பயணிகள் ரயில் சேவையில் 30,000 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கவுள்ள இந்திய ரயில்வே
Indian Railways to face Rs.30,000 Crore loss in Passenger Service – Impact on Covid-19
இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக பயணிகள் ரயில் சேவை நீண்ட நாட்கள் முடக்கப்பட்ட நிலை தற்போதைய நிலையில் தான். கடந்த மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஏற்பட்ட ஊரடங்கால் ரயில் பயணிகள் சேவையும் நிறுத்தப்பட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பும் பொருட்டு, சில சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன.
இருப்பினும், சில மாநிலங்களில் சிறப்பு ரயில்கள் தொடர்ச்சியாக அனுமதிக்க முடியாத நிலையும் இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் சுமார் 230 சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது. அதே வேளையில் சரக்கு ரயில்கள் அதிகப்படியாக இயங்கி வருவது சற்று ஆறுதலான விஷயம்.
இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி.(IRCTC) கடந்த 2019ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. சொல்லப்பட்ட மாதத்தில் நாட்டின் முதல் தனியார் ரயில் சேவையான தேஜஸ் எக்ஸ்பிரஸ்(Tejas Express) துவங்கப்பட்டது. லக்னோ – புது டில்லி தடத்தில் இந்த தனியார் சேவை ஆரம்பிக்கப்பட்டது. உணவு விநியோகம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்(Tourism and Hospitality), இணைய வழியிலான பயணச்சீட்டு விற்பனை ஆகிய சேவையை செய்து வருகிறது ஐ.ஆர்.சி.டி.சி.
கடந்த நிதியாண்டில் இதன் வருவாய் 1500 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. பயணிகளுக்கான உள்ளூர் ரயில் சேவை மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொரோனா தாக்கத்தால் இயக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக ரயில்வே நிர்வாகத்திற்கு பெருத்த வருவாய் குறைவு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.
இது சார்ந்து சமீபத்தில் பேசிய மத்திய ரயில்வே சேர்மன் வினோத் குமார், ‘ பயணிகள் ரயில் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களும் முழுமையான நிலையில் நிரப்பப்படவில்லை. அவை பெரும்பாலும் 75 சதவீத பயணிகளுடன் தான் செல்கின்றன. அதே வேளையில் சரக்கு ரயில் சேவை கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது அதிகளவில் இயக்கப்பட்டு வருகின்றன ‘ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், நடப்பு நிதியாண்டில் பயணிகள் ரயில் சேவையின் வாயிலாக ரூ.30,000 கோடி முதல் 35,000 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படலாம் என தெரிவித்துள்ளார். இருப்பினும் சரக்கு ரயில்கள் மூலம் இம்முறை கூடுதலாக 50 சதவீத வருவாய் கிடைக்கப்பெறும் என்றார். அத்தியாவசிய பொருட்களின் தேவைக்காகவே சரக்கு ரயில்கள் அதிகமாக இயக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் பயணிகள் ரயில் சேவையின் வாயிலாக சுமார் 50,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 428 கோடி ரூபாய்(ஜூன் மாத முடிவில்) வருவாய் கிடைத்துள்ளது. அதே வேளையில் அவற்றுக்கு செலவு செய்யப்பட்ட தொகை ரூ.2,140 கோடி. சிறப்பு ரயில்களில் சராசரியாக பயணச்சீட்டுக்கான கட்டணம் ரூ.600 ஆக இருந்த நிலையில், ரயில்வே நிர்வாகம் சராசரியாக பயணி ஒருவருக்கு 3,400 ரூபாய் செலவிட்டுள்ளது. எனினும், இது போன்ற அவசர காலங்களில் வருவாயை மட்டுமே குறிப்பாக எடுத்து கொள்ள முடியாது என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை