Tag Archives: annual general meeting

பங்குதாரர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறுவன நிர்வாகத் தன்மை

பங்குதாரர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிறுவன நிர்வாகத் தன்மை 

Why is Corporate Governance so important for the Shareholders – Equity Investments ?

பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் ஒரு பங்கின் விலை ஏறுவதற்கும், இறங்குவதற்கும் பொதுவான காரணியாக தேவைக்கும், இருப்புக்குமான இடைவெளி(Demand-Supply) தான் எனினும், அவற்றை தூண்டக்கூடிய விஷயங்களாக பல்வேறு நிலைகள் உள்ளன. உதாரணமாக பொதுவெளியில் ஒரு நிறுவனப்பங்கை பற்றிய செய்திகள், பங்குகளில் ஈடுபடும் முதலீட்டாளர்கள் மற்றும் வணிகர்களின் மனநிலை, அரசியல் தாக்கங்கள், நாட்டின் பொருளாதார நிலை, துறை சார்ந்த மாற்றங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். 

இருப்பினும், நீண்டகால பங்கு முதலீட்டாளர்களுக்கு மிகவும் அடிப்படை காரணிகளாக மூன்று விஷயங்களை சொல்லலாம். அவை ஒரு பங்கின் நிறுவனர்கள்(Founders & Promoters), நிறுவனத்தின் நிதி அறிக்கைகள்(Financial Statements) மற்றும் நிர்வாகத் திறமை அல்லது தன்மை(Corporate Governance) ஆகியவை. குறுகிய காலத்தில் ஒரு பங்கின் விலை அதிக ஏற்ற-இறக்கத்திற்கு உட்படுவது இயல்பு தான். அது ஒரு வகையில், நீண்டகால முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வாய்ப்பையும் வழங்கும். அதே சமயத்தில், மேலே சொன்ன மூன்று காரணிகள் தான் பெரும்பாலும் பங்குதாரர்கள் தங்களது பங்குகளை நீண்டகாலத்திற்கு வைத்திருக்க உதவும். 

“ சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் “ – இது தான் ஒரு பங்கு நீண்டகாலத்தில் விலையேற்றம் பெறுவதற்கும்.

நிறுவனர்கள் மற்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் எப்படி ?

இன்று சந்தையில் உள்ள பங்கு நிறுவனங்களில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்யும் பழமையான நிறுவனங்கள் பல உள்ளன. உதாரணமாக பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் வாடியா நிறுவனக் குழுமம்(தோற்றம்: 1736ம் ஆண்டு) துவக்கப்பட்டு 289 வருடங்கள் ஆகி விட்டது. ஆதித்யா பிர்லா குழுமம் துவங்கப்பட்டது 1857ம் வருடம், ரேமண்ட்ஸ் நிறுவனம் நூறு வருடங்களை கடந்து விட்டது. நம்ம ஊரு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 1921ம் ஆண்டு, கரூர் வைசியா வங்கி 1916, டாட்டா குழுமம் 1868, முருகப்பா குழுமம் 1900ம் ஆண்டு, டி.வி.எஸ். குழுமம்(1911), அசோக் லேலண்ட் நிறுவனத்தின் இந்துஜா குழுமம்(1914), லட்சுமி மில்ஸ்(1910), முத்தூட்(1887), பேரிஸ்(Parrys’ – EID Parry – 1788), ஸ்டேட் பேங்க்(SBI – 1806), கனரா வங்கி(1906), அட நம்ம மும்பை பங்குச்சந்தை(BSE) துவங்கப்பட்டது 1875ம் ஆண்டு என சொல்லிக் கொண்டே போகலாம். நூறு ஆண்டுகளை கடந்து தொழில் செய்யும் இந்திய நிறுவனங்கள் மட்டுமே 150க்கும் அதிகமாக உள்ளன.

பொதுவாக ஒரு நிறுவனம் துவங்கப்படும் போது, அந்நிறுவனத்தின் நிறுவனருக்கு(Founder) தொழில் அல்லது சமூகம் சார்ந்த ஒரு நோக்கம் இருந்திருக்கும். வெறுமென பணமீட்டுவது மட்டுமே அவரது நீண்டகால நோக்கமாக இருந்திருக்காது. அவ்வாறு நீண்டகாலத்தில் ஈட்ட வேண்டுமென்றால், அவரது இலக்கும் தொடர்ச்சியாக அடுத்த தலைமுறை தொழில்முனைவோர்களால் பராமரிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும். இல்லையெனில், வரலாற்றில் நாம் எத்தனையோ பாரம்பரியமான பிராண்டு நிறுவனங்களை தொலைத்திருப்போம். நிறுவனத்தை துவக்கியவரின் ஆசை அல்லது நோக்கம் என்னவோ இருந்திருக்கலாம். ஆனால் அதனை பல வருடங்கள் சிறப்பாக வழிநடத்த அடுத்த தலைமுறை ஆட்கள் ஒத்துழைத்திருக்க வேண்டும். 

நிறுவனத்தை ஆரம்பநிலையில் துவக்கியவர் பொதுவாக Founder என அழைக்கப்படுவதுண்டு. அதற்கடுத்தாற் போல, அத்தொழிலை வழி நடத்தும் தலைமுறைகள் பெரும்பாலும் Promoters ஆக இருப்பர். சில சமயங்களில் ஒரு நிறுவனத்தின் Founder மற்றும் Promoter ஒரு நபரோ அல்லது குடும்ப நபர்களோ அமைவதுண்டு. நிறுவனத்தை துவக்கியவரின் நோக்கம் ஒரு புறம் இருக்க, இன்றைய அளவில் அந்நிறுவனத்தை வழிநடத்தும்(Promoters) இவர்களின் தொலைநோக்கு பார்வை எப்படியிருக்கும் ? இது தான் ஒரு பங்கு முதலீட்டாளருக்கு அவசியமானது.

“ தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி தூரம் பாயும் “ – நமக்கு பதினாறு அடியெல்லாம் பாய வேண்டாம். நிறுவனம் திவாலாகாமல் பங்குதாரர்களுக்கு நாணயமாக இருக்கிறதா என்பது தான் அவசியம். குறிப்பாக எந்த தொழிலையுமே செய்யாமல், வெறும் நிறுவனப் பங்கின் விலையை மட்டும் குறுகிய காலத்தில் ஏற்றி, லாபம் பார்த்து விட்டு பங்கு முதலீட்டாளர்களை பாதாளத்தில் தள்ளும் ‘ஷெல் நிறுவனங்கள்(Shell Companies)’ சந்தையில் பல உள்ளன. அப்படியிருக்க தொழிலை நாணயமாக செய்து கொண்டு, மாற்றத்திற்கும் உட்படும் நிறுவனங்கள் தான் ஒரு பங்கு முதலீட்டாளர்களுக்கு அவசியம். இதன் மூலம் மட்டுமே ஒருவர் நீண்டகாலத்தில் பங்கு முதலீட்டில் செல்வ வளத்தை ஏற்படுத்த முடியும்.

அதென்ன தொழில் நாணயம் ? (Corporate Governance):

“ ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் “ – இது ஒரு குடும்பத்திற்கும், நிறுவனத்திற்கும் பொருந்தும்.  

குடும்ப உறவுகளிடம் ஏற்படும் பிரச்சனைகள் பொதுவெளியில் தெரிய வந்தாலும், அதனை குடும்ப உறுப்பினர்களே முடிந்தவரை பேசி தீர்த்துக் கொள்வது, நீண்டகாலத்தில் நன்மை பயக்கும். இதனை போன்று தான், ஒரு நிறுவனத்தின் நிர்வாகம், தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நிதி அறிக்கைகளில் ஏற்படும் பொதுவெளியிலான சிக்கல்களை அந்த நிறுவனம் சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில், முதலீட்டாளர்களிடம்(பங்கு விலை மற்றும் வாக்களிப்பு) அதன் தாக்கம் தெரிய வரும். இது நீண்டகாலத்தில் அந்நிறுவனத்திற்கும் பாதகத்தை ஏற்படுத்தலாம்.

உதாரணமாக தொழிலாளர்களிடையே வேலைநிறுத்த போராட்டம் ஏற்பட்டால், அது அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிலைத்தன்மையை பாதிக்க காரணமாக அமைந்து விடும். இதனை நிறுவனத்தின் நிர்வாகம், பொதுவெளியில் சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். நிர்வாகத்துக்குள் ஏற்படும் மேலாண்மை சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள், வாடிக்கையாளர்களின் நலனை பராமரித்தல், நிதி சார்ந்த கடன்கள் மற்றும் அறிக்கைகள், பொருளாதாரம் மற்றும் துறை சார்ந்த மந்தநிலை ஆகியவற்றில் நிறுவனத்தலைவர்கள் மற்றும் மேலிட நிர்வாகம் அதனை எவ்வாறு கையாளுகிறது என்பது ஒரு நிறுவனத்தின் நலனுக்கு மட்டுமிலலாமல், நீண்டகாலத்தில் முதலீட்டாளருக்கும் நலன் அளிக்கும்.

ஒரு நல்ல அல்லது நாணயமான நிறுவனம் என்பது அதன் நிர்வாகம் – பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் நல்ல நம்பிக்கையையும், உறவையும் பேண வேண்டும். இது பொதுவெளியில் அந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

ஏன் நிறுவனத்தின் நிர்வாகத்தன்மை(Corporate Governance) ஒரு முதலீட்டாளருக்கு அவசியம் ?

ஒரு நிறுவனம் தனது தொழிலில், ‘ரிஸ்க்’ எடுத்து ஏதேனும் புதிய முயற்சியை அல்லது அதிகக் கடன் வாங்கி விரிவாக்கம் செய்யும் நிலையில் அதன் வெளிப்படைத்தன்மையை பங்குதாரர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களுடன் அறிக்கைகளாக(Statements) தெரிவிப்பது அவசியமாகும். இது அந்நிறுவனத்தின் செயல்திறனையும் மேம்படுத்த உதவும். காலாண்டுக்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் நிதி அறிக்கைகளில் சொல்லப்படும் விஷயங்கள், நோக்கங்கள் மற்றும் இலக்குகள் தவறும் பட்சத்தில் அதனை முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவை ஏற்படுத்த வேண்டும்.

உதாரணமாக, “ பொருளாதார மந்த நிலைக் காரணமாக எங்கள் நிறுவனம் இன்னென்ன சிக்கல்களை சந்திக்கும். அதனை களைய எங்கள் முன் உள்ள சில தீர்வுகள்”; “கடந்த சில காலாண்டுகளாக நிறுவனம் லாப வளர்ச்சியை நோக்கி செல்ல முடியாததற்கான காரணங்கள் மற்றும் துறை சார்ந்த நிலைகள்”; “ புதிய நிர்வாகம் அமைந்த பின் எங்களது தொழில் சார்ந்த மாற்றங்கள்”; “வேலை நிறுத்த போராட்டத்தால் எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அதனை களைய நாங்கள் கொண்டுவரும் தீர்வுகள்”; “இது போன்ற மோசடிகள்(Whistleblower, Scam, Fraud) இனி மேல் எங்கள் நிறுவனத்தில் நடைபெறா வண்ணம் நாங்கள் செய்த விஷயங்கள் ” – இவ்வாறு நிர்வாகத்தின் அறிக்கைகள் மூலம் ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் சரியான நேரத்தில் தகவல்களை பகிர வேண்டும். அது வெறுமென பங்கு விலைகளை கட்டுப்படுத்தும் மற்றும் ஏற்றும் போலிச் செய்தியாக இருந்து விடக் கூடாது.

      

பொதுவாக பங்குதாரர்கள் ஒரு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரத்தில் தலையிடுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்களுக்கும் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கு உள்ளது. அதன் காரணமாக தான் பங்குதாரர்கள் மூலம் ஒரு இயக்குனர் குழுவை தேர்ந்தெடுப்பது, நிறுவனத்தின் பிற கடமைகளை வாக்களிப்பு மூலம் ஏற்படுத்துவது என முடிவெடுக்கும் காரணிகளாக உள்ளன. இதனை நம்பிக்கைக்குரிய வகையில் அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவும், நிர்வாகமும் கடைபிடிப்பது அவசியமாகும். ஒரு சாமானிய பொது பங்குதாரரும்(Retail / Public Shareholders) ஒரு நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அங்கம் வகிப்பதற்கான சட்டம் உள்ளது.

பங்கு முதலீட்டாளர்கள், நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை(Annual Reports and Other Financial Statements) தங்களது முகவரிக்கு அனுப்பி வைக்க சொன்னால், அதனை அனுப்பி வைப்பது ஒரு நிர்வாகத்தின் கடமையாகும். இது போன்று தான் வாக்களிப்பது, ஈவுத்தொகை(Dividend), போனஸ் பங்குகள், ரைட்ஸ் பங்குகள் மற்றும் பிற பங்குதாரர் சார்ந்த நிலைகள். இதற்காக தான் ஒரு நிறுவனத்தில் பங்குதாரர் நலனைப் பாதுகாக்க செயலாளரும்(Company Secretary) நியமிக்கப்பட்டுள்ளார். 

நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு(Annual General Meeting – AGM) பங்குதாரர்களை அழைப்பது நிர்வாகத்தின் கடமை. அது இணைய வழியிலோ அல்லது நேரடியான உரையாடலாக இருக்கலாம். ஆனால் பங்குதார்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவும் மற்றும் இன்னபிற அதிகாரிகளும் பதிலளிக்க வேண்டியது அவசியமாகும். இது போன்ற கூட்டங்களில் நிறுவனத்தின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதனை பங்குதாரர்கள் அறியலாம். 

நீங்கள் ஒரு நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கு(Factory Visit) சென்று, அதன் தொழிலை பற்றி புரிந்து கொள்ள, அவர்களின் பொருட்கள் அல்லது சேவை எவ்வாறு கையாளப்படுகிறது என்பதனை அறிய, அந்நிறுவனத்தின் நிர்வாகத்திடம் ஒரு பங்குதாரராக அனுமதி கேட்கலாம். சில நிறுவனங்கள் இதற்கான அனுமதியையும் அளித்து வருகிறது. இன்னும் சில நிறுவனங்களோ அதன் உற்பத்தி ஆலையில் தான் ஆண்டு பொதுக்கூட்டத்தை நடத்துவதுடன், பங்குதாரர்களுக்கு ஆலையையும் சுற்றி காண்பிக்க உதவுகிறது. இதன் மூலம் பங்குதாரர்கள்-நிர்வாக உறவு மேம்படும்.  

பொதுவெளியில் மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை சிக்கல்களை ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் செவிக்கொடுத்து கேட்கிறதா என்பதனை பங்குதாரர்களுக்கு நிறுவனம் தெரியப்படுத்த வேண்டும். நிறுவனத்தின் நிதி அறிக்கைகள் மற்றும் இன்னபிற ஆவணங்கள் ஆகியவற்றை ஒரு நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு சரியான நேரத்தில் பகிர்தலையும் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆக சுருக்கமாக சொன்னால், பொறுப்புடைமை(Accountability), வெளிப்படைத்தன்மை(Transparency), இடர் மேலாண்மை(Risk Management), நாணயம்(Fairness) மற்றும் பங்குதாரர்களிடம் இணக்கத்தை(Shareholders Relationship) ஒரு நிறுவனம் கொண்டிருக்க வேண்டும். இதுவே ஒரு முதலீட்டாளருக்கும் அதன் பங்கு விலையில் நீண்டகாலத்தில் வெளிப்படும்.

இன்றும் நூறு வருட பாரம்பரிய நிறுவனங்கள் நிலைத்து நின்று தொழில் புரிவதற்கு அதன் வாடிக்கையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் தான் காரணம் – அவர்கள் நிறுவனத்தின் நிர்வாகத்தன்மையில் நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தால் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

நீங்கள் வாங்கிய நிறுவன பங்குகளை இப்படி கண்காணித்தது(Fundamentally Tracking) உண்டா ?

How to track the Stocks(Shares) fundamentally ?

பங்குச்சந்தையில் நாம் காணும் அனைத்து பங்குகளும் வருடத்தின் எல்லா நாட்களிலும் வர்த்தகமாகும் என சொல்லிவிட முடியாது. பொதுவாக லார்ஜ் கேப் மற்றும் மிட் கேப் நிறுவன பங்குகள் பெரும்பாலும் அனைத்து நாட்களிலும் வர்த்தகமாகி கொண்டிருக்கும். அதே வேளையில் ஸ்மால் கேப் பங்குகள் அப்படியல்ல. அவற்றில் வர்த்தக புழக்கம்(Liquidity) பெரும்பாலும் குறைவாகவே இருக்கும்.

நிறுவனர்களின் பங்களிப்பு(Promoter Holding) அதிகமாக இருத்தல், பெரு நிறுவன முதலீட்டாளர்களிடம்(Institutional Investors) கைவசம் இல்லாதது மற்றும் பொதுவெளியில் மிகவும் குறைவான பங்குகளே அமைந்திருப்பது அதன் வர்த்தக புழக்கத்திற்கு காரணமாக அமையும். இருப்பினும் ‘மல்டி பேக்கர்(Multibagger)’ என சொல்லக்கூடிய பல மடங்கு லாபத்தை அளிக்கவல்லது இந்த ஸ்மால் கேப் நிறுவன பங்குகள்.

அதிக பங்குகளை கொண்டு வர்த்தகமாகும் அல்லது ஒரே நாளில் வர்த்தக அளவை அதிகமாக கொண்டிருக்கும் பங்குகள், முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலத்தில் வருவாயை அளிக்கும் என நாம் சொல்ல இயலாது. இதற்கு உதாரணமாக யூனிடெக், ஜே.பி.அசோசியேட்ஸ், யெஸ் பேங்க்,  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், வோடபோன், ஜெட் ஏர்வேஸ் போன்ற பங்குகளை சொல்லலாம். நாள் வணிகத்துக்கு(Day Trading) இவை ஏற்றவையாக தெரிந்தாலும், உண்மையில் முதலீடு செய்பவர்களுக்கு நட்டத்தை மட்டும் தான் கொடுத்துள்ளன.

“A stock is not just a ticker symbol or an electronic blip; it is an ownership interest in an actual business, with an underlying value that does not depend on its share price.” – Benjamin Graham(Father of Value Investing), The Intelligent Investor

“ பங்குச்சந்தையில் வர்த்தகமாகும் பங்குகள் என்பது வெறும் எண்கள் அல்ல. அவை ஒரு நிறுவனத்தின் தொழிலில் உங்களுக்கான உரிமையாகும். உண்மையான தொழிலின் மதிப்பு என்பது அதன் பங்கு விலையை சார்ந்திருக்க  வேண்டும் என்று அவசியமில்லை “ என முதலீட்டின் தந்தை என அழைக்கப்படும் திரு. பெஞ்சமின் கிரகாம் கூறுகிறார்.

நீண்டகாலத்தில் பங்குச்சந்தை முதலீட்டின் மூலம் செல்வத்தை ஏற்படுத்த வெறுமனே பங்குகளை வாங்கி விட்டால் மட்டும் போதாது. அதனை நமது சொந்த தொழிலை போல கண்காணிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

  • காலாண்டு முடிவுகளும், ஆண்டு பொதுக்கூட்டமும்:

சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு நிறுவனமும் தனது தொழிலுக்கான காலாண்டு மற்றும் நிதியாண்டு முடிவுகளை வெளியிட வேண்டியது அவசியம். இது அவர்களுக்கானதல்ல, நம்மை போன்ற முதலீட்டாளர்கள், நாம் வாங்கிய பங்கு நிறுவனத்தின் நிதிநிலை  அறிக்கைகளை(Financial Statements) அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. நிறுவனம் பின்னொரு காலத்தில் சந்திக்கவிருக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை நாம் இது போன்ற முடிவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நிறுவனத்தின் விற்பனையும், லாபமும் ஒவ்வொரு காலாண்டிலும் எப்படி உள்ளது, இதர வருமானம்(Other income) மட்டுமே அதிகரித்து வருகிறதா, நிறுவனத்தின் கடன் தன்மை எவ்வாறு, நிறுவனர்களின் பங்கு அடமானம், பங்குதாரர்களின் பங்களிப்பு(Shareholding Pattern), டிவிடெண்ட் அறிவிக்கப்படும் தேதி என அனைத்து தகவல்களையும் ஒருசேர காலாண்டு முடிவுகளில் பெற்று விடலாம். இதன் வாயிலாக பிற்காலத்தில் நமது முதலீட்டு முடிவை பரிசீலிக்க இவை உதவும்.

காலாண்டு முடிவுகளும், நிதியாண்டுக்கான நிதி அறிக்கைகளும் இணையத்தில்(BSE, NSE, Company website) எப்போதும் கிடைக்கப்பெறுகிறது. அதனை சரியான காலத்தில் வாசிப்பது முதலீட்டாளரான நமது கடமை. நிறுவனம் சார்பாக ஆண்டுக்கொரு முறை பங்குதாரர்கள் கூட்டமும்(Annual General Meeting – AGM) நடைபெறுகிறது. இணையவழி மற்றும் நேரடியாக சென்றும் இது போன்ற நிகழ்வுகளில் நாம் கலந்து கொண்டு, நிறுவனத்தின் மீது நமக்கு ஏற்படும் சந்தேகங்களையும், தொழில் சார்ந்த பொதுவான கேள்விகளையும் நாம் அங்கே கேட்கலாம்.

  • வாக்களிப்பதுஉங்கள் கடமை, பங்குச்சந்தையிலும்: 

ஒரு பங்குதாரராக நிறுவனத்தில் ஏற்படப்போகும் மாற்றத்திற்கும், தொழில் கொள்கைகளை தீர்மானிக்கவும் நமக்கான வாக்களிக்கும் உரிமை பங்குச்சந்தையில் உண்டு. “ என்னிடம் அந்த நிறுவனத்தில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது, நான் அப்படி என்ன செய்து விட போகிறேன் “ என நீங்கள் கேட்கலாம். முன்னொரு காலத்தில் இருந்தது போல, இன்று நிறுவனர்களின் பங்களிப்பு(Promoters Holding) மற்றும் தொழில் ஆதிக்கம் பெரும்பான்மையாக இல்லை. இன்றையளவில் வங்கிகளும், பரஸ்பர நிதிகளும் தான் குறிப்பிடத்தக்க பங்குகளை ஒரு நிறுவன பங்குகளில் வைத்துள்ளது. இதற்கு அடுத்தாற் போல், சிறு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை தான்.

இயக்குனர் குழு மற்றும் நிறுவன பொறுப்புகளில் ஒருவரை நியமனம் செய்தல், நீக்குதல், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுதல் போன்றவற்றிற்கு உங்களது வாக்கு ஒரு நிறுவனத்திற்கு அவசியமானது. நீங்கள் வாக்களிக்க தவறும் நிலையில், முடிவுகளும் மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் டாட்டா குழுமத்தில் மிஸ்திரி குடும்ப பங்குகளின் தாக்கம், வேதாந்தா நிறுவனம் பங்குச்சந்தையை விட்டு வெளியேற முடியாமல் சென்ற தருணம், யெஸ் வங்கி பங்குகளின் முடக்கம், நிறுவனங்களின் பங்குகளை திரும்ப பெறும்(Buyback of Shares) முறை, போனஸ் பங்குகள், புதிய பங்கு வெளியீடு என பல்வேறு செயல்பாடுகளுக்கு வாக்களிப்பதன் மூலமே நிறைவேற்ற முடியும்.

வாக்குகளை நேரடியாக அளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இணைய வழியிலான(E-Voting) வாக்களிக்கும் வசதியும் இன்று நடைமுறையில் உண்டு. இது போன்ற சேவையை NSDL மற்றும் CDSL தளங்கள் நமக்காக செய்து கொடுக்கிறது. இதற்கான சேவை கட்டணத்தை(Brokerage & DP Charges) நாம் ஏற்கனவே பங்குகளை வாங்கும் போதே அந்த நிறுவனத்திற்கு செலுத்தி விட்டோம் என்பதனை நினைவில் கொள்ளவும்.

  • நிறுவனங்களை நேரடியாக காணுங்கள், தொழிற்சாலைக்கு செல்லுங்கள்:

ஒரு நிறுவன பங்கை நாம் இணையம் வழியாக வாங்கி விட்டால், அதனோடு பங்கு முதலீடு முடிந்து விடப்போவதில்லை. இணையம் மட்டும் பங்கு முதலீட்டுக்கான வாழ்க்கையல்ல. அவை நமக்கான எளிய கட்டமைப்பு. நீங்கள் குடியிருக்கும் அல்லது வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில், நீங்கள் வாங்கிய பங்கு நிறுவன அலுவலகம் அல்லது தொழிற்சாலை அமைந்திருந்தால் அங்கே சென்று பாருங்கள்.

நிறுவனத்தின் பொருட்கள் மற்றும் சேவை எப்படி என நேரடியாக கண்காணியுங்கள். முடிந்தால், நிறுவனத்தின் உயர்மட்டக்குழுவிடம் அனுமதி பெற்று அவர்களது தொழிற்சாலையை சுற்றி பாருங்கள். இதற்கான வசதியை ஒரு நிறுவனத்தின் கம்பெனி செயலாளர்(Company Secretary) பொதுவாக செய்து கொடுப்பார். நிறுவனம் சார்ந்த ஏதேனும் கேள்விகள் இருந்தால், நீங்கள் அவருக்கு மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

உண்மையில் எந்த தொழிலையும், அலுவலகத்தையும் கொண்டிருக்காமல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் ஷெல் நிறுவனங்களும்(Shell companies) உண்டு என்பது சந்தை வரலாறு. சந்தையில் அவற்றின் பங்கு விலை நாள்தோறும் ஏற்றமடைகிறது என்ற ஒற்றை காரணத்திற்காக பங்குகளை வாங்காமல், நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளை கண்காணிப்பதும் அவசியம்.

நண்பர்களோடு சுற்றுலா செல்வது போல, ஆண்டுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு நிறுவனத்தை நேரடியாக சுற்றி பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

  • உங்களுக்கு அருகில் இருக்கும் கடைகளில் விற்பனையாகும் பொருட்கள் மற்றும் சேவைகள்:

நமது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைகள் எப்.எம்.சி.ஜி.(FMCG) பொருட்களை விற்கும்(Retail & Super Market) கடைகளாக தான் இருக்கும். நம் நாட்டை பொறுத்தவரை எப்.எம்.சி.ஜி. துறையில் காணப்படும் பிரபலமான பொருட்கள் பெரும்பாலும் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் பொருட்களாக தான் இருக்கும். உதாரணமாக இந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி., டாபர், கோத்ரேஜ், மாரிகோ, கோல்கேட், பஜாஜ், டி-மார்ட் போன்ற நிறுவனங்கள் தான். நமது நகரில் அல்லது குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளில் பெரும்பாலும் தென்படும் பிராண்டுகளின் பெயர்களை தெரிந்து கொள்ளலாம். பேச்சுவாக்கில் கடை உரிமையாளர் அல்லது விற்பனை மேலாளரிடம் பொருட்களின் கொள்முதல் மற்றும் விற்பனை எப்படி உள்ளதென அறிய முற்படலாம். இதற்கெல்லாம் நாம் நிதி மேலாண்மையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை (ரியல் எஸ்டேட் முதலீட்டில் விசாரிக்கிறோமே !).

  • துறை சார்ந்த நண்பர்களிடம் கலந்துரையாடுங்கள்:

பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் பல துறைகளை சார்ந்தவை. வங்கிகள், நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், வாகனம், நுகர்வோர் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள்(Consumer Durables), எண்ணெய் சுத்திகரிப்பு, எரிசக்தி, விவசாயம், கல்வி, மின்னணு பொருட்கள், பொழுதுபோக்கு, மருத்துவம், கட்டுமானம்,காப்பீடு, காலணிகள், ஏற்றுமதி, ஜவுளி, தொலைத்தொடர்பு என பல துறைகளை உள்ளடக்கியவை.

நீங்கள் தொழில் செய்யும் நபராக இருந்தால், உங்களது துறையில் உள்ள சாதக-பாதகங்கள் உங்களுக்கு பொதுவாக தெரிந்திருக்கும். பொருளாதார மந்தநிலை காலங்களில் உங்களது தொழில் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும், அரசு கொள்கைகள் உங்கள் தொழிலுக்கு சாதகமாக உள்ளதா எனும் விஷயங்கள் உங்களது முதலீட்டுக்கான அடிப்படை காரணிகள். இதனை நீங்கள் பங்குச்சந்தையிலும் பயன்படுத்தலாம்.

ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்யும் நபராக இருந்தால், உங்கள் துறையில் உள்ள சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் துறை சார்ந்த ஆலோசனைகள், விவாதங்களை முன் வைக்கலாம். இதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள் உங்களது பங்கு முதலீட்டுக்கு உதவும்.

நண்பர் ஒருவர் அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) துறையின் முக்கிய பதவியில் வேலை பார்த்து வந்தால் அவரிடம் துறை சார்ந்த வளர்ச்சியையும், எதிர்காலத்தில் இவற்றின் தாக்கம் எப்படி உள்ளதென கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இன்று பங்கு முதலீடு சார்ந்த கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இணையம் வாயிலாக கிளப் ஹவுஸ், முகநூல்(Facebook Events), வலைப்பக்க நிரல்கள்(Webinars) நாள்தோறும் நடைபெறுகின்றன. இவற்றில் கலந்து கொண்டு பங்கு சார்ந்த தொழில் புரிதலை ஏற்படுத்தி கொள்ளலாம். அதே வேளையில் நாம் அதிகாரபூர்வ மற்றும் அரசு அங்கீகரிக்கும் நிறுவன தளம் மற்றும் ஆலோசகர்களிடம் தகவல்களை பெறுகிறோமா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

வாட்சப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் யாரோ ஒருவர் பரிந்துரைத்தார் என பங்குகளை வாங்கி பின்னர் நட்டமடைவதை தவிர்க்க மேலே சொன்ன விஷயங்கள் நமக்கு நீண்டகாலத்தில் பயனளிக்கும். வெறுமென ஊக விஷயங்களுக்கு பின்னால் நகர்வதை விட, நாமே நமது தொழிலுக்கான(பங்கு முதலீடு) அக்கறையை கொண்டிருப்பது நலம்.

பங்குகளை கண்காணிக்க நேரமில்லை என சொல்பவர்களுக்கு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகள்(Equity Mutual Funds) உள்ளது. உங்களுக்காக ஒரு பண்ட் மேனேஜர் அங்கே நிர்வகிக்க தயாராக உள்ளார். நீண்டகாலத்தில் முதலீடு செய்து விட்டு செல்வமீட்டலாம்.

பங்குகள் உங்களின் செல்ல(செல்வ) குழந்தைகள், அவற்றை வளரும் போது நீங்கள் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வந்தால், பின்னொரு காலத்தில் அவை உங்களை கவனித்து கொள்ளும் !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பங்குதாரர் – ஆண்டு பொதுக்கூட்டம்

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பங்குதாரர் – ஆண்டு பொதுக்கூட்டம்

Shareholder of Reliance Group Companies warned the Promoter – Annual General Meeting

ரிலையன்ஸ் குழும நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று (30-09-2019) மும்பையில் நடைபெற்றது. திரு. அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தில் ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் நிப்பான் லைப், ரிலையன்ஸ் பவர், இன்ப்ரா(Reliance Infra) மற்றும் ரிலையன்ஸ் நேவல்(Reliance Naval & Engg) ஆகிய நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன.

அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் அனைத்தும் கடன் சிக்கலில் உள்ளன. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அதன் சந்தை மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் பெருவாரியான பணத்தை இழந்துள்ளனர்.

ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்திற்கு கடனாக ரூ. 46,160 கோடியும், ரிலையன்ஸ் பவர்(Reliance Power) ரூ. 30,450 கோடி, ரிலையன்ஸ் இன்ப்ரா ரூ. 17,770 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ரூ. 47,600 கோடி கடனாகவும் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் நேவல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கும் ரூ. 10,905 கோடி கடனாக உள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் நிறுவனர்களின் பங்கு அடமானத்தில்(Pledging) உள்ளது கவனிக்கத்தக்கது.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அனில் அம்பானி பேசுகையில், நிறுவனத்தின் கடன்களை குறைத்து வருவதாகவும், அடுத்த 18 மாதங்களில் மேலும் சில கடன்களை அடைப்பதற்கான தீர்வுகளை கண்டுள்ளதாகவும் கூறினார். ஏற்கனவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் நிலைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது ரிலையன்ஸ் நேவல் நிறுவனமும் பெரும் நிதிச்சிக்கலில் உள்ளது.

ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வரும் கடன் சேவை, வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த சேவையை நிறுத்த உள்ளதாகவும் அனில் அம்பானி கூறியுள்ளார். ஆண்டு பொதுக்கூட்டத்தில் நிறுவனத்தின்(Reliance ADAG) மீது பல குறைகள் எழுப்பப்பட்டன. பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும் பரிசீலிக்கப்படுவதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சமயத்தில், கூட்டத்தில் இருந்த பங்குதாரர் ஒருவர், சொல்லப்பட்ட பிரச்சனைகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்படவில்லை எனில், நிறுவனத்தின் மீது வழக்கு தொடர போவதாக எச்சரித்தார். அந்த பங்குதாரர் ரிலையன்ஸ் குழும நிறுவனத்தில் இதுவரை 3 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும், தற்போதைய நிலையில் தான் 90 சதவீத முதலீட்டை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சொல்லப்பட்ட இழப்பிற்கு நிறுவனமே பொறுப்பாகும் எனவும், நிறுவனத்தில் முதலீடு செய்த பல முதலீட்டாளர்களுக்கு பண இழப்பு ஏற்பட்டதற்கு நிறுவனத்தின் நிர்வாக திறமையின்மை தான் காரணம் எனவும் கூறினார். இதுவரை கம்பெனி சட்டம் 2013ன் கீழ் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மீது பங்குதாரர்கள் சார்பில் முதல் வகுப்பு வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவ்வாறு சொல்லப்பட்ட பங்குதாரர் வழக்கை பதிவு செய்யும்பட்சத்தில், நம் நாட்டில் இதுவே முதன்முறையாக இருக்கும்.

ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 380 ரூபாய் என்ற விலையிலிருந்து 28 ரூபாய்க்கு சரிந்துள்ளது. இதே போல ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு விலை 32 ரூபாயிலிருந்து 2 ரூபாய்க்கும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்கு விலை 18 ரூபாயிலிருந்து 65 பைசாவிற்கும் வந்துள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் பங்கு ஒரு வருடத்திற்கு முன்பு 300 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த பங்கின் விலை 24 ரூபாயாக உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com