Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

தேசிய பென்ஷன் திட்டத்தில்(NPS, UPS) புதிய மாற்றம் – நீங்கள் செய்து விட்டீர்களா ?

தேசிய பென்ஷன் திட்டத்தில்(NPS, UPS) புதிய மாற்றம் – நீங்கள் செய்து விட்டீர்களா ?

Major Changes in the National Pension System – NPS and UPS

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு முன்னர் பழைய ஓய்வூதியத் திட்டம்(OPS) இருந்து வந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில், பென்ஷன் வழங்குவதற்கான நிதியை அரசு ஏற்றுக் கொள்ளும். 2003 மற்றும் 2004ம் ஆண்டுக்கு பின்னர், பழைய பென்ஷன் திட்டத்திற்கு மாற்றாக புதிய அல்லது தேசிய பென்ஷன் முறை(NPS) என்ற திட்டம் வந்தது. இந்த திட்டத்தில் அரசு ஊழியர்களின் தங்களது மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையையும், அரசு சார்பில் ஒரு குறிப்பிட்ட கூட்டுப் பங்களிப்பு தொகையையும் பென்ஷன் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீடு, ஒரு தொகுப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யப்படும்(அரசு பத்திரங்கள், தனியார் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகள், பிற முதலீடுகள்). இதன் மூலம் கிடைக்கப்பெறும் கார்பஸ் தொகை மூலமே, ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படும்.

இன்று இந்தியாவில் பெரும்பாலும் பழைய பென்ஷன் என்ற திட்டம் இல்லை எனலாம்(பாதுகாப்பு துறை உட்பட). மாநில அளவில் CPS(Contributory Pension Scheme) என்ற திட்டம் தனியாக உள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு ஊழியர்கள் மற்றும் சங்கங்கள் வாயிலாக எதிர்ப்பு இருந்தாலும், அரசின் நிதி பொறுப்புடைமை சார்பில் காணும் போது பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே. எனவே, இதனை களையும் பொருட்டு, கடந்த 2024ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதிய முறை(Unified Pension Scheme) என்ற புதிய பென்ஷன் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.  இந்த திட்டம் புதிதாக இருந்தாலும், தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள துணை வடிவம் தான், இந்த UPS பென்ஷன் திட்டம். 

2024-25ம் நிதியாண்டின் முடிவில் தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 14.43 லட்சம் கோடி ரூபாய்(அடல் பென்ஷன் திட்டத்தை தவிர்த்து). இந்த திட்டத்தில் உள்ள பயனாளர்களின் எண்ணிக்கை 2.09 கோடி பேர்(அக்டோபர் 2025 தரவு – அரசு, தனியார் மற்றும் குடிமக்கள் சேர்த்து).   

NPS மற்றும் UPS பற்றிய தகவல்கள், வேறுபாடுகள் மற்றும் எது சிறந்தது என்பது தொடர்பான விவரங்களை பற்றி நாம் ஏற்கனவே எழுதியுள்ளோம். படிப்பதற்கு,

NPS vs UPS – Pension Comparison and Calculator

https://varthagamadurai.com/2025/05/09/nps-vs-ups-pension-calculator/

UPS(Unified Pension Scheme) திட்டத்தில், செப்டம்பர் மாத முடிவு வரை, சுமார் ஒரு லட்சத்திற்கும் குறைவான ஊழியர்களே சேர்ந்திருப்பதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒட்டுமொத்த ஒன்றிய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மட்டும் 24 லட்சம். அதாவது சொல்லப்பட்ட காலம் வரை பதிவு செய்யப்பட்ட UPS சந்தாதாரர்கள் 4% மட்டுமே.

சரி, இந்த புதிய மாற்றத்தை பற்றி பார்ப்போம்…

தேசிய பென்ஷன் திட்டம் துவங்கிய காலத்தில், அரசு ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் அரசின் பங்களிப்பு தொகை என, 100 சதவீதம் அரசு கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டு வந்தது.(Default Scheme: LIC, UTI and SBI Pension Funds). இவற்றில் முதலீட்டின் மீதான எந்த ரிஸ்க் தன்மையும் பெரிதாக இல்லை(அரசாங்கம் திவாலானால் மட்டுமே ரிஸ்க்). அதே வேளையில், முதலீட்டின் வருவாயும் நீண்டகாலத்தில் பெரிதாக வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. 

இதனை களையும் பொருட்டு, பின்னர் பங்குகளிலும், தனியார் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய சில உட்திட்டங்களையும் அரசு இந்த பென்ஷன் திட்டத்தில் அறிமுகப்படுத்தியது. அவை Active Choice, Auto Choice மற்றும் Default Scheme என பிரிக்கப்பட்டது. Active Choice பிரிவில் பங்குகள், அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், பிற முதலீடுகள் என கலவையாக முதலீடு செய்யலாம். இருப்பினும், இது பெரும்பாலும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே சாத்தியமானதாக அமைந்தது. நிதி பாதுகாப்பு கருதி, அரசு ஊழியர்களுக்கு இந்த வசதி அவ்வளவு எளிமையாக்கப்படவில்லை எனலாம்.

Auto Choice ஐ பொறுத்தவரை சுழற்சி முறையில் மேலே சொல்லப்பட்ட முதலீட்டு சாதனங்களில்(Equity, Corporate Bonds, Govt. Securities, Alternative Investment funds) கலவையாக முதலீடு செய்யப்படும். அதாவது ஒருவரின் வயதை அடிப்படையாக கொண்டு இங்கே முதலீட்டை பண்ட் நிர்வாகம் மேற்கொள்ளும். அதற்கேற்றாற் போல Conservative(LC25), Moderate(LC50) மற்றும் Aggressive(LC75) என்ற நிலைப்பாடுகளில் ஏதேனும் ஓன்றை நாம் தேர்ந்தெடுத்தாக வேண்டும். உதாரணமாக LC25 நிலைப்பாட்டை நாம் தேர்ந்தெடுத்தால், 35 வயது வரை – 25 சதவீதத் தொகை பங்குகளிலும், பிற தொகை அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். 35 வயதுக்கு பின்னர் பங்குகளின் தொகை குறைக்கப்பட்டு பெரும்பாலும் கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யப்படும்(Portfolio Rebalancing – Risk Management). 

Default Scheme என்பது நாம் ஏற்கனவே சொன்னது போல, தேசிய பென்ஷன் திட்டத்தின் துவக்க காலத்தில் வந்தது தான். 100 சதவீத தொகையும் அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். ரிஸ்க் குறைவு, பெரிய அளவில் வருவாய் வளர்ச்சி இருக்காது. 

நடப்பு காலத்தில் மியூச்சுவல் பண்டுகளிலும், பங்குச்சந்தையிலும் முதலீட்டை மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டின் மீதான விழிப்புணர்வும் கிடைக்கப் பெறுகிறது(அரசு சார்பிலும் விளம்பரம் செய்யப்படுகிறது). இதன் காரணமாக தேசிய பென்ஷன் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களும் தங்களது NPS அல்லது UPS திட்டத்தில் சற்று ரிஸ்க் எடுத்து வருமானம் ஈட்ட விரும்புகின்றனர். இந்த வாய்ப்பு, கடந்த அக்டோபர் மாதம் வரை கிட்டாமல் இருந்த நிலையில், அக்டோபர் 24ம் தேதி அன்று ஒன்றிய நிதி அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் மீண்டும் ஒரு புதிய உட்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

Balanced Life Cycle 50 (Modified Version of LC50):

இத்திட்டம், பங்குகளில் கணிசமான பங்களிப்பை மேற்கொள்ள ஏதுவாக உள்ளது. அதாவது Balanced LC50 திட்டத்தில் உங்களது 45 வயது வரை – 50 சதவீதத் தொகை பங்குகளிலும், 30 சதவீதத் தொகை தனியார் கடன் பத்திரங்கள் மற்றும் 20 சதவீதத் தொகை அரசு கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். அதன் பின்னர், படிப்படியாக ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற அடிப்படையில் பங்குகளை குறைத்து கடன் பத்திரங்களில் உங்களது 55 வயது வரை முதலீடு செய்யப்படுகிறது. 

55 வயது முடியும் தருவாயில், பங்குகள் 35%, தனியார் கடன் பத்திரங்கள் 10 சதவீதம் மற்றும் அரசு கடன் பத்திரங்கள் 55 சதவீதம் என்ற அடிப்படையில், உங்களது NPS போர்ட்போலியோ மறு சமநிலைப்படுத்தப்படும்(Portfolio Rebalancing). இதற்கு பிறகான காலத்திலிருந்து உங்களது ஓய்வு காலம் வரை பெரும்பாலும் அரசு பத்திரங்களில் உங்கள் முதலீடு இருக்கும். 

நீங்கள் ஏற்கனவே மேலே சொன்ன வேறு ஏதேனும் உட்திட்டத்தில் தற்போது இருந்தால், நடப்பு மாதம் முதல் CRA NSDL தளத்தில் சென்று இந்த புதிய திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். Balanced LC50 திட்டம், NPS மற்றும் UPS என இரண்டு முறைகளுக்கும் பொருந்தும். இந்த திட்டத்தில் அரசு ஊழியர் மட்டுமல்லாது தனியார் மற்றும் இந்திய குடிமக்கள் யாவரும் மாற்றிக் கொள்ளலாம் என்பது இன்னொரு சிறப்பு.

Balanced LC50 திட்டத்தின் மூலம் உங்களது ஓய்வுக்கால கார்பஸ்(Retirement Corpus) தொகையில் நல்ல வளர்ச்சியும், ஓய்வுகாலத்திற்கான பென்ஷன் தொகையும் சற்று கூடுதலாக கிடைக்க வழிவகை செய்யும்.

சுற்றறிக்கை விவரம்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182253&reg=3&lang=2

சுற்றறிக்கையை தமிழில் படிக்க…

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182536&reg=3&lang=2

  

சரவணகுமார் நாகராஜ்,

Registered NPS Distributor (ARN-158941)

Distributor Code: BZBPS3240P00158941

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்தியாவில் நீரிழிவு என்ற சர்க்கரை நோய் – துறை சார்ந்த அலசல்

இந்தியாவில் நீரிழிவு என்ற சர்க்கரை நோய் – துறை சார்ந்த அலசல் 

Diabetes in India – Sectoral Analysis

உலக நீரிழிவு நாள், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டு நடத்தப்பட்ட Lancet – Medical Journal ஆய்வின் படி, உலகளவில் நீரிழிவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மட்டும் 82.8 கோடி. இவற்றில் நான்கில் ஒரு பங்கு அளவு இந்தியாவில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்க தரவாக வெளிவந்துள்ளது. அதாவது இந்தியாவில் மட்டும் நீரிழிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 21.2 கோடி. சீனாவில் இது 14.8 கோடியாக உள்ளது. உலகின், ‘நீரிழிவு நோயின் தலைநகரமாக’ இந்தியா நினைவூட்டப்படுகிறது. கடந்த 35 ஆண்டுகளில் உலக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் சராசரியாக நூறில் பதினான்கு பேருக்கு நீரிழிவு நோய் உள்ளது. பாதிக்கப்பட்டோர்களில் 60 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் தான் அதற்கான மருத்துவத்தையோ, வாழ்வியல் முறையையோ பேணுகின்றனர் என்கிறது இந்த ஆய்வுக்கட்டுரை. இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களின் விகிதம் 21.5 சதவீதமாகவும், பெண்கள் 23.7 சதவீதமாகவும் இருக்கின்றனர். நகர்ப்புறங்களில் 29.5 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 15 சதவீதமாகவும் காணப்படுகிறது. அதே வேளையில் மேற்குலக நாடுகளில் உள்ளது போல, டைப்-1 நீரிழிவு நோய் இந்தியாவில் பெரும்பாலும் இல்லை என்பதும், பாதிக்கப்பட்டோரில் சுமார் 95 சதவீதம் பேருக்கு வாழ்வியல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் சார்ந்த டைப்-2 நீரிழிவு இருப்பதும் ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 30 சதவீத மக்கள் தங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்பதனை அறியாமலே, தங்களது வாழ்க்கையை தொடர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அதிகரித்த எண்ணிக்கைகு காரணமாக சொல்லப்படுவது மரபணு, நகரமயமாக்கலுக்கு பிறகான உணவுப்பழக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைகள்(அதிகப்படியான உணவு எடுத்தல், குறைவான உழைப்பு மற்றும் தூக்கமின்மை, உளவியல் சார்ந்த சிக்கல்கள்) தான். பக்கவாதம், தமனி நோய், நுரையீரல் அடைப்பு, நாள்பட்ட சிறுநீரக நோய், இரும்புச்சத்து குறைபாடு, பிறந்த குழந்தைகளுக்கு காணப்படும் குறைபாடு ஆகியவற்றுக்கு மூலமாக இந்த வாழ்வியல் மற்றும் உணவு முறை சார்ந்த நீரிழிவு காரணமாகி விடுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் திட்டங்களையும் அரசு ஏற்படுத்தியுள்ளது. 1987ம் ஆண்டு தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் தேசிய நீரிழிவு கட்டுப்பாட்டு திட்டம் முன்னரே துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவை முறையான உடற் பரிசோதனை மற்றும் உணவுமுறை ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. மேற்குலக நாடுகளில் இவற்றுக்கான மருத்துவ செலவு அதிகமிருந்தாலும், இந்தியா, சீனா, இந்தோனேஷியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் இதற்கான செலவினம் சற்று குறைவே. அதாவது இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 10,000 ரூபாய்(தனிநபர்) என்ற விகித அடிப்படையில் இது இருந்து வருகிறது.

இந்தியாவின் நீரிழிவு சந்தை மதிப்பு சுமார் ரூ.31,600 கோடி(2024 தரவு). இது 2034ம் ஆண்டு வாக்கில் 1,39,400 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு சராசரியாக 16 சதவீத வளர்ச்சி. நீரிழிவு நோய்க்கான மருந்துகளின் இந்திய சந்தை மதிப்பு மட்டும் சுமார் 23,800 கோடி ரூபாய். இது அமெரிக்காவில் சுமார் 3.58 லட்சம் கோடி ரூபாயாக காணப்படுகிறது. மாறுபட்ட வாழ்க்கை முறைகள் மற்றும் உணவுப்பழக்க முறைகளின் அதிகரிப்பு காரணமாக நீரிழிவு நோய் எதிர்ப்புக்கான மருந்துகளின் தேவையும் அதிகரித்து வந்துள்ளது.

நோய் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், நவீன மருத்துவத்தின் வளர்ச்சியும், பிற மருத்துவ முறைகளின்(அலோபதி தவிர்த்து) ஆய்வும் அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறையில் காணப்படும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், டிஜிட்டல் வழி சிகிச்சை, டெலிமெடிசின் போன்ற மேம்பாடுகள் கிராமப்புறங்கள் வரை கொண்டு செல்கிறது. கடந்த சில வருடங்களாக சுகாதாரத் துறையில் தேவையான வசதியை மேம்படுத்த அரசும் முதலீடு(உட்கட்டமைப்பு, புதிய சாதனங்கள், காப்பீடு மற்றும் மலிவான மருந்துகள்) செய்து வருகிறது.   

இந்தியாவில் நீரிழிவு நோய்க்கான மருத்துவத்தில் பெரும்பாலும் இன்சுலின் மருந்து அல்லாத மாத்திரை வடிவிலான சந்தை தான் அதிகரித்து காணப்படுகிறது. இவற்றில் முதன்மை மருந்துகளாக மெட்ஃபார்மின்(Metformin), சல்போனிலூரியா(Sulfonylureas), டிபிபி(Dipeptidyl peptidase-4), ஆல்பா-குளுக்கோசிடேஸ் தடுப்பான்கள்(Alpha-glucosidase) மற்றும் தியாசோலிடினியோன்கள்(TZDs) ஆகியவை உள்ளன. உலகளவில் மெட்ஃபார்மின்(Metformin) மருந்துச் சந்தை மதிப்பு மட்டும் 36 கோடி அமெரிக்க டாலர்கள். இவற்றில் இந்தியாவின் பங்களிப்பு(உற்பத்தி மற்றும் நுகர்வு) மட்டும் 46 சதவீதமாக உள்ளது. 

இந்த மருந்து தயாரிக்கும் API நிறுவனங்களை இந்தியாவில் காணும் போது, Wanbury, Aarti Drugs, USV, Harman Finochem, Exemed Pharma ஆகியவை உள்ளன. அதே வேளையில் ஒட்டுமொத்த நீரிழிவு சந்தைக்கான இந்திய பெரு நிறுவனங்கள் என காணுகையில் Sun Pharma, Dr. Reddy’s Lab, Biocon, Novo Nordisk, Sanofi India, Glenmark Pharma, Johnson & Johnson, Abbott India, Lupin, Torrent Pharma, Merck, Cadilla, AstraZeneca ஆகிய நிறுவனங்கள் உள்ளன. 

மெட்ஃபார்மின்(Metformin) மருந்து தயாரிப்பில் முதல் 5 நிறுவனங்கள் மட்டுமே, ஒட்டுமொத்த சந்தையில் 60 சதவீத பங்களிப்பை(Market Share) கொண்டுள்ளன. USV Private Ltd  22 சதவீத பங்களிப்புடன், இந்த மருந்து பிரிவில் முன்னிலையில் உள்ளது. இதற்கடுத்தாற் போல சன் பார்மா (Sun Pharma) 15%, Zydus Cadila 12%, Cipla 10% மற்றும் Dr.Reddy’s 8 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. இப்பிரிவின் பெரும்பாலான மாத்திரைகள் ஒரு ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது(மாத்திரை ஒன்றுக்கு). அரசின் மானிய விலையில் காணும் போது ஒரு மாத்திரையின் விலை இரண்டு ரூபாய்க்கும்  குறைவாகவே உள்ளது. பிரபல பிராண்டுகளாக Glycomet(USV Product), Metformin-Sun, Emsulide (Sun Pharma), Zita-met(Zydus Brand), Ciplament, Glyciphage(Cipla Product), Metformin-DR, Trijardy (Dr. Reddy’s) உள்ளன. குறிப்பிட்ட தயாரிப்பில் தனி நிறுவன காப்புரிமை இல்லாததால், இது 100 சதவீத பொதுவான தயாரிப்பு சந்தையாக(Generic Medicine) உள்ளது. இதுவே சில நிறுவனங்களுக்கு பாதகமாக உள்ளது. அதே வேளையில் மருந்துகள் குறைவான விலையில் கிடைக்கப்பெறுவதால், இதன் பிராண்டுகளும் குறிப்பிடத்தக்க வருவாயை ஈட்டுகின்றன.

அரசு சார்பில் மானிய விலையில் மருந்துகளை வழங்க பல்வேறு விநியோகத் திட்டங்கள் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் நீரிழவுக்கான கட்டுப்படுத்தல் மற்றும் பராமரிப்புகளையும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக மருந்துகள் போதுமான அளவு கிடைக்கப்பெறுவதனையும் அரசு கண்காணித்து வருகிறது.

உலக நீரிழிவு மருத்துவ சாதனங்களின்(Medical Devices) சந்தை மதிப்பு சுமார் 30 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவற்றில் இந்தியாவின் பங்களிப்பு மட்டும் 7.5 சதவீதம், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா 20 சதவீதத்தை பங்களிப்பை கொண்டுள்ளது. 2024ம் ஆண்டு தரவின் படி, இந்திய இன்சுலின் சந்தையின் மதிப்பு சுமார் 1.02 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் குளுக்கோஸ் கண்காணிப்பு சார்ந்த சாதனங்களின் சந்தை மதிப்பு 5.6 கோடி அமெரிக்க டாலர்கள்.          

நாடு முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த டெலிமெடிசின் மற்றும் ஏ.ஐ. மூலம் இயக்கப்படும் நவீன சிகிச்சை கண்காணிப்பு ஆகியவற்றால் இத்துறையின் வளர்ச்சியும் டிஜிட்டல் வழி சுகாதார முன்னேற்றமாக வடிவமைக்கப்பட உள்ளது. 

(தகவல்கள் மற்றும் தரவுகள்): Expertmarketreseach, JETIR Report, ICMR, CDSO, Lancet, IDMA)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2024-25ம் நிதியாண்டில் நேஷனல் அலுமினியம்(நால்கோ) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,268 கோடி

2024-25ம் நிதியாண்டில் நேஷனல் அலுமினியம்(நால்கோ) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,268 கோடி  

NALCO India reported a Net Profit of Rs.5,268 Crore in the FY 2024-25 Consolidated – Results

ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த முதன்மை அலுமினிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினிய கம்பெனி(National Aluminium Company) நிறுவனம் தனது 2024-25ம் நிதியாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டிருந்தது. நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பாக்சைட்- அலுமினா – அலுமினிய – மின்சார வளாகங்களை கொண்ட நிறுவனமாகவும் நால்கோ உள்ளது.

கடந்த 1981ம் ஆண்டு வாக்கில் துவக்கப்பட்ட இந்நிறுவனம் அலுமினா மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதன் உட்பிரிவுகளாக அலுமினிய கம்பிகள், உருட்டப்பட்டவை, கீற்றுகள்(Strips), பில்லெட்டுகள், கால்சின் செய்யப்பட்ட அலுமினா மற்றும் இதர அலுமினா பொருட்கள் உள்ளது. உலகளவில் குறைந்த விலையில் அலுமினியத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் நால்கோ இருக்கிறது. 

பொதுவாக பாக்சைட், அலுமினியம் உற்பத்திக்கான மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. அதே வேளையில் அலுமினியத்தின் தேவை கட்டுமானம், மின்னணுவியல், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்படுகிறது. வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பாக்சைட் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற பகுதிகளில் பாக்சைட் அமைந்துள்ளன. இவற்றில் ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது கவனிக்கத்தக்கது.

நால்கோ நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் உள்நாட்டில் தான் பெறப்படுகிறது. ஏற்றுமதியில் இதன் வருவாய் முப்பது சதவீதமாக இருந்துள்ளது. 2024-25ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.16,788 கோடியாகவும், செலவினம் 9,280 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் இயக்க லாபம் 7,508 கோடி ரூபாயாகவும், இயக்க லாப விகிதம்(OPM) 45 சதவீதமாகவும் இருக்கிறது. பொதுவாக இத்துறையில் இயக்க லாப விகிதம் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மூலப்பொருட்களுக்கான செலவினம் உலகளாவிய சந்தையை சார்ந்திருப்பது தான். 

2024-25ம் நிதியாண்டில் நிறுவனத்தின் இதர வருவாய் 357 கோடி ரூபாயாகவும் நிகர லாபம் ரூ.5,268 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஈவுத்தொகை விகிதம்(Dividend Yield) தற்போதைய பங்குவிலையில் சராசரியாக நான்கு சதவீதத்திற்கும் மேலாக உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 2024-25ம் நிதியாண்டு முடிவில் ரூ.16,887 கோடி. நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 சதவீதமாகவும், இதுவே பத்து வருடங்களில் 9 சதவீதமாகவும் இருந்துள்ளது. லாப வளர்ச்சியை காணுகையில், ஐந்து வருட காலத்தில் 108 சதவீதமாகவும், இதுவே 10 வருடங்களில் 16 சதவீதமாகவும் இருந்துள்ளது.

2025ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு(Cash Equivalents) ரூ. 5,427 கோடி. கடந்த காலத்தில் நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) கணிசமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் நிறுவனர்களை பொறுத்தவரை, இது அரசு பொதுத்துறை நிறுவனம் என்பதால், ஒன்றிய அரசிடம் 51 சதவீத பங்குகள் கைவசம் உள்ளது. அன்னிய மற்றும் உள்நாட்டு நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களிடம் சராசரியாக 16 சதவீதப் பங்குகள் உள்ளது. 

நால்கோ நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 33,765 கோடி ரூபாய். நிறுவனத்தின் பி.இ. விகிதம் தற்போது 6.5 என்ற மடங்குகளில் உள்ளது(மே 2025). பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 20 சதவீதமாகவும், பத்து ஆண்டுக்காலத்தில் 14 சதவீதமாகவும் இருக்கிறது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 121 மடங்குகளிலும், கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.01 என்ற அளவிலும் உள்ளது. 

நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.97 என சொல்லப்பட்டிருந்தாலும், தற்போதைய பங்கு விலை(ரூ.184), அதன் தள்ளுபடி மதிப்பை(ரூ.226) காட்டிலும் குறைவாக தான் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. 

நிறுவனத்திற்கு கடன் ஏதும் பெரிதாக இல்லையென்றாலும், துறை சார்ந்த ரிஸ்க் தன்மை உலகளாவிய சந்தையை சார்ந்துள்ளது. இதன் காரணமாக மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செலவினம் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படலாம். எனவே இதன் லாப விகிதமும் ஒவ்வொரு நிதியாண்டிலும் மாறுபடக்கூடிய நிலை உள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வுக்கானக் கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தேசிய பென்ஷன் திட்டமும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமும் – கணக்கீடு

தேசிய பென்ஷன் திட்டமும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமும் – கணக்கீடு 

National Pension System(NPS) vs Unified Pension Scheme(UPS) –  Calculation & illustration

இந்த பதிவு, நாட்டின் ஓய்வூதியத் திட்டத்தை பற்றி விரிவாக கூறவில்லை. மாறாக NPS மற்றும் UPS ஆகியவற்றுக்கு இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகள் மற்றும் கணக்கீட்டை பயன்படுத்த உதவுகிறது.

2003ம் ஆண்டுக்கு பிறகு, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம்(OPS) மாற்றியமைக்கப்பட்டு, தேசிய ஓய்வூதியத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்ப நிலையில். புதிய பென்ஷன் திட்டம் என வழக்காக சொல்லப்பட்ட நிலையில், பின்னர் தேசிய பென்ஷன் திட்டம்(NPS) என்ற முறை அறியப்பட்டது. அதாவது பழைய பென்ஷன் திட்டத்தில், ஓய்வூதியத்திற்காக எந்த நிதிப் பங்களிப்பும் தொழிலாளர்களிடம் இருந்து பெறப்படுவதில்லை. 

பழைய பென்ஷன் திட்டத்தில், ஓய்வூதியத்திற்கான நிதியை அரசே ஏற்றுக் கொள்ளும். தொழிலாளர்களிடம் இருந்து மாதந்தோறும் பெறப்படும் பி.எப்.(சேமநல நிதி) பங்களிப்பும் வட்டியுடன் சேர்த்து பின்னர் அவர்களுக்கே அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தேசிய பென்ஷன் திட்டத்தில் அப்படியொன்றும் இல்லை. 

2004ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பென்ஷன் திட்டத்தில், ஊழியர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் 10 சதவீத பங்களிப்பும், அரசின் சார்பில் 10 சதவீத பங்களிப்பும் என கூட்டாக ஒரு தொகை ஒதுக்கப்பட்டு பென்ஷனுக்கான ஒரு திட்டத்தில்(Pension Funds) முதலீடு செய்யப்படும். பின்னர் ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான நிதியாக கருதப்பட்டு, ஊழியர் தனது 60 வயதை கடந்தவுடன், சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து மாதந்தோறும் வட்டி வருவாய் அளிக்கப்படும். தற்போது தேசிய பென்ஷன் திட்டத்திற்கான அரசின் பங்களிப்பானது 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய பென்ஷன் திட்டத்தை பொறுத்தவரை ஊழியர் ஒருவர் தனது பணிக்காலம் முழுவதும் வேலை பார்த்து ஓய்வு பெறும் நிலையில், சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து 60 சதவீதத் தொகையை ரொக்கமாகவும், மீதமுள்ள 40 சதவீதத் தொகைக்கு வட்டி வருவாயும்(Annuity Plan – Rates) பெறலாம். அதாவது ஓய்வு பெற்றாலும் அவரால் மீதமிருக்கும் 40 சதவீதத் தொகையை முழுவதுமாக பெற இயலாது. இந்த தொகை ஓய்வூதியத்தை உறுதிப்படுத்துவதற்காகவே செய்யப்பட்டுள்ள ஒரு முறை. 

அதே வேளையில் ஓய்வு பெறும் ஒருவர் பின்னாளில் இறந்து விட்டால், அவருடைய நாமினிக்கு இரு வாய்ப்புகள் தரப்படுகிறது. அதாவது, தனது துணையை போலவே, ஓய்வூதியம் பெற(40% தொகையில் வட்டி வருவாய்) விரும்புகிறாரா அல்லது முழுத்தொகையை பெற விரும்புகிறாரா என்பது தான்.   

ஊழியர் ஒருவர் தனது பணிக்காலத்தை முழுமை செய்யாத நிலையில், சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியிலிருந்து 20 சதவீதத் தொகை மட்டுமே அவருக்கு ரொக்கமாக வழங்கப்படும். மீதமிருக்கும் 80 சதவீத தொகையில்(80% Annuity Plan) வட்டி வருவாய் அளிக்கப்படும். மாறாக, அவர் 20 சதவீதத் தொகையை உடனே பெற விரும்பாவிட்டால், 60 வயது முடியும் வரை அவர் சொல்லப்பட்ட தொகுப்பு நிதிக்காக தனது பங்களிப்பை வழங்கலாம். இல்லையெனில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையாக ரூ.1000 ஐ மட்டும் செலுத்தி கணக்கை செயல்படுத்தும் நிலையில்(NPS Tier- I Activation) வைத்துக் கொள்ளலாம். 

பொதுவாக தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் நிலையான ஓய்வூதியம் என்ற ஒன்றில்லை. மாறாக சேர்க்கப்பட்ட தொகுப்பு நிதியும், அவற்றின் வளர்ச்சி(அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்கள், பங்குகளில் முதலீடு) – Retirement Corpus மற்றும் வட்டி விகிதத்தை(Annuity Rates) பொறுத்தது தான். அரசு ஊழியர்களுக்கு மட்டுமே என இருந்த தேசிய பென்ஷன் திட்டம் பின்னர் 2009ம் ஆண்டு வாக்கில் தனியார் துறை ஊழியர்கள், சுய தொழில் புரிபவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் என பெரும்பாலான இந்தியக் குடிமக்களுக்கு அறிமுகமானது.

பழைய பென்ஷன் திட்டத்தை ஒப்பிடும் போது, தேசிய பென்ஷன் திட்டம் பாதுகாப்பற்றதாகவும், நிலையான வருமானத்தை ஓய்வுக் காலத்தில் அளிப்பதில்லை எனவும் அரசு ஊழியர் சங்கங்களும், தொழிலாளர்களும் விமர்சித்து வந்த நிலையில், 2024ம் ஆண்டு ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம்(Unified Pension Scheme) அறிமுகமானது. இருப்பினும் இவை நடைமுறைக்கு வருவதற்கு ஓராண்டுக்கு மேலாகியுள்ளது. 

பழைய, தேசிய மற்றும் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டங்களின் பயன்கள் மற்றும் அவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

NPS vs UPS கணக்கீடு (தோராயமாக மட்டுமே):

நீங்கள் உள்ளீட(Inputs) வேண்டியவை:

உங்கள் பெயர், பிறந்த தேதி, வேலைக்கு சேர்ந்த தேதி, ஓய்வு பெறக்கூடிய நாள், இதுவரை பணியாற்றிய ஆண்டுகள், இன்னும் பணியாற்ற வேண்டிய வருடங்கள், நடப்பு என்.பி.எஸ். கார்ப்ஸ் தொகை, அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி சதவீதம்.

[Name, DOB, Date of Joining, Date of Retirement, Completed Service, Years to Retirement, Current NPS Investment Corpus value, Current Basic Pay and Dearness Allowance % ]

எச்சரிக்கை: மற்றவற்றை பதிவிட அல்லது திருத்த முயற்சிக்க வேண்டாம். கணக்கீட்டில் பிழை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

Warning: Do not attempt to input or edit others. There is a possibility of error in the Calculation Sheet.

NPS vs UPS – Calculator – Spreadsheet

மேலும் விவரங்களுக்கு அரசின் சுற்றறிக்கையை முழுவதுமாக படித்து அறிந்து கொள்ளவும். அதற்கான இணைப்பும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

வேறுபாடு சார்ந்த தகவல் பெறப்பட்ட இணைப்பு: 

https://proteantech.in/articles/ops-vs-nps-vs-ups-retirement-plan-em1822025/

UPS Circular Document:

PFRDA UPS Rules (1)

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

எச்.டி.எப்.சி. வங்கியை தோற்றுவித்த ஐ.சி.ஐ.சி.ஐ. – ஒரு வங்கியின் வரலாறு

எச்.டி.எப்.சி. வங்கியை தோற்றுவித்த ஐ.சி.ஐ.சி.ஐ. – ஒரு வங்கியின் வரலாறு 

HDFC was promoted by ICICI(Industrial Credit and Investment Corporation of India)

என்ன, எச்.டி.எப்.சி. வங்கியை ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனம் தோற்றுவித்ததா என கேள்வி எனலாம். வாருங்கள் எச்.டி.எப்.சி.யின் வரலாற்றை பார்ப்போம். 

குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவர் திரு.ஹஸ்முக் பரேக்(Hasmukhbhai Parekh). நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவர், லண்டன் பொருளாதாரக் கல்வி மையத்தில் தனது படிப்பை முடித்து விட்டு, பின்னர் மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவும், பங்குச்சந்தை தரகு நிறுவனத்தில் நிதிச்சந்தை சார்ந்தும் தனது அனுபவங்களை மெருகேற்றிக் கொண்டார். 1956ம் ஆண்டு வாக்கில் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணிபுரிய இணைந்தார். 

அப்போது ஐ.சி.ஐ.சி.ஐ.(Industrial credit and Investment corporation of India) ஒரு அரசு பொதுத்துறை நிறுவனமாகும்(தனியார் நிறுவனம் அல்ல). இந்தியாவில் உள்ள சில அரசு பொதுத்துறை வங்கிகளும், உலக வங்கியும் ஒன்றிணைந்து உருவாக்கியதே ஐ.சி.ஐ.சி.ஐ. இந்நிறுவனத்தின் முதல் தலைவராக திரு. ஆற்காடு ராமசாமி முதலியார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1994ம் ஆண்டில் துவக்கப்பட்ட ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இதன் துணை நிறுவனமாகும். 

பின்னர் காலப்போக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனமும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும் இணைக்கப்பட்டு, தற்போது இந்தியப் பன்னாட்டு தனியார் வங்கிக் குழும நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தின் வேலை பார்ப்போரின் எண்ணிக்கை மட்டும் 1,35,900 பேர். முன்னர் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தில் துணை பொது மேலாளராக பணிபுரிந்த ஹஸ்முக் பரேக் அவர்கள், பின்னர் அதன் தலைவராகவும், நிறுவன இயக்குனர் குழுவின் முக்கிய பதவியையும் வகித்து 1976ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இருப்பினும் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனம் இவரது நிதி சார்ந்த ஆலோசனையை பெற்றுக் கொண்டு தான் இருந்துள்ளது.

நிதித்துறையில் தனக்கு கிடைத்த அளப்பரிய அனுபவத்தை கொண்டு, தனது 66வது வயதில் ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தை போன்று ஒரு நிதி சார்ந்த வங்கியை துவக்க அவர் விரும்பினார். அந்த நிறுவனத்தின் பெயர் தான், ‘எச்.டி.எப்.சி.(HDFC)’. அப்போதைய அரசின் நிதிச் செயலாளராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடம் ஹஸ்முக் பரேக் ஒருமுறை கூறியது, “எச்.டி.எப்.சி., இந்திய மக்களிடம் அறியப்படாத ஒரு நிறுவனம். ஆனால் இந்த முயற்சி வெற்றி பெறுமா என எனக்கு தெரியவில்லை”. இருப்பினும் நிறுவனத்தின் திட்டத்தில் எந்த மாற்றமுமின்றி கடந்த 1977ம் ஆண்டு இந்திய வணிக சமூகத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் சில அன்னிய நிறுவன முதலீடுகளுடன் எச்.டி.எப்.சி.(Housing Development Finance Corporation) நிறுவனம் துவங்கப்பட்டது. 

அப்போது திரு.ஹஸ்முக் பரேக் அவர்களை மரியாதை செய்யும் விதமாக ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனமும் எச்.டி.எப்.சி. நிறுவனத்தை பற்றி விளம்பரப்படுத்தி மக்களுக்கு கொண்டு சென்றது கவனிக்கத்தக்கது. இந்திய நடுத்தர மக்களுக்கு வீடு கட்ட கடன் வழங்கும் ஒரு நிதி நிறுவனம் வேண்டுமெனவும், அது தனது கல்லூரிக்கால விருப்பம் எனவும் திரு.ஹஸ்முக் பரேக் ஒரு முறை கூறியுள்ளார். தனது ஓய்வுகாலத்தில் துவக்கிய ஒரு வங்கி, இன்று இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது. அதாவது மிகப்பெரிய ஒரு வங்கியில் வேலை பார்த்த இவர், அந்த வங்கியின் நிதி சார்ந்த மதிப்பை காட்டிலும் ஒரு வங்கியை ஏற்படுத்தியது இந்திய நிதித்துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் மற்றும் சிறப்பம்சம் கொண்ட அடமான நிதி(வங்கி) நிறுவனமாகவும் எச்.டி.எப்.சி. இருந்துள்ளது. இன்று இதன் சொத்து மதிப்பு சுமார் 420 பில்லியன் அமெரிக்க டாலர்கள். நிறுவனத்தின் இந்திய சந்தை மூலதன மதிப்பு(Market Cap) 12.51 லட்சம் கோடி ரூபாய். 2024ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் மட்டும் சுமார் 2.83 லட்சம் கோடி ரூபாய். எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் எச்.டி.எப்.சி. வங்கி(HDFC Bank). 2022ம் ஆண்டு வாக்கில் இரு நிறுவனமும் இணைக்கப்பட்டு தற்போது எச்.டி.எப்.சி. வங்கி என இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 2.13 லட்சம் பேர். எச்.டி.எப்.சி. வங்கி இந்தியாவில் மட்டுமில்லாமல், அமெரிக்காவின் நியூயார்க் பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த வங்கிக் குழுமம் இன்று வங்கி சேவை, முதலீட்டு வங்கி சேவை, அடமானம், தனியார் முதலீடு, மியூச்சுவல் பண்டு, காப்பீடு, பங்கு தரகு, டிஜிட்டல் நிதி சேவை, ரிஸ்க் மேலாண்மை மற்றும் முதலீட்டு மேலாண்மை என பல துணை நிறுவனங்களை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது.

2024ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) மட்டும் ரூ.4.55 லட்சம் கோடி. செப்டம்பர் 2024 முடிவில் நிறுவனத்தின் வாராக்கடன் தன்மை(Gross NPA) 1.36 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் தன்மை(Net NPA) 0.41 சதவீதமாகவும் உள்ளது. 

எச்.டி.எப்.சி. நிறுவனம் நேரடியாக ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தால் துவங்கப்படாவிட்டாலும், அந்த நிறுவனத்தின் முக்கிய பதவி வகித்த திரு. திரு.ஹஸ்முக் பரேக் அவர்களின் முயற்சியையே சாரும் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

       

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(பங்குச்சந்தை) தெரியுமா ?

மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்(பங்குச்சந்தை) தெரியுமா ? 

History of Madras Stock Exchange(MSE) 

தமிழ்நாட்டை தலைநகரமாக கொண்ட சென்னை நீடித்த வரலாற்றையும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பையும் கொண்டிருக்கிறது. 2022ம் ஆண்டு முடிவில் சென்னையின் பொருளாதார மதிப்பு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(இந்திய ரூபாயில் 7.87 லட்சம் கோடி). இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு, சென்னையின் தொழில்நுட்ப கட்டமைப்பு வசதியும் ஒரு காரணம் எனலாம். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் சென்னையின் பங்களிப்பு மட்டும் சுமார் 33 சதவீதமாகும். உலகின் பிரபலமான நகரங்களில் முதல் 50 நகரங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் சென்னையின் இடத்தை தவிர்க்க முடியாதது.

ஆசியாவின் டெட்ராய்ட்(Detroit of Asia) என அழைக்கப்படும் சென்னை, வாகனத்துறைக்கான உதிரி பாகங்கள் உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது. நாட்டின் வாகன உதிரி பாகங்கள் பிரிவில் சென்னை மட்டும் 35 சதவீத பங்கினை கொண்டுள்ளது. இந்திய நான்கு சக்கர வாகன உற்பத்திப் பிரிவில் இதன் பங்களிப்பு மட்டும் 30 சதவீதமாக உள்ளது. கனரக வாகனங்கள், டயர்கள், வாகன சோதனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, துறைமுகங்கள், உலகின் முக்கிய நிறுவனங்களின் அலுவலகங்கள் என வாகனத்துறைக்கு தேவையான பெரும்பாலான நிலைகளை சென்னை உள்ளடக்கியுள்ளது. 

அப்படியிருக்க, சென்னையில் ஒரு பங்குச்சந்தை…  

கடந்த 1937ம் ஆண்டு துவக்கப்பட்டது தான் மெட்ராஸ் பங்குச்சந்தை(தலைமை அலுவலகம்: சென்னை). நாட்டின் நான்காவது பங்குச்சந்தையாகவும், தென் இந்தியாவில் துவக்கப்பட்ட முதல் பங்குச்சந்தையாகவும், மெட்ராஸ் பங்குச்சந்தை இருந்தது. இந்த சந்தை மேலே சொல்லப்பட்ட காலத்தில் துவக்கப்பட்டிருந்தாலும், 1957ம் ஆண்டு தான் இச்சந்தைக்கு தேவையான ஒழுங்குமுறைகளும், இன்னபிற வழிமுறைகளும் சட்டமாக்கப்பட்டு இயக்கத்தில் வந்தன.

ஆரம்ப நிலையில் ஐந்து நிறுவனங்களின் துணை மூலம் தோற்றுவிக்கப்பட்ட மெட்ராஸ் சந்தை, பின்னர் பெரிய சந்தையாக சுமார் 120 உறுப்பினர்களுடன் இயங்கியது. 1996ம் ஆண்டு முதல் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்ட சந்தையாக, 120 பங்குத்தரகு அலுவலகங்களுடன், மெட்ராஸ் பங்குச்சந்தை செயல்பட்டது.

 2001ம் ஆண்டு வாக்கில் சுமார் ரூ.3,000 கோடி வர்த்தக அளவை கொண்டிருந்த மெட்ராஸ் பங்குச்சந்தை, 2012ம் ஆண்டில் சுமார் 19,900 கோடி ரூபாய் வர்த்தகம் என்ற அளவில் வளர்ச்சியடைந்தது. 2001ம் ஆண்டில் சொல்லப்பட்ட 3,000 கோடி ரூபாய் வர்த்தகம் என்பது அப்போதைய மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையை ஒப்பிடுகையில், இது மூன்று சதவீதம் என்ற அளவில் மட்டுமே இருந்துள்ளது.

மெட்ராஸ் பங்குச்சந்தையில் சுமார் 1,785 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. மெட்ராஸ் பங்குச்சந்தைக்கு ஒரு துணை நிறுவனமும் உண்டு – எம்எஸ்இ பைனான்சியல் சர்வீஸஸ்(MSE Financial Services). 2012ம் ஆண்டு வாக்கில் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி(SEBI) அறிவித்த ஒரு செய்தியால், மெட்ராஸ் பங்குச்சந்தையை மூடுவதற்கு காரணமாக அமைந்தது. இந்தியாவில் உள்ள ஒரு பங்குச்சந்தை குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய்க்கு பங்குகளில் பணப்புழக்கத்தை(Minimum Liquidity) ஏற்படுத்த வேண்டுமென்பது தான். அதாவது ஒரு முதலீட்டாளரோ, வர்த்தகம் செய்பவரோ தான் வாங்கியிருக்கும் பங்குகளை விற்க முனைந்தால், மற்றொரு புறம் வாங்குவதற்கு ஆள் வேண்டுமே, அது தான் இந்த பணப்புழக்கம்(Liquidity). 

மேற்சொன்ன அறிவிப்பை தொடர முடியாத நிலையில் பெங்களூர் பங்குச்சந்தையுடன், மெட்ராஸ் பங்குச்சந்தை இணைக்கப்பட்டது. பின்னாளில் இச்சந்தையும் மூடப்பட்டது.  இதனைத் தொடந்து 2015ம் ஆண்டின் மே மாதத்தில் தனது வர்த்தக செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வதாக மெட்ராஸ் பங்குச்சந்தை அறிவித்தது. பின்னர் செபியும் அதனை ஏற்றுக் கொண்டது. 77 வருட பாரம்பரிய பங்குச்சந்தையாக திகழ்ந்த மெட்ராஸ் பங்குச்சந்தை 2015ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

ஹர்ஷத் மேத்தா, கேத்தன் பரேக் என 1990 மற்றும் 2000களில் இந்திய பங்குச்சந்தை ஆட்டம் கண்ட நிலையில், 1992ம் ஆண்டு துவக்கப்பட்ட தேசிய பங்குச்சந்தை மற்றும் ஆசியாவின் பழமையான மும்பை பங்குச்சந்தை போன்ற ராட்சத அலைகளுக்கு முன்னர் தென் இந்தியாவின் முதற் பங்குச்சந்தை நிற்க இயலவில்லை. நாடெங்கிலும் எண்ணற்ற பங்குச்சந்தைகள்(20க்கும் மேற்பட்ட) இருந்த நிலையில், அவற்றை கையாள்வது கடினம் மற்றும் முதலீட்டாளர் நலனை பாதுகாக்க இது போன்ற நிகழ்வுகளை செபி(SEBI) ஏற்படுத்தியிருந்தது. 

இந்தியப் பங்குச்சந்தையில் தற்போதைய முதலீட்டாளர் பங்களிப்பு மற்றும் விழிப்புணர்வு அன்றைய காலத்தில் இல்லாததும் ஒரு காரணமே !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

முதலீட்டு வருவாய்க்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள், ஏன் ?

முதலீட்டு வருவாய்க்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள், ஏன் ?

Do not focus only on Investment returns – Fallacy of Investing

கிரேஸ் குரோனர்(Grace Groner):  தனது 12ம் வயதில் அனாதையானாள். அவள் திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவளுக்கு காரும்(நான்கு சக்கர வாகனம்) ஓட்டத் தெரியாது. தனது வாழ்நாள் முழுவதும் சின்னதொரு வீட்டில் வசித்து வந்துள்ளாள். எந்த ஆடம்பரமும் இல்லாமல் எளிமையாக வாழ்ந்து வந்தவள். தனது வாழ்நாளில் சுமார் 43 வருடங்கள் அப்போட் பார்மா(Abbott Pharma) நிறுவனத்தில் செயலாளராக வேலை செய்வதிலேயே இருந்துள்ளார். தனது 101வது வயதை கொண்டாட இன்னும் மூன்று மாதங்களே இருந்த நிலையில் சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் மறைந்தார்.

1935ம் ஆண்டு வாக்கில் கிரேஸ், தனது நிறுவனத்தின் பங்குகளை சுமார் 180 டாலர்களுக்கு(ஒரு பங்கின் விலை 60 டாலர்கள் – 3 பங்குகள் மட்டுமே) வாங்கியுள்ளார். அடுத்த 75 வருடங்களில், அவர் தனது நிறுவனத்தின் மூலம் கிடைத்த ஈவுத்தொகையை(Dividends) மறுமுதலீடு செய்து வந்துள்ளார். 2010ம் ஆண்டு வாக்கில் அவர் மறைந்த போது, அதன் மதிப்பு சுமார் 7.2 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்துள்ளது. இறக்கும் முன்பு, தனது அனைத்து சொத்துக்களையும், தான் வளர்ந்த மற்றும் இளம்வயதில் படித்த கல்லூரியை சேர்ந்த அறக்கட்டளைக்கு கொடையாக வழங்க உயில் எழுதியுள்ளார். அவர் மறைவுக்கு பின்பு, அந்த உயில் மூலம் அறக்கட்டளைக்கு சொத்துக்களும் மாற்றப்பட்டது. 2024ம் ஆண்டின் துவக்கத்தில், அதன் மதிப்பு சுமார் 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள்(2010ம் ஆண்டு முதல் டிவிடெண்ட் தொகை சேர்க்காமல்) என அப்போட் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் 1909ம் ஆண்டு பிறந்தவர் தான் செல்வி. கிரேஸ் குரோனர் அவர்கள் !

ஒரு வேளை அவர் தான் வாங்கிய பங்குகளுக்கு மாற்றாக, 180 அமெரிக்க டாலர்களை, ஏதேனும் ஒரு வங்கியில் அப்போது முதலீடு செய்து, தனது வாழ்நாள் முழுவதும் வைத்திருந்தால் அதன் மதிப்பு சில ஆயிரம் டாலர்களாக மட்டுமே இருந்திருக்கும் என முதலீட்டு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ரிச்சர்ட் பஸ்கோன்: கடந்த 1914ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்ட முதலீட்டு மேலாண்மை நிறுவனம் தான் மெரில்(Merrill Lynch). அமெரிக்க நிறுவனங்களின் வங்கி என சொல்லப்படும் மெரில் நிறுவனத்தில் 1970 களில் துணைத்தலைவராக வேலை பார்த்தவர் ரிச்சர்ட் பஸ்கோன்(Richard Matthew Fuscone). அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தனது முதுகலை மேலாண்மை பட்டப்படிப்பை முடித்தவர். அமெரிக்க பங்குச்சந்தையின் அனுபவம், நல்ல திறமை, அதிக சம்பளம், ஆடம்பரமான வாழ்க்கை, சுமார் 20,000 சதுர அடியில் சொகுசு வீடு என ரிச்சர்டுக்கு கிட்டியது. பங்கு முதலீட்டில் அவருக்கு கிடைக்காத வெற்றி என அப்படியொன்றுமில்லை. பெரு நிறுவனங்களில் அவர் வகிக்காத முக்கிய பதவிகள் இல்லையெனலாம். தனது 40வது வயதிலேயே நாள்தோறும் பணிபுரியும் வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர். மேலும் தனது சொத்துக்களை கொடையாக அளிக்க முனைந்தவர். 

2008ம் ஆண்டில் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி திரு. ரிச்சர்ட் பஸ்கோனையும் பொருளாதாரம் சார்ந்து பாதித்தது எனலாம். வங்கியில் அதிகக் கடன், முதலீட்டில் அதிக ரிஸ்க் தன்மை மற்றும் அவரது ஆடம்பர வாழ்க்கையின் அடிப்படை செலவினங்கள் ஆகியவை அவரை 2010ம் ஆண்டு திவாலுக்கு தள்ளியது.     

“பொருளாதாரத்தில் ஒரு தனி மனிதர் வெற்றி பெறுவது என்பது நீங்கள் புலமை படைத்த மற்றும் அதிகமாக கற்றுக்கொள்ளும் நிலையில் அல்ல, மாறாக நீங்கள் அதனை எவ்வாறு புரிந்து கொண்டு நடக்கிறீர்கள்” என்பது தான்.

மேலே சொன்ன இரண்டு மனிதர்கள் வாயிலாக இங்கே ஆடம்பரம் கேடானது, எளிமை நல்லது என நாம் எடுத்துக் கொள்ள கூடாது. மாறாக நாம் ஒரு முதலீட்டை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறோம் மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதில் தான் நமது நிதி சார்ந்த வளம் இருக்கிறது. இங்கே வெற்றி-தோல்வி என்பது வெறும் அளவீட்டில் அல்ல.

பங்குச்சந்தை முதலீட்டில் நான் வெகு விரைவாக பணம் பண்ணுகிறேன் என்ற பேர்வழியில் அதிக ரிஸ்க் தன்மை கொண்ட மற்றும் புரிந்து கொள்ள முடியாத ஏதேனும் திட்டங்களில் பணத்தை போட்டு விட்டு, நாம் எவ்வளவு எளிமையாக இருந்தாலும் சரி, அது நம்மை பாதாளத்துக்கு தள்ளி விடும். கற்றல் மிகவும் அவசியம், அதனை விட கற்றவற்றை கவனமாக செயல்படுவதே இன்னும் சிறப்பு. கீழே சொல்லப்பட்ட சில வாக்கியங்களை படியுங்கள்…

அதிக வருவாய்(High Returns) அளித்த மியூச்சுவல் பண்டு திட்டங்கள்…

ஒரே மாதத்தில் அல்லது ஒரே வருடத்தில் அதிக விலையை(High Risk, High Returns) கொடுத்த பங்குகள்…

ஒரு லட்சம் ரூபாய் போட்டால் மாதத்துக்கு 10,000 ரூபாய் (பத்து பைசா வட்டி: மாதத்துக்கு 10% வருவாய் எனில் வருடத்தில் 120%)…

இந்த கிரிப்டோவில் பணம் போட்டால் ஒரே மாதத்தில் டபுள் ஆகும்…

இந்த மனையை நீங்கள் இப்போது வாங்கி வைத்தால் ஐந்து வருடத்தில் ஐந்து மடங்கு லாபம்…

இது போன்ற முதலீடுகளை நாங்கள் யாருக்கும் பரிந்துரைக்கவில்லை. இது உங்களுக்காக மட்டுமே. இப்போது முதலீடு செய்தால் கொள்ளை லாபம்…

பங்குச்சந்தையில் நீங்கள் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்தால், தினமும் 5,000 ரூபாய் பார்ட் டைம்(Part Time Income) வருவாயாக சம்பாதிக்கலாம்…

ஒரு மொபைல் ஆப் மூலம், நீங்கள் வீட்டில் இருந்து கொண்ட கை நிறைய சம்பாதிக்கலாம்…

பணக்காரர்கள் ஒரு இல்லுமினாட்டிகள், அவர்கள் நம்மை போன்றவர்களை ஏமாற்றுகிறார்கள். நமக்காகவே இது போன்ற மல்டி லெவல் தொழில்கள் வந்துள்ளன. நாமும் தொழிலதிபராக மாறலாம்…

இன்னும் எண்ணற்ற…

மேற்சொன்னவற்றில் நாம் விழுவது இரண்டே இரண்டு விஷயங்களில் தான் – குறுகிய காலத்தில் நிறைய பணம்(High Returns) மற்றும் சமூக அந்தஸ்து(Social Status). 

நம்மில் பலரும் இன்னும் பங்குச்சந்தை என்பது F&O என சொல்லப்படும் ஊக வணிகமும், இன்ட்ரா டே என சொல்லப்படும் நாள் வணிகம்(Day Trading) தான் என நினைத்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் நம்மால் மேலே சொன்ன பல வழிகளில் குறுகிய காலத்தில் அதிக பணத்தை தேடிச் செல்லும் போது நாம் இன்னும் பணக்காரர்களை வெல்லவில்லை என்பதும் புரியும்(பணக்காரர்களாக தோற்றமளிக்க மட்டுமே உதவும்).

மெட்ராஸ் பங்குச்சந்தை அமைப்பின் முன்னாள் தலைவர் திரு.வ. நாகப்பன் அவர்கள் சொல்வது போல, ‘நீங்கள் பெரு நிறுவனங்களை கேள்வி கேட்க வேண்டுமானால், பங்குச்சந்தையில் சிறு முதலீட்டாளர்களாக நாம் நமது பங்கு முதலீட்டின் அளவை(சிறு முதலீட்டாளர்களின் வரவு) அதிகரிப்பதன் மூலம் மட்டுமே அந்த நிகழ்வு ஏற்படும்’ என்பார். உண்மையும் அது தான். உலகப் பொருளாதாரத்தில் நாம் இன்று வாங்கும் பொருளும், சேவையும் ஏதோவொரு நிறுவனத்தின் உற்பத்தி தான். அந்த நிறுவனத்தின் பங்கும் பெரும்பாலும் சந்தையில் பட்டியலிடப்பட்டது தான். 

இன்று நம் நாட்டில் தேசியமயமாக்கப்பட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகளும் (தனியார் வங்கிகளும் தான்) பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டவை தான்.  கடந்த 30 வருடங்களில் வங்கி டெபாசிட், தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட், பங்குகள் என பல்வேறு வகையான முதலீட்டை நாம் கொண்டிருந்தால் முடிவில் பங்குச்சந்தையை தாண்டிய வருவாய் வேறு எவற்றிலும் கிடைக்கப்பெறவில்லை. பங்குச்சந்தைக்கு அடுத்தாற் போல, அதிக வருவாய் அளித்த முதலீடாக பார்த்தால் தங்கத்தின் மீதான முதலீடு தான். அதுவும் பங்குச்சந்தையை காட்டிலும் கடந்த 30 வருடங்களில் ஆண்டுக்கு சராசரியாக நான்கு சதவீதம் குறைவாகவே காணப்பட்டுள்ளது. பின்னர் நாம் ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் மற்றும் பி.எப் கணக்குகளை பற்றி சொல்லத் தேவையில்லை. 

நம்மில் பெரும்பாலோர் அதிக வருவாயை குறுகிய காலத்தில் ஈட்ட வேண்டுமென்ற ஆசையே, பெரும்பாலும் தவறான முதலீட்டு முடிவுகளை எடுக்க காரணமாக இருந்துள்ளது. சில நேரங்களில் பாதுகாப்பாக கருதப்படும் அஞ்சலக சேமிப்பு மற்றும் பி.எப் கணக்குகள் கூட பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறாவிட்டாலும், முதலுக்கு மோசம் தராது. ஆனால் வெகு விரைவாக பணம் சம்பாதிக்கிறேன் பேர்வழியாக நாம் தவறான முதலீட்டு முடிவுகளை மேற்கொள்ளுகையில், நம் முதல் மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கும் ஆளாகிறோம். 

எனவே, நாம் அதிக வருவாய் அளிக்கும் பங்குச்சந்தையாக இருந்தாலும் சரி, பாதுகாப்பானது என எண்ணப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களானாலும் சரி, முதலீட்டு வருவாய்க்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நமது இலக்கினை நீண்டகாலமாக நிர்ணயித்து, தொடர் முதலீட்டை(Consistency) மேற்கொள்ளுவது தான் சிறப்பு.

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ?

உண்மையில், நீங்கள் பெறும் அல்லது பெறக்கூடிய வருவாய்(லாபம்) என்பது மற்றொருவருடன் ஒப்பிட்டு பார்ப்பதல்ல. நீங்கள் முதலீடு செய்யும் திட்டங்களையும் சார்ந்தது அல்ல. மாறாக நீங்கள் எப்போது அந்த முதலீட்டை வெளியே எடுக்கிறீர்களோ அது தான் உங்கள் லாபம் அல்லது வருவாய்(Booked Profit / Redemption). உதாரணமாக ‘ABC’ என்ற பங்கையோ அல்லது மியூச்சுவல் பண்ட் திட்டத்தையோ நீங்களும், உங்களது நண்பரும் தேர்ந்தெடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்களுக்கான காலம் அடுத்த 10 ஆண்டுகள் என கொள்ளலாம். எந்தவொரு முதலீட்டுக்கான வருவாயும் ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டது(வங்கி வட்டி விகிதம் உட்பட). இடையில் 5 வருடங்களுக்கு பிறகு, நீங்கள் பங்குகளை விற்று அல்லது அந்த திட்டத்திலிருந்து வெளியேறினால், நீங்கள் உங்கள் பணத்தை வெளியே எடுத்த நாளே உங்களது லாபமாக அல்லது நட்டமாக இருக்கும். அன்றைய நாளில் தான் உங்கள் முதலீட்டுக்கான வருவாய் விகிதம்(Returns %) கணக்கிடப்படும். அதுவே உங்களது நண்பர் 8 வருடங்களுக்கு பின்னர், முதலீட்டை விலக்கினால், விற்ற நாளில் உள்ள வருவாயே அவரது லாபமோ அல்லது நட்டமோ ஆகும்.

மாறாக ஒரு குறிப்பிட்ட பங்குகள் அல்லது மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் இவ்வளவு வருவாயை(20%, 30%, 50%), இந்த காலக்கட்டத்தில்(20,10, 5 வருடங்கள்) அளித்துள்ளது என சொன்னாலும், ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டை எப்போது விற்கிறாரோ அன்றைய நாள் வரை கணக்கிடப்படுவது தான் அவருடைய வருவாய் விகிதம். இதனை விட்டு விட்டு இந்த பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் 30 சதவீத வருவாயை கொடுத்துள்ளது, இந்த மியூச்சுவல் பண்ட் திட்டம் கடந்த 5 வருடங்களில் ஆண்டுக்கு 20 சதவீத வருவாயை அளித்துள்ளது, இந்த இடத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர், நீங்கள் மனை வாங்கியிருந்தால் இப்போது மூன்று மடங்கு லாபம் என்ற கதையெல்லாம் உங்களுக்கான கதையல்ல. அது ஏற்கனவே நடந்து முடிந்த விஷயம்.

அதனால் தான் பங்குச்சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது, ஏற்ற-இறக்கங்கள் பங்குகளில் நடைபெறும், மியூச்சுவல் பண்ட் திட்டம் மூலம் கடந்த காலத்தில் கிடைக்கப்பெற்ற வருவாய், எதிர்காலத்தில் அப்படியே கிடைக்கப்பெறும் என்பதில் எந்த உத்தரவாதமும் கிடையாது என்ற வாசகங்கள் இடம் பெறுகின்றன.

நாம் என்ன செய்ய வேண்டும் ?

  • உங்களுக்கான நிதி இலக்குகளை(Financial Goals) நிர்ணயம் செய்து கொள்ளுங்கள் 
  • இலக்குகளுக்கான சரியான திட்டம்(Returns & Investment Period) எதுவென்பதை கண்டறியுங்கள் 
  • இலக்கு காலம் முடியும் வரை தொடர்ச்சியாக(Disciplined Investing) முதலீடு செய்து வாருங்கள்
  • இடைப்பட்ட காலத்தில் எந்தவொரு காரணத்திற்காகவும் முதலீட்டை நிறுத்துவதோ, இல்லையெனில் பணத்தை வெளியே எடுப்பதையோ செய்யாதீர்கள் 
  • உங்களது இலக்கு காலத்திற்கு முன்னரே, உங்களுக்கு தேவையான தொகை சேர்ந்து விட்டால், அதனை வெளியே எடுத்து பாதுகாப்பான அல்லது குறைந்த ரிஸ்க் தன்மை கொண்ட திட்டத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்(Corpus achieved before Maturity).
  • நீங்கள் இலக்குகளுக்கான தொகையை என்றைக்கு சேர்ந்தவுடன் எடுத்தீர்களோ, அன்றைய நாள் தான் உங்களது முதலீட்டு வருவாய்(Booked Returns%) கணக்கிடப்படும். அதற்கு முன்பு வரை இருந்த எல்லாமே வெற்று லாப-நட்ட கணக்கு தான்(Notional Gain / Loss).   

எனவே, நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது, உங்களது முதலீட்டு வருவாய்க்கு அல்ல, தொடர்ச்சியான முதலீடு மட்டுமே !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ? (எக்ஸ்க்ளுசிவ் கட்டுரை)

கடந்த 30 வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியப் பங்குச்சந்தை : தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி டெபாசிட் போன்ற மற்ற முதலீடுகள் எப்படி ? (எக்ஸ்க்ளுசிவ் கட்டுரை)

Asset Class returns Since 1994 in India – Investment Returns Year on Year (Exclusive article)

பொதுவாக பங்குச்சந்தை முதலீடு, சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. ஆம், பங்குச்சந்தையில் முதலீடு செய்கையில் அதிக ஏற்ற-இறக்கத்தை நாம் சந்தித்தாக வேண்டும். ஆனால், பங்குச்சந்தையை தவிர்த்து மற்ற முதலீடுகள் உண்மையில் அபாயமில்லையா(ரிஸ்க் தன்மை) ? இதனை நம்மில் ஒவ்வொருவரும் சிந்தனையாக மாற்றியிருந்தால், அதற்கான விழிப்புணர்வு(Awareness) நமக்கு கிடைத்திருக்கும்.

உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பங்கு இன்று தவிர்க்க முடியாத இடத்தில் இருந்து வருகிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலெல்லாம் ஏற்பட்ட நிதிச்சிக்கல்கள் நம் நாட்டிலும் ஒரு காலத்தில் இருந்துள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் நாம் பல பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் களைந்து, 1992ம் ஆண்டுக்குப் பிறகு அதனைக் கடந்து விட்டோம். உலகின் எந்தவொரு வளர்ந்த நாட்டின் பொருளாதாரத்திலும் தனிநபர் மற்றும் குடும்பத்தின் வருவாயில் அதிக ஏற்ற-தாழ்வு இருப்பதும், ஏழை-பணக்காரர்களுக்கான வருமான இடைவெளி அதிகமாக இருப்பதும் உண்மை தான். ஆனால் அதற்காக நாம் நிதி சார்ந்த கல்வியை கற்காமலும், விழிப்புணர்வை பெறுவதில் தயக்கம் காட்டுவதும் சரியா ?

இவ்வுலகில் ரிஸ்க் இல்லாமல் ஒரு நிகழ்வு இருக்கிறதா என்றால், அப்படியொன்றுமில்லை. சாலையை கடந்தாலும் அபாயம் தான், வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும் ரிஸ்க் தான். வங்கி டெபாசிட் பாதுகாப்பானது என நாம் எண்ணினால் மத்திய வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தை பற்றியும்(Interest rate Risk), வங்கிகளுக்கான DICGC சார்ந்த விதிகளையும் படிக்க வேண்டும். தங்கத்தின் மீதான முதலீடு ரிஸ்க் இல்லையென நினைத்தால், தங்கத்தின் சந்தை எங்கே இருந்து இயக்கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் அது எந்த நாணயத்தால்(Currency) வர்த்தகமாகிறது என்ற விழிப்புணர்வை பெற வேண்டும்.

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறைப் பற்றி நாம் பெரிதாக சொல்ல வேண்டியதில்லை. எல்லா குடும்பங்களுக்கும் ஒரு வீடு தேவை என்ற போதிலும், அவற்றை நாம் முதலீட்டுக் கோணத்தில் அணுகும் போது, அவற்றில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க் நமக்கு தெரிவதில்லை. வீட்டுமனைத் துறையில் நாம் முதலீடு செய்யும் முன் நீர்மை நிறை(Liquidity), வரி விதிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை(Transparency) பற்றியும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அஞ்சலகங்கள், அரசு கடன் பத்திரங்கள், வருங்கால வைப்பு நிதி என காணுகையில், இது ஒரு நாட்டில் உள்ள அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தைப் பொறுத்துத் தான் அமையும். கிரீஸ், இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா, ஜப்பான், ரசியா, இன்னும் எண்ணற்ற நாடுகளில் வெவ்வேறு காலத்தில் நடந்த பொருளாதார மந்தம் நம் நாட்டில் இனி ஏற்படாது என நாம் எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். 

பொதுவாக ஒரு சாரார் பங்குச்சந்தை முதலீடு ஆபத்தானது, பணக்காரர்களுக்கானது, அது ஒரு சூதாட்டம் என மொத்தமாக ஒதுங்குவதும், மற்றொரு புறம் குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்கிறேன் பேர்வழியாக போன்சி(Ponzi Scam) மோசடித் திட்டங்களில் மொத்த பணத்தையும் இழந்து விட்டு நிற்பதும் அடிக்கடி நடந்து தான் வருகிறது. இது ஒரு புறமென்றால், இந்திய பண(Money Market) மற்றும் முதலீட்டுச் சந்தையில்(Capital Market) பெரிதாக வாய்ப்பொன்றுமில்லை என நினைத்துக் கொண்டு வெளிநாட்டுப் பங்குகளை வாங்குகிறேன், கிரிப்டோவில் விளையாடுகிறேன், ரம்மியில் கோடீஸ்வரராகுகிறேன், பங்குச்சந்தை மற்றும் போரெக்ஸ் சந்தையில் வர்த்தகம் மற்றும் இந்த செயலியில்(Mobile Apps) பணத்தை போட்டு விட்டு சும்மா இருந்தால் பணக்காரராகி விடலாம் என சிக்குகின்றனர்.

சந்தையில் முதலீடு செய்யாமல் இருப்பதும், சந்தையைத் தாண்டி வேறுமொரு புதிய முதலீட்டு வாய்ப்பு இருப்பதாக கருதி, தெரியாத, ‘கேக்குறான் மேக்குறான்’ திட்டத்தில் உழைத்த பணத்தை தொலைப்பது – இரண்டும் ஒன்று தான். மருத்துவத் துறையில் ஒரு அறுவை சிகிச்சை மருத்துவராக, பொறியியல் துறையில் ஒரு சிறந்த என்ஜினீயராக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் உயர்நிலை அதிகாரியாக வருவதற்கு நாம் நமது பள்ளிக்காலத்திலிருந்தோ அல்லது கல்லூரியிலிருந்தோ அதற்கான விதையை நட்டிருக்க வேண்டும். அதனைத் தான் நாம் அனுபவம் பேசுகிறது என சொல்கிறோம். ஆனால், பங்குச்சந்தையிலோ ஒரு வாரம் பணம் பார்த்து விட்டால் போதும், மிகப் பெரிய வல்லுனராக நம்மை நாமே நினைத்துக் கொண்டு, சந்தையின் அடிப்டைக் கல்வியை கற்காமல், அதன் கோணத்தை அறியாமல் சூதாடி விட்டு, பின்பு பங்குச்சந்தை ஒரு சூதாட்டம் எனவும், இது பணக்காரர்கள் மட்டுமே சம்பாதிக்கக் கூடிய இடமென்றும், மேலும் இது நமக்கு சரிப்பட்டு வராது என நாம் புறந்தள்ளுகிறோம்.

டாட்டாவும், பிர்லாவும்:

பங்குச்சந்தையில் அவ்வளவு எளிதாக சம்பாதித்து பணக்காரராக விட முடியுமென்றால், ஏன் டாட்டா-பிர்லாவும், அம்பானி-அதானியும் பல துறைகளில் தொழில் புரிய வேண்டும். அவர்களிடம் இருக்கும் மூலதனத்தை கொண்டே நித்தமும் ஆயிரம் கோடிகளை பங்குச்சந்தை வர்த்தகத்தில் லாபமாக ஈட்டலாமே ! உண்மையில் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களையும், வழங்கும் சேவைகளையும் நாம் பயன்படுவதால் மட்டுமே அவர்கள் தங்களது தொழிலில் பணக்காரர்களாக உள்ளனர். இதனைத் தான் நாமும் செய்ய வேண்டும் – ஒரு நிறுவனத்தின் அல்லது தொழிலின் உரிமையாளர் மற்றும் முதலீட்டாளரை போல !

கடந்த கால வருவாய் விகிதங்கள்:

சரி, இந்தியப் பங்குச்சந்தை முதலீடு கடந்த 30 ஆண்டுகளில் அப்படி என்ன செய்து விட்டது. மும்பையின் தலால் தெருவை அடையாளமாக கொண்ட மும்பை பங்குச்சந்தை என்னவோ 1875ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த தேசிய பங்குச்சந்தையும் 1992ம் ஆண்டு வாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று 5000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக, அதாவது 1994ம் ஆண்டு முதல் நாம் ஒவ்வொரு வருடமும் முதலீடு செய்து வந்திருந்தால், நடப்பாண்டின் செப்டம்பர் மாத முடிவில் சென்செக்ஸ் குறியீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 14.30 சதவீதமும், நிப்டி-500 குறியீட்டில் ஆண்டுக்கு சராசரியாக 15.70 சதவீதமும் ஒரு முதலீட்டாளருக்கு வருவாயாக கிடைத்திருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் ஆண்டுக்கு சுமார் 50,000 ரூபாய் என்ற அளவில் கடந்த 30 ஆண்டுகளாக முதலீடு செய்து வந்திருந்தால்(மொத்தம் 15 லட்சம் ரூபாய்), சென்செக்ஸ் குறியீட்டின் மூலம் இன்று உங்களது ஒட்டுமொத்த முதலீட்டு வருவாய் 2.41 கோடி ரூபாயாகவும், நிப்டி-500 குறியீட்டின் மூலம் அது 2.79 கோடி ரூபாயாகவும் வளர்ந்து நிற்கும். இங்கே அரசியல் சார்ந்த ஆட்சிகள் மாறலாம், காட்சிகள் மாறலாம். ஆனால் சந்தையில் நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, முதலீடு செய்த பின் பொறுமையே உங்களது வருவாயை மிகப்பெரிய அளவில் மாற்றும்.

1994ம் ஆண்டு முடிவில் நாட்டின் பணவீக்கம் 9.50 சதவீதமாக இருந்த நிலையில், அந்த வருடத்தின் முடிவில் பொது வருங்கால வைப்பு நிதி அளித்துள்ள வருவாய் சுமார் 12 சதவீதமாகும். இது போன்ற ஒரு வருவாய் இன்று இருந்திருந்தால், நீங்கள் பங்குச்சந்தைக்கு வர வேண்டிய அவசியமே இல்லை. இன்றைய அளவில் பங்குச்சந்தையில் ஆண்டுக்கு சராசரியாக 12 – 15% வருவாய் என  நீண்டகாலத்தில் கிடைத்தால், அவர் தான் சந்தையில் சாதனையாளர். சொல்லப்பட்ட 1994ம் வருடம் வங்கியில் பிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 10 சதவீதமாகவும், சென்செக்ஸ் குறியீடு 19.60 சதவீத வருவாயையும் வழங்கியுள்ளது. அதே வேளையில் தங்கத்தின் தங்கம் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வருவாயையே அந்த வருடத்தில் கொடுத்துள்ளது.

தங்கத்தின் முதலீட்டு வருவாய்:

கடந்த 30 வருடங்களில் தங்கத்தின் மீதான முதலீட்டு வருவாய் ஆறு வருடங்கள், 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்துள்ளது. இதன் மோசமான காலமாக 1997ம் ஆண்டில் தங்கம் (-20.60) சதவீதமும், 2014, 2015ம் ஆண்டு முறையே (-10.80) சதவீதம் மற்றும் (-5.50) சதவீதம் என்ற அளவில் இறக்கத்தை கண்டுள்ளது. அதாவது 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், ஈட்டிய வருவாய் வெறும் 1.84 சதவீதமே. அதாவது சொல்லப்பட்ட வருடத்தில் நாட்டின் விலைவாசி உயர்வு(பணவீக்கம்) சராசரியாக 6.27 சதவீதமாகும். 

 தங்கத்தின் பொற்காலமாக 2005ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை(17.70%, 20.40%, 12.90%, 25.30%, 32.80%, 19.50%, 36.90%) இருந்துள்ளது. குறிப்பாக 2007-08ம் ஆண்டு ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார நெருக்கடியில் மற்றும் அதனை ஒட்டியுள்ள காலத்தில் தங்கத்தின் மீதான வருவாய் உயர்ந்து வந்துள்ளது. 2011ம் ஆண்டு மட்டும் தங்கத்தின் மீதான முதலீடு 36.90 சதவீத வருவாயை கொடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 30 ஆண்டுகளில் தங்கத்தின் மீதான வருவாய் சராசரியாக 11.10 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது.

பங்குச்சந்தையில் முதலீடு:

இந்தியப் பங்குச்சந்தையை பொறுத்தவரை சென்செக்ஸ் குறியீடு கடந்த 30 வருடங்களில் 12 வருடங்கள் 20 சதவீதத்திற்கும் அதிகமான வருவாயை அளித்துள்ளது. அதிகபட்ச வருவாயாக 2009ம் ஆண்டில் 82 சதவீதத்தை வழங்கியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டான 2008ல் வரலாற்றில் மோசமான வீழ்ச்சியை சந்தித்த தருணம், சுமார் (-51.40) சதவீத வீழ்ச்சி. 30 வருடங்களில் 8 முறை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது போல, நிப்டி-500 குறியீட்டை எடுத்துக் கொண்டால் அதுவும் 8 ஆண்டுகள் இறக்கத்தை சந்தித்துள்ளது. இந்த குறியீடு 1998ம் ஆண்டின் முடிவில் 97.20 சதவீதம் மற்றும் 2009ம் ஆண்டில் 92.90 சதவீத வருவாயை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிப்டி-500 குறியீடு ஒன்பது ஆண்டுகள் 30 சதவீதத்திற்கும் அதிகமான ஏற்றத்தை பெற்றுள்ளது. 

வெள்ளியில் வாய்ப்பு:

வெள்ளியில் முதலீட்டை மேற்கொள்ளும் போது, பெரும்பாலும் தங்கத்திற்கு எதிர்மாறாகத் தான் இருந்துள்ளது. வெள்ளியின் பயன்பாடு தொழிற்துறையில் காணப்படுவதால், பங்குச்சந்தையை போலவே அதிகமான வருவாயை வெள்ளி முதலீடு வழங்கியுள்ளது. இருப்பினும் முப்பது வருடங்களில் சராசரியாக ஆண்டுக்கு 9.70 சதவீத அளவில் உள்ளது. 

வெள்ளி அதிகபட்ச வருவாயாக 2009ம் ஆண்டில் 63.50 சதவீதமும் மற்றும் 2010ம் ஆண்டில் 59.90 சதவீதமும் தந்துள்ளது. மோசமான வீழ்ச்சியாக 2013ம் ஆண்டில் (-26.60) சதவீதமாக இருந்துள்ளது. கடந்த 30 வருடங்களில் ஆறு முறை வெள்ளி முதலீட்டின் மீதான வருவாய் 20 சதவீதத்திற்கும் மேலாக இருந்துள்ளது. பொதுவாக நம்மில் பலர் தங்கத்தின் மீது கொண்டுள்ள காதலை, வெள்ளிக்கு கொடுக்க மறுக்கின்றனர், அது ஏனோ ! தங்கத்தினை காட்டிலும், வெள்ளியின் பயன்பாடு தொழிற்துறைக்கு தேவை. குறிப்பாக எலக்ட்ரிக் வாகன பேட்டரி தயாரிப்பு, சோலார் பேனல், மருத்துவம், மின்னணுப் பொருட்கள், ரசாயனம், நிழற் படக்கலை(Photography), நீர் சுத்திகரிப்பு, அச்சிடுதல் என பல துறைகளுக்கு வெள்ளியின் தேவை உள்ளது. வெள்ளியை அப்படியே வாங்காவிட்டாலும், முதலீட்டு நோக்கத்தில் சில்வர் இ.டி.எப்.(Silver ETF) அல்லது சில்வர் மியூச்சுவல் பண்டுகள்(Silver Funds) முறையில் வாங்கலாம்.

Asset class returns in India - 30 Yrs Data Since 1994

உங்களின் நிரந்தர பகைவன்:

நாட்டின் பணவீக்கத்தை பொறுத்தவரை 1998 மற்றும் 2009ம் ஆண்டுகளில் 15 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து காணப்படுகிறது. குறைந்தபட்ச விலைவாசியாக கடந்த 1999ம் ஆண்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இந்த வருடத்தில் தான் சென்செக்ஸ் மற்றும் நிப்டி-500 குறியீடுகள் 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில் பணவீக்க விகிதம் ஆறு சதவீதத்திற்கும் குறைவாக காணப்பட்டாலும், உணவுப்பொருட்களின் விலை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வந்துள்ளது. கடந்த 30 வருடங்களில் நாட்டின் பணவீக்க விகிதம் சராசரியாக 6 முதல் 7 சதவீதம் என்ற அளவில் இருந்துள்ளது.

ரியல் எஸ்டேட் முதலீட்டு வருவாய்:

ரியல் எஸ்டேட் என சொல்லப்படும் வீட்டுமனைத் துறையில் முதலீடு, கடந்த 20 வருடங்களில் சராசரியாக ஆண்டுக்கு 8.40 சதவீத வளர்ச்சியை அளித்துள்ளது. வீட்டுமனைத் துறைக்கான முதலீட்டு வருவாய் தரவுகள் பெரும்பாலும் மெட்ரோ நகரங்களை கொண்டு கணக்கிடப்பட்டவை. கொல்கத்தா போன்ற நகரங்களில் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை சராசரியாக ஆண்டுக்கு 3 சதவீதம் என்ற அளவில் மட்டுமே வருவாய் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. ரியல் எஸ்டேட் துறைக்கு மோசமான காலக்கட்டங்களாக 2008ம் ஆண்டும், 2020ம் ஆண்டும் இருந்துள்ளது. 

ரியல் எஸ்டேட் துறையில் பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் நிலம், வீடு வாங்கலாம் என்ற போதிலும் ஒரு முதலீட்டுச் சாதனமாக அணுகும் போது, அத்துறையில் ஒழுங்குமுறை மற்றும் கொள்கைகள், விலை நிர்ணயம், தொழில்நுட்பங்களை புகுத்துதல் ஆகியவை குறைகளாகவும், அவற்றை நிர்வகிப்பது சவால்களாகவும் இருந்து வந்தது (கணக்கில் காட்டப்படாத பணமும், வரி ஏய்ப்பும் அப்புறம்). இதன் காரணமாகவே பெரிய முதலீட்டாளர்களும், பெரு நிறுவனங்களும் REIT மூலம் முதலீட்டை மேற்கொள்ளத் துவங்கியுள்ளன. இன்னும் ரெய்ட் பற்றிய விழிப்புணர்வு பெரிதாக பரப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில்லறை முதலீட்டாளர்களுக்கு(Retail Investors) கட்டிடத்துடன் கூடிய முதலீட்டை காட்டிலும் பெரும்பாலும் மனை(நிலம்) தான் பல மடங்கு வருவாயை நீண்டகாலத்தில் தந்துள்ளது. வீட்டு வாடகை மூலம் கிடைக்கப்பெறுகிற வருவாய், வங்கி வட்டி விகிதத்தை காட்டிலும் குறைவாக காணப்படுவதாக துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகினறனர். இதன் காரணமாகத் தான் வீட்டு கட்டிடம் தேய்மானமாகவும், நிலம் வருவாய் அளிக்கும் வாய்ப்பாகவும் சொத்து மதிப்பீட்டு அளவில் பார்க்கப்படுகிறது(வணிகக் கட்டிடங்களுக்கு இது விதிவிலக்கு).

வங்கியில் உங்கள் பணம்:

வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதம், கடந்த 30 வருடங்களில் ஏற்ற-இறக்கத்திற்கு உட்பட்டுள்ளது. 1994ம் ஆண்டில் 10 சதவீதமாக இருந்த நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக 1996ம் ஆண்டு, இது 12 சதவீதமாக இருந்துள்ளது. அப்போதைய நாட்டின் பணவீக்கமும் 9.50 சதவீதத்திலிருந்து 10.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. பின்னர் 2004ம் ஆண்டு வாக்கில் வங்கி டெபாசிட் வட்டி விகிதம் 5.40 சதவீதமாக இருந்துள்ளது(பணவீக்கம் 3.80%). 2009ம் ஆண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 15 சதவீதமாக உயர்ந்த நிலையில், அப்போதைய வட்டி விகிதம் 9.30 சதவீதம். பின்னர் 2012ம் ஆண்டு வாக்கில் 8.80 சதவீதமாக வங்கி டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் இருந்த நிலையில், அப்போதைய பணவீக்க விகிதம் 11.20%.

நடப்பில் வங்கிகளில் கிடைக்கப்பெறும் வட்டி விகிதம் 7.5 சதவீதத்திற்கும் குறைவே. அதே போன்று நாட்டின் பணவீக்கமும் தற்போது 6 சதவீதத்திற்குள் இருந்து வருகிறது. பொதுவாக அரசின் கடன் வாங்கும் கொள்கைகள் மற்றும் விலைவாசியை கருத்தில் கொண்டு வங்கி வட்டி விகிதங்கள் மாறுபடும். கடந்த சில வருடங்களாக அன்னிய முதலீடு அதிகரித்து வரும் நிலையில், வங்கி கொள்கைகள் மூலம் அரசின் கடன் வாங்கும் தன்மையும் குறைந்து வருகிறது. ஜப்பானும், அமெரிக்காவும் ஒரு சதவீதத்திற்கும், இரண்டு சதவீத வருவாய்க்கும் இந்தியாவில் முதலீடு செய்ய காத்திருக்கும் போது, அரசு ஏன் மக்களிடம் வங்கி மூலம் அதிக வட்டிக்கு கடன் வாங்கப் போகிறது ?

ஓய்வுக்கால வைப்பு நிதித்திட்டம்:

பொது வருங்கால வைப்பு நிதியை(Public Provident Fund – PPF) பொறுத்தவரை, கடந்த 1994ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை நிலையாக 12 சதவீத வட்டி வருவாய் கிடைத்த நிலையில் 2003ம் ஆண்டுக்கு பிறகு 8 சதவீதத்திற்கு கீழ் சரிந்தது. நடப்பில் 7.5 சதவீதத்திற்கும் குறைவாகவே வருங்கால வைப்பு நிதி மூலம் கிடைக்கப்பெறுகிறது. எனினும் இது போன்ற திட்டங்கள், பெரும்பாலும் ஓய்வூதியக் காலத்திற்கு தேவையான தொகையாகவே இருக்கும். அப்படியிருக்கும் பி.எப். திட்டத்தை போல என்.பி.எஸ்.(NPS), ஓய்வுக்கால மியூச்சுவல் பண்டு(Retirement Funds) திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வரிச் சேமிப்பு மட்டுமில்லாமல் ஓய்வுக்காலத்திற்கு தேவையான கார்பஸ் தொகையையும் சற்று அதிகரிக்கச் செய்யலாம். இதன் மூலம் விலைவாசிக்கு ஏற்றாற் போல ஓய்வூதியமும் கிடைக்கும்.

மேலே சொன்ன பல்வகையான முதலீட்டுச் சாதனங்களை காணும் போது, பங்குச்சந்தை முதலீட்டின் மூலமான வருவாய் முதலிடத்தையும், அதற்கடுத்தாற் போல் இரண்டாமிடத்தில் தங்கமும் உள்ளது கவனிக்கத்தக்கது. வெள்ளி மற்றும் ரியல் எஸ்டேட் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. 1994ம் ஆண்டு முதல் வருடந்தோறும் 50,000 ரூபாயை இன்று வரை முதலீடாக மேற்கொண்டிருந்தால், உங்களுக்கு பங்கு முதலீட்டின் மூலம் 15 மடங்குகளிலும், தங்கத்தின் மூலம் 8 மடங்குகளிலும், வெள்ளியின் மூலம் 6 மடங்குகளிலும் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் 4.5 மடங்குகளிலும் வருவாய் கிடைத்திருக்கும். 

நீங்கள் செய்யவில்லையென்றால், வேறொருவர்…

என்ன தான் நாம் நம் பணத்தை ஆயுள் காப்பீட்டிலும்(Insurance), வங்கி டெபாசிட்டிலும் பாதுகாப்புக் கருதி செய்தாலும், மீண்டும் அந்த பணம் அதிக வருமானமீட்டும் பங்குகளைத் தான் தேடிச் செல்லும். ஆனால் நமக்குக் கிடைப்பதோ பாதுகாப்பான(நம்பிக்கையில் மட்டுமே) சொற்ப வருமானமே.  இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. பற்றி சொல்லலாம். இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு மட்டும் 52 லட்சம் கோடி ரூபாய். எல்.ஐ.சி. நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாத பெரு மற்றும் நடுத்தர நிறுவனங்களே இல்லை என சொல்லலாம். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையில் ஒரு குறிப்பிட்டத் தொகை பங்குச்சந்தைக்கு, ஈட்டும் அபரிதமான லாபமோ இந்நிறுவனத்திற்கு. முடிவில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான காப்பீடும் சிறு போனஸ் தொகையும். 

உங்களால் பங்குச்சந்தையை பற்றி புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், கற்றுக் கொள்ள முயற்சிக்கலாம். இல்லையெனில் தகுந்த ஆலோசகரின் முன்னிலையில் அல்லது பரஸ்பர நிதிகளின்(Mutual Funds) மூலம் சந்தை அபாயத்தையும், உங்களது பயத்தையும் குறைக்கலாம். ஆனால் ரிஸ்க் என்பதை நாம் முழுவதும் தவிர்க்க முடியாது. இன்று பங்குச்சந்தை ரிஸ்க்கை பரவலாக்க மற்றும் நல்ல வருவாய் ஈட்ட இண்டெக்ஸ் பண்டுகளும்(Index Funds) உள்ளன. வெறுமென பாதுகாப்பை மட்டும் கருத்தில் கொண்டு குறைந்த வட்டி வருவாய், பணவீக்க விகிதம், இலக்கிற்கான தொகையை அடைய முடியாமல் போவதற்கு சற்று ரிஸ்க் எடுத்துத் தான் பார்க்கலாமே(அறிவார்ந்த – Calculated Risk) ! 

“எண்ணற்ற வழியில் எனக்கு வருவாய் வந்து கொண்டிருக்கிறது, நேர்மையாக அரசுக்கு வரி செலுத்தி அதற்கான வரித்தாக்கலும் செய்து வருகிறேன், தலைமுறை கடந்த சொத்துக்களும் எனக்கு இருக்கிறதென்றால்” நீங்கள் பணவீக்கத்தையும், பங்குச்சந்தை வருவாயைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. மாறாக பங்குச்சந்தையில் உங்களது நிறுவனத்தை பட்டியலிட முனையலாம். “ மாதந்தோறும் போதுமான ஓய்வூதியத் தொகையை பெற்று நிம்மதியாக உள்ளேன். யாருக்காகவும் நான் சேமிக்க வேண்டிய அவசியமில்லை, என்னை நம்பி யாரும் நிதி சார்ந்து இல்லை ” என்றால் நீங்கள் மேலே சொன்ன முதலீட்டு வருவாயைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை(பணவீக்கத்தை கவனத்தில் கொள்க).

“ நீங்கள் கற்றுக் கொள்ளா விட்டால், விழிப்புணர்வை பெறா விட்டால் உங்கள் பணத்தைக் கொண்டு மற்றொருவர் தனது அறிவின் மூலம் பத்தும் செய்வார் “. – பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவதன் விதி இது தான் !

தரவுப்பட பகிர்வுக்கு நன்றி(Data Table Courtesy): செல்வி. வித்யாஸ்ரீ – வாடிக்கையாளர் சேவை மேலாளர், (ஆதித்யா பிர்லா சன்லைப் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம்(ABSL AMC))

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கடந்த பத்து வருட கால இந்திய முதன்மைச் சந்தை(ஐ.பி.ஓ) எப்படி இருந்துள்ளது – 2024 தரவு ?

கடந்த பத்து வருட கால இந்திய முதன்மைச் சந்தை(ஐ.பி.ஓ) எப்படி இருந்துள்ளது – 2024 தரவு ?

IPO(Initial Public Offer) Performance in the Indian Stock Market Since 2014

 

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான காலத்தில், டீமேட் கணக்குகளின் எண்ணிக்கையும், பங்குச்சந்தையில் ஈடுபடும் சிறு முதலீட்டாளர்களின் வரவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து வருடங்களாக பங்குச்சந்தையில் முதன்மைச் சந்தையான ஐ.பி.ஓ. வெளியீட்டில் ஆர்வம் காட்டும் சில்லறை முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வந்துள்ளது. இதற்கு சந்தை பெரிய அளவிலான இறக்கத்தை காணாமல் இருப்பதும் ஒரு காரணமாக உள்ளது.

நாட்டின் பங்குச்சந்தையில் பிரதான சந்தைகளாக மும்பை பங்குச்சந்தையும்(BSE), தேசிய பங்குச்சந்தையும்(NSE) உள்ளது. 1875ம் ஆண்டு வாக்கில் துவங்கப்பட்ட மும்பை பங்குச்சந்தையில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பொதுவெளியில் பட்டியலிடப்பட்டுள்ளது. இச்சந்தையின் மதிப்பு  சுமார் 5.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும்(இந்திய ரூபாயில் 467 லட்சம் கோடி). 1992ம் ஆண்டில் துவங்கப்பட்ட தேசிய பங்குச்சந்தையில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 463 லட்சம் கோடி(5.5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்).

தேசிய பங்குச்சந்தையின் முக்கிய குறியீடாக நிப்டி50ம், மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடாக சென்செக்ஸ் உள்ளது. மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தையின் கீழ் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பட்டியலிட எஸ்.எம்.இ.(SME IPO) சந்தைகளும் கவனிக்கத்தக்கது. 

பொதுவாக ஐ.பி.ஓ.(Initial Public Offering) எனப்படும் முதன்மைச் சந்தையில் பட்டியலிட உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து பங்குகளை வாங்க மட்டுமே செய்வோம். இரண்டாம் நிலைச் சந்தையில்(Secondary Market) தான் பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது என முழு வணிகமும் நடைபெறும். 

ஐ.பி.ஓ. முறையில் முதலீடு செய்து லாபமீட்டலாமா ?

நடப்பாண்டில் இதுவரை 252 நிறுவனங்கள்(எஸ்.எம்.இ. உட்பட) இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐ.பி.ஓ. முதலீட்டின் மூலம் திரட்டப்பட்ட மொத்தத் தொகை ரூ.70,667 கோடி. இதுவே பத்து வருடத்திற்கு முன்பு, அதாவது 2014ம் ஆண்டில் காணும் போது, 44 நிறுவனங்கள் சேர்த்து ரூ.1,494 கோடி முதலீடுகள் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.

IPO Performance in India Since 2012 - 2024-sep

2012ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் அதிகபட்சமாக ஏற்றம் பெற்ற காலம், இந்த 2024ம் வருடம் தான். பட்டியலிடப்பட்ட நாளில் சராசரியாக சுமார் 47 சதவீத விலையேற்றத்தை பங்கு விலை பெற்றுள்ளது. 2019ம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட ஒட்டுமொத்த நிறுவனங்களை தற்போது வரை வைத்திருந்தால், இது சராசரியாக 376 சதவீத வளர்ச்சியை தந்திருக்கும். எனினும், குறிப்பிட்ட பங்கின் விலையில் கிடைத்த வளர்ச்சியை இது சுட்டிக்காட்டவில்லை. 

கடந்த பத்து வருட காலத்தில் ஒரே ஆண்டில் அதிகபட்ச ஐ.பி.ஓ. நிறுவனங்கள் பட்டியலிடப்படுவதும் இதுவே முதன்முறை(2024ம் ஆண்டு). நடப்பாண்டு இன்னும் முடிவடையாத நிலையில், இதுவரை வெளியிடப்பட்ட 252 நிறுவனப் பங்குகளில் 229 நிறுவனப் பங்குகள், சந்தையில் வெளியிடப்பட்ட நாளன்று ஏற்றத்தில் துவங்கியுள்ளது. சொல்லப்பட்ட 252 நிறுவனங்கள் 70,667 கோடி ரூபாயை முதலீடாக திரட்டிய நிலையில், தற்போது அதன் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு(Market Cap) ரூ.4 லட்சம் கோடி.

Mainboard IPOs in India Since 2007

 கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ.12,105 கோடி

டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் – ரூ.12,105 கோடி 

TCS reported a Net Profit of Rs.12,105 Crore – Q1FY25

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் மிகப்பெரிய நிறுவனமாகவும், டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமுமான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் 2024-25ம் நிதியாண்டுக்கான முதலாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 62,613 கோடி ரூபாயாகவும், செலவினம் 45,951 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

நிறுவனத்தின் இயக்க லாப விகிதம்(OPM) 27 சதவீதமாக உள்ளது. இதர வருமானமாக 962 கோடி ரூபாயை சொல்லியிருந்த இந்நிறுவனம் முதலாம் காலாண்டின் முடிவில் ரூ.12,105 கோடியை நிகர லாப ஈட்டியுள்ளது. BFSI பிரிவில் 23,074 கோடி ரூபாயையும், உற்பத்தி பிரிவில் 6,271 கோடி ரூபாயையும், நுகர்வோர் தொழிற் பிரிவில் ரூ.9,991 கோடியையும் வருவாயாக பெற்றுள்ளது. தொடர்பு மற்றும் ஊடகப் பிரிவில் ஈட்டப்பட்ட வருவாய் ரூ.10,794 கோடி மற்றும் மருத்துவப் பிரிவில் 6,909 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது.

நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் வட அமெரிக்காவிலிருந்து வந்துள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தின் தற்போதைய சந்தை மூலதன மதிப்பு ரூ. 15.14 லட்சம் கோடி. நாட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு அடுத்தாற் போல் அதிக சந்தை மூலதன மதிப்பை கொண்டிருக்கும் நிறுவனம் டி.சி.எஸ். ஆகும். மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2023-24ம் நிதியாண்டில் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) 90,127 கோடி ரூபாய். 

நிறுவனத்தின் கூட்டு வருவாய் வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 10 சதவீதமாகவும், லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 8 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) 72 சதவீதமாகவும், உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்களில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்களிப்பு 4.86 சதவீதமாகவும் உள்ளது. டி.சி.எஸ். நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம் 82 மடங்குகளில் இருந்துள்ளது.

நிறுவனத்தின் பிராண்டு மதிப்பு மட்டும் சுமார் 13.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக கூகுள், அமேசான், அடோப், இன்டெல், ஆப்பிள், ஆரக்கிள், ஐபிஎம், பாஸ்ச் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஆண்டுக்கு சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை டி.சி.எஸ். நிறுவனத்திற்கு செலுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மட்டும் 50. பங்கு மூலதனம் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருட காலத்தில் சராசரியாக 43.8 சதவீதமாக உள்ளது. 

டி.சி.எஸ். நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு இதுவரை மூன்று முறை ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் போனஸ் பங்குகளை அளித்துள்ளது. பங்குகளை திரும்பப் பெறும்(Buyback of Shares) செயல்பாடுகளை ஐந்து முறை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com