Tag Archives: Coronavirus

நேர்மறை சிந்தனையை கைவிடுங்கள் – கொரோனா வைரஸ் பாதுகாப்பு

நேர்மறை சிந்தனையை கைவிடுங்கள் – கொரோனா வைரஸ் பாதுகாப்பு

Don’t think Positive – Precautions to protect yourself and family from Covid-19

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வீட்டில் யாராவது சொன்னாலே கேட்க மாட்டோம், அதுவும் நமக்கே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காலத்தில், அரசு சொல்லும் எச்சரிக்கையை நாம் கேட்டு விடுவோமா – என்ன ?

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

நடந்து கொண்டிருப்பது ஒரு போர்க்கால அடிப்படை நிகழ்வு, ஒரு உலக போர் நடைபெறுவது போன்ற நிகழ்வு, அதுவும் உங்களை சுற்றி ஜாம்பிகளும், வெள்ளமும் சூழ்ந்திருக்கும் நிலை. ஆம், வேலைக்கு செல்ல முடியாதது தான், தொழில் புரிய முடியாது. சொந்த பந்தங்களை காண முடியாது. அரசாங்கம் உங்களை பாதுகாக்க முடியாது என சொன்னால் நீங்கள் என்ன செய்து விட முடியும்.

நீங்களாக தானே, பாதுகாத்து கொள்ள முடியும் – அது தான் Survival of the Fittest.

நாம் தேசப்பற்றை கொண்டாடுகிறோம், நமது ஜாதி, மத கொள்கைகளை பெருமையாக நினைக்கிறோம். பல சாகசங்களை புரிய எண்ணுகிறோம். இந்த உலகம் அழிவதில்லை, மாறாக தீய மனிதம் அழிய போகிறது. உங்களை நீங்களே காத்து கொள்ள நேர்மறை எண்ணங்களை கொண்டிருக்காதீர்கள், எதிர்மறை நிகழ்வை கவனியுங்கள்.

உங்களுக்கு இப்போது நேர்மறை எண்ணம் தேவையில்லை, பாதகமான நிகழ்வை உணருங்கள், உண்மையில் இப்போதைய தேவை விழிப்புணர்வும், அதனை சார்ந்த தன்னம்பிக்கையும் தான். இந்த உலகில் பல்வேறு காலகட்டங்களில் வெற்றி பெற்ற சமுதாயமும், சாதித்தவர்களும் கொண்டிருந்தது விழிப்புணர்வுடன் கூடிய தன்னம்பிக்கையே தவிர, நேர்மறை எண்ணங்கள் அல்ல.

  • வீட்டை விட்டு வெளியே  வராதீர்கள் என சொன்னால், வாக்கிங் – ஜாக்கிங் என செல்ல கூடாது. கூட்டம் சேர கூடாது, கொரோனா வைரஸ் காற்றில் பரவ கூடும். நீங்கள் நடைப்பயிற்சி செல்லும் பாதையில் தொற்று இல்லை என்பதை உங்களால் கண்டறிய முடியாது.
  • இது ஒரு போர்க்கால நிகழ்வு, விடுமுறை அல்ல. இன்றைய காலத்தில் உங்களுக்கான வசதி வீட்டில் தான் உள்ளது. தொலைக்காட்சி, கைபேசி, இணையம், தூக்கம் இவை தான் எப்போதும் வீட்டில் உள்ளதே. வேறென்ன வேண்டும். வேலைக்கு சென்றாலும் அங்கே நாம் என்ன செய்து விட போகிறோம் (சில உண்மையான உழைப்பாளிகள் தவிர). மனித நேயம் செலுத்த வேண்டிய நேரத்தில், நாம் கைபேசியை பயன்படுத்தி கொண்டிருந்தோம். இப்போது உறவு வேணும் என்கிறோம் ?
  • சுகமான வாழ்க்கையை இப்போது எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் ஏற்கனவே மகிழ்ச்சி உள்ளது. தொலைக்காட்சி பார்ப்பவர்கள் அதனை காணுங்கள், கைபேசி மற்றும் இணையம் உள்ளது. முக்கியமாக இது போன்ற சமயங்களில் மின்சாரம் தடைபடாமல் வந்து சேர்கிறது.
  • மற்ற காலங்களில் நாம் தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிப்போம். இப்போதும் அதனை செய்து விடாதீர்கள். நமக்கு தேவை அத்தியாவசிய உணவு மட்டுமே, அதுவும் ஆடம்பர உணவு அல்ல. கஞ்சியோ, கூழோ – தக்கன பிழைத்து வாழ்வதற்கான(Survival) சூழ்நிலையை தேர்ந்தெடுங்கள். வருங்காலங்களில் இதனை விட நாம் மோசமாக வாழும் நிலை வரும். எனவே, அவசரகால நிலையை புரிந்து கொண்டு இப்போது வாழ்வது நலம்.
  • இதுவரை வீட்டில் சமைத்து பழகாதவர்கள் இப்போது முயற்சிக்கலாம். ஆனால், நன்றாக சமையல் செய்பவரின் ஆலோசனையுடன் மட்டுமே. விபரீதமாக சமையலை செய்து சாப்பிட்டு விட்டு, அப்புறம் இது போன்ற காலங்களில் மருத்துவமனைக்கு சென்று விட வேண்டாம்.
  • ‘ நான் எப்போதும் வேலை செய்து கொண்டே இருப்பது எனது இயல்பு, நான் எப்படி இப்போது வீட்டிற்குள் முடங்கி கிடைக்க முடியும் ‘ – இப்போது நீங்கள் ஒரு ஆணியையும் புடுங்க தேவையில்லை. சும்மா இருப்பது தான் மனிதத்தின் இயல்பு. நாம் தான் நிறைய சிந்தனைகளை தலையில் ஏற்றி கொண்டு மூடர்களாக வலம் வருகிறோம். அதெல்லாம், உலக நிகழ்வு நன்றாக இருக்கும் போது பார்த்து கொள்வோம். இப்போதைய தேவை, சும்மா இருப்பது மட்டுமே.
  • சிந்தனைகளை மெருகேற்றுவதற்கான காலமிது – உலக வைரஸ் தாக்கங்களை பற்றி படியுங்கள், உங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை இப்போது திருப்பி பாருங்கள், அவசர காலங்களில் எவ்வாறு வாழ வேண்டும் என்ற சிந்தனையை உங்கள் மனதில் ஏற்படுத்துங்கள். பிற்காலங்களில் அது உங்கள் குழந்தைகளுக்கு உதவலாம்.
  • எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை நம்பியிருக்க வேண்டாம், அதே வேளையில் அரசு சொல்லும் எச்சரிக்கையை உதாசீனப்படுத்த வேண்டாம். கொரோனா நிகழ்வுக்கு எந்த நாட்டையும், ஜாதி – மதத்தையும் நிலை நிறுத்த வேண்டாம். இல்லுமினாட்டி(illuminati) என சொல்லிக்கொண்டு நாம் குதர்க்கமாக சிந்திக்க வேண்டாம். இப்போது நாம் நம்மை தற்காத்து கொள்வதே.
  • நம் நாட்டில் வீடு இல்லாமல், ஒரு வேளை உணவு கூட கிடைக்க முடியாமல் சாலையில் பலர் போராடி கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தான் உதவி தேவை. மற்றவர்கள் அவர்கள் வீட்டில் அமைதியாக இருக்கலாம்.
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு வாரங்களுக்கு முன்பு வரை, தங்கள் நாட்டில் எந்த பிரச்னையும் இல்லை. வேலைவாய்ப்பு நன்றாக இருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கம் எங்கள் நாட்டில் பெரிய அளவில் இல்லை. எங்கள் பொருளாதாரத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றார். ஆனால், இன்று அமெரிக்க பொருளாதாரமும், அதன் மக்களும் ஆட்டம் கண்டுள்ளனர். அதிபர் டிரம்ப், ‘ இது உண்மையிலே ஒரு தொற்று நோய் தான். நான் ஏற்கனவே இதனை பற்றி எண்ணி கொண்டிருந்தேன். அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவு வருகிறது. இது அவசரகால நிலை தான்’ என கடந்த வாரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.
  • சில நாடுகளில் அவசரம் அவசரமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நம் நாட்டில் அது போன்ற நிகழ்வும் நடைபெறவில்லை. நாம் அடுத்த சில நாட்களுக்கோ அல்லது வாரங்களுக்கோ தேவையான உணவுப்பொருட்களை வாங்கி கொள்ள வேண்டிய நேரமும் இருந்தது. இப்போதும் சில இடங்களில் அந்த வாய்ப்பு உள்ளது. சந்தைக்கு சென்று தான் வாங்க வேண்டுமென்ற அவசியமில்லை.
  • 50, 100 ரூபாயை மிச்சப்படுத்துகிறேன் என கூட்ட நெரிசலில் சென்று விட்டு, உங்கள் குடும்பத்திற்கு கொரோனா வாய்ப்பை கொடுத்து விட வேண்டாம். நான் ஏற்கனவே சொல்லியிருப்பது போல, இது போர்க்கால நிகழ்வு தான். சென்னையில் வெள்ளம் வந்த போது இருந்த நிலை நமக்கு தெரிந்திருக்கலாம். சிக்கனமாக இருந்து, நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு அடுத்த சில நாட்களுக்கு நமது வாழ்வை நகர்த்துவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. முடிந்தால், உங்கள் அருகில் உள்ள வசதி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவி செய்யுங்கள்.
  • தற்போது 144 தடை மட்டுமே உள்ளது. அதாவது அவசர தேவைக்கு பொருட்களை வாங்கி கொள்ளலாம். பொது இடங்களில் கூட்டம் மட்டுமே கூட கூடாது என்பது சட்டம். மீண்டும் அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், நாம் வீட்டை விட்டு வெளியேற முடியாது.
  • நாம் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும், உண்மையில் மனிதர்கள் இன்றளவிலும் சுகாதாரத்தில் முன்னேற்றம் பெறவில்லை எனலாம். தனிமனிதர்களிடம் ஏற்படும் சுகாதாரமின்மை தான் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு காரணம். இது முந்தைய காலரா, மலேரியா போன்றவற்றிற்கும் பொருந்தும்.
  • எனக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது, எங்கள் ஊருக்கு கொரோனா எல்லாம் வருவதில்லை என சொல்பவரா நீங்கள் ?  நீங்கள் தான் மற்றவர்களுக்கு இந்த நோயை பரப்புவதற்கான தூதராக இயற்கையால் நியமிக்கப்பட்டுள்ளீர்கள் 🙂
  • இது சாதாரண காய்ச்சல் தான் எனினும், நமது சமூக கூட்டம் மற்றும் முறையில்லாத பழக்க வழக்கங்களால் இது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்துகிறது. உலகமயமாக்கலில் வளரும் நாடுகள், கொரோனா வைரஸ் தாக்குதலால் தங்கள் பெயருக்கு(சுற்றுலா துறை, முதலீடு, தொழில்) களங்கம் ஏற்படும் என சில புள்ளிவிவரங்களை மறைக்கலாம். ஆனால் நமக்கு மட்டுமே தெரியும், நமது உயிரும், குடும்பமும் எவ்வளவு முக்கியமென்று.
  • வெளியே செல்லாதீர்கள், மற்ற சில நாடுகளை போன்று அவர்கள் காவல் துறை மற்றும் ராணுவத்தை கொண்டு நம்மை அடக்கும் நிலைக்கு நாம் வர  வேண்டாம். உண்மையில் இதன் காரணமாக அரசு சார்பில் செல்லும் அவசர ஊழியர்கள் தான் பாதிக்கப்படுவர். காவல் துறைக்கும் யார் மருத்துவர், அரசு சார்பில் செல்லும் அவசரமானவர் என தெரிய வாய்ப்பில்லை. அதற்கான நேரமும் இப்போது இல்லை.

அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம், அரசின் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டாம். இது நம் வாழ்க்கை, நம் சந்ததிகளின் எதிர்கால வாழ்க்கை. எச்சரிக்கையாக இருங்கள். பஞ்சம் பட்டினியால் இறப்பு விகிதங்கள், பல நோய்களால் பாதிப்புகள், சாலை விபத்துகள் என பல கூறுகளால் தினந்தோறும் இறந்தவர்களின் எண்ணிக்கையை கொரோனா வைரஸ் பாதிப்புடன் ஒப்பிட வேண்டாம்.

இந்த கொரோனா (Covid-19) குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் தான் முடிந்துள்ளது. இதுவரை உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 4.71 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 21,283. கடந்த மூன்று நாட்களில் 10 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் இன்று 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. 15,000 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்த கொரோனா பாதிப்பு அடுத்த ஆறு மாதங்கள் இருந்தால் என்னவாகும் ? இது ஒரு பேரழிவு என்றே சொல்லலாம். இந்த இயற்கை நிகழ்வை சரி செய்ய நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

வரும் முன் காப்போம் என்பதும் ஒரு விழிப்புணர்வுடன் கூடிய எதிர்மறை சிந்தனையே(Negative Thought). அடுத்த சில வாரங்கள் நாம் வீட்டில் பாதுகாப்பாக, நம்மை தனிமைப்படுத்தி இருக்கும் பட்சத்தில், நாமும் இந்நாட்டின் தேச தலைவர்களாக வலம் வரலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கொரோனா வைரஸ் எதிரொலி – சில சமீபத்திய சந்தை புள்ளிவிவரங்கள்

கொரோனா வைரஸ் எதிரொலி – சில சமீபத்திய சந்தை புள்ளிவிவரங்கள் 

Recent Market & Economy numbers – Coronavirus – Covid-19

தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (இந்திய நேரப்படி காலை 08.00, மார்ச் 21,2020) – 2,76,007. இறந்தவர்களின் எண்ணிக்கை – 11,401 மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,952 ஆகும். நடப்பில் சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களில் 5 சதவீதம் பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நம் நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 249 மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது. இதுவரை 5 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் அதிகப்படியான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதும், இத்தாலியில் அதிகமான இறப்பு விகிதமும் ஏற்பட்டுள்ளது. அடுத்த இரு வாரங்கள் நம் நாட்டிற்கு சவாலான காலமாக பார்க்கப்படுகிறது. முடிந்தவரை நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்வது, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்.

கொரோனா வைரஸ் என்பது அம்மை, டெங்கு போன்ற சாதாரண பாதிப்பு தான் எனினும், இன்றைய காலத்தில் மக்கள் அடிக்கடி பயணத்தை மேற்கொள்வது மற்றும் பொது இடங்களில் அதிகமான கூட்டம் கூடுவதால் தான் பெரும்பாலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளது. முறையான சுகாதார விழிப்புணர்வும் மற்றும் ஆரோக்கிய ஆர்வமும் தான் இதனை குறைக்க இயலும். கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காணப்பட்ட பொருளாதார மந்தநிலை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. வரவிருக்கும் காலாண்டுகள் நாட்டின் பொருளாதார நிலைக்கு சவாலாக இருக்க கூடும்.

இதன் காரணமாக அரசு சார்பிலும் பொருளாதாரம் சார்ந்த மாற்றங்கள் ஏற்படலாம். அமெரிக்க கச்சா எண்ணெய் பேரலுக்கு 22.63 டாலர்களாகவும், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 29 டாலர்களுக்கு குறைவாகவும் வர்த்தகமாகி வருகிறது. இது நமது பொருளாதாரத்திற்கு சாதகமாக இருந்தாலும், தற்போதைய நிலையில் பெரிய நுகர்வு தேவை எதுவுமில்லை. கொரோனா செய்திகளால், மற்ற பொருளாதார காரணிகள் சரிவர வெளியிடப்படவில்லை.

மீண்டும் எண்ணெய் வள நாடுகளில் பதற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நடப்பாண்டின் நவம்பர் மாதத்தில் அமெரிக்க தேர்தல் நடைபெற இருப்பதால், அமெரிக்காவும் அதற்கான உத்தியை உலகளவில் ஏற்படுத்தும். நேற்றைய பங்குச்சந்தையில் தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி(Nifty50) மற்றும் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ்(Sensex) இரண்டும் 5 சதவீதத்திற்கு மேல் ஏற்றம் பெற்றுள்ளது. SGX Nifty குறியீடு தற்போது 7 சதவீத இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.

நடப்பு மார்ச் மாதத்தில் இதுவரை அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 51,000 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை விற்று தள்ளியுள்ளனர். அதே நேரத்தில் உள்ளூர் முதலீட்டாளர்கள் சுமார் 44,000 கோடி ரூபாய் அளவிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அமெரிக்க பங்குச்சந்தை கடந்த ஒரு மாதத்தில் 30 சதவீத வீழ்ச்சியையும், இந்திய பங்குச்சந்தை ஒரு மாத அளவில் 31.50 சதவீத இறக்கத்தையும் கண்டுள்ளது.

சந்தையில் அதிகப்படியான இறக்கம் ஏற்படுத்துவதை தடுக்க செபி(SEBI) பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இருப்பினும், தற்போதைய சந்தை நிலவரம் உலக பொருளாதார செய்திகளால் தான் பெரும்பாலும் நகர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையில் நேற்று 22 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 3,952 ஆகவும், 24 காரட் கிராம் ஒன்றுக்கு ரூ. 4,150 என்ற விலையிலும் வர்த்தகமானது.

நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கான(LTCG Tax) வரிகளை நீக்குதல் மற்றும் டிவிடெண்ட் தொகைக்கான(Dividend Distribution Tax) வரி கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் பட்சத்தில், அது நம் சந்தைக்கு சாதகமாக இருக்கும். அடுத்த சில காலங்களுக்கு பொருளாதார பின்னடைவை தொடர்ந்து பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படலாம். நாட்டில் உள்ள பெரு நிறுவனங்கள் சில தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை இது போன்ற காலங்களில் குறைக்க மாட்டோம் என கூறியுள்ளது நல்ல விஷயம். அதே வேளையில் குறுகிய காலத்தில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் இந்த பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்குமா என்பதும் ஒரு கேள்வியாக உள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட துறைக்கு நிவாரணம் அளிக்கப்படும் என திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத பொருளாதார மந்தநிலையில் தனிநபர் மற்றும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாகும். இது ஒரு தற்காலிகமான நிகழ்வே. பொருளாதாரம் மீண்டு எழும் போது, நமக்கான வாய்ப்புகளும், வருமானங்களும் சிறப்பாக அமையும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கொரோனா வைரஸ் உலக சந்தையை நெருக்குகிறதா ?

கொரோனா வைரஸ் உலக சந்தையை நெருக்குகிறதா ?

Is Coronavirus hitting the Global Stock Market Indices ?

கடந்த இரண்டு வருடமாக இந்திய பங்குச்சந்தையில் பெருவாரியான பங்குகளின் ஏற்றம் என பெரிதாக எதுவும் நடைபெறவில்லை. குறிப்பிட்ட சில பெருநிறுவன பங்குகளின் விலை ஏற்றதால், ஒட்டுமொத்த சந்தை குறியீடு (Nifty50, BSE Sensex 30) உயர்ந்துள்ளது. மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை எனலாம். இது போன்ற பங்குகளில் முதலீட்டு வாய்ப்பு உள்ளதா என கேட்டால், முழுமையான அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) தான் தீர்வாக அமையும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஏனெனில், பொருளாதார தேக்கம் மற்றும் வீழ்ச்சி போன்ற சமயங்களில் பெரும்பாலான பங்குகளின் விலை குறைந்து தான் காணப்படும். ஆனால் அனைத்து பங்குகளும் அதன் உண்மையான விலையில் வர்த்தகமாகாது. எனவே, சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுப்பது அவசியம். இல்லையெனில், நம் முதலீடு நமது கையை சுட்டு கொள்ளும்.

கடந்த இரு மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனாவில் பல உயிர்கள் மடிந்து விட்டன. இதன் தாக்கம் மற்ற நாடுகளிலும் வெகு வேகமாக பரவி வருகிறது. கொரோனாவிற்கும், பங்குச்சந்தைக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பலாம். கொரோனா வைரஸ் பரவி வருவது அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், அடுத்த வல்லரசாக அமையும் சீனாவில் பரவி வருவது தான் சந்தைக்கு பாதகமாக உள்ளது.

சீன பொருளாதாரம் விழுந்தால், அது இந்திய சந்தைக்கு லாபம் என பலர் சொல்லிக்கொள்கின்றனர். உண்மையில், உலகமயமாக்கலுக்கு பிறகு அமெரிக்காவில் ஒன்று நடந்தால் அது இந்தியாவையும் பாதிக்கும். நமது நாட்டின் அரசு கொள்கை மாறும் போது, எங்கோ இருக்கும் ஒரு குட்டி நாட்டையும் பாதிப்படைய செய்யும். சீனாவில் வைரஸ் தாக்குதல் இருந்து வருவது இந்தியாவிற்கு ஏற்றுமதி சாதகம் என நீங்கள் நினைத்தால் அது தான் தவறு. நாம் பல பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்து வந்தாலும், அதற்கான மூலப்பொருட்களை சீனா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து பெற்று வருகிறோம். அமெரிக்கா – ஈரானுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டால், அது நமக்கும் ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்தும்.

நமது நாட்டின் ஒட்டுமொத்த இறக்குமதியில்(Total Imports) (2018ம் ஆண்டு முடிவு) சீனாவின் பங்களிப்பு 15 சதவீதமும், அமெரிக்கா 6.5 சதவீதம், சவுதி அரேபியா 5.7 சதவீதம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 5.4 சதவீதம் மற்றும் ஈராக் 4.6 சதவீத அளவிலும் நடந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் நாடுகளிடையே வர்த்தகம் உள்ளதை நினைவில் கொள்ளவும். ஏற்றுமதியில்(Exports) நாம் அமெரிக்க நாட்டிற்கு தான் அதிகமாக அனுப்புகிறோம்.

கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல மற்ற நாடுகளுக்கு செல்கின்ற நிலையில், வர்த்தகம் சம்மந்தமாக பல தொழில்புரிபவர்கள் பயணம் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். இது போல பல நாடுகளில் தற்சமயம் மிகுந்த கட்டுப்பாடுகளும் உள்ளது. நம் நாட்டிற்கு தேவையான உலோகங்கள் மற்றும் மருத்துவ துறைக்கான மூலப்பொருட்கள் சீனாவில் இருந்து தான் வந்து கொண்டிருக்கிறது. இதன் தேவை அதிகமாக இருந்தும், இறக்குமதி அளவு குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல பொருட்களின் மீது விலையர்வு ஏற்படும்.

இதன் பாதிப்பு அடுத்து வரும் இரு காலாண்டுகளில் நிறுவனத்தின் நிதி அறிக்கையை அலசினால் தெரிய வரும். வைரஸ் தாக்குதல் பதற்றத்தினால் பங்குச்சந்தை விழுந்தாலும், உண்மையில் நிறுவன காலாண்டு முடிவுகள் வரும் போது தான், அந்த பங்குகளின் விலை மாற்றம் தெரிய கூடும்.

கொரோனா வைரஸ் வெடிப்பு ஒரு தொற்று நோயாக(Pandemic) மாற வாய்ப்புள்ளதாக மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்தகைய நிலை ஏற்பட்டால், அது மிகப்பெரிய விளைவை உலகளவில் நிகழ்த்தும். இதன் காரணமாக நடப்பாண்டில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு, உலக பொருளாதாரமும் பலவீனமடைய கூடும் என மூடிஸ் எச்சரித்துள்ளது. கொரோனா பாதிப்பு உலகளவில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்க வங்கி வாடிக்கையாளர்கள், ரிஸ்க் அதிகம் கொண்ட முதலீட்டு சொத்துக்கள் வாங்குவதை தவிர்க்கலாம் என அமெரிக்காவின் பி.என்.ஒய். மெலன் கூறியுள்ளது.

நேற்றைய( இரவு – 28-02-20) சந்தை முடிவில் அமெரிக்காவின் நாஷ்டாக் குறியீடு 4.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த குறியீடு 13 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. லண்டன் புட்சி குறியீடு 3.5 சதவீதமும், பிரான்சின் சி.ஏ.சி. 3.32 சதவீதமும் மற்றும் ஜெர்மனி நாட்டின் டாக்ஸ் குறியீடு 3.20 சதவீத அளவிலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினத்தில் தற்போது ஜப்பான் நிக்கி 3.5 சதவீதம், ஹாங்காங் ஹேங் செங் 2.5 சதவீதம், தென்கொரியா கோஸ்பி 2.70 சதவீதம், சிங்கப்பூர் ஸ்ட்ரைட் டைம்ஸ் 2.19 சதவீதம் என இறக்கம் கண்டுள்ளது.

நல்ல நிறுவன பங்குகளை பட்டியலிடுங்கள். உபரி பணத்தை ஒதுக்குங்கள். பங்கு விலை குறைகிறதே என எல்லா பங்குகளையும் வாங்காதீர்கள். அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் பங்குகளை கவனியுங்கள். பணபலமும், நேர்த்தியான நிர்வாகமும் தான் சந்தையில் நிலைத்து நிற்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

10 நாட்கள் தடை செய்யப்பட்ட சீன பங்குச்சந்தை வர்த்தகம் – கொரோனா வைரஸ்

10 நாட்கள் தடை செய்யப்பட்ட சீன பங்குச்சந்தை வர்த்தகம் – கொரோனா வைரஸ் 

China Stock Exchange Shuts down till February 3 – Novel Coronavirus 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இதுவரை சீனாவில் மட்டும் 213 பேர் இறந்துள்ளனர். 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்நிலையில் சூழலியல் ஆர்வலர்கள் சீனாவில் உள்ள வனவிலங்கு சந்தையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர். பல்லுயிர் மீது பாதிப்பை ஏற்படுத்துவது மற்றும் கடல் உணவு சந்தையில் சட்டவிரோதமாக செயல்பட்டதன் மூலமே கொரோனா வைரஸ் வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். உலக சுகாதார அமைப்பும் அவசர நிலையை அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

சீனாவில் கடந்த 24ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வசந்தகால விழா விடுமுறையாகும். அங்கு இயங்கும் அரசு நிறுவனங்கள் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் இருக்கும். அதே வேளையில் சீன பங்குச்சந்தைக்கு ஜனவரி 24,27, 28,29,30 தேதிகளுக்கு மட்டுமே விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீன பங்குச்சந்தை வர்த்தகம் பத்து நாட்களுக்கு மூடும் சூழ்நிலையை மேற்கொண்டது. சீனாவின் ஷாங்காய் காம்போசிட்(SSE – Shanghai Stock Exchange) குறியீடு கடந்த 23ம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. அன்றைய வர்த்தகத்தின் முடிவில் 2.75 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது ஷாங்காய் குறியீடு.

அதன் பின்னர் சீன பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கப்படவில்லை. மேலும் வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி வரை சீன பங்குச்சந்தைகள் திறக்கப்படாது எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது. இது உலகளவில் ஒரு அசாதாரண சூழலை சந்தை அளவில் உருவாக்கியுள்ளது. சீனாவில் நடைபெறும் எதிர்மறையான நிகழ்வு மற்ற சந்தைகளுக்கு சாதகமாக அமைந்தாலும், இது நீண்டகாலம் நீடிப்பதற்கான விஷயமாக இல்லை.

சீன பங்குச்சந்தை இறங்கும் மற்றும் அதன் பொருளாதாரம் வலுவிழக்கும் என்ற காரணத்தால், அது அமெரிக்க சந்தைகளுக்கு சாதகமாக உள்ளது. உலகளவில் காணப்படும் பொருளாதார மந்தநிலையில், மற்றொரு வீழ்ச்சியை பற்றி பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டு வருகின்றனர். சில நாடுகளில் தொழில் நிறுவனங்களும் பொருளாதார ரீதியாக முன்னெச்சரிகைக்கு தயாராகி வருகிறது.

நடப்பு 2020ம் ஆண்டில் அமெரிக்க பங்குச்சந்தை மற்றும் அதன் பொருளாதாரம் வீழ்ச்சி பெற 26 சதவீதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக ப்ளூம்பெர்க்(Bloomberg) கூறியுள்ளது. அதே வேளையில் இம்முறை பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் அது ஆசியாவிலிருந்து நிகழக்கூடும் என மேற்கோள் காட்டப்படுகிறது. சீன பங்குச்சந்தை வரவிருக்கும் 4ம் தேதி சந்தை துவங்கும் நிலையில் அதன் தாக்கம் தெரியும். இந்திய பங்குச்சந்தை கடந்த ஒன்பது வர்த்தக தினங்களில் 1400 புள்ளிகள் வரை (சென்செக்ஸ்) இறக்கம் கண்டுள்ளது. நாளை நடைபெற உள்ள பட்ஜெட் தாக்கல்(Budget India T20) மட்டுமே, குறுகிய காலத்தில் இந்திய பங்குச்சந்தைக்கு ஊக்குவிப்பதாக இருக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com