டி.டி.எச். சேவையில் நூறு சதவீத அன்னிய முதலீடு – அமைச்சகம் ஒப்புதல்
100 Percent Foreign Direct Investment in DTH Service – Union Cabinet
டி.டி.எச்.(Direct to Home) என்பது செயற்கைக்கோள்களிலிருந்து பெறப்படும் சிக்னல்கள் மூலம் செயற்கைக்கோள் தொலைக்காட்சியைப் பெறும் ஒரு முறையாகும். இந்த நேரடி ஒளிபரப்பு முறை கடந்த 2000ம் ஆண்டு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டது. நாட்டின் முதல் டி.டி.எச். தொலைக்காட்சி சேவை, ஜீ குழுமத்தை(Zee Group) சேர்ந்த டிஷ் டி.வி. நிறுவனத்தால் 2003ம் வருடம் அக்டோபர் மாதத்தில் கொண்டு வரப்பட்டது.
டி.டி.எச். சேவையில் உலகின் மிகப்பெரிய சந்தையாகவும் நம் நாடு விளங்குகிறது. கடந்த 2019ம் ஆண்டு முடிவின் படி, நாட்டில் 7 கோடி டி.டி.எச்.(DTH) சந்தாதாரர்கள் உள்ளனர். மார்ச் 2020 காலத்தின் அடிப்படையில் நான்கு கட்டண சேவையை அளிக்கும் நிறுவனங்களும், ஒரு இலவச சேவை வழங்குநரும் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
7 கோடி சந்தாதாரர்களில், இலவச சந்தாதாரர்கள் சம்மந்தமாக குறிப்பிடப்படவில்லை. இலவச சேவையை மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனமும், கட்டண சேவையில் டாட்டா(Tata Sky), டிஷ் டி.வி., ஏர்டெல் மற்றும் சன் டைரக்ட் உள்ளன.
நாட்டின் மொத்த டி.டி.எச். சேவையில் டாட்டா நிறுவனம் 32 சதவீத பங்களிப்பையும், டிஷ் டி.வி.(Dish TV) 30 சதவீத பங்களிப்பையும், ஏர்டெல் மற்றும் சன் டைரக்ட்(Sun Direct) முறையே 23 சதவீதம் மற்றும் 14 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. உள்நாட்டில் சுமார் 18 கோடி தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளது கவனிக்கத்தக்கது.
டி.டி.எச். சேவையில் துரிதமான வளர்ச்சிக்கும், கூடுதல் பாதுகாப்புக்கும் முதலீடு துணைபுரியும் என்பதால், இந்த துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டை ஈர்க்க மத்திய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் அரசுக்கும் கூடுதலாக வருவாய் கிடைக்கப்பெறுவது மட்டுமில்லாமல், மேம்பட்ட சேவையை பொது மக்களுக்கு அளிக்க முடியும் என அரசு எண்ணுகிறது.
உரிமையை புதுப்பித்தலுக்கான காலத்திலும்(License renewal) 10 வருடத்திலிருந்து 20 வருடமாக நீட்டித்துள்ளது. மேலும் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கான உரிமக்கட்டணத்திலும் சலுகை வழங்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை