ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் ரூ. 3 லட்சம் கோடி – காலாண்டு முடிவுகள்
RIL’s debt of Rs. 3 Lakh Crore – Quarterly Results – Q3FY20
இந்திய சந்தையில் 10 லட்சம் கோடி ரூபாயை சந்தை மதிப்பாக கொண்டிருக்கும் ஒரே நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(Reliance Industries) நிறுவனமாகும். 1973ம் ஆண்டு திருபாய் அம்பானி அவர்களால் துவங்கப்பட்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இன்று நாட்டின் மிகப்பெரிய குழும நிறுவனமாக உள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, பெட்ரோ கெமிக்கல், ஜவுளி, சில்லரை வணிகம், தொலைத்தொடர்பு, ஊடகம், இசை மற்றும் நிதி சேவை என பல தொழில் முகங்களை கொண்டிருக்கிறது. ஜியோ, ரிலையன்ஸ் ரீடெய்ல், ரிலையன்ஸ் பெட்ரோலியம் ஆகியவை இதன் துணை நிறுவனங்களாகும்.
இந்த நிறுவனத்தில் நிறுவனர்களின் பங்களிப்பு 49 சதவீதமாக உள்ளது. புத்தக மதிப்பு 639 ரூபாய் விலையிலும், கடன்-பங்கு விகிதம் 0.62 ஆகவும் இருக்கிறது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) குறைந்த அளவாக 4 மடங்கில் உள்ளது. மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 1,52,939 கோடி மற்றும் செலவினமாக ரூ. 1.30 கோடி சொல்லப்பட்டுள்ளது. 2019-20ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் 11,640 கோடி ரூபாய்.
இயக்க லாப வளர்ச்சி(OPM) தொடர்ச்சியாக 15 சதவீதம் என்ற அளவில் வளர்ந்து கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமானது. ஆனால் அதே வேளையில் வட்டி பாதுகாப்பு விகிதம் போதுமான அளவில் இல்லை. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று வருடங்களில் 28 சதவீதமும், ஐந்து வருடங்களில் 5.50 சதவீதமும் மற்றும் 10 வருட கால அளவில் 14 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளது.
லாப வளர்ச்சி எனும் போது, கடந்த மூன்று வருட காலத்தில் 10 சதவீதம், ஐந்து வருடங்களில் 14 சதவீதம் மற்றும் பத்து வருடங்களில் 10 சதவீதம் என்ற அளவில் வளர்ந்துள்ளது. நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 40 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவே ஐந்து வருடங்களில் 29 சதவீதமும், 10 வருட கால அளவில் 11.30 சதவீதமும் விலை ஏற்றம் பெற்றுள்ளது. பங்கு போனஸ் மற்றும் டிவிடெண்ட் தொகைகள் சேர்க்கப்படவில்லை. எப்படியிருப்பினும், நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இந்த பங்கு நல்ல வருவாயை அளித்துள்ளது.
நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) ரூ. 3.99 லட்சம் கோடியாக உள்ளது. பணவரத்து சரியாக வந்து கொண்டிருக்கிறது, அதே வேளையில் நிலையான சொத்துக்களும் நிறுவனத்தால் வாங்கப்படுகின்றன. மூன்றாம் காலாண்டு முடிவில் நிறுவனத்தின் கடன் 3.06 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனம் கடனை குறைக்கும் பொருட்டு, தனது எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலில் சிறு பங்குகளை ஆரம்கோ(Saudi Aramco) நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிகழ்வு நடப்பு நிதியாண்டு முடிவுக்குள் எட்டப்படும்.
அடுத்து வரும் காலங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சில்லரை வணிகம்(JIO Mart) மற்றும் ஜியோ சேவைக்கு(Reliance JIO) அதிக முக்கியத்துவம் கொடுக்கும். இதன் மூலம் அதன் வருவாயும் மேம்படும். கடன் அதிகம் இருந்தாலும், இதன் விற்பனை வளர்ச்சி அபரிதமாக உள்ளது. இருப்பினும், முதலீட்டாளர்களை பொறுத்தவரை நிறுவனம் தனது கடனை குறைப்பது தான் சாதகமான அம்சமாக அமையும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை