உலகெங்கிலும் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது – சர்வதேச நாணய நிதியம்
Worldwide Economy Slowdown seen – IMF
தற்போது உலகெங்கும் ஒருவித பொருளாதாரம் சார்ந்த மந்த நிலை தென்படுகிறது. இது திடீரென ஏற்பட்டதல்ல, கடந்த இரண்டு வருட காலமாகவே காணப்பட்டு வரும் மந்த நிலை தான். சீன-அமெரிக்க வர்த்தக போரில் துவங்கி, உள்நாட்டில் ஐ.எல்.எப்.எஸ்.(IL & FS) நிறுவனம் நிதி சிக்கலில் வெளிப்பட, தற்போது ஒவ்வொரு நாட்டிலும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சொல்லிக்கொள்ளும் படி இல்லை.
2008ம் ஆண்டுக்கு பிறகு, மற்றுமொரு பொருளாதார வீழ்ச்சி நடப்பில் ஏற்படுமா என்ற கேள்வி பலரிடம் எழும்பியுள்ளது. உலகமயமாக்கல் வந்த பிறகு, ஒவ்வொரு நாடும் வளர்ச்சி பாதையில் சென்றிருப்பினும், வெவ்வேறு நாடுகளில் ஏற்படக்கூடிய பிரச்சனை மற்ற நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்து வருவது இயல்பு.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சமீபத்தில் சர்வதேச நாணய நிதியம்(International Monetary Fund) சார்பில் உலக பொருளாதாரம் சார்ந்த சில விஷயங்களும், அதற்கான ஆய்வுகளும் பேசப்பட்டன. நடப்பு 2019ம் ஆண்டில் உலகின் கிட்டத்தட்ட 90 சதவீத நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மிகக்குறைவாகவே இருக்கும் என கூறியுள்ளது. இதன் தாக்கம் 2020ம் வருடத்திலும் இருக்கும் என தெரிவித்துள்ளது.
நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போரால், 2020ம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 700 பில்லியன் டாலர்கள் அளவு சரிவு ஏற்படும் எனவும் கூறியுள்ளது. இது உலக பொருளாதார வளர்ச்சியில் 0.8 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது.
இதன் விளைவாக ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார தேக்கம் ஏற்பட்டு, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு, கடந்த சில வருடங்களில் காணாத மிக குறைவான விகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சொல்லப்பட்டுள்ள உலக பொருளாதாரம், ஒரு ஒத்திசைக்கப்பட்ட பொருளாதார மந்த நிலையாக உள்ளது. இதனை சரி செய்ய ஒவ்வொரு நாடும் பரஸ்பர புரிந்துணர்வு மூலமே தீர்வை பெற முடியும்.
கடந்த முறை ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை விட, இம்முறை ஏற்பட்டுள்ள மந்த நிலை நீடித்த காலமாக சொல்லப்படுகிறது. உள்நாட்டில் நுகர்வு தேவையை(Consumption Demand) அதிகரித்தால் மட்டுமே, பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் சமயங்களில் சரிக்கட்ட முடியும்.
நடப்பு காலாண்டு (அக்டோபர்-டிசம்பர்) நுகர்வு மற்றும் விற்பனை அளவு, உள்நாட்டை பொறுத்தவரை மிகவும் கவனிக்கக்கூடிய காரணிகளாகும். 2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாயை பெருக்க கூடிய காலண்டாகவும் இது பார்க்க முடிகிறது. இவற்றில் சரிவு ஏற்படும் நிலையில், அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், நாட்டின் நிதி பற்றாக்குறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை