பங்குகளை மதிப்பீடு செய்யும் போது தவிர்க்க வேண்டிய நான்கு விஷயங்கள்
Four things to avoid when valuing a Stock – Value Investing
பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவன பங்கை வாங்குவதற்கு இரு வகையான முறைகளில் மதிப்பீடு செய்யலாம். அடிப்படை முறையாக சொல்லப்படுவது பண்டமென்டல் அனாலிசிஸ், மற்றொரு முறை டெக்னிக்கல் அனாலிசிஸ். ஒரு நிறுவனத்தின் தொழில் சார்ந்த தன்மைகளை ஆராய்ந்து பங்குகளை அலசுவது பண்டமென்டல் அனாலிசிஸ். சந்தையில் வர்த்தகமாகும் பங்கின் கடந்த கால விலைகளை கொண்டு அலசுவது டெக்னிக்கல் அனாலிசிஸ் எனப்படும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றை சந்தையில் ஈடுபடுபவர்கள் தங்களது ஆயுதமாக கொள்வர்.
சொல்லப்பட்ட இரு முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடிப்பது அவசியம். நீண்டகால முதலீட்டாளர்களுக்கு அடிப்படை பகுப்பாய்வு(Fundamental Analysis) என்பது முக்கியமான அம்சமாகும். குறுகிய காலத்தில் செயல்படுபவர்களுக்கு அடிப்படை பகுப்பாய்வும், தொழில்நுட்ப பகுப்பாய்வும் பயனளிக்கும். நாள் வணிகருக்கு தொழில்நுட்ப பகுப்பாய்வு(Technical Analysis) பயன்பட்டாலும், தொழில் சார்ந்த அடிப்படை தன்மைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் எந்த முறையில் அலசுவதாக இருந்தாலும், சொல்லப்போகும் நான்கு விஷயங்களை தவிர்த்து விட்டு பங்குகளை காண வேண்டும். அப்போது தான் உங்களது மதிப்பீடு தவறாக போகாது.
-
பங்குகளை நேசிக்க வேண்டாம் (Don’t love the Stock always):
பங்குச்சந்தையில் நீங்கள் வாங்க போகும் பங்கு மீது அதிக பற்று வைத்து நேசிக்க வேண்டாம். ‘நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பங்கு, எனக்கு அந்த நிறுவனத்தின் பெயர் ரொம்ப பிடிக்கும், நல்ல பிராண்டு’ என்ற காரணங்களை மட்டும் கொண்டு பங்குகளை வாங்க வேண்டாம். பங்குகளை வாங்குவதற்கு முன்னர், மதிப்பீடு(Valuation) செய்வதன் மீது கவனம் செலுத்துங்கள். பங்குச்சந்தையை பொறுத்தவரை நிறுவனத்தின் தொழில் நன்றாக நடைபெற்றால் மட்டுமே அது முதலீட்டாளர்களுக்கு லாபத்தை சம்பாதித்து கொடுக்கும். இல்லையெனில், கடந்த காலத்தில் ஜாம்பவானாக இருந்த நிறுவனங்களும், பிற்காலத்தில் காணாமல் போகலாம். எனவே பங்குகளின் மதிப்பீட்டை உற்று நோக்குங்கள்.
-
உங்களது சிந்தனையை பங்குகளின் மீது திணிக்காதீர்கள் (Don’t like your Idea on Stock):
நீங்கள் கடந்த காலங்களில் எந்தவொரு மதிப்பீட்டையும் செய்யாமல் பங்குகளை வாங்கி குவித்திருக்கலாம். சில பங்குகள் நல்ல லாபத்தை கொடுத்திருக்கும். இருப்பினும், அதனை ஒரு சிறந்த முறையாக நீங்கள் எடுத்து கொண்டு பங்குகளை வாங்காதீர்கள். உங்களது கடந்த கால பங்கு வாங்கும் தவறான சிந்தனையை, புதிய பங்குகளை வாங்கும் போது திணிக்க வேண்டாம்.
‘நான் வாங்கிய 2 ரூபாய் விலையுள்ள பங்கு 10 ரூபாய் சென்று விட்டது, பெருத்த லாபம் ‘ என எந்தவொரு அடிப்படை தொழில் சார்ந்த விஷயமும் இல்லாமல் சூதாட வேண்டாம்.
-
மந்தை கூட்ட மனப்பான்மையை தவிர்க்க வேண்டும் (Avoid Herd Mentality):
நண்பர்கள் சொன்னார்கள், தரகர் சொன்ன தகவலில் வந்தது, டி.வியில் பரிந்துரைத்தார்கள் என பங்குகளை வாங்க வேண்டாம். நீங்களாகவே ஒவ்வொரு பங்குகளையும் மதிப்பீடு செய்து, ஆராய்ந்து வாங்குங்கள். இது பங்குகளை விற்கும் போதும் தேவையான ஒன்று. உங்களுக்கு நேரம் இல்லையென்றால், பங்குகளை அலச நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் துணை கொண்டு முதலீட்டு முடிவை எடுங்கள்.
மற்றவர்கள் வாங்குகிறார்கள், குறிப்பிட்ட பங்கு ஒன்று சந்தையில் இன்று அதிக விலைக்கு வர்த்தகமாகிறது அல்லது ஊடக செய்தியில் வந்த தகவல் என அவசரப்பட்டு மந்த கூட்ட மனப்பான்மையில் பங்குகளை வாங்காதீர்கள். உங்களுக்கு லாபம் மட்டுமே சொந்தமல்ல, நட்டமும் தான்.
-
மதிப்பீட்டிற்கு முன்னுரிமை அளியுங்கள் (Don’t Compromise – Stock vs Valuation):
‘நான் இந்த பங்கினை பல காலங்களாக பார்த்து வருகிறேன், இது இப்படி தான் ஏறும், இறங்கும்’ என வெறும் விலைகளை மட்டும் பார்க்காமல் அதன் நிதி சார்ந்த தன்மைகளை கவனியுங்கள். நிறுவனத்தின் நிதி அறிக்கை எப்படி உள்ளது, கடன் ஏதும் உள்ளதா, பொருளாதார மந்தநிலை காலங்களில் நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது, அதன் தொழில் போட்டி என்ன என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.
பங்குச்சந்தையில் ஒரு நிறுவன பங்கு வர்த்தகமானாலும், உண்மையில் அந்த நிறுவனத்திற்கு தொழில் சரியாக நடைபெற்றாக வேண்டும். வெறுமென பங்கு விலையை மட்டும் கவனிக்காமல், மதிப்பீட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். மதிப்பீடு சில சமயங்களில் தவறாக போனாலும், அதனால் வரக்கூடிய இழப்பு குறைவே, அது ஏற்றுக்கூடியதாகவும் இருக்கும்.
சில சமயங்களில் நல்ல நிறுவன பங்குகளும், மதிப்பீடு செய்யாமல் தவறான விலையில் வாங்கும் போது உங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை