All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(பங்குச்சந்தை) தெரியுமா ?

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(பங்குச்சந்தை) தெரியுமா ? 

History of Madras Stock Exchange(MSE) 

தமிழ்நாட்டை தலைநகரமாக கொண்ட சென்னை நீடித்த வரலாற்றையும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பையும் கொண்டிருக்கிறது. 2022ம் ஆண்டு முடிவில் சென்னையின் பொருளாதார மதிப்பு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாயில் 7.87 லட்சம் கோடி). இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு, சென்னையின் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதியும் ஒரு காரணம் எனலாம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் சென்னையின் பங்களிப்பு மட்டும் சுமார் 33 சதவீதமாகும். உலகின் பிரபலமான நகரங்களில் முதல் 50 நகரங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் சென்னையின் இடத்தை தவிர்க்க முடியாதது.

ஆசியாவின் டெட்ராய்ட்(Detroit of Asia) என அழைக்கப்படும் சென்னை, வாகனத்துறைக்கான உதிரி பாகங்கள் உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது. நாட்டின் வாகன உதிரி பாகங்கள் பிரிவில் சென்னை மட்டும் 35 சதவீத பங்கினை கொண்டுள்ளது. இந்திய நான்கு சக்கர வாகன உற்பத்திப் பிரிவில் இதன் பங்களிப்பு மட்டும் 30 சதவீதமாக உள்ளது. கனரக வாகனங்கள், டயர்கள், வாகன சோதனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, துறைமுகங்கள், உலகின் முக்கிய நிறுவனங்களின் அலுவலகங்கள் என வாகனத்துறைக்கு தேவையான பெரும்பாலான நிலைகளை சென்னை உள்ளடக்கியுள்ளது. 

அப்படியிருக்க, சென்னையில் ஒரு பங்குச்சந்தை…  

கடந்த 1937ம் ஆண்டு துவக்கப்பட்டது தான் மெட்ராஸ் பங்குச்சந்தை(தலைமை அலுவலகம்: சென்னை). நாட்டின் நான்காவது பங்குச்சந்தையாகவும், தென் இந்தியாவில் துவக்கப்பட்ட முதல் பங்குச்சந்தையாகவும், மெட்ராஸ் பங்குச்சந்தை இருந்தது. இந்த சந்தை மேலே சொல்லப்பட்ட காலத்தில் துவக்கப்பட்டிருந்தாலும், 1957ம் ஆண்டு தான் இச்சந்தைக்கு தேவையான ஒழுங்குமுறைகளும், இன்னபிற வழிமுறைகளும் சட்டமாக்கப்பட்டு இயக்கத்தில் வந்தன.

ஆரம்ப நிலையில் ஐந்து நிறுவனங்களின் துணை மூலம் தோற்றுவிக்கப்பட்ட மெட்ராஸ் சந்தை, பின்னர் பெரிய சந்தையாக சுமார் 120 உறுப்பினர்களுடன் இயங்கியது. 1996ம் ஆண்டு முதல் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட சந்தையாக, 120 பங்குத்தரகு அலுவலகங்களுடன், மெட்ராஸ் பங்குச்சந்தை செயல்பட்டது.

 2001ம் ஆண்டு வாக்கில் சுமார் ரூ.3,000 கோடி வர்த்தக அளவை கொண்டிருந்த மெட்ராஸ் பங்குச்சந்தை, 2012ம் ஆண்டில் சுமார் 19,900 கோடி ரூபாய் வர்த்தகம் என்ற அளவில் வளர்ச்சியடைந்தது. 2001ம் ஆண்டில் சொல்லப்பட்ட 3,000 கோடி ரூபாய் வர்த்தகம் என்பது அப்போதைய மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையை ஒப்பிடுகையில், இது மூன்று சதவீதம் என்ற அளவில் மட்டுமே இருந்துள்ளது.

மெட்ராஸ் பங்குச்சந்தையில் சுமார் 1,785 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. மெட்ராஸ் பங்குச்சந்தைக்கு ஒரு துணை நிறுவனமும் உண்டு – எம்எஸ்இ பைனான்சியல் சர்வீஸஸ்(MSE Financial Services). 2012ம் ஆண்டு வாக்கில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி(SEBI) அறிவித்த ஒரு செய்தியால், மெட்ராஸ் பங்குச்சந்தையை மூடுவதற்கு காரணமாக அமைந்தது. இந்தியாவில் உள்ள ஒரு பங்குச்சந்தை குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய்க்கு பங்குகளில் பணப்புழக்கத்தை(Minimum Liquidity) ஏற்படுத்த வேண்டுமென்பது தான். அதாவது ஒரு முதலீட்டாளரோ, வர்த்தகம் செய்பவரோ தான் வாங்கியிருக்கும் பங்குகளை விற்க முனைந்தால், மற்றொரு புறம் வாங்குவதற்கு ஆள் வேண்டுமே, அது தான் இந்த பணப்புழக்கம்(Liquidity). 

மேற்சொன்ன அறிவிப்பை தொடர முடியாத நிலையில் பெங்களூர் பங்குச்சந்தையுடன், மெட்ராஸ் பங்குச்சந்தை இணைக்கப்பட்டது. பின்னாளில் இச்சந்தையும் மூடப்பட்டது.  இதனைத் தொடந்து 2015ம் ஆண்டின் மே மாதத்தில் தனது வர்த்தக செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக மெட்ராஸ் பங்குச்சந்தை அறிவித்தது. பின்னர் செபியும் அதனை ஏற்றுக் கொண்டது. 77 வருட பாரம்பரிய பங்குச்சந்தையாக திகழ்ந்த மெட்ராஸ் பங்குச்சந்தை 2015ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேக் என 1990 மற்றும் 2000களில் இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்ட நிலையில், 1992ம் ஆண்டு துவக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தை மற்றும் ஆசியாவின் பழமையான மும்பை பங்குச்சந்தை போன்ற ராட்சத அலைகளுக்கு முன்னர் தென் இந்தியாவின் முதற் பங்குச்சந்தை நிற்க இயலவில்லை. நாடெங்கிலும் எண்ணற்ற பங்குச்சந்தைகள்(20க்கும் மேற்பட்ட) இருந்த நிலையில், அவற்றை கையாள்வது கடினம் மற்றும் முதலீட்டாளர் நலனை பாதுகாக்க இது போன்ற நிகழ்வுகளை செபி(SEBI) ஏற்படுத்தியிருந்தது. 

இந்தியப் பங்குச்சந்தையில் தற்போதைய முதலீட்டாளர் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வு அன்றைய காலத்தில் இல்லாததும் ஒரு காரணமே !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

முதலீட்டு வருவாய்க்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள், ஏன் ?

முதலீட்டு வருவாய்க்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள், ஏன் ?

Do not focus only on Investment returns – Fallacy of Investing

கிரேஸ் குரோனர்(Grace Groner):  தனது 12ம் வயதில் அனாதையானாள். அவள் திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவளுக்கு காரும்(நான்கு சக்கர வாகனம்) ஓட்டத் தெரியாது. தனது வாழ்நாள் முழுவதும் சின்னதொரு வீட்டில் வசித்து வந்துள்ளாள். எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக வாழ்ந்து வந்தவள். தனது வாழ்நாளில் சுமார் 43 வருடங்கள் அப்போட் பார்மா(Abbott Pharma) நிறுவனத்தில் செயலாளராக வேலை செய்வதிலேயே இருந்துள்ளார். தனது 101வது வயதை கொண்டாட இன்னும் மூன்று மாதங்களே இருந்த நிலையில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் மறைந்தார்.

1935ம் ஆண்டு வாக்கில் கிரேஸ், தனது நிறுவனத்தின் பங்குகளை சுமார் 180 டாலர்களுக்கு(ஒரு பங்கின் விலை 60 டாலர்கள் – 3 பங்குகள் மட்டுமே) வாங்கியுள்ளார். அடுத்த 75 வருடங்களில், அவர் தனது நிறுவனத்தின் மூலம் கிடைத்த ஈவுத்தொகையை(Dividends) மறுமுதலீடு செய்து வந்துள்ளார். 2010ம் ஆண்டு வாக்கில் அவர் மறைந்த போது, அதன் மதிப்பு சுமார் 7.2 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. இறக்கும் முன்பு, தனது அனைத்து சொத்துக்களையும், தான் வளர்ந்த மற்றும் இளம்வயதில் படித்த கல்லூரியை சேர்ந்த அறக்கட்டளைக்கு கொடையாக வழங்க உயில் எழுதியுள்ளார். அவர் மறைவுக்கு பின்பு, அந்த உயில் மூலம் அறக்கட்டளைக்கு சொத்துக்களும் மாற்றப்பட்டது. 2024ம் ஆண்டின் துவக்கத்தில், அதன் மதிப்பு சுமார் 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(2010ம் ஆண்டு முதல் டிவிடெண்ட் தொகை சேர்க்காமல்) என அப்போட் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் 1909ம் ஆண்டு பிறந்தவர் தான் செல்வி. கிரேஸ் குரோனர் அவர்கள் !

ஒரு வேளை அவர் தான் வாங்கிய பங்குகளுக்கு மாற்றாக, 180 அமெரிக்க டாலர்களை, ஏதேனும் ஒரு வங்கியில் அப்போது முதலீடு செய்து, தனது வாழ்நாள் முழுவதும் வைத்திருந்தால் அதன் மதிப்பு சில ஆயிரம் டாலர்களாக மட்டுமே இருந்திருக்கும் என முதலீட்டு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ரிச்சர்ட் பஸ்கோன்: கடந்த 1914ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்ட முதலீட்டு மேலாண்மை நிறுவனம் தான் மெரில்(Merrill Lynch). அமெரிக்க நிறுவனங்களின் வங்கி என சொல்லப்படும் மெரில் நிறுவனத்தில் 1970 களில் துணைத்தலைவராக வேலை பார்த்தவர் ரிச்சர்ட் பஸ்கோன்(Richard Matthew Fuscone). அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை மேலாண்மை பட்டப்படிப்பை முடித்தவர். அமெரிக்க பங்குச்சந்தையின் அனுபவம், நல்ல திறமை, அதிக சம்பளம், ஆடம்பரமான வாழ்க்கை, சுமார் 20,000 சதுர அடியில் சொகுசு வீடு என ரிச்சர்டுக்கு கிட்டியது. பங்கு முதலீட்டில் அவருக்கு கிடைக்காத வெற்றி என அப்படியொன்றுமில்லை. பெரு நிறுவனங்களில் அவர் வகிக்காத முக்கிய பதவிகள் இல்லையெனலாம். தனது 40வது வயதிலேயே நாள்தோறும் பணிபுரியும் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர். மேலும் தனது சொத்துக்களை கொடையாக அளிக்க முனைந்தவர். 

2008ம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி திரு. ரிச்சர்ட் பஸ்கோனையும் பொருளாதாரம் சார்ந்து பாதித்தது எனலாம். வங்கியில் அதிகக் கடன், முதலீட்டில் அதிக ரிஸ்க் தன்மை மற்றும் அவரது ஆடம்பர வாழ்க்கையின் அடிப்படை செலவினங்கள் ஆகியவை அவரை 2010ம் ஆண்டு திவாலுக்கு தள்ளியது.     

“பொருளாதாரத்தில் ஒரு தனி மனிதர் வெற்றி பெறுவது என்பது நீங்கள் புலமை படைத்த மற்றும் அதிகமாக கற்றுக்கொள்ளும் நிலையில் அல்ல, மாறாக நீங்கள் அதனை எவ்வாறு புரிந்து கொண்டு நடக்கிறீர்கள்” என்பது தான்.

மேலே சொன்ன இரண்டு மனிதர்கள் வாயிலாக இங்கே ஆடம்பரம் கேடானது, எளிமை நல்லது என நாம் எடுத்துக் கொள்ள கூடாது. மாறாக நாம் ஒரு முதலீட்டை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறோம் மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதில் தான் நமது நிதி சார்ந்த வளம் இருக்கிறது. இங்கே வெற்றி-தோல்வி என்பது வெறும் அளவீட்டில் அல்ல.

பங்குச்சந்தை முதலீட்டில் நான் வெகு விரைவாக பணம் பண்ணுகிறேன் என்ற பேர்வழியில் அதிக ரிஸ்க் தன்மை கொண்ட மற்றும் புரிந்து கொள்ள முடியாத ஏதேனும் திட்டங்களில் பணத்தை போட்டு விட்டு, நாம் எவ்வளவு எளிமையாக இருந்தாலும் சரி, அது நம்மை பாதாளத்துக்கு தள்ளி விடும். கற்றல் மிகவும் அவசியம், அதனை விட கற்றவற்றை கவனமாக செயல்படுவதே இன்னும் சிறப்பு. கீழே சொல்லப்பட்ட சில வாக்கியங்களை படியுங்கள்…

அதிக வருவாய்(High Returns) அளித்த மியூச்சுவல் பண்டு திட்டங்கள்…

ஒரே மாதத்தில் அல்லது ஒரே வருடத்தில் அதிக விலையை(High Risk, High Returns) கொடுத்த பங்குகள்…

ஒரு லட்சம் ரூபாய் போட்டால் மாதத்துக்கு 10,000 ரூபாய் (பத்து பைசா வட்டி: மாதத்துக்கு 10% வருவாய் எனில் வருடத்தில் 120%)…

இந்த கிரிப்டோவில் பணம் போட்டால் ஒரே மாதத்தில் டபுள் ஆகும்…

இந்த மனையை நீங்கள் இப்போது வாங்கி வைத்தால் ஐந்து வருடத்தில் ஐந்து மடங்கு லாபம்…

இது போன்ற முதலீடுகளை நாங்கள் யாருக்கும் பரிந்துரைக்கவில்லை. இது உங்களுக்காக மட்டுமே. இப்போது முதலீடு செய்தால் கொள்ளை லாபம்…

பங்குச்சந்தையில் நீங்கள் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்தால், தினமும் 5,000 ரூபாய் பார்ட் டைம்(Part Time Income) வருவாயாக சம்பாதிக்கலாம்…

ஒரு மொபைல் ஆப் மூலம், நீங்கள் வீட்டில் இருந்து கொண்ட கை நிறைய சம்பாதிக்கலாம்…

பணக்காரர்கள் ஒரு இல்லுமினாட்டிகள், அவர்கள் நம்மை போன்றவர்களை ஏமாற்றுகிறார்கள். நமக்காகவே இது போன்ற மல்டி லெவல் தொழில்கள் வந்துள்ளன. நாமும் தொழிலதிபராக மாறலாம்…

இன்னும் எண்ணற்ற…

மேற்சொன்னவற்றில் நாம் விழுவது இரண்டே இரண்டு விஷயங்களில் தான் – குறுகிய காலத்தில் நிறைய பணம்(High Returns) மற்றும் சமூக அந்தஸ்து(Social Status). 

நம்மில் பலரும் இன்னும் பங்குச்சந்தை என்பது F&O என சொல்லப்படும் ஊக வணிகமும், இன்ட்ரா டே என சொல்லப்படும் நாள் வணிகம்(Day Trading) தான் என நினைத்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் நம்மால் மேலே சொன்ன பல வழிகளில் குறுகிய காலத்தில் அதிக பணத்தை தேடிச் செல்லும் போது நாம் இன்னும் பணக்காரர்களை வெல்லவில்லை என்பதும் புரியும்(பணக்காரர்களாக தோற்றமளிக்க மட்டுமே உதவும்).

மெட்ராஸ் பங்குச்சந்தை அமைப்பின் முன்னாள் தலைவர் திரு.வ. நாகப்பன் அவர்கள் சொல்வது போல, ‘நீங்கள் பெரு நிறுவனங்களை கேள்வி கேட்க வேண்டுமானால், பங்குச்சந்தையில் சிறு முதலீட்டாளர்களாக நாம் நமது பங்கு முதலீட்டின் அளவை(சிறு முதலீட்டாளர்களின் வரவு) அதிகரிப்பதன் மூலம் மட்டுமே அந்த நிகழ்வு ஏற்படும்’ என்பார். உண்மையும் அது தான். உலகப் பொருளாதாரத்தில் நாம் இன்று வாங்கும் பொருளும், சேவையும் ஏதோவொரு நிறுவனத்தின் உற்பத்தி தான். அந்த நிறுவனத்தின் பங்கும் பெரும்பாலும் சந்தையில் பட்டியலிடப்பட்டது தான். 

இன்று நம் நாட்டில் தேசியமயமாக்கப்பட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளும் (தனியார் வங்கிகளும் தான்) பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டவை தான்.  கடந்த 30 வருடங்களில் வங்கி டெபாசிட், தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், பங்குகள் என பல்வேறு வகையான முதலீட்டை நாம் கொண்டிருந்தால் முடிவில் பங்குச்சந்தையை தாண்டிய வருவாய் வேறு எவற்றிலும் கிடைக்கப்பெறவில்லை. பங்குச்சந்தைக்கு அடுத்தாற் போல, அதிக வருவாய் அளித்த முதலீடாக பார்த்தால் தங்கத்தின் மீதான முதலீடு தான். அதுவும் பங்குச்சந்தையை காட்டிலும் கடந்த 30 வருடங்களில் ஆண்டுக்கு சராசரியாக நான்கு சதவீதம் குறைவாகவே காணப்பட்டுள்ளது. பின்னர் நாம் ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் மற்றும் பி.எப் கணக்குகளை பற்றி சொல்லத் தேவையில்லை. 

நம்மில் பெரும்பாலோர் அதிக வருவாயை குறுகிய காலத்தில் ஈட்ட வேண்டுமென்ற ஆசையே, பெரும்பாலும் தவறான முதலீட்டு முடிவுகளை எடுக்க காரணமாக இருந்துள்ளது. சில நேரங்களில் பாதுகாப்பாக கருதப்படும் அஞ்சலக சேமிப்பு மற்றும் பி.எப் கணக்குகள் கூட பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறாவிட்டாலும், முதலுக்கு மோசம் தராது. ஆனால் வெகு விரைவாக பணம் சம்பாதிக்கிறேன் பேர்வழியாக நாம் தவறான முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ளுகையில், நம் முதல் மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கும் ஆளாகிறோம். 

எனவே, நாம் அதிக வருவாய் அளிக்கும் பங்குச்சந்தையாக இருந்தாலும் சரி, பாதுகாப்பானது என எண்ணப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களானாலும் சரி, முதலீட்டு வருவாய்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நமது இலக்கினை நீண்டகாலமாக நிர்ணயித்து, தொடர் முதலீட்டை(Consistency) மேற்கொள்ளுவது தான் சிறப்பு.

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ?

உண்மையில், நீங்கள் பெறும் அல்லது பெறக்கூடிய வருவாய்(லாபம்) என்பது மற்றொருவருடன் ஒப்பிட்டு பார்ப்பதல்ல. நீங்கள் முதலீடு செய்யும் திட்டங்களையும் சார்ந்தது அல்ல. மாறாக நீங்கள் எப்போது அந்த முதலீட்டை வெளியே எடுக்கிறீர்களோ அது தான் உங்கள் லாபம் அல்லது வருவாய்(Booked Profit / Redemption). உதாரணமாக ‘ABC’ என்ற பங்கையோ அல்லது மியூச்சுவல் பண்ட் திட்டத்தையோ நீங்களும், உங்களது நண்பரும் தேர்ந்தெடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்களுக்கான காலம் அடுத்த 10 ஆண்டுகள் என கொள்ளலாம். எந்தவொரு முதலீட்டுக்கான வருவாயும் ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டது(வங்கி வட்டி விகிதம் உட்பட). இடையில் 5 வருடங்களுக்கு பிறகு, நீங்கள் பங்குகளை விற்று அல்லது அந்த திட்டத்திலிருந்து வெளியேறினால், நீங்கள் உங்கள் பணத்தை வெளியே எடுத்த நாளே உங்களது லாபமாக அல்லது நட்டமாக இருக்கும். அன்றைய நாளில் தான் உங்கள் முதலீட்டுக்கான வருவாய் விகிதம்(Returns %) கணக்கிடப்படும். அதுவே உங்களது நண்பர் 8 வருடங்களுக்கு பின்னர், முதலீட்டை விலக்கினால், விற்ற நாளில் உள்ள வருவாயே அவரது லாபமோ அல்லது நட்டமோ ஆகும்.

மாறாக ஒரு குறிப்பிட்ட பங்குகள் அல்லது மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் இவ்வளவு வருவாயை(20%, 30%, 50%), இந்த காலக்கட்டத்தில்(20,10, 5 வருடங்கள்) அளித்துள்ளது என சொன்னாலும், ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டை எப்போது விற்கிறாரோ அன்றைய நாள் வரை கணக்கிடப்படுவது தான் அவருடைய வருவாய் விகிதம். இதனை விட்டு விட்டு இந்த பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் 30 சதவீத வருவாயை கொடுத்துள்ளது, இந்த மியூச்சுவல் பண்ட் திட்டம் கடந்த 5 வருடங்களில் ஆண்டுக்கு 20 சதவீத வருவாயை அளித்துள்ளது, இந்த இடத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், நீங்கள் மனை வாங்கியிருந்தால் இப்போது மூன்று மடங்கு லாபம் என்ற கதையெல்லாம் உங்களுக்கான கதையல்ல. அது ஏற்கனவே நடந்து முடிந்த விஷயம்.

அதனால் தான் பங்குச்சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது, ஏற்ற-இறக்கங்கள் பங்குகளில் நடைபெறும், மியூச்சுவல் பண்ட் திட்டம் மூலம் கடந்த காலத்தில் கிடைக்கப்பெற்ற வருவாய், எதிர்காலத்தில் அப்படியே கிடைக்கப்பெறும் என்பதில் எந்த உத்தரவாதமும் கிடையாது என்ற வாசகங்கள் இடம் பெறுகின்றன.

நாம் என்ன செய்ய வேண்டும் ?

  • உங்களுக்கான நிதி இலக்குகளை(Financial Goals) நிர்ணயம் செய்து கொள்ளுங்கள் 
  • இலக்குகளுக்கான சரியான திட்டம்(Returns & Investment Period) எதுவென்பதை கண்டறியுங்கள் 
  • இலக்கு காலம் முடியும் வரை தொடர்ச்சியாக(Disciplined Investing) முதலீடு செய்து வாருங்கள்
  • இடைப்பட்ட காலத்தில் எந்தவொரு காரணத்திற்காகவும் முதலீட்டை நிறுத்துவதோ, இல்லையெனில் பணத்தை வெளியே எடுப்பதையோ செய்யாதீர்கள் 
  • உங்களது இலக்கு காலத்திற்கு முன்னரே, உங்களுக்கு தேவையான தொகை சேர்ந்து விட்டால், அதனை வெளியே எடுத்து பாதுகாப்பான அல்லது குறைந்த ரிஸ்க் தன்மை கொண்ட திட்டத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்(Corpus achieved before Maturity).
  • நீங்கள் இலக்குகளுக்கான தொகையை என்றைக்கு சேர்ந்தவுடன் எடுத்தீர்களோ, அன்றைய நாள் தான் உங்களது முதலீட்டு வருவாய்(Booked Returns%) கணக்கிடப்படும். அதற்கு முன்பு வரை இருந்த எல்லாமே வெற்று லாப-நட்ட கணக்கு தான்(Notional Gain / Loss).   

எனவே, நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது, உங்களது முதலீட்டு வருவாய்க்கு அல்ல, தொடர்ச்சியான முதலீடு மட்டுமே !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

Automotive Axles – Fundamental Analysis – Stocks

கடந்த 1981ம் ஆண்டில் இந்தியாவின் கல்யாணி குழுமமும், அமெரிக்காவின் மெரிட்டார் நிறுவனமும் சேர்ந்து துவக்கியது தான், ‘ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ்’ நிறுவனம். வாகனங்களுக்கு தேவையான ரியர் டிரைவ் ஆக்சில் அசெம்பிளி தயாரிப்பு பிரிவில் நாட்டின் மிகப்பெரிய சுயாதீன உற்பத்தியாளராக தற்போது இந்நிறுவனம் உள்ளது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கு தேவையான நீடித்த ஆயுள் கொண்ட இயக்கி அச்சுகள்(Drive Axles), பாதுகாப்பு மற்றும் ஆஃப்-ஹைவே(Off-Highway) துறை பயன்பாடுகளுக்கான அச்சுகள், டிரம் மற்றும் டிஸ்க் பிரேக்குகளை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

நிறுவனம் சமீபத்தில் லைட் டியூட்டி டிரைவ் அச்சுகள்(LCV) தயாரிப்பிலும் களம் இறங்கியுள்ளது. ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ் நிறுவனம் பிரேக் தயாரிப்பு பிரிவில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது. நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ், ஆசியா மோட்டார் ஒர்க்ஸ், டெய்ம்லர் இந்தியா, வால்வோ, எஸ்எம்எல் இசுசு, பெம்மல்(BEML), மேன் டிரக்ஸ், ஐஷர், பாரத் போர்ஜ், மஹிந்திரா மற்றும் எஸ்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களாகும்.

நிறுவனத்தின் தயாரிப்பு அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, சீனா, பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நிறுவனத்தின் மொத்த வருவாயில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் சுமார் 60 சதவீதமாகும். ஒட்டுமொத்த வருவாயில் ரியர் டிரைவ் ஆக்சில் பிரிவு 59 சதவீத பங்களிப்பையும், பிரேக்குகள் 21 சதவீத வருவாயையும் மற்றும் இதர பிரிவுகள் 20 சதவீத பங்களிப்பையும் தருகிறது. 

நிறுவனம் உள்நாட்டில் நான்கு உற்பத்தி ஆலைகளை கொண்டு இயங்கி வருகிறது. கூடுதலாக மெரிட்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு, தரப்படுத்துதல், முன்மாதிரி, சரிபார்ப்பு, சோதனை மற்றும் சந்தைக்குப்பிறகான பொறியியல் சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு தேவையான அச்சுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது சார்ந்து பல வாடிக்கையாளர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடலை இந்நிறுவனம் தொடங்கியுள்ளது.

செயல்பாட்டுச் செலவுகளை மேம்படுத்துதல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றிலும் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. உற்பத்தித் திறன்களை மேம்படுத்த புதிய இயந்திரங்கள் மற்றும் ஆட்டோமேஷனில் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,229 கோடியாகவும், செலவினம் 1,983 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் இயக்க லாபம் 246 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.166 கோடியாக இருந்துள்ளது. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(Operating Profit Margin) கடந்த பத்து வருட காலத்தில் சராசரியாக 10 சதவீதம் என்ற அளவில் இருந்து வருகிறது.

செப்டம்பர் 2024 காலாண்டு முடிவின் படி, நிறுவனத்தின் கையிருப்பு 882 கோடி ரூபாயாகும். நிறுவனத்தின் கடன் 27 கோடி ரூபாயாகவும், கடன்-பங்கு தன்மை 0.03 என்ற அளவிலும் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 66 மடங்குகளிலும், பங்கு விலைக்கும், நிறுவனத்தின் விற்பனைக்குமான இடைவெளி 1.30 மடங்கு என்ற அளவிலும் இருக்கிறது. நிறுவனத்தின் தற்போதைய பி.இ விகிதம் 18 மடங்கு. 

விற்பனை வளர்ச்சியை காணுகையில் கடந்த பத்து வருடங்களில் 13 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கூட்டு லாப வளர்ச்சியில் கடந்த 10 வருட காலத்தில் இது 29 சதவீதமாக உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 71 சதவீதமாக(கல்யாணி குழுமம்: 35.52% மற்றும் மெரிட்டார்: 35.52%) உள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு ஒரு சதவீதத்திற்கு குறைவாகவும், உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு 12.77 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) கடந்த நிதியாண்டுகளில் நன்றாகவே இருந்துள்ளது.  

 நிறுவனம் மென்மையான சந்தை(Soft Market) மற்றும் குறைந்த அளவு தொழில் பிரிவுகளில்(Industry Volumes) சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக நடுத்தர மற்றும் கனரக வாகனப் பிரிவில் அதன் செலவினம் அதிகரித்து வந்துள்ளது. இதன் காரணமாக அதன் ஒட்டுமொத்த லாப விகிதமும் குறைவாக காணப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் அச்சு தயாரிப்பு பிரிவில் தனது தலைமைத்துவத்தைப் பேணுவதில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்நிறுவனம் சுமார் 200 கோடி ரூபாய் முதலீட்டை ஏற்படுத்தி உற்பத்தி செயல்திறனை அதிகரிக்க முனைகிறது. 

ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் குறைந்தபட்ச அளவாக ரூ.1,720 மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,263 என வர்த்தகமாகியுள்ளது. 2024ம் நிதியாண்டில் இந்நிறுவனம் பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு 32 ரூபாயை ஈவுத்தொகையாக(Dividend) வழங்கியுள்ளது. அடிப்படைப் பகுப்பாய்வு மதிப்பீட்டின் படி(DCF Valuation), நிறுவனத்தின் பங்கு விலை ரூ.1,178 – ரூ.1,473 என்ற விலையை ஒரு பங்குக்கு பெறும்.  கொரோனா பெருந்தொற்று காலச் சரிவின் போது, இப்பங்கின் விலை ரூ.360க்கும் குறைவாக வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வுக்கானக் கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஒவ்வொரு வருடமும் நீங்கள் உங்களது முதலீட்டை அல்லது சேமிப்பை அதிகரிக்கிறீர்களா ?

வ்வொரு வருடமும் நீங்கள் உங்களது முதலீட்டை அல்லது சேமிப்பை அதிகரிக்கிறீர்களா ?

Do you increase your Savings or Investment every year ?

“உங்களது முதலீட்டு வருவாயை(லாபம்) காட்டிலும், நீங்கள் செய்யும் முதலீட்டு அதிகரிப்பே உங்களது நிதி இலக்கை அடையச் செய்யும்”.

பொதுவாக நம்மில் பலர் தங்களது நிதி இலக்கிற்கு பெரும்பாலும் சேமநல நிதி(பி.எப்), அஞ்சலக மற்றும் வங்கி மாதாந்திர அல்லது வைப்புத் தொகை(FD) போன்ற சேமிப்புத் திட்டங்களைத் தான் நம்பியிருப்பர். கூடுதலாக போனால் தங்கம் மற்றும் வீட்டுமனையில் நீண்டகாலம் முதலீடு செய்வதுண்டு. ஆனால் சிறு சேமிப்புத் திட்டங்களில் சேர்க்கப்படும் தொகை, பின்னாளில் நமது நிதி இலக்கிற்கு போதுமான தொகையை அளிக்குமா என்றால் சந்தேகம் தான். சிறு சேமிப்புத் திட்டங்களின் மூலம் குறுகிய கால இலக்கிற்குத் தேவையான தொகையை நாம் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் ஏற்படுத்தி விட முடியும். அதே வேளையில் இதன் மூலம் நீண்டகால இலக்குகளுக்கு அது சாத்தியமா ?

உதாரணமாக, குமார் என்பவரின் இரண்டு வயதான குழந்தைக்கு, பின்னாளில் மேற்படிப்புக்கு தேவையானத் தொகையை அவர் இன்று முதல் சேமிக்க முற்படுகிறார் என வைத்துக் கொள்வோம். மேற்படிப்பிற்கான(பட்டப்படிப்பு) இன்றைய செலவுத்தொகை ஐந்து லட்சம் ரூபாய் எனக் கொண்டால், 15 வருடங்களுக்கு பிறகு அதாவது குழந்தையின் 17 வயது முடிவில், ஆண்டுக்கு சராசரியாக 7% விலைவாசியில்(பணவீக்கம்) 13.80 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதனை அவர் இன்றே சேமிக்க வேண்டுமெனில், மாதத்திற்கு 4,350 ரூபாயை அடுத்த 15 வருடங்களுக்கு 7 சதவீத வட்டி வருவாய் அளிக்கும் சேமிப்புத் திட்டத்தில் மேற்கொள்ள வேண்டும். இதற்கு பதிலாக அவர் 12 % வருவாய் அளிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய முனைந்தால், மாதத்திற்கு ரூ.2,750 மட்டுமே என்ற முறையில் அடுத்த 15 வருடங்களுக்கு ஏற்படுத்தினால் அவரது இலக்கை அடையலாம். ஒரு முறை மட்டும் வைப்புத் தொகையாக(Fixed Deposit or One Time Investment) முதலீடு செய்ய வேண்டுமென்றால் இன்றே ரூ.5 லட்சத்தை ஒரு சேமிப்புத் திட்டத்தில் போட்டு விட்டு, அடுத்த 15 வருடங்களுக்கு காத்திருந்தால் 7 சதவீத வட்டி வருவாயில் நமது இலக்கை அடையலாம். இதுவே 12 சதவீத வருவாய் எனில், ரூ.2.50 லட்சம் போதுமானது.

பாதுகாப்பானது என நாம் மேலே சொன்ன சேமிப்புத் திட்டங்களில் அடுத்த 15 வருடங்களுக்கு உறுதியாக ஆண்டுக்கு 7 சதவீத வட்டி வருவாய் கிடைக்கக்கூடும் என நம்மால் சொல்லிவிட முடியுமா ? 12 சதவீத வருவாய் ஆண்டுக்கு கிடைக்கும் என்றால், அது ரிஸ்க் இல்லாமல் தான் கிடைத்திருமா ? இன்றைய 5 லட்ச ரூபாய் தொகைக்கே இவ்வளவு கணக்கு என்றால், ஆண்டுக்கு 10, 20 லட்சம் செலவாகும் மேற்படிப்புகளுக்கு நாம் நிதி இலக்கை நிர்ணயித்தால் மாதாமாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் ?

பொதுவாக நீண்ட கால நிதி இலக்கிற்குத் தேவையான தொகையை நாம் மாதாமாதம் முதலீடு செய்கையில் அவ்வளவு எளிதில் அந்த இலக்கை எட்டி விட முடியாது. இடைப்பட்ட காலத்தில் அவசரத்தேவை என நாம் நம் முதலீட்டையோ, சேமிப்பையோ நிறுத்த நேரிடலாம், இல்லையெனில் பணத்தை வெளியே எடுத்து விடலாம் அல்லது நாம் சேமித்த பணம் பின்னொரு காலத்தில் விலைவாசி உயர்வு காரணமாக இலக்கிற்கான காலத்தில் போதுமானதாக இல்லாமல் போய்விடக் கூடும். நமது வருவாய்க்கு தகுந்தாற் போலத் தான் நாம் சேமிப்பையும், செலவையும் நிர்வகிக்க முடியும். சில நீண்ட கால நிதி இலக்குகளுக்கு சேமிக்க, நம்மிடம் போதுமான தொகை இருந்திருக்காது. இது போன்ற சமயங்களில் தான் நாம் நம்மால் எந்தளவுக்கு சேமிக்க முடியுமோ அதனை உடனே துவங்கி விட்டு, பின்பு சிறுகச்சிறுக ஆண்டுக்கு ஓரு முறையோ அல்லது வருவாய் அதிகரிக்கும் பட்சத்தில் நமது சேமிப்பு அல்லது முதலீட்டுத்தொகையை அதிகரித்து செய்யும் போது, இலக்குகளை நெருங்கலாம்.

உதாரணமாக நாம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாதாமாதம் ரூ.5,000 ஐ முதலீடு செய்தால், 12 சதவீத வருவாய் கிடைக்கும் நிலையில், முடிவில் ரூ.50 லட்சத்தொகை கிடைக்கும். இதுவே சொல்லப்பட்ட ரூ.5,000 மாதாந்திர தொகையை ஒவ்வொரு வருடமும் 3 சதவீதம் அதிகரித்து வந்தால், முடிவில் 60 லட்ச ரூபாய் கிடைக்கக் கூடும். ஆண்டுக்கு 5 சதவீதம் அதிகரித்து செய்தால் 68 லட்ச ரூபாயும், இதுவே 8 சதவீதம் என்றால் ரூ.85.23 லட்சமும் கிடைக்கும். இது அவ்வளவு எளிதான காரியமல்ல. பழக்கத்தின் மூலம் மட்டுமே இதனை நாம் செய்தாக வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் நமது வருவாய் எவ்வளவு சதவீதம் உயர்கிறதோ, அந்த அளவினை நாம் நம் முதலீட்டிலும் அதிகரிக்கச் செய்யலாம்.

ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 தொகையை அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்தால் ரூ.1.50 கோடி கிடைக்கும்(12 சதவீத வருவாய் எதிர்பார்ப்பு). இதுவே ஆண்டுக்கொரு முறை 3 சதவீதம் என அதிகரித்து செய்தால், முடிவில் 1.80 கோடி ரூபாயாகும். இதனை நாம் 25 வருடங்களாக செய்யும் போது, 3.51 கோடி ரூபாயும், 30 வருடங்களாக இருந்தால் ரூ.6.65 கோடி வருவாயையும் ஏற்படுத்தலாம். குறிப்பாக இளம் வயதில் வேலைக்கு செல்வோர் அல்லது இளம் தொழில்முனைவோர் தங்களது  வருவாய் ஈட்டுதலின் துவக்கக் காலத்தில் இதனை பின்பற்றினால் ஓய்வுக்காலத்திற்கு தேவையான செல்வத்தை பெற்று விடலாம்.

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர்(பிப்ரவரி மாதம், 1994) அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பரஸ்பர நிதித்திட்டம்(Mutual Funds Scheme) கடந்த அக்டோபர் 2024 வரை ஆண்டுக்கு சராசரியாக 18.40 சதவீத வருவாயை அளித்துள்ளது. உதாரணமாக மாதாமாதம் ரூ.1500 ஐ மட்டுமே நாம் 30 வருடங்களுக்கு மேற்கொண்டிருந்தால், 15 சதவீத வருவாய் கிடைக்கும் பட்சத்தில், முடிவில் ரூ.1.05 கோடி கிடைத்திருக்கும். இதுவே மாதாமாதம் 15,000 ரூபாய் என்றால், 10.51 கோடி ரூபாய் ! இது தான் கூட்டு வட்டியின் பலன். கூட்டு வட்டியின் பலனை அனுபவிக்க நாம் காலத்தையும், ஆண்டுக்கொரு முறை முதலீட்டுத்தொகையையும் அதிகரிப்பதை மட்டும் செய்தால் போதுமானது.

Step Up SIP:

இது ஒரு டாப்-அப்(Top-up) முதலீட்டு அணுகுமுறை. நமது சம்பளம் ஆண்டுக்கொரு முறை எவ்வாறு உயர்ந்து வருகிறதோ, நாம் நுகரும் பொருட்களின் விலை எவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகரித்து வருகிறதோ அது போலத்தான் இதுவும். நாம் மேற்கொள்ளும் முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் முதலீட்டுத் தொகையை அதிகரித்து கொண்டு செல்வது தான் Step-Up SIP. 

உதாரணமாக மாதாமாதம் ரூ.1,000 ஐ சேமித்து வருகிறேன் என்றால், ஆண்டுக்கொரு முறை 5 சதவீதம் அல்லது 50 ரூபாய் உயர்த்தி, இரண்டாவது வருடத்திலிருந்து செய்வது. இது போல ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் தொகையை அதிகரிக்கச் செய்து முதலீட்டை மேற்கொள்வது தான் ஸ்டெப்-அப் திட்டம். இந்த திட்டங்கள் பெரும்பாலும் மியூச்சுவல் பண்டு எனப்படும் பரஸ்பர நிதிகளின் வாயிலாக கிடைக்கப்பெறுகிறது. நாம் பொதுவாக மேற்கொள்ளும் அஞ்சலக மற்றும் வங்கி சிறுசேமிப்புத் திட்டங்களில் இது போன்ற அணுகுமுறைத் திட்டங்கள் கிடைக்கப்பெறாது மற்றும் அரிது.

Conventiona SIP vs Step-up SIP

ஸ்டெப்-அப் அணுகுமுறையில் ஒவ்வொரு வருடத்தின் முடிவில் தான் தொகையை அதிகரிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒவ்வொரு மாதமும், காலாண்டுக்கொரு முறை, 6 மாதத்திற்கு ஒரு முறை என எப்படி வேண்டுமானாலும் எவ்வளவு தொகை அல்லது சதவீத அடிப்படையிலும் அதிகரித்து செய்யலாம். இது ஒரு தானியங்கி செயல்முறை(Automated Process) என்பதால், ஒரு முறை ஏற்படுத்தி விட்டால் போதும்; தொடர்ந்து கவனிக்க வேண்டிய அவசியமில்லை. அதே வேளையில் இது போன்ற முறைகளில் முதலீடு செய்யும் முன், சரியான மற்றும் நீண்ட காலத்திற்கு வருவாய் அளிக்கக்கூடிய சிறந்த திட்டங்களை தேர்ந்தெடுப்பதும் அவசியமாகும்.

இன்றைய 10 லட்ச ரூபாய் மதிப்பு, அடுத்த 20 வருடங்களுக்கு பிறகு 7 சதவீத பணவீக்கத்தில்(விலைவாசி உயர்வு) ரூ. 38.69 லட்சமாக இருக்கும். 20 வருடங்களுக்கு பிறகு கிடைக்கக்கூடிய ஒரு கோடி ரூபாயின் இன்றைய மதிப்பு ரூ.25.84 லட்சமே !

சிறு துளி பெருவெள்ளம் என்பது ஒரே அளவிலான துளி இறுதி வரை இருப்பதில்லை. அதன் வேகமெடுக்கும் திறனும், அதிகரிக்கும் அளவும் காரணத்தினால் தான் பெருவெள்ளமாகிறது. 

பாதுகாப்பானது என பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறாமல் சிரமப்படுவதை காட்டிலும், ரிஸ்க் தன்மை கொண்ட மற்றும் முதலீட்டை பரவலாக்கம்(Diversification) செய்யக்கூடிய திட்டங்களை புரிந்து கொண்டு முதலீடு செய்தால் கூடுதல் வருவாய் ஈட்டலாம்; அதன் மூலம் நமது இலக்கையும் அடையலாம்.

எந்தவொரு இலக்கும் இல்லாமல் மாதாமாதம் ரூ.10,000 முதலீடு செய்கிறேன் என அடுத்த 20 வருடங்களுக்கு செய்தாலும், நாம் செய்யும் தவறு – ஆண்டுக்கு ஒரு முறை நமது வருவாய் விகிதம் கூடினாலும், நமது முதலீட்டினை அதிகரிக்காமல் இருப்பதே ! 

“ஒரு கோடிப்பே… நீ பாத்த… 

ஆமப்பே நா பாத்தேன் ஒரு கோடிப்பே !”

     

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஷீலா ஃபோம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

ஷீலா ஃபோம் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Sheela Foam Ltd – Fundamental Analysis – Stocks

நொய்டாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஷீலா ஃபோம் நிறுவனம், கடந்த 1971ம் ஆண்டு திருமதி. ஷீலா கவுதம் அவர்களால் துவங்கப்பட்டது. மெத்தை மற்றும் நுரை(ஃபோம்) தயாரிப்புத் துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும், பாலியூரிதீன்(Polyurethane – PU Foam) எனப்படும் பாலிமர் வகையைச் சார்ந்த கூட்டுப் பொருட்களின் மூலமான மெத்தை உற்பத்தியில் அதிக பங்களிப்பை கொண்ட நிறுவனமாகவும் ஷீலா ஃபோம் லிமிடெட் உள்ளது. ஒட்டுமொத்த இந்திய மெத்தைச் சந்தைப் பிரிவில் சுமார் 35 சதவீத பங்களிப்பை இந்நிறுவனம் கொண்டுள்ளது. 

இந்நிறுவனம் தளபாடங்கள்(Furniture Cushions), மெத்தைகள், தலையணைகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், மெத்தை பாதுகாப்பான், சோபா செட்கள் மற்றும் பிற படுக்கைகள் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. நிறுவனத்தின் முக்கிய பிராண்டுகளாக Sleepwell, Kurl-on, Feather Foam, Joyce, Interplasp, SleepX, Lamiflex, Starlite உள்ளன. நாடெங்கிலும் பெரியளவிலான சுமார் 110 விநியோக நிறுவனங்களும், 13,000க்கும் மேற்பட்ட சில்லறை விநியோகர்களும் மற்றும் 5,000க்கும் மேற்பட்ட நேரடி விற்பனை நிலையங்களும் இந்நிறுவனத்திற்கு உள்ளன. ஷீலா ஃபோம் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் 25க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.

ஆஸ்திரேலிய நாட்டின் மெத்தை சந்தைப் பிரிவில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் சுமார் 40 சதவீதமாகும். Joyce Foam என்ற நிறுவனப் பிராண்டில் அங்கே இந்நிறுவனத்தின் தொழில் பிரிவு பங்காற்றி வருகிறது. நிறுவனத்தின் வருவாயை பொறுத்தவரை ஒட்டுமொத்த வருவாயில் 70 சதவீதம் உள்நாட்டிலும், 16 சதவீதம் ஆஸ்திரேலியாவிலும் மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் 14 சதவீதமாகவும் உள்ளது.

நிறுவனத்தின் உற்பத்தி மூலமான விற்பனையில் மெத்தைகள் 40 சதவீத பங்களிப்பையும், மரச்சாமான்கள் 13 சதவீதமும், தொழில்நுட்ப ஃபோம் 27 சதவீதம் என்ற அளவிலும், பிற பிரிவுகளின் மூலம் 20 சதவீத வருவாயும் கிடைக்கப்பெறுகிறது. ஷீலா ஃபோம் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் பெரும்பாலும் வாகனத்துறை, ஒலியியல்(Sound absorption Foam), தங்கும் விடுதிகள்(Hotels), திருமண வீடுகள், விருந்தினர் மாளிகை, ஓய்வு விடுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.  

நிறுவனத்தின் முக்கிய மற்றும் பிரபல வாடிக்கையாளர்களாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பேஸ்3, டெஸ்க்கா, மஹிந்திரா, கம்மின்ஸ், ஐஷர் மோட்டார்ஸ், கோயல், மாருதி, அடிடாஸ், ஸ்டட்ஸ், சுப்ரீம், அர்பன் லேடர், ரிலாக்ஸ்வெல் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. 

ஷீலா ஃபோம் நிறுவனத்திற்கு உலகெங்கிலும் 17 உற்பத்தி ஆலைகள் உள்ளன. இவற்றில் ஐந்து ஆலைகள் ஆஸ்திரேலியாவிலும், ஸ்பெயினில் ஒன்றும், பிற ஆலைகள் உள்நாட்டிலும் இருக்கின்றன. உள்நாட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலைகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 1.29 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட உற்பத்தியை இந்நிறுவனத்தால் ஏற்படுத்த முடியும். ஆஸ்திரேலியாவில் உள்ள ஆலைகள் மூலம் சுமார் 11,000 மெட்ரிக் டன்களும், ஸ்பெயின் ஆலை மூலம் 17,000 மெட்ரிக் டன்களும் ஒரு ஆண்டுக்கு உற்பத்தி செய்ய முடியும்.

Sheela Foam - Geo presence in India

நிறுவனம் கடந்த சில வருடங்களாக தனது உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான முதலீடுகளையும், சந்தையில் உள்ள முக்கிய நிறுவனங்களை கையகப்படுத்துவதிலும் முனைப்பாக இருந்து வருகிறது. முக்கியமாக நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 2.5 சதவீதம் வரை விளம்பரத்திற்கு செலவிடப்படுகிறது. குறிப்பாக கடந்த 2023ம் ஆண்டில் நாட்டின் முக்கிய மெத்தை பிராண்டான கர்லான் எண்டர்பிரைசஸ்(Kurl-on) நிறுவனத்தை சுமார் ரூ.2000 கோடிக்கும்(95 சதவீத பங்குகள்), இந்தியாவில் இணைய வழி தளபாடப் பிரிவில்(Online Furniture Rental Platform) ஆதிக்கம் செலுத்தி வரும் பர்லெங்க்கோ(Furlenco) நிறுவனத்தை 300 கோடி ரூபாய்க்கும்(35 சதவீத பங்குகள்) ஷீலா ஃபோம் கையகப்படுத்தியது. 

கையகப்படுத்திய வேளையில் பர்லெங்க்கோ(Furlenco) நிறுவனத்தின் மதிப்பு 857 கோடி ரூபாய் பெறுமானம் என்றும், கர்லான் மெத்தை நிறுவனம் 3000 கோடி ரூபாய் மதிப்பை பெறும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இன்று கர்லான் மெத்தை நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ரூ.4,560 கோடி மற்றும் பர்லெங்க்கோ நிறுவனத்தின் மூலதன மதிப்பு 1,920 கோடி ரூபாய் (அக்டோபர் 2024). கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் கர்லான் நிறுவனத்தின் லாபமும் பெரும்பாலும் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே தனது மெத்தைச் சந்தைப் பங்களிப்பு விகிதத்தை அதிகரிக்க ஷீலா ஃபோம் நிறுவனம் கையகப்படுத்துதலை மேற்கொண்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் இன்டெர்ப்லாஸ்ப் நிறுவனத்தை சுமார் 40 மில்லியன் யூரோ முதலீட்டின் மூலம் மற்றும் ஆஸ்திரேலிய மெத்தை சந்தையில் முன்னணியில் உள்ள ஜாய்ஸ் ஃபோம் நிறுவனத்தை வாங்கியதும் இந்நிறுவனத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. உற்பத்தி ஆலைகளின் கொள்ளளவை அதிகரிக்க சமீபத்தில் இந்நிறுவனம் சுமார் 350 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயின் நாட்டில் உள்ள மெத்தைச் சந்தைப் பிரிவில் நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பை அதிகரிக்கத் தேவையான விஷயங்களை இந்நிறுவனம் செய்து வருகிறது. இணையம் வழியிலான விற்பனையையும் அதிகரிக்க பல்வேறு புதுமைகளை இந்நிறுவனம் புகுத்தி வருகிறது. அதன் வெளிப்பாடாக கடந்த சில காலாண்டுகளில் இணையம் வழியான வருவாயும் வளர்ச்சியடைந்துள்ளது.

Sheela Foam - PnL statement

மெத்தை சந்தையை பொறுத்தவரை பெரும்பாலான செலவுகள் மூலப்பொருட்களைச் சார்ந்து தான் உள்ளது. மூலப்பொருட்களின் விலையும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையைச் சார்ந்து இருப்பது, பெரும்பாலும் இந்நிறுவனத்தின் மூலப்பொருட்களுக்கான செலவினத்தில் அதிக ஏற்ற-இறக்கம் காணச் செய்யும். இதன் விளைவாக நிறுவனத்தின் விற்பனை வருவாய் அதிகமாக இருந்தாலும், இயக்க லாபம் மற்றும் நிகர லாபம் குறையலாம். நிறுவனத்தின் செலவுகளை காணுகையில், கடந்த பத்து வருட சராசரியாக மூலப்பொருட்களின் செலவினம் 55-60 சதவீதமாக இருந்துள்ளது.

ஷீலா ஃபோம் லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு(Market Cap) ரூ.9,200 கோடி. கடன்-பங்கு விகிதம் 0.48 மடங்கு என்ற அளவிலும், வட்டி பாதுகாப்பு விகிதம் 2.37 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு 65.50 சதவீதமாகவும், நிறுவனத்தின் கடன் 1,436 கோடி ரூபாயாகவும் இருக்கிறது. நிறுவனர்கள் சார்பாக பங்கு அடமானம் எதுவுமில்லை. நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 276 ரூபாயாகவும், தற்போதைய பங்கின் விலை அதன் வருமானத்துடன் ஒப்பிடுகையில்(P/E) 94 மடங்குகளிலும் உள்ளது. நிறுவனத்தின் துறைச் சார்ந்த பி.இ. விகிதம் 62.1 என்பது கவனிக்கத்தக்கது.

2023-24ம் நிதியாண்டில் ஷீலா ஃபோம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ. 2,982 கோடியாகவும், செலவினம் 2,678 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம் 10 சதவீதமாகவும், நிகர லாபம் ரூ.184 கோடியாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் இதர வருமானம் 136 கோடி ரூபாயாக உள்ளது. செப்டம்பர் 2024 காலத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Cash Reserves) ரூ.2,943 கோடி. நிறுவனத்தின் மொத்தக் கடன் ரூ.1,436 கோடி: இவற்றில் ரூ.496 கோடி குறுகிய காலக் கடனாகவும், 742 கோடி ரூபாய் நீண்டகாலக் கடனாகவும் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக நிறுவனத்தின் கடன் தொகையும் அதிகரித்து வருகிறது. இது சார்ந்து நிறுவனத்தின் சொத்துக்களும் அதிகரித்து வந்துள்ளது. அதே வேளையில் சரக்குகளும்(Inventories), வர்த்தக வரவுகளும்(Trade Receivables) அதிகரித்து காணப்படுகிறது. வர்த்தக வரவுகளில் பெரும்பான்மையான தொகை ஆறு மாதத்திற்கு குறைவான காலத்தில் இருந்துள்ளது.

Sheela Foam - Brands

செப்டம்பர் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் நிரந்தர சொத்து(Fixed Assets) மதிப்பு ரூ.3,148 கோடி. நிறுவனத்தின் இயக்க லாப விகிதம் கடந்த பத்து ஆண்டு காலத்தில் சராசரியாக 11 சதவீதம் என்ற அளவில் உள்ளது. விற்பனை வருவாய் வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் எட்டு சதவீதமாகவும், அதுவே 10 ஆண்டுகளில் 9 சதவீதமாகவும் இருந்துள்ளது.லாப வளர்ச்சியை பொறுத்தவரை, கடந்த 5 வருடங்களில் ஒரு சதவீதமாகவும், 10 ஆண்டுகளில் இது 17 சதவீதமாகவும் இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் இந்நிறுவனப் பங்கின் விலை 23 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே வேளையில் 2020ம் ஆண்டில் முதலீடு செய்திருந்தால் தற்போது 36 சதவீத ஏற்றமாகும். கடந்த ஒரு வருடத்தில் இந்தப் பங்கின் அதிகபட்ச விலை ரூ.1297 வரை சென்றுள்ளது. 2022ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்நிறுவனம் ஒன்றுக்கு ஒன்று போனஸ் பங்குகளை(Bonus issue 1:1) அறிவித்திருந்தது. 

நிறுவனத்தின் தற்போதைய தலைவராக திரு. ராகுல் கவுதமும், நிர்வாக இயக்குனராக திரு. துஷார் கவுதமும் உள்ளனர். உலகளவில் இந்தியத் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு. நிலேஷ் மசும்தார் உள்ளார்.  நிறுவனம் சார்பில் 65.50 சதவீதப் பங்குகள் உள்ள நிலையில், அவற்றில் திரு. துஷார் கவுதம் மட்டும் தன்னிடத்தே 31.44 சதவீத பங்குகளை வைத்துள்ளார். அன்னிய நிறுவன முதலீட்டுப் பங்களிப்பு(FII) 6.60 சதவீதமாகவும், உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு(DII) 22.30 சதவீதமாகவும் உள்ளது. ஷீலா ஃபோம் நிறுவனத்தின் தற்போதையப் பங்கு விலை ஒன்றுக்கு ரூ.844 என வர்த்தகமாகி வருகிறது. நிறுவனத்தின் மூலப்பொருட்கள் பெரும்பாலும் கச்சா எண்ணெய் விலையை சார்ந்து இருப்பதால் இதன் வருவாய்-லாப விகிதம் அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படலாம். 

ஷீலா ஃபோம் நிறுவனத்திற்கு உலகலாவிய துறைச் சார்ந்த போட்டியாளர்களாக கார்பெண்டர், ரெக்டிசல், ப்ரோசீட், எஸ்ஸென்ட்ரா போன்ற நிறுவனங்கள் உள்ளன. உள்நாட்டில் டூரோபிளக்ஸ், ஸ்ப்ரிங்வெல், காயிர்பிட், திருப்பதி ஃபோம்  மற்றும் பிற நிறுவனங்கள் போட்டியாளராக உள்ளன.

Sleep Well(Strong in North & West in India): Focus on PU Foam Mattress

Kurl-on (Strong in East & South in India): Focus on Rubberized Coir Mattress  

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வுக்கானக் கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ? (எக்ஸ்க்ளுசிவ் கட்டுரை)

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ? (எக்ஸ்க்ளுசிவ் கட்டுரை)

Asset Class returns Since 1994 in India – Investment Returns Year on Year (Exclusive article)

பொதுவாக பங்குச்சந்தை முதலீடு, சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. ஆம், பங்குச்சந்தையில் முதலீடு செய்கையில் அதிக ஏற்ற-இறக்கத்தை நாம் சந்தித்தாக வேண்டும். ஆனால், பங்குச்சந்தையை தவிர்த்து மற்ற முதலீடுகள் உண்மையில் அபாயமில்லையா(ரிஸ்க் தன்மை) ? இதனை நம்மில் ஒவ்வொருவரும் சிந்தனையாக மாற்றியிருந்தால், அதற்கான விழிப்புணர்வு(Awareness) நமக்கு கிடைத்திருக்கும்.

உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பங்கு இன்று தவிர்க்க முடியாத இடத்தில் இருந்து வருகிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலெல்லாம் ஏற்பட்ட நிதிச்சிக்கல்கள் நம் நாட்டிலும் ஒரு காலத்தில் இருந்துள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் நாம் பல பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் களைந்து, 1992ம் ஆண்டுக்குப் பிறகு அதனைக் கடந்து விட்டோம். உலகின் எந்தவொரு வளர்ந்த நாட்டின் பொருளாதாரத்திலும் தனிநபர் மற்றும் குடும்பத்தின் வருவாயில் அதிக ஏற்ற-தாழ்வு இருப்பதும், ஏழை-பணக்காரர்களுக்கான வருமான இடைவெளி அதிகமாக இருப்பதும் உண்மை தான். ஆனால் அதற்காக நாம் நிதி சார்ந்த கல்வியை கற்காமலும், விழிப்புணர்வை பெறுவதில் தயக்கம் காட்டுவதும் சரியா ?

இவ்வுலகில் ரிஸ்க் இல்லாமல் ஒரு நிகழ்வு இருக்கிறதா என்றால், அப்படியொன்றுமில்லை. சாலையை கடந்தாலும் அபாயம் தான், வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும் ரிஸ்க் தான். வங்கி டெபாசிட் பாதுகாப்பானது என நாம் எண்ணினால் மத்திய வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தை பற்றியும்(Interest rate Risk), வங்கிகளுக்கான DICGC சார்ந்த விதிகளையும் படிக்க வேண்டும். தங்கத்தின் மீதான முதலீடு ரிஸ்க் இல்லையென நினைத்தால், தங்கத்தின் சந்தை எங்கே இருந்து இயக்கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் அது எந்த நாணயத்தால்(Currency) வர்த்தகமாகிறது என்ற விழிப்புணர்வை பெற வேண்டும்.

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறைப் பற்றி நாம் பெரிதாக சொல்ல வேண்டியதில்லை. எல்லா குடும்பங்களுக்கும் ஒரு வீடு தேவை என்ற போதிலும், அவற்றை நாம் முதலீட்டுக் கோணத்தில் அணுகும் போது, அவற்றில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க் நமக்கு தெரிவதில்லை. வீட்டுமனைத் துறையில் நாம் முதலீடு செய்யும் முன் நீர்மை நிறை(Liquidity), வரி விதிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை(Transparency) பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அஞ்சலகங்கள், அரசு கடன் பத்திரங்கள், வருங்கால வைப்பு நிதி என காணுகையில், இது ஒரு நாட்டில் உள்ள அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தைப் பொறுத்துத் தான் அமையும். கிரீஸ், இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா, ஜப்பான், ரசியா, இன்னும் எண்ணற்ற நாடுகளில் வெவ்வேறு காலத்தில் நடந்த பொருளாதார மந்தம் நம் நாட்டில் இனி ஏற்படாது என நாம் எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். 

பொதுவாக ஒரு சாரார் பங்குச்சந்தை முதலீடு ஆபத்தானது, பணக்காரர்களுக்கானது, அது ஒரு சூதாட்டம் என மொத்தமாக ஒதுங்குவதும், மற்றொரு புறம் குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்கிறேன் பேர்வழியாக போன்சி(Ponzi Scam) மோசடித் திட்டங்களில் மொத்த பணத்தையும் இழந்து விட்டு நிற்பதும் அடிக்கடி நடந்து தான் வருகிறது. இது ஒரு புறமென்றால், இந்திய பண(Money Market) மற்றும் முதலீட்டுச் சந்தையில்(Capital Market) பெரிதாக வாய்ப்பொன்றுமில்லை என நினைத்துக் கொண்டு வெளிநாட்டுப் பங்குகளை வாங்குகிறேன், கிரிப்டோவில் விளையாடுகிறேன், ரம்மியில் கோடீஸ்வரராகுகிறேன், பங்குச்சந்தை மற்றும் போரெக்ஸ் சந்தையில் வர்த்தகம் மற்றும் இந்த செயலியில்(Mobile Apps) பணத்தை போட்டு விட்டு சும்மா இருந்தால் பணக்காரராகி விடலாம் என சிக்குகின்றனர்.

சந்தையில் முதலீடு செய்யாமல் இருப்பதும், சந்தையைத் தாண்டி வேறுமொரு புதிய முதலீட்டு வாய்ப்பு இருப்பதாக கருதி, தெரியாத, ‘கேக்குறான் மேக்குறான்’ திட்டத்தில் உழைத்த பணத்தை தொலைப்பது – இரண்டும் ஒன்று தான். மருத்துவத் துறையில் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராக, பொறியியல் துறையில் ஒரு சிறந்த என்ஜினீயராக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் உயர்நிலை அதிகாரியாக வருவதற்கு நாம் நமது பள்ளிக்காலத்திலிருந்தோ அல்லது கல்லூரியிலிருந்தோ அதற்கான விதையை நட்டிருக்க வேண்டும். அதனைத் தான் நாம் அனுபவம் பேசுகிறது என சொல்கிறோம். ஆனால், பங்குச்சந்தையிலோ ஒரு வாரம் பணம் பார்த்து விட்டால் போதும், மிகப் பெரிய வல்லுனராக நம்மை நாமே நினைத்துக் கொண்டு, சந்தையின் அடிப்டைக் கல்வியை கற்காமல், அதன் கோணத்தை அறியாமல் சூதாடி விட்டு, பின்பு பங்குச்சந்தை ஒரு சூதாட்டம் எனவும், இது பணக்காரர்கள் மட்டுமே சம்பாதிக்கக் கூடிய இடமென்றும், மேலும் இது நமக்கு சரிப்பட்டு வராது என நாம் புறந்தள்ளுகிறோம்.

டாட்டாவும், பிர்லாவும்:

பங்குச்சந்தையில் அவ்வளவு எளிதாக சம்பாதித்து பணக்காரராக விட முடியுமென்றால், ஏன் டாட்டா-பிர்லாவும், அம்பானி-அதானியும் பல துறைகளில் தொழில் புரிய வேண்டும். அவர்களிடம் இருக்கும் மூலதனத்தை கொண்டே நித்தமும் ஆயிரம் கோடிகளை பங்குச்சந்தை வர்த்தகத்தில் லாபமாக ஈட்டலாமே ! உண்மையில் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களையும், வழங்கும் சேவைகளையும் நாம் பயன்படுவதால் மட்டுமே அவர்கள் தங்களது தொழிலில் பணக்காரர்களாக உள்ளனர். இதனைத் தான் நாமும் செய்ய வேண்டும் – ஒரு நிறுவனத்தின் அல்லது தொழிலின் உரிமையாளர் மற்றும் முதலீட்டாளரை போல !

கடந்த கால வருவாய் விகிதங்கள்:

சரி, இந்தியப் பங்குச்சந்தை முதலீடு கடந்த 30 ஆண்டுகளில் அப்படி என்ன செய்து விட்டது. மும்பையின் தலால் தெருவை அடையாளமாக கொண்ட மும்பை பங்குச்சந்தை என்னவோ 1875ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த தேசிய பங்குச்சந்தையும் 1992ம் ஆண்டு வாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று 5000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக, அதாவது 1994ம் ஆண்டு முதல் நாம் ஒவ்வொரு வருடமும் முதலீடு செய்து வந்திருந்தால், நடப்பாண்டின் செப்டம்பர் மாத முடிவில் சென்செக்ஸ் குறியீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 14.30 சதவீதமும், நிப்டி-500 குறியீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 15.70 சதவீதமும் ஒரு முதலீட்டாளருக்கு வருவாயாக கிடைத்திருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் ஆண்டுக்கு சுமார் 50,000 ரூபாய் என்ற அளவில் கடந்த 30 ஆண்டுகளாக முதலீடு செய்து வந்திருந்தால்(மொத்தம் 15 லட்சம் ரூபாய்), சென்செக்ஸ் குறியீட்டின் மூலம் இன்று உங்களது ஒட்டுமொத்த முதலீட்டு வருவாய் 2.41 கோடி ரூபாயாகவும், நிப்டி-500 குறியீட்டின் மூலம் அது 2.79 கோடி ரூபாயாகவும் வளர்ந்து நிற்கும். இங்கே அரசியல் சார்ந்த ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறலாம். ஆனால் சந்தையில் நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, முதலீடு செய்த பின் பொறுமையே உங்களது வருவாயை மிகப்பெரிய அளவில் மாற்றும்.

1994ம் ஆண்டு முடிவில் நாட்டின் பணவீக்கம் 9.50 சதவீதமாக இருந்த நிலையில், அந்த வருடத்தின் முடிவில் பொது வருங்கால வைப்பு நிதி அளித்துள்ள வருவாய் சுமார் 12 சதவீதமாகும். இது போன்ற ஒரு வருவாய் இன்று இருந்திருந்தால், நீங்கள் பங்குச்சந்தைக்கு வர வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய அளவில் பங்குச்சந்தையில் ஆண்டுக்கு சராசரியாக 12 – 15% வருவாய் என  நீண்டகாலத்தில் கிடைத்தால், அவர் தான் சந்தையில் சாதனையாளர். சொல்லப்பட்ட 1994ம் வருடம் வங்கியில் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 10 சதவீதமாகவும், சென்செக்ஸ் குறியீடு 19.60 சதவீத வருவாயையும் வழங்கியுள்ளது. அதே வேளையில் தங்கத்தின் தங்கம் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வருவாயையே அந்த வருடத்தில் கொடுத்துள்ளது.

தங்கத்தின் முதலீட்டு வருவாய்:

கடந்த 30 வருடங்களில் தங்கத்தின் மீதான முதலீட்டு வருவாய் ஆறு வருடங்கள், 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்துள்ளது. இதன் மோசமான காலமாக 1997ம் ஆண்டில் தங்கம் (-20.60) சதவீதமும், 2014, 2015ம் ஆண்டு முறையே (-10.80) சதவீதம் மற்றும் (-5.50) சதவீதம் என்ற அளவில் இறக்கத்தை கண்டுள்ளது. அதாவது 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், ஈட்டிய வருவாய் வெறும் 1.84 சதவீதமே. அதாவது சொல்லப்பட்ட வருடத்தில் நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) சராசரியாக 6.27 சதவீதமாகும். 

 தங்கத்தின் பொற்காலமாக 2005ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை(17.70%, 20.40%, 12.90%, 25.30%, 32.80%, 19.50%, 36.90%) இருந்துள்ளது. குறிப்பாக 2007-08ம் ஆண்டு ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார நெருக்கடியில் மற்றும் அதனை ஒட்டியுள்ள காலத்தில் தங்கத்தின் மீதான வருவாய் உயர்ந்து வந்துள்ளது. 2011ம் ஆண்டு மட்டும் தங்கத்தின் மீதான முதலீடு 36.90 சதவீத வருவாயை கொடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 30 ஆண்டுகளில் தங்கத்தின் மீதான வருவாய் சராசரியாக 11.10 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது.

பங்குச்சந்தையில் முதலீடு:

இந்தியப் பங்குச்சந்தையை பொறுத்தவரை சென்செக்ஸ் குறியீடு கடந்த 30 வருடங்களில் 12 வருடங்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமான வருவாயை அளித்துள்ளது. அதிகபட்ச வருவாயாக 2009ம் ஆண்டில் 82 சதவீதத்தை வழங்கியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டான 2008ல் வரலாற்றில் மோசமான வீழ்ச்சியை சந்தித்த தருணம், சுமார் (-51.40) சதவீத வீழ்ச்சி. 30 வருடங்களில் 8 முறை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது போல, நிப்டி-500 குறியீட்டை எடுத்துக் கொண்டால் அதுவும் 8 ஆண்டுகள் இறக்கத்தை சந்தித்துள்ளது. இந்த குறியீடு 1998ம் ஆண்டின் முடிவில் 97.20 சதவீதம் மற்றும் 2009ம் ஆண்டில் 92.90 சதவீத வருவாயை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிப்டி-500 குறியீடு ஒன்பது ஆண்டுகள் 30 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றத்தை பெற்றுள்ளது. 

வெள்ளியில் வாய்ப்பு:

வெள்ளியில் முதலீட்டை மேற்கொள்ளும் போது, பெரும்பாலும் தங்கத்திற்கு எதிர்மாறாகத் தான் இருந்துள்ளது. வெள்ளியின் பயன்பாடு தொழிற்துறையில் காணப்படுவதால், பங்குச்சந்தையை போலவே அதிகமான வருவாயை வெள்ளி முதலீடு வழங்கியுள்ளது. இருப்பினும் முப்பது வருடங்களில் சராசரியாக ஆண்டுக்கு 9.70 சதவீத அளவில் உள்ளது. 

வெள்ளி அதிகபட்ச வருவாயாக 2009ம் ஆண்டில் 63.50 சதவீதமும் மற்றும் 2010ம் ஆண்டில் 59.90 சதவீதமும் தந்துள்ளது. மோசமான வீழ்ச்சியாக 2013ம் ஆண்டில் (-26.60) சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 30 வருடங்களில் ஆறு முறை வெள்ளி முதலீட்டின் மீதான வருவாய் 20 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது. பொதுவாக நம்மில் பலர் தங்கத்தின் மீது கொண்டுள்ள காதலை, வெள்ளிக்கு கொடுக்க மறுக்கின்றனர், அது ஏனோ ! தங்கத்தினை காட்டிலும், வெள்ளியின் பயன்பாடு தொழிற்துறைக்கு தேவை. குறிப்பாக எலக்ட்ரிக் வாகன பேட்டரி தயாரிப்பு, சோலார் பேனல், மருத்துவம், மின்னணுப் பொருட்கள், ரசாயனம், நிழற் படக்கலை(Photography), நீர் சுத்திகரிப்பு, அச்சிடுதல் என பல துறைகளுக்கு வெள்ளியின் தேவை உள்ளது. வெள்ளியை அப்படியே வாங்காவிட்டாலும், முதலீட்டு நோக்கத்தில் சில்வர் இ.டி.எப்.(Silver ETF) அல்லது சில்வர் மியூச்சுவல் பண்டுகள்(Silver Funds) முறையில் வாங்கலாம்.

Asset class returns in India - 30 Yrs Data Since 1994

உங்களின் நிரந்தர பகைவன்:

நாட்டின் பணவீக்கத்தை பொறுத்தவரை 1998 மற்றும் 2009ம் ஆண்டுகளில் 15 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து காணப்படுகிறது. குறைந்தபட்ச விலைவாசியாக கடந்த 1999ம் ஆண்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்த வருடத்தில் தான் சென்செக்ஸ் மற்றும் நிப்டி-500 குறியீடுகள் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் பணவீக்க விகிதம் ஆறு சதவீதத்திற்கும் குறைவாக காணப்பட்டாலும், உணவுப்பொருட்களின் விலை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வந்துள்ளது. கடந்த 30 வருடங்களில் நாட்டின் பணவீக்க விகிதம் சராசரியாக 6 முதல் 7 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது.

ரியல் எஸ்டேட் முதலீட்டு வருவாய்:

ரியல் எஸ்டேட் என சொல்லப்படும் வீட்டுமனைத் துறையில் முதலீடு, கடந்த 20 வருடங்களில் சராசரியாக ஆண்டுக்கு 8.40 சதவீத வளர்ச்சியை அளித்துள்ளது. வீட்டுமனைத் துறைக்கான முதலீட்டு வருவாய் தரவுகள் பெரும்பாலும் மெட்ரோ நகரங்களை கொண்டு கணக்கிடப்பட்டவை. கொல்கத்தா போன்ற நகரங்களில் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை சராசரியாக ஆண்டுக்கு 3 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வருவாய் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. ரியல் எஸ்டேட் துறைக்கு மோசமான காலக்கட்டங்களாக 2008ம் ஆண்டும், 2020ம் ஆண்டும் இருந்துள்ளது. 

ரியல் எஸ்டேட் துறையில் பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் நிலம், வீடு வாங்கலாம் என்ற போதிலும் ஒரு முதலீட்டுச் சாதனமாக அணுகும் போது, அத்துறையில் ஒழுங்குமுறை மற்றும் கொள்கைகள், விலை நிர்ணயம், தொழில்நுட்பங்களை புகுத்துதல் ஆகியவை குறைகளாகவும், அவற்றை நிர்வகிப்பது சவால்களாகவும் இருந்து வந்தது (கணக்கில் காட்டப்படாத பணமும், வரி ஏய்ப்பும் அப்புறம்). இதன் காரணமாகவே பெரிய முதலீட்டாளர்களும், பெரு நிறுவனங்களும் REIT மூலம் முதலீட்டை மேற்கொள்ளத் துவங்கியுள்ளன. இன்னும் ரெய்ட் பற்றிய விழிப்புணர்வு பெரிதாக பரப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில்லறை முதலீட்டாளர்களுக்கு(Retail Investors) கட்டிடத்துடன் கூடிய முதலீட்டை காட்டிலும் பெரும்பாலும் மனை(நிலம்) தான் பல மடங்கு வருவாயை நீண்டகாலத்தில் தந்துள்ளது. வீட்டு வாடகை மூலம் கிடைக்கப்பெறுகிற வருவாய், வங்கி வட்டி விகிதத்தை காட்டிலும் குறைவாக காணப்படுவதாக துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகினறனர். இதன் காரணமாகத் தான் வீட்டு கட்டிடம் தேய்மானமாகவும், நிலம் வருவாய் அளிக்கும் வாய்ப்பாகவும் சொத்து மதிப்பீட்டு அளவில் பார்க்கப்படுகிறது(வணிகக் கட்டிடங்களுக்கு இது விதிவிலக்கு).

வங்கியில் உங்கள் பணம்:

வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதம், கடந்த 30 வருடங்களில் ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டுள்ளது. 1994ம் ஆண்டில் 10 சதவீதமாக இருந்த நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக 1996ம் ஆண்டு, இது 12 சதவீதமாக இருந்துள்ளது. அப்போதைய நாட்டின் பணவீக்கமும் 9.50 சதவீதத்திலிருந்து 10.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. பின்னர் 2004ம் ஆண்டு வாக்கில் வங்கி டெபாசிட் வட்டி விகிதம் 5.40 சதவீதமாக இருந்துள்ளது(பணவீக்கம் 3.80%). 2009ம் ஆண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 15 சதவீதமாக உயர்ந்த நிலையில், அப்போதைய வட்டி விகிதம் 9.30 சதவீதம். பின்னர் 2012ம் ஆண்டு வாக்கில் 8.80 சதவீதமாக வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் இருந்த நிலையில், அப்போதைய பணவீக்க விகிதம் 11.20%.

நடப்பில் வங்கிகளில் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் 7.5 சதவீதத்திற்கும் குறைவே. அதே போன்று நாட்டின் பணவீக்கமும் தற்போது 6 சதவீதத்திற்குள் இருந்து வருகிறது. பொதுவாக அரசின் கடன் வாங்கும் கொள்கைகள் மற்றும் விலைவாசியை கருத்தில் கொண்டு வங்கி வட்டி விகிதங்கள் மாறுபடும். கடந்த சில வருடங்களாக அன்னிய முதலீடு அதிகரித்து வரும் நிலையில், வங்கி கொள்கைகள் மூலம் அரசின் கடன் வாங்கும் தன்மையும் குறைந்து வருகிறது. ஜப்பானும், அமெரிக்காவும் ஒரு சதவீதத்திற்கும், இரண்டு சதவீத வருவாய்க்கும் இந்தியாவில் முதலீடு செய்ய காத்திருக்கும் போது, அரசு ஏன் மக்களிடம் வங்கி மூலம் அதிக வட்டிக்கு கடன் வாங்கப் போகிறது ?

ஓய்வுக்கால வைப்பு நிதித்திட்டம்:

பொது வருங்கால வைப்பு நிதியை(Public Provident Fund – PPF) பொறுத்தவரை, கடந்த 1994ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை நிலையாக 12 சதவீத வட்டி வருவாய் கிடைத்த நிலையில் 2003ம் ஆண்டுக்கு பிறகு 8 சதவீதத்திற்கு கீழ் சரிந்தது. நடப்பில் 7.5 சதவீதத்திற்கும் குறைவாகவே வருங்கால வைப்பு நிதி மூலம் கிடைக்கப்பெறுகிறது. எனினும் இது போன்ற திட்டங்கள், பெரும்பாலும் ஓய்வூதியக் காலத்திற்கு தேவையான தொகையாகவே இருக்கும். அப்படியிருக்கும் பி.எப். திட்டத்தை போல என்.பி.எஸ்.(NPS), ஓய்வுக்கால மியூச்சுவல் பண்டு(Retirement Funds) திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வரிச் சேமிப்பு மட்டுமில்லாமல் ஓய்வுக்காலத்திற்கு தேவையான கார்பஸ் தொகையையும் சற்று அதிகரிக்கச் செய்யலாம். இதன் மூலம் விலைவாசிக்கு ஏற்றாற் போல ஓய்வூதியமும் கிடைக்கும்.

மேலே சொன்ன பல்வகையான முதலீட்டுச் சாதனங்களை காணும் போது, பங்குச்சந்தை முதலீட்டின் மூலமான வருவாய் முதலிடத்தையும், அதற்கடுத்தாற் போல் இரண்டாமிடத்தில் தங்கமும் உள்ளது கவனிக்கத்தக்கது. வெள்ளி மற்றும் ரியல் எஸ்டேட் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. 1994ம் ஆண்டு முதல் வருடந்தோறும் 50,000 ரூபாயை இன்று வரை முதலீடாக மேற்கொண்டிருந்தால், உங்களுக்கு பங்கு முதலீட்டின் மூலம் 15 மடங்குகளிலும், தங்கத்தின் மூலம் 8 மடங்குகளிலும், வெள்ளியின் மூலம் 6 மடங்குகளிலும் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் 4.5 மடங்குகளிலும் வருவாய் கிடைத்திருக்கும். 

நீங்கள் செய்யவில்லையென்றால், வேறொருவர்…

என்ன தான் நாம் நம் பணத்தை ஆயுள் காப்பீட்டிலும்(Insurance), வங்கி டெபாசிட்டிலும் பாதுகாப்புக் கருதி செய்தாலும், மீண்டும் அந்த பணம் அதிக வருமானமீட்டும் பங்குகளைத் தான் தேடிச் செல்லும். ஆனால் நமக்குக் கிடைப்பதோ பாதுகாப்பான(நம்பிக்கையில் மட்டுமே) சொற்ப வருமானமே.  இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. பற்றி சொல்லலாம். இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் 52 லட்சம் கோடி ரூபாய். எல்.ஐ.சி. நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாத பெரு மற்றும் நடுத்தர நிறுவனங்களே இல்லை என சொல்லலாம். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையில் ஒரு குறிப்பிட்டத் தொகை பங்குச்சந்தைக்கு, ஈட்டும் அபரிதமான லாபமோ இந்நிறுவனத்திற்கு. முடிவில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான காப்பீடும் சிறு போனஸ் தொகையும். 

உங்களால் பங்குச்சந்தையை பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், கற்றுக் கொள்ள முயற்சிக்கலாம். இல்லையெனில் தகுந்த ஆலோசகரின் முன்னிலையில் அல்லது பரஸ்பர நிதிகளின்(Mutual Funds) மூலம் சந்தை அபாயத்தையும், உங்களது பயத்தையும் குறைக்கலாம். ஆனால் ரிஸ்க் என்பதை நாம் முழுவதும் தவிர்க்க முடியாது. இன்று பங்குச்சந்தை ரிஸ்க்கை பரவலாக்க மற்றும் நல்ல வருவாய் ஈட்ட இண்டெக்ஸ் பண்டுகளும்(Index Funds) உள்ளன. வெறுமென பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொண்டு குறைந்த வட்டி வருவாய், பணவீக்க விகிதம், இலக்கிற்கான தொகையை அடைய முடியாமல் போவதற்கு சற்று ரிஸ்க் எடுத்துத் தான் பார்க்கலாமே(அறிவார்ந்த – Calculated Risk) ! 

“எண்ணற்ற வழியில் எனக்கு வருவாய் வந்து கொண்டிருக்கிறது, நேர்மையாக அரசுக்கு வரி செலுத்தி அதற்கான வரித்தாக்கலும் செய்து வருகிறேன், தலைமுறை கடந்த சொத்துக்களும் எனக்கு இருக்கிறதென்றால்” நீங்கள் பணவீக்கத்தையும், பங்குச்சந்தை வருவாயைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. மாறாக பங்குச்சந்தையில் உங்களது நிறுவனத்தை பட்டியலிட முனையலாம். “ மாதந்தோறும் போதுமான ஓய்வூதியத் தொகையை பெற்று நிம்மதியாக உள்ளேன். யாருக்காகவும் நான் சேமிக்க வேண்டிய அவசியமில்லை, என்னை நம்பி யாரும் நிதி சார்ந்து இல்லை ” என்றால் நீங்கள் மேலே சொன்ன முதலீட்டு வருவாயைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை(பணவீக்கத்தை கவனத்தில் கொள்க).

“ நீங்கள் கற்றுக் கொள்ளா விட்டால், விழிப்புணர்வை பெறா விட்டால் உங்கள் பணத்தைக் கொண்டு மற்றொருவர் தனது அறிவின் மூலம் பத்தும் செய்வார் “. – பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதன் விதி இது தான் !

தரவுப்பட பகிர்வுக்கு நன்றி(Data Table Courtesy): செல்வி. வித்யாஸ்ரீ – வாடிக்கையாளர் சேவை மேலாளர், (ஆதித்யா பிர்லா சன்லைப் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம்(ABSL AMC))

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடந்த பத்து வருட கால இந்திய முதன்மைச் சந்தை(ஐ.பி.ஓ) எப்படி இருந்துள்ளது – 2024 தரவு ?

கடந்த பத்து வருட கால இந்திய முதன்மைச் சந்தை(ஐ.பி.ஓ) எப்படி இருந்துள்ளது – 2024 தரவு ?

IPO(Initial Public Offer) Performance in the Indian Stock Market Since 2014

 

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில், டீமேட் கணக்குகளின் எண்ணிக்கையும், பங்குச்சந்தையில் ஈடுபடும் சிறு முதலீட்டாளர்களின் வரவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து வருடங்களாக பங்குச்சந்தையில் முதன்மைச் சந்தையான ஐ.பி.ஓ. வெளியீட்டில் ஆர்வம் காட்டும் சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வந்துள்ளது. இதற்கு சந்தை பெரிய அளவிலான இறக்கத்தை காணாமல் இருப்பதும் ஒரு காரணமாக உள்ளது.

நாட்டின் பங்குச்சந்தையில் பிரதான சந்தைகளாக மும்பை பங்குச்சந்தையும்(BSE), தேசிய பங்குச்சந்தையும்(NSE) உள்ளது. 1875ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்ட மும்பை பங்குச்சந்தையில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பொதுவெளியில் பட்டியலிடப்பட்டுள்ளது. இச்சந்தையின் மதிப்பு  சுமார் 5.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும்(இந்திய ரூபாயில் 467 லட்சம் கோடி). 1992ம் ஆண்டில் துவங்கப்பட்ட தேசிய பங்குச்சந்தையில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 463 லட்சம் கோடி(5.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்).

தேசிய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடாக நிப்டி50ம், மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடாக சென்செக்ஸ் உள்ளது. மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையின் கீழ் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பட்டியலிட எஸ்.எம்.இ.(SME IPO) சந்தைகளும் கவனிக்கத்தக்கது. 

பொதுவாக ஐ.பி.ஓ.(Initial Public Offering) எனப்படும் முதன்மைச் சந்தையில் பட்டியலிட உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்க மட்டுமே செய்வோம். இரண்டாம் நிலைச் சந்தையில்(Secondary Market) தான் பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது என முழு வணிகமும் நடைபெறும். 

ஐ.பி.ஓ. முறையில் முதலீடு செய்து லாபமீட்டலாமா ?

நடப்பாண்டில் இதுவரை 252 நிறுவனங்கள்(எஸ்.எம்.இ. உட்பட) இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ. முதலீட்டின் மூலம் திரட்டப்பட்ட மொத்தத் தொகை ரூ.70,667 கோடி. இதுவே பத்து வருடத்திற்கு முன்பு, அதாவது 2014ம் ஆண்டில் காணும் போது, 44 நிறுவனங்கள் சேர்த்து ரூ.1,494 கோடி முதலீடுகள் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.

IPO Performance in India Since 2012 - 2024-sep

2012ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் அதிகபட்சமாக ஏற்றம் பெற்ற காலம், இந்த 2024ம் வருடம் தான். பட்டியலிடப்பட்ட நாளில் சராசரியாக சுமார் 47 சதவீத விலையேற்றத்தை பங்கு விலை பெற்றுள்ளது. 2019ம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட ஒட்டுமொத்த நிறுவனங்களை தற்போது வரை வைத்திருந்தால், இது சராசரியாக 376 சதவீத வளர்ச்சியை தந்திருக்கும். எனினும், குறிப்பிட்ட பங்கின் விலையில் கிடைத்த வளர்ச்சியை இது சுட்டிக்காட்டவில்லை. 

கடந்த பத்து வருட காலத்தில் ஒரே ஆண்டில் அதிகபட்ச ஐ.பி.ஓ. நிறுவனங்கள் பட்டியலிடப்படுவதும் இதுவே முதன்முறை(2024ம் ஆண்டு). நடப்பாண்டு இன்னும் முடிவடையாத நிலையில், இதுவரை வெளியிடப்பட்ட 252 நிறுவனப் பங்குகளில் 229 நிறுவனப் பங்குகள், சந்தையில் வெளியிடப்பட்ட நாளன்று ஏற்றத்தில் துவங்கியுள்ளது. சொல்லப்பட்ட 252 நிறுவனங்கள் 70,667 கோடி ரூபாயை முதலீடாக திரட்டிய நிலையில், தற்போது அதன் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு(Market Cap) ரூ.4 லட்சம் கோடி.

Mainboard IPOs in India Since 2007

 கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட சாக்சாப்ட் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட சாக்சாப்ட் லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

Saksoft Limited: Saksoft Group – Fundamental Analysis – Stocks

கடந்த 1931ம் ஆண்டு நாட்டின் தலைநகரான தில்லியில் (அட, 1911ம் ஆண்டு வரை நம்ம கல்கத்தா நகரம் தாங்க இந்தியாவின் தலைநகரம் !) பிறந்தவர் தான் திரு. அவ்தார் கிருஷ்ணா. இந்தியாவில் இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்த இவர், ஐக்கிய ராச்சியத்திற்கு(United Kingdom) சென்று உலோக வார்ப்பு சார்ந்த துறையில் தனது பயிற்சியை முடித்தார். பின்னர் இந்தியாவிற்கு திரும்பிய இவர், துர்காபூர் எஃகு ஆலை அமைப்பதற்கான குழுவில் இடம் பெற்றார்.

எஃகு ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வேளையில், நாம் தொழில்முனைவை நோக்கி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கியது தான் சாக்சாப்ட் குழுமத்தின் முதல் படி. 1962ம் ஆண்டு வாக்கில் சாக் இண்டஸ்ட்ரீஸ் என்ற தனது நிறுவனத்தை ஏற்படுத்தி, ஜெர்மனியின் ஃப்ரைட் க்ரூப்ஸ் உடன் இணைந்து கார்பைடு வெட்டும் கருவிகள் மற்றும் உலோகத்தை உருவாக்கும் தயாரிப்புகளில் ஈடுபட்டார். பின்னர் இந்த துறையில் நாட்டின் முன்னணி நிறுவனமாகவும் சாக் இண்டஸ்ட்ரீஸ் வலம் வந்தது.

இன்று சாக்சாப்ட் குழுமத்தில் சாக்சாப்ட் டெக்னாலஜிஸ், சாக்சாப்ட் அப்ரைசீவ்ஸ், 360 லாஜிக்கா, அக்குமா, ட்ரீம் ஆர்பிட், டெராபாஸ்ட் நெட்ஒர்க்  என பத்துக்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் உள்ளன. இது போக கல்வி மற்றும் மருத்துவத் துறையிலும் குறிப்பிடத்தக்க சேவைகளை இந்நிறுவன குழுமம் வழங்கி வருகிறது.    

சாக்சாப்ட் குழுமத்தின் ஒரு அங்கம் தான் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சாக்சாப்ட் லிமிடெட் நிறுவனம். கடந்த 1999ம் ஆண்டு திரு. அவ்தார் கிருஷ்ணா மற்றும் அவரது மகன் திரு. ஆதித்யா கிருஷ்ணா இருவரால் துவங்கப்பட்ட இந்நிறுவனம், நாட்டின் தகவல்தொழில்நுட்ப துறையின் நடுத்தர  / குறு நிறுவனங்கள் பிரிவில் உள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை மையமாக கொண்ட நிறுவனங்களுக்கு தேவையான வணிக நுண்ணறிவு மற்றும் தகவல்தொழில்நுட்ப மேலாண்மை தீர்வுகளை வழங்கி வருகிறது.

குறிப்பாக மென்பொருள் பயன்பாடு மேம்பாடு, கிளவுட், மொபிலிட்டி, ஐஓடி(IoT) போன்ற பிரிவுகளில் தனது தகவல்தொழில்நுட்ப சேவைகளை இந்நிறுவனம் அளித்து வருகிறது. நிறுவனத்தின் மொத்த வருவாயில் நிதி சார்ந்த பிரிவின் மூலம் 36 சதவீதமும், தொலைத்தொடர்பு பிரிவு 29 சதவீதமும், போக்குவரத்து மற்றும் தளவாட பிரிவு 13 சதவீத வருவாயை கொடுக்கிறது. 

Saksoft Ltd - Financial - Fundamental parameters

நிறுவனத்திற்கு சென்னையை தவிர்த்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க பிராந்தியம் என மொத்தம் 15 அலுவலகங்கள் உள்ளன. நிறுவனத்தின் வருவாயில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பங்களிப்பு மட்டும் சுமார் 72 சதவீதம்.

சாக்சாப்ட் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 3,060 கோடி ரூபாய். நிறுவனர்களின் பங்களிப்பு 67 சதவீதமாகவும், அன்னிய நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 3.53 சதவீதமாகவும் உள்ளது. 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 762 கோடி ரூபாயாக இருந்துள்ளது. செலவினம் ரூ.644 கோடியாகவும், இயக்க லாப விகிதம்(OPM) 17 சதவீதமாகவும் உள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.128 கோடியாகவும், நிகர லாபம் 96 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி 16 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 21 சதவீதமாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) 21 சதவீதமாக உள்ளது. நிறுவனத்திற்கு கடன் பெரிதாக எதுவுமில்லை(D/E: 0.05 மடங்குகள்). வட்டி பாதுகாப்பு விகிதம் 31 மடங்குகளிலும், நிறுவனர்களின் சார்பில் பங்கு அடமானம் இல்லையென்பதும் கவனிக்கத்தக்கது.

மார்ச் 2024 முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 495 கோடி ரூபாயாக இருந்துள்ளது. நடப்பாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் 201 கோடி ரூபாயை வருவாயாகவும், நிகர லாபமாக ரூ.26 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நிறுவனம் தனது பங்கின் முகமதிப்பு விலையை(Face Value) 10 ரூபாயிலிருந்து ஒரு ரூபாயாக குறைத்துள்ளது. இது போக, தற்போது நடப்பு வாரத்தில் போனஸ் பங்குகளை (நான்கு பங்குகளுக்கு ஒரு பங்கு) இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

சாக்சாப்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமையகம் சென்னை பெருங்குடியில் குளோபல் இன்போசிட்டி பூங்காவில் அமைந்துள்ளது. இந்தியாவில் ஏழு அலுவலகங்களும், அமெரிக்காவில் ஐந்தும், இங்கிலாந்தில் இரண்டு மற்றும் சிங்கப்பூரில் இரு அலுவலகங்களையும் நிறுவனம் கொண்டுள்ளது. 

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

   

ஜிஆர்பி லிமிடெட் – பங்குச்சந்தை அலசல்

ஜிஆர்பி லிமிடெட் – பங்குச்சந்தை அலசல் 

GRP Limited – Fundamental Analysis – Stocks

கடந்த 1974ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்ட ஜிஆர்பி லிமிடெட்(Gujarat Reclaim & Rubber Products Ltd), பயன்படுத்தப்பட்ட டயர்களிலிருந்து ரப்பரை மீட்டெடுக்கும் பிரிவில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். இது போக நைலான் கழிவுகளில் இருந்த எடுக்கப்படும் பொருட்கள், பாலிமர் கலவை, மறுபயன்படுத்தப்பட்ட பாலியோல்ஃபின்ஸ், பொறியியல் பிளாஸ்டிக்குகள் மற்றும் டை (Custom Die Forms) படிவங்கள் என தனது தொழிலை விரிவாக்கம் செய்துள்ளது.

நிறுவனத்தின் பாலிமர் கலவை நூறு சதவீத மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், மரப்பொருட்களை விட வலுவாக மற்றும் நீடித்தவையாகவும் உள்ளன. இந்த தயாரிப்புகள் பெரும்பாலும் கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு, விமானப் போக்குவரத்து, கடல், தொழிற்துறை மற்றும் விவசாயத்துறைக்கு பயன்படுகிறது.

நிறுவனத்தின் பொறியியல் பிளாஸ்டிக் பிரிவு, வாகனத் துறைக்கு தேவையான உட்புற மற்றும் வெளிப்புற பயன்பாடுகளுக்கு உதவுகிறது. பாலியோல்ஃபின்ஸ் பிரிவு பெயிண்ட், எண்ணெய் மற்றும் வாகனப் பேட்டரி உறைகளுக்கு பயன்படுகிறது. டை படிவங்கள் பிரிவு வாகனங்களுக்கு தேவையான கதவு விரிப்புகள், இணைப்பு பாய்கள், தொழிற்துறை பாய்கள் மற்றும் கப்பல்துறைக்கு தேவையான பம்பர்களுக்கு பயன்படுகிறது. 

உலகளாவிய பாலிமர் துறையின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்நிறுவனத்தின் தயாரிப்பு பயன்படுகிறது. ஜிஆர்பி லிமிடெட் ஆண்டுக்கு சுமார் 81,200 மெட்ரிக் டன்களை கையாளும் திறன் கொண்ட ஏழு உற்பத்தி ஆலைகளை இந்தியாவில் நிறுவியுள்ளது. இதன் சேவைகள் 60க்கும் மேற்பட்ட நாடுகளிலும், 400க்கும் அதிகமான மதிப்புமிக்க வாடிக்கையாளர்களையும் நிறுவனம் கொண்டுள்ளது.

நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக குட்இயர், பிரிட்ஜ்ஸ்டோன், சியட், அப்பல்லோ டயர், பிர்லா டயர், எம்ஆர்எப், யோகோகமா, பிரேலி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. டயர் உற்பத்தி துறையில் உலகின் முன்னணியில் உள்ள முதல் பத்து நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள், ஜிஆர்பி நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிறுவனத்தின் மொத்த வருவாயில் டயர்களிலிருந்து மீட்டெடுக்கப்படும் ரப்பர் பிரிவின் பங்களிப்பு மட்டும் 94 சதவீதமாகும். நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் ஏற்றுமதி பங்களிப்பு மட்டும் சுமார் 70 சதவீதமாகும். மீட்டெடுக்கப்படும் ரப்பர் பிரிவில் நாட்டின் 18 சதவீத பங்களிப்பையும், ஏற்றுமதியில் நாட்டின் 40 சதவீத பங்களிப்பையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது.  

2023-24ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 461 கோடி ரூபாயாகவும், செலவினம் ரூ.411 கோடியாகவும் இருந்துள்ளது. இயக்க லாப விகிதம்(OPM) 11 சதவீதமாகவும், வரிக்கு முந்தைய லாபம் 30 கோடி ரூபாயாகவும் உள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனம் 23 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 

கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி 5 சதவீதமாகவும், கூட்டு லாப வளர்ச்சி 35 சதவீதமாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம் 0.68 மடங்கு என்ற அளவில் உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 5.5 மடங்குகளிலும், புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.1,251 என்ற விலையிலும் உள்ளது. நிறுவனத்தின் பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் சராசரியாக 7 சதவீதமாக இருக்கிறது.

நிறுவனர்களின் பங்களிப்பு 40 சதவீதமாகவும், பிற பொது முதலீட்டாளர்களின் பங்கு 60 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்களின் ஒட்டுமொத்த பங்களிப்பில் 0.19 சதவீதம் என்ற அளவில் பங்கு அடமானம் உள்ளது. 2024ம் ஆண்டின் மார்ச் மாத முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு 165 கோடி ரூபாயாக உள்ளது. நிறுவனத்தின் கடன்களில் குறுகிய கால கடன் ரூ.91 கோடியாகவும், நீண்டகால கடன் 22 கோடி ரூபாயாகவும் உள்ளது.

நிறுவனத்தின் பணப்பாய்வு(Cash Flow) ஒவ்வொரு ஆண்டும் சீராக வந்துள்ளது. அதே வேளையில் கடந்த சில வருடங்களாக நிறுவனம் அசையா சொத்துக்களில்(Fixed Assets) குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்து வருகிறது. 2023-24ம் நிதியாண்டு முடிவில் நிறுவனம் ஒரு பங்குக்கு ஈட்டிய வருவாய் ரூ.170 (Earning per Share) ஆகும். தற்போது இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஒன்றுக்கு ரூ.15,770 என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. 

கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 300 சதவீதத்திற்கும் மேலாக ஏற்றம் பெற்றுள்ளது. கடந்த 52 வார குறைந்தபட்ச விலை 3,417 ரூபாயாகவும், அதிகபட்ச விலை பங்கு ஒன்றுக்கு ரூ.16,746 ஆகவும் இருந்துள்ளது. தற்போது நிறுவனம் பங்கு ஒன்றுக்கு மூன்று பங்குகளை போனசாக(Bonus issue) வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான பதிவு நாள் வரக்கூடிய ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு சந்தையில் இந்நிறுவனத்தின் முக்கிய போட்டியாளர்களாக (பட்டியலிடப்பட்ட) எல்ஜி ரப்பர் கம்பெனி, இன்டாக் ரப்பர், ஆப்கோடெக்ஸ், மகாலட்சுமி ரப்டெக் மற்றும் இன்னபிற நிறுவனங்கள் உள்ளன.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ.12,105 கோடி

டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ.12,105 கோடி 

TCS reported a Net Profit of Rs.12,105 Crore – Q1FY25

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் மிகப்பெரிய நிறுவனமாகவும், டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமுமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் 2024-25ம் நிதியாண்டுக்கான முதலாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 62,613 கோடி ரூபாயாகவும், செலவினம் 45,951 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) 27 சதவீதமாக உள்ளது. இதர வருமானமாக 962 கோடி ரூபாயை சொல்லியிருந்த இந்நிறுவனம் முதலாம் காலாண்டின் முடிவில் ரூ.12,105 கோடியை நிகர லாப ஈட்டியுள்ளது. BFSI பிரிவில் 23,074 கோடி ரூபாயையும், உற்பத்தி பிரிவில் 6,271 கோடி ரூபாயையும், நுகர்வோர் தொழிற் பிரிவில் ரூ.9,991 கோடியையும் வருவாயாக பெற்றுள்ளது. தொடர்பு மற்றும் ஊடகப் பிரிவில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.10,794 கோடி மற்றும் மருத்துவப் பிரிவில் 6,909 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது.

நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் வட அமெரிக்காவிலிருந்து வந்துள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு ரூ. 15.14 லட்சம் கோடி. நாட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்தாற் போல் அதிக சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனம் டி.சி.எஸ். ஆகும். மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) 90,127 கோடி ரூபாய். 

நிறுவனத்தின் கூட்டு வருவாய் வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 10 சதவீதமாகவும், லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 72 சதவீதமாகவும், உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்களிப்பு 4.86 சதவீதமாகவும் உள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 82 மடங்குகளில் இருந்துள்ளது.

நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு மட்டும் சுமார் 13.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக கூகுள், அமேசான், அடோப், இன்டெல், ஆப்பிள், ஆரக்கிள், ஐபிஎம், பாஸ்ச் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை டி.சி.எஸ். நிறுவனத்திற்கு செலுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மட்டும் 50. பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் சராசரியாக 43.8 சதவீதமாக உள்ளது. 

டி.சி.எஸ். நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு இதுவரை மூன்று முறை ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் போனஸ் பங்குகளை அளித்துள்ளது. பங்குகளை திரும்பப் பெறும்(Buyback of Shares) செயல்பாடுகளை ஐந்து முறை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com