யெஸ் பேங்க் – மீண்டும் ஏற்றம் பெறுமா ?
Yes Bank – Getting the Boom Again ?
தனியார் வங்கியான, ‘யெஸ் பேங்க்(YES Bank)’ – பிரமிப்பான வளர்ச்சி முதல் பிரச்சனை வரை என யெஸ் வங்கியின் குறுகிய கால வரலாற்றை நமது தளத்தில் ஏற்கனவே சொல்லியிருந்தோம். யெஸ் வங்கி, நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எப்.சி. வங்கி(HDFC) போல வளர்ச்சியடையுமா என பல முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதன் வீழ்ச்சி பெரும்பாலும் வங்கி நிர்வாக சிக்கலில் தான் முடிந்தது.
அதன் நிறுவனர் திரு. ராணா கபூர் வங்கியை பற்றி கூறுகையில், ‘ இங்கே(Yes Bank) வைரங்கள் எப்போதும் உள்ளன. என்னுடைய ஒரு பங்கினை கூட நான் விற்க போவதில்லை ‘ என்று கூறியிருந்தார். ஆனால் தற்போதைய நிலைமை வேறு. தனது பங்குகளை விற்று விட்டார் ராணா கபூர். தான் அடமானம் வைத்த பங்குகளை, பரஸ்பர நிதி நிறுவனங்களும் விற்று விட்டன.
வங்கியை செயலாற்ற தேவையான முதலீட்டை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது யெஸ் வங்கி. வேகமாக வளர்ந்து வரும் வங்கிகளில் யெஸ் வங்கி முன்னிலை வகிக்க, அதன் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 80 சதவீத இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒரு சதவீதத்திற்கும் கீழான வாராக்கடனை(Gross NPA) கொண்டிருந்த இந்த வங்கி, நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டு முடிவில் மொத்த வாராக்கடன் அளவு 5 சதவீதத்தை தாண்டியுள்ளது. நிறுவனத்தின் லாப அளவிலும் கடந்த மூன்று வருடங்களில் 12 சதவீத இழப்பை கொண்டுள்ளது.
யெஸ் வங்கியின் பங்கு மலிவான விலையில் தற்போது கிடைக்கப்பெற்றாலும், நிதிச்சிக்கலில் இருந்து மீட்கப்பட்டு, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பினால் மட்டுமே, அது மலிவான விலையில் முதலீடாக கருதப்படும். இருப்பினும், தற்போதைய நிலையில் சிறு முதலீட்டாளர்கள் இந்த பங்கினை வாங்கி குவித்து வருகின்றனர்.
வங்கியில் நிறுவனர்களின் பங்களிப்பு குறைவு, நிறுவனர்களின் பங்கு அடமானம்(Pledging), குறைவான வட்டி பாதுகாப்பு விகிதம்(Low ICR) மற்றும் வாராக்கடன் அளவு அதிகரித்து வருவது ஆகியவை யெஸ் வங்கியின் செயல்பாட்டை பாதித்துள்ளது. வங்கியின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 12.50 ஆக உள்ளது. நிப்டி50(Nifty50) ல் இருக்கும் இந்த பங்கு, ஒரு ஸ்மால் கேப்(Small Cap) பங்குகளை போன்று தற்போது விலையில் காணப்படுகிறது.
சமீபத்தில் இந்த பங்கின் விலை குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுவது, நிறுவனர்கள் தங்கள் பங்குகளை விற்றதால் எனவும், இடைப்பட்ட நாட்களில் சில ஏற்றத்தை பெற்றதற்கு, மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த வங்கியில் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், யெஸ் வங்கியின் குறிப்பிட்ட பங்குகளை வாங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், நிறுவனம் இந்த செய்தியை மறுத்துள்ளது.
எப்படி இருப்பினும் யெஸ் வங்கிக்கு தற்போதைய தேவை, கணிசமான முதலீடு மட்டுமே, ஊடக செய்திகள் அல்ல. முதலீடு இருக்கும் பட்சத்தில், இது தனது பழைய வளர்ச்சி பாதையை நோக்கி பயணம் செய்ய பல காலாண்டுகள் பிடிக்கலாம். சத்யம் நிறுவனம் மீட்டெடுக்கப்பட்டதை போல, யெஸ் வங்கி மீட்டெடுக்கப்படுமா மற்றும் முதலீட்டாளர்களுக்கு பயனை கொடுக்குமா என்பதனை பொறுத்திருந்து ஆராய்வோம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை