இரவில் இருந்து 20 வருடங்கள்(Overnight to Long term Funds) வரை வெவ்வேறான முதலீட்டு திட்டங்களை பிரதிபலிப்பவை.

மிகவும் குறுகிய காலத்தில் குறைந்த ரிஸ்க் அளவு கொண்ட திட்டங்கள் உள்ளன. இவற்றில் கிடைக்கப்பெறும் வருவாய் அஞ்சலகம் மற்றும் வங்கி சேமிப்பை ஒட்டி அமையும். நடுத்தர காலத்தில் அரசின் கொள்கைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பொறுத்து திட்டங்களின் வருவாய் இருக்கும். நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்பட்டு நல்ல வருவாயை ஈட்ட முடியும். முதலீட்டை பொறுத்தவரை பணவீக்கத்தை தாண்டிய வருவாயும், நிதி இலக்குகளை எட்டக்கூடிய தன்மையையும் கொண்டிருக்க வேண்டும்.

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதற்கு முன்னர், உங்களுக்கு தேவைப்படும் விஷயங்கள்:

  • நிதி இலக்கு (Goal Name)
  • இலக்கிற்கான தொகை (இன்றைய  மதிப்பில்) – Goal Value / Corpus
  • இலக்கிற்கான காலம் – Goal Period
  • எதிர்பார்க்கும் வருவாய் – Expected Returns %
  • முதலீட்டு வடிவம் – மாத முதலீடு அல்லது ஒரு முறை மட்டும் முதலீடு

மேலே சொன்ன விஷயங்களை  கருத்தில் கொண்டு, அதனை சார்ந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பது அவசியமானது. புரிவது சற்று கடினமாக இருந்தால், தகுந்த முதலீட்டு ஆலோசகரின் முன்னிலையில் முதலீட்டு முடிவை எடுங்கள். முதலீட்டு ஆலோசகர் எனும் போது, உங்களின் நிதி இலக்குகளில் அக்கறை கொண்டு, அதற்காக கட்டணம் பெற்று சரியான தரவுகளை அளிக்கும் நபர்களை கண்டறியுங்கள். ஏஜெண்ட்களிடம் மாட்டி கொள்ள வேண்டாம். அவர்களின் கமிஷன் தொகைக்காக உங்களுக்கு சம்மந்தமில்லாத முதலீட்டு திட்டங்களை பரிந்துரைக்கலாம். முடிவில் நஷ்டம் உங்களுக்கு மட்டுமே. இந்த தவறான அணுகுமுறையால் தான், இன்று நம் நாட்டில் பெரும்பாலோர் முறையான காப்பீட்டு திட்டத்தை பெற இயலவில்லை. அது முதலீட்டு திட்டங்களிலும் நடக்க வேண்டாம்.

பங்குச்சந்தை(Share Market) என்பது ஒரு தொழிலை போல. ரிஸ்க் என்பது இவற்றில் எப்போதும் அதிகம் தான். பங்குச்சந்தை மூலம் வெகு விரைவில் நான் கோடீஸ்வரராக போகிறேன் என இங்கு யாரும் வர வேண்டும். ஆழம் தெரியாமல் காலை விட்டால், பிறகு யாரையும் நம்ப மாட்டீர்கள். பங்குச்சந்தை முதலீடு(Equity Investing) என்பது பலதரப்பட்ட முதலீட்டாளர்களிடம் பெறப்படும் முதலீடு, ஒரு நிறுவனத்திற்கு அளிக்கப்படும். பின்பு அதனை கொண்டு அந்த நிறுவனம் தொழில் செய்யும். லாப, நட்டத்திற்கு முதலீட்டாளர்கள் தான் பொறுப்பு. பங்குச்சந்தையை நிர்வகிக்க ஜாம்பவான் செபி(SEBI) உள்ளது. சந்தையில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் ஒழுங்குமுறைப்படுத்தவது செபியின் வேலை. செபி தான் பரஸ்பர நிதி என சொல்லப்படும் மியூச்சுவல் பண்டு சேவைக்கும் தலைமை.

பங்குச்சந்தை என நினைத்து கொண்டு நம்மில் பலர் சந்தையை விட்டு, மோசடி பேர்வழிகளிடம்(Ponzi Schemes) பணத்தை இழந்து கொண்டிருக்கின்றனர். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். பங்குச்சந்தையை பொறுத்தவரை ஒழுங்குமுறை ஆணையம், தரகர்கள், பதிவாளர்கள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் இருக்கும். இவை அனைத்தும் முதலீட்டாளர்களின் நலன் கருதி நிர்வாக சேவை செய்வதற்கு. பங்குச்சந்தையில் உங்களுக்கு பணம் பண்ண யாரும் உதவ மாட்டார்கள், அப்படி எதுவும் இங்கே கிடையாது. பங்குச்சந்தையை பற்றிய கல்வியை அளிக்க இங்கே எண்ணற்ற நிறுவனங்களும், புத்தகங்களும் உள்ளன. முறையாக கற்று கொண்டு, நீங்களாகவே களம் இறங்கினால் தான் உண்டு. பண விஷயத்தில் மற்றவர்களை நம்பி கொண்டு, உங்கள் கையை சுட்டு கொள்ள வேண்டாம்.

பங்குச்சந்தையில் பணம் பண்ணலாம், உங்கள் பணத்தை கொண்டு. உங்களிடம் உபரியாக உள்ள பணத்தை மட்டுமே, சந்தையில் முதலீடு செய்து பணம் பண்ணுங்கள். நஷ்டத்தை தவிர்க்க இயலாது, நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் – பங்குச்சந்தை என்பது ஒரு தொழில், இவற்றில் சூதாட்டம் வேண்டாம். முதலீடு செய்யும் முன்னர், அதற்கான முறையான கல்வியை கற்று கொண்டு பின்னர் ஆயுதமாகுங்கள். உண்மையில் பங்குச்சந்தை பணம் பண்ணும் சூத்திரம், அனைவருக்கும் சாத்தியமே – முறையான கல்வியும், நீண்ட காலத்தில் பொறுமையும் இருந்தால்.

மியூச்சுவல் பண்டுக்கு பதில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா ?

என்னிடம் பல நண்பர்கள் கேட்கும் கேள்வி இது. மியூச்சுவல் பண்டை விட, பங்குச்சந்தையில் அதிகம் வருமானம் கிடைக்குமாமே, மியூச்சுவல் பண்டும் பங்குச்சந்தையில் தான் முதலீடு செய்கிறார்கள் – அப்புறம் எதற்கு நான் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய வேண்டும் ?

இந்த கேள்வி தான் பெரும்பாலானவர்களிடம் !

முதலில் இரண்டுக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். மியூச்சுவல் பண்ட் சேவையில் பல கலவை திட்டங்கள் உள்ளன. பங்குச்சந்தை என்பது ஒரு நேரடி தொழில் போல. பரஸ்பர நிதி சேவைக்கு பெரிய கற்றல் தேவையில்லை. ஆனால், பங்குச்சந்தை அப்படியல்ல.

நீங்கள் இலக்கிற்காக முதலீடு செய்ய நினைத்தால், மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் தான் முதலீடு செய்ய வேண்டும் – ஒரு மாரத்தான்(Marathon) நடை போல…

உங்களுக்கென நிதி இலக்கு, இலக்கிற்கான காலம் உள்ளது. நீங்கள் அதனை தவிர்க்க இயலாது. உங்களது குழந்தை மேற்படிப்பு, திருமணம், ஓய்வு காலம் ஆகியவை குறிப்பிட்ட கால அளவை கொண்டவை. அதனால் முதலீட்டில் ஒரு ஒழுக்கம் தேவைப்படும். தொடர்ச்சியாக நீங்கள் முதலீடு செய்து வரும் போது, உதாரணமாக 15 வருடங்களுக்கு பிறகு உங்கள் குழந்தையின் திருமண செலவை ஏற்படுத்தலாம் அல்லது உங்கள் ஓய்வு காலமாக இருக்கலாம்.

நான், ஏன் எனது நிதி இலக்கிற்கான தொகையை பங்குச்சந்தை மூலம் சம்பாதிக்க முடியாதா ?

பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்கலாம். பங்குச்சந்தை என்பதே உங்களுக்கான செலவத்தை ஏற்படுத்துவது தான். ஆனால், உங்களால் நிதி இலக்கை சார்ந்து முதலீடு செய்ய சாத்தியமா என்றால் – அது தான் இல்லை. மியூச்சுவல் பண்டு பல கட்டமைப்புகளை கொண்டது. அங்கே உங்கள் பணம்,அனுபவமிக்க பண்டு மேலாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது. பொதுவாக அவர்களுக்கு தெரியும், அடுத்து என்ன சந்தையில் நடக்க போகிறது என்று. அவர்களிடம் இருப்பதோ பல லட்சம் கோடிகள் முதலீடு. ஆனால், நமக்கு தாமதமான செய்திகள் மூலம் – அதுவும் ஊடகத்தின் வாயிலாக.

பங்குச்சந்தையில் நமக்கான ஒழுக்கத்தை நாம் தான் ஏற்படுத்த வேண்டும். தவறினால், பணம் இழக்க நேரிடும். யூனிடெக், சுஸ்லான், ஜே.பி. அஸோஸியேட்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் போன்ற பங்குகளின் விலையெல்லாம் முன்னர் எப்படி இருந்தது என்பது நமக்கு தெரியும். ஆனால், இன்று பங்குகளின் விலை மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் நிர்வாகமே தள்ளாட்டத்தில். மேலே சொல்லப்பட்ட பங்குகள் எல்லாம் ஒரு காலத்தில் பெரு நிறுவன பங்குகள். அவற்றின் விலையும் உச்சத்தில் தான் இருந்தன. முடிவில் ஒரு குமிழி(Bubble) போல உடைந்து விட்டது. பல்வேறு நிர்வாக காரணங்களால் தான் அவை நடைபெற்றுள்ளது. இது போன்ற நிறுவனங்களில் நாம் முதலீடு செய்து விட்டு, நமது இலக்கிற்கான காலத்திற்கு அருகில் வரும் போது எதிர்பாராத சம்பவங்கள் ஏற்பட்டு விட்டால் !

மியூச்சுவல் பண்டை போல நீங்கள் சந்தையில் மாதாமாதம் ஒரே பங்கில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது அவ்வளவு எளிதல்ல. பங்கு உச்சத்தில் இருந்தால் நீங்கள் விற்க நேரிடும் அல்லது நிறுவனத்தை பற்றிய செய்திகள் எதிர்மறையாக இருந்தால், நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள் ? உங்களுக்கு கிடைக்கப்பெறும் தகவல்கள் நூறு சதவீதம் உண்மையாக இருக்குமா ? நீங்கள் வாங்கிய பங்கு ஒவ்வொரு வாரமும் இறக்கத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் தொடர்ச்சியாக வாங்கும் மனநிலையை கொண்டிருப்பீர்களா அல்லது அதற்கான காரணத்தை அறிய முற்படுவீர்களா ? பொதுவாக பங்குச்சந்தையில், நீங்கள் முடிவெடுப்பதற்குள் அந்த நிகழ்வு முடிந்து விடும்.

மியூச்சுவல் பண்டில், சந்தை ஏற்ற இறக்கத்தை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நமது இலக்கு தொடர்ச்சியாக முதலீடு செய்வது தான். அதனால் தான் சொல்கிறேன், பரஸ்பர நிதிகள் எனப்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களை உங்கள் நிதி இலக்கிற்கு பயன்படுத்துங்கள். பங்குச்சந்தையை உங்கள் செல்வ வளத்திற்கு(Wealth Creation) பயன்படுத்துங்கள் என்று. நீங்கள் எந்த வேலை செய்தாலும், உங்களுக்கென்று பகுதி நேர தொழில் உள்ளது – அது தான் பங்குச்சந்தை. பங்குச்சந்தையில் முதலீடு செய்து செலவத்தை பெருக்க உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள். அவர்களின் நீண்ட கால இலக்கிற்கு மியூச்சுவல் பண்டு திட்டங்களை தேர்ந்தெடுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

பயணிகள் ரயில் சேவையில் 30,000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கவுள்ள இந்திய ரயில்வே

பயணிகள் ரயில் சேவையில் 30,000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கவுள்ள இந்திய ரயில்வே 

Indian Railways to face Rs.30,000 Crore loss in Passenger Service – Impact on Covid-19 

இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக பயணிகள் ரயில் சேவை நீண்ட நாட்கள் முடக்கப்பட்ட நிலை தற்போதைய நிலையில் தான். கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஏற்பட்ட ஊரடங்கால் ரயில் பயணிகள் சேவையும் நிறுத்தப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பும் பொருட்டு, சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.

இருப்பினும், சில மாநிலங்களில் சிறப்பு ரயில்கள் தொடர்ச்சியாக அனுமதிக்க முடியாத நிலையும் இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் சுமார் 230 சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது. அதே வேளையில் சரக்கு ரயில்கள் அதிகப்படியாக இயங்கி வருவது சற்று ஆறுதலான விஷயம்.

இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) கடந்த 2019ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. சொல்லப்பட்ட மாதத்தில் நாட்டின் முதல் தனியார் ரயில் சேவையான தேஜஸ் எக்ஸ்பிரஸ்(Tejas Express) துவங்கப்பட்டது. லக்னோ – புது டில்லி தடத்தில் இந்த தனியார் சேவை ஆரம்பிக்கப்பட்டது. உணவு விநியோகம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்(Tourism and Hospitality), இணைய வழியிலான பயணச்சீட்டு விற்பனை ஆகிய சேவையை செய்து வருகிறது ஐ.ஆர்.சி.டி.சி.

கடந்த நிதியாண்டில் இதன் வருவாய் 1500 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. பயணிகளுக்கான உள்ளூர் ரயில் சேவை மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொரோனா தாக்கத்தால் இயக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக ரயில்வே நிர்வாகத்திற்கு பெருத்த வருவாய் குறைவு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.

இது சார்ந்து சமீபத்தில் பேசிய மத்திய ரயில்வே சேர்மன் வினோத் குமார், ‘ பயணிகள் ரயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களும் முழுமையான நிலையில் நிரப்பப்படவில்லை. அவை பெரும்பாலும் 75 சதவீத பயணிகளுடன் தான் செல்கின்றன. அதே வேளையில் சரக்கு ரயில் சேவை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன ‘ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், நடப்பு  நிதியாண்டில் பயணிகள் ரயில் சேவையின் வாயிலாக ரூ.30,000 கோடி முதல் 35,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படலாம் என தெரிவித்துள்ளார். இருப்பினும் சரக்கு ரயில்கள் மூலம் இம்முறை கூடுதலாக 50 சதவீத வருவாய் கிடைக்கப்பெறும் என்றார். அத்தியாவசிய பொருட்களின் தேவைக்காகவே சரக்கு ரயில்கள் அதிகமாக இயக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் பயணிகள் ரயில் சேவையின் வாயிலாக சுமார் 50,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 428 கோடி ரூபாய்(ஜூன் மாத முடிவில்) வருவாய் கிடைத்துள்ளது. அதே வேளையில் அவற்றுக்கு செலவு செய்யப்பட்ட தொகை ரூ.2,140 கோடி. சிறப்பு ரயில்களில் சராசரியாக பயணச்சீட்டுக்கான கட்டணம் ரூ.600 ஆக இருந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் சராசரியாக பயணி ஒருவருக்கு 3,400 ரூபாய் செலவிட்டுள்ளது. எனினும், இது போன்ற அவசர காலங்களில் வருவாயை மட்டுமே குறிப்பாக எடுத்து கொள்ள முடியாது என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஹேவல்ஸ் இந்தியா – ஜூன் காலாண்டு லாபம் ரூ. 64 கோடி

ஹேவல்ஸ் இந்தியா – ஜூன் காலாண்டு லாபம் ரூ. 64 கோடி 

Havells India reported net profit of Rs. 64 Crore in Q1FY21

1958ம் ஆண்டு துவங்கப்பட்ட ஹேவல்ஸ் இந்தியா நிறுவனம் மின்னணு உபகரணங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. இதன் கிளைகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் நிலையில், உள்நாட்டில் மட்டும் 11 உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. வீடு மற்றும் சமையலுக்கு தேவையான மின் உபகரணங்கள், ஒளி, மின்விசிறி, ஹீட்டர்கள், மின் மோட்டார்கள், கேபிள் மற்றும் சுவிட்சுகள் என பல்வேறு வகையான பொருட்களை கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தின் முக்கிய அம்சமாக உலகின் பிரபல பிராண்டுகளான லாயிட், கிராப் ட்ரீ(Crabtree), ப்ராம்ப் டெக் மற்றும் ஸ்டாண்டர்டு எலக்ட்ரிக் ஆகிய நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது. ஹேவல்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 37,200 கோடி ரூபாய். இதன் புத்தக மதிப்பு 69 ரூபாயாகவும், முக மதிப்பு ஒரு ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை. கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.02 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 24 மடங்கிலும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாகவும், நிறுவனர் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் இதுவரை வைக்கப்படவில்லை. கடந்த ஐந்து வருட காலத்தில் இதன் விற்பனை வளர்ச்சி குறைந்திருந்தாலும், லாப வளர்ச்சி 14 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

பங்கு மீதான வருமானம்(Return on Equity) கடந்த ஐந்து வருட காலத்தில் 19 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 23 சதவீதமாகவும் உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் முடிவில் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ. 4,250 கோடியாக இருந்துள்ளது.

நிறுவனம் 2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன் படி ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,483 கோடியாகவும், செலவினம் ரூ. 1,352 கோடியாகவும் உள்ளது. இதர வருமானம் 32 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 64 கோடி ரூபாயாக உள்ளது. இதனை கடந்த வருட ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போது 64 சதவீத குறைவாகும்.

2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 9,440 கோடியாகவும், நிகர லாபம் 735 கோடி ரூபாயாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனம் சார்பில் இதுவரை மூன்று முறை போனஸ் பங்குகள்(Bonus issue) வழங்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டுக்கு பிறகு முகமதிப்பும் 10 லிருந்து 1 ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்திய வாகன காப்பீட்டு துறையில் களமிறங்கும் அமேசான் நிறுவனம்

இந்திய வாகன காப்பீட்டு துறையில் களமிறங்கும் அமேசான் நிறுவனம் 

Amazon India enters into the Auto Insurance in India

கடந்த 1994ம் ஆண்டு துவங்கப்பட்ட அமேசான் நிறுவனம் இன்று உலகின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். இணைய வர்த்தகம், மேகக் கணிமை(Cloud Computing), டிஜிட்டல் வீடியோ (Digital Streaming) மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் கால் பதித்துள்ளது.

டாட் காம்(Dot com) வீழ்ச்சி மற்றும் 2008ம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியால் அமேசான் நிறுவனம் திவால் நிலை வரை சென்றது. பின்பு துரித முதலீடு மற்றும் தொழில்நுட்ப புரட்சியால் மீட்டெடுக்கப்பட்டு, இன்று உலகின் பெரு நிறுவனமாக மாறியுள்ளது. நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் இன்று உலகின் பணக்காரராக முதலிடத்தில் இருக்கிறார்.

அமேசான் நிறுவனம் பல நாடுகளில் தனது காலடியை பதித்து வருகிறது. தொழில் போட்டிகளை கடந்து, தொழில்நுட்பத்துடன் புதுமையான சிந்தனைகளை புகுத்தி வீறு நடை போட்டுக்கொண்டிருக்கிறது. பிளிப்கார்ட்(Flipkart) நிறுவனத்தின் நிறுவனர்களும், அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்கள் தான்.

இந்திய வாகன காப்பீட்டு துறையில் நுழைய, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமேசான் நிறுவனத்திற்கும், மும்பையை தலைமையிடமாக கொண்ட அக்கோ(Acko General Insurance) பொது காப்பீடு நிறுவனத்திற்குமிடையே பேச்சு வார்த்தை நடந்தது. தற்போது இவற்றில் உடன்பாடு ஏற்பட்டு, அமேசான் நிறுவனம் இந்திய வாகன காப்பீட்டு துறையில் நேரிடையாக விற்பனையில் களம் இறங்கியுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு அக்கோ நிறுவனம் பெரு முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 274 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றிருந்தது. இவற்றில் அமேசான் நிறுவனமும் ஒரு முதலீட்டாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்கோ நிறுவனம் பொது காப்பீட்டில் வாகனங்களுக்கான பாலிசி சேவைகளை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் ஓலா(Ola) நிறுவனத்துடனான சேவையிலும் கூட்டு வைத்துள்ளது. எனவே அமேசான் இந்தியா தளத்திலும் வாகனங்களுக்கான காப்பீட்டு சேவையை இனி பெறலாம். எளிய முறையில், காகித ஆவணங்களை குறைக்கும் பொருட்டு அமேசான் பே (Amazon Pay) மூலமாக இன்சூரன்ஸ் பாலிசிகளை பெறலாம் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வணிகத்திலும் அமேசான் நிறுவனம் கால்பதிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. முடிவு எட்டப்படும் நிலையில், ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் 10 சதவீத பங்குகளை அமேசான் வாங்கலாம் என சொல்லப்படுகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்த வார நிகழ்ச்சி நிரல் – கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நிலை

இந்த வார நிகழ்ச்சி நிரல் – கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நிலை 

The Post Covid Crash 2021 – Weekend Webinar

உலக பங்குச்சந்தைகள் மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின்பு, கடந்த நான்கு மாதங்களாக பெருத்த ஏற்றத்தில் உள்ளது. மீண்டும் பங்குச்சந்தை நடப்பாண்டில் வீழ்ச்சி பெறும் என ஒரு சாராரும், தற்போது சந்தை காளை பக்கம் திரும்பியுள்ளது என மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர். உண்மையில் உலக பங்குச்சந்தை குறியீடுகளில் அடுத்த சில காலாண்டுகள் என்ன மாதிரியான நிலை ஏற்படும்.

இந்திய பங்குச்சந்தையும், பொருளாதாரமும் கடந்த இரண்டு வருடங்களாக தொய்வு நிலையில் இருந்து வந்துள்ளது. ஆட்டோமொபைல் துறையும், பார்மா துறையும் திடீர் ஏற்றம் பெற்றுள்ளன. இரண்டு வருடமாக காணப்பட்டு வந்த பொருளாதார மந்தநிலை கொரோனா காலத்தில் சரி செய்யப்பட்டு விட்டதா ?

அமெரிக்காவும், சீனாவும் போட்டி போட்டு கொண்டு கடனை அதிகரித்து வருகின்றன. சீனாவின் கடன் மட்டும், நம் நாட்டின் பொருளாதாரத்தை விட அதிகமாக உள்ளது. கடன் சிக்கலிலும், வர்த்தக போரிலும் மும்மரமாக ஈடுபட்டு வரும் நாடுகள் தங்கள் கடனை உடனடியாக குறைத்து விடுமா ?

பொதுவாக திருவாளர் பங்குச்சந்தை(Mr. Market), பொருளாதார ரீதியாக நடக்கப்போகும் ஒரு விஷயத்திற்கு முன்னரே அதன் தன்மையை சந்தையில் பிரதிபலிக்கும். அது தான் மார்ச் மாதத்தில் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இரண்டாவது முறையாக பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்தால், உங்கள் முதலீட்டு உத்தி என்ன ?

பொருளாதார மந்தநிலையும், அதனை சார்ந்து பங்குச்சந்தை வீழ்ச்சியும் எப்படி ஏற்படுகிறது ? உலக பொருளாதாரத்திற்கும், பங்குச்சந்தைக்கும் தொடர்பு உண்டா ?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் என்ன செய்து கொண்டிருக்கிறது ? பரபரப்பாக பேசப்படும் ரிலையன்ஸ் ஜியோ, உண்மையில் பங்குச்சந்தை பட்டியலுக்கு தயாராக உள்ளதா ?

வாருங்கள் இந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரலில் பேசுவோம்.

நாள்: 25-07-2020 (சனிக்கிழமை)

நேரம்: மாலை 5:30 மணி முதல் (60 நிமிடங்கள்)

Click here to Register – The Post Covid Crash 2021 – Webinar 

Post Covid Crash Webinar

பதிவுக்கு பின்பு, உங்களுக்கான நிகழ்ச்சி இணைப்பு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழியாக அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்சரிக்கை செய்யும் ஜூன் மாத பணவீக்க விகிதம் – 6.09 சதவீதம்

எச்சரிக்கை செய்யும் ஜூன் மாத பணவீக்க விகிதம் – 6.09 சதவீதம் 

India’s Retail Inflation to 6.09 Percent in the month of June 2020

நடப்பாண்டில் நாட்டின் விலைவாசி விகிதம் ஏற்ற-இறக்கத்தில் காணப்பட்டிருந்தாலும், சராசரியாக 6 சதவீதத்திற்கு மேல் இருந்து வருகிறது. ஜனவரி மாதத்தில் 7.59 சதவீதமாக இருந்த நாட்டின் சில்லரை விலை பணவீக்க விகிதம்(CPI Retail Inflation), மார்ச் மாதத்தில் 5.84 சதவீதமாக குறைந்திருந்தது. அதே சமயத்தில் ஊரடங்கு காலத்தில் எதிர்பாராத விலை நகர்வால், சில்லரை விலை பணவீக்கம் உயர்ந்துள்ளது.

ஜூன் மாத முடிவில் 6.09 சதவீதமாக சில்லரை விலை பணவீக்கம் உள்ளது. உணவுப்பொருட்களின் விலை மட்டும் உயர்ந்துள்ள நிலையில், பொருளாதாரம் மீட்கப்படும் பட்சத்தில், எதிர்பாராத விலை உயர்வு ஏற்படலாம். ஜூன் மாதத்தில் சந்தை எதிர்பார்த்த 5.3 சதவீத பணவீக்கத்தை விட, கூடுதலாக விலை உயர்ந்து காணப்பட்டுள்ளது.

2020-21ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். ஜூன் மாதத்தில் புகையிலை மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் விலை 9.7 சதவீதமும், உணவுப்பொருட்களின் பணவீக்கம் 7.3 சதவீதமும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக பருப்பு வகைகள் 17 சதவீதமும், மீன் மற்றும் இறைச்சி 16 சதவீதமும் மசாலா பொருட்கள் 11.74 சதவீதமாகவும் விலை உயர்ந்துள்ளது. அதே வேளையில் பழங்களின் விலை 0.68 சதவீதமாகவும், காய்கறி வகைகளின் விலை 1.86 சதவீதமாகவும் உள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான பொருளாதார எண்கள் சரியாக கிடைக்கப்பெறவில்லை என மத்திய புள்ளியியல் அமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் – ஜூன் காலாண்டில் நாட்டின் வணிக ஏற்றுமதி 37 சதவீதம் சரிந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நாட்டின் ஏற்றுமதி அளவு 51.32 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இது போல வணிக இறக்குமதி அளவும் 60.44 பில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது. காலாண்டு அடிப்படையில் இறக்குமதி 52.43 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) 9.12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. சேவையுடன் சேர்த்த ஒட்டுமொத்த அளவை காணும் போது, வர்த்தக உபரியாக(Trade Surplus) 11.70 பில்லியன் டாலர்கள் என சொல்லப்பட்டுள்ளது.

மந்தநிலை என்ற நிலையிலிருந்து, கொரோனா தாக்கத்திற்கு பிறகு நாட்டின் பொருளாதாரம் பெருமந்தநிலையை எட்டியுள்ளது. ஊரடங்கு காலத்திற்கு பிறகான இயல்பு வாழ்க்கை திரும்பும் பட்சத்தில், நாட்டின் பணவீக்க விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பாரத ரிசர்வ் வங்கியின் அடுத்தகட்ட நிதிக்கொள்கை குழு கூட்டம் முக்கியத்துவம் பெறும். மத்திய வங்கி, வட்டி விகித மாற்றத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படலாம். விலைவாசி உயர்ந்தால், இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாக பாதிக்கலாம். போதிய மழைப்பொழிவு, தேவை நுகர்வு அதிகரித்தால் மட்டுமே அது பொருளாதாரத்தை ஊக்குவிக்க துணைபுரியும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா ?

ஐ.பி.ஓ.(முதன்மை சந்தை) முறையில் முதலீடு செய்யலாமா ?

Can I invest in Initial Public Offering ?

பொதுவெளியில் ஒரு நிறுவனம் தனக்கு தேவையான முதலீட்டை பெறுவதற்கு இரண்டு விஷயங்களை செய்ய வேண்டும். ஒன்று தனியார் நிறுவனத்திலிருந்து பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றி கொள்வது, மற்றொன்று பங்குச்சந்தையில் பட்டியலிட தேவையான விவரங்களை வெளியிடுவது.

முதலீட்டை பெற விரும்பும் நிறுவனம் பங்குச்சந்தை அமைப்பிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, ஒரு குறிப்பிட்ட நாளில் தனது நிறுவன பங்குகளை பட்டியலிடும். துவக்கத்தில் முதன்மை சந்தையில்(Primary Market) மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த பங்குகள் விண்ணப்பம் செய்யும் பங்குதாரர்களுக்கு, கணினி வரிசையில் மட்டுமே கிடைக்கப்பெறும். பின்னர் அவை இரண்டாம் நிலை சந்தையில்(Secondary Market) வாங்க மற்றும் விற்பதற்கு வெளியிடப்படும்.

முதன்மை சந்தையை தான் நாம் ஐ.பி.ஓ(IPO) என்கிறோம். இங்கே ஒரு நிறுவன பங்குகளுக்கான தேவையை உறுதி செய்யும். முதலீட்டாளர்களிடையே இந்த பங்கு வரவேற்பை பெறுகிறதா, எத்தனை மடங்கில் இந்த நிறுவன பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர் என்ற விவரங்களை காணலாம். இதற்கான காலம் ஓரிரு நாட்கள் இருக்கலாம். பின்னர் எப்படியும் இந்த பங்குகள் வர்த்தகமாக இரண்டாம் நிலை சந்தைக்கு வந்து தான் ஆக வேண்டும்.

முதன்மை சந்தையில் நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்க மட்டுமே செய்வோம். இரண்டாம் நிலை சந்தையில் தான் வாங்கும் மற்றும் விற்கும் என முழு வர்த்தகம் நடைபெறும். பொதுவாக ஐ.பி.ஓ. முறையில் முதலீடு செய்வது நல்லதா என சிலர் கேட்கிறார்கள். குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்கலாமே  என கேட்பதுண்டு. உண்மையில் ஐ.பி.ஓ என்பது ஒரு நிறுவனம் தன்னை சந்தையில் அறிமுகப்படுத்தி கொள்ளும் காலம் தானே தவிர, வேறொன்றும் இல்லை.

  • ஐ.பி.ஓ வெளியீட்டில் கிடைக்கப்பெறும் பங்கு விலை தான் உண்மையான விலை என பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் முதன்மை சந்தையில் ஒரு நிறுவனம் தன்னை நிலைநிறுத்த மற்றும் தனது முதலீட்டை பெற குறிப்பிட்ட பங்குதாரர்களிடம் பங்குகளை விற்றுவிட்டு செல்கிறது. இதற்கு பங்குச்சந்தை அமைப்புகள் ஒரு தளத்தை(Platform) ஏற்படுத்தி கொடுக்கிறது. இங்கே ஏற்ற-இறக்கம் காணப்படாததால், நிறுவனத்திற்கு தேவையான நிதியை சுலபமாக பெற்று விடும். அதே வேளையில் இது முதலீட்டாளர் பார்வையில் லாபமா ?
  • உலகின் மிகப்பெரிய ஐ.பி.ஓ. முதலீடு, கடந்த 2019ம் ஆண்டில் சவூதி ஆரம்கோ(Saudi Aramco) நிறுவனத்தில் நடந்தது. இதன் மதிப்பு சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இரண்டாவதாக அலிபாபா குழுமத்தின் 25 பில்லியன் டாலர்களும்,மூன்றாவது இடத்தில் சாப்ட்பேங்க் குழுமத்தின் 24 பில்லியன் டாலர்களும் உள்ளன.
  • ஐ.பி.ஓ. வில் வெளியிடப்படும் நிறுவனங்கள் சில சமயங்களில் மக்களிடம் பெயர்போன நிறுவனமாக இருக்கக்கூடும். உண்மையில் சந்தைக்கு வரும் நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கை முழுமையாக கிடைக்க பெறாது. ஐந்து வருடங்களுக்கான நிதி நிலை அறிக்கை மட்டுமே, முதன்மை சந்தைக்கு வரும் ஒரு நிறுவனத்திற்கு தேவைப்படும்.
  • முதன்மை சந்தைக்கு வரும் ஒரு நிறுவனத்தின் உண்மையான மதிப்பை நம்மால் அவ்வளவு எளிதாக கண்டறிய முடியாது. ஐந்து வருட நிதி அறிக்கையை கொண்டு, ஒரு நிறுவனம் நன்றாக செயல்படும் என எதிர்பார்ப்பது நம்மை ஏமாற்ற செய்யும். தனியார் நிறுவனத்திலிருந்து பொது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறும் ஒரு நிறுவனத்தின் ஜாதகத்தை நம்மால் முழுமையாக காண முடியாது. அப்படியிருக்க நிதிநிலை அறிக்கைகளில் நாம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது.
  • ஆட்டுமந்தை கூட்டம் போல எல்லோரும் பங்கு வாங்குகிறார்கள் என நாமும் வாங்கி லாபம் பார்த்து விடலாம் என நீங்கள் ஐ.பி.ஓ முறையில் சென்றால், உண்மையில் அதன் பெயர் சூதாட்டமே, அவை முதலீடு அல்ல. நிறுவனத்தை பொறுத்தவரை தனது முதலீட்டை முதன்மை சந்தையில் தான் திரட்ட முடியும். அவ்வளவே. அவர்களுக்காக தான் அந்த தளம் உருவாக்கப்பட்டதே தவிர நீண்டகாலத்தில் முதலீடு செய்பவர்களுக்காக அல்ல.

புகையிலையை சிறிது நேரம் நுகர்ந்து கொள்கிறேன், நன்றாக இருக்கும் என நீங்கள் நினைத்தால், வாழ்நாள் முழுவதும் அது உங்களை தொற்றி கொள்ளும். அது போல தான் ஐ.பி.ஓ. குறுகிய கால லாப ஆசையும்.

  • ஒரு நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்காலத்தில் பெறுமா, அவை வெளிப்படையாக தகவலை சந்தைக்கு அளிக்குமா, முதலீட்டாளர்களான நமக்கு நீண்டகாலத்தில் என்ன பயனை அளிக்கப்போகிறது என்பதனை நாம் நீண்டகாலத்தில் தான் காண முடியும். வெறும், முதன்மை சந்தையில் பங்குகளை வாங்குவதால் அல்ல.
  • துவக்கத்தில் பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் மட்டுமே முதன்மை சந்தையில் பங்குகளை வாங்கலாம் என்ற நிலை இன்று மாறி, சிறு முதலீட்டாளர்களும் களம் இறங்குகின்றனர். நினைவில் கொள்ளவும், முதலீட்டு நிறுவனங்கள் வாங்கும் குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை எப்போது விற்க கூடும் என உங்களுக்கு உடனடியாக தெரிவதில்லை. அவர்கள் வாங்கும் மற்றும் விற்பதற்கான காரணமும், காலமும் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் வாங்குவது, விற்பது  என அனைத்தும் மற்றவர்களின் பண முதலீடு தான். ஆனால், சிறு முதலீட்டாளரான நமக்கு ?

ஆசியாவின் மிகப்பெரிய நகை தொழிலை கொண்ட நிறுவனம் என கீதாஞ்சலி ஜெம்ஸ்(Gitanjali Gems) முதன்மை சந்தையில் பட்டியலிடப்பட்டது. தொடர்ச்சியான விற்பனை மற்றும் லாப வளர்ச்சி, இந்தியாவில் உள்ள நகை தொழிலில் 50 சதவீத பங்குகளை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது என சொல்லப்பட்டது. பங்குகளுக்கான முதலீடும் அமோகமாக வந்தது.

இந்த பங்கின் விலை 600 ரூபாய்க்கு மேல் சென்ற காலமும் உண்டு. ஒரு ரூபாய்க்கு வந்து, பின்னர் பங்குச்சந்தையிலிருந்து தூக்கி வீசப்பட்டதும் மற்றொரு கதை. சொல்லப்பட்ட நிதி அறிக்கைகள் அத்தனையும் பொய் எனவும், அந்த நிறுவனம் எந்த தொழிலையும் மேற்கொள்ளாமல், பல போலி நிறுவனங்களை உருவாக்கியதும் மிகவும் தாமதமாக தான் வெளிவந்தது. ஐ.பி.ஒ. வில் முதலீடு செய்து விட்டு இந்த நிறுவனத்தில் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. கடந்த 2008ம் ஆண்டின் பங்குச்சந்தை வீழ்ச்சியில் இந்த நிறுவன பங்கின் விலை மிகவும் மலிவாக கிடைத்தது என முதலீடு செய்தவர்களும் இன்று முழு முதலீட்டை இழந்துள்ளனர்.

உலகின் முதல் 10 கோடீஸ்வரர்களில் ஒருவர் என போற்றப்பட்டவர், 1996-2006 காலங்களில் நாட்டின் மிக சிறந்த தொழில்முனைவோர், தொழிலதிபர் என பல விருதுகளை வாங்கியுள்ளார் இவர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், பங்கு ஒன்றுக்கு 800 ரூபாய்  விலையிலிருந்து 80 பைசா வரை சென்றுள்ளதை பார்த்திருக்கலாம். குழும நிறுவனங்கள் அனைத்தும் கடனில் தத்தளித்து திவால் நிலைக்கு சென்று விட்டது. ஆம், அனில் அம்பானி அவர்களின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் குழும நிறுவனங்கள் தான். இது போல எண்ணற்ற நிறுவனங்களை சொல்லலாம்.

வெறும் பிராண்டுகளை மட்டுமே கொண்டு முதன்மை சந்தையில் ஒரு நிறுவனம் சாதித்து விட முடியாது. பின்னர் போலி நிறுவனங்களை பற்றியும், மோசடி பேர்வழிகளை பற்றியும் நாம் கவலைப்பட கூடாது. சந்தையில் நாம் முதலீடு செய்ய வந்திருக்கிறோம். லாபம் மட்டுமே நமது குறிக்கோளாக இருந்தாலும், நஷ்டத்தை தவிர்ப்பது அவசியமான ஒன்றாகும். நீங்கள் சந்தையில் நீண்டகாலத்தில் சம்பாதிக்க, முதலீடு செய்யப்போகும் நிறுவனத்தின் கடந்த கால செயல்பாடு மிகவும் முக்கியமாகும்.

குறைந்தது பத்து ஆண்டு கால நிதிநிலை அறிக்கைகள் தேவை. அதனை விட தேவையான ஒன்று, நிறுவனத்திற்கு கடன் எதுவும் உள்ளதா, நிறுவனர்களின் மதிப்பு மற்றும் செயல்பாடு எவ்வாறு உள்ளது, நிர்வாக திறன் எப்படி மற்றும் இந்த நிறுவனம் அதன் துறையில் உள்ள எதிர்கால சவாலை எப்படி கையாள போகிறது என்பதனை அறிவது அவசியமாகும்.

ஐ.பி.ஓ முறையில் வெளிவந்துள்ள நிறுவனங்களில் சுமார் 50 சதவீத நிறுவனங்கள், இரண்டாம் நிலை சந்தைக்கு வந்த அடுத்த ஐந்து வருடங்களில் தங்கள் மதிப்பை இழக்கின்றன என்று தரவுகள் சொல்கிறது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது பங்கு விலைக்கு தகுந்தாற் போல நிறுவனத்தின் வளர்ச்சி இல்லாமை, கடனில் சிக்கி தவிப்பது மற்றும் நிர்வாக திறன் குறைபாடு என மூன்று காரணிகளை முன்னிலைப்படுத்துகிறது.

கடந்த 20 வருடங்களில் பொதுவெளியில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க நிறுவனங்கள், தங்கள் முதன்மை சந்தை விலையை காட்டிலும் குறைவாக தான் தற்போது உள்ளதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் ஐ.பி.ஓ முறையில் வெளிவரும் நிறுவனங்களும், ஸ்டார்ட் அப்(Startup) நிறுவனங்களும் பெரும்பாலும் தங்கள் இரண்டாவது முதலீட்டை பெறுவதில் தோல்வியடைகின்றன. இதன் காரணமாக அதன் மதிப்பும் பின்னாளில் விலை போவதில்லை.

நீண்டகால வளர்ச்சியை கருத்தில் கொள்ளும் போது, கடனில்லா நிறுவனங்களை தேர்ந்தெடுத்து சிறந்த நிர்வாகம் மற்றும் சீரான வருவாய் வளர்ச்சி இருக்கும்பட்சத்தில் அது சிறு முதலீட்டாளர்களின் நலனையும் பாதுகாக்கும்.

இன்று நிர்வாக குறைபாடு காரணமாக இரண்டாம் கட்ட முதலீட்டையும் பெறுவதில் சிரமப்பட்டு கொண்டிருக்கிறது யெஸ் வங்கி(Yes Bank). பங்கு விலையும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது. பெரிய நிறுவனங்கள் மற்றும் பெரிய லாபம் என சொல்லப்பட்ட நிறுவனங்கள் எல்லாம் இன்று தின வர்த்தகர்களால் பந்தாடப்பட்டு, பங்குச்சந்தையிலிருந்து வெளியேறி வருகின்றன. அவற்றின் ஐ.பி.ஓ. வரலாற்றை பார்த்தால் நமக்கு தெரியும், அது ஏன் சோபிக்க தவறி விட்டனவென்று !

ஐ.பி.ஓ, இரண்டாம் கட்ட முதலீடு, மூலதனத்தை உயர்த்துவது, கடன்களை மறுசீராய்வு செய்ய முதலீட்டை பெறுவது, உரிமை பங்குகள், நிறுவனங்களை பிரித்தல் மற்றும் புதிய நிறுவனங்களை உருவாக்குதல் போன்றவற்றில் முதலீட்டாளர்கள் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும். இதெல்லாம் உங்களுக்கு புரியவில்லையா ? காலங்காலமாக தொழில் செய்து வரும் நல்ல மற்றும் சுமாரான நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு நிம்மதியாக அமருங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

மே மாத தொழிற்துறை உற்பத்தி குறைவு – முழு தகவல் இல்லை

மே மாத தொழிற்துறை உற்பத்தி குறைவு – முழு தகவல் இல்லை 

Declining Industrial Production growth in May 2020 – No Proper data released

கொரோனா ஊரடங்கிற்கு பிறகான பொருளாதார எண்கள் கிடைக்கப்பெறுவதும், அதனை வெளியிடுவதிலும் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டு பொருளாதார வளர்ச்சி குறியீடு(GDP) சார்ந்த தகவல் சரிவர கிடைக்கப்பெறாமல், பின்னர் முழு நிதியாண்டுக்கும் திருத்தம் செய்யப்பட்டது.

ஜனவரி-மார்ச் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாகவும், 2019-20ம் நிதியாண்டில் இது 4.2 சதவீதமாகவும் திருத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாத தொழிற்துறை உற்பத்தி(IIP) 55 சதவீத வீழ்ச்சி என சொல்லப்பட்டிருந்தாலும், அப்போதைய நிலையிலும் முழு தகவல் கிடைக்கப்பெறவில்லை.

நாட்டின் முக்கிய துறைகளாக சுரங்க தொழில்(Mining), உற்பத்தி(Manufacturing) மற்றும் மின்சாரம்(Electricity) ஆகியவை சொல்லப்படுகின்றன. 2020-21ம் ஆண்டின் மே மாத முடிவில் சுரங்க தொழிலின் குறியீடு 87 புள்ளிகளாக சொல்லப்பட்டுள்ளன. இதனை கடந்த வருட மே மாதத்துடன் ஒப்பிடும் போது 21 சதவீத குறைவாக உள்ளது. இது போல உற்பத்தி துறை 39 சதவீத வீழ்ச்சியும், மின்சார துறை 15 சதவீத வீழ்ச்சியும் அடைந்துள்ளது.

இருப்பினும் மத்திய அரசின் புள்ளிவிவர அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்த தகவல் முழுமையாக இல்லை. எனவே இதனை கடந்த காலத்துடன் ஒப்பிட வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் காணும் போதும் தொழிற்துறை உற்பத்தி குறியீடு 35 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

உட்கட்டமைப்புக்கான(Infrastructure – Use Based) நுகர்வில் மே மாத உற்பத்தி 42 சதவீதம் குறைந்துள்ளது. இது போல மூலப்பொருட்கள் 64 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 68 சதவீதமும் குறைந்து காணப்படுகிறது. நடப்பு ஜூன் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி குறியீடு சார்ந்த தகவல் வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளியிடப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI

ஜூன் மாத பரஸ்பர நிதி(Mutual Funds) முதலீடு வரத்து குறைவு – AMFI

Mutual Funds Investment declined in the month of June 2020

மார்ச் மாத வீழ்ச்சிக்கு பின்பு, இந்திய பங்குச்சந்தை விறு விறுவென ஏற்றம் பெற்று வருகிறது. பெரும்பாலான பங்குகள் மார்ச் கடைசி வாரம் அதலபாதாளத்திற்கு சென்ற நிலையில், தற்போது விலையேற்றத்தில் சுமார் 30-80 சதவீதத்திற்கு மேல் சென்றுள்ளன.

பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில், பங்குச்சந்தை குறியீடுகள் எதிர்பாராத விதமாக ஏற்றமடைந்துள்ளன. பொதுவாக இது போன்ற நிகழ்வு பங்குச்சந்தையில் இயல்பான ஒன்று தான். பின்னொரு நாளில் வேறொரு காரணத்திற்காக இறங்குவதும் நடக்கும். அதே வேளையில் நீண்டகாலத்தில் முதலீடு செய்து பொறுமையாக இருக்கும் முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை பெரும் செல்வத்தை அளிக்கும் வாய்ப்பாக அமையும்.

இந்திய பரஸ்பர நிதி துறையில் 45க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்(Asset Management Companies) முதலீட்டு சேவையை செய்து வருகின்றன. செபி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பரஸ்பர நிதி துறையை ஆம்பய்(AMFI) அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது. பரஸ்பர நிதி முதலீடுகள் சார்ந்த தகவல்களை ஆம்பய் அமைப்பு ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாத முடிவின் படி, இந்திய பரஸ்பர நிதி துறையின் சொத்து மதிப்பு(AUM) 25.5 லட்சம் கோடி ரூபாயாகும். ஜூன் மாதத்தில் பரஸ்பர முதலீடுகள் 95 சதவீதம் குறைந்துள்ளதாக இந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த மாதம் மூன்று புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பெறப்பட்ட முதலீடு ரூ.195 கோடி. பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் பெறப்பட்ட முதலீடு ரூ. 240 கோடி என சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும் போது 95 சதவீத குறைவாகும்.

ரிஸ்க் குறைந்த லிக்விட் பண்டுகளில்(Liquid Funds) இருந்து பெரும்பாலான முதலீடுகள் கடந்த மாதத்தில் வெளியேறியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 44,220 கோடி ரூபாய். கடன் பத்திரம் மற்றும் வருவாய் சார்ந்த பண்டுகளில் ஈர்க்கப்பட்ட ஜூன் மாத முதலீடு ரூ. 2,862 கோடி. கலவை திட்டம் என அழைக்கப்படும் ஹைபிரிட்(Hybrid) திட்டத்தில் 356 கோடி ரூபாய் முதலீடாக பெறப்பட்டுள்ளது.

ஓய்வு கால நிதி மற்றும் குழுந்தைகளுக்கான திட்டங்களில் பெறப்பட்ட தொகை ரூ. 108 கோடி ஆகும். வரி சலுகை சார்ந்த திட்டங்கள் வாயிலாக கடந்த மாதத்தில் முதலீடுகள்  ஈர்க்கப்படவில்லை. இந்த திட்டத்திலிருந்து 15 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது. தங்கம் சார்ந்த ஈ.டி.எப்.(Gold ETF) திட்டத்தின் மூலம் 494 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தை பொறுத்தவரை கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள் இரண்டிலும் முதலீட்டு வரத்து குறைந்துள்ளது. இதற்கு காரணமாக சொல்லப்படுவது வேலையிழப்பு, குறைவான நாட்களுக்கு மட்டுமே பெறப்பட்ட ஊதியம், மந்தநிலையை காரணம் காட்டி முதலீடு செய்யாமல் இருந்ததாகும். மேலும் பங்குச்சந்தை மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் உச்சத்தில் இருப்பதால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் லாபத்தை வெளியே எடுத்துள்ளனர்.

சந்தை இறக்கத்தில் அதிகமாக பெறப்பட்ட முதலீடு, தற்போது எச்சரிக்கை உணர்வாக பெருமளவில் முதலீடு செய்யப்படவில்லை எனலாம். நிதி இலக்குகளை கொண்டிருப்பவர்கள் தொடர்ச்சியாக முதலீடு செய்யும் பட்சத்தில், நீண்டகால வருவாய் வளர்ச்சியை பெறலாம். சந்தை ஏற்ற-இறக்கத்தை கணிப்பதை விட, நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை திரட்டுவது அவசியமாகும்.

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் – நிறுவனங்களை இணைத்தலும், கையகப்படுத்துதலும்

இந்த வார சனிக்கிழமை நிகழ்ச்சி நிரல் – நிறுவனங்களை இணைத்தலும், கையகப்படுத்துதலும்  

Acquisition & Demerger, Merger and Amalgamation – Webinar Meet

சமீப காலங்களாக பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்கள், மற்றொரு நிறுவனத்துடன் இணைக்கப்படுவதும், சிறிய நிறுவனங்களை பெரு நிறுவனமொன்று கையகப்படுத்துதலும் நடந்த வண்ணம் உள்ளன. இது புதிதான ஒரு செயலா என கேட்டால், பல வருடங்களாக நடைபெற்று வரும் ஒரு செயல்பாடாகவே இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது.

ஜப்பானை சேர்ந்த சுசூகி(Suzuki) நிறுவனமும், நம் நாட்டை சேர்ந்த மாருதியும்(Maruti) இணைந்து புதிய நிறுவனமாக – மாருதி சுசூகி என்றொரு நிறுவனத்தை ஏற்படுத்தியிருந்தது. இது போல ஹீரோ ஹோண்டா நிறுவனத்தை சொல்லலாம். பின்னர் இவை இரண்டும் பிரிக்கப்பட்டு சந்தையில் தனித்தனியாக தொழிலை நடத்தி வருகின்றன.

நிறுவனங்கள் சேர்க்கப்படுவதாலும் மற்றும் இணைந்த இரு நிறுவனங்கள் விலக்கப்படுவதாலும் சிறு முதலீட்டாளராக ஒருவருக்கு என்ன லாபம் ? நுகர்வோர் சந்தையில் கொடிகட்டி பறக்கும் ஹிந்துஸ்தான் யூனிலீவர்(HUL), ஐ.டி.சி.(ITC), டாட்டா குழுமம்(Tata) போன்ற நிறுவனங்கள் ஏன் சிறு தொழில் நிறுவனங்களை கையகப்படுத்துகின்றன ?

பெரு நிறுவனங்கள் தாங்களாகவே புதிய தொழிலை துவங்கும் வலிமை உள்ள போது, அந்த துறையில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களை நல்ல விலை கொடுத்து கையகப்படுத்தி வருகின்றன. இதற்கான காரணம் என்னவாக இருக்கும், நீங்கள் வாங்கிய பங்குகளில் இது போன்ற நிகழ்வு நடந்திருந்தால் அல்லது நடக்க போவதாக இருப்பின், உங்களுக்கு என்ன ஆதாயம் மற்றும் இழப்பு ?

வாருங்கள், இந்த வார சனிக்கிழமை (11-07-2020) நிகழ்ச்சி நிரலில் மாலை 05:30 மணிக்கு மேல் பேச உள்ளோம். பதிவுக்கு பின், இணைய வழி தொடர்பு சார்ந்த தகவல்கள் உங்கள் கைபேசி மற்றும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Register your spot – Merger & Amalgamation

Merger and Amalgamation

பங்குகள் வெறும் எண்கள் அல்ல !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com