மீண்டும் நஷ்டத்தை சந்தித்த ஏர்டெல் நிறுவனம் – ரூ. 1,035 கோடி
Bharti Airtel reported a Net loss of Rs. 1,035 Crore in Q3FY20 – Quarterly Results
இந்திய தொலைத்தொடர்பு துறையில் சமீபத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நிறுவனங்களுக்கான போட்டி வெகுவாக குறைந்துள்ளது. முன்னர் ஒவ்வொரு மாநிலத்திலும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் பரவலாக இருந்த நிலையில், இன்று பல நிறுவனங்கள் காணாமல் போயின. ரிலையன்ஸ் ஜியோ(Jio) மற்றும் பார்தி ஏர்டெல்(Bharti Airtel) நிறுவனங்கள் மட்டுமே பெரு நிறுவனங்களாக உள்ளன.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வோடபோன் ஐடியா(Vodafone Idea) நிறுவனம் தனக்கான வாடிக்கையாளர்கள் சந்தையை கொண்டிருந்தாலும், நிறுவனம் கடந்த பத்து காலாண்டுகளுக்கும் மேலாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வருகின்றன. வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு கடனாக ரூ. 99,660 கோடி உள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் ரூ. 50,922 கோடி நஷ்டத்தை சந்தித்தது.
ஏர்டெல் நிறுவனம் 2019-20ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டிருந்தது. இந்த காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 21,947 கோடி எனவும், செலவினம் ரூ. 12,701 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனம் இம்முறை ரூ. 1,035 கோடியை நஷ்டமாக கொண்டுள்ளது.
கடந்த 14 வருடங்களில் முதன்முறையாக 2019-20ம் நிதியாண்டின் மூன்று காலாண்டுகளிலும் ஏர்டெல் நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் நிலுவைத்தொகையை(AGR) செலுத்துமாறு ஏர்டெல் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக ஏர்டெல் நிறுவனம் சொல்லப்பட்ட நிலுவை தொகையை ஒதுக்கியதன் மூலம் காலாண்டு முடிவில் நஷ்டத்தை சமர்ப்பித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்கள் சேவைக்கான கட்டணத்தை 40 சதவீதத்திற்கு மேலாக அதிகரித்திருந்தது. 2018ம் ஆண்டின் டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய வருவாய் உயர்ந்திருந்தாலும், நிகர வருமானத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2.83 லட்சம் கோடி. நிறுவனத்தின் கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 1.84 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதமும் ஒன்றுக்கு குறைவாக உள்ளது கவனிக்கத்தக்கது. பொதுவாக தொலைத்தொடர்பு சேவையில் உள்ள நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையார்களிடம் இருந்து பெறப்படும் சந்தா கட்டணத்தை(Subscription Fee – Recharge) கொண்டு தான் தொழிலை நிர்வகித்து வருகிறது.
ஏர்டெல் நிறுவனத்திற்கு கடனாக ரூ. 1.28 லட்சம் கோடி உள்ளது. இதன் தற்போதைய பங்கு விலை புத்தக மதிப்பை காட்டிலும் 4 மடங்கில் வர்த்தகமாகி வருகிறது. நிறுவனர்களின் பங்களிப்பு 63 சதவீதமாக உள்ளது. 2018-19ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 80,780 கோடியாகவும், நிகர லாபம் ரூ.410 கோடியாகவும் இருந்தது. ஆனால் இம்முறை நடப்பு நிதியாண்டில் மூன்று காலாண்டுகளில் நஷ்டம் ஏற்பட்டதால், ஆண்டு முடிவில் பெரும்பாலும் நிகர நஷ்டமாகவே சொல்லப்படும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை