Tag Archives: portfolio rebalancing

முதலீட்டில் அலை விளைவு எவ்வாறு அமையும் ?

அறிவியல் சார்ந்த சார்பியல் கோட்பாட்டில், ஏதேனுமொன்று ஒளியின் வேகத்தை நெருங்கும் போது, அவை வெளியையே(Space) உருமாறச் செய்கின்றன. அதாவது நீருக்குள் வீசப்பட்ட ஒரு சிறுகல், மையத்தை ஒட்டிய வட்ட அலைகளை உருவாக்குவது போல. இதனை அறிவியலில், ‘ஈர்ப்பு அலைகள்(Gravitational Waves)’ என்பர். பொருளாதாரம் சார்ந்தோ அல்லது மற்றொரு நிலையில் காணும் போது, இதனை, ‘அலை விளைவு(Ripple Effect); என சொல்வதுண்டு.

சுருக்கமாக, ஒரு பொருளின் அல்லது நிலையின் மீது ஏற்படும் தாக்கம், அதனை சுற்றியுள்ள மற்றொன்றின் மீதும் அதன் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ அமையலாம். இதனை நாம் ஏன் பொருளாதார உலகில் அல்லது நமது முதலீட்டு போர்ட்போலியோவில் பார்க்க வேண்டும் ?

சமூகத்தில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு, அதன் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துவது போல, முதலீட்டிலும் நாம் மேற்கொள்ளும் சிறு செயல்கள் அதன் விளைவை கொண்டு வரும். உதாரணமாக நமது முதலீட்டு போர்ட்போலியோவில் 10 நிறுவனப் பங்குகளை கொண்டிருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். இவற்றில் எட்டு நல்ல நிறுவனப் பங்குகள் நல்ல வருவாயை நமக்கு கொடுத்திருந்தாலும், மற்ற இரண்டு மோசமான வருவாயை அளிக்கும் பங்குகள், நமது ஒட்டுமொத்த போர்ட்போலியோ வளர்ச்சியை தடுத்து விடும். இதன் காரணமாக நாம் சுமாரான அல்லது எதிர்மறையான வளர்ச்சி நிலையை பெற நேரிடும். மாறாக, வெறும் இரண்டு நிறுவனப் பங்குகளின் வருவாய் வளர்ச்சியே, மற்ற 8 மோசமான பங்கு விலைகளின் விளைவையும் கடந்து நல்ல வருவாயையும் கொடுத்திருக்கலாம்.

இதனை மையமாக கொண்டு தான், பெரும்பாலான நிதி ஆலோசகர்கள்(சந்தையின் தன்மையை நீண்டகாலத்தில் நன்கு அறிந்த) அவ்வப்போது போர்ட்போலியோவை மறுசீராய்வுக்கு(Portfolio Rebalancing or Review) உட்படுத்த சொல்கின்றனர். வெறுமனே பங்குகளில் முதலீடு செய்து விட்டு, உட்கார்ந்து விட்டால் போதாது. நீண்டகால முதலீட்டு நோக்கில், அதனை அவ்வப்போது சரிசெய்து பராமரிக்கவும் வேண்டும். 

தற்போதைய நவீன உலகமயமாக்கலில், ஏதேனும் ஒரு நாட்டில் பொருளாதாரம் சார்ந்து ஏற்படும் சிறு சிக்கல் கூட, மற்ற நாடுகளில் விளைவுகளை ஏற்படுத்தலாம். “அந்த நாட்டில் பிரச்சனை நடந்தால் நமக்கென்ன என நாம் சும்மா இருந்து விட முடியாது தானே !”  அந்த நாட்டிலிருந்து ஏதேனும் ஒரு பொருளை மற்ற பெரும்பாலான நாடுகள் இறக்குமதி செய்து கொண்டிருக்கலாம். இல்லையெனில், அந்த குறிப்பிட்ட நாட்டின் அரசியல் சார்ந்த நிகழ்வு, மற்ற நாடுகளில் மாற்றங்களை கொண்டு வரலாம். 

தொழிலின் அடிப்படை பகுப்பாய்வை(Business Fundamentals) அலசி நாம் ஒரு நிறுவனப் பங்கினை தேர்ந்தெடுத்து விட்டால், முதலீடு செய்யும் முன் அந்த நிறுவனத்தின் தொழில் வருவாயின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகள் என்னென்ன என்பதை ஆராய வேண்டும். இதன் காரணமாக பின்னாளில் பங்கு விலை குறைய வாய்ப்பிருக்கிறதா, நிறுவனத்தின் நிதி நிலை எப்படியிருக்கும், கடன் வாங்கி தொழில் செய்தால் அந்த நிறுவனத்தால் மீண்டெழ முடியுமா மற்றும் நமது ஒட்டுமொத்த முதலீட்டு போர்ட்போலியோவில் அதன் பாதிப்பு எப்படியிருக்கும் என அறிய வேண்டும்.

இதனை பொதுவாக அதன் கடந்த கால நிதி அறிக்கை(Financial Statements), நிர்வாகத்தன்மை(Corporate Governance) மற்றும் சில எச்சரிக்கை அறிகுறிகளை(Red Flags) கொண்டு அறியலாம். அதன் காரணமாக தான், திரு. பீட்டர் லின்ச்சின், ‘Invest in What you know’, திரு. வாரன் பப்பெட்டின், ‘Circle of Competence’ தத்துவங்கள், முதலீட்டு உலகில் முக்கியத்துவம் பெறுகிறது. 

இந்த தத்துவங்களை புறந்தள்ளி வெறும் ஊகங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு, இல்லையெனில் நண்பர் சொன்னார், இணையத்தில் கண்டேன் என்ற பேர்வழியாக பங்குகளில் நாம் முதலீடு செய்து வந்தால் அதன் அலை விளைவு நமது ஒட்டுமொத்த பொருளாதார நிலையையும் மாற்றி விடும். அதனால் தான் பங்குகளில் பெரும்பாலானோர் பணம் ஈட்ட முடியாமல் ஏமாற்றமடைகின்றனர்.பின்னர், ‘பங்குச்சந்தை ஒரு சூதாட்டம், நமக்கு பங்குச்சந்தை சரிப்பட்டு வராது, இது பணக்காரர்களுக்கு மட்டுமேயான வாய்ப்பு’ என சொல்லிவிட்டு போவதுண்டு. உண்மையில் பங்குச்சந்தை முதலீடு என்பது அனைவருக்குமானது, அதனை சரியாக கையாண்டால் !

அலை விளைவு(Ripple Effect) என்பது உண்மையில் பங்குச்சந்தைக்கு மட்டுமா ? இல்லை. இதன் விளைவை எங்கும் காணலாம். நமது வீட்டில் நடக்கும் சிறு மகிழ்ச்சி அல்லது கோபம் கூட, மற்றவர்களிடம் விளைவுகளை ஏற்படுத்தலாம். வங்கி வட்டி விகித அதிகரிப்பு அல்லது குறைப்பு, மக்களின் பொருளாதாரத்தில் விளைவை கொண்டு வரலாம். ஒரு நிறுவனம் தனது தொழிலை துவக்கினால் அல்லது திவாலானால் வேலை வாய்ப்பு, சந்தை நுகர்வு, வாழ்வாதாரம், வரி வருவாய் மற்றும் நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

தவறான அல்லது சரியான அரசியல் நிலைப்பாடுகளை எடுக்கும் போதும், அதன் விளைவுகள் நீண்டகாலம் தாக்கு பிடிக்கும். அகந்தை கொள்ளும், பேராசை கொள்ளும் ஒருவரின் விளைவால் ஒட்டுமொத்த உலக பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் அல்லது எழுச்சி பெறலாம். நோய்த்தொற்று, உடல் பருமன், சுற்றுச்சூழல், தொழில்நுட்ப தாக்கம் என சொல்லிக்கொண்டே போகலாம். இதனை அவ்வளவு எளிதாக நாம் கடந்து விட்டு போக முடியாது. ஏற்படும் அலை விளைவு தாமதமாகவும் வரலாம், இல்லையெனில் உடனே நடக்கலாம். ஆனால் விளைவு என்ற ஒன்றுண்டு.

உண்மை தான். மழை வரப் போகிறது, குடை கொண்டு போகலாம் தானே ! 

முதலீட்டு கோட்பாட்டில் நீண்டகாலம் என்ற நிலையை, பெரும்பாலான சந்தை வல்லுநர்கள் ஏன் எப்போதும் பரிந்துரைக்கிறார்கள் ? காரணம், நமக்கான நேரம் இருப்பது தான். எடுத்த உடனே சந்தையில் பங்குகளை விற்று லாபம் பார்த்து விட்டு, பின்னர் சந்தை இறங்குகையில் வாங்க வருவது அவ்வளவு எளிதாக நடைபெறாது. அப்படி ஒரு வாய்ப்பும், எப்போதும் கிட்டாது. எனவே, சந்தையில் நீண்டகாலம் பங்கேற்கும் அல்லது காத்திருக்கும் மனநிலை நமக்கு வர வேண்டும். அப்போது தான் நாம் பல்வேறு வாய்ப்புகளையும், தவறுகளை திருத்திக் கொள்ளும் நேரத்தையும் பெற முடியும்.

  • சந்தையில் நீண்டகாலம் முதலீடு செய்யும் நோக்கத்தை கொண்டிருத்தல்(Focusing on Long Term Wealth Creation) 
  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல. சந்தையில் மிகக்குறைவான காலத்தில் அதிக லாபமீட்டலாம் என்ற கண்ணோட்டத்தை தவிர்த்தல்(Avoid the King Midas Effect)
  • நிறுவனத்தின் தொழிலை புரிந்து கொள்ளுதல் அல்லது கற்றுக்கொள்ள முனைதல்(Circle of Competence)
  • பகுத்தறிவுள்ள சிந்தனைக்கு பிறகு மட்டுமே முதலீடு செய்ய பழகுதல்(Focus on Rational Thoughts, not for Speculations)
  • இரைச்சல்களை புறக்கணியுங்கள்(Be Fearful When Others are Greedy, Greedy When Others are Fearful)
  • கடன் வாங்கி முதலீடு செய்தல் மற்றும் வரம்பிற்கு மேல் ரிஸ்க் எடுத்தலை தவிர்ப்பது(Risk Profiling)
  • சந்தை எப்போது வேண்டுமானாலும் இறக்கம் காணலாம் என்ற நிலையை ஏற்றுக்கொள்வது(Diversification and Margin of Safety)
  • மாற்றுத் திட்டத்தை வகுத்தல் மற்றும் நிலையான முதலீட்டு தத்துவத்தை பேணுதல்(Contingency plans and Maintain Stable &  Adapted Investing Culture)   

மேலே சொன்னது போக, பொருளாதாரத்தை பற்றிய அடிப்படை கற்றல்(Macro Economy), போர்ட்போலியோ மறுசீராய்வு, நிலையான வருவாய், பயத்தில் பங்குகளை விற்பதை தவிர்த்தல், தொடர்ச்சியாக சேமிப்பு மற்றும் முதலீட்டை மேற்கொள்ளுதல் போன்றவற்றை மேற்கொண்டால், அலை விளைவின்(Ripple Effect) தாக்கத்திலிருந்து நமது முதலீட்டை நீண்டகாலத்தில் பாதுகாத்து நல்ல வருவாய் வளர்ச்சியையும் பெறலாம்.

2020ம் ஆண்டுக்கு பின்னர் நடந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு, பொருளாதார தேக்கம், உக்ரைன்-ரசிய போர் காரணமாக எண்ணெய் விலையில் மாற்றம், தற்போது அமெரிக்க-இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக ஏற்படப்போகும் பணவீக்கம் என அலை விளைவின் தாக்கம் உதாரணமாக அமைந்துள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படை பகுப்பாய்வுக்கான கற்றல் மட்டுமே.

www.varthagamadurai.com