அதிகரித்துள்ள ஜூலை மாத வாகனத்துறை விற்பனை, ஆனால்… ?
Automobile Sales increased in July 2020, but not yet returned to the Pre-covid level
நடப்பாண்டின் ஜூலை மாதத்தில் வாகனத்துறை விற்பனை ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளது. அதே வேளையில், கடந்த 2019ம் ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது, விற்பனை எட்டப்படவில்லை. ஜூன் 2020 காலத்துடன் காணும் போது, வளர்ச்சி போதுமான அளவு இருப்பதுடன் வாகன விற்பனைக்கான தேவையை வெளிப்படுத்துகிறது.
அசோக் லேலண்ட்(Ashok Leyland) நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டின் ஜூலை மாதத்தில் 10,100 வாகனங்களை உள்ளூர் விற்பனையாக கொண்டிருந்த நிலையில், தற்போது 4,282 வாகனங்களை (ஜூலை 2020) மட்டுமே விற்பனை செய்துள்ளது. உள்ளூர் விற்பனையில் இந்த நிறுவனம் 58 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. இது போல ஏற்றுமதியில் தற்போது 493 வாகனங்கள் விற்பனை என சொல்லப்பட்டுள்ளது.
இதனை கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போதைய ஏற்றுமதி விற்பனை 40 சதவீதம் குறைந்துள்ளது. மஹிந்திரா(Mahindra & Mahindra) நிறுவனம் உள்ளூர் விற்பனையில் 35 சதவீத வீழ்ச்சியையும், ஏற்றுமதியில் 45 சதவீத வீழ்ச்சியையும் கொண்டிருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப்(Hero Motocorp) நிறுவனம் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை ஒரே மாதத்தில் விற்றிருந்தாலும், பழைய வளர்ச்சிக்கு இன்னும் திரும்பவில்லை. உள்ளூரில் 5.06 லட்சம் வாகனங்களையும், ஏற்றுமதியில் 7,563 வாகனங்களையும் விற்றுள்ளது ஹீரோ மோட்டார்ஸ். எனவே, தற்போது சொல்லப்பட்ட விற்பனை கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, உள்ளூர் விற்பனை ஒரு சதவீதம் இறக்கமாகவும், வெளிநாட்டு விற்பனை 69 சதவீத அளவிலும் குறைந்துள்ளது.
விவசாயம் சார்ந்த வாகனங்களை விற்பனை செய்வதில் முன்னணி வகிக்கும் எஸ்கார்ட்ஸ்(Escorts) நிறுவனம் உள்ளூர் விற்பனையில் 10 சதவீத வளர்ச்சியையும், ஏற்றுமதியில் 4 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுல் ஆட்டோ(Atul Auto) உள்ளூர் வாகன விற்பனையில் 62 சதவீத இறக்கத்தை சந்தித்துள்ளது.
இது போல ஐஷர் மோட்டார்ஸ்(Eicher Motors) நிறுவனமும் உள்ளூரில் 53 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதி விற்பனை 31 சதவீத வளர்ச்சியை ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு தந்துள்ளது. மாருதி சுசூகி(Maruti Suzuki Auto Sales) நிறுவனம் உள்ளூர் விற்பனையில் 2 சதவீத விற்பனை வளர்ச்சியையும், ஏற்றுமதியில் 27 சதவீத வளர்ச்சி குறைவாகவும் உள்ளது.
பொது போக்குவரத்து அனுமதிக்கப்படாத நிலையில், தனிநபர் வாகனங்களுக்கான தேவை சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், ஊரடங்குக்கு முந்தைய விற்பனை வளர்ச்சி இன்னும் எட்டப்படவில்லை எனலாம். இந்திய வாகனத்துறை கடந்த இரண்டு வருடங்களாக பல சவால்களை சந்தித்து வருகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை