Tag Archives: NALCO

2024-25ம் நிதியாண்டில் நேஷனல் அலுமினியம்(நால்கோ) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,268 கோடி

2024-25ம் நிதியாண்டில் நேஷனல் அலுமினியம்(நால்கோ) நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,268 கோடி  

NALCO India reported a Net Profit of Rs.5,268 Crore in the FY 2024-25 Consolidated – Results

ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த முதன்மை அலுமினிய உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான தேசிய அலுமினிய கம்பெனி(National Aluminium Company) நிறுவனம் தனது 2024-25ம் நிதியாண்டுக்கான நிதி அறிக்கையை வெளியிட்டிருந்தது. நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த பாக்சைட்- அலுமினா – அலுமினிய – மின்சார வளாகங்களை கொண்ட நிறுவனமாகவும் நால்கோ உள்ளது.

கடந்த 1981ம் ஆண்டு வாக்கில் துவக்கப்பட்ட இந்நிறுவனம் அலுமினா மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்களை உற்பத்தி செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதன் உட்பிரிவுகளாக அலுமினிய கம்பிகள், உருட்டப்பட்டவை, கீற்றுகள்(Strips), பில்லெட்டுகள், கால்சின் செய்யப்பட்ட அலுமினா மற்றும் இதர அலுமினா பொருட்கள் உள்ளது. உலகளவில் குறைந்த விலையில் அலுமினியத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் நால்கோ இருக்கிறது. 

பொதுவாக பாக்சைட், அலுமினியம் உற்பத்திக்கான மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகிறது. அதே வேளையில் அலுமினியத்தின் தேவை கட்டுமானம், மின்னணுவியல், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பயன்படுகிறது. வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பாக்சைட் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது. ஆஸ்திரேலியா, சீனா, இந்தோனேசியா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற பகுதிகளில் பாக்சைட் அமைந்துள்ளன. இவற்றில் ஆஸ்திரேலியா உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது கவனிக்கத்தக்கது.

நால்கோ நிறுவனத்தின் வருவாய் பெரும்பாலும் உள்நாட்டில் தான் பெறப்படுகிறது. ஏற்றுமதியில் இதன் வருவாய் முப்பது சதவீதமாக இருந்துள்ளது. 2024-25ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.16,788 கோடியாகவும், செலவினம் 9,280 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் நிறுவனத்தின் இயக்க லாபம் 7,508 கோடி ரூபாயாகவும், இயக்க லாப விகிதம்(OPM) 45 சதவீதமாகவும் இருக்கிறது. பொதுவாக இத்துறையில் இயக்க லாப விகிதம் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டு உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக மூலப்பொருட்களுக்கான செலவினம் உலகளாவிய சந்தையை சார்ந்திருப்பது தான். 

2024-25ம் நிதியாண்டில் நிறுவனத்தின் இதர வருவாய் 357 கோடி ரூபாயாகவும் நிகர லாபம் ரூ.5,268 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஈவுத்தொகை விகிதம்(Dividend Yield) தற்போதைய பங்குவிலையில் சராசரியாக நான்கு சதவீதத்திற்கும் மேலாக உள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பு(Reserves) 2024-25ம் நிதியாண்டு முடிவில் ரூ.16,887 கோடி. நிறுவனத்தின் கூட்டு விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 சதவீதமாகவும், இதுவே பத்து வருடங்களில் 9 சதவீதமாகவும் இருந்துள்ளது. லாப வளர்ச்சியை காணுகையில், ஐந்து வருட காலத்தில் 108 சதவீதமாகவும், இதுவே 10 வருடங்களில் 16 சதவீதமாகவும் இருந்துள்ளது.

2025ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு(Cash Equivalents) ரூ. 5,427 கோடி. கடந்த காலத்தில் நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) கணிசமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் நிறுவனர்களை பொறுத்தவரை, இது அரசு பொதுத்துறை நிறுவனம் என்பதால், ஒன்றிய அரசிடம் 51 சதவீத பங்குகள் கைவசம் உள்ளது. அன்னிய மற்றும் உள்நாட்டு நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்களிடம் சராசரியாக 16 சதவீதப் பங்குகள் உள்ளது. 

நால்கோ நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 33,765 கோடி ரூபாய். நிறுவனத்தின் பி.இ. விகிதம் தற்போது 6.5 என்ற மடங்குகளில் உள்ளது(மே 2025). பங்கு மூலதனத்தின் மீதான வருவாய்(ROE) ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 20 சதவீதமாகவும், பத்து ஆண்டுக்காலத்தில் 14 சதவீதமாகவும் இருக்கிறது. நிறுவனத்தின் வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 121 மடங்குகளிலும், கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.01 என்ற அளவிலும் உள்ளது. 

நிறுவனத்தின் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு ரூ.97 என சொல்லப்பட்டிருந்தாலும், தற்போதைய பங்கு விலை(ரூ.184), அதன் தள்ளுபடி மதிப்பை(ரூ.226) காட்டிலும் குறைவாக தான் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. 

நிறுவனத்திற்கு கடன் ஏதும் பெரிதாக இல்லையென்றாலும், துறை சார்ந்த ரிஸ்க் தன்மை உலகளாவிய சந்தையை சார்ந்துள்ளது. இதன் காரணமாக மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி செலவினம் அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படலாம். எனவே இதன் லாப விகிதமும் ஒவ்வொரு நிதியாண்டிலும் மாறுபடக்கூடிய நிலை உள்ளது.

கவனிக்க: முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கும் முன் தகுந்த நிதி ஆலோசகர் அல்லது பங்கு ஆலோசகரின் முன்னிலையில் தங்களது முதலீட்டு முடிவை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலே சொன்ன தகவல்கள் பங்குச்சந்தை அடிப்படைப் பகுப்பாய்வுக்கானக் கற்றல் மட்டுமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நால்கோ நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.936 கோடி

நால்கோ நான்காம் காலாண்டு நிகர லாபம் – ரூ.936 கோடி 

National Aluminium Company(NALCO) reported a net profit of Rs.936 Cr – Q4FY21

அரசு பொதுத்துறை நிறுவனமான தேசிய அலுமினிய நிறுவனம் – நால்கோ, அலுமினிய உற்பத்தி சார்ந்த தொழிலை செய்து வருகிறது. பாக்சைட் சுரங்கம், அலுமினிய சுத்திகரிப்பு, அலுமினியத்தை உருக்குதல் மற்றும் வார்ப்பு, மின் உற்பத்தி, ரயில் மற்றும் துறைமுக வேலைகளை தனது தொழிலாக கொண்டுள்ளது.

நாட்டின் பில்லியன் டாலர் வருவாயை ஈட்டும் நிறுவனமாகவும், அரசின், ‘நவரத்னா’ மதிப்பையும் கொண்ட நிறுவனமாகவும் நால்கோ திகழ்கிறது. இந்நிறுவனம் தனது 2020-21ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு முடிவுகளை(Quarterly results) வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதத்தில் முடிவடைந்த நான்காம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.2,821 கோடியாகவும், செலவினம் 1877 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாபம் ரூ.944 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. இதர வருமானமாக 53 கோடி ரூபாயும், சொல்லப்பட்ட காலாண்டின் நிகர லாபமாக 936 கோடி ரூபாய் உள்ளது. இது கடந்த பத்து காலாண்டில் காண முடியாத வளர்ச்சியாக இருந்துள்ளது.

இதற்கு முந்தைய ஆண்டின்(2019-20) மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,936 கோடியாகவும், நிகர லாபம் 101 கோடி ரூபாயாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. மார்ச் 2021 முடிவின் படி, நிறுவனத்தின் இருப்புநிலை(Reserves) கையிருப்பு ரூ. 9,761 கோடி.

நால்கோவின் சந்தை மதிப்பு ரூ.14,100 கோடி மற்றும் புத்தக மதிப்பு பங்கு ஒன்றுக்கு 58 ரூபாயாக உள்ளது. கடனில்லா நிறுவனமாக வலம் வரும் நால்கோ, 51 சதவீத நிறுவனர் பங்களிப்பை கொண்டுள்ளது. இதுவரை பங்கு அடமானம் எதுவும் நிறுவனத்தின் சார்பாக வைக்கப்படவில்லை.

2020-21ம் நிதியாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 8,956 கோடி ரூபாயை வருவாயாக கொண்டுள்ளது. சொல்லப்பட்ட வருடத்தில் நிகர லாபம் ரூ.1,299 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் ஆறு சதவீதமாகவும், லாப வளர்ச்சி 12 சதவீதமாகவும் இருக்கிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பங்குச்சந்தை அலசல் – தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO)

பங்குச்சந்தை அலசல் – தேசிய அலுமினிய நிறுவனம் (NALCO)

National Aluminium Company(NALCO) – Fundamental Analysis

ஒடிசா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பொதுத்துறை நிறுவனம் தான் நால்கோ (NALCO). மத்திய அரசின் நவரத்னா நிறுவனமாக பார்க்கப்படும் நால்கோ, அலுமினிய உற்பத்தி சேவையை செய்து வருகிறது. பாக்சைட் சுரங்கம், அலுமினிய சுத்திகரிப்பு, அலுமினியத்தை உருக்குதல் மற்றும் வார்ப்பு, மின் உற்பத்தி, ரயில் மற்றும் துறைமுக வேலைகளை தொழிலாக கொண்டுள்ளது.

அலுமினிய துறையில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகவும், துறை சார்ந்த பொருட்களை மிக குறைந்த விலையில் வழங்கும் உலகின் முக்கிய நிறுவனமாகவும் நால்கோ சொல்லப்படுகிறது. நிறுவனத்தின் வருவாயில் பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்து உள்ளது  கவனிக்கத்தக்கது.

தேசிய அலுமினிய நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ. 5,960 கோடி. அதன் புத்தக மதிப்பு 55 ரூபாயாகவும், தற்போதைய பங்கு விலை 32 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது. டிவிடெண்ட் தொகைக்கு(Dividend yield) பெயர் போன இந்நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கடனில்லா நிறுவனமாக வலம் வரும் நால்கோவின் கடன்-பங்கு விகிதம் 0.01 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம்(ICR) 100 மடங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

NALCO DCF

நிறுவனர்களின் பங்களிப்பு 52 சதவீதமாக உள்ளது. நிறுவனர்களாக சொல்லப்படும் மத்திய அரசு பங்குகளை அடமானம் எதுவும் வைக்கவில்லை. இந்த துறையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு விலை புத்தக மதிப்பு அடிப்படையின் படி மலிவான விலையில் வர்த்தகமாகி வருகிறது. எனினும், இந்த துறை உலக பொருளாதார காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படுவதாக உள்ளன.

தேசிய அலுமினிய நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த ஐந்து வருடங்களில் 11 சதவீதமாகவும், பத்து வருட காலத்தில் 8.50 சதவீதமாகவும் உள்ளது. லாப வளர்ச்சி விகிதம் ஐந்து வருடங்களில் 24 சதவீதமாகவும், பத்து வருட கால அளவில் 3 சதவீதமாகவும் உள்ளது. 2019-20ம் நிதியாண்டின் இரு காலாண்டுகளில் இந்த நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளன. நான்காம் காலாண்டு முடிவுகள்(Q4FY20) இன்னும் வெளிவரவில்லை. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 42 சதவீதம் இறக்கம் கண்டுள்ளது. அதே வேளையில் பங்கு மீதான வருவாய் கடந்த 12 மாதங்களில் 16.50 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

2018-19ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 11,499 கோடியாகவும், நிகர லாபம் ரூ. 1,734 கோடியாகவும் இருந்துள்ளது. நிறுவனத்தின் கையிருப்பு மற்றும் பணவரத்து நன்றாக உள்ளது. அதிக ரிஸ்க் கொண்ட இந்த துறை அவ்வப்போது உலகளவில் ஏற்படும் பொருளாதார காரணிகளால் பெரிதும் பாதிக்கப்படும். அதே நேரத்தில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறந்து விளங்கும் நிறுவனமாகவும் நால்கோ உள்ளது. பங்கு விலை பெரிய அளவில் ஏற்றம் பெறாவிட்டாலும், அடிப்படை பகுப்பாய்வை பூர்த்தி செய்யும் நிறுவனமாக உள்ளது. பங்கு ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகும் போது, இந்த பங்கினை சிறிய அளவில் வாங்கி கொள்ளலாம். நீண்ட கால முதலீட்டில் டிவிடெண்ட் தொகையை ஈர்க்க உதவும் இது போன்ற பங்குகளை சேர்த்து கொள்ளலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com