Category Archives: Investopedia

அவந்தி பீட்ஸ் – பங்குச்சந்தை அலசல்

அவந்தி பீட்ஸ் – பங்குச்சந்தை அலசல் 

Avanti Feeds – Fundamental Analysis – Stocks

1994ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் அவந்தி பீட்ஸ். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திரு. அல்லூரி வெங்கடேசுவர ராவ் அவர்களால் துவங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று இறால், மீன் ஊட்டங்கள், இறால் செயலி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமாக வலம் வருகிறது. ஆரம்ப காலத்தில் எஃகு, கரைப்பான்கள், உரம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் புகையிலை ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வந்த நிறுவனர் பின்னர் இறால் மீன் சார்ந்த தயாரிப்புகளில் களம் கண்டார்.

முக்கியமாக தாய் யூனியன்(Thai Union Group) நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் இறால் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருவது அவந்தி பீட்ஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு சாதகமாக இருந்துள்ளது. 1977ம் ஆண்டு துவங்கப்பட்ட தாய் யூனியன் குழுமம் தாய்லாந்து நாட்டை சேர்ந்த இறால், மீன் ஊட்டங்கள் மற்றும் பதப்படுத்துதலில் முன்னணி நிறுவனமாக உள்ளது.

இறால் மற்றும் மீன் தீவனங்களில் தொழில் செய்து வரும் தாய் யூனியன் குழுமம், கடல் சார்ந்த உணவு துறையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இறால் தீவனம் மற்றும் உறைந்த இறால் தயாரிப்புகளில்(Frozen Shrimp Producer) நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகவும், முன்னணி ஏற்றுமதியாளராகவும் அவந்தி நிறுவனம் உள்ளது.

ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தயாரிப்பு நிலையங்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. உள்நாட்டு தீவன வணிகத்தில் சுமார் 45 சதவீத பங்களிப்பை அவந்தி பீட்ஸ் நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளது. மீன் குஞ்சு பொரித்தல் மற்றும் இறால் பதப்படுத்துதலுக்காக முக்கிய நிலையங்களையும் இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

இதன் தயாரிப்புகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தீவனங்களுக்காக தனித்துவமான பிராண்டுகளையும் அவந்தி நிறுவனம் கொண்டுள்ளது.

கடல் சார்ந்த உணவுகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது. இது சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இறக்குமதி அளவை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. மீன் பிடித்தல் துறையில் நம் நாடு 2019-20ம் ஆண்டு முடிவில் சுமார் 141 லட்சம் டன் என்ற அளவில் தனது உற்பத்தியை கொண்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) மதிப்பில் 1.2 சதவீத பங்களிப்பை மீன் பிடிப்பு துறை பெற்றுள்ளது. நீண்ட பரப்பளவு, புதிய உணவு வகைகள், பெருகி வரும் உணவு தேவைகள் ஆகியவை மீன் உணவுக்கான சந்தையை நிர்ணயிக்கிறது. மீன் உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மாநிலங்கள் – ஆந்திரா, மேற்கு வங்காளம், குஜராத், கேரளா மற்றும் தமிழகம். கடந்த 2019ம் ஆண்டு முதல் மீன் பிடிப்பு துறை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 1961ம் ஆண்டு வாக்கில் தனிநபர் ஒருவருக்கு, ஆண்டுக்கு 9 கிலோ என்ற அளவில் இருந்த நுகர்வு, 2018ம் ஆண்டில் 20.5 கிலோ என வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக இறால் பண்ணைகள் சார்ந்த உணவுக்கான தேவை இன்று அதிகரித்து வருகிறது.

உலகளாவிய காலநிலை மாற்றம், கடல் சார்ந்த எல்லை பிரச்சனைகள், புதிய உணவு தேவைகள் ஆகியவை பண்ணைகள் மற்றும்  கடற் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அவந்தி பீட்ஸ்(Avanti Feeds) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6,600 கோடி. இதன் புத்தக மதிப்பு ரூ.119 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 334 மடங்குகளாகவும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன்(Debt Free) எதுவும் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 44 சதவீதமாகவும், அன்னிய முதலீட்டாளர்களின் பங்களிப்பு 17 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. அன்னிய முதலீட்டாளர்களில் தாய் யூனியன் குழும நிறுவனம் 9 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

பொது பங்களிப்பில்(Public Holding) சுமார் 15 சதவீத பங்குகளையும் இந்நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. அரசு சார்பில், ஆந்திர அரசு சுமார் 3 சதவீத பங்குகளை(Andhra Pradesh Industrial Development Corporation) கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது. 2019-20ம் நிதியாண்டில் அவந்தி பீட்ஸ் நிறுவனம் ரூ.4,115 கோடியை வருவாயாகவும், 377 கோடி ரூபாயை நிகர லாபமாகவும் ஈட்டியுள்ளது. விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 19 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

லாப வளர்ச்சியும் கடந்த ஐந்து வருட கால அளவில் 24 சதவீதமாக உள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் 34 சதவீதமாகவும், 10 வருட கால அளவில் 35 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு ரூ.1,603 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash flow Positive) நன்றாக உள்ளது.

இறால் இறக்குமதியில் அமெரிக்கா 26 சதவீதமும், ஐரோப்பிய யூனியன் 23 சதவீதமும், வியட்நாம் 12 சதவீதமும், ஜப்பான் 10 சதவீதம் மற்றும் சீனா 8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இறால் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்திலும், அதன் ஏற்றுமதியில் முதலிடத்திலும் உள்ளது. கொரோனா காலம் தவிர்த்து காணும் போது, இந்த துறைக்கான தேவையும், வாய்ப்புகளும் அதிகம்.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இனி வாரத்திற்கு நான்கு வேலை நாட்கள் சாத்தியமா, தொழில்முனைவு இனி அவசியமா ?

இனி வாரத்திற்கு நான்கு வேலை நாட்கள் சாத்தியமா, தொழில்முனைவு இனி அவசியமா ?

4 Day work Week – Necessity of Entrepreneurship in the New Normal

கடந்த 2020ம் வருட ஏப்ரல் மாதத்தின் 18ம் தேதியன்று எனது வாடிக்கையாளர்கள் மற்றும் வாசகர்களுக்கான இணைய வழி சந்திப்பு(Webinar) ஒன்றை ஏற்படுத்தியிருந்தேன். சரியாக அது கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு காலமாகும்.

அதற்கு சில வாரங்களுக்கு முன்பு, நானும் சில தொழிலதிபர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்களின் உரையாடல் மூலம் சில சிந்தனைகளை பெற்றிருந்தேன். இதன் பின்பு, எனது வாடிக்கையாளர்களிடம் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலம் மனித வாழ்வில் புதிய நகர்வாக இருக்கக்கூடும் என சொல்லியிருந்தேன்.

நான் சந்திப்பை ஏற்படுத்திய நிகழ்விலும் அதனை தான் கூறியிருந்தேன். வாசகர்கள் சிலர், ‘அப்படியெல்லாம் நடந்து விடாது சார், கொரோனாவுக்கு பின்னர், நாம் முன்னர் இருந்த சாதாரண வாழ்க்கை திரும்ப வந்து விடும்’ என கூறினார்கள். ஆனால் நான் குறிப்பிடத்தக்க தொழிலதிபர்களிடம்(வல்லரசு நாடு உட்பட அயல்நாட்டில் தொழில்புரிந்தவர்களும்)  அவர்களின் சிந்தனையில் அறிந்த போது, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலம் உறுதியாக புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பினேன். பலருடைய வாழ்வில் மிகப்பெரிய ஏற்ற-இறக்கத்தை இனிவரும் காலங்கள் ஏற்படுத்தும் என்ற புரிதலுக்குள் முனைந்தேன். முக்கியமாக, அமெரிக்காவில் வாரத்திற்கு 40 மணிநேரம் மட்டுமே(5 நாட்கள் X 8 மணிநேரம்) இருந்த பணியாளர் வேலை நேரம் இனி வாரத்திற்கு 30 மணிநேரத்திற்கு குறைவாகவோ அல்லது வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை இருக்கலாம் என அமெரிக்க தொழிலதிபர் ஒருவர் கூறியிருந்தார். இந்த நிலை இந்தியாவிலும் வரக்கூடும், ஆனால் அதற்கான காலம் தாமதமாகலாம் என கூறினார். இதற்கான காரணமாக தொழில்நுட்பங்களும், அதனை சார்ந்த செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்ட வளர்ச்சியும் தான் சொல்லப்பட்டன.

இதன் வாயிலாக நானும் சில விவரங்களை தொகுத்த ஆரம்பித்தேன். அதனை  வாடிக்கையாளர் சந்திப்பின் தொகுப்பாகவும் இணைத்தேன். அவற்றின் சுருக்கம்…

2020ம் ஆண்டுக்கு பிறகான சவால்கள்:
  • சமூக இடைவெளி என்பது இனி புதிய வாழ்வியல் நிலையாக இருக்கும்.
  • பல துறைகளில் இடையூறு மற்றும் வெற்றிடம் – புதுமை புகுதல்
  • ஆட்டோமேஷன் – செயற்கை நுண்ணறிவு
  • வரி விதிப்புகள்
  • சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்கான தேவை
  • சுற்றுச்சூழல் பிரச்சனைகள்
வாய்ப்புகள்: 
  • மினிமலிசம் – குறைவாக செலவழித்தல் மற்றும் நிறைவான வாழ்வு
  • பல்வேறு வேலைவாய்ப்புகள் (தற்சார்பு வாழ்வு, தொழில்முனைவு)
  • புதிய மற்றும் பல முதலீட்டு சாதனங்களும், வாய்ப்புகளும்
  • உணவுக்கான புரட்சி (விவசாயத்தின் தேவை)
  • நிலைத்தன்மை வாழ்க்கை(Sustainability Living)
புதிய உதயம்:
  • பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்த வாழ்க்கை நகர்வு
  • போதுமான நேரம் இருத்தல் (உங்களுக்கு பிடித்த வேலைகளை செய்தல், குடும்பத்துடன் நேரம் செலவழித்தல்)
  • சிந்தனைக்கு உணவு
  • தொழில்முனைவோர் வாழ்க்கை – இனி வழக்கமான வேலை இல்லை.

மேலே சொன்னவற்றை கண்டு நாம் பயப்படவோ, நகைப்புக்குரியதாகவோ எடுத்து கொள்ள வேண்டாம். இவை கணிப்புகள் அல்ல… பெரும்பாலான உலக பொருளாதாரத்தின் நகர்வுகள் !

அடுத்தகட்ட நகர்வுக்கு செல்லும் முன்னர் பொருளாதாரம் சார்ந்த பாதுகாப்பை பெற போதுமான டேர்ம் காப்பீடு, குடும்பத்திற்கான மருத்துவ காப்பீடு, அவசரகால நிதி, ஓய்வு காலத்திற்கான கார்பஸ் தொகை மற்றும் ஏற்கனவே உள்ள கடன்களை பெரும்பாலும் குறைத்தல் அல்லது கடனில்லா நிலை – இவ்வைந்தையும் உங்கள் வாழ்வில் உறுதி செய்து கொள்ளுங்கள்.

வரும் நாட்களில் தொழில்முனைவுக்கான தேவை அதிகமாக இருக்கும். நீங்கள் காப்பீடு ஏஜெண்டாக இருந்தாலும் பரவாயில்லை, இணைய வழி பொருட்களை விற்கும் தொழிலை கொண்டிருந்தாலும் பரவாயில்லை. வரும் நாட்கள், புதிய மாற்றத்தை கொண்டிருக்கும்.

குறிப்பு:

வாரத்திற்கு 48 மணிநேரமாக இருந்த தொழிலாளர்களுக்கான வேலை நேர வரம்பு, இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்தால் போதும். அதாவது வாரத்தில் ஊதியத்துடன் கூடிய மூன்று நாட்கள் கட்டாய விடுப்பு. நாளொன்றுக்கு 12 மணிநேர வேலை என்பது இனி ஊழியர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் அனைத்து நாட்களிலும் இனி வேலை செய்ய முடியாது – மத்திய தொழிலாளர் அமைச்சகம் விரைவில் சட்டமாக்க உள்ள தகவல்

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வேளாண்மை – கோழி – மீன் வளர்ப்பு நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய விருப்பமா ? பங்குச்சந்தை அலசல்

வேளாண்மை – கோழி – மீன் வளர்ப்பு நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய விருப்பமா ? பங்குச்சந்தை அலசல் 

Agriculture – Poultry – Aquaculture – It’s Stock Insights

பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் பொதுவாக பிரபல நிறுவனங்களிலும், அதிகம் அறியப்பட்ட துறைகளிலும் முதலீடு செய்வது வழக்கம். தேசிய பங்குச்சந்தையான நிப்டி(Nifty50) குறியீட்டில் அதிக பங்களிப்பை கொண்டிருக்கும் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள். இதன் பங்களிப்பு 26.17 சதவீதமாக உள்ளது. தகவல் தொழில்நுட்பம் 21.50 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயு 14.83 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.

வாகன துறை 6.19 சதவீதமாகவும், நீடித்தது அல்லாத நுகர்வோர் துறை(Consumer Non-durables) 5 சதவீதமும் மற்றும் மருந்து துறை 3.37 சதவீதமாகவும் உள்ளது. தொலைத்தொடர்பு துறை(Telecom) 2.78 சதவீதத்தையும், பொறியியல் துறை 2.65 சதவீதத்தையும் கொண்டுள்ளது. இது போல உலோகங்கள் மற்றும் சுரங்க தொழில், ரசாயனம் ஆகிய துறைகள் முறையே 2.65 % மற்றும் 2.59 % பங்களிப்பை உள்ளடக்கியுள்ளது.

இதர பங்களிப்பில் புகையிலை(2.3 %), உணவு மற்றும் குளிர்பானங்கள்(2.27%), சிமெண்ட் மற்றும் கட்டுமானம்(2.17%), மற்ற பயன்பாடுகள்(Utilities) உள்ளன. பங்குச்சந்தை குறியீட்டில் அதிக பங்களிப்பை கொண்டிருக்கும் வங்கித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் அனைத்து முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் துறைகளாக காணப்படுகிறது.

ஆனால் உண்மையில் அவை முதலீட்டாளர்களுக்கு, மற்ற துறைகளை காட்டிலும் நீண்டகாலத்தில் முதலீட்டு வருவாயை அளித்துள்ளதா ?

சுழற்சி முறை(Cyclical) மற்றும் பருவ கால தொழிலை செய்யும் துறைகள் ஏன் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை ?

விவசாயம், விவசாயி, உணவு தேவை ஆகியவற்றை சொல்லும் பொது உலகம் வேளாண்மை, கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு தொழிலுக்கு போதுமான முதலீட்டை கொடுத்துள்ளதா ?

வேளாண்மை, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு தொழில் செய்யும் நிறுவனங்களில் நீங்கள் முதலீடு செய்ததுண்டா, இவற்றில் நீண்டகாலத்தில் லாபம் பார்ப்பது எப்படி ?

வாருங்கள், வரும் சனிக்கிழமை(13-02-2021) மாலை 05:15 மணிக்கு இணையம் வழியாக பேசுவோம்…

பதிவுக்கு,

Stock Insights(Premium Investing) – Registration

மூன்று துறைகள், ஐந்து வாரங்கள்(சனிக்கிழமைகளில்), பத்து நிறுவன பங்குகள் – அடிப்படை அலசல்.

இங்கே எந்த பங்குகளுக்கான பரிந்துரையும் சொல்லப்படாது. (Disclaimer பிரிவை வாசிக்கவும்). இது பங்கு தொழில் சார்ந்த ஒரு அடிப்படை அலசல் மட்டுமே.

கட்டணம்: ரூ. 499 மட்டும் 

பதிவுக்கு பின், இணைப்பு(Webinar) சார்ந்த விவரங்கள் உங்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்சாப் செயலிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் என்னென்ன ?

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் என்னென்ன ?

PSU(Public Sector) Companies in the Indian Stock Market

பங்குச்சந்தை முதலீடு என சொன்னவுடன் பலருக்கு பணப்பாதுகாப்பை பற்றிய கேள்வி இருக்கும். நாம் நித்தமும் நாளிதழ்களில்(வணிக பக்கத்தில்) காணும் செய்தி மூன்று – பங்குச்சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மற்றும் தங்கத்தின் விலை ஏற்ற-இறக்கம். அனைத்து செய்தி ஊடகங்களிலும் இந்த மூன்றை பற்றிய தகவல் வராத நாட்கள் இல்லை எனலாம்.

இந்திய பங்குச்சந்தையின் வரலாறு சுமார் 150 வருடங்களுக்கு மேல். அப்படியிருந்தும், பங்குச்சந்தையின் மீதான பயத்தின் காரணம் என்ன ? சரியான விழிப்புணர்வும், தேவையான தகவலும் பகிரப்படாதது தான். நாம் இன்று நாள்தோறும் காணும் எந்தவொரு பொருளோ அல்லது சேவையோ, பங்குச்சந்தையில் உள்ள நிறுவனத்தை சார்ந்ததாக தான் இருந்திருக்கும். காலை பல் துவக்குவது முதல் இரவு தூக்கம் வரை, உங்கள் வாழ்வில் நுகரும் அத்தனை சேவையும் சந்தையை கடந்து தான் போக வேண்டும்.

உண்மையில் பங்குச்சந்தையில் பணப்பாதுகாப்பு இல்லையா ?

உங்களிடம் அப்படி யார் சொன்னது ? அரசாங்கம் சொன்னதா அல்லது நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் சொல்லியதா ?

பங்குச்சந்தை என்பது தொழில் சார்ந்த களம். தொழில் செய்யும் நிறுவனங்கள் பல  தங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டை ஈர்க்க பங்குச்சந்தைக்கு வரும். அங்கே யார் வேண்டுமானாலும், அவர்களுக்கு பிடித்த நிறுவன பங்குகளை வாங்கலாம். எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஆனால் பணத்திற்கான பாதுகாப்பு ?

ஆம், பாதுகாப்பு இல்லையென்றால் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் அங்கே இருக்க கூடாது அல்லவா ! உங்கள் அரசாங்கமும், உங்களது சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறதே !

பங்குச்சந்தை என்பது ஒரு முதலீட்டு சாதனம். முதலீடு என்றாலே ரிஸ்க் தன்மை கொண்டது தான். ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் தொழில் புரிவது போல. தங்கத்தின் ஏற்ற-இறக்கத்தை பற்றி நீங்கள் நித்தமும் கவலை கொள்வீர்களா ? அப்புறம் ஏன், பங்குச்சந்தையில் மட்டும் உங்களிடம் ஒரு வினோத போக்கு காணப்படுகிறது. தக்காளி விலை இறங்கினால் உங்களுக்கு மகிழ்ச்சி தானே, விவசாயிக்கு தான் சற்று பொருளாதார இழப்பு இருக்கும். உங்களுக்கு விலை குறைவாக கிடைத்தால் லாபம் தானே, நல்ல தக்காளியை வாங்க பழக வேண்டும். அவ்வளவு தான் பங்குச்சந்தையில்.

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் பாதுகாப்பானது தானா ? உண்மையில் பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டவை தான். தீர்வு என்னவென்றால், ரிஸ்க் தன்மை கொண்டது தான் முதலீடு, அதனால் மட்டுமே உங்களால் நீண்டகாலத்தில் செல்வவளத்தை பெருக்க முடிகிறது – தங்கத்தில், வீட்டுமனையில், தொழிலில் மற்றும் பங்குச்சந்தையிலும். ஆனால் நாம் பங்குச்சந்தையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்றால் ஒரு ரியல் எஸ்டேட் அதிபரை போல, நகைக்கடை உரிமையாளரை போல, ரம்மி விளையாடுவது போல. அது உங்கள் வேலையல்ல… நீங்கள் ஏற்கனவே பார்க்கும் வேலையை பார்த்து கொண்டு அல்லது தொழிலை செய்து கொண்டு, உங்களிடம் உள்ள உபரி தொகையை(Surplus cash to wealth) சிறுக சிறுக முதலீடு செய்து நீண்டகாலத்தில் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்துவதே. ஆனால் நாம் பங்குச்சந்தையில் நுழைந்தவுடன் ஒரு அனுபவம் கொண்ட மருத்துவரை போல செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அடிப்படை கற்றலை நாம் மேற்கொள்வதில்லை.

அம்பானி, அதானியை போல மாற வேண்டுமென்று வெறும் ஆறு மாதங்களில் அல்லது சில வாரங்களில் அடைய முயற்சிக்கிறோம். அவர்கள் பங்குச்சந்தையில் கிடைக்கப்பெறும் முதலீட்டை கொண்டு தொழில் தான் செய்து வருகின்றனர். நீங்கள் உங்களது கடினமான உழைப்பால் கிடைத்த ஊதியத்தை கொண்டு, சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பது நல்லதல்ல. இன்னும் சிலரோ பங்குச்சந்தையை பகுதி நேர வேலையாகவும்(Day Trading), அதன் மூலம் வருவாய் நிறைய கிடைக்கப்பெறும் எனவும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

பொதுவாக பங்குச்சந்தையில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பை விட, தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும், அதன் செயல்பாடுகளும் அதிகம். பொதுத்துறை நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு தேவையான டிவிடெண்ட் தொகையை அளித்து வரும் நிலையில், ஈவுத்தொகையை(Dividend) மட்டுமே கருத்தில் கொள்வோர், தங்களது போர்ட்போலியோ பிரிவில் சிறிய அளவில் இது போன்ற பங்குகளை வைத்து கொள்ளலாம். ஆனால் அவை பெரும்பாலான சமயங்களில் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தாது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் பொதுத்துறை நிறுவனங்களில் தான் முதலீடு செய்ய வேண்டுமென எண்ணினால், 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குச்சந்தையில் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்கள் மகாரத்னா, நவரத்னா, மினிரத்னா என பிரிக்கப்பட்டுள்ளன.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் 45 மத்திய பொதுத்துறை நிறுவனங்களும், 12 பொதுத்துறை வங்கிகளும், மாநில அளவில் ஒரு நிறுவனமும் மற்றும் பிற பிரிவின் கீழ் ஒரு நிறுவனமும் உள்ளது. வங்கிகள் பிரிவில் எஸ்.பி.ஐ., கனரா வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சாப் நேஷனல், யூனியன் வங்கி, சென்ட்ரல் பேங்க் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் பங்குச்சந்தையில் உள்ளன.

இந்திய ரயில்வே சார்பில் ரைட்ஸ் லிமிடெட், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட்(RVNL), இர்கான்(IRCON), ஐ.ஆர்.சி.டி.சி., கன்கார்(Concor), ஐ.ஆர்.எப்.சி. போன்ற நிறுவனங்கள் உள்ளன. நடப்பு வருடத்தில் ரயில்வேயின் ரயில் டெல் நிறுவனமும் இணைய உள்ளது.

எண்ணெய் நிறுவனத்தில் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம்(HPCL), சென்னை பெட்ரோலியம், மங்களூரு பெட்ரோ கெமிக்கல், ஆயில் இந்தியா, ஓ.என்.ஜி.சி., கெயில், பால்மர் லாரி(Balmer Lawrie), என்ஜினீயர்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்கள் பொதுத்துறை பிரிவில் உள்ளன.

எரிசக்தி துறையில் எஸ்.ஜே.வி.என்.(SJVN), பவர் கிரிட், தேசிய வெப்ப மின் நிறுவனம்(NTPC), என்.எல்.சி.(NLC), என்.எச்.பி.சி.(NHPC), ரூரல் எலக்ட்ரிக்(REC) ஆகிய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

உலோகம் மற்றும் சுரங்க தொழிலில் கோல் இந்தியா, இந்துஸ்தான் காப்பர், எம்.எம்.டி.சி., மாயில்(MOIL), என்.எம்.டி.சி.(NMDC), செயில்(Steel Authority of India), குஜராத் மினரல், மிதானி, தேசிய அலுமினிய நிறுவனம் போன்ற நிறுவனங்களும், கனரக பொறியியல் துறையில் பெம்மல்(BEML), பாரத் டைனமிக்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், பெல்(BHEL), இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் ஐ.டி.ஐ. நிறுவனமும் உள்ளது.

கப்பல் போக்குவரத்து துறையில் சில பொதுத்துறை நிறுவனங்களும் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 250க்கும் மேற்பட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் நிலையில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 25 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வருடங்களாக அரசு துறையில் உள்ள நிறுவனங்களில் பங்கு விலக்கல் நடவடிக்கையும் மத்திய அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நட்டத்தில் இயங்கும் நிறுவன பங்குகளை அரசு குறைத்து வருவது கவனத்தில் கொள்ள வேண்டியவை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உங்கள் சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வரி எவ்வளவு ?

உங்கள் சேமிப்புக்கும், முதலீட்டிற்குமான வரி எவ்வளவு ?

Tax… Taxi… Taxman – Know about your Tax !

நவீன காலத்தில் சம்பாதிப்பது மட்டுமே ஒரு வேலையாக இருக்க முடியாது. சம்பாதித்த வருவாயில் சரியான சேமிப்பை ஏற்படுத்தவில்லை எனில், பின்னாளில் பொருளாதாரம் சார்ந்த சிக்கலை சந்திக்க நேரிடும். ‘கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு’, ‘கூழ் ஆனாலும் குளித்துக் குடி’ என நம் மூதாதையர்கள் சொன்னது சுகாதாரத்தையும், சிக்கனத்தையும் பேணி காப்பதை தான்.

சேமிப்பும், முதலீடும் நம் பண்பாட்டு வாழ்க்கையில் கலந்த ஒன்று. அவசர காலத்திற்கு தேவையான உணவுப்பொருட்களை(கோயில் கலசத்திலும்)  அப்போதைய காலத்தில் நாம் சேமிக்க பழகி விட்டோம். வெள்ளமும், பஞ்சமும் வந்த போது, அது நமக்கு உதவியது.  இன்று நீங்கள் சேமித்தால், உங்கள் சேமிப்பு முதுமை காலத்தில் உங்களை பாதுகாக்கும். ஆனால் புறவுலகில் இன்று காணப்படும் பொருட்களின் மீது நம் ஈடுபாடு அதிகமாக காணப்பட்டு, நமக்கு தேவையில்லாத பொருட்களையும் வீட்டில் வாங்கி குவித்து வருகிறோம். இதன் காரணமாக செலவுகள் மட்டுமில்லாமல் வரியாக விரயம் செய்வதும் அதிகமாக உள்ளது.

ஆம், தனிநபர் வருவாய் பெறுவோர் நம் நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக தனது ஒட்டுமொத்த வருவாயில் 60 சதவீதத்தை வரியாக மட்டுமே செலுத்தி வருகிறார்கள். இதுவே குடும்பத்தில் உள்ள அனைவரும் வேலைக்கு செல்லும் நிலையில் அதனை எண்ணி பாருங்கள். இது நேரடி வரி மற்றும் முறைமுக வரியாக (Inclusive of GST) அமைந்துள்ளது. வருவாய் அதிகமாக பெறுபவர்களை காட்டிலும் வரி ஏய்ப்பு செய்பவர்களையும், வருமான வரி தாக்கல் செய்யாதவர்களையும் தான் அரசு கவனித்து வருகிறது.

வரியை நாம் முழுவதுமாக தவிர்க்க முடியாது. அதே வேளையில் வருமான வரி சட்டத்தின் கீழ் வழங்கப்படும் வரிச்சலுகைகளை திறமையாக பயன்படுத்தி, நேர்மையான முறையில் வரி சேமிப்பு செய்வது மட்டுமில்லாமல் சரியான நேரத்தில் வருமான வரி தாக்கல் செய்வதும் தனிநபர் ஒருவரின் கடமையாகும். அதற்காக வரி சேமிக்கிறேன் என தேவைப்படாத நிலையில் வீட்டுக்கடனை(Housing loan) வாங்கி விட்டு நிதி சிக்கலில் மாட்டிக்கொள்ள கூடாது. உங்களுக்கான தேவை இருத்தல் வேண்டும்.அதனை வாய்ப்பாக கொண்டு வரி சேமிப்பும் இருக்க வேண்டும்.

  • சேமிப்பு, முதலீடு – இரண்டும் ஒன்றா ?
  • வரி பிடித்தம் இல்லையென்றாலும், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா ?
  • பங்குச்சந்தையில் நீங்கள் முதலீடு செய்கிறீர்களா – அது தொழில் வருவாயாக கணக்கிடப்படுவது உங்களுக்கு தெரியுமா ?
  • அஞ்சலக சேமிப்பு மற்றும் வங்கி டெபாசிட் – வரி எவ்வளவு ?
  • நீங்கள் பங்கு வர்த்தகம் செய்யக்கூடாது – யார், யாருக்கு ?
  • பங்கு முதலீட்டில் அரசு பணியாளர்களுக்கான எச்சரிக்கை
  • சிறு சேமிப்புத்திட்டம்(Postal and Bank Savings) உங்களுக்கு நீண்டகாலத்திற்கு உதவாது – ஏன் ?
  • 2020-21ம் நிதியாண்டுக்கான வருமான வரி எப்படி ?
  •  வருமான வரியை எப்படி கணக்கிட வேண்டும் ?

வாருங்கள், வரும் சனிக்கிழமை(09-01-2021) மாலை 05:30 மணிக்கு இணையம் வழியாக பேசுவோம்…

பதிவுக்கு:

Taxman Webinar – Registration

கட்டணம்: ரூ. 100 மட்டும்

நாள் மற்றும் நேரம்: 09-01-2021 & மாலை 05:30 – 06:30

பதிவுக்கு பின்னர் உங்களுக்கான இணைப்பு (Webinar Link) மின்னஞ்சல் மற்றும்  குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் – பங்குச்சந்தை அலசல்

எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் – பங்குச்சந்தை அலசல் 

SBI Life Insurance – Fundamental Analysis – Stock Market

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ.(State Bank of India) நிறுவனமும், பிரெஞ்சு நாட்டு வங்கி குழுமமான பி.என்.பி. பரிபாஸ்(BNP Paribas) நிறுவனமும் கூட்டாக சேர்ந்து துவக்கிய தனியார் நிறுவனம் தான் எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ். உலகின் 43வது மிகப்பெரிய வங்கியாக நம் நாட்டின் எஸ்.பி.ஐ. உள்ளது. பி.என்.பி. பரிபாஸ் நிறுவனம் சொத்துக்கள் அடிப்படையில் உலகின் எட்டாவது மிகப்பெரிய வங்கியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2001ம் ஆண்டு துவங்கப்பட்ட எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாரத ஸ்டேட் வங்கி 55 சதவீத பங்குகளையும், பி.என்.பி. நிறுவனம் 5 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது. பி.என்.பி. நிறுவனம் முன்னர் 22 சதவீத பங்குகளை கொண்டிருந்தது கவனிக்கத்தக்கது. அன்னிய முதலீட்டாளர்களிடம் சுமார் 26 சதவீத எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் உள்ளது.

காப்பீட்டு துறையில்(Insurance Sector) இயங்கும் இந்நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 947 நேரடி அலுவலகங்களும், 28,000 பங்களிப்பு கிளைகளும் உள்ளன. நிறுவனத்தில் சுமார் 17,000 பணியாளர்களும், 1,50,000 காப்பீட்டு ஏஜெண்டுகளும் சேவை செய்து வருகின்றனர். பல கார்ப்பரேட் நிறுவனங்களிலும், வங்கிகளிலும் இதன் காப்பீடு சேவை வழங்கப்பட்டு வருகிறது.

2017-18ம் ஆண்டு அறிக்கையின் படி, இந்த நிறுவனம் ரூ.1 லட்சம் கோடிக்கு  மேற்பட்ட சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. கடந்த 2019-20ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் மொத்த எழுதப்பட்ட பிரீமியத்தின்(Gross written Premium) மதிப்பு 30,000 கோடி ரூபாய். தனியார் காப்பீட்டு துறையில் கடந்த ஆண்டின் சிறந்த நிறுவனமாகவும் எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் சொல்லப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.90,000 கோடி. காப்பீட்டு துறையில் சேவை புரிந்து வருவதால், நிறுவனத்திற்கான கடன் எதுவுமில்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 60 சதவீதமாகவும், நிறுவனர்கள் சார்பில் பங்குகள் எதுவும் அடமானம் வைக்கப்படவில்லை.

கடந்த ஐந்து வருடங்களில் நிறுவனத்தின் விற்பனை 13 சதவீதமாகவும், லாபம் 12 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(Return on Equity) ஐந்து வருட காலத்தில் 18 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2019-20ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 43,798 கோடி ரூபாயாகவும், செலவினம் 42,438 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,422 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு ரூ.8,663 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. மொத்த மூலதனத்தின் மீதான வருவாயும் இந்த நிறுவனத்திற்கு நன்றாக உள்ளது. பொதுவாக காப்பீட்டு துறையில் பொதுத்துறை நிறுவனங்களை விட, தனியார் நிறுவனங்களின் செயல்பாடு பங்கு முதலீட்டாளர்களுக்கு சாதகமான அம்சமாக உள்ளது. துரிதமான சேவை, காப்பீட்டுக்கான தேவை அதிகரித்து வருவது மற்றும் தொடர் வளர்ச்சி ஆகியவை எஸ்.பி.ஐ. லைப் நிறுவனத்திற்கு உள்ளது. பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை விலை பங்கு ஒன்றுக்கு 900 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது. பணப்பாய்வு முறைப்படி(DCF Valuation) இந்த பங்கு ஒன்றின் விலை ரூ.1000 என்ற மதிப்பை பெறுகிறது. பங்கு முதலீட்டை பரவலாக்கம்(Sector Diversification) செய்ய விரும்புவோர் இது போன்ற காப்பீட்டு துறையில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதை ஒரு உத்தியாக கையாளலாம். எதிர்காலத்தில் இந்த துறைக்கான தேவையும் அதிகமாக உள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

உங்களுக்கான பாதுகாப்பு விளிம்பு(Margin of Safety) என்ன ?

உங்களுக்கான பாதுகாப்பு விளிம்பு(Margin of Safety) என்ன ?

What is your Margin of Safety ?

Margin of Safety’ என சொல்லப்படும் பாதுகாப்பு விளிம்பு, பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகளுக்கு மட்டுமல்ல. நாம் நித்தமும் சந்திக்கும் நிகழ்வுகளிலும் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை சார்ந்த விஷயங்கள் நமக்கு தேவைப்படுகின்றன. உடல்நலம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்களை நாம் அணுகும் போது, இந்த விஷயத்தை நாம் முன்னரே செய்திருக்கலாமோ என்ற கேள்வியும் எழுவதுண்டு.

‘சிறு துளி பெரு வெள்ளம்’, ‘வரும் முன் காப்போம்’ போன்ற வரிகளை நாம் பல காலங்களாக கேட்டு கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் நடைமுறையில் அதனை செயல்படுத்த தவறி விட்டு, பின்பு சிக்கலில் மாட்டி கொள்கிறோம். பின்வரும் விஷயங்களில் உங்களது நடப்பு நிலை என்ன என்பதனை நீங்களே பரிசோதித்து கொள்ளுங்கள்.

  • உங்களுக்கோ அல்லது உங்களது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கோ எதிர்பாராத விதமாக உடல்நலம் அல்லது நிதி சார்ந்த சிக்கல்கள் ஏற்பட்டால், அதனை களைய உங்களிடம் உள்ள உடனடி தீர்வு என்ன ?
  • நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வேலை அல்லது உங்களது தொழில் உங்களை விட்டு போய் விட்டால், நீங்கள் வைத்திருக்கும் அடுத்த திட்டம் என்ன ? 
  • வேலையிழப்பு நாட்களை பற்றி யோசித்தது உண்டா, அப்படியெனில் உங்களிடம் அவசர தேவைக்கு போதுமான நிதி ஆதாரம் உள்ளதா ?
  • உங்களது அனைத்து காலத்திற்கான(All time prevention mode), ‘வரும் முன் காப்போம்’ உத்தி என்ன ?
  • பாதுகாப்பான முதலீடு என நாம் பல காலமாக ஒரே இடத்தில் சேமித்து வைத்துள்ளோம். பணவீக்கம் அதிகரித்து வருகிறது. நீங்கள் எதிர்பார்த்த மற்றும் உங்கள் இலக்குகளை அடைவதற்கான தொகை கிடைக்காமல் போகலாம். மாற்று திட்டம் எதுவும் வைத்துள்ளீர்களா ?

பொதுவாக நமக்கு முன் உள்ள பாதுகாப்பு கவசமாக காப்பீட்டு திட்டங்கள் (Insurance – ஆயுள், மருத்துவம் மற்றும் விபத்து) உள்ளன. நமது அசையா சொத்துக்களுக்கும் காப்பீட்டை எடுத்து கொள்ளலாம். நிதி இலக்குகளுக்கும், நமது வயதுக்கு தகுந்தாற் போல் ஏற்படும் கட்டாய தேவைகளுக்கும் நாம் சேமித்து வைக்கலாம். பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெற முதலீட்டை மேற்கொள்ளலாம்.

நமக்கு முன் உள்ள முதலீட்டு வாய்ப்பாக நிலம், தொழில், பங்குகள், கடன் பத்திரங்கள், வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கிடைக்கப்பெறும் சிறு சேமிப்பு திட்டங்கள், பணப்பயிர்கள், ரொக்கம் ஆகியவை. (கவனிக்க: நாள் வணிகம் மற்றும் மெய்நிகர் நாணயம் போன்ற ஊக செயல்பாடுகள் முதலீடு அல்ல. அவற்றில் எச்சரிக்கை தேவை)

பணவீக்கத்தையும், முதலீட்டில் உள்ள ரிஸ்க் தன்மையையும் குறைத்து (தவிர்க்க இயலாது) நீண்டகாலத்தில் அதனை நல்ல வருவாயாக மாற்ற, அஸெட் அலோகேஷன்(Asset Allocation) மற்றும் பல்வகைப்படுத்துதல்(Diversification) அவசியம்.

இப்போது சொல்லுங்கள், உங்களுக்கான பாதுகாப்பு விளிம்பு என்ன ?

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2021ம் ஆண்டு வரவிருக்கும் புதிய ஐ.பி.ஓ. முதலீடு – என்ன செய்யலாம் ?

2021ம் ஆண்டு வரவிருக்கும் புதிய ஐ.பி.ஓ. முதலீடு – என்ன செய்யலாம் ?

Are you ready to invest in the upcoming IPO ? (IPO Mania 2021)

நடப்பு வருடத்தில் பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியையும், அதற்கடுத்தாற் போல் வரலாற்றில் இல்லாத வெகு குறைவான காலத்தில் மீண்டு வந்ததையும் பார்த்திருப்போம். உலக பொருளாதார மந்தநிலை இன்னும் சரிசெய்யப்படாத நிலையில், வளர்ந்த நாடுகளின் கடன் தன்மை(Debt) அதிகரித்து வரும் நிலையில் பங்குச்சந்தைகள் மட்டும் எப்படி வெற்றி நடைபோடுகின்றன ?

2020ம் வருடத்தின் துவக்கத்தில் மந்தநிலையை சந்தித்து வந்த பங்குச்சந்தை, மார்ச் மாத வீழ்ச்சியில் பல பங்கு முதலீட்டாளர்களை பீதி அடைய வைத்த (வாய்ப்பை அளித்த) சந்தை பின்பு ஐ.பி.ஓ. எனும் முதன்மை சந்தையில் வந்த நிறுவனங்களை வரவேற்று லாபங்களை அள்ளிக்கொடுத்தது எப்படி ?

  • ஐ.பி.ஓ.(IPO) வின் வரலாறு தான் என்ன ?
  • உண்மையில் ஐ.பி.ஓ. மூலம் சிறு முதலீட்டாளர்கள் லாபம் பெற்றுள்ளார்களா ?
  • முதன்மை சந்தையில் லாபம் பார்க்க மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன ?
  • வாய்ப்புகளும், விரயமும் – சொல்லப்படாத ஐ.பி.ஓ. நிகழ்வு
  • 2021ம் ஆண்டு வரவிருக்கும் ஐ.பி.ஓ. நிறுவனங்கள்
  • இதற்கு முந்தைய ஐ.பி.ஓ. முதலீட்டு வாய்ப்புகளை தவற விட்டீர்களா ?

வாருங்கள், வரும் சனிக்கிழமை மாலை 05:15 மணிக்கு இணையம் வழியாக பேசுவோம்…

பதிவுக்கு:

IPO Mania Webinar – Registration

கட்டணம்: ரூ. 199 மட்டும்

நாள் மற்றும் நேரம்: 26-12-2020 & மாலை 05:15 – 06:30

பதிவுக்கு பின்னர் உங்களுக்கான இணைப்பு (Webinar Link) மின்னஞ்சல் மற்றும்  குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நாட்டின் முதல் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதி திட்டம்

நாட்டின் முதல் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதி திட்டம் 

India’s First International REIT Fund – Kotak Mutual Fund

பொதுவாக பங்குச்சந்தைக்கும், ரியல் எஸ்டேட் என சொல்லப்படும் வீட்டுமனை துறைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு நீர்மை நிறை(Liquidity) தான். பங்குச்சந்தையை பொறுத்தவரை பணப்புழக்கம் எப்போதும் அதிகம். அதே வேளையில் நாம் செய்த முதலீட்டு தொகையிலிருந்து சிறிய அளவில் கூட பங்குகளை விற்று எளிதாக பணமாக்கலாம். ஆனால் ரியல் எஸ்டேட் துறையில் உள்ள ஒரே குறை, இந்த நீர்மை நிறை தான்.

மேலும் ரியல் எஸ்டேட் துறையில் நாம் பங்குகளை போல வாங்கிய நாளன்றோ அல்லது நமக்கு எப்போது பணம் தேவைப்படுகிறதோ அப்போது பங்குகளை விற்பது போல இங்கே செய்ய முடியாது. அதற்கான கட்டணங்களும் வீட்டுமனை துறையில் சற்று அதிகம். இந்த குறையை களைய ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்(Real Estate Investment Trust) என்னும்  அமைப்பு கடந்த 2007ம் ஆண்டு செபியால் துவங்கப்பட்டது.

இதுவே அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட காலம் 1960ம் ஆண்டு. ரியல் எஸ்டேட் துறையில் உள்ள பெரு நிறுவனங்கள் பங்கேற்பதற்கும், சிறு முதலீட்டாளர்களும் தாங்கள் செய்த முதலீட்டை எளிதாக விற்பதற்கும், தொடர் வருமானத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த அமைப்பு உதவியது. இந்த துறையில் நுழையும் நிறுவனங்களுக்கும் சில வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டது.

குறைந்தபட்ச முதலீடாக 500 கோடி ரூபாயும், 80 சதவீத முதலீடு முழுவதுமாக முடிவடைந்த கட்டிடங்களிலும், 10 சதவீத தொகை மட்டுமே கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கும் மனையிலும்(Under construction) இருக்க வேண்டுமென்ற வரைமுறைகள் உண்டு. ஈட்டப்படும் வருவாய், முதலீட்டாளர்களுக்கு 90 சதவீதம் என்ற அளவில் ஈவுத்தொகையாக (Dividends) மட்டுமே அளிக்கப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்யாமல், ஒரு பெரு மனை சொத்தில் குறிப்பிட்ட தொகையை மட்டுமே முதலீடு செய்து விட்டு, கணிசமான வருவாயை எதிர்பார்க்கலாம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மதிப்பீடுகள் செய்யப்படும் என்பதும் இதன் சிறப்பு.

ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதிக்கும்(REIT Funds), ரியல் எஸ்டேட் பரஸ்பர நிதி திட்டத்திற்கும்(Real Estate Funds) இடையே உள்ள வேறுபாடு, REIT முதலீட்டில் அதிகப்படியான ஈவுத்தொகை வருவாயை பெறலாம் என்பதே.

ரியல் எஸ்டேட் முதலீட்டு டிரஸ்டில் பங்கு பெறும் நிறுவனங்கள் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், சேமிக்கும் கிடங்குகள் போன்ற தொடர் வருவாய் அளிக்கும் சொத்துக்களை சொந்தமாக கொண்டிருக்கும் அல்லது நிதியளிக்கும் நிறுவனங்களாக இருக்கும். இது பங்குச்சந்தையில்  பட்டியலிடப்படுவது போன்று வெளிப்படைத்தன்மையுடன் பட்டியலிடப்படும். சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை யாரும் முதலீடு செய்து தொடர் வருவாய் மற்றும் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தலாம். நடப்பில் வீட்டுமனை துறையில் காணப்படும் குறைகளை களைந்து, நேர்மையான முறையில் சிறிய முதலீடும் செய்வதற்கு இந்த முதலீட்டு டிரஸ்ட் உதவும்.

கடந்த ஆண்டு நாட்டின் முதல் REIT ஐ.பி.ஓ. வெளிவந்தது. முதன்மை சந்தையில் வெளிவந்த எம்பஸி ஆபிஸ் பார்க்ஸ் (Embassy Office Parks) நிறுவனம் வாடகை மற்றும் தொடர் வருவாய் அளிக்கும் வீட்டுமனை துறையில் முதலீடு செய்து வருகிறது. மேலும் தனக்கென பல ரியல் ஸ்டேட் சொத்துக்களை கையகப்படுத்தியுள்ளது.

சொல்லப்பட்ட நிறுவனம் உள்நாட்டு சந்தையில் இருந்து வரும் நிலையில், தற்போது கோடக்(Kotak) பரஸ்பர நிதி நிறுவனம் நாட்டின் முதல் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதித்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டமாக வந்திருக்கும் சர்வதேச ரியல் எஸ்டேட் முதலீட்டு நிதி, திறந்த முடிவு திட்டமாக வந்துள்ளது(Open Ended fund – Fof).

நடப்பு டிசம்பர் 7 முதல் 21 வரை ஆரம்ப நிலை பதிவாக வரும் இத்திட்டம் பின்னர் பொதுவெளியில் பரஸ்பர நிதியின் கீழ் செயல்படும். இதன் முதலீட்டு சொத்து பங்களிப்பு சிங்கப்பூரில் 48.8 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 33.7 சதவீதமும், ஹாங்காங் நாட்டில் 9 சதவீதமாகவும் உள்ளது. நியூஸிலாந்து மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளிலும் ஒரு சதவீதத்திற்கு மேலாக முதலீடு செய்யப்படும். உள்நாட்டில் 0.9 சதவீதம் என்ற அளவில் மட்டுமே முதலீடு அமையும்.

SMAM(Sumitomo Mitsui DS Asset Management Company) ஆசிய ரியல் எஸ்டேட் முதலீட்டு திட்டத்தின் படி செயல்படும் இந்த திட்டம், ஆசிய-பசிபிக் பகுதியில் முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 8 சதவீத வருவாயை அளிக்கும் இத்திட்டத்தின் முதலீடு டாலர்களில் கையாளப்படுவதால் வெளிநாடுகளில் காணப்படும் ரியல் எஸ்டேட் மூலம் கிடைக்கப்பெறும் வருவாய், உள்நாட்டு முதலீட்டாளருக்கு சாதகமாக அமையும்.

எனினும் இது போன்ற திட்டத்தை பற்றிய விழிப்புணர்வு தற்போது குறைவு என்பதால், இந்த துறை சிறப்பாக செயல்பட இன்னும் சில காலமாகும். வரி விதிப்புகளும் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமையவில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இளமையில் ஓய்வு – நிச்சயமாக்கும் ஸ்மார்ட் பிளான்

இளமையில் ஓய்வு – நிச்சயமாக்கும் ஸ்மார்ட் பிளான்

Early Retirement – Smart Plan for Success

நவீன யுகத்தில், “Workaholic” என்ற வார்த்தை அடிக்கடி உச்சரிக்கப்பட்டாலும் வேலைப்பளு, வேலை திருப்தியின்மை என்பது ஒரு பக்கம் பரவலாக பார்க்கப்படுகிறது.

அது என்ன ‘ Workaholic ‘ ?

Workaholic என்பது வேலை செய்ய வேண்டிய கட்டாயம் (அ) எப்போதும் வேலை, வேலை என்றிருப்பது.

நம்மில் பெரும்பாலோர் விருப்பமில்லாமல் பணிச்சுமையை ஏற்பதற்கு காரணம் பொருளாதார தேவை தான். இது இன்றைய காலத்தின் அதிக சம்பளம் மற்றும் ஆடம்பரத்துக்கும் பொருந்தும்.  உணவு, உடை, இருப்பிடம் என்ற மூன்று அத்தியாவசிய தேவைகள் மறைந்து, இன்று விருப்பங்களை நிறைவேற்றும் நிலை மட்டும் தான் தலை தூக்கி உள்ளது. எனக்கு எது தேவை என்பதை விட, எனக்கு இது வேண்டும் என்ற கொள்கை இன்று வளர்கிறது. நாகரீக மாற்றத்தில் இதுவும் அடங்கும் தானே.

“ கால் காசுனாலும் கவர்ன்மென்ட் வேலை “ என்பதெல்லாம் இன்று பொய்யாகி விட்டது.இன்றையளவில் எல்லா வேலைகளிலும் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு என்ற விஷயம் இல்லாமையால், சம்பள அதிகரிப்பை மட்டுமே பெரும்பாலோர் எதிர்பார்க்கின்றனர். ஒரு புறம் நிறுவனங்களுக்கு வேலைக்கு  ஆட்கள் கிடைக்கவில்லை, மறுபுறம் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற போதும், தாங்கள் பணிபுரியும் துறையில் நாட்டமின்மை, பணிச்சுமையாக கருதுதல் என்பது வாடிக்கையாகி விட்டது. முன்னொரு காலத்தில் ஒரே துறை அல்லது ஒரே  நிறுவனத்தில் 30 அல்லது 40 வருடங்கள் பணிபுரிந்த அனுபவங்கள் இன்று பார்க்க முடிவதில்லை. இன்னும் சொல்ல போனால், இன்றைய தலைமை அதிகாரிகளும் நீண்ட காலம் ஒரு நிறுவனத்தில் நீடிப்பதில்லை. இதற்கு பொதுவான காரணமாக சொல்லப்படுவது, நாம் நமக்கு பிடித்த  துறையை அல்லது கல்வியை தேர்ந்தெடுக்காதது  தான்; பணியில்  சுமை என்று  நாம் பொத்தாம் பொதுவாக சொல்லி விட முடியாது. தினக்கூலியிலிருந்து, டாட்டா (Tata) வரை எல்லாருக்கும் பணிச்சுமை உள்ளது. அந்த பணிச்சுமை தான் சிலரை மாபெரும் மனிதர்களாக மாற்றியுள்ளது. ஆனால் நவீன யுகம் மீண்டும் தன் நிலைக்கு திரும்புகிறது. இன்றைய தலைமுறையில் பணிச்சுமை என்பதை விட, வேறு ஒரு வார்த்தை புதுமையாக்கப்பட்டுள்ளது – “ இளமையில் ஓய்வு(Early Retirement) ”

இளமையில் ஓய்வு:

“ அப்போதெல்லாம் நாங்க 60 வயது வரை உழைத்து ஓய்வு பெற்றோம் “ என்ற வாசகத்தை இனி நாம் கேட்க போவதில்லை. இன்று இளமையில் ஓய்வு என்ற வார்த்தை தான் போக்காக (Trending) உள்ளது.  இளமையில் ஓய்வு பெறுவதை இருவகையாக பிரித்து பார்க்கலாம்,

  • இருக்கும் பணியிலிருந்து இளமையில் ஓய்வு பெற்று புதிதாக தொழில் தொடங்குவது / தொழில்முனைவோராக விரும்புவது. (Become an Entrepreneur )
  • இனி எந்த வேலையிலும், தொழிலிலும் ஈடுபட போவதில்லை; வாழ்க்கையை விருப்பம் போல கழிக்க வேண்டும் என விரும்புவது. (Live as Life, Live as like ).
Become an Entrepreneur:

இருக்கும் பணியிலிருந்து  இளமையில் ஓய்வு பெற்று அல்லது தன்னை விடுவித்து கொண்டு தொழில் முனைவோராக களமிறங்குவது இன்று நம்மில் பெரும்பாலோருக்கு உண்டு. உண்மையில் இது ஒரு நல்ல விஷயம் தான். “ நல்ல தொழில் செய்ய வேண்டும், நாலு பேருக்கு வேலை தர வேண்டும் “ என்பது ஒரு லட்சிய நோக்கமே. பணம் சம்பாதிக்க தான் தொழில் தொடங்கினாலும், மறைமுகமாக நாம் வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம். ஆனால் தொழில்முனைவோராக சிறக்க சரியான திட்டமிடல் மற்றும் செயலாற்றல் அவசியம். வெறும் புதுமையான யோசனைகளை மட்டும் வைத்து கொண்டு வெற்றி பெற்று விட முடியாது.

Live as Life, Live as like:

“ இனி மேல் நான் எந்த வேலைக்கும் செல்வதை விரும்பவில்லை; தொழில் செய்யவும் இல்லை. எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ போகிறேன். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக வேண்டும், இயற்கையை ரசிக்க வேண்டும்” – இதுவும் இங்கு நடக்கும். சில சமயங்களில் பலருக்கு இந்த நிலை பயன்படாமல் போனாலும், சிலருக்கு அர்த்தமுள்ளதாகி விடும். இருக்கும் வாழ்க்கையை பிடித்தவாறு உணர வேண்டும், பிறரை நேசிக்க வேண்டும் என்பதில் தவறேதும் இல்லை. அப்படியே வாழலாம். இன்று நாம் பார்க்கும் புதுமையான தொண்டுகளும், புவி சார்ந்த நிகழ்வுகளும் அப்படி தான் அமைந்தன.

‘ அப்புறம் என்ன பிரச்சனை என்கிறீர்களா  ? ‘

இனிமேல் தானே விஷயம் இருக்கு. இருக்கும் வேலையை விட்டு விட்டு நீங்கள் தொழில்முனைவோரானாலும் சரி, வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக உருவாக்கினாலும் சரி – வேலையை கடந்தவுடன் தான் நமது வாழ்க்கை ஆரம்பமாகிறது என்பதை மறக்க வேண்டாம். இளமையில் ஓய்வு பெறுவதற்கு ஒரு மன தைரியம் வேண்டும். இளமை கால ஓய்வு என்பது நாம் இனி வாழ போகும் காலம் நன்மை செய்வதாக இருக்க வேண்டும். அக்கரைக்கு இக்கரை பச்சையாகி விட கூடாது. அதனால் நமது இளமை கால ஓய்வுக்கான நிதித்திட்டமிடல்(Financial Planning) அவசியம்.

உதாரணத்திற்கு, நாம் 40 வயதில் ஓய்வு பெற விரும்பினால் நாம் அடுத்து எத்தனை வயது அல்லது காலம் வரை இருக்க போகிறோம் என்பது முக்கியம். 70 வயது வரை நம்மால் வாழ முடியும் என்ற எண்ணம் (கணிப்பு தான்) இருந்தால், ( 70-40 = 30 ) 30 வருடத்திற்கான  செலவுகளை (அடிப்படை தேவை, மருத்துவம், போக்குவரத்து ) எவ்வாறு  கையாள போகிறோம் என்பது நிபந்தனை. வேலையை துறந்து பின் செயலாற்றல் மிகவும் கடினம். நம்மால் தொழிலில் சிறந்து விளங்க எவ்வளவு காலமாகும், நமது குடும்பத்திற்கான அத்தியாவசிய செலவுகள் என்பவை எல்லாம் கணக்கிடப்பட வேண்டும். இதற்கான தகவல்கள்  நிதி சார்ந்த, காப்பீடு  சம்மந்தமான இணையதளத்தில் Retirement Planning, Retirement Calculator என்ற வசதி உள்ளது. அவற்றை பயன்படுத்தி நமக்கு தேவையான கார்பஸ் தொகையை தயார் செய்து கொள்ளலாம் அல்லது  சொத்துக்களை கையாள வேண்டும். பணவீக்கத்தையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

பொதுவாக, இந்த Retirement Calculator சரியாக சொன்னாலும், நாம் சற்று கூடுதலான பாதுகாப்பை ஏற்படுத்துவது நலம். ஏனென்றால் நாம் இளமையில் சம்பாதிப்பதை விட, வயதான காலத்தில் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவு. அதாவது நாம் பேருந்தில் பயணம் செய்யும் போது, பயணக்கட்டணத்தை விட சற்று கூடுதலான தொகையை வைத்திருப்போமே, அது போன்று கூடுதலாக கார்பஸ் தொகையை ஏற்படுத்த வேண்டும்.

General Retirement Planning:

இந்த முறையில், நமக்கு தேவைப்படும் காரணிகள் – நமது தற்போதைய வயது, ஓய்வு பெறப்போகும் வயது, தற்போதைய ஆண்டு வருமானம், மாத செலவுகள், தற்போதைய  முதலீடு மற்றும் சேமிப்பு இருப்பு, எதிர்காலத்தில் அதற்கு எதிர்பார்க்கும் வருமானம், பணவீக்கம் ஆகியவற்றை நாம் குறித்து வைத்து கொண்டு, நமது இளமை கால நிதித்திட்டமிடலை துவக்கலாம்.

( Current Age, Retirement Age, Annual Income, Monthly Expenses, Current Savings and Investing, Expected Return on Investment(ROI), Inflation )

Early Retirement Formula (ERF):

டக் மஸ்ஸி (Doug Massey) என்ற ஆசிரியர் ஓய்வு கால திட்டத்திற்கான விதியை உருவாக்கியுள்ளார். இவர் தனது 41வது வயதில் மற்றவர்களுக்காக வேலை செய்வதிலிருந்தும், தொழில் மற்றும் முதலீட்டில் இருந்தும் தன்னை முழுமையாக விடுவித்து (ஓய்வு) கொண்டார்.

ERF =  Your Age X  Networth / Yearly Expenses

Maintain the ERF value is > 1000

உதாரணத்திற்கு, உங்களுடைய வயது 30 மற்றும் உங்களிடம் இருக்கும் சொத்து (மனை, வீடு, முதலீடு, சேமிப்பு, பணம் கையிருப்பு) ரூ. 2,00,00,000 /- (2 கோடி) மற்றும் ஆண்டு செலவு- ரூ. 6,00,000 /- எனில்,

[ 30 X 2 Crores / 6 lakhs ] = 1000

– ஓய்வு எண் 1000 க்கு குறையாமல் இருப்பது நல்லது.

இதை போல, நீங்களும் உங்களுடைய இளமை கால ஓய்வு எண்ணை கணக்கிடலாம். அவர் இந்த விதியில் பரிந்துரைப்பது கூடுதலான தொகையை சேர்க்க வேண்டும் என்பது தான்.

இளமையில் ஓய்வு பெறுவதும் ஒரு சாமர்த்தியமான இலக்கு தான்; இலக்கை சரியாக திட்டமிடுங்கள், அதிகப்படியான தொகையை எதிர்காலத்திற்காக இன்றே முதலீடு செய்யுங்கள்.

இளமையில் வெல்லுங்கள் !

வாழ்க வளமுடன், 

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com