கொரோனா பெருந்தொற்றிலும் அதிகரித்த சமத்துவமின்மை விகிதம்
The Covid-19 Inequality Rate – Rich gets Richer
ஆக்ஸ்பேம்(Oxfam) நிறுவனம் சார்பில் கடந்த 2020ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான தரவுகள் சிலவற்றை கூறியிருந்தது. ‘உலகின் 60 சதவீத மக்கள் சம்பாதிக்கும் பணத்தை காட்டிலும், அதிக சொத்து மதிப்பு கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 2,153 பில்லினியர்கள். ஆப்பிரிக்காவில் உள்ள அனைத்து பெண்கள் சம்பாதிக்கும் வளத்தை விட அதிக சொத்து, உலகின் 22 பணக்காரர்களிடம் உள்ளது. நம் நாட்டில் 95.3 கோடி மக்களின் வளத்தை காட்டிலும் நான்கு மடங்கில் ஒரு சதவீத இந்தியர்களிடம் உள்ளது ‘ என சொல்லப்பட்டிருந்தது.
நாட்டில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தின் தலைமை அதிகாரி சம்பாதிக்கும் ஒரு வருட வருவாயை பெற, பெண் ஊழியர் ஒருவர் 22,277 வருடங்கள் வேலை பார்த்தாக வேண்டும். அவர் பத்து நிமிடங்களில் சேர்க்கும் பணத்தை, தொழிலாளர் ஒருவர் ஒரு வருடம் முழுவதும் உழைத்தால் மட்டுமே கிடைக்கும்.
சமத்துவம் சார்ந்த கொள்கைகள் வழிவகுக்கப்பட்டால் ஒழிய பணக்காரர்கள் – ஏழைகளுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க இயலாது என இந்த கூட்டமைப்பு சொல்கிறது. நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் தங்கள் வரியை நியாயமாக செலுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், கிடைக்கும் வரி பணத்தை அரசு முறையாக பொது சேவைகள் மற்றும் உட்கட்டமைப்புக்கு பயன்படுத்துவதை கண்காணிக்கும் முறைகள் கையாளப்பட வேண்டும் எனவும் ஆக்ஸ்பேம் மேற்கோள் காட்டுகிறது.
தற்போது கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் அதனை சார்ந்த சமத்துவமின்மை விகித புள்ளிவிவரங்களை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. மார்ச் 2020க்கு பிறகு, இந்தியாவில் 100 பில்லியனர்களின் சொத்து மதிப்பு 12.97 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது நாட்டில் காணப்படும் சுமார் 14 கோடி ஏழைகளுக்கு, நபர் ஒன்றுக்கு 94,045 ரூபாயாக பிரித்து கொடுக்கலாம் என சொல்கிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. முகேஷ் அம்பானி ஒவ்வொரு மணி வேளையில்(an Hour) சம்பாதித்த வருவாயை, அமைப்பு சாரா தொழிலாளி ஒருவர் சம்பாதிக்க 10,000 வருடங்கள் தேவைப்படும் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஊரடங்கு காலத்தில் சுமார் 40 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பெரும்பாலானோர் அமைப்பு சாரா துறையில் உள்ளவர்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் கணினி பயன்பாடு நான்கு சதவீதம் மட்டுமே உள்ளது. இணைய சேவையும் 15 சதவீதத்திற்கு குறைவாகவே கிராமப்புறங்களில் காணப்படுகிறது. கொரோனா காலத்தில் அடிப்படை ஆரம்ப கல்வி(பள்ளிக்கல்வி) தடைப்பட்டுள்ளது. அதே நேரம் சொல்லப்பட்ட காலத்தில் பைஜூ(Byju’s) போன்ற இணைய வழி கல்வி சார்ந்த நிறுவனங்களின் மதிப்பு அதிகரித்துள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 60 சதவீத மக்கள் ஒரு வீடு அல்லது அதற்கு குறைவான இருப்பிடத்தில் வசித்து வருகின்றனர். சுகாதாரம் மற்றும் மருத்துவ அடிப்படையிலும் பெரும்பாலான மக்களுக்கு போதுமான வசதி கிடைக்கப்பெறவில்லை. ஏப்ரல் 2020 தரவுகளின் படி, நாட்டில் சுமார் 1.7 கோடி பெண்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இந்த வேலையிழப்பு விகிதம் நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு பாதகமாக அமையும் என ஆக்ஸ்பேம் குறிப்பிட்டுள்ளது.
கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வரும் நிலையில், கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு உயர்ந்து வருவது கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மாறவில்லை. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பயத்தை காட்டிலும், சமத்துவமின்மை விகிதம் அதிகரித்து வருவது தான் உண்மையில் பொருளாதாரம் சார்ந்த பயத்தை ஏற்படுத்துகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை