பொருளாதார ஆய்வறிக்கை 2021 – என்ன சொல்கிறது ?
Budget India 2021 – Economic Survey
மத்திய அரசின் பட்ஜெட் காலத்திற்கான நாடாளுமன்ற கூட்டம் நேற்று(29-01-2021) துவங்கியது. வரும் திங்கட்கிழமை(01-02-2021) மத்திய அரசு சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டின் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும். இது அரசின் அடுத்தகட்ட பொருளாதார நடவடிக்கைக்கு உதவும்.
மூன்றாவது முறையாக நாட்டின் பட்ஜெட் தாக்கலை நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவிக்க உள்ளார். நடப்பு நிதியாண்டில் காணப்பட்ட நடப்பு கணக்கு உபரித்தொகை(Current Account Surplus) கடந்த 17 வருடங்களில் இல்லாத அளவாகும். வரக்கூடிய 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு நாடு சுதந்திரம் பெற்ற பிறகு சொல்லப்பட்ட அதிகபட்ச அளவாகும்.
கொரோனா நிவாரண நடவடிக்கைக்கு பின்னர், நாட்டில் உள்ள வங்கிகள் பழைய தவறுகளை மீண்டும் செய்யாமல் வங்கி நிதி நிலைமையை கவனத்துடன் வைத்திருக்க வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் திரு. கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் உயரும் போது, கடன் தன்மையிலும் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் (-7.7%) என்ற அளவில் முடிவடையலாம்.
உலகளாவிய கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி(GDP Growth) அதிகமாக இருந்த போதிலும், சாதகமான நடப்பு கணக்கு, நிலையான நாணயம், அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரித்து வருவது, உற்பத்தி துறையில் ஊக்குவிப்பு ஆகியவை வரக்கூடிய காலங்களில் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் அரசு ஈட்டிய வரி வருவாய் 12.6 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இதன் மதிப்பு 10.26 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது கவனிக்கத்தக்கது.
அரசு நிறுவனங்களின் பங்கு விலக்கல்(Disinvestment) மூலமான இலக்கு 2.1 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்பில் மட்டுமே அடையப்பட்டுள்ளது. வரக்கூடிய பட்ஜெட் தாக்கலில் அரசுக்கான வருவாயை அதிகரிப்பதற்கான திட்டங்கள் விவாதிக்கப்படலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை