அவந்தி பீட்ஸ் – பங்குச்சந்தை அலசல்
Avanti Feeds – Fundamental Analysis – Stocks
1994ம் ஆண்டு துவங்கப்பட்ட நிறுவனம் அவந்தி பீட்ஸ். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திரு. அல்லூரி வெங்கடேசுவர ராவ் அவர்களால் துவங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று இறால், மீன் ஊட்டங்கள், இறால் செயலி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமாக வலம் வருகிறது. ஆரம்ப காலத்தில் எஃகு, கரைப்பான்கள், உரம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் புகையிலை ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வந்த நிறுவனர் பின்னர் இறால் மீன் சார்ந்த தயாரிப்புகளில் களம் கண்டார்.
முக்கியமாக தாய் யூனியன்(Thai Union Group) நிறுவனத்துடன் கூட்டு முயற்சியில் இறால் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருவது அவந்தி பீட்ஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு சாதகமாக இருந்துள்ளது. 1977ம் ஆண்டு துவங்கப்பட்ட தாய் யூனியன் குழுமம் தாய்லாந்து நாட்டை சேர்ந்த இறால், மீன் ஊட்டங்கள் மற்றும் பதப்படுத்துதலில் முன்னணி நிறுவனமாக உள்ளது.
இறால் மற்றும் மீன் தீவனங்களில் தொழில் செய்து வரும் தாய் யூனியன் குழுமம், கடல் சார்ந்த உணவு துறையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இறால் தீவனம் மற்றும் உறைந்த இறால் தயாரிப்புகளில்(Frozen Shrimp Producer) நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகவும், முன்னணி ஏற்றுமதியாளராகவும் அவந்தி நிறுவனம் உள்ளது.
ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தயாரிப்பு நிலையங்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. உள்நாட்டு தீவன வணிகத்தில் சுமார் 45 சதவீத பங்களிப்பை அவந்தி பீட்ஸ் நிறுவனம் தன்னகத்தே வைத்துள்ளது. மீன் குஞ்சு பொரித்தல் மற்றும் இறால் பதப்படுத்துதலுக்காக முக்கிய நிலையங்களையும் இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
இதன் தயாரிப்புகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தீவனங்களுக்காக தனித்துவமான பிராண்டுகளையும் அவந்தி நிறுவனம் கொண்டுள்ளது.
கடல் சார்ந்த உணவுகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக அமெரிக்கா உள்ளது. இது சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இறக்குமதி அளவை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. மீன் பிடித்தல் துறையில் நம் நாடு 2019-20ம் ஆண்டு முடிவில் சுமார் 141 லட்சம் டன் என்ற அளவில் தனது உற்பத்தியை கொண்டுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) மதிப்பில் 1.2 சதவீத பங்களிப்பை மீன் பிடிப்பு துறை பெற்றுள்ளது. நீண்ட பரப்பளவு, புதிய உணவு வகைகள், பெருகி வரும் உணவு தேவைகள் ஆகியவை மீன் உணவுக்கான சந்தையை நிர்ணயிக்கிறது. மீன் உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மாநிலங்கள் – ஆந்திரா, மேற்கு வங்காளம், குஜராத், கேரளா மற்றும் தமிழகம். கடந்த 2019ம் ஆண்டு முதல் மீன் பிடிப்பு துறை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 1961ம் ஆண்டு வாக்கில் தனிநபர் ஒருவருக்கு, ஆண்டுக்கு 9 கிலோ என்ற அளவில் இருந்த நுகர்வு, 2018ம் ஆண்டில் 20.5 கிலோ என வளர்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக இறால் பண்ணைகள் சார்ந்த உணவுக்கான தேவை இன்று அதிகரித்து வருகிறது.
உலகளாவிய காலநிலை மாற்றம், கடல் சார்ந்த எல்லை பிரச்சனைகள், புதிய உணவு தேவைகள் ஆகியவை பண்ணைகள் மற்றும் கடற் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு வர்த்தகம் சார்ந்த வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அவந்தி பீட்ஸ்(Avanti Feeds) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6,600 கோடி. இதன் புத்தக மதிப்பு ரூ.119 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம் 334 மடங்குகளாகவும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன்(Debt Free) எதுவும் பெரிதாக இல்லை. நிறுவனர்களின் பங்களிப்பு 44 சதவீதமாகவும், அன்னிய முதலீட்டாளர்களின் பங்களிப்பு 17 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்கள் சார்பில் பங்குகள் அடமானம் எதுவும் வைக்கப்படவில்லை. அன்னிய முதலீட்டாளர்களில் தாய் யூனியன் குழும நிறுவனம் 9 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.
பொது பங்களிப்பில்(Public Holding) சுமார் 15 சதவீத பங்குகளையும் இந்நிறுவனம் தன்னகத்தே கொண்டுள்ளது. அரசு சார்பில், ஆந்திர அரசு சுமார் 3 சதவீத பங்குகளை(Andhra Pradesh Industrial Development Corporation) கொண்டுள்ளது கவனிக்கத்தக்கது. 2019-20ம் நிதியாண்டில் அவந்தி பீட்ஸ் நிறுவனம் ரூ.4,115 கோடியை வருவாயாகவும், 377 கோடி ரூபாயை நிகர லாபமாகவும் ஈட்டியுள்ளது. விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 19 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
லாப வளர்ச்சியும் கடந்த ஐந்து வருட கால அளவில் 24 சதவீதமாக உள்ளது. பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் 34 சதவீதமாகவும், 10 வருட கால அளவில் 35 சதவீதமாகவும் உள்ளது. இருப்புநிலை கையிருப்பு ரூ.1,603 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash flow Positive) நன்றாக உள்ளது.
இறால் இறக்குமதியில் அமெரிக்கா 26 சதவீதமும், ஐரோப்பிய யூனியன் 23 சதவீதமும், வியட்நாம் 12 சதவீதமும், ஜப்பான் 10 சதவீதம் மற்றும் சீனா 8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இறால் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்திலும், அதன் ஏற்றுமதியில் முதலிடத்திலும் உள்ளது. கொரோனா காலம் தவிர்த்து காணும் போது, இந்த துறைக்கான தேவையும், வாய்ப்புகளும் அதிகம்.
கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை
Nantri
LikeLike